Friday, February 29, 2008

விவசாயிகள் தனியாரிடம் வாங்கியுள்ள கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்:சீத்தாராம் யெச்சூரி



புதுடில்லி, பிப். 29-

நாடு முழுதும் கந்துவட்டி மற்றும் தனியாரிடம் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று காலை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2008-2009க்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். மாலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட்டாகும் இது. எனவே வரவிருக்கும் பொதுத்தேர்தலை மனதில் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருப்பது இயற்கையே. பட்ஜெட்டின் தொனி மற்றும் செல்திசை இதனை நன்றாகவே பிரதிபலிக்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் பட்ஜெட் தொடர்பாக ஒரு குறிப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அக்குறிப்பில் கூறப்பட்ட சங்கதிகள் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது. கண்டுகொள்ளப் பட்டிருக்கிறதுதானே யொழிய, அவை நிறைவேற்றப்பட்டது என்று நான் கூறுவதற் கில்லை. (The note given by the Left parties have been addressed. But they have not been met). சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

இதனை வரவேற்கிறோம். ஆனால் இது தொடர்பாக ஒன்றை நாம் அவசியம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசாங்க நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கடன்கள்தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கடன்பெற்றிருக்கும் விவசாயிகள், மொத்த விவசாயிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஆவார்கள். ஆனால் மூன்றில் இரு பங்கு விவசாயிகள் தனியாரிடமும் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடுவெட்டிக்குக் கடன் பெற்று மீள அளிக்க முடியாமல் செத்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் இவர்கள்தான் கணிசமானவர்கள். அவ்வாறு தனியாரிடம் கடன் பெற்றவர்கள் குறித்து பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவர்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மீட்க வேண்டியது அவசியமாகும்.மேலும், வங்கிகள் அவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும்போது, அத்தொகை குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே கூறப்படவில்லை. எனவே வங்கிகள் அவ்வாறு தள்ளுபடி செய்யும்போது, அத்தொகைக்கு அரசாங்கம் பத்திரங்கள் வழங்குமாம். இது பல வங்கிகளை நலிவடைந்ததாக மாற்றிவிடக்கூடிய ஆபத்து உண்டு.

எனவே, இவ்வாறு கடன் ரத்து செய்யப்படும் தொகை குறித்து நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.அடுத்ததாக வருமானவரி உச்ச வரம்பு சற்றே அதிகரிக்கப்பட்டிருப்பது, மத்தியதர வர்க்கத்தினருக்கு சற்றே நிவாரணம் அளித்திடும். இதுவும் வரவேற்கத்தக்க ஒரு நிவாரணமே. அடுத்து கல்வி, சுகாதாரம்ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை போதுமானதல்ல. கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 6 சதவீதமும் 3 சதவீதமும் செலவிடப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது ஒதுக்கியிருக்கும் தொகைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. அடுத்து பட்ஜெட் கண்டுகொள்ளாது மற்றொரு முக்கியமான விஷயம் பணவீக்கம் குறித்ததாகும். அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருப்பது குறித்து அது கண்டுகொள்ளவே இல்லை. இது மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயமாகும். அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் நாள்தோறும் ஏறிக்கொண்டிருப்பதால் சாமானிய மக்கள் மிகவும் இன்னல்களுக்காளாகி இருக்கிறார்கள். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதன் மூலம் இவர்களுக்கு உரிய நிவாரணம் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்கு உணவு மான்யங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையும் உயர்த்தப்பட வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த நாம் சென்ற ஆண்டு 5 மில்லியன் டன் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது. இவை குறித்தெல்லாம் பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.

குறிப்பாக பொது விநியோக முறையை வலுப்படுத்துவது குறித்து எதுவும் இல்லை. பொது விநியோக முறையை வலுப்படுத்தாமல் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. இவை குறித்தெல்லாம் பட்ஜெட் முழுமையாக உதாசீனம் செய்திருக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(தொகுப்பு: ச.வீரமணி)

No comments: