Showing posts with label sitaram. Show all posts
Showing posts with label sitaram. Show all posts

Sunday, August 19, 2018

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி


தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்:
பெருமதிப்பிற்குரிய கல்விமான்களே, என் அருமை நண்பர்களே,
உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும், இந்த ஒன்பதாவது மாநாடுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடு இதுதான். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில்தான் இவ்வாறு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது என்கிறபோது நாங்கள் கூடுதலாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
 

இங்கே உங்கள் முன் நிற்கையில் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு குடும்பத்தில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஒரு பங்கினை நான் கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் பிறந்தது அன்றைய மதராஸ் எனப்படும் இன்றைய சென்னை மாநகரில்தான் அல்லது அந்தக் காலத்தில் பலராலும் அழைக்கப்பட்ட சென்னைப் பட்டணத்தில்தான். மேலும் மொழி மற்றும் பண்பாட்டு அம்சங்களில் நமக்குள் பல பொதுவான பண்புகள் உண்டு.
 

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’
 
அதாவது, உலகில் அனைத்து இடங்களும் என் சொந்த நகரம்தான், உலகில் உள்ள ஒவ்வொருவரும் என் உறவினர்கள்தான்.

பிபிசி தொடர்களில் ஓர் இனிய நிகழ்ச்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பெயர் ‘இந்தியாவின் கதை’. அது ஆதிக் காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்துக் கூறியது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதகுல உயிரணுத் திட்டத்திற்கும் (Human Genome Project) நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆதி காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் மிச்சசொச்சத்தில் காணப்பட்ட உயிரணு (gene M.130)க்கள், தமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர்ச்சிப் பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் மக்களிடம் காணப்பட்டதாக அந்நிகழ்ச்சித் தொகுப்பில் கூறப்பட்டது. மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. பிச்சப்பன் அவர்கள், இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து, ஒரு வேளை இவர்கள்தான் நம் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருப்பதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாம் - ஏவாள்தான் நம் மூத்த குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றால், ஆதாம் ஆப்ரிக்காவிலிருந்து வந்தார் என்றால், ஏவாள் இந்தியாவிலிருந்து வந்தாள் என்று கொள்ளலாம். எனவே உண்மையில் இது ‘தாய் நாடு’ (Mother India) தான். நாம் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பதற்கு உண்மையில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
 
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றைத்தான் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மொழியின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் என்பது அதன் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்ததாகும்.
 


காரல் மார்க்ஸ், மொழி குறித்துக் கூறுகையில், அது ‘‘சிந்தனையின் உடனடி எதார்த்தநிலை’’ என்று அழைத்திட்டார். ஜெர்மன் சித்தாந்தம் (German Ideology) என்னும் நூலில் மொழியின் தோற்றுவாயை ஆராய்கையில் அவர் கூறியதாவது: ‘‘மொழி என்பது மனிதனின் உணர்வு தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டது, மொழி என்பது உணர்வின் நடைமுறை. இது அனைத்து மனிதர்களிடமும் தோன்றியது. அதன் காரணமாகவே என்னிடமும் அது உளதாயிருக்கிறது. உணர்வைப் போன்றே மொழியும் தேவையின் அடிப்படையிலிருந்து, அத்தியாவசியத்திலிருந்து, மற்ற மனிதர்களோடு உறவாடுதலிலிருந்து விளைந்தது.’’

மொழியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஸ்டாலின், தன்னுடைய ‘‘மார்க்சிசமும் மொழியியல் பிரச்சனைகளும்’ என்னும் நூலில் விளக்குகையில், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
‘‘மொழி என்பது சமூகத்தின் அற்புதப்பொருள்களில் ஒன்று. அதன் மூலம் சமூகத்தின் உண்மை நிகழ்வுகளிலிருந்தே மொழியும் இயங்குகிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, மொழியும் வளர்ந்தோங்குகிறது. சமூகம் மறையும்போது, மொழியும் மறைந்துவிடும். சமூகத்திற்கு அப்பால் மொழி கிடையாது. எனவேதான், மொழி என்பது அதன் சமூகத்தின் வரலாற்றுடன் பிரிக்கமுடியாதவகையில் பின்னிப்பிணைந்திருப்பதை, மொழி பேசும் மக்களின் வரலாற்றுடன், அதனை உருவாக்குபவர்கள் மற்றும் வளர்த்தெடுப்பவர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் மட்டுமே, மொழி குறித்தும் அதன் வளர்ச்சி விதிகள் குறித்தும் புரிந்துகொள்ள முடியும்.
 

‘‘மொழி என்பது ஒரு சாதனம், ஒரு கருவி. அதன் உதவியுடன் மக்கள் ஒருவர்க்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்கிறார்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். சிந்தனையுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதன் மூலம், மொழி வார்த்தைகளை உருவாக்கிப் பதிவு செய்கிறது, வார்த்தைகளிலிருந்து வாக்கியங்களைக் கோக்கிறது. இவ்வாறு மனிதனின் அறிவாற்றலுடன் கூடிய சிந்தனையும் சாதனைகளும் மனித சமூகத்தில் சிந்தனைகளைப் பரிவர்த்தனை செய்துகொள்வதை சாத்தியமாக்குகின்றன.
 

‘‘மொழி ஒட்டுமொத்தத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக, மக்களிடையே கலந்துறவாடுவதற்காக, சமூகத்தின் உறுப்பினர்களிடையே ஒத்திருப்பதற்காக, சமூகத்தின் தனிப்பட்ட மொழியினை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் மக்களின் வர்க்க நிலைப்பாட்டைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அவர்கள்அத்துணைபேர்களுக்கும் சமமாகச் சேவை செய்வதற்காக, மிகவும் நுட்பமான வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒட்டமொத்த மக்களுக்கும் பொதுவானதொரு மொழியாக இருப்பதிலிருந்து அது பிறழ்ந்து செல்லுமானால், மற்ற சமூகக் குழுக்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில சமூகக்குழுக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்குமானால், அது தன்னுடைய ஒழுக்கப்பண்பை இழந்துவிடுமானால், சமூகத்தில் மக்கள் மத்தியில் ஓர் உறவாடும் சாதனமாக இருப்பதிலிருந்து அது தன்னை அறுத்துக்கொண்டுவிடுகிறது, விரைவில் அது சில சமூகக் குழுக்களின் பிதற்றல்களாக மாறிப்போய்விடுகிறது, தரம்தாழ்ந்து கெட்டுவிடுகிறது, விரைவில் மறைந்து ஒழிந்துவிடுகிறது.’’

ஆனால், லத்தீன் போன்று உலகின் மற்ற செம்மொழிகளைப் போல அல்லாமல், தமிழ் மொழி தழைத்தோங்கி வளர்வது தொடர்கிறது என்றால், அது மக்கள் மத்தியில் - சாமானிய மக்கள் மத்தியில் - உயிரோட்டமுள்ள தொடர்பினை கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணமாகும்.

மாநாட்டின் இலச்சினையில் (‘logo’வில்), ஆழிப்பேரலைகளின் சீற்றத்தை எதிர்கொண்டு முறியடித்த கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையும், அதனைச் சுற்றிலும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பறைசாற்றும் ஏழு அடையாளச் சித்திரங்களும் (icon) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டின் சின்னத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவச் சித்திரங்களைச் சித்தரித்திருப்பதால் அது தொடர்பாக ஒன்றைத் தெரிவிப்பது நலம்பயக்கும். பல்வேறு கலாச்சாரங்கள் ஒரு பொதுவான நூலால் இணைக்கப்பட்டிருப்பதை, தொடர்ச்சியை அது தெளிவுபடுத்துகிறது. பெருமதிப்பிற்குரிய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர், டாக்டர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், முந்தைய மாநாடுகளின் போது சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில், சிந்து சமவெளி நாகரிகக் கால கல்வெட்டுக்கள், திராவிடக் கலாச்சாரத்திற்குச் சொந்தமானவைகளாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். உண்மையில், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையேயிருந்த இணைப்பை நிறுவிட அவர் முயற்சித்தார். ‘சிந்து சமவெளி எழுத்துக்களின் பொருளைக் கண்டுபிடித்தல்’ என்னும் பணிக்காக, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை’ப் பெறுவதில் வெற்றி பெற்ற, டாக்டர் அஸ்கா பர்போலா அவர்களும் கூட, இந்து சமவெளி எழுத்துக்கள், பழைய தமிழுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள, திராவிட எழுத்துக்கள் என்று பரிந்துரைத்திருப்பதும் முக்கியத்துவம் உள்ளதாகும்.
அதுமட்டுமல்ல, மாநாட்டின் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற முகப்பு வாசகத்தில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது ஒன்றே மனிதகுலம் என்பதை உரத்துச் சொல்கிறது. கலைஞர் அவர்கள் விளக்கியதுபோல் அது இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ‘‘மனிதகுலம் அனைத்தும் குறுகிய சாதி, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், அதுவே மனிதகுலத்தின் மகத்துவம்’’ என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்கிறது. நம் நாட்டின் வரலாறு , குறிப்பாக இப் பிராந்தியம், நமக்குப் போதிக்கும் முக்கியப் படிப்பினை இது.
 

பல்வேறு மொழிகளுக்கும் இடையே காணப்படும் பொதுமைப் பண்புகளும் மற்றும் அவை இன்றைய நாளில் பெற்றுள்ள வளர்ச்சிகளும், அவற்றின் செறிவான பண்பாட்டுப் பாரம்பர்யத்துடன், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மேலும் வளர்த்தெடுத்திடவும் கவனம் செலுத்திடவேண்டும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையுமே எடுத்துக்காட்டிற்காக எடுத்துக்கொள்வோம். 2005இல் மிகவும் பொருத்தமாகவே தமிழுக்கு செம்மொழிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்ட அதே சமயத்தில், தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கும் 2008இல்அதேபோன்று செம்மொழி அந்தஸ்துகள் அளிக்கப்பட்டன. தலைமுறை தலைலமுறையாக காப்பியின் மணத்தை நுகர்ந்துகொண்டும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பாடலை வானொலியில் கேட்டுக்கொண்டும் எழும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு நாம் வளர்ந்திருக்கிறோம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய இம்மூவருமே - அவர்கள் தாய்மொழி வெவ்வேறாக இருந்தபோதிலும் - தங்கள் இசையை தெலுங்கில்தான் வடித்தார்கள். ஆயினும், இந்த இசை ‘கர்நாடக இசை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இவ்வாறு நம் வேற்றுமைக்குள் இணக்கமான ஒற்றுமை காணும் பண்பு மிகவும் உன்னதமானது. தெலுங்கில் வடிக்கப்பட்ட இசையை எவ்விதச் சிரமமுமின்றி தமிழிலோ அல்லது கன்னடத்திலோ மீள அளித்திட முடியும். இதுதான் நம்மிடையேயுள்ள மா மன்னுய்திக் கோட்பாட்டின் (universalism) மகத்துவமாகும்.
நம்முடைய பாரம்பர்யம் இதனை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த எளிய உண்மையை அங்கீகரிக்க மறுத்து, ஒருசமயம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறில் நடைபெற்ற தியாகராசர் இசை விழாவின்போது ஒருவர் தமிழில் பாடியதற்காக அவர்மீது இசை வெறியர்கள் மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினாராம். மக்களைப் பிணைத்திடும் முகவராக வரலாற்றுரீதியாகச் செயல்பட்டு வரும் மொழி என்பது அதன் அடிப்படைச் சிறப்பியல்புக்கு எதிராக, தங்களுடைய வெறித்தனத்தையும் பிரிவினைகளையும் காட்டிட ஏவப்பட்டிருக்கிறது. வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ள உன்னதப் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், போராட்டத்தின்போது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக, சமூகத்தின் வளர்ச்சிக் கருவியாக மொழியைப் பார்க்கிறோம். தேசிய இனத்தை வரையறுத்திடும் நான்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாக, அதனை நாங்கள் பார்க்கிறோம். நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த காலத்திலிருந்தே, இத்தகையப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாங்கள் தெலுங்கு பேசும் மக்களுக்காக விசாலாந்திரா, மலையாளம் பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம், மராத்தி பேசுபவர்களுக்காக சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகிய மாகாணங்களுக்காகப் போராடினோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழுக்காக, முனைப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இங்கே, தியாகி சங்கரலிங்கம் பெயரைக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமுடையதாக இருக்கும். மதராஸ் ராஜதானி என்றிருந்ததை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 64 நாட்கள் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இறந்து போனார். அவர் இறந்தபின் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இம்மாநிலத்திலிருந்து வந்த முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், தொழிற்சங்கத் தலைவருமான பி. இராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் மற்றும் என். சங்கரய்யா ஆகியோர் மாநில சட்டமன்றத்தில் தமிழில் பேசுவோம் என்று பிரகடனம் செய்து, தமிழிலும் பேசினார்கள். அ. நல்லசிவம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில், தமிழில் தந்தி கொடுக்கும் முறைக்காகப் போராடினார். உண்மையில் இவர்கள் அனைவரும் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் நம் முன்னோடிகளாக விளங்கினார்கள். மக்களின் மொழியில் ஆட்சி அதிகாரம் நடைபெறாவிட்டால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். ஐயன் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் சொல்லியதுபோல,
 

காட்சிக் கெளியன் கடுஞ் சொல்லன் அல்லனேல்
 
மீக்கூறும் மன்னன் நிலம்

(அதாவது, காட்சிக்கு எளிமையும், கடுங்சொல் கூறாத இனிய பண்போடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.) (அதிகாரம் 39, குறள்: 386)

ஜனநாயகம் வெற்றிகரமாக அமைந்திட, நிர்வாகத்துடன் எளிதில் அணுகத்தக்க தன்மை முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதற்கான பல அம்சங்களில் மொழி என்பது ஆட்சியாளர்களையும் ஆட்சிக்குட்பட்டவர்களையும் இணைத்திடுவதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர் மக்களோடு கொண்டுள்ள உறவின் அளவையும் வரையறுக்கிறது. மொழி சமூகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ‘‘அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும், சமூக வாழ்க்கையிலும், மக்களின் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளிலும்’’ அவர்களுக் கிடையேயான சிந்தனைகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் கருவியாக மொழி விளங்குகிறது.
இந்தப் பின்னணியில்தான், இன்றைய அரசாங்கங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. ‘மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்’ என்ற ‘நேரு மாதிரி’ என்கிற வலைப்பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல், அந்தந்த மண்ணின் மொழி செயல்படுத்தப்படுவது உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். நிச்சயம் இதனை குறுகிய மொழிவெறி என்று எவரும் கருதிடக் கூடாது. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், அனைத்து மொழிகளையும் தழைத்தோங்கச் செய்திட அனுமதித்திட வேண்டும்.
இன்றைய உலகில் எந்த ஒரு மனிதனும் தனியொரு அடையாளத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள்அடுத்தடுத்துப் பேசப்படக்கூடிய ஒரு நாட்டில் பல்வேறு அடையாளங்கள் விரிவடைந்திருக்கின்றன.
 

எழுதப்பட்ட வரலாறு நெடுகிலும், இன்றைய எதார்த்த நிலையிலும், இந்தியாவில் உள்ள நாம், தாய்மொழி, வேலை செய்யும் இடத்தில் புழங்கும் மொழி, படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கான மொழி என்று ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் மூன்று மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக இசை எடுத்துக்காட்டை இது விளக்குகிறது. இவ்வாறு நாட்டின் பல்வேறு அடையாளங்களை, எந்த ஒரு ‘குறிப்பிட்ட’ அடையாளத்திற்கும் தனி முக்கியத்துவம் தந்துவிடாமல், பேணி வளர்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.
 

நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், என் தாய்மொழி தெலுங்கு, இந்தி பேசும் தில்லியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இங்கே உங்கள் முன் இம்மாமன்றத்தில் உலகம் முழுதுமிருந்து வந்துள்ள தமிழர்கள் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தியா.

நான் உரையை நிறைவுசெய்வதற்கு முன், பரிசீலனைக்காக மாநாட்டை நடத்துவோருக்கு முன் சில ஆலோசனைகளை வைக்க விரும்புகிறேன். தமிழ் மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்ட ஒரு மொழி, இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இலக்கியங்களைப் படைத்த, படைக்கும் ஒரு மொழி. அதுமட்டுமல்லாமல், ஏட்டில் எழுதப்பெறாத, வாய்வழி வரலாற்றுச் செல்வங்களையும் (huge treasures of oral history) அபரிமிதமாகக் கொண்டுள்ள ஒரு மொழி. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி, என்றென்றைக்கும் நிலைபேறுடையதாக மாற்றக்கூடிய விதத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப்புற இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாக நாட்டுப்புற மக்கள் மத்தியில் விளங்கிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக இம்மாநாடு சில நடவடிக்கைகளைத் தொடங்கிடும் என்று நான் நம்புகிறேன்.

தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் என்று பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கிய வளங்களின் மூலம் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்தும் இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியத் தேவையாகும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இம்மாநாட்டின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளும்போது இணைத்துக்கொள்ளப்படவும் வேண்டும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல்

என்கிறது திருக்குறள். அதாவது அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமை உடையவர்கள் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
தமிழ் மொழியை மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் அதன் வளமான பாரம்பர்யங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வோம்.


(தமிழில்: ச.வீரமணி)

Saturday, August 18, 2018

எங்களிடையேயான உறவு விசேஷமான ஒன்று: சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம், இந்த கலாட்டாவிற்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று நினைக்கிறேன், என்னிடம் பேசும்போது தமிழில் பேசுறீங்க, சந்திரபாபு நாயுடுவிடம் பேசும்போது தெலுங்கில் பேசுறீங்க, ஜோதிபாசுவிடம் பேசும்போது வங்கமொழியில் பேசுறீங்க, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ்வுடன் பேசும்போது இந்தியில் பேசுறீங்க. ஒருத்தரிடம் நீங்க என்ன பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசுவதுதான் இங்கே குழப்பத்திற்கே காரணம். இதை நீங்கதான் தீர்த்து வைக்கணும்,என்று கலைஞர் கூறுவார்.
கடந்த பல ஆண்டு காலத்தில் நான் பலமுறை கலைஞர் கருணாநிதியுடன் பல விஷயங்களைப் பேசி இருக்கிறேன். எங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்பது உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இருப்பதுபோல பாசத்துடனும் நேசத்துடனும் நகைச்சுவையுணர்வுடனும் அமைந்திருக்கும்.
1997 ஏப்ரலில் ஒருநாள். அப்போது மத்தியில் ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபின்னர், எச்.டி. தேவகவுடாவை உடனடியாகப்  பிரதமராகத் தேர்வு செய்த சமயம். பிரதமரைத் தேர்வு செய்துவிட்டோம். ஆனாலும், கேபினட் அமைச்சர்களை இறுதிப்படுத்துவதில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.
தேவ கவுடாவை, பிரதமர் பொறுப்பில் அமர்த்தும் சமயத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற முந்தைய விவாதங்களில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் கலந்துகொண்டார், ஆயினும் அவர் அதில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னமேயே சுர்ஜித், ருஷ்யாவிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களின்போது எங்கள் கட்சியின் சார்பாக நான் கலந்துகொள்ளப் பணிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்துத்தான் கலைஞர் மேலே கூறியவாறு வேடிக்கையுடன் குறிப்பிட்டார்.
கலைஞரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆரம்பத்தில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. பின்னர் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். ஓர் அரசியல்வாதியாக அவருடைய ஆளுமை, ஓர் எழுத்தாளராக, கவிஞராக மற்றும் திராவிடச் சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்பவராக அவருக்கிருந்த திறமைகள் எனக்கு மிகவும் நன்றாகவேத் தெரியும். அவருடைய திரை வசனங்கள் பலவற்றில்  வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்துக் கொடுப்பதுபோல, நகைச்சுவைக்குள் கருத்துக்களை நுட்பமாகக் கலந்திருப்பார்.
   அதேபோன்றதோர் இன்முக நகைச்சுவையை நானும் முதன்முறையாக மேலே கூறிய விவாதங்களின்போது எதிர்கொண்டேன், அனுபவித்தேன். அந்த அனுபவத்திற்குப் பின்னர், கலைஞர் மிகவும் இக்கட்டான பேச்சுவார்த்தைகளுக்கிடையே பதற்றமான நிலைமைகள் இருக்கும் சமயங்களில், கலைஞர் இதுபோன்று நயமான நகைச்சுவை அஸ்திவாரங்களை ஏவுவதை நானும் உய்த்துணர்ந்துகொண்டேன்.
எங்களிடையே இத்தகைய நகைச்சுவையுடன் இருந்த கருத்துப்பரிமாற்றங்கள்தான், எங்களுக்கிடையே ஒரு விசேஷமான உறவுமுறையை பிற்காலங்களில் ஏற்படுத்தியதற்குக் காரணம் என்று நம்புகிறேன்.  ஓர் இளநிலை அரசியல்வாதியாக இருந்த என்னை மிகவும் நேசித்தார். தென்னிந்திய அரசியலில் ஒரு முதுபெரும் ஜாம்பவனாகத் திகழ்ந்த அவரை, நுணுக்கமாக ஆய்வு செய்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.  1996க்கும் 1998க்கும் இடையே ஐக்கிய முன்னணிக் காலத்தின்போது, கலைஞர் கருணாநிதியும், திமுகவும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தலைமை தாங்கப்படும் சங் பரிவாரத்தின் நாட்டைப் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றும் உறுதியான உறுதிப்பாட்டுடன் எங்கள் கூட்டணி உருவானது.
ஆயினும் 1998க்குப்பின்னர் எங்கள் அரசியல் வெவ்வேறு திசைகளில் மாறிய சூழ்நிலையில் நாங்கள் ஒருவரையொருவர் எதிரெதிரே இருந்துதான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஓராண்டு கழித்து, கவிழ்ந்தபின்னர், திமுக, அடல் பிகாரி வாஜ்பாயி தேசிய தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி பக்கம் நகர்ந்தது. அப்போதும்கூட எங்களிடையேயான தனிப்பட்ட தொடர்பு நீடித்தது. நான் சென்னைக்கு வரும் ஒவ்வொருதடவையும் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சூரியனுக்குக் கீழேயுள்ள அநேகமாக அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
இதுபோன்று கருத்துப்பரிமாற்றங்களின்போது, அவருடைய இந்துத்துவா எதிர்ப்பு, வகுப்புவாத அரசியல் எதிர்ப்பு நீர்த்துப்போயிருப்பதைக்குறித்தும்கூட விவாதித்திருக்கிறோம். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது, அவர் ஒரு நிகரற்ற காரணத்தை (a unique reasoning) அதற்காக என்னிடம் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஒரு நீண்டகாலத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருந்ததுடன் ஒப்பிட்டு, மக்களின் தீர்ப்பின்மீது மகத்தான பிடிப்பினை இடதுசாரிகள் வைத்திருக்கக்கூடிய அளவிற்கு, சித்தாந்த உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய நிலையில் திமுக இல்லை என்கிற கருத்து கருணாநிதி கொண்டிருந்தார். எங்களுடைய நிலை ஒருவிதமான தட்பவெப்ப நிலையுடன் கூடிய அரசியலாகும். (Ours is a kind of seasonal politics.) நாங்கள் எங்களுடைய அரசியலையும் அமைப்பின் நலன்களையும் பாதுகாத்திடக் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்,(We have to struggle hard to protect our political and organisational interests,)என்று அவர் கூறினார்.
ஆயினும், 2004 வாக்கில், அவர் தன்னுடைய ஒரிஜினல் சித்தாந்த நிலைக்குத் திரும்பவேண்டிய தேவையை உணர்ந்தார். தோழர் சுர்ஜித்துடன் தொடர்ந்து மேற்கொண்ட கருத்துப்பரிமாற்றங்களால் தூண்டப்பட்டு, அவர் மீண்டும் பிளவுவாத மற்றும் பாசிஸ்ட் இந்துத்துவா அரசியலுக்கு எதிராகப் போராடும் ஓர் உக்கிரமான போராளியாக மாறினார்.
தோழர் சுர்ஜித், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் கலைஞரை கூட்டணிக்கு மீளவும் அழைக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள வைத்தார். 2004இல் பாஜகவிற்கு எதிராக ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்காக இம்மூன்று தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். இதுதான் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக மாறியது. இக்கூட்டணி 2004இலிருந்து 2014வரை ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அளித்தது. இந்த ஆண்டுகளில் அவருடனான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்ந்தன. அந்த சமயங்களில் எல்லாம் எங்கள் கருத்துப்பரிமாற்றங்கள் அரசியல் மற்றும் அரசின் கொள்கைத்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியம், மொழி மற்றும் சமூகவியல் போன்று பல்வேறு பொருள்கள் குறித்தும் அமைந்திருக்கும்.
இவ்வாறு விரிவான எங்கள் விவாதங்களுக்கு மத்தியில், அவர் என்னை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிட என்னை அழைத்தபோது, சிறப்பாகச் சொல்லவேண்டியதொரு விஷயமும் நடந்தது. அவர் இம்மாநாட்டில் பேச வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டபோது, தமிழ் இலக்கியத்துடன் எனக்கு அந்த  அளவிற்கப் பரிச்சயம் கிடையாது என்றும் எனவே இத்தகையதொரு சிறப்பான அறிஞர்கள் கூடும் ஓர் இடத்தில் நான் தனிமைப்பட்டுவிடலாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு கலைஞர் மறுமொழி என்ன தெரியுமா? இந்த செம்மொழி மாநாடு நடைபெறுவது என்பது தமிழ் இலக்கியம் பற்றி மட்டுமல்ல, இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து உருவான பல்வேறு இனங்களின் விரிவான கலாச்சாரத்தின் பிரச்சாரம் பற்றியதுமாகும், என்று தெரிவித்தார். அதற்கு என்னால் எவ்விதமான மறுப்பும் சொல்ல முடியவில்லை.
அப்போது கோயம்பத்தூருக்கு வந்த பயணம் கூட நினைவுகூரத்தக்க ஒன்று. நான் தில்லியிலிருந்து சென்னை வந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகிவிட்டது. அதனால் என்னால் கோவைக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே, கலைஞரிடம் என் பயணத்தை ரத்து செய்திடுமாறு பரிந்துரைத்தேன். ஆனால் கலைஞர் அதனைச் செய்யவில்லை. மாறாக, முதலமைச்சருக்கான ஹெலிகாப்டரில் சென்னையிலிருந்து, கோவைக்கு வானூர்திவழியாக என்னை வரவழைத்தார். நானும் சமூகத்தின் அடித்தளத்திற்கும் மேல்கட்டமைப்புக்கும் இடையேயான ஒரு கண்ணியாக மொழி பார்க்கப்பட வேண்டும் என்கிற மார்க்சியக் கண்ணோட்டத்தை அப்போது சமர்ப்பித்து உரை நிகழ்த்தினேன். (I made the presentation on the Marxian perspective of seeing language as the link between the base and the superstructure.) பின்னர் அந்த உரை முரசொலியிலும் வந்தது, கலைஞரால் ஒரு சிறுபிரசுரமாகவும் வெளியிடப்பட்டது.
எங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்கள் அவருடைய இறுதிநாட்கள் வரையிலும் தொடர்ந்தன. நான்கு  ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்கூட கடந்த காலங்களில் எப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோமோ அப்படிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்போது கலைஞரே கவித்துவத்துடன் கூறியதுபோல, அவர் விடும் மூச்சு அதனை நிறுத்திவிடலாம், ஆனாலும் அவருடைய வாழ்க்கையும் அரசியலும் விட்டுச்சென்றுள்ள செய்தி, எப்போதும் நீண்டு நிலைத்து நிற்கும். (The breath may have stopped but the message of his life and politics shall remain for long.)
(சீத்தாராம் யெச்சூரி, வெங்கிடேஷ் ராமகிருஷ்ணனிடம் கூறியதிலிருந்து)
(தமிழில்: ச. வீரமணி)
            


Thursday, March 23, 2017

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுக மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு



தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள
கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுக
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
புதுதில்லி, மார்ச் 23-
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதன் அன்-று மாலை மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“எனக்கு முன் பேசிய தலைவர்கள் பல கருத்துக்களை இதில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.அவற்றில் பெரும்பாலானவற்றுடன் நானும் ஒத்துப்போகிறேன். எனவே அவற்றை மீளவும் இங்கே நேரம் கருதி பேசிடவில்லை.
மாண்புமிகு உறுப்பினர் திரு. சரத் யாதவ் ஒருமுக்கியமான பிரச்சனை குறித்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது இன்றுள்ள ஊடகங்களின் பிரச்சனை குறித்து அவர் பேசிவிட்டுச்சென்றிருக்கிறார். ஆம், அது மற்றுமொரு முக்கியமான பிரச்சனையாகும். அது குறித்து அவர் கூறியுள்ள அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக தனியே விவாதித்திட முன்வருவீர்கள் என நம்புகிறேன்.
ஜனநாயகம்
நாம் அனைவரும் நம்முடைய ஜனநாயகத்தின் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவரும் நம் அரசமைப்புச்சட்டம் நமக்கு ‘ஒரு மனிதர், ஒரு வாக்கு’, அல்லது ‘ஒரு நபர், ஒரு வாக்கு‘ மற்றும் ‘ஒரு வாக்-கு, ஒரு மதிப்பு‘ ('one man, one vote'; or,  'one person, one vote' and  'one vote, one value') என்பனவற்றை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது.
இந்த அரசியல் சமத்துவம், நம் தேர்தல் நடைமுறைகளின்மூலமாக நமக்கு நடைமுறையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. நம் தேர்தல் நடைமுறைகள் குறைபாடு உடையதாக இருப்பின், எப்போதும் அதனைச் சரிசெய்து அதனை மெருகூட்டவேண்டியது அவசியத் தேவையாகும். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியது மிகவும் சரி. இதனை கடந்த பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி  வந்திருக்கிறோம்.   
எனினும், இப்போது, மக்களின் ஜனநாயக அபிலாசைகள் உருக்குலைக்கப்படுவதைத் தடுத்துநிறுத்திட வேண்டுமானால் நாட்டின்  தேர்தல் நடைமுறைகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். அதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது என்று நான் கருதுகிறேன். மக்களின் ஜனநாயக அபிலாசைகளை, பணபலம் மூலமாகவோ, அல்லது, புஜபலம் மூலமாகவோ, அல்லது, மதவெறியைக் கிளப்பியோ, அல்லது, சாதி வெறியைக் கிளப்பியோ உருக்குலைத்திடக் கூடாது. இத்தகைய நடைமுறைகளின் மூலம் இப்போது ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நலிந்த தளர்ந்த நிலைகளை நாம்  சரி செய்திட வேண்டியிருக்கிறது.
இவற்றை இப்போது நாம் ஏன் வலியுறுத்துகின்றோம். நாம் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக இதற்கு முன்பும் பலமுறை நாம் பேசியிருக்கிறோம்.  
 ஒரு கார் விபத்தில் மறைந்திட்ட தினேஷ் கோஸ்வாமி அவர்கள் இது தொடர்பாக ஒரு பெரிய அறிக்கை அளித்திருக்கிறார். இந்திரஜித் குப்தா ஆணையம் இது தொடர்பாக ஒரு மிகச்சிறந்த அறிக்கையை அளித்திருக்கிறது. அது இங்கே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் உள்ள எந்த ஆலோசனைகளும் உண்மையில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
நாம் நம்முடைய தேர்தல் நடைமுறையை சரிசெய்ய வேண்டியிருக்கிறது. எப்படிச் சரி செய்யப்போகிறோம்? நம்முடைய தேர்தல் நடைமுறையிலும், நம்முடைய அமைப்பிலும் ஏற்பட்டுள்ள ஜனநாயக சிதைவுகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். அவற்றை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்.
தற்போது மத்திய அரசாம், தன்னுடைய பட்ஜெட்டில் இரு முன்மொழிவுகளை இது தொடர்பாக ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலில் பண பலம் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் பணத்தின் செல்வாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்த முன்மொழிவுகள் என்ன சொல்கின்றன? முதலாவதாக, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பது என்பது இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஈராயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, அரசின் சார்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப் போகிறார்களாம். மக்கள் அவற்றை வாங்க முடியுமாம். அவற்றை அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க முடியுமாம். அரசியல் கட்சிகள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமாம். இவ்வாறு அரசு கொண்டுவந்துள்ள முன்மொழிவுகள் இரண்டுமே வெறும் கண்துடைப்பாகும். கண்துடைப்பு மட்டுமல்ல, பண மோசடி மேற்கொள்வது மேலும் வாய்ப்புவாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன எனக் கூற முடியும்.
இருபதாயிரம் ரூபாய் என்பதை ஈராயிரம் ரூபாய் என்று மாற்றியதால் என்ன நடக்கப் போகிறது. ஒருவர் இருபதாயிரம் ரூபாய் கொடுத்தார் என்றால் இனி அதை பத்து பேர் பெயர்களில் பதிய வைத்துக்கொள்ளப் போகிறார்கள். வேறென்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது? இதுஒரு கேலிக்கூத்தாகும்.
அடுத்து, தேர்தல் பத்திரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். யார் அவற்றை வாங்குகிறார்கள்? யாருக்குக் கொடுக்கிறார்கள்? யார் அவற்றை உங்களுக்குக் கொடுக்கிறார்கள்? அனைத்தும் ரகசியம்.  அன்றையதினம் ஆட்சியில் உள்ளவர்களைத் தவிர வேறெவருக்கும் அது குறித்துத் தெரியப் போவதில்லை. ஆட்சியிலுள்ளவர்கள் அதனை சாக்காக வைத்துக்கொண்டு, “ஏன் அவர்களுக்கு அவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள்?” என்று மிரட்டுவதற்கு வேண்டுமானால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எனவே இது ஒன்றும் சீர்திருத்தம் அல்ல.
தேர்தல் நடைமுறைகளை மேலும் சிதைப்பதற்கே இது வழிதிறந்துவிடும். தேர்தலில் பணபலத்தின் பங்கினைக் குறைத்திட வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால், அரசியல் கட்சிகள் செய்திடும் செலவினங்களுக்கு வரம்பினைக் கொண்டுவாருங்கள். இதனை நான் கடந்த பத்தாண்டுகளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன். வேட்பாளருக்கு செய்திருப்பதைப் போல அரசியல் கட்சிகளுக்கும் செய்திடுங்கள். செலவினத்திற்கான வரம்பை உயர்த்த வேண்டும் என்று விரும்பினால், உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், அரசியல் கட்சிகள் தாங்கள் செய்திடும் செலவினங்களுக்கு வரம்பு விதிக்கப்படவில்லை என்றால், உங்களால் தேர்தலில் பணபலத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்திட முடியாது.
இதனை நான் விமானநிலையங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம். நாம் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காகப் போவதற்காக, காத்துக்கொண்டிருக்கும்போது, நாம் பயணம் செய்ய வேண்டிய கமர்சியல் விமானம் தாமதமாகிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், தனியார்ஜெட் விமானங்களில் வேறு சிலர் அவர்களின் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.  அவர்கள்  ஆகாயம் வழியாக வருவார்கள், தரை இறங்குவார்கள், பின்னர் தங்களுடைய ஹெலிகாப்டர்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பறந்து செல்வார்கள். ஏழு கூட்டங்களில் பங்கெடுப்பார்கள். ஆனால் நாம் ஒன்று அல்லது இரு கூட்டங்களில் சாலை வழியே சென்று செய்ய முடியும். நாம் அனைவரும் இதனைப் பார்த்திருக்கிறோம்.  
அடுத்து, கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக. கார்ப்பரேட்டுகள்  ஒத்துழைக்கட்டும். இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறைக்கு அவர்கள் ஒத்துழைத்திட வேண்டும். இந்திய ஜனநாயகம் செயல்படுவதற்கு அவர்களின் பங்களிப்பு அவசியம். அவர்கள் தாங்கள் அளித்திடும் பங்களிப்பை அரசிடம்  அளித்திடட்டும். .அரசாங்கம் அதனை தேர்தல் ஆணையம் மூலமாகவோ அல்லது வேறெந்த ஏஜன்சி மூலமாகவோ மேலாண்மை செய்து, நிர்வகிக்கட்டும். இதனை இந்திஜித் குப்தா ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதனை அமல்படுத்துவதற்கு இது மிகவும் சரியான தருணமாகும்.  அரசின் சார்பில் செலவினம் என்பது ரொக்கமாக இருக்கக்கூடாது. அவை பொருள்களாக இருந்திட வேண்டும். வாகனங்கள், ஓட்டுநர்கள், பெட்ரோல் அல்லது எரிபொருள் நிரப்பப்படுதல், போஸ்டர்கள் போன்றவைகளாக இருந்திட வேண்டும். இவை அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். இப்போது இதில் நீங்கள் ஹெலிகாப்டர்களையும் சேர்த்துக்கொள்ளலாம், தனியார் ஜெட் விமானங்களையும்கூட சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அரசின் மூலமாகவே அனைத்தையும் செய்யுங்கள்.  மேற்கத்திய நாடுகளிடம் இந்த நடைமுறை இருக்கிறது. இது ஒன்றும் உலகில் புதிதாக நடைபெறும் விஷயம் அல்ல.
நம்முடைய ஜனநாயகம் குறித்து ஒரு விஷயத்தில் எனக்கு எப்போதுமே  பெருமிதம் உண்டு. ஜனாதிபதி ஒபாமா நம் நாட்டிற்கு முதன்முறை வந்தபோது நடந்த நிகழ்வை நினைவுகூர்ந்திடுங்கள். அவர் இங்கே வந்தபோது நம்முடைய தங்கப் புத்தகத்தில் (golden book) என்ன எழுதினார் என்பதை நினைவுகூருங்கள். உண்மையில் தங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நம்முடைய சென்ட்ரல் ஹாலில் அதனை வைத்திருப்போம். அதன் பெயர் அவ்வாறு இருந்துவருகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் அரசியல் தலைவர்கள் அதில் தங்கள் கருத்தைப் பதிவு செய்வார்கள். அதில் அவர், “உலகின் மிகப் பழைமையான ஜனநாயகத்திலிருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு வாழ்த்துக்கள்” (‘Greetings from the world’s oldest democracy to the world’s largest democracy’ ) என்று எழுதினார்.
அன்றுமாலையே அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, “நீங்கள் உலகின் மிகப்பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து வந்திருப்பதாகக் கூறுவது சரியல்ல” என்று கூறினேன்.
துணைத் தலைவர்:  அது எப்படி?
சீத்தாராம் யெச்சூரி: ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் பிறந்தார். அதாவது, அமெரிக்காவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது, 1962இல். அவர் பிறந்தது 1961இல். 1962க்கு முன்பு அமெரிக்காவில் ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் நாம் எப்போது சுதந்திரம் வாங்கினோமோ அப்போதே அனைவருக்கும் வாக்குரிமை அளித்துவிட்டோம். இது நம் ஜனநாயகத்தின் பெருமிதம் ஆகும்.
ஆனால் அதனை நாம் எங்ஙனம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்? நாம் அதனை தேர்தல் நடைமுறைகள் மூலமும், தேர்தல் அமைப்பு மூலமும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நம்முடைய தேர்தல் நடைமுறை  பணபலம்  போன்று பலவிதங்களில் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பணபலம் குடிறத்து மாண்புமிகு உறுப்பினர் ராம் கோபால் யாதவ் கூறியது முழுவதும் சரி. நாம் எங்கெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றோமோ அங்கெல்லாம் நம்மால் பணத்தைச் செலவு செய்ய முடியவில்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பு ஆட்சியில் இருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரையும் கடுமையாகப் பாதித்திருந்தது. ஆனால் ஆட்சியிலிருப்போர் நன்கு செலவு செய்ததைப் பார்க்க முடிந்தது.  இதுவே பெரும்பான்மையான மக்களின் உணர்வாகவும் இருந்தது.
எனவேதான் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக இரு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியத்  தேவையாகும். அரசியல் கட்சிகளின் செலவினங்களுக்கு வரம்பு விதித்திடுங்கள். அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்குத் தடை விதித்திடுங்கள். அவர்கள் நிதி அளிக்க வேண்டுமென்று விரும்பினால் அதற்காக அரசு நிர்ணயிக்கும் அமைப்பிடம் செலுத்தட்டும். அந்த அமைப்பிடமிருநது அரசியல் கட்சிகளுக்குப் பணம் வரட்டும். உங்.களால் இதனைச் செய்யாமுடியாது என்றால், குறைந்தபட்சம், தேர்தல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துவதற்கு பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவாருங்கள். இன்றைய  தினம் தேர்தல் பண பலத்தைப் பயன்படுத்துவது என்பது  உச்சத்திற்குச் சென்றுவிட்டது. சமீபத்திய தேர்தல்களில் இதனை நாம் நன்கு பார்த்தோம். எனவே இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும்.
இதனை எப்படிச் சரி செய்யலாம் என்பதற்கு நான் சில பரிந்துரைகளை அளித்திட விரும்புகிறேன்.
அடுத்து இரண்டாவதாக நான் கூற விரும்பும் மிக முக்கியமான விஷயம் நம் தேர்தல் அமைப்புமுறை குறித்ததாகும். ஜனநாயகம் என்றால் என்ன? இது தொடர்பாக நாம் புரிந்துகொண்டிருப்பது என்னவெனில், பெரும்பான்மையோரின் ஆட்சி என்பதாகும்., சுதந்திரம் பெற்ற பின்னர் அமையப்பட்ட ஆட்சிகளுக்கு மக்களின் ஆதரவு என்பதன் நிலை என்ன தெரியுமா? இதுவரை அமைந்த எந்த ஆட்சிக்கும் மக்களின் வாக்குகள் என்பது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது கிடையாது. ஒரேயொரு தடவைதான், ராஜீவ் காந்தி ஆட்சி அமைத்தபோதுதான், அவருக்கு 48 சதவீதத்திற்கு மக்கள் வாக்களித்திருந்தார்கள். 405 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருந்தார். அதுவும் கூட 50 சதவீதத்திற்குக் கீழ்தான்.
இப்போதுள்ள பாஜக தலைமையிலான ஆட்சி வெறும் 31 சதவீதம்தான் பெற்றிருக்கிறது. நம் அமைப்பு முறையில் யார் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று உருவாக்கி வைத்திருக்கிறோம். இது நம் அமைப்புமுறையில் உள்ள பலவீனமாகும். இதனை நாம் சரி செய்தாக வேண்டும்.
ஜனநாயகம் என்றால், அது பெரும்பான்மையோரின் ஆட்சி என்றால், இது சரி செய்யப்பட்டாக வேண்டும். இது சரி செய்யப்பட வேண்டுமானால், நாம் ஒரு பகுதி பிரதிநிதித்துவ ஆட்சி  அமைப்பு முறைக்கு மாறிட வேண்டும்.  அதற்கான சரியான தருணம் இதுவாகும் என்றே நான் கருதுகிறேன்.
இந்தியா என்பது பல்வேறு விதமான வேற்றுமைகளுடன் உள்ள ஒரு நாடாகும். நம்முடைய ஒவ்வொரு கலாச்சாரத்துடனும் இருக்கின்ற அனைவருமே நம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செலுத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது நியாயமானதும் கூட. நாட்டுமக்களின் நியாயமான இந்த உணர்வை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.  அதே சமயத்தில் ஜனநாயகத்தை சிதைத்திடும் தற்போதைய அமைப்புமுறையை சரிசெய்திடவும் நாம் முன்வர வேண்டும். இதனை ஒரு பகுதி பிரதிநிதித்துவ ஆட்சி அமைப்பு முறையை (partial-proportional representative system)கொண்டுவருவதன் மூலம் சரி செய்திட வேண்டும். இதனை எப்படிச் செய்வது?
இதுதொடர்பாக நாங்கள் முன்வைக்கும் யோசனைஎன்ன? இப்போது நாடாளுமன்ற மக்களவைக்கான இடங்கள் 542 ஆகும்.   இதனைச் சரிபாதியாக – அதாவது 271 ஆகக் குறைத்திடுங்கள். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வாக்காளர்கள் இரு வாக்குகள் அளித்திட வேண்டும். ஒரு வாக்கை, அவர் விரும்பும் அரசியல் கட்சிக்கும், மற்றொன்றை அங்கே நிற்கிற வேட்பாளருக்கும் அளித்திட வேண்டும்.  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகவே தன் கட்சி சார்பில் எவரெவரை மக்களவை உறுப்பினராகத்  தேர்ந்தெடுத்திட வேண்டும் என்கிற பெயர்ப்பட்டியலை  தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியும் பெற்றிருக்கிற வாக்குகளின் சதவீத அடிப்படையில் கட்சிகள் அளித்திருக்கிற பட்டியலில் இருந்து நபர்களைத் தேர்வு செய்திடும். அதேபோன்று மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மக்களவைக்கு வருவார்கள். இதன்மூலம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு பாதுகாக்கப்படும். நாட்டின் ஜனநாயக மாண்பும் நன்கு நிலைநிறுத்தப்படும்.  இதன் காரணமாக மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்த கட்சி ஆட்சி அமைத்திடுவது என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இல்லையேல், ஜனநாயகம் என்பது பெரும்பான்மையோரின் ஆட்சி என்பதை உண்மையில் நாம் பின்பற்றுவதாகக் கொள்ள முடியாது.  எனவே இதனைப் பரிசீலிப்பதற்கான காலம் வந்துவிட்டது.
இவ்வாறு பிரதிநிதித்துவ அமைப்புமுறையில் இரு அனுகூலங்கள் உண்டு.  
உதாரணமாக, பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திட வேண்டும் என்று இந்த அவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்  அது மக்களவையில் நிறைவேறவில்லை. சுமார் இருபதாண்டு காலமாக இந்த நிலை நீடிக்கிறது. பிரதிநிதித்துவ அமைப்புமுறை வந்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்.கள் கட்சி சார்பில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுத்திட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிட முடியும்.
இரண்டாவது முக்கியமான அம்சம், வாக்காளர்களை பணபலம், புஜபலம், சாதி ரீதியாக வேண்டுகோள்கள், மத ரீதியாக வேண்டுகோள்கள் போன்றவற்றைக் கூறி வாக்குகளைப் பெற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும். மாறாக மக்கள் தங்கள் வாக்குகளில் சரிபாதி வாக்குகளை, போட்டியிடும் அரசியல் கட்சிகளின் கொள்கைத் திட்டங்களுக்காகத்தான் அளிக்கப் போகிறார்கள். தனிநபர்களுக்கான கோரிக்கை என்பது மறு பாதியில்தான் இருக்கிறது.
நம்முடைய ஜனநாயக அமைப்பை மெருகேற்றி பூரணத்துவப்படுத்திட வேண்டும் என்று உண்மையிலேயே நாம் விரும்புவோமானால் இதனைச் செய்திட முன்வர வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால், அரசமைப்புச் சட்டம் உருவானதற்குப் பிறகு பிறந்துள்ள என்னுடைய தலைமுறை இதனால் மிகவும் பெருமிதம் கொள்ளும்.
ஊடகங்கள்
அடுத்ததாக, ஊடகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து ஒருசிலவற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். அச்சு ஊடகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் ஆகிய இரண்டு குறித்தும் இந்த அவையில் இதற்கு முன்பும் நாம் விவாதித்திருக்கிறோம். காசு கொடுத்து செய்தி போடுவது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் இப்பிரச்சனை தொடர்பாக எதுவும் நடந்திடவில்லை.
அதனை விளம்பரமாகக் கருதி, அதனை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் கணக்கில் சேர்த்திட வேண்டும். முதலாவதாக இதனை நிறுத்திட முயற்சி செய்யுங்கள். இவ்வாறு காசு கொடுத்து செய்தி வெளியிடும் முறை மீது நடவடிக்கை எடுத்திடுங்கள்.
இரண்டாவது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு குறித்ததாகும். எந்தவொரு பெரிய ஜனநாயக நாட்டிலும் கார்ப்பரேட்டுகள் ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை.  அங்கெல்லாம் கார்ப்பரேட்டுகள் செய்தித்தாள், தொலைக்காட்சி அலைவரிசைகள்  மற்றும்  இணையதளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோன்று சமூக வலைத்தளங்கள் குறித்து உறுப்பினர்கள் கூறியதும் மிகவும் சரியானவைகளாகும். சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் 98 சதவீத அளவிற்கு மக்களிடம் கருத்துக்களைத்திணித்திட பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. 2014இல் கண்டுபிடிக்கப்பட்ட முகநூல், ட்விட்டர் பின்னுக்குப் போய்விட்டது. தகவல் தொழில்நுட்ப காலத்தில் மூன்றாண்டுகள் என்பது ஒரு நீண்ட காலமாகும். இப்போது அவை எல்லாம் பின்னுக்குப் போய்விட்டன. வாட்ஸ்அப் மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அதன் சாராம்சம் என்ன? அதில் என்ன பரவிக்கொண்டிருக்கிறது? அது மேற்கொண்டுள்ள சிதைவுகள் என்னென்ன? இவை அனைத்து குறித்தும் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  வாட்ஸ்அப் உதவியுடன் உத்தரப்பிரதேசத்தில் பாஜக எப்படி வெற்றி பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஆனால் நம் அரசமைப்புச்சட்டத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகங்கள் மீது நம் கட்டுப்பாடு என்ன? இவற்றில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை தடை செய்திட வேண்டும். காசு கொடுத்து செய்தி வெளியிடுவது தொடர்பாக அவ்வாறு செய்திடுபவர்களைத் தண்டிக்கக்கூடிய விதத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
நம் நாட்டை வீர்யம் மிக்கதாகவும் சிறந்ததாகவும் உருவாக்க வேண்டும் என்று எண்ணம் படைத்த என் இனிய, செய்தியாளர் நண்பர்களுக்கு , நல்ல மனம் படைத்தோருக்கு, நாட்டுப்பற்று மிகுந்த நல்லவர்களுக்கு, என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுதான். “தயவுசெய்து, நிரந்தர வருவாய் பெறுவதிலிருந்து ஒப்பந்த ஊதியம் பெறும் முறைக்கு மாறும் தவறைத் தயவுசெய்து புரிந்திடாதீர்கள்.”
ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன? எலக்ட்ரானிக் ஊடகங்கள் முழுமையாக அதன் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தூர்தர்ஷனில் தேசிய அரசியல் கட்சிகளுக்கு பேசுவதற்கான வாய்ப்பு அவை பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அளிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் தனியார் தொலைக்காட்சி  அலைவரிசைகளில் என்ன நிலை? அது முழுமையாக பூஜ்யமாகும்.  
இன்று எந்த தனியார் சேனலைத் திறந்தாலும், என்ன பார்க்கிறோம்? மாண்புமிகு பிரதமர் நேரடியாக உரையாற்றுவதைப் பார்க்கிறோம். ஒரேயொரு கேமரா பிரதமருடன் செல்கிறது. அது அனைத்து தனியார் சேனல்களுக்கும் செய்திகளை அனுப்பிவிடுகிறது. நீங்கள் பயணம் செய்யும்போதும், வானொலியில் ஒலிபரப்பைக்  கேட்கும்போதும், பிரதமரின் மனதின் குரலைக் கேட்காமல் இருக்க முடியாது. பழைய இந்தி பாடல்களை எல்லாம் நீங்கள் கேட்க முடியாது. பிரதமர் மக்கள் முன் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களின்  பார்க்கும் உரிமையை, கேட்கும் உரிமையைப் பறிப்பதற்கு நீங்கள் யார்? இதுவா ஜனநாயகம்? உங்களுக்கு என்று வானொலி நிலையங்கள் இருக்கின்றன, அதில் உங்கள் செய்திகளை ஒலிபரப்புங்கள். அனைத்து தனியார் வானொலி நிலையங்களையும் ஏன் ஆக்கிரமிக்கிறீர்கள்? இதுவா ஜனநாயகம்? இவ்வாறு ஊடகங்களில் நடந்துகொண்டிருப்பவைகளைப் பற்றி ஆழமான முறையில் விவாதித்திட வேண்டியது அவசியமாகும்.
எலக்ட்ரானிக் வாக்கு எந்திரங்கள்
அடுத்ததாக, மின் அணு வாக்கு எந்திரங்கள் (EVMs) குறித்து பேச விரும்புகிறேன். (ஒரு படத்தைக் காட்டுகிறார். அத்வானி, நரசிம்மராவ் அந்த படத்தில் இருக்கின்றனர். அவர்கள் கையில் ஒரு புத்தகம். மின்அணு எந்திரங்களால் ஜனநாயகத்திற்கு இடர்ப்பாடு ('Democracy at Risk Due to EVMs'.) என்று அதன் தலைப்பு வாசகமாகும்.  இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் குழுக்களிலும் நான் கலந்துகொண்டு என் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறேன்.
இது தொடர்பாக  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில்  பணியாற்றும் நம் மக்களை (இவர்களில் அதிகமானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்) வரவழைத்தோம். அவர்கள் வந்து அவை செயல்படும் விதத்தை செய்து காட்டினார்கள். அதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையமும் கூறியது. பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தாள்கள் மூலம் சோதனை செய்திட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அப்போது குரேசி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தார். நாம் தாள் சோதனையை (Paper trial) முன்மொழிந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், அது உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. உச்சநீதிமன்றமும் அதனை ஒப்புக்கொண்டது.  2013 இறுதி வாக்கில் இது நடந்தது.   
2014இல் ஆட்சி மாறியது. நேற்றைய முன்தினம், குரேசி ஊடகங்களிடம் ஒன்றைக் கூறியிருக்கிறார். “இது தொடர்வதற்கு நிதி அளிப்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார். நேற்றையதினம், தலைமைத் தேர்தல் ஆணையர், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது போல் முன்னெப்போதும் நடந்ததில்லை.
தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஓர் அமைப்பு. இதற்கு அரசாங்கத்துடன் சம்பந்தம் கிடையாது. இதற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இது குடியரசுத் தலைவரிடமோ அல்லது அவரால் அமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களிடமோதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் இப்போது ஆட்சியாளர்களிடம் சென்றிருக்கிறார்.   இதுபோன்று முன்னெப்போதும் நடந்ததில்லை. எந்த அளவிற்கு விரக்தியடைந்திருக்கிறார் என்று பாருங்கள். அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாததால்  அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து மாண்புமிகு உறுப்பினர் ராம்கோபால் யாதவ் கூறினார். எனவே மீண்டும் தாள்கள் மூலம் வாக்களிக்கும் முறையை சோதனை அடிப்படையில் மீண்டும் கொண்டுவர வேண்டும். சென்ற பொதுத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் இதனை மேற்கொண்டோம். 12இல் அவர்கள் வென்றார்கள். 10இல் நாங்கள் வென்றோம்.
ஏதேனும் பிரச்சனை என்றால் வாக்குச்சீட்டுகளை திரும்பவும் எண்ண முடியும். ஆனால் மின்னணு எந்திரங்களை அவ்வாறு செய்ய முடியாது. எனவேதான் வாக்குச்சீட்டுகளைக் கொண்டுவர தேர்தல் ஆணையம் தயார், உச்சநீதிமன்றமும் தயார். நாம் ஏன் அதற்குத் தயாரில்லை?  இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்,
அடுத்து, ஒரேசமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுவது தொடர்பாக ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.  1952இல் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடந்தன. பின்னர் 1957இல் நடந்தது. 1962இலும் நடந்தது. பின்னர் ஏன் தனித்தனியாக நடைபெற வேண்டி இருந்தது? அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கேரள அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பின்னர் அதேபோன்று பல அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. எனவேதான் நேரம் இரண்டையும் ஒன்றாக நடத்த அதன்பின்னர் ஒத்துவரவில்லை.
நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை நீக்குவதற்குத் தயாரா? ஒரே சமயத்தில் தேர்தல் வேண்டும் என்றால், இந்தப் பிரிவை நீக்குவதற்கு நீங்கள் தயாரா? உங்களால் அதனை நீக்க முடியாது என்றால், உங்களால் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்தவும் முடியாது. தயவுசெய்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? இது ஒன்றும் வித்தைகாட்டும் நிகழ்வோ அல்லது விளம்பரமோ அல்ல. இது ஜனநாயகத்தின்மீது ஏவப்பட்டுள்ள சவால் ஆகும்.  
இப்போது அவர்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறார்கள்? 2019இல் அனைத்து மாநில அரசாங்கங்களையும் கலைத்துவிடப் போகிறார்களாம், நாடாளுமன்றத்துக்கான  தேர்தலுடன் மாநில சட்டமன்றங்களுக்கும் நடத்தப் போகிறார்களாம். இது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை, குடியரசுத்தலைவர் ஆட்சி வடிவத்திற்கு மாற்றுவதற்கான ஒரு மறைமுகமான சூழ்ச்சியாகும். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அரசியல்நிர்ணயசபையில் நீண்ட நெடிய விவாதங்களுக்குப்பின்னர் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை கொண்டுவரப்பட்டது. இதற்கு இணையாக உலகில் வேறெங்கும் கிடையாது. நம்மைப்போன்று வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டுள்ள ஒரு நாட்டில், நாடாளுமன்ற ஜனநாயக .அமைப்புதான் சிறந்ததோர் அமைப்பாகும்.  அதைத்தான் டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஒட்டுமொத்த அரசியல் நிர்ணயசபையும் கூறியது. எனவே அவ்வாறு நாம் முடிவிற்கும் வந்தோம்.  அதனை மாற்றி, குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவர கொல்லைப்புற வழியாக இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதனை நாம் ஒருபோதும் அனுமதித்திட முடியாது.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இன்னும் பல பிரச்சனைகளை ஆய்வு செய்திட வேண்டியிருக்கிறது. எனினும் என்னை முடித்துக்கொள்ளச்சொல்லி மணி அடித்துவிட்டதால் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிமுடித்துக் கொள்கிறேன்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் மதவெறி அடிப்படையில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. “கசாப்” என்றும்,
“கப்ரிஸ்தான்” என்றும் ”ஷம்ஷான் காட்” என்றும் (சுடுகாடு,இடுகாடு) ஈத்துப் பெருவிழா, தீபாவளி பண்டிகை என்றும் நேரடியாகவே மதவெறியை மக்கள் மத்தியில் விசிறிவிடப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு மதவெறியை விசிறி விட்டவர்கள் யார்? நாட்டின் பிரதமரும்,  நாட்டை ஆளும் கட்சியின் தலைவருமே இவ்வாறு கூறியவர்கள். இவ்வாறு இவர்களே மதவெறியைக் கிளப்பிவிடுவார்கள் என்றால், அதற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் கிடையாது என்றால், நாம் ஜனநாயகம் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? நாம் ஏன் இந்தியத் தண்டனைச் சட்டத்தைப் பெற்றிருக்கிறோம்? இதுகுறித்தெல்லாம் நாம் ஆழமான முறையில் பரிசீலனை செய்தாக வேண்டும்.
2014 அக்டோபரில் இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து கருத்துக்களைக் கேட்டது. நாமும் கருத்துக்களை அளித்திருக்கிறோம். இப்போது2017 நடந்துகொண்டிருக்கிறது. அவற்றின்மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்போதாவது அவை குறித்து ஆழமாகவும் முறையாகவும் விவாதித்திட,ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுங்கள். அதில் சட்ட வல்லுநர்களையும், அரசமைப்புச்சட்ட வல்லுநர்களையும் முன்னணி அரசியல் தலைவர்களையும் இணைத்திடுங்கள். தேர்தல் நடைமுறையை ஆழமான முறையில் சீர்திருத்திட நடவடிக்கைகள் எடுத்திடுவோம். நம் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட இது மிக மிக அவசியமாகும்.
--தமிழில்: ச.வீரமணி

Saturday, September 3, 2016

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைகளை துவக்குக: சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லி, செப். 3-ஐம்பது நாட்களுக்கு மேலாக பதற்றத்தின் பிடியில் இருக்கும் காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழு ஞாயிறன்று செல்கிறது. இக்குழு செல்வதைத் தொடர்ந்து காஷ்மீரின் அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக தலையிட்டு தீர்வுகாண அரசை நிர்ப்பந்திக்கும் நோக்கில் அனைத்துக் கட்சி தூதுக்குழு ஒன்று ஞாயிறன்று காஷ்மீர் செல்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகள் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பாக, சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா ஆகியோரும் மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.இதனைத் தொடர்ந்து இக்கூட்ட முடிவுகளை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் கலந்து கொண்டனர்.அப்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அங்கே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் தூதுக்குழு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இரண்டு மாதங்கள் கடந்தபின் இப்போது அரசு அதற்கு முன்வந்திருக்கிறது.கடந்த இரண்டு மாதங்களாகவே காஷ்மீர் மிகவும் மோசமான கொதிநிலையில் இருந்து வருகிறது. ஹிஸ்புல்கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதிலிருந்தே மக்கள் வீதிகளில்இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2 மாதங்களில் 59 பேர்கொல்லப்பட்டதாகவும், சில ஆயிரம் பேர் காயம் , அடைந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் 2 பேர் கொல்லப் பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவலின்படிஇறந்தவர்கள் 70 பேர் ஆவர்.
அங்கே போராட்டத்தை மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் இளைஞர்கள். தற்சமயம் இந்தியாவுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை மிகவும் ஆழமான முறையில் அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இடதுசாரிகளின் நிலைப்பாடு
ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவெனில் காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். கடந்த சில ஆண்டுகளாக இதில் அரசுத்தரப்பில் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை மீண்டும் வழங்கிட வேண்டும். 1948இல்காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அதற்கு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்,
5 முக்கிய அம்சங்கள்
காஷ்மீர் பிரச்சனைக்கு மிக முக்கியமாக ஐந்து அம்சங்களில் முடிவு எடுக்கவேண்டியது அவசியம் என்று இடதுசாரிக் கட்சிகள் கருதுகின்றன.முதலாவதாக, பெல்லட் குண்டுகள் சுடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். மாற்று ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கிறார். மிளகு மற்றும் மிளகாய் கலந்த தூள் வீசப்படும் என்று கூறியிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.இரண்டாவதாக, ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம், மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.மூன்றாவதாக, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அனைத்து அத்துமீறல்கள் தொடர்பாகவும் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும்.நான்காவதாக. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் பட வேண்டும்.ஐந்தாவதாக, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும், ஸ்ரீநகரில் ஐஐஎம், ஐஐடி திறக்கப்பட வேண்டும்,
அனைவருடனும் நிபந்தனையின்றி பேச்சு நடத்துக!
அடுத்ததாக அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல் சக்திகளுடனும் எவ்வித முன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். 2010இல் இதுபோன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண 370ஆவது பிரிவு உளப்பூர்வமாக அமல்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் மூன்று பகுதிகளான ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பிராந்தியங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அடுத்து பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், அங்கிருந்து எல்லை தாண்டிய அத்துமீறல்கள் வரலாம். ஆனாலும் பாகிஸ்தானுடன் பேச வேண்டியதும் அவசியமாகும்.காஷ்மீர் மக்கள் குறித்து நாட்டின் இதர பகுதி மக்களிடம் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் அனைவருமே பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பதுபோன்று சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். காஷ்மீர் இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாவது தடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சுதாகர் ரெட்டி கூறுகையில், தூதுக்குழுவினர் காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது, காஷ்மீர் மக்களின் நம்பிக்கைகளைப் பெறக்கூடிய விதத் தில் அமைந்திட வேண்டும் என்றும் இறுதி அரசியல் தீர்வுக்குவழிவகைகள் கண்டிட வேண்டும் என்றும் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது து.ராஜா மற்றும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஹன்னன்முல்லா ஆகியோர் உடன் இருந்தனர். (ந.நி.)



Friday, August 19, 2016

கட்சி ஊழியர்கள்மீது திரிணாமுல் தாக்குதல் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


கட்சி ஊழியர்கள்மீது திரிணாமுல் தாக்குதல்
சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆகஸ்ட்-
சாமானிய மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தனிமைப்படுத்திட திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இரு நாட்களாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலேயே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். இது தொடர்பாக இன்றைய (வெள்ளிக்கிழமை) தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் சீத்தாராம் யெச்சூரி மற்றும் கட்சியின் தலைவர்கள் கூறியதாக வந்திருக்கும் செய்தி பின்வருமாறு:
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற பயங்கரவாதத்தை 70களில்கூட நாங்கள் சந்தித்திடவில்லை. வங்கத்தின் கிராமப்புறங்களில் எங்கள் ஊழியர்கள்மீது தாக்குதல்கள் மிகவும் மூர்க்கமாக இருக்கின்றன.  உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாக இதனை முறியடித்திட நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். வரும் செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தம் மமதா பானர்ஜிக்கு ஒரு சவாலாக இருக்கும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியிருப்பது தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது, எங்கள் கட்சியிலிருந்து ஊழியர்கள் வெளியேறியிருப்பது தொடர்பாக ஒவ்வொருவர் குறித்தும், அவர்கள் அவ்வாறு வெளியேறியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும்  தனித்தனியே ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
கட்சியில் செயலற்று இருக்கக்கூடிய கட்சி ஊழியர்களையும், திரிணாமுல் காங்கிரசுடன் கள்ளத்தனமாக உறவு கொண்டிருப்போர் குறித்தும் அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம். எங்கள் ஸ்தாபனத்தை வலுப்படுத்திட அது உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் கட்சியிலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு, அவற்றை எங்கள் ஸ்தாபனத்திலிருந்து தூக்கி எறிந்திடுவோம், என்று பெயர் கூற விரும்பாது ஒரு மூத்த தலைவர் தெரிவித்தார்.
 பெயரளவில், செயலற்று இருக்கக்கூடிய உறுப்பினர்களை இனி அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம். கட்சி சிறப்பானமுறையில் செயல்படுவதற்காக, கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்திடவும் தீர்மானித்திருக்கிறோம். புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கு கடும் விதிமுறைகளையும்  ஏற்படுத்தி இருக்கிறோம். எங்களுக்கு சிறிய கிளைகள் அல்ல, மாறாக வலுவான கிளைகளே தேவை,என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டு நாட்களும் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியுடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் கலந்து கொண்டார். செப்டம்பர் 30 முதல் நடைபெறவுள்ள கட்சியின் மாநில பிளீனம் மாநாட்டின் வரைவு தீர்மானம் மாநிலக்குழுவில் விவாதிக்கப்பட்டது.  செப்டம்பரில் பிளீனத்தில் வரைவு தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மாவட்டக்குழுக்களின் கருத்தக்களையும் பெற கட்சி தீர்மானித்துள்ளது.

(ந.நி.)  

Saturday, June 6, 2009

குடியரசுத் தலைவர் உரை மீது சீத்தாராம் யெச்சூரி




புதுடில்லி, ஜூன் 6

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அப்போது அவர் கூறியதாவது:
‘‘குடியரசுத் தலைவர் தன் உரையில் மேற்கு வங்கத்தில் ‘அயிலா’ புயலால் அங்குள்ள மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பாதிப்புகள்
குறித்து குறிப்பிட்டிருக்கிறார். ‘மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்திடும்’ என்று கூறியிருக்கிறார்.
ஜூன் 4ஆம் தேதிய விவரங்களின்படி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 67.5 லட்சம். இறந்தோர் எண்ணிக்கை 137 ஆக உ யர்ந்துள்ளது. முழுவதும் மற்றும் பகுதி சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பயிரின் அளவு 2.8 லட்சம் ஏக்கர்களைத் தாண்டும். பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். உண்மையில் இது ஒரு தேசியப் பேரிடராகும். தற்சமயம் 4.38 லட்சம் மக்கள் 782 நிவாரண முகாம்களில் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். 409 கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளன. சேதத்தின் அளவு மற்றும் திடீரென்று இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு இதனை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு மாநில அரசுகளிடமிருந்து சர்சார்ஜ் வசூலிக்கும் பழக்கம் உண்டு. இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ள ராணுவ உதவிகளுக்கு அவ்வாறு சர்சார்ஜ் வசூலிப்பதையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இப்பிரச்சனையை அரசியலாக்கும் போக்கு இருக்கிறது. மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஒருவரை சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து இத்தாக்குதல் வந்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை அரசியலாக்குவதற்கு இது தருணம் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் தேர்தல்கள் என்பது ஜனநாயகத் திருவிழா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தங்களை யார் ஆள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திடும் விழா. ஆயினும் நாடு சுதந்திரம் அடைந்தபின் அமைந்த எந்த ஒரு அரசும், வாக்களித்த மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து ஆதரவினைப் பெற்றதாகக் கூற முடியாது. ஆம், ராஜிவ்காந்தி ஒருவர் மட்டுமே 48 சதவீத மக்களின் ஆதரவினைப் பெற்று பிரதமராக வந்தார். வேறெவரும் அந்த அளவிற்குக்கூட பெறவில்லை.
ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, பெரும்பான்மையோரின் ஆட்சி என்று நாம் கூறும்போது, இப்பிரச்சனையையும் நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பரிசீலிக்க முன்வந்தீர்களானால், ஒரு பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைப்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அடுத்ததாக, நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் நம் அரசியலமைப்புச் சட்டம். தற்போது நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், சட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாம்,
மத்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளாகவும் செயல்படுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் செயல்பட்டால்தான் சம்பந்தப்பட்ட அரசுகளின் மீது கண்காணிப்பினைச் செலுத்திட முடியும். சென்ற ஆண்டு நாடாளுமன்றம் வெறும் 46 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் என்ன கண்காணிப்பை அரசு மீது செலுத்திட முடியும்?
எனவே, குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். பல குழுக்கள், நாடாளுமன்றம் குறைந்தபட்சம் ஓராண்டில் 100 நாட்களாவது நடைபெற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால் இதனை இதுநாள்வரை அமல்படுத்தப்பட முடியவில்லை., எனவே மேலே கூறியவாறு ஓராண்டில் 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூடுவதைக் கட்டாயப்படுத்தக்கூடிய வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
அடுத்ததாக, நீதித்துறை சீர்திருத்தம். இது இன்றைக்கு மிகவும் அவசியம். இந்தியாவில் உள்ள 21 உயர்நீதிமன்றங்களிலும் 30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 263 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 3 லட்சம் விசாரணைக்கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் ஒரு ஜனநாயக அமைப்பைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
எனவே நிலைமையைச் சரிசெய்திட தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் கல்வி குறித்தும் அதன் விரிவாக்கம் குறித்தும் அதன் தரம் குறித்தும் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தரம், எண்ணிக்கை மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற முறையில் கூறியிருக்கிறார்கள். இதனை ஈடேற்ற வேண்டுமானால் அதற்கு வேண்டிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால் சென்ற முறை அரசு தான் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் உறுதிமொழி அளித்திருந்தபடி கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்திடவில்லை. அதேபோன்று இப்போதும் அரசு செய்திடக் கூடாது. குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதமும், பொது சுகாதாரத்திற்கு 3 சதவீதமும் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச. வீரமணி)

Sunday, April 19, 2009

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் -பாஜக கூறுவது மக்களை ஏமாற்றும் தந்திரமே-சீத்தாராம் யெச்சூரி சாடல்

புதுடில்லி, ஏப்ரல் 19-
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் என்று பாஜக கூறுவது, தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்கான தந்திரமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தலைநகர் டில்லியில் சனிக்கிழமையன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் கள்ளப்பணம் இருப்பதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சம அளவில் பொறுப்பு உண்டு. இந்தியாவிலிருந்து இவ்வாறு பணம் கள்ளத்தனமாகக் கடத்திச் செல்லப்படுவதற்கு தேஜகூ அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே காரணமாகும்.
இந்தியாவிலிருந்து இவ்வாறு இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணத்தைக் கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதற்கு பாதை அமைத்துத்தந்த அதே பாஜக இப்போதுஅது தொடர்பாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறுவது என்னே விநோதம்?
பாஜக-வின் அறிக்கையின்படியே, இந்தியாவிலிருந்து அவர்கள் தலைமையில் தேஜகூ ஆட்சி நடைபெற்ற சமயத்தில்தான் சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பிலா இந்தியப் பணம் இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கிறது.
பாஜக-வினரின் ஆட்சிக் காலத்தில்தான், மொரிசியஸ் மார்க்கம் வழியாக பார்ட்டிசிபேடரி நோட்ஸ் (Participatory Notes) என்னும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக அந்நிய முதலீட்டாளர்கள் ‘பினாமி’ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இவர்கள்தான் நீண்டகால மூலதன ஆதாய வரியை ஒழித்துக்கட்டினர். இவ்வாறு இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கறுப்புப் பணத்தை எடுத்துச் செல்ல அனைத்துவிதமான விதங்களிலும் அன்றைய தினம் உதவிவிட்டு இப்போது அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிப்ரவரியிலேயே ஐமுகூ அரசாங்கத்தை நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அரசு அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. அந்தப் பணம் அனைத்தும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவின் தொழில் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அவை முதலீடு செய்யப்பட வேண்டும்.’’
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கை

புதுடில்லி, ஏப்ரல் 19-
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பல கோடி ரூபாய் கள்ளப்பணத்தையும், கறுப்புப் பணத்தையும் ரகசியமாகப் போட்டு வைத்திருப்பதற்கு பாஜக-வும் ஒரு காரணம் என்றும் எனவே அக்கட்சி அவ்வாறு இந்தியர்கள் பணத்தை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல உடந்தையாக இருந்ததை பாஜக மறுத்திட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் சனிக்கிழமையன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
‘‘எல்.கே. அத்வானி மும்பையில் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஸ்விஸ் வங்கிகளிலும் மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் இந்தியர்கள் கள்ளத்தனமாக பல கோடி ரூபாய் கறுப்புப்பணத்தை போட்டு வைத்திருப்பதாகவும் அதனை மீள இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஒரு படையை அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அமெரிக்க, வாஷிங்டன்னைச் சேர்ந்த குளோபல் பைனான்சியல் இண்டக்ரிடி என்னும் அமைப்பின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாஜக இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. ‘‘குளோபல் பைனான்சியல இண்டக்ரிடி அமைப்பின் ஆய்வானது, 2002க்கும் 2006க்கும் இடையிலான கால கட்டத்தில், ஒவ்வோராண்டும் சுமார் 27.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ரூபாய்கள் இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுவரப் பட்டிருக்கிறது’’ என்று காட்டியிருக்கிறது. இது உண்மையானால், பாஜக ஆட்சியிலிருந்த 2002 முதல் 2004ஆம் ஆண்டுகளில் சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரூபாய்கள் இந்தியாவிலிருந்து கள்ளததனமாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் எல்.கே. அத்வானிதான் நாட்டின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். அவ்வாறு அவர் அதிகாரத்திலிருந்த சமயத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியர்கள் பணத்தைக் கொண்டுசெல்லாமல் தடுத்திட அவர் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்?
பாஜக-வின் அறிக்கையானது, சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் இவ்வாறு இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கிறது. பாஜக-வின் மதிப்பீட்டின்படியே பார்த்தாலும், சுமார் 164 பில்லியன் டாலர்கள் அல்லது நாட்டிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பில் 30 சதவீதத் தொகையானது, பாஜக தலைமையிலான தேஜகூட்டணி ஆட்சியின்போதே நடைபெற்றிருக்கிறது.
பாஜக ஆட்சியிலிருந்த காலத்தில் இவ்வாறு இந்தியர்கள் கள்ளத்தனமாகக் கறுப்புப்பணத்தை நாட்டிலிருந்து கடத்திச் செல்வதைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. வரி ஏய்ப்பைத் தடுத்திடும் ஒப்பந்தம் அதாவது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை கோரியபோதிலும், அதனை பாஜக செய்ய மறுத்துவிட்டது. நாட்டிலிருந்து மூலதன ஆதாய வரி மற்றும் பன்னாட்டு வர்த்தக வரிகள் கள்ளத்தனமாகக் கொண்டு செல்லப்படுவதற்கு மொரிசியஸ் மார்க்கம் பெருமளவில் உதவி வந்திருக்கிறது. 2000 ஏப்ரலிலிருந்து 2008 நவம்பர் வரை, இந்தியாவிற்குள் வந்துள்ள அந்நிய நேரடி முதலீட்டில் சுமார் 44 சதவீதம் மொரிசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ள அந்நிய நேரடி முதலீடு என்பது முறையே வெறும் 8 மற்றும் 7 சதவீதம்தான். இந்திய வரிவிதிப்பிலிருந்து சூழ்ச்சிசெய்து தப்பித்துக்கொள்வதற்காகவே, அந்நியக் கம்பெனிகள் மொரிசியஸ் மார்க்கத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அம்சத்தைக் குறித்து பாஜகவின் அறிக்கை மவுனம் சாதிக்கிறது.
பாஜக-வின் அறிக்கையானது பார்ட்டிசிபேடரி நோட்ஸ் என்னும் பங்கேற்பு ஆவணங்கள் குறித்தும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது. ‘‘இதன் மூலம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகள், இந்தியாவிலும் ஒரு ஸ்விட்சர்லாந்து இருந்திட அனுமதிக்கிறது. அவ்வாறு இந்தியாவில் ஒரு குட்டி-ஸ்விட்சர்லாந்து இருந்திட அனுமதித்தபின், ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட எப்படி இந்தியா கோர முடியும்?’’ ஆயினும், இவ்வாறு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, பணப்பட்டுவாடா ஏற்பாடுகள் மூலமாக பணத்தை முதலீடு செய்திட அனுமதித்ததும் இதே பாஜக தலைமையிலான தேஜகூ அரசுதான். இவ்வாறு நாட்டிலிருந்து சென்ற பணத்தில் 50 சதவீதம் அளவிற்கு தேஜகூ ஆட்சியின்போது சென்றிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்கையில், இத்தகு கொள்கைகளை இன்றைய தினம் பாஜக விமர்சிப்பதில் என்ன நியாயமிருக்கிறது?
பார்ட்டிசிபேடரி நோட்ஸ் என்னும் பங்கேற்பு ஆவணங்களைத் தடை செய்திட வேண்டும் என்றும், நீண்டகால மூலதான ஆதாய வரியை மீளவும் கொண்டுவர வேண்டும் என்றும் அதன்மூலம் ஊகவர்த்தகர்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆயினும் அதனை பாஜக தலைமையிலான தேஜகூ ஆட்சியும் செய்திடவில்லை. இப்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசும் ஊக வர்த்தக றிறுவனங்களைத் தாஜா செய்ய வேண்டுமென்பதற்காக இப்பிரச்சனைகள் தொடர்பாக எதுவும் செய்ய மறுத்துவருகிறது.
உலகப் பொருளாதார மந்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் செய்து வரும் வரி ஏய்ப்புகள் உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக உலகில் உள்ள பல அரசுகள் இவற்றின்மீது நடவடிக்கைள் எடுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ஸ்விஸ் வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து விவரங்ளைத் தெரிவிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்திய அரசாங்கமோ இதுவரை உலகப் பொருளாதார மந்தத்திற்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பது போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறது.
பாஜக இப்போது இவ்வாறு கோருவதற்கு இரு மாதங்களுக்கு முன்னாலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, பிப்ரவரி 23 அன்றே, ‘‘ஐமுகூ அரசாங்கமானது ஸ்விஸ் வங்கிகள் மற்றும் உலகத்தின் பல வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணம் குறித்து விவரங்களைக் கோர வேண்டும் என்று கோரியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பரிவர்த்தனைகள் வரி ஏய்ப்பு மட்டுமல்ல மாறாக சட்டவிரோதமாக இந்தியப் பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்றிருப்பதுமாகும். உண்மையில் அரசு, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர வேண்டுமெனில், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமெனில், வெளிநாட்டில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தை மீள இந்தியாவிற்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்’’ என்று கோரியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது:
* பங்கு பரிமாற்றத்தின் மீதான வரியை அதிகப்படுத்துதல் மற்றும் நீண்டகால முதலீட்டின் பெற்ற ஆதாயத்தின் மீதான வரியை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஊக முதலீட்டின் ஆதாயத்தின் மீது வரி விதிக்கப்பட வேண்டும்.
* பெரும் நிறுவனங்களுக்கு மேலும் வரிச்சலுகைகள் அளிப்பதை நிறுத்த வேண்டும். கறுப்புப் பணததை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட பல நாடுகளில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணத்தை வெளிக்கொணர வேண்டும்.
* மொரிசியஸ் வரி ஏய்ப்பு மார்க்கத்தை அடைக்க வேண்டும். மொரிசியஸ் மற்றும் பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் பங்கேற்பு ஆவணங்களைத் தடை செய்திட வேண்டும். நிதிச்சந்தை ஊக பேரத்தை மட்டுப்படுத்திட வேண்டும்.
* மூலதனக் கணக்கில் முழுமையான அந்நியச் செலாவணி மாற்றம் என்பதை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். உள்ளே வரும் மற்றும் வெளியேறும் நிதி மூலதனம் மீது முன்பிருந்து வந்ததபோல கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்திட வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(ச.வீரமணி)