Sunday, May 27, 2018

பாஜக மத்திய அரசாங்கத்தின் நான்காண்டுகள்: மோடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்: சீத்தாராம் யெச்சூரி





 சீத்தாராம் யெச்சூரி
பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக மத்திய அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மிகவும் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.  அதாவது, அது 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் – எந்த வாக்குறுதிகளை மக்களிடம் கூறி மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்ததோ – அவ்வாறு மக்களுக்கு அளித்த அந்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் - கிட்டத்தட்ட முழுமையாக அது துரோகம் செய்திருப்பதாகும். 
‘நல்ல காலம் பிறக்குது‘ என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது. வளர்ச்சியும், வளமும் நாட்டிற்கு வந்துசேரும் என்று உறுதிமொழி அளி அளித்தது. சுதந்திரத்திற்குப் பின்  கடந்த எழுபது ஆண்டுகளில் எவராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு. நாட்டை உச்சத்திற்குக் கொண்டுசென்று ஒரு வலுவான நாடாக மாற்றுவோம் என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது.  “அனைவரும் ஒன்றுபட்டு, அனைவருக்குமான வளர்ச்சியை”யைக் கொண்டுவருவோம் என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது. இந்த முழக்கங்கள் அனைத்துமே எவ்வளவு உள்ளீடற்ற வெறுமையான முழக்கங்கள் என்பதைக் கடந்த நான்காண்டு காலம் காட்டிவிட்டது. அனைத்து உறுதிமொழிகளுக்கும் துரோகம் இழைத்து விட்டது.
கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். கடந்த நான்காண்டுகளிலும் நான்கு முனைகளிலிருந்து மக்கள் மீது மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதும் தொடர்கிறது.   (1) நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக்கட்டக்கூடியவிதத்தில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மிகவும் குரூரமானமுறையில் பின்பற்றி வருவதன் மூலமாகவும், (2) நம் நாட்டில் அனைத்து மக்களும் சாதி – மத – இன – மொழி வேறுபாடுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் சமூக நல்லிணக்க வலைப்பின்னலை சுக்குநூறாகக் கிழித்தெறிந்திடக்கூடிய விதத்தில் மக்கள் மத்தியில் சாதி வெறியை, மத வெறியை, இன வெறியை, மொழி வெறியை உருவாக்கி வகுப்புவாதப் பதட்டநிலைமையைக் கூர்மைப்படுத்துவதன் மூலமாகவும், (3) நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச்சட்ட அதிகார மையங்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் அனைத்துவிதமான தாக்குதல்களையும் ஏற்படுத்தியிருப்பதன் மூலமாகவும், மற்றும் (4) இந்தியாவின் அயல்துறைக் கொள்கையையும் நம் நாட்டின் இறையாண்மையையும்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அதன்கீழ் முழுமையாகச் சரணாகதி அடைந்திருப்பதன் மூலமாகவும் – இவ்வாறு நான்கு முனைகளிலும் மக்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பது தொடர்கிறது. இவ்வாறு நம் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது.  
இவர்களின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்காலத்தில் பாதுகாத்திட முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறது.
மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல்கள்
நாட்டின் பொருளாதார அடிப்படைகளுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் (demonetization). பொருள்கள் மற்றும் சேவைகள் வரி என்னும் ஜி.எஸ்.டி. (GST) என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீளவும் இழந்த நம் பொருளாதாரத்தை மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில்களில்  (informal sector) ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த      முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இன்றைய தினம் சின்னா பின்னமாகிக்  கிடக்கிறது. ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப்பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட முழுமையாக முடமாக்கி இருக்கிறது.
அந்நிய நேரடி முதலீடு நம் பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கிட்டத்தட்ட இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை கொல்லைப்புற வழியாக  முழுமையாகக் கைப்பற்றக்கூடிய விதத்தில் நுழைந்திருக்கிறது.  இந்தியாவில் சில்லரை வர்த்தகத்துறை நான்கு கோடிக்கும் மேலான மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை அளித்து வந்தது. இதன் பொருள், நம் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பன்னாட்டு நிறுவன  பகாசுரன்களால் இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதாகும். சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் சர்வதேச பகாசுரனான – வால்மார்ட் – இந்தியாவில் செயல்பட்டுவந்த ஃபிலிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதானது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய மூலதன நுழைவினை சட்டபூர்வமானதாக மாற்றி இருக்கிறது.
நாட்டின் விவசாய நெருக்கடி மிகவும் அச்சந்தரத்தக்க அளவிற்கு மிகவும் மோசமாகி இருக்கிறது.  நாட்டுப்புற ஏழை மக்களின் உண்மை ஊதியம் ஜீவனாம்ச அளவைவிட மிகவும் கீழான நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நம் விவசாயிகளுக்கு விளைபொருள்களுக்கு, உற்பத்திச்செலவைவிட ஒன்றரைமடங்கு விலை நிர்ணயம் செய்து,  குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்போம் என்று ஆட்சியாளர்கள் அளித்திட்ட உறுதிமொழியை அமல்படுத்து மறுப்பது,  பல லட்சக்கணக்கான விவசாயிகளை தாங்கள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை மீளவும் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன்வலையில் சிக்கி,  வெளிவர முடியாது தற்கொலைப் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது.  பெரிய கார்ப்பரேட்டுகள் தாங்கள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்திடும் அதே சமயத்தில், விவசாயிகள் வாங்கிய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்திட மறுத்து வருகிறது.  அந்நிய மற்றும் உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுத்துத் தந்திருப்பதன் காரணமாக, நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அச்சந்தரத்தக்க அளவிற்கு வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள், ஏழைகள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2017இல் நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் வளத்தில் 73 சதவீதம் நாட்டு மக்கள் தொகையில் வெறுமனே 1 சதவீதத்தினராகவுள்ளவர்களால் வளைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நாட்டின் வளங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டுக் களவாணி முதலாளித்துவம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.  11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கார்ப்பரேட்டுகளால் பெறப்பட்ட கடன்கள், அநேகமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள், திருப்பி வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருக்கின்றன. ஒவ்வொரு அடிப்படைப் பொருளாதார ஆய்வுக் கருவிகளும் ஒன்று வீழ்ச்சியை அல்லது தேக்கநிலையைக் காட்டுகின்றன. இவ்வாறு, கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அரசாங்கம் மிகவும் மட்டரகமான முறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதன் மூலமாக மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.     
மதவெறி கூர்மைப்படுத்தப்படுதல்
மக்கள் மத்தியில் நிலவிவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான பண்பின் மீது மதவெறித் தீயைத் தொடர்ந்து  விசிறிவிடுவதன் மூலம் தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது கொலைபாதகத் தாக்கதல்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘பசுப்பாதுகாப்பு’ மற்றும் ‘ரோமியோ எதிர்ப்புக் குழுக்கள்’ என்ற பெயர்களில் தனியார் ராணுவங்கள் அமைக்கப்பட்டு,  இளைஞர்கள் மத்தியில் என்ன  சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், யாருடன் நட்புகொள்ள வேண்டும் போன்றவற்றைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி நஞ்சு, நம் சமூகத்து மனிதர்களின் சிறப்பியல்புகளையே இழக்கும்படிச் செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இளம் சிறுமிகள் மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள் இவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் மீது தாக்குதல்கள்   
நம் சமூகத்தில் மனிதர்களின் சிறப்பியல்புகளை இழக்கும்படிச் செய்திடும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், பகுத்தறிவாளர்கள் மீதான தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மதவெறி அடிப்படையில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் மீதான தாக்குதல்களும் ஏவப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்றை, இந்து புராணங்களில் கண்டுள்ள சம்பவங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற தெய்வ ஆளுகை சார்ந்த பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ஆக மாற்றுவதை ஏற்கச்செய்வதற்கான அடிப்படையிலேயே இவ்வாறு மதவெறியின் அடிப்படையில் மக்களின் சிந்தனையை மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய தாக்குதல்கள் இன்றைய இந்தியாவை அழித்துவிடும் என்பதை இன்றையதினம்  நாம்  அனைவரும் அறிவோம். அனைவரும் ஒன்றுபட்டு அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கடந்த நான்காண்டுகளில் இவர்கள் செய்ததெல்லாம், தலித்துகள் மற்றும் மதச்சிறுபான்மையினர் போன்றவர்களை இதர  மக்கள் திரளினரிடமிருந்து ஒதுக்கி வைத்திடும் விதத்தில் இந்துத்துவா தாக்குதல்களைத் அதிகரித்திருப்பதேயாகும்.    
அனைவருக்குமான வளர்ச்சியா?
கடந்த நான்காண்டுகளில் மத்திய அரசாங்கம் சமூகநலத்திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களைக் கடுமையாக வெட்டிக்குறைத்திருப்பதையும் அதன்மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நேரடியாகவே பாதிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மோடி  அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கான செலவினத்தை உயர்த்திடுவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், மாறாக, நடந்துள்ளது என்ன?  2014-15ஆம் ஆண்டில் 0.55 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 0.45 சதவீதமாக வீழ்ச்சி  அடைந்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் சதவீத அடிப்படையில் பார்த்தோமானால், 2014-15இல் 4.1 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 3.6 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும் என்று ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் படாடோபமாக தம்பட்டம் அடிக்கப்பட்டபோதிலும், எதார்த்த நிலைமைகள் இதற்கு நேரெதிராக இருக்கிறது. தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு, 2014-15இல் 10 ஆயிரத்து 892 கோடி ரூபாய்களாக இருந்தது, 2018-19ஆம் ஆண்டிற்கு 7 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  அதாவது 36 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட  கழிப்பிடங்களில் பத்தில் ஆறில் தண்ணீர் வசதி கிடையாது என்று 2015-16ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு ஸ்தாபனத்தின்  ஆய்வறிக்கை காட்டியிருக்கிறது. இவ்வாறு இந்த முழக்கங்கள் அனைத்துமே தேர்தல்காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ (‘jumlas’) எனப்படும் பித்தலாட்ட வாக்குறுதிகளேயாகும்.
அதேபோன்றே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் போதுமானவை அல்ல. இவற்றில் மிகவும் மோசமானவை, தலித் மற்றும் பழங்குடியினரின் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளாகும்.  துணைத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் முற்றிலும் போதுமானவையல்ல.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
கடந்த நான்காண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  நாடாளுமன்ற நடவடிக்கைகளே  நகைப்புக்குரியவிதத்தில் செயலற்றதாகக் குறைந்துவிட்டது. அரசாங்கம் தான் செய்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதிலிருந்து  ஒதுங்கிக் கொண்டுள்ளது. முன்னெப்போதும் கேள்விப்படாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் விவாதத்திற்கு அனுமதித்திடவில்லை. மாநிலங்களவையின் கூர்ந்தாய்வுக்காக வருவதிலிருந்து தப்பித்திட வேண்டும் என்பதற்காக பல சட்டமுன்வடிவுகளை, நிதிச் சட்டமுன்வடிவுகளாக கடத்திச் சென்றுவிட்டனர். தேர்தல் ஆணையம்  போன்ற பல அரசமைப்புச்சட்ட அதிகாரக் குழுமங்கள் தங்களுடைய பங்களிப்புகளின் மூலமாக கேள்விக்குறியானவைகளாக மாறியிருக்கின்றன. இதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு, முன்னாள்  தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மக்களின் முன் தேர்தல் ஆணையத்திற்குரிய நம்பகத்தன்மையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். நாட்டிலுள்ள அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாகச்  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.     
பல்வேறுவிதமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் அளிப்பதுடன் பணத்தை வாரி இறைப்பதன் மூலமும் பாஜக கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் பின்னர் பீகாரில் தேர்தல்களில் தோல்வி அடைந்தபின்னரும் அரசாங்கங்களை அமைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
மக்களுக்குப் பதில் சொல்லும் விதத்திலும், ஊழலற்ற விதத்திலும்  அரசாங்கங்களை அமைப்போம் என்று அளித்த வாக்குறுதிகள்  அனைத்தும் முழுமையாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன. இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்க உறுதிபூண்டிருக்கிறது என்று பிரதமர் அடிக்கடி வாய்கிழிய பேசியபோதிலும், இதுநாள்வரையிலும், 2013 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2014 ஜனவரியில் அறிவிக்கை அளிக்கப்பட்ட லோக்பால், லோக் அயுக்தா சட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்திடவில்லை. ஊழல் தடுப்புச்சட்டம் 2016இல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலமாக பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்களைப் பாதுகாத்திடும் சட்டம் (The Whistle Blowers Protection Act) இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பலர் ஊழலைப் புரிந்த கயவர்களால் உயிர்களை இழந்துள்ளார்கள். மோடி அரசாங்கம் குறைதீர்க்கும் சட்டமுன்வடிவு (Grievance Redressed Bill),  தகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தப்பட்டு மீளவும் அறிமுகப்படுத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது. மத்திய தகவல் ஆணையத்தில் (Central Information Commission) மொத்தமே 11 ஆணையர்கள்தான். இதில் நான்கு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2018இல்  அதன் தலைவர் உட்பட நான்கு பேர் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவற்றின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக மாற்றிட அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகும்.
மோடி  அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் கடுமையான மாற்றங்களைச் செய்து, அரசியல் ஊழலை சட்டபூர்வமாக  மாற்றியிருக்கிறது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், பெரிய அளவிற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குக் கணக்குச் சொல்வதற்குப் பதிலாக, அரசாங்கம் அவற்றை மூடிமறைத்திடும் விதத்தில் சட்டத்தை இயற்றியிருக்கிறது. இவற்றை இந்த அரசாங்கம் நிதிச்சட்டமுன்வடிவின் மூலம் நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. இதன் மூலமாக அரசியலில் பொதுவாகவும், தேர்தலில் குறிப்பாகவும்  பணத்தை வாரியிறைப்பதை சட்டபூர்வமாகவே மாற்றிவிட்டது.
நான்கு ஆண்டு கால அனுபவம்
இந்த பாஜக அரசாங்கம் தூக்கி எறியப்பட  வேண்டும். மக்களுக்கு  அது அளித்திட்ட எந்தவொரு வாக்குறுதியையும்  அது நிறைவேற்றாமல் துரோகம் செய்ததுமட்டுமல்லாமல், ஒரு வலுவான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பையும் குழி தோண்டிப் புதைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில், நம் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்களையும் தொடுத்துள்ளது.  இவ்வாறு இந்த மோடி அரசாங்கம் மக்கள் விரோத  அரசாங்கமாகவும், அரசமைப்புச்சட்ட விரோத அரசாங்கமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எல்லாவிதத்திலும், நாட்டு மக்கள் முன் உள்ள மிகவும் பிரதான முன்னுரிமை என்பது, இந்த அரசாங்கத்தின் கடைசி ஆண்டான வரவிருக்கும் இறுதி ஆண்டில், இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில், இதன் தாக்குதல்கள் அனைத்திற்கும் எதிராக, மக்களின் கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பதேயாகும்.
 (தமிழில்: ச.வீரமணி)

No comments: