Sunday, February 24, 2008

கியூபா புரட்சியின் செய்தியை நாடு முழுதும் கொண்டு செல்வோம்-சோம்நாத் சாட்டர்ஜி முழக்கம்


புதுடில்லி, பிப். 24-
கியூபா புரட்சியின் செய்தியை நாடு முழுதும் கொண்டு செல்ல உறுதியேற்போம் என்று நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி முழங்கினார்.
கியூபா புரட்சியின் 50ஆம் ஆண்டு விழா புதுடில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. கியூபா தூதரகம் மற்றும் கியூபா ஒருமைப்பாடு தேசியக் குழுவின் சார்பில் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். கியூபா ஒருமைப்பாடு தேசியக் குழுவின் அமைப்பாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான எம். விஜயராகவன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் நாடாளுமன்ற மக்களவைத் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி பேசியதாவது:
‘‘கியூபா புரட்சியின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்பதில் உண்மையில் உள்ளம் மிகவும் கிளர்ச்சி கொள்கிறது. கியூபா எந்த சமயத்திலும் பிற்போக்கு சக்திகளுடன் சமரசம் செய்து கொண்ட தில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய பல நாடுகளில் இன்னமும் எழுத்தறிவின்மை நீடிக்கிறது, சுகாதார வசதிகள் மக்களுக்கு இன்னமும் முழுமையாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லமுடியாது. ஆனால் கியூபாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர் எவருமே கிடையாது, அதேபோல் பொது சுகாதாரத்தில் வளர்ந்த நாடுகளை விட மிகச்சிறந்த முறையில் முன்னணியில் இருக்கிறது.கியூபா ஒரு மிகச்சிறிய நாடுதான். ஆயினும் மாபெரும் புரட்சியை நடத்திய நாடு. இன்று அது மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
கியூபா புரட்சியின் ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதன் மூலம் கியூபா புரட்சியின் செய்தியை, கியூபா விடுதலையின் செய்தியை, கியூபாவிற்கான ஒருமைப்பாட்டை, கியூபாவின் சோசலிசக் கலாச்சாரத்தை உலகம் முழுதும் கொண்டு செல்வோம். கியூபா புரட்சியின் நாயகர்களுக்கு நம் வீர வணக்கங்களை செலுத்திடுவோம். கியூபா புரட்சியில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் பங்களிப்பை, தோழர் சேகுவேராவின் பங்களிப்பை, இதுபோன்று எண்ணற்ற புரட்சியாளர்களின் பங்களிப்பை என்றென்றும் நினைவில் கொள்வோம். அவை ஒளிவிளக்காகத் திகழ்ந்து நம்மை என்றென்றைக்கும் வழிநடத்தும்.
கியூபா புரட்சியானது, மக்களை அடிமைத்தளையிலிருந்து, சுரண்டலிலிருந்து, பஞ்சம் பசியிலிருந்து விடுவித்திருக்கிறது. எனவே, இதனை இந்த ஆண்டு முழுதும் நாடு முழுதும் தொடர்ந்து கொண்டாடுவது மிகவும் முக்கியம். எனவேதான் கியூபா ஒருங்கிணைப்புக் குழு இதனை ஆண்டு முழுதும் கொண்டாட திட்டங்கள் தீட்டி இருக்கிறது.
கியூபா புரட்சி, இன்றைய தினம் சமத்துவத்திற்காகப் பல்வேறு நாடுகளிலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோழர் பிடல் கேஸ்ட்ரோவும் மற்ற கியூபா புரட்சியாளர்களும் பல வழிகளிலும் உதவிக் கொண்டிருக்கிறார்கள். அங்கோலா, எத்தியோப்பியா, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் போராடும் சக்திகளுக்கு கியூபா அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளது.
இந்திய மக்களும் 50ஆம் ஆண்டுகளுக்கு முன் 1959இல் கியூபாவில் நடைபெற்ற புரட்சியின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளுக்கு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்திக் கொள்வார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.புரட்சிக்குப்பின் கியூபா எப்படித் தங்கள் நாட்டை புனரமைத்துள்ளது, சோசலிச சிந்தனைகளை உறுதியாகப் பற்றி நின்று முன்னேறியுள்ளது, சமத்துவ சமுதாயத்தை உண்மையானதாக மாற்றியிருக்கிறது என்பதை கியூபா புரட்சியின் 50-ஆம் ஆண்டு விழா நமக்கு அளித்திடும் செய்தியாகும். இதிலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சோம்நாத் சாட்டர்ஜி கூறினார். தொடர்ந்து கியூபா தூதர் மிகயீல் ராமிரெஸ் ராமோஸ், வெனிசுலா தூதர் அண்டோனியோ சாண்டரா கானிரெஸ், டொமினிகன் குடியரசின் தூதர் டாமன்பெர்ஸ் கேஸ்டலோனான்ஸ், அங்கோலா தூதர் தெபஸ்டா கெர்னாடி, கொலம்பியா தூதர் ஜூவான் ஆல்ஃப்ரட் பின்டோ சாவேட்ரா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொதுச் செயலாளர் தபஸ் சின்கா நன்றி கூறினார்.
நிறைவாக கியூபா புரட்சியை வாழ்த்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கேன்வாஸ் துணியில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கையொப்பம் இட்டார், அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கையெழுத்திட்டனர்.
(தொகுப்பு: ச. வீரமணி)

No comments: