Saturday, March 28, 2009

மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி:சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 28-
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக, மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் சனிக்கிழமையன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘உலகப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவும்:மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கை தேவை’’ என்கிற சிறுபிரசுரத்தையும், ‘‘அயல்துறைக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்’’ என்கிற சிறுவெளியீட்டையும் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டு, செய்தியாளர்களிடையே கூறியதாவது:
‘‘உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆட்சியாளர்கள் போதுமான அளவிற்கு செயலில் இறங்கவில்லை. ஸ்தானரீதியாக வேலையிலிருந்த தொழிலாளர்களிலேயே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். பல்வேறு மதிப்பீடுகளின்படி தினக்கூலிகளாக இருந்த கோடிக்கணக்கானோர் வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வளர்ச்சி விகிதம் 2008 அக்டோபர் - டிசம்பருக்கான காலாண்டில் 5.3 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. வேளாண்மைத் துறையில் இது எதிர்மறை வளர்ச்சி விகிதமாக அதாவது 2.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2009 ஜனவரியில், 2008 ஜனவரியுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 15.9 சதவீதமும், இறக்குமதி 18.2 சதவீதமும் குறைந்திருக்கிறது.
பணவீக்கம், பணச்சுருக்கமாக மாறியிருக்கிறது. ஆயினும் மொத்த விலைக் குறியீட்டு அட்டவணையோ அல்லது நுகர்வோர் குறியீட்ட அட்டவணையோ பத்து சதவிதத்திற்குக் குறையவில்லை. இதன் பொருள், அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் குறையவில்லை என்று பொருள். இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இதன்விளைவாக மக்கள் தொடர்ந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்காது. வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகமாகும். இது உண்மையில் மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இவற்றிற்கெதிராகச் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மக்களின் வாழ்க்கை படுநாசமாகும்.
இந்நிலைமையை சமாளிக்க வேண்டுமானால், அரசாங்கம் பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும். தற்சமயம் அரசு பொது முதலீட்டிற்கு ஒதுக்கியுள்ள தொகை மிகவும் குறைவு, நிலைமையைச் சமாளிக்கப் போதுமானதல்ல. சர்வதேச நிதியத்தின் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகில் உள்ள 20 நாடுகளில் (ஜி.20) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவை செலவினத்திற்கு ஒதுக்கும் தொகை குறித்து பட்டியலிட்டிருக்கிறது. அதில் இந்தியா கடைசியிலிருந்து நான்காவதாக வருகிறது. இந்தியாவில் வெறும் 0.5 சதவீதமே பொது செலவினத்திற்காக ஒதுக்கப்படுகிறது. எனவேதான் நாம் இந்த அரசாங்கத்தை, பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும் என்று கோருகிறோம். இதற்கு முன்பும் பலமுறை நாம் இதனைக் கேட்டிருக்கிறோம்.
அதன்மூலம், கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகள் பெருகும். அதைவிடுத்து அரசாங்கம், பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதனால் அரசின் இருப்புநிலைக் குறிப்புதான் அழகுபடுத்தப்படுமே யொழிய, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கப் போவதில்லை. அதன் விளைவாக அவர்கள் உள்நாட்டுத் தேவையை விரிவாக்கவும் முடியாது, அதன் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க முடியாது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், உள்நாட்டுத் தேவையை அதிகரித்திட வேண்டும். இதற்கு மிகப்பெரிய அளவில் உள்நாட்டுத் தொழில்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
உலகப் பொருளதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஏழு விதமான நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.
ஆண்டுத் திட்டச் செலவினத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிதமாக உயர்த்திட வேண்டும். இப்போது இத 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு, குறிப்பிட்ட சிறப்பு நிவாரணத் திட்டங்களை அறிவித்திட வேண்டும். அத்தொழில் மையங்களில் வேலைபார்ப்போரக்கு வேலை மற்றும் ஊதியம் வெட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேளாண்மை மற்றும் பாசனத்துறையில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு விலைவீழ்ச்சி ஏற்பட்டால் ஆதரவு விலை அளித்து விவசாயிகளைக் காப்பாற்றிட வேண்டும், இறக்குமதிக் கட்டணங்களை உயர்த்திட வேண்டும்.
வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நாடு முழுமைக்கும் - கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறங்களுக்கும் - விரிவாக்கிட வேண்டும்.
பொது விநியோக முறையை அனைவருக்கும் அமல்படுத்தி, பதினான்கு அத்தியதாவசியப் பண்டங்களை அதன்மூலம் அளித்திட வேண்டும்.
மாத ஊதியம் வாங்கும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வருமானவரியிலிருந்து நிவாரணம் அளித்திட வேண்டும். கறுப்புப்பணக்காரர்கள், பணம்படைத்தவர்கள், ஊகவணிகர்கள் மீதான வரிகளை அதிகரித்திட வேண்டும்.
நிதித்துறையை முறைப்படுத்தி, ஊகவணிகம் வாயிலாக நாட்டிலிருந்து வெளியே செல்லும் அல்லது உள்ளேவரும் நிதியை, கறாராகக் கட்டுப்படுத்திட வேண்டும். நாட்டின் நிதிப் புழக்கத்தை அரசு தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
ஐமுகூ அரசாங்கம் மற்றும் தேஜகூ அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கட்சி இத்தகைய மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது.
உலகப் பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற, வாக்காளர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

1 comment:

Nalliah said...

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers." எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

- நல்லையா தயாபரன்