Tuesday, May 1, 2018

காரல் மார்க்ஸ்-200: விதவிதமாய்க் கொண்டாடுவோம்! வீதியெங்கும் கொண்டாடுவோம்!



காரல் மார்க்ஸ்-200:
விதவிதமாய்க் கொண்டாடுவோம்!
வீதியெங்கும் கொண்டாடுவோம்!
சிபிஎம்22வது மாநாடு அறைகூவல்
[ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு, வரும் 2018 மே 5 முதல் 2019 மே 4 முடிய ஓராண்டு காலத்திற்கு, மாமேதை காரல் மார்க்சின் இருநூறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை அனைத்துவிதமான வடிவங்களிலும் கொண்டாடிட வேண்டும் என்று கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:]
காரல் மார்க்ஸ், (1818 மே 5 – 1883 மார்ச் 14) ஒரு யூத வழக்குரைஞர் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பூர்வீகங்கள் என்பவை புரட்சிகரத்தன்மையைத் தவிர அனைத்தையும் கொண்டிருந்ததாகும். எனினும், அவர் தன்னுடைய வாழ்நாளில் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, மனிதகுல வரலாற்றில், மற்றும் மனிதகுலச் சிந்தனையாளர்களில், மனிதகுலம் இதற்கு முன்னெப்போதும்  கண்டிராத அளவிற்கு மாபெரும்புரட்சியாளர்களில் ஒருவராக முத்திரை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் இறந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்குள், சோவியத் யூனியன் என்னும் ஒரு மாபெரும் நாடு, மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்து அவர் கண்டலட்சியக் கனவை நிறைவேற்றும் விதத்தில் உருவானது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுதும் உள்ள நாடுகளில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள், தங்களையும் அத்தகையதொரு பாதையை, சோசலிசப் பாதையைஅமைத்திடுவதற்கான முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
1883இல் அவர் இறக்கும்போது அவரது கல்லறையில்அவருக்காக துக்கம் அனுசரித்தவர்கள் 11 பேர் கூட கிடையாது. ஆனால், அதன்பின்னர் அவர் பிறந்த நாளும் அவர்நினைவு நாளும் உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் கடந்த இருநூறு ஆண்டுகளாக, ஒவ்வோராண்டும் கொண்டாடப்படும் தினங்களாக மாறியிருக்கின்றன. இந்த ஆண்டு, அவருடைய 200ஆவது பிறந்த நாள் ஆண்டாகும். இது உலகம் முழுதும் மற்றும்நம் நாட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.காரல் மார்க்ஸ், மனிதகுல முன்னேற்றத்திற்காகப் படைத்திட்ட படைப்புகளின் தனித்துவம் என்ன? அவருடைய வாழ்வும் பணியும் உலகம் முழுதும் கோடானுகோடி மக்களால் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? காரல் மார்க்ஸ் அவர்கள்தான் முதலாளித்துவ சகாப்தத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் சிந்தனையாளராவார்.
காரல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்சுடன் இணைந்து நின்று, தொழிலாளர்களின் வாழ்நிலைமைகள் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வினை மேற்கொண்ட முதல் நபராவார். அவ்வாறு அவர் ஆய்வினை மேற்கொள்ளும்போது, முதலாளித்துவத்திற்கு முன்பே பல நூறுஆண்டுகளாக சமூகத்தில் இருந்துவந்த அனைத்துவிதமான சுரண்டல்கள் குறித்தும் ஆய்வினைச் செய்து அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். பின்னர்அது இன்றைய தினம் எவ்விதமான வடிவத்தை அடைந்திருக்கிறது என்பதையும் விளக்கினார். அவரது ஆய்வுகளில், சுரண்டல் எப்படி இருக்கிறது என்று விளக்கியதோடு மட்டுமல்லாமல், அதனை எப்படி எதிர்கொண்டு மீள்வது என்பது குறித்தும் விளக்கினார்.
வெளிச்சத்தைத் தந்த கோட்பாடு
தத்துவமேதைகள் இந்த உலகம் குறித்து பல்வேறு விதங்களில் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். ஆனால், அதனை எப்படி மாற்றுவது என்பதே மையமானபிரச்சனையாகும்,” என்று காரல் மார்க்ஸ் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயான உறவு குறித்து தன்னுடைய பாயர்பாக் மீதான 11ஆவது ஆய்வுக்கட்டுரையில் எழுதினார். மார்க்சின் கருத்தின்படி, சுரண்டல் என்பது சமூகத்திலிருந்து தனித்த ஒன்று அல்ல.அதே போன்று அதனை சமூகத்தின் ஒரு வடு என்றும்கூற முடியாது. சமூகத்தின் வளர்ச்சி என்பது, அது பின்பற்றிடும் சுரண்டல் வடிவத்தையே சார்ந்திருக்கிறது. அதுதான் அதன் குணத்தை உருவாக்குகிறது. அனைத்து சமூகங்களும், சுரண்டும் வர்க்கம் மற்றும் சுரண்டப்படும் வர்க்கம், என்று வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கின்றன. அனைத்துப் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறும் வர்க்கப்போராட்டத்தின் வரலாறேயாகும்.
வாழ்நாள் முழுதும் அவருடன் பயணித்த அவரதுசக போராளியான பிரெடெரிக் ஏங்கெல்ஸ், மார்க்சின் கல்லறையில் நிகழ்த்திய உரையின்போது, “எப்படி டார்வின் உயிரியலின் வளர்ச்சி விதிகளைக் கண்டுபிடித்தாரோ, அதேபோன்று மார்க்ஸ் மனிதகுலவரலாற்றின் வளர்ச்சி விதிகளைக் கண்டுபிடித்துத் தந்துள்ளார்,” என்று கூறினார். ஆனால், அத்துடன்நின்றுவிடவில்லை. “மார்க்ஸ், இன்றைக்கு நடைபெற்றுவரும் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கட்டுப்படுத்திடும் சிறப்பு இயக்கவிதி குறித்தும், இந்தஉற்பத்தி முறைதான் முதலாளித்துவ சமூகத்தையும்(அதாவது பூர்ஷ்வா சமூகத்தையும்) உருவாக்கித் தந்துள்ளது என்றும் கண்டுபிடித்துத் தந்துள்ளார். அதுநாள்வரையிலும் முதலாளித்துவ பொருளாதாரவாதிகளும், சோசலிஸ்ட் விமர்சகர்களும் இருட்டில் திக்குத்தெரியாது முயற்சித்துக் கொண்டிருந்த அனைத்துவிதமான ஆய்வுகளுக்கும் இவர் கண்டுபிடித்துத்தந்த உபரி மதிப்புக் கோட்பாடுதான் வெளிச்சத்தை அளித்து,அவர்களைத் தெளிவுபடுத்தியது,” என்றும் ஏங்கெல்ஸ் விளக்கினார்.
புதிய சமூகத்தின் விதிகள் வகுப்பு
மார்க்ஸ், “முதலாளித்துவம், ஒரு புதிய சமூக அமைப்பாக தோன்றிய சமயத்தில், தன்னுடன் தன்னைத், தன் சொந்த கல்லறைக்குள் புதைக்கக்கூடியவிதத்தில், ஒரு புதிய வர்க்கத்தையும்பாட்டாளிகளாகிய நவீனதொழிலாளி வர்க்கத்தையும்சேர்த்தே கொண்டுவந்தது,” என்றும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு மாபெரும்அறிவியலாளரைப் போன்றே மார்க்சும், சமூகத்தைஆய்வு செய்வதற்குத் தேவைப்படும் கருவிகளையும்,இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்னும் கருவிகளையும், உருவாக்கித் தந்தார்.மார்க்ஸ், முதலாளித்துவத்தின் தோற்ற வளர்ச்சியை தர்க்கரீதியாக ஆய்வு செய்து, அது தவிர்க்கமுடியாத விதத்தில் ஆழமான முறையிலும், திரும்பத்திரும்பவும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்வது தவிர்க்கமுடியாதது என்றும் உறுதிபடக் கூறினார். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மேலும் விரிவானமுறையில் சமூகத்திற்குச் செல்லுபடியாகாத தன்மையுடையதாக மாறிக்கொண்டிருப்பதால், அதனைத் தூக்கி எறியக்கூடிய சமூக சக்தியாக மற்றும் ஒரு புதிய உற்பத்தி முறையான, சோசலிசத்தை, தொழிலாளர் வர்க்கம் கொண்டுவரும். மார்க்ஸ், ஏங்கெல்சுடன் இணைந்து நின்று, இந்தக் கட்டம்தான் வர்க்க சமுதாயத்தைத் தூக்கி எறிவதற்கான கட்டமாக அமைந்திடும் என்று தெளிந்தார்கள். மார்க்சின் உத்வேகமூட்டக்கூடிய பார்வை என்பது, அவர் தன்முன் கண்டுவந்த சுரண்டலை ஒழிப்பது அல்ல, மாறாக புதிய மனிதசமூகத்திற்காக, புதியதொரு கட்டத்திற்கு அடித்தளமிடுவதாகும். மார்க்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்திற்கான கருத்தாக்கத்தையும் வளர்த்தெடுத்துக் கொடுத்துள்ளார். இவ்வாறான கம்யூனிச சமூகம் என்பதுஅபரிமிதமான செல்வங்கள் நிறைந்த ஒரு சமூகமாகும். இத்தகைய சமூகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் அரசு என்பது உலர்ந்து உதிர்ந்துவிடும் என்ற விதத்தில் கம்யூனிச சமூகத்தின் விதிகளை வகுத்திட்டார்.
மாற்றியமைப்பதற்கான கருவிகள்
எண்ணற்ற துறைகளில் மார்க்ஸ் மேற்கொண்ட ஆய்வுகள், உலகின் இயற்கை மற்றும் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு, தொழிலாளர் வர்க்க ஆண்கள்பெண்கள்,புரட்சிகர மாணவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்குத் தாங்கள் வாழும் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உத்வேகத்தை அளித்தது. ஆனாலும் மார்க்சின் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகித்தது பாட்டாளிவர்க்கம்தான். அதுதான் புரட்சியின் முன்னணிப் படையாக விளங்கும் என்பதே அவருடைய சிந்தனைகள்,கருத்துக்கள் மற்றும் படைப்புகளில் அடிப்படையாக இருக்கிறது. மார்க்சின் பணிகள் இன்றைக்கும் ஒரு வாழும்மரபுரிமைச் செல்வமாக, தொடர்கிறது. லெனின்போன்ற இதர புரட்சிகரமான சிந்தனையாளர்கள்மட்டுமல்ல,பல லட்சக்கணக்கான சிந்தனையாளர்களுக்கும் உலகைப் புரிந்துகொள்வதற்கும் அதனை மாற்றியமைப்பதற்குமான கருவிகளாக மார்க்சின் சிந்தனைகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மார்க்சிற்குப் பின்னர் பல தலைமுறையினர், மார்க்சியத்தை வளர்த்தெடுப்பதில் கணிசமான அளவிற்குப் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இன்றையதினம், நாம், மூலதனத்தின் முதல் தொகுதி வெளியான 150ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது, கம்யூனிஸ்ட் அறிக்கையின் 170ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது, மற்றும் காரல் மார்க்சின் 200ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது, பாரீஸ் கம்யூன், மாபெரும் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி, பாசிசத்தின் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய சோசலிசத்தின் படிப்பினைகள், சீனம் மற்றும் வியட்நாம் புரட்சிகள்மற்றும் கியூபப் புரட்சி ஆகியவற்றுடன் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எண்ணற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் என்கிற வளமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். இத்துடன், இன்றையதினம் இயற்பியல், சமூக அறிவியல், மனிதவியல், பண்பாட்டியல், இலக்கியம், பெண்ணியம், சுற்றுச்சூழல், செயற்கை அறிவு போன்ற பல்வேறுவிதமான அறிவுக் களஞ்சியங்கள் குறித்தும் ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொணர்வதற்கு, மார்க்சிய ஆய்வு முறையைப் பெற்றிருக்கிறோம்.
சொந்த அனுபவமும் முயற்சியும்
இந்தியாவிலும், கம்யூனிஸ்ட்டுகளாகிய நாமும் நம்மைப் போலவே மற்றவர்களும், தம் சொந்த அனுபவங்களின் மூலமாக, நம் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு மார்க்சின் சிந்தனைகளையும், தத்துவத்தையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கு, முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட்டுகள் உலகின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிற்குச் சாதனைகளைப் பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்தியாவில் நாமும் இந்திய சமூகத்தைப்புரிந்துகொள்வதற்கும், தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிகர உணர்வுடனும், மார்க்சியத் தத்துவத்தின் சாராம்சத்துடனும் உருக்குபோன்று வல்லமைபடைத்தவர்களாக உருவாக்குவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் மற்றும் ஆய்வுகளிலிருந்து சரியான படிப்பினைகளைப் பெற்று, காரல் மார்க்சின் உண்மையான வாரிசுகளாகத் திகழக்கூடிய விதத்தில் அவருடைய புரட்சிகரமான கொள்கையை உயர்த்திப்பிடிக்கக்கூடிய விதத்தில் வரவிருக்கும் காலங்களில் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவோம்.
கொண்டாட்ட வடிவங்கள்.....
காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அகில இந்திய 22ஆவது மாநாடு, கட்சியின் அனைத்துக்கிளைகளும் அதன் ஆதரவாளர்களும், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பொது இடங்களில் இதர பல நடவடிக்கைகள், இன்றைய உலகில் மார்க்சிசம்-லெனினிசத்தின் பொருத்தப்பாடு தொடர்பான கருத்தரங்கங்கள், காரல் மார்க்சின் வாழ்வு மற்றும் பங்களிப்புகளை இணைத்து கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள், மார்க்ஸ்ஏங்கெல்சின் முக்கியமான படைப்புகள் நாட்டின் அனைத்து மொழிகளிலும் வெளியிடுதல்/மறுபதிப்பும் வெளியிடுதல், மார்க்சிசம்-லெனினிசத்திற்கு எதிராக வெளியாகியுள்ளவற்றை அம்பலப்படுத்தும் விதத்திலும் வெளியீடுகளைக் கொண்டுவருதல், மார்க்சிய சிந்தனைகளை புதிய பகுதியினருக்கு, குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துச் செல்லுதல் போன்றவற்றுடன் பல்வேறுவிதமான நடவடிக்கைகளிலும் இறங்கிட வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது.
தமிழில் : .வீரமணி



No comments: