Tuesday, May 25, 2021

பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள் சீத்தாராம் யெச்சூரி

 


பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டும்

என்றே மக்கள் விரும்புகிறார்கள்

சீத்தாராம் யெச்சூரி

[கோவிட் 19 மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இது தொடர்பாக தி இந்து நாளிதழ் செய்தியாளர் ஷோபனா கே.நாயருக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு:]

கேள்வி: கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் அனைத்து எதிர்க்கட்சியினரையும் இணைப்பதற்கான முயற்சிகள் குறித்துத் தங்களால் சொல்ல முடியுமா?

சீத்தாராம் யெச்சூரி: கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை காலத்தின்போது 21 கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டோம். அதில் அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருந்தோம். நேரடியாக ரொக்க மாற்று, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக உணவு அளித்தல் உட்பட பல கோரிக்கைகள் அதில் இடம் பெற்றன. ஆனாலும் அரசாங்கம் நாங்கள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ அனுப்பிய எந்தக் கடிதத்திற்கும் பதிலளிக்கவில்லை.

சென்ற ஆண்டு முதலாவது அலை வந்தபோது உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காததற்கான விலையை இப்போது நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒரு பொதுத்துன்மை இருக்கிறது. இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகக் கலந்தாலோசனைகள் மேற்கொள்வது சாத்தியம் இல்லை. ஒவ்வொருவரையும் தொலைபேசிவாயிலாகவோ அல்லது இணையம் மூலமாக சந்திப்பதிற்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது.  ஆனாலும், இந்தப் பிரச்சனை மீது அரசாங்கத்தைப் பதில்சொல்ல வைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்த ஒரு மேடை அவசியம் தேவை என்றே நான் நினைக்கிறேன். மே 2 அன்று அரசாங்கம் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் எழுதியிருந்த கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கள் கூட்டாக எழுதி அனுப்பியுள்ள கடைசி இரு கடிதத்திலும் அது கையெழுத்திடவில்லை. ஒன்றுபட்ட எதிர்க்கட்சி முன்னணி அமைப்பதில் அதன் பங்களிப்பு ஒழுங்கற்று இருந்துவருகிறது.

கேள்வி: இத்தகைய உங்களின் முயற்சிகளில் ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே ஓர் அங்கமாக இருந்ததில்லை. இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையத் தயங்குகின்றனவா அல்லது இதர எதிர்க்கட்சிகள் அக்கட்சிகளை இணைத்துக்கொள்ள தயங்குகின்றனவா?  

சீத்தாராம் யெச்சூரி: இதற்கு ஆம் ஆத்மி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும்தான் பதில் சொல்ல வேண்டும். மே 2 கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கையெழுத்திட்டது. பின்னர் உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வந்தன. அதன்பின்னர் வெளியிடப்பட்ட இரு கடிதங்களிலும் அது கையெழுத்திடவில்லை. இவ்வாறு கையெழுத்திடாமல் ஒதுங்கிக்கொண்டதற்கான காரணத்தை அக்கட்சிதான் சொல்ல வேண்டும். இதே போன்றதே ஆம் ஆத்மி கட்சியுமாகும். உண்மையில், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களும் இத்தகைய முயற்சிகளில் எப்போதும் தங்களை இணைத்துக் கொண்டதில்லை.  

கோவிட்-19 பேரழிவு நாட்டை சீர்குலைத்துக்கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்திருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  இத்துடன் பெருந்தொற்றும் சேர்ந்துகொண்டபின்னர் மக்களின் வாழ்வாதாரங்களில் கடும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு, அரசாங்கம் மக்களுக்கு நேரடி ரொக்க மாற்று, இலவச உணவு போன்றவற்றைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இதனைச் செய்திருக்கின்றன.

கேள்வி:  எதிர்க்கட்சிகளை இணைத்திடும் இத்தகைய முயற்சிகள் கூட்டுக் கடிதங்கள் அனுப்புவதுடன் வரையறுத்துக்கொள்ளப்படுமா? அல்லது அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையக்கூடிய விதத்தில் இருந்திடுமா?

சீத்தாராம் யெச்சூரி: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது. அதற்குள் கங்கை நதியில் அதிக அளவில் தண்ணீர் ஓடும். துரதிர்ஷ்டவசமாக கங்கையில் சடலங்கள் மிதந்து சென்றகொண்டிருக்கின்றன. இதற்கு மோடி அரசாங்கம் மற்றும் மாநில யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஆகியவற்றின் தவறான நிர்வாக நடைமுறைகளே காரணங்களாகும். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளிலிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பாஜகவிற்கும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் மிகவும் குறைவான விதத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாஜக-விற்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளையும் பாருங்கள். பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் சுவர்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: கேரளாவில் கொள்கை முடிவின்படி பினராயி விஜயன் தலைமையிலிருந்த முதல் அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்து அமைச்சர்களும் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவிற்கு விதிவிலக்கு கொடுத்திருக்க முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: அமைச்சரவையில் யாரைச் சேர்ப்பது என்பதும், யாரை விடுவிப்பது என்பதும் கட்சியின் மாநிலக்குழு எடுக்கும் முடிவாகும். அது அங்கே ஒருமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றை சமாளித்ததில் கே.கே.ஷைலஜாவின் பங்களிப்பு கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுதும் மற்றும் உலகம் முழுதும விரிவான அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, பாராட்டுக்களைப் பெற்றது. சென்ற அமைச்சரவையில் அவர் முதல்முறையாகத்தான் அமைச்சராக இருந்தார் என்பதையும் நினைவுகூர்ந்திடுவோம். இரண்டு காரணங்களால் விதிவிலக்கு அளிக்க முடியவில்லை. முதலாவது, நீங்கள் ஷைலஜாவிற்கு விதிவிலக்கு அளிக்கிறீர்கள் என்றால், பின் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் குறித்து என்ன சொல்வீர்கள்? அவரும் கேரளாவில் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தியவர். அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவருக்கு இணையாக திறம்படச் செயலாற்றியவர். இதேபோன்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். மாநிலங்களவையில் இருதடவைகள் அங்கம் வகித்தேன். மூன்றாவது தடவை எனக்கு அளிக்கவில்லை என்பதற்காக ஏகப்பட்ட கூச்சல். எங்கேயாவது ஒரு விதிவிலக்கை நீங்கள் ஏற்படுத்திவிட்டீர்கள் என்றால் பின் அதுவே விதியாக மாறிவிடும். பெண் தலைவர்களை மேலேகொண்டுவர வேண்டும் என்பதைப் பொறுத்தவரை முன்பிருந்த அமைச்சரவையில் இரு பெண்கள் இடம்பெற்றார்கள். இப்போது மூவர் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பினராயி விஜயன் அனைவரையும் உந்தித்தள்ளிவிட்டு மேலே வந்துவிடுவார் என்று ஒரு பயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே, உங்கள் விமர்சனங்கள் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இத்தகைய சிந்தனையோட்டங்கள் மேலேயிருந்து கட்டளையிடும் தலைவர்களைக்கொண்ட கட்சியில்தான் காணப்படும். பல அரசியல் கட்சிகளில் இது உண்மைதான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாகும். அது செயல்படும் விதமும் முறையும் அலாதியானதாகும். ஒரு வீர்யம் மிகுந்த உள்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டுள்ள கட்சி எங்கள் கட்சியாகும்.  எங்களைப் பொறுத்தவரை, கூட்டுத்தலைமையின் முடிவு என்பதே எப்போதும் தனிநபர் முடிவைவிட மேலோங்கியிருக்கும். எவ்வளவோ தடவைகள் பொதுச் செயலாளரின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டு, கூட்டுத்தலைமையின் முடிவு செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. என் விஷயத்தில் மட்டுமல்ல, எனக்கு முன்பும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஜோதிபாசு பிரதமராக வேண்டும் என்பதற்கு பொதுச் செயலாளர் தோழர் சுர்ஜித்தும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆயினும் கட்சியின் கூட்டுத்தலைமை தவறு என்று கூறி அதனை நிராகரித்தது. எங்கள் கட்சியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் இத்தகைய கேள்விகளை எழுப்புவார்கள்.

கேள்வி: மேற்கு வங்கத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் கட்சியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்க வாக்காளர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய உணர்வு, அங்கே பாஜக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். ஏனெனில் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரமே வங்கத்தின் மாண்புகளுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானவைகளாக இருந்தது. வங்கத்தில் வாக்காளர்கள் மத்தியில் பிரதானமாக முன்வந்த கேள்வி, யாரால் பாஜக-வைத் தோற்கடிக்க முடியும் என்பதேயாகும். இத்தகைய உணர்வு வங்கத்தில் மட்டும் இல்லை. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்த மக்கள் மத்தியிலும் இந்த உணர்வு மேலோங்கியிருந்தது. நிர்வாகத்திலிருந்து பாஜக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிற உணர்வு அவர்கள் மத்தியிலும் இருந்தது. கேரளாவில் பாஜக-விற்கு முன்பிருந்த ஓரிடம் கூட இப்போது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. வங்கத்தில் பாஜக-விற்கு எதிரான வாக்கு என்பது திரிணாமுலுக்கு ஆதரவான வாக்கு என்பதைவிட கூடுதலாகச் செயல்பட்டிருக்கிறது.  

பிரிட்டிஷாரிடமிருந்து நாம் பெற்றுள்ள பாரம்பர்யமான தேர்தல் அமைப்புமுறை என்பது இரு கட்சிகளுக்கான போட்டி என்பதேயாகும். இங்கே ஒரு மூன்றாவது கட்சி போட்டியிட்டால்  அது நசுக்கப்பட்டுவிடும்.

ஓர் உண்மையான அரசியல் யுத்தம் இப்போதுதான் தொடங்கி யிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய முகங்கள் பலவற்றைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது. கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. இப்போது இவர்கள்தான் கட்சியின் எதிர்காலம்.

கேள்வி: ஃபர்புரா ஷேக் மதகுரு அப்பாஸ் சித்திக் தலைமையிலான இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்தது தவறில்லையா? கட்சி இதுகுறித்து மறுஆய்வு செய்துகொண்டிருக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: தேர்தல் முடிவுகள் குறித்து வங்கத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் மறுஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.  வங்கத்தில் எங்கள் குறிக்கோள் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும் என்பதாகும். இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியில் அங்கம் வகித்திட்ட தலைவர்களில் சிலர் கடந்த காலம் எப்படியிருந்தபோதிலும் அதன் தலைமையில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்கள் இடம்பெற்றிருந்தார்கள். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதன்படி நாங்கள் சென்றுகொண்டிருப்போம்.

(நன்றி: தி இந்து (ஆங்கிலம்), 25.5.21)

தமிழில்: ச.வீரமணி

No comments: