Showing posts with label Kalaignar. Show all posts
Showing posts with label Kalaignar. Show all posts

Sunday, August 19, 2018

கலைஞர் ஒரு மனந்திறந்த தலைவர் - என். சங்கரய்யா




ஒரு மனந்திறந்த தலைவர்
- என். சங்கரய்யா
கலைஞர் கருணாநிதி தொடர்பான ஃப்ரண்ட்லைன் சிறப்பிதழ், மாபெரும் தலைவர் ஒருவருக்கு மிகவும் பொருத்தமான சமர்ப்பணமாகும். அவருடன் எனக்கான தொடர்பு என்பது  அறுபதாண்டு கால நட்புடன் கூடியதாகும்.  அவருடன் நான் சுமார் அறுபதாண்டு கால நட்பினைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய பூதவுடலை அடக்கம் செய்திட இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு ஆணை பிறப்பித்த மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை, ஜனநாயகத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இந்தத் தீர்ப்பானது, கருணாநிதி வாழ்ந்த சிறப்புமிக்க வாழ்க்கையைச் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அவரை எனக்கு 1952இலிருந்து தெரியும். திமுக, “திராவிட நாடு” கோரிக்கையை உயர்த்திப்பிடித்திருந்த சமயத்தில்,  திமுகவிற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இத்தகு கருத்தாக்கம், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எதிரானதாக அமைந்திடும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினார்கள். இதன் காரணமாகத்தான், 1957இலும் 1962இலும் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது திமுகவுடன் ஒரு தேர்தல் புரிந்துணர்விற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் வர முடியவில்லை.
1962 தேர்தல்களைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பின்னர்தான்,  இரு கட்சிகளுக்கும் இடையேயான புரிதல் ஒரு சரியான ஆர்வத்துடன் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1967 பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இது, தமிழ்நாட்டில் அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இட்டுச் சென்றது.
திமுக தலைமையில் ஆட்சி அமைந்தபின்னர், சமூக நீதி தொடர்பாக எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள், சுயமரியாதைத் திருமணம் குறித்த ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  அத்தகைய திருமணத்திற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று, மாநிலத்தில் எண்ணற்ற தம்பதிகள் இம்முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தகைய திருமணங்களை நடத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு ஓர் ஒளிவிளக்காக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் இணைந்து மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களுக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் பல கூட்டுப் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன. இதன் விளைவாக, மாநில மொழிகளுக்கு விரிவான அளவில் அங்கீகாரங்களும், குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் கூட, இம்மொழிகள் இன்றையதினம் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
உண்மையில், அவர் என்னை,  தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டினார்.  நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தீண்டாமைப் பிரச்சனை தொடர்பாக மதுரையில் ஒரு மாநாட்டினை நடத்தினார். அதில் நான் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தீண்டாமைக் கொடுமைகளின் பலவிதமான வடிவங்கள் குறித்தும் விவரித்தேன். அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டதுடன், பின்னர் அவர் பதில் அளிக்கையில் தன்னுடைய அரசாங்கம் எந்தெந்த விதங்களில் எல்லாம் இதுவரை நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்றும், எதிர்காலத்தில் எடுக்க இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்தார்.   இதே போன்றதொரு மாநாட்டை நெய்வேலியிலும் நடத்தினோம். அதிலும் அவர் பங்கேற்றார்.
அதேபோன்று, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அது, அவருடைய ஜனநாயக அணுகுமுறையைக் காட்டுகிறது. திருக்குறளுக்குச் செல்வாக்கை ஏற்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்கதொரு பங்களிப்பினை ஆற்றினார். மாக்சிம் கார்க்கியின் சிறந்ததொரு படைப்பான “தாய்” நாவலை அவர் தமிழில் கவிதை வடிவத்தில் இயற்றினார்.  அந்நூலுக்கு ஒரு முன்னுரையை எழுதித்தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் வெளியீட்டு விழாவிற்கும் என்னை அழைத்திட்டார்.
அவர் ஓர் எளிமை மற்றும் மனந்திறந்த தலைவராவார். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர். மாற்றுக் கருத்துக்களை அவர் எப்போதுமே மதித்திடுவார். அவற்றில் எப்போதும் உண்மைகள் இருக்கிறதா என்று ஆய்ந்திடுவார்.
அவர், நீண்ட காலம் அரசியல் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டிய நிலையில் இன்றைய தினம் நாட்டிலுள்ள  சூழ்நிலைமை உள்ளது. வடக்கிலிருந்து வரும் குரல்கள் மிகவும் வலுவானவைகளாகவும், உரத்ததாகவும் மாறியிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற கட்சிகளைத் தன் அணியில் வைத்துக் கொள்வதைத் தொடர வேண்டும். எங்கள் நட்பு அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச. வீரமணி)
         




Saturday, August 18, 2018

எங்களிடையேயான உறவு விசேஷமான ஒன்று: சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம், இந்த கலாட்டாவிற்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று நினைக்கிறேன், என்னிடம் பேசும்போது தமிழில் பேசுறீங்க, சந்திரபாபு நாயுடுவிடம் பேசும்போது தெலுங்கில் பேசுறீங்க, ஜோதிபாசுவிடம் பேசும்போது வங்கமொழியில் பேசுறீங்க, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ்வுடன் பேசும்போது இந்தியில் பேசுறீங்க. ஒருத்தரிடம் நீங்க என்ன பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசுவதுதான் இங்கே குழப்பத்திற்கே காரணம். இதை நீங்கதான் தீர்த்து வைக்கணும்,என்று கலைஞர் கூறுவார்.
கடந்த பல ஆண்டு காலத்தில் நான் பலமுறை கலைஞர் கருணாநிதியுடன் பல விஷயங்களைப் பேசி இருக்கிறேன். எங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்பது உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இருப்பதுபோல பாசத்துடனும் நேசத்துடனும் நகைச்சுவையுணர்வுடனும் அமைந்திருக்கும்.
1997 ஏப்ரலில் ஒருநாள். அப்போது மத்தியில் ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபின்னர், எச்.டி. தேவகவுடாவை உடனடியாகப்  பிரதமராகத் தேர்வு செய்த சமயம். பிரதமரைத் தேர்வு செய்துவிட்டோம். ஆனாலும், கேபினட் அமைச்சர்களை இறுதிப்படுத்துவதில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.
தேவ கவுடாவை, பிரதமர் பொறுப்பில் அமர்த்தும் சமயத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற முந்தைய விவாதங்களில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் கலந்துகொண்டார், ஆயினும் அவர் அதில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னமேயே சுர்ஜித், ருஷ்யாவிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களின்போது எங்கள் கட்சியின் சார்பாக நான் கலந்துகொள்ளப் பணிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்துத்தான் கலைஞர் மேலே கூறியவாறு வேடிக்கையுடன் குறிப்பிட்டார்.
கலைஞரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆரம்பத்தில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. பின்னர் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். ஓர் அரசியல்வாதியாக அவருடைய ஆளுமை, ஓர் எழுத்தாளராக, கவிஞராக மற்றும் திராவிடச் சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்பவராக அவருக்கிருந்த திறமைகள் எனக்கு மிகவும் நன்றாகவேத் தெரியும். அவருடைய திரை வசனங்கள் பலவற்றில்  வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்துக் கொடுப்பதுபோல, நகைச்சுவைக்குள் கருத்துக்களை நுட்பமாகக் கலந்திருப்பார்.
   அதேபோன்றதோர் இன்முக நகைச்சுவையை நானும் முதன்முறையாக மேலே கூறிய விவாதங்களின்போது எதிர்கொண்டேன், அனுபவித்தேன். அந்த அனுபவத்திற்குப் பின்னர், கலைஞர் மிகவும் இக்கட்டான பேச்சுவார்த்தைகளுக்கிடையே பதற்றமான நிலைமைகள் இருக்கும் சமயங்களில், கலைஞர் இதுபோன்று நயமான நகைச்சுவை அஸ்திவாரங்களை ஏவுவதை நானும் உய்த்துணர்ந்துகொண்டேன்.
எங்களிடையே இத்தகைய நகைச்சுவையுடன் இருந்த கருத்துப்பரிமாற்றங்கள்தான், எங்களுக்கிடையே ஒரு விசேஷமான உறவுமுறையை பிற்காலங்களில் ஏற்படுத்தியதற்குக் காரணம் என்று நம்புகிறேன்.  ஓர் இளநிலை அரசியல்வாதியாக இருந்த என்னை மிகவும் நேசித்தார். தென்னிந்திய அரசியலில் ஒரு முதுபெரும் ஜாம்பவனாகத் திகழ்ந்த அவரை, நுணுக்கமாக ஆய்வு செய்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.  1996க்கும் 1998க்கும் இடையே ஐக்கிய முன்னணிக் காலத்தின்போது, கலைஞர் கருணாநிதியும், திமுகவும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தலைமை தாங்கப்படும் சங் பரிவாரத்தின் நாட்டைப் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றும் உறுதியான உறுதிப்பாட்டுடன் எங்கள் கூட்டணி உருவானது.
ஆயினும் 1998க்குப்பின்னர் எங்கள் அரசியல் வெவ்வேறு திசைகளில் மாறிய சூழ்நிலையில் நாங்கள் ஒருவரையொருவர் எதிரெதிரே இருந்துதான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஓராண்டு கழித்து, கவிழ்ந்தபின்னர், திமுக, அடல் பிகாரி வாஜ்பாயி தேசிய தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி பக்கம் நகர்ந்தது. அப்போதும்கூட எங்களிடையேயான தனிப்பட்ட தொடர்பு நீடித்தது. நான் சென்னைக்கு வரும் ஒவ்வொருதடவையும் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சூரியனுக்குக் கீழேயுள்ள அநேகமாக அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
இதுபோன்று கருத்துப்பரிமாற்றங்களின்போது, அவருடைய இந்துத்துவா எதிர்ப்பு, வகுப்புவாத அரசியல் எதிர்ப்பு நீர்த்துப்போயிருப்பதைக்குறித்தும்கூட விவாதித்திருக்கிறோம். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது, அவர் ஒரு நிகரற்ற காரணத்தை (a unique reasoning) அதற்காக என்னிடம் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஒரு நீண்டகாலத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருந்ததுடன் ஒப்பிட்டு, மக்களின் தீர்ப்பின்மீது மகத்தான பிடிப்பினை இடதுசாரிகள் வைத்திருக்கக்கூடிய அளவிற்கு, சித்தாந்த உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய நிலையில் திமுக இல்லை என்கிற கருத்து கருணாநிதி கொண்டிருந்தார். எங்களுடைய நிலை ஒருவிதமான தட்பவெப்ப நிலையுடன் கூடிய அரசியலாகும். (Ours is a kind of seasonal politics.) நாங்கள் எங்களுடைய அரசியலையும் அமைப்பின் நலன்களையும் பாதுகாத்திடக் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்,(We have to struggle hard to protect our political and organisational interests,)என்று அவர் கூறினார்.
ஆயினும், 2004 வாக்கில், அவர் தன்னுடைய ஒரிஜினல் சித்தாந்த நிலைக்குத் திரும்பவேண்டிய தேவையை உணர்ந்தார். தோழர் சுர்ஜித்துடன் தொடர்ந்து மேற்கொண்ட கருத்துப்பரிமாற்றங்களால் தூண்டப்பட்டு, அவர் மீண்டும் பிளவுவாத மற்றும் பாசிஸ்ட் இந்துத்துவா அரசியலுக்கு எதிராகப் போராடும் ஓர் உக்கிரமான போராளியாக மாறினார்.
தோழர் சுர்ஜித், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் கலைஞரை கூட்டணிக்கு மீளவும் அழைக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள வைத்தார். 2004இல் பாஜகவிற்கு எதிராக ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்காக இம்மூன்று தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். இதுதான் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக மாறியது. இக்கூட்டணி 2004இலிருந்து 2014வரை ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அளித்தது. இந்த ஆண்டுகளில் அவருடனான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்ந்தன. அந்த சமயங்களில் எல்லாம் எங்கள் கருத்துப்பரிமாற்றங்கள் அரசியல் மற்றும் அரசின் கொள்கைத்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியம், மொழி மற்றும் சமூகவியல் போன்று பல்வேறு பொருள்கள் குறித்தும் அமைந்திருக்கும்.
இவ்வாறு விரிவான எங்கள் விவாதங்களுக்கு மத்தியில், அவர் என்னை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிட என்னை அழைத்தபோது, சிறப்பாகச் சொல்லவேண்டியதொரு விஷயமும் நடந்தது. அவர் இம்மாநாட்டில் பேச வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டபோது, தமிழ் இலக்கியத்துடன் எனக்கு அந்த  அளவிற்கப் பரிச்சயம் கிடையாது என்றும் எனவே இத்தகையதொரு சிறப்பான அறிஞர்கள் கூடும் ஓர் இடத்தில் நான் தனிமைப்பட்டுவிடலாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு கலைஞர் மறுமொழி என்ன தெரியுமா? இந்த செம்மொழி மாநாடு நடைபெறுவது என்பது தமிழ் இலக்கியம் பற்றி மட்டுமல்ல, இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து உருவான பல்வேறு இனங்களின் விரிவான கலாச்சாரத்தின் பிரச்சாரம் பற்றியதுமாகும், என்று தெரிவித்தார். அதற்கு என்னால் எவ்விதமான மறுப்பும் சொல்ல முடியவில்லை.
அப்போது கோயம்பத்தூருக்கு வந்த பயணம் கூட நினைவுகூரத்தக்க ஒன்று. நான் தில்லியிலிருந்து சென்னை வந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகிவிட்டது. அதனால் என்னால் கோவைக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே, கலைஞரிடம் என் பயணத்தை ரத்து செய்திடுமாறு பரிந்துரைத்தேன். ஆனால் கலைஞர் அதனைச் செய்யவில்லை. மாறாக, முதலமைச்சருக்கான ஹெலிகாப்டரில் சென்னையிலிருந்து, கோவைக்கு வானூர்திவழியாக என்னை வரவழைத்தார். நானும் சமூகத்தின் அடித்தளத்திற்கும் மேல்கட்டமைப்புக்கும் இடையேயான ஒரு கண்ணியாக மொழி பார்க்கப்பட வேண்டும் என்கிற மார்க்சியக் கண்ணோட்டத்தை அப்போது சமர்ப்பித்து உரை நிகழ்த்தினேன். (I made the presentation on the Marxian perspective of seeing language as the link between the base and the superstructure.) பின்னர் அந்த உரை முரசொலியிலும் வந்தது, கலைஞரால் ஒரு சிறுபிரசுரமாகவும் வெளியிடப்பட்டது.
எங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்கள் அவருடைய இறுதிநாட்கள் வரையிலும் தொடர்ந்தன. நான்கு  ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்கூட கடந்த காலங்களில் எப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோமோ அப்படிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்போது கலைஞரே கவித்துவத்துடன் கூறியதுபோல, அவர் விடும் மூச்சு அதனை நிறுத்திவிடலாம், ஆனாலும் அவருடைய வாழ்க்கையும் அரசியலும் விட்டுச்சென்றுள்ள செய்தி, எப்போதும் நீண்டு நிலைத்து நிற்கும். (The breath may have stopped but the message of his life and politics shall remain for long.)
(சீத்தாராம் யெச்சூரி, வெங்கிடேஷ் ராமகிருஷ்ணனிடம் கூறியதிலிருந்து)
(தமிழில்: ச. வீரமணி)
            


Wednesday, August 8, 2018

தலைவர் கலைஞர் மறைவிற்கு மாநிலங்களவையில் இரங்கல்



புதுதில்லி, ஆக.8-
தலைவர் கலைஞர் மறைவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தியபின், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில், இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து, மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
மாண்புமிகு உறுப்பினர்களே, 2018 ஆகஸ்ட் 7 அன்று தன்னுடைய 94ஆவது வயதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான டாக்டர் மு. கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் ‘கலைஞர்’ என்று அனைவராலும் அறியப்பட்டிருந்தார். 1924 ஜூன் மாதத்தில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் ஊரில் பிறந்த டாக்டர் கருணாநிதி பன்முகத் திறமைகள் படைத்தவராக இருந்தார். அவர் தன் சிறுபிராயத்திலிருந்தே, நாடகம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் அளவிடற்கரிய ஆர்வத்தைக் காட்டினார். மேலும் சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
பொதுவாழ்வில் அவர் எதற்கும் அஞ்சாத போராளியாக இருந்து, தன்னுடைய நீண்ட நெடிய பொதுவாழ்வில் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு முறியடித்து முன்னேறினார்.
அவர் தன்னுடைய வாழ்க்கையை தமிழ்த்திரைப்படத்துறையில் ஒரு திரைக்கதையாசிரியராகத் தொடங்கினார். அவருடைய திரைக்கதைகள், விதவை மறுமணம், தீண்டாமை ஒழிப்பு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு போன்ற எண்ணற்ற சமூகப் பிரச்சனை களைத் தொட்டு அவற்றின் மூலமாக பேரும் புகழும் அடைந்தார்.
அவர், தன்னுடைய திராவிட சித்தாந்தத்தையும் அரசியல் சிந்தனைகளையும் பரப்புவதற்குத் தமிழ்ச் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டார். டாக்டர் கருணாநிதியின் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான ஆர்வம் அவருடைய கவிதைகள், கடிதங்கள், நாவல்கள், தன்வரலாறுகள், தியேட்டர் நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் உள்பட அவருடைய எண்ணற்ற படைப்புகளில் நன்கு பிரதிபலித்தன.
கலை மற்றும் கட்டடக்கலை மூலமாகவும் தமிழ்க் கலாச்சாரத்திற்கு அவர் பங்களிப்பினைச் செய்துள்ளார். வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டதற்கு அவர் கருவியாக இருந்தார். அவர் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தைக் கட்டியிருப்பதன் மூலமும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை நிறுவியிருப்பதன் மூலமும் திருவள்ளுவருக்கு கட்டடக்கலை மூலமாகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
அவர், 1942இல் ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். அதிலிருந்து அவ்விதழின்  ஆசிரியராகவும்,  வெளியிடுபவராகவும் இருந்து வந்தார். டாக்டர் கருணாநிதி அரசியலில் தன் ஆரம்பவயதிலேயே நுழைந்ததுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
அவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1957இல் தன் சட்டமன்றப் பணியைத் தொடங்கினார். அதிலிருந்து  13 முறை, ஏழு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகள் மூலமாக வெற்றிபெற்று, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரலாறு படைத்தார்.
அவருடைய பேச்சுத்திறமை, நிர்வாகத் திறமை மற்றும் மக்கள்நலம் சார்ந்த நடவடிக்கைகள் அவரை ஒரு வெகுஜனத் தலைவராக உருவாக்கி இருந்தன. அவர், 1969இல் தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக மாறுவதற்கு முன்பு, 1967இல் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.  பின்னர் அவர் 1969இலிருந்து 1971, 1971இலிருந்து 1976. 1989இலிருந்து 1991, 1996இலிருந்து 2001 மற்றும் 2006இலிருந்து 2011 என ஐந்து முறை முதலமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பாத்திரத்தினை வகித்தார். இது பின்னர் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஓர் உந்துசக்தியாக விளங்கியது.
டாக்டர் மு. கருணாநிதியின் மறைவால் நாடு ஒரு மிகச்சிறந்த இலக்கியவாதியை, ஒரு திறமைமிக நிர்வாகியை, ஓர் அர்ப்பணிப்புமிக்க சமூக ஊழியரை மற்றும் ஓர் உன்னதமான அரசியல் மேதகைப்பண்பாளரை இழந்திருக்கிறது. டாக்டர் மு. கருணாநிதி மறைவிற்காக நாம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்மைவிட்டுப் பிரிந்துசென்றுள்ளவரின் நினைவைப் போற்றும் விதத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்துநின்று மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(பின்னர் உறுப்பினர்கள் எழுந்துநின்று, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.)
பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.  
இதேபோன்று மக்களவையிலும் மக்களவை சபாநாயகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்து, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தியபின், மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
(ந.நி.)