Thursday, June 10, 2010

நீதித்துறையிலிருந்து ஓர் அநீதித் தீர்ப்பு



உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தான - போபால் விஷவாயுத் துயரத்தில் - கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின் இறுதியாக வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்தவர்களைத் தண்டித்து ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இத்தீர்ப்பு குறித்து உலகம் முழுதும் ‘தாமதிக்கப்பட்ட நீதி என்றும் மறுக்கப்பட்ட நீதி என்றும்’ கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. வெளிப்படையாக சொல்வதென்றால் இவ்வழக்கில் நீதி வழங்கப்படவில்லை. அநீதி -அதுவும் கிரிமினல் அநீதி - வழங்கப்பட்டிருக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான வாரன் ஆண்டர்சன் நியூயார்க்கில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேற்படி யூனியன் கார்பைட் நிறுவனத்தின் நிர்வாகிகளில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேர்களுக்கு (அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்) மட்டும் வெறும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்தும் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை வழங்கப்பட்ட அனைவருமே 20 ஆயிரம் ரூபாய்க்கு சொந்தமாக முறி எழுதிக்கொடுத்ததன் பேரில் உடனடியாக பிணையிலும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.

உலகின் மிக மோசமான இத்தொழிற்சாலை விபத்து குறித்து வாசகர்களுக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். 1994 டிசம்பர் 2-3 இரவு இக்கோர விபத்து ஏற்பட்டது. போபாலில் இருந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையின் ரசாயன உலையிலிருந்து 40 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான ‘டாக்சிக் வாயு’ கசிந்ததை அடுத்து, அந்தக் கணமே தொழிற்சாலையிலிருந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள், போபாலிலும் அதனைச் சுற்றிலும் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் இருந்தபோதிலும், இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டார்கள் என்பதும், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆயுள் பூராவும் அனுபவிக்கக்கூடிய விதத்தில் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதும் உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட உண்மைகளாகும். விபத்து நடப்பதற்கு முன்பாக, யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குப் பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தும், அது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததனால்தான் இப்பேரிடர் ஏற்பட்டது என்பது புலனாய்பு மூலம் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சன், விபத்து நடைபெற்றபின் நான்கு நாட்கள் கழித்து போபால் வந்த போது, தொழிற்சாலையை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இறக்கக் காரணமாக இருந்ததற்காக, கைது செய்யப்பட்ட போதிலும், உடனடியாக அவர் 20 ஆயிரம் ரூபாய்க்கு சொந்த முறி எழுதிக்கொடுப்பதன் பேரில் விடுவிக்கப்பட்டு, மாநில அரசின் விமானம் ஒன்றில், புதுதில்லிக்கு அனுப்பப் பட்டு, அங்கிருந்து அமெரிக்காவிற்குத் தப்பித்துச் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுநாள் வரையில் அவர்
இவ்வழக்கில் ‘காணப்படாதவராகவே’க் கருதப்பட்டு வந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்த பிணைமுறியில், வழக்கு விசாரணையின்போது இந்தியாவுக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், அவர் அதனைச் செய்திடவில்லை, அவரை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கு இந்திய அரசும் முயற்சிகள் மேற்கொள்ள இதுவரை தவறிவிட்டது.

1989இல் இந்திய அரசும், இந்திய நீதித்துறையும் இணைந்து எவருக்கும் விளங்காத வகையில் யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிட்டுவிட்டன. இதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் 1991இல் இது தொடர்பான வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்தது, ஆயினும், 1996இல் மீண்டும் எவருக்கும் விளங்காத வகையில், உச்சநீதிமன்றமானது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்டியிருந்த பத்தாண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சாட்டியிருந்த கடுமையான கொலைக் குற்றச்சாட்டுக்களை, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் விதிக்கக்கூடிய ‘கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்’ என்ற குற்றச்சாட்டுகளாக மாற்றியது. இவ்வாறு மாற்றியமைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அதன்பின்னர் பதினைந்து ஆண்டுகள் கழித்து, இப்போது எவ்விதத்திலும் நியாயமற்ற ஓர் அநீதித் தீர்ப்பு, அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய அநீதியை ஏற்கமுடியாது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்தியாவில் நீதி வழங்கும் முறையை சீர்குலைத்திடவோ, மறுதலித்திடவோ அனுமதிக்க முடியாது. இது அனுமதிக்கப்பட்டால், பின் நம் நாட்டு மக்களுக்கு நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே சுக்குநூறாக உடைந்து தகர்ந்துவிடும். இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்குப் பரிகாரம் காண இந்திய அரசாங்கம் உளப்பூர்வமாக முன்வர வேண்டும். பல்லாயிரக் கணக்கானோர் மடியக் காரணமாக இருந்த கோரவிபத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இக்கோர விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சராசரியாக வெறும் 12 ஆயிரத்து 410 ரூபாய் மட்டும் இழப்பீடாக வழங்கியிருப்பது எவ்விதத்திலும் ஏற்க முடியாததாகும்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுதும் மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளதற்குப் பதிலளிக்கும் விதத்தில் சட்ட அமைச்சர், ‘‘ஆண்டர்சன்னுக்கு எதிராக உள்ள வழக்கு சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னமும் நிலுவையில் இருப்பதாகவும், ‘‘அவர் கொண்டுவரப்பட்டால், அவர் இப்போதும் விசாரிக்கப்பட முடியும்’’ என்று கூறியிருக்கிறார். இதனை அரசு உளப்பூர்வமாக செய்தால் மட்டுமே நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்க முடியும். அதுமட்டுமல்ல, சட்ட அமைச்சர் மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய மோசமான தொழிற்சாலை விபத்துக்கள் நிகழுமானால் அத்தகைய விபத்துக்களுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான முறையில் பாயக்கூடிய விதத்தில் புதிய சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
இவர் கூறுவது உண்மையெனில், ஐமுகூ-2 அரசாங்கமானது, மிகவும் ஆழமாக மறுபரிசீலனை செய்து, நாடாளுமன்றத்தில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, அவசரம் அவசரமாக அறிமுகப்படுத்தியுள்ள (ராணுவம்சாரா) சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். போபால் விஷவாயு விபத்து தொடர்பாக, இத்தனை ஆண்டுகள் நீண்ட நெடிய வழக்கு விசாரணைகளுக்குப்பின் யூனியன் கார்பைட் நிறுவனம் இதுவரை வெறும் 713 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கியிருக்கிறது. இப்போது அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாகிவிட்டால், பின்னர் அணுசக்தி கம்பெனிகள் விபத்து ஏற்படின் அளிக்கப்பட விருக்கும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையே வெறும் 500 கோடி ரூபாய்கள்தான். விபத்துக்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டால் இழப்பீட்டுத் தொகை என்பது 2100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட முடியும். அணுசக்தி உலைகளில் விபத்து என்றால், அதனால் விளையும் பாதிப்புகள் பல மடங்கு இருக்கும் என்பது இன்றையதினம் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். ஆயினும் மேற்படி சட்டமுன்வடிவானது, போபால் விஷவாயு விபத்து வழக்குகளில் யூனியன் கார்பைட் நிறுவனம் கொடுத்த அற்பத் தொகையை விட அற்பமாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள அனுபவத்தின் வெளிச்சத்திலிருந்து இந்தச் சட்டமுன்வடிவு நிராகரிக்கப்பட்டாக வேண்டும் என்பது தெளிவு.
இப்போது வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பானது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகளுக்கு மிகவும் தெளிவாக ஒரு செய்தியை இத்தீர்ப்பின்மூலம் அனுப்பியிருக்கிறது. அதாவது, அவை இந்தியாவில் தொழிற்சாலைகளை நிறுவி, கொள்ளை லாபத்தை அறுவடை செய்து கொள்ளலாம். தொழிற்சாலை விபத்துக்கள் நடைபெற்றால் அதன் காரணமாக அதிகமான அளவில் இழப்பீடு வழங்க வேண்டியிருக்குமோ என அவை கிஞ்சிற்றும் அஞ்சவேண்டியதில்லை. இத்தகைய சிந்தனையோட்டத்தைத்தான் அமெரிக்க அரசின் அமைச்சர் ஒருவர் பிரதிபலித்திருக்கிறார். யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக எதிர்காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஏற்கனவே அமெரிக்க அரசு கூறிவிட்டது.

ஐமுகூ-2 அரசாங்கமானது, எக்காரணம் கொண்டும் சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகிவிடக் கூடாது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர, சட்ட அமைச்சர் உறுதியளித்துள்ளபடி, உண்மையாகவே நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர் மீதான விசாரணையை விரைவுபடுத்திட வேண்டும், மேலும் அரசாங்கம் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திடவும் உச்சநீதிமன்றத்தை அணுகிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய கோர விபத்துக்கள் நிகழும் சமயங்களில் அதற்குக் காரணமானவர்கள் மீது தாமதமின்றி வழக்கு தொடுத்து, நீதி வழங்கிடக் கூடிய வகையில் சட்டங்களை வலுப்படுத்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: