Friday, April 21, 2017

மதவெறி ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அழைப்பு

மதவெறி ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அழைப்பு
புதுதில்லி, ஏப்.21-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு 2017 ஏப்ரல் 18, 19 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
தீவிரமடையும் ஆர்எஸ்எஸ்பாஜக வெறியாட்டங்கள்
சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்குப்பின்னர், குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் வெற்றி பெற்றதற்குப்பின்னர், ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் பல்வேறு வடிவங்களில் மதவெறியைக் கூர்மைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளன. நரேந்திர மோடி பிரதமரானதற்குப்பின்னர் கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தன் விஷக் கரங்களை வேகமாக விரித்து வருகிறது.உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியையும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதையும் தொடர்ந்து ஒரு புதுவிதமான வகுப்புவாதத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பூர்வமற்ற இறைச்சிக் கூடங்களை மூடுகிறோம் என்ற பெயரில் இறைச்சி வர்த்தகத்தின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதானது, மாநிலத்தில் 24 லட்சம் மக்களுக்கும் மேலானவர்களின் வாழ்வாதாரங்களை மிகவும் மோசமாகப் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இறைச்சி ஏற்றுமதியில் இதுவரை உத்தரப்பிரதேசம்தான் அதிக அளவில் பங்களிப்பினைச் செய்து வந்தது. பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரில் பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டர்களின் நடவடிக்கைகள் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடுத்து அவர்களின் உயிர்களைப் பறிப்பது தொடர்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் அருகே பேஹ்ரோர் என்னுமிடத்தில் பெஹ்லுகான் என்பவர் கொல்லப்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டாகும். அதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சரான பின்னர், ரோமியோ எதிர்ப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களையும் இளைஞிகளையும் அறநெறிக் கொள்கை (அடிசயட யீடிடiஉiபே) என்ற பெயரில் துன்புறுத்தும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதாரச் சுமைகளை மேலும் ஏற்றுதல்
பாஜக அரசாங்கமானது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கிறது என்பதையும், அது தற்போது பொதுத்துறை நிறுவனங்களை மிகப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் மத்தியக்குழு சுட்டிக்காட்டுகிறது. இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகமாக்கிடும். சமீப காலத்தில் சுமார் 1.5 கோடி வேலைகளுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது.விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள அவலநிலை விவசாயிகள் மத்தியில் சொல்லொண்ணா அளவிற்குத் துன்பதுயரங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பருவமழை பொய்த்திருப்பதானது தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.வேளாண் நெருக்கடி, கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மேலும் மிகவும் மோசமான விதத்தில் துன்பதுயரங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் விவசாயப்பொருள்களுக்கு ஆகும் செலவினத்தில் ஒன்றரை மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திடும் என்று உறுதி அளித்தது. ஆனால் இப்போது அதற்கு எதிராக நிலை எடுத்திருக்கிறது. இதனைச் செய்திடாமல், வெறுமனே கடன்களை ரத்து செய்வதால் மட்டும், விவசாயிகளுக்கு ஓரளவிற்கு நிவாரணம் அளிக்கலாமே தவிர, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து விவசாயிகளை நிரந்தரமாகக் காப்பாற்றுவதற்கு இது ஒரு தீர்வாக இருக்க முடியாது.தென்னிந்தியாவில் பருவமழை பொய்த்திருப்பதானது கடும் விவசாய நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பலநூறு விவசாயிகள் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு மிகப்பெரிய அளவில் விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டபோதிலும், மத்திய - மாநில அரசுகள் இதுவரை எவ்விதமான நிவாரணமும் அளித்திட முன்வரவில்லை.
இடதுசாரிகளைக் குறிவைக்கும் மதவெறியர்கள்
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள்மீது குறி வைத்துத் தங்கள் தாக்குதல்களைத் தீவிரமாக்கி இருக்கின்றன. குறிப்பாக கேரளம், மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் இத்தகைய தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். (விரைவில் திரிபுராவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.) தங்கள் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் முட்டுக்கட்டையாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தான் என்று அவர்கள் பார்க்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது
பாபர் மசூதியை இடித்ததில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, ஆகிய பாஜக தலைவர்கள் சதி செய்தார்கள் என்று சுமத்தப்பட்டிருந்த கிரிமினல் குற்றச்சாட்டை மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருப்பதை மத்தியக் குழு வரவேற்கிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆளுநராக இருந்திடும் கல்யாண் சிங்கும், மத்திய அமைச்சராக இருந்திடும் உமாபாரதியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
விசா வழங்க மறுக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விசா வழங்குவதை தடைசெய்திருப்பது குறித்து மத்தியக் குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதே பிரச்சனை முன்பு ஒரு தடவை எழுப்பப்பட்டபோது, மத்திய அரசாங்கம் அங்கே ஏற்கெனவே வேலை பார்த்திடும் இந்தியர்களுக்கும், அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் பாதுகாப்பையும் அளித்திடும் என்று கூறியிருந்தது. இதனை அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் செயல்பாடு
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கட்சியின் செயல்பாடு எப்படி இருந்தது என்று மத்தியக் குழு பரிசீலனை செய்தது. கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.கட்சியையும், வெகுஜன ஸ்தாபனங்களையும், அதன் நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் மிகவும் உயிர்த்துடிப்போடு வலுப்படுத்துவதன்மூலம் மட்டுமே கட்சியானது தன்னுடைய அரசியல் தலையீட்டு வல்லமையை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது.
மத்தியக்குழுவின் அறைகூவல்கள்
சமீப காலத்தில் கட்சியின் பல்வேறு வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு எதிராகவும், ஆட்சியாளர்களால் மதவெறி கூர்மைப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் மகத்தான மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன.வரும் மே மாதத்தின் பிற்பாதியில் மக்கள் மீது மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள சொல்லொண்ணா துன்பதுயரங்களுக்கு எதிராக வாரம் முழுவதும் தொடரக்கூடிய விதத்தில் அனைத்து மாநிலக்குழுக்களும் கிளர்ச்சி இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று மத்தியக் குழு தீர்மானித்திருக்கிறது. இயக்கத்தின்போது கீழ்க்கண்ட பிரச்சனைகள் மீது கவனம் செலுத்திட வேண்டும்:(அ) உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மறுதலிக்கக்கூடிய விதத்தில் பொது விநியோக முறை ஒதுக்கீடுகளைக் கடுமையாகக் குறைத்திருப்பது, பொது விநியோக முறையிலிருந்து சர்க்கரையும், மண்ணெண்ணெய்யும் கைகழுவப்பட்டிருக்கின்றன.(ஆ) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீடுகள் மிகவும் வெட்டிக் குறைக்கப்பட்டிருப்பது. அனைத்து மாநில அரசுகளுக்கும் நூறு நாட்களுக்கான கூலித் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.(இ) பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது; ஏற்கெனவே இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் மோசமானதாக ஆக்கிடும். இப்போது ஓரளவுக்காவது வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின்மூலம் தலித்துகள்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற்றுவரும் வேலை வாய்ப்பையும் இல்லாது ஒழித்துவிடும். எனவே தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும். (ஈ) விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, அதற்கான செலவினங்களைப்போல் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும். அதே சமயத்தில் கடன் தள்ளுபடி ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கலாம். ஆனால் இது மட்டுமே இப்போதுள்ள விவசாய நெருக்கடிக்கும் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கும் நிரந்தரத் தீர்வாகாது.மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரங்களை மேற்கொண்டு, நாடு முழுவதும் மக்கள் திரள் போராட்டங்களை தொடங்கிட வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் -
மதவெறிக்கு எதிரான சிறப்பு மாநாடுகள்
மத்தியக்குழு, தனித்தனியே இரு சிறப்பு மாநாடுகளை நடத்திடத் தீர்மானித்திருக்கிறது.முதலாவது, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்ததாகும். சமீபத்தில் மத்திய அரசாங்கமானது அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவை அரசியலில் தற்போது இருந்து வருகிற ஊழல்களை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்கானதாகும். இதனை அம்பலப்படுத்துவதே, அரசியலில் பண பலத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ஒருபகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தலை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பு மாநாடுகளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.இரண்டாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக வகுப்புவாத எதிர்ப்பு சிறப்பு மாநாடுகள் நடத்திடுவது என்றும் தீர்மானித்திருக்கிறது.
காஷ்மீர்: சிறப்பு மாநாடு
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் நிலைமைகள் குறித்து மத்தியக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.ஸ்ரீநகரில் நடைபெற்ற இடைத்தேர்தல், காஷ்மீரில் மக்கள் எந்த அளவிற்கு மிகவும் ஆழமானமுறையில் தனிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் மத்தியில் நிலவும் அமைதியின்மைக்குத் தீர்வுகாண, மோடி அரசாங்கம் முழுமையாக ராணுவத்தையும், அடக்குமுறையையுமே சார்ந்திருக்கிறது. அங்குள்ள அனைத்து அரசியல்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி மற்றும் மக்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவிவருவது காஷ்மீரை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளி இருக்கிறது. மக்களின் கிளர்ச்சிப் போராட்டங்கள் மீது கொடூரமான முறையில் ஒடுக்குமுறையை ஏவுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று மத்தியக்குழு வலியுறுத்துகிறது.அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.காஷ்மீர் பிரச்சனை குறித்து அக்கறை கொண்டுள்ள அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக இயக்கங்களை உள்ளடக்கி ஒரு சிறப்பு மாநாட்டை நடத்திடுவது என்றும் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு
மகளிர் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்றுவோம் என்கிற வாக்குறுதிக்கு பாஜக அரசாங்கம் தொடர்ந்து துரோகம் செய்துவருவதற்கு எதிராக கிளர்ச்சி நடத்துவது என்றும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னால் இச்சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு நாள் கிளர்ச்சிப் போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. மாநிலங்களவை இச்சட்டமுன்வடிவை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டது. இப்போது, பாஜகவிற்கு மக்களவையில் தெளிவான முறையில் பெரும்பான்மை இருக்கக்கூடிய நிலையிலும், இச்சட்டமுன்வடிவை நிறைவேற்ற மறுத்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், பாஜக தன்னுடைய வாக்குறுதிக்கு துரோகம் செய்கிறது என்பது தெளிவான ஒன்று.
தமிழில்: ச.வீரமணி

No comments: