Monday, February 20, 2017

தலித் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களுக்காக சட்டமியற்றுக



புதுதில்லி, பிப்.20-
தலித் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களுக்காக சட்டமியற்ற வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகள், தலித் அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களுடன் இணைந்து வெகுஜன இயக்கங்களையும் போராட்டங்களையும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் பிப்ரவரி 19 ஞாயிறு அன்று புதுதில்லியில் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு;
மாநில சட்டமன்றத் தேர்தல்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதர இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. உத்தரகாண்டில் ஆறு தொகுதிகளிலும், பஞ்சாப்பில் 12 தொகுதிகளிலும், மணிப்பூரில் இரு இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதன் பிரதான குறிக்கோள், மக்கள் மத்தியில் மாற்று இடதுசாரிக் கொள்கைகளை முன்னெடுத்துச்சென்று, சட்டமன்றங்களில் இடதுசாரிகளின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவும், அப்போதுதான் மக்களின் பிரச்சனைகள் குறித்து இதுநாள்வரையில் பேசப்படாத இச்சட்டமன்றங்களில் அவற்றை இடதுசாரிகளின் பிரதிநிதிகளால் எழுப்பமுடியும் என்பதுமாகும். இதன்மூலம், இடதுசாரிக் கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தி, மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளித்திட, மாநில அரசாங்கங்கள் மீது நிர்ப்பந்தத்தைக் கொடுப்பதே குறிக்கோளாகும்.
வகுப்புவாத கூட்டணியை தோற்கடிக்க…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் போட்டியிடாத இடங்களில், பாஜக மற்றும் அதனுடன் இணைந்து போட்டியிடும் வகுப்புவாதக் கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக்கிறது. ஏனெனில் ஒரு பக்கத்தில் மதவெறி கூர்மைப்படுத்தப்படுவதன் காரணமாகவும், மறுபக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாகவும் இவ்வாறு இரண்டு பக்கத்திலும் அடிவாங்கிக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு, பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும். இந்தப் பிரச்சாரத்தின்போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி வருகிறோம்.
தேர்தல் சீர்திருத்தங்கள்
இம்மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அரசியல் கட்சிகள் பெறும் நிதி மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்து வர வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் எப்படி நிதி வசூலித்து, செலவு செய்து வருகிறோம் என்பதை முதலில் பிரதமரும், பாஜகவும்தான் மக்கள் மத்தியில் விளக்கிட வேண்டும். பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் தங்களுடைய தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு மிகவும் ஆடம்பரமாக செலவுகள் செய்து வருகின்றன.
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் நடவடிக்கைகள், வெறும் கண்துடைப்பேயாகும். தற்போது அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ரொக்க நன்கொடைகளை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாகக் குறைத்திருப்பது, இதற்கு மேலான தொகை என்றால் அது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது, தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது, ஆகியவை எந்தவிதத்திலும் அரசியலில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வலுவான நடவடிக்கைகள் என்று கூறிட முடியாது.

தேர்தல் செலவு கட்சிகளுக்கு உச்சவரம்பு தேவை
தேர்தல்களில் பணபலம் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், அதற்கான முதல் நடவடிக்கையாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதைத் தடை செய்திட வேண்டும். இரண்டாவதாக, தேர்தல்களில் அரசியல் கட்சிகள் செலவு செய்வதற்கு உச்சவரம்பு ஏற்படுத்திட வேண்டும். தற்போது நடைமுறையில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்குத்தான் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்வதற்கு எவ்விதமான கட்டுப்பாடோ அல்லது உச்ச வரம்போ கிடையாது. கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள பாஜக இத்தகு பரிந்துரைகளைப் பரிசீலித்திட முழுமையாக மறுத்துவருகிறது. தேர்தல் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுகாலமாகவே சில முக்கியமான பரிந்துரைகளைச் செய்து வருகிறது. அரசாங்கம் அமைக்கப்படும்போது அதில் மக்களின் ஜனநாயகத் தேர்வு உண்மையான முறையில் பிரதிபலித்திட வேண்டுமானால், பகுதியளவான விகிதாச்சார பிரதிநிதித்துவம்  கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் இதுவரை அமைந்த மத்திய அரசாங்கங்கள் அனைத்துமே, பொதுத் தேர்தல்களின்போது, மக்களிடமிருந்து 50 சதவீதத்திற்கும் குறைவான அளவு வாக்குகளைப் பெற்ற கட்சிகள்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான மோடி அரசாங்கமும்கூட மக்களிடம் வெறும் 31 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. 69 சதவீத மக்கள் பாஜகவிற்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். ஜனநாயகம் என்றால் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்றவர்களின் ஆட்சி என்பது உண்மையில் நம் நாட்டில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
இப்போதுள்ள தொகுதிகளில் இரு தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டு, அதில் மக்கள் தாங்கள் விரும்பும் ஒரு வேட்பாளருக்கும், ஒரு கட்சிக்கு அதன் தேர்தல் அறிக்கை, கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் வாக்களிக்கக் கோரலாம் என்று நாம் முன்மொழிவுகளை முன்பு சமர்ப்பித்து வந்திருக்கிறோம். இது மக்களின் ஜனநாயகத் தேர்வை சிறந்த முறையில் பிரதிபலித்திடும். மேலும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தில், மக்கள் அரசியல் கட்சிகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு வாக்களிப்பதால், அது பண பலத்தையும், சாதியக் காரணிகளையும் கணிசமான அளவிற்குக் குறைத்திடும். இதர அரசியல் கட்சிகளுடனும், சமூக அமைப்புகளுடனும் இயக்கங்களுடனும் விவாதங்கள் மேற்கொண்டு, ஒரு முழுமையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தேசிய சிறப்பு மாநாட்டை விரைவில் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து முன்மொழிந்திட இருக்கிறது. தேர்தல் நடைமுறைகளில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்திட இப்பிரச்சனை தொடர்பாக விருப்பம் தெரிவித்திடும் இதர அரசியல் கட்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணுகிடும்.

தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடுகள்
மத்திய பட்ஜெட்டில் தலித்துகள், பழங்குடியினருக்கான நலத்திட்டங்களுக்கு மிகவும் அற்ப அளவில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதற்கு, தன் வேதனையை வெளிப்படுத்திக் கொள்கிறது. திட்டக் கமிஷனையும், இந்த ஆண்டிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டியபிறகு, நடைமுறையில் தலித்துகள் பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களும் வழக்கொழிந்துவிட்டன. இவற்றின் விளைவாக, தலித்துகள், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகைகளில் பெரும்பகுதி ஒதுக்கி வழங்கப்படாமல் இருக்கிறது. நடப்பு மத்திய பட்ஜெட் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் மிகவும் அற்ப அளவில் தலித்துகளுக்கு 2.44 சதவீதமும், பழங்குடியினருக்கு 1.48 சதவீதமும் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது. இந்தப் பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இதர இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தலித் உரிமைகளுக்காகப் போராடும் சமூக இயக்கங்களுடனும் கலந்துபேசி, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திடத் தீர்மானித்திருக்கிறது.
(1) மத்திய அரசாங்கம் தலித்துகளுக்கு 71,139 கோடி ரூபாயையும், பழங்குடியினருக்கு 34,349 கோடி ரூபாயையும் வழங்காமல் மறுத்திருக்கிறது, அவற்றை உடனடியாக ஒதுக்கிட வேண்டும்.
துணைத் திட்டங்களுக்கான சட்டமியற்றுக
(2) தலித் துணைத் திட்டம், பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களுக்கான சட்டங்கள் இயற்றிட வேண்டும். அத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு, செலவு செய்யப்படுதல் மற்றும் வெளிப்படைத் தன்மை சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட வேண்டும். மத்திய அரசும், மாநில அரசாங்கங்களும் தலித் துணைத் திட்டம், பழங்குடியினர் துணைத்திட்டங்கள் உருவாக்கி செலவு செய்வதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் மத்திய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
(3) தலித் துணைத்திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டத்தில் பெண்களுக்கு என்று 10 சதவீதம் தனியே ஒதுக்கிட வேண்டும், இதன்மூலம் பெண் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்,
(4) மெட்ரிக் தேறிய தலித்/பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவிப்பணம்
(ஸ்காலர்ஷிப்புகள்) வழங்கப்படாமல் இருக்கும் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை உடனடியாக விடுவித்திட வேண்டும், தலித்/பழங்குடியின மாணவர்கள் உயர்க்கல்வியைத் தொடரக்கூடிய விதத்தில், இத்தொகைகளை மீண்டும் ஒதுக்கித் தந்திட வேண்டும்,
இப்பிரச்சனைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர இடதுசாரிக் கட்சிகளுடனும், தலித் அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களுடனும் இணைந்து நின்று வெகுஜன இயக்கங்களையும் போராட்டங்களையும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடத்திடும்.

தெற்காசிய நாடுகளின் மாநாடு
மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சியின் ஒரு பகுதியாக, சென்ற மத்தியக்குழுக் கூட்டத்தின் முடிவிற்கிணங்க, வரும் 2017 செப்டம்பரில், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இரண்டு நாள் மாநாட்டை நடத்திடுவது என்று அரசியல் தலைமைக்குழு முன்மொழிகிறது. மாநாட்டின் மைய ஆய்வுப் பொருள், தெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும், ‘ஏகாதிபத்தியம், வகுப்புவாதம் மற்றும் அடிப்படைவாதம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு அக்டோபர் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் நடைமுறை உத்திகள் இன்றைய காலகட்டத்திலும் சரியாகப் பின்பற்றப்பட வேண்டியவைகளேயாகும்’ என்பதாகும்.

மத்தியக்குழுக் கூட்டம்
அடுத்த மத்தியக்குழுக் கூட்டம் 2017 ஏப்ரல் 18/19 தேதிகளில் நடைபெறும். அரசியல் தலைமைக்குழு ஏப்ரல் 17 அன்று கூடும்.
(ந.நி.)

No comments: