Wednesday, February 6, 2008

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது - பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் டில்லியில் பேரணி

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் டில்லியில் பேரணி

புதுடில்லி, பிப்.6-

இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புதுடில்லியில் புதனன்று காலை பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் விடுதலை கே. ராசேந்திரன், கோவை கே. ராமகிருஷ்ணன் பேரணிக்குத் தலைமை வகித்தனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புதனன்று காலை புதுடில்லி, ஜந்தர்மந்தர் அருகிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர்களைப் படுகொலை செய்திடும் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்யாதே, தமிழர் படுகொலைக்குத் துணை போகாதே என்று மத்திய அரசை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

பேரணி - ஆர்ப்பாட்டத்திற்கு கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பேரணி - ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி பொதுச் செயலாளர்கள் கே. ராசேந்திரன், கோவை கே. ராமகிருஷ்ணன், துரைசாமி மற்றும் சரஸ்வதி முதலானோர் உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் பேசியதாவது:

‘‘இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடும் துன்ப துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை பிரதான தீவுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டு விட்டதால் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் யாழ்ப்பாணத்திற்கும் மற்றும் தமிழர் வாழும் நகரங்களுக்கும் அனுப்புவதற்குத் தடை விதித்திருக்கிறது. யுத்த மரபுகள் அனைத்தையும் மீறி இலங்கை அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மீது குண்டுகளைப் போட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட கொன்று வருகிறது. இந்தப் பின்னணியில் இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்து வருவது இந்தியாவில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் கடும் மனவேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்திய அரசு, இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.’’

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். ‘இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே’ என்று கையெழுத்து இயக்கத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்களிடம் பெற்றுள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மகஜரை மாலையில் பிரதமரிடம் அளிக்க இருப்பதாகவும், மனு ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சரிடம் அளிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.பேரணி நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டது. பேரணி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்நிலையம் அருகில் வருகையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

1 comment:

Unknown said...

Thiru Veeramani Avarkalukku

UNGAL NARPANI SIRAKKA
VAAZTHUKKAL.

ANBUDAN
THANGAVEL