Saturday, February 9, 2008

புதிய சுதந்திரப்போர் துவங்க வேண்டும் - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்




மிகச் செறிவான மக்கள் போராட் டத்தினாலும், அரசியல் கோட்பாட்டி னாலும் உருவான சுதந்திர இந்தியாவில், மக்களின் சுயசார்புத்தன்மை என்பது சமதரும, மதச்சார்பற்ற, ஜனநாயக கொள்கைகளின் கலவையால் உரு வாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட கோபுரத்தின் கலசமாகும். நமது நாட்டின் நிர்வாகம் இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், கட்டுப்பட்டதாகவும், ஒளிவுமறைவற்ற தாகவும் உள்ளது.

நாம், இந்திய நாட்டு மக்கள் 100 கோடி பேர்களுக்கும் அதி கமாக வலிமையாக உள்ளோம். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், மாஃபியா கும்பல்களும், தங்குதடையின்றி நம் செல்வங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் பில்லியனர்களும்தான் நம் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களின் மேல் வலிமையான ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

“நமது நாடு பல வளங்களை உள் ளடக்கிய வளமான நாடு: நமது கலாச்சாரம் மிகவும் மேன்மையானது: நம்மிடையே அதிசயக்கத்தக்க திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. நாம் எந்த ஒருதுருவ வல்லரசிற்கும் வால் பிடிக்கும் நாடு அல்ல. நாம் சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் அமெரிக்கா என்ற நால்வர் அணியின் பெருமை மிகு அங்கத்தினர்” - என்று சமீபத்தில் ஒரு மாநாட்டில் இத்தகையப் பார்வை முன்னிறுத்தப் பட்டது. ஆம், இந்தியா உலகத்திலுள்ள எந்த நாட்டின் கொள்கைகளையும் ஏற்று அதைச் சுற்றும் துணைக் கோள் அல்ல. நமது நாட்டின் பஞ்சசீலக் கொள்கையின் சூத்திரதாரி நாம்தான். நமது அடிமை இந்தியாவின் அவமானச் சின்னமான விவசாயிகளின் பின்தங்கிய பொருளா தாரத்தையும், நிலப்பண்ணை உரிமை முறையையும் எதிர்த்த இயக்கமாகத் தான் நமது சுதந்திரப் போர் அமைந்தது. வெறும் பிரிட்டிஷ் அடிமைத்தளையி லிருந்து விடுபடுவதற்கு மட்டும் நமது தலைவர்கள் போராடாத காரணத்தி னால்தான் கருணைமிக்க மனிதத்துவ மும், ஜனநாயகச் சமத்துவமும் நமது சமூக அரசியல் கலாச்சாரமாக உருவாகி யுள்ளது. ஆனால் இன்று இந்தியாவில் பெருகி வரும் அசுர பலமிக்க பன்னாட்டுக் கழ கங்களின் போக்குகளும், நிர்பந்தங் களும் நம்மை அச்சுறுத்தும் படியாக உள்ளன. இவர்கள் நம்நாட்டு மக்க ளுக்கு ஏற்படுத்தும் இடர்பாடுகளை மன உறுதியுடன் எதிர்கொள்ளாவிடில் நாம் அவர்களின் தயவில் வாழவேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு, இந்தியக் குடியரசே ஏழை நாடாக மாறும் நிலைமைக்குத் தள்ளப்படும். இந்நிலை யைத் தவிர்ப்பதற்கு தொழிற்சாலை களும் நிறுவனங்களும் அரசுடைமை யாக இருக்க வேண்டும். நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு, நிர்வாகத்தில் ஊழியர்களின் பங்கேற்பினை உத்தர வாதப்படுத்த வேண்டும். சமூகத் தேவையினை ஒட்டி சந்தைகள் இருக்க வேண்டும். நிலக் குவியலைத் தடுத்து நிறுத்துவதோடு, மாஃபியா கும்பல் களிடம் இருந்து “ரியல் எஸ்டேட்” (நிலப் பரிவர்த்தனை) விற்பனையை மீட்டெடுப் பதும் அவசியம். வர்த்தக ஊழலையும், தொழில் சட்டங்களை மீறுபவர்களையும் ஒழிக்க அரசின் முயற்சி தேவை. திட்ட மிட்ட பொருளாதார வளர்ச்சியும், சமூக ஒழுக்கமும் நல்ல சிந்தனையுள்ள சமூகமும் தான் இன்றைய உடனடி தேவை.நாம் நமது சுதந்திரப் போராட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும், உறுதியைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர் வினை ஏற்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் என்பது, ஈவு இரக்கமற்ற அடிமைத்தனத்தை போக்கவும் பொரு ளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவும் வீறு கொண்டு எழுந்தது. சுருங்கக் கூறின் நமது சுதந்திர இயக்கமானது, மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் களை உருவாக்குவதற்காகவோ, நிலப் பண்ணை முறையினை வளர்ப்பதற்கோ, அழிவை உருவாக்கும் தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்துவதற்கோ, அல்லது அன்னிய நாட்டு மூலதனத்தை ரத்தின கம்பளமிட்டு வரவேற்பதற்கோ, சுங்கவரி இல்லாமல் தடையற்ற இறக்குமதி செய்வதற்காகவோ கட்டப்படவில்லை. இவையெல்லாம் நமது சுதேசியத்தை அழித்தொழித்துவிடும்.

இன்றைக்கு சமத்துவ சமூக அமைப்புதான் மிக மிக முக்கியத் தேவையாகும். “தனியொரு மனிதனுக்கு உண வில்லையெனில் ஜகத்தினை அழித் திடுவோம்” என்ற பாரதியின் குரல் சம தரும சமூக கட்டமைப்பை நோக்கியதுதான் என்பதை நாம் உணர வேண்டும்.நமது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் வழிகாட்டலை மறந்துவிடக் கூடாது.

“நாம் ஜனநாயகம் என்று கூறும் பொழுது அது, பொருளா தார ஜனநாயகத்தையும் குறிக்கும். நான் சோசலிசம் சார்பாகத் தான் நிற்கிறேன். நமது இந்தியா சோஷலிசம் சார்பாகத் தான் நிற்கும். அத்தகைய இந்தியா ஒரு சோசலிச அரசை அமைக்கும்’ என்ற நேருவின் குரல் இன்னும் தேசமெங்கும் எதிரொலிக்கிறது. நேரு மட்டுமல்லாது, அரசியலில், ஒப்பற்றத் தலைவர்களான சுபாஷ் சந்திரபோஸ், இ.எம்.எஸ். நம்பூதிரி பாத், பி.சி.ஜோஷி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பிரிட்டிஷ் அறிஞர்களான பெர் னாட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், சிட்னி வெப், இவர்கள் எல்லோரும், சோஷலிசத்தை நேசித்தவர்கள். சுதந்திரப் போரின் தலைவர்களும், தோழர்களும் எதேச்சதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த உறுதியான கருத்துடையவர்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. காரல் மார்க்ஸின் கம்யூனிஸமும் பொருள்முதல்வாதமும்தான் சோஷலிசத்தின் அடிப்படை. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது மூதாதையர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள அளப்பரிய. சொத்தான அரசியல் அமைப்புச் சட்டம் பொருளாதார ஜனநாயகத்தை வலியுறுத்துகிறது. தனது சுதந்திர தின உரையில், நேரு, தனது உயர்ந்த லட்சியமும் அதுதான் என்று உறுதியளித்தார்.

ஆனால் இன்றைக்கு பல கோடி இந்திய ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இந்தியப் பொருளாதாரம் மாறி உள்ளது.பண்டித நேரு, இந்தியாவின் வளர்ச் சிக்கு அடிப்படைத் தேவையான திட்டக் கமிஷன், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை தொழிற்கூடங்கள் மற்றும் நதிநீர் திட்டங்களை உருவாக்கிச் சென்றார். அவர் வழி வந்த இந்திராகாந்தி சற்று கூடுதலாக, கேந்திரமான துறை களை நாட்டுடைமை செய்தல், சொத்து குவிதலை தடுத்தல், நில உச்சவரம்பு சட்டம் அமலாக்கல் என பொருளாதார ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். இன்னும் ஒருபடி மேல் சென்று நமது அரசியல் அமைப்பினை ‘குடியாட்சி’ என்பதிலிருந்து ‘சமதரும குடியாட்சி’ என்று உயர்த்திய பெருமை இந்திரா காந்தியைச் சாரும். இன்றுவரை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுநர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சமதரும குடியாட்சியை உயரப்பிடிப்பேன் எனச் சொல்லுகிறார்கள்.ஆனால், நாம் நமது வளங்களை யெல்லாம் பெருமுதலாளிகள் சுவீகரிப் பதற்காக அள்ளித் தெளிக்கும்வரை, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நமது ஏழைப் பங்காளிகள் உண்பதற்கு தோல் கூடக் கிடைக்கப்போவதில்லை. பொரு ளாதார வளர்ச்சியின் பழங்களை பெரும் முதலைகள் வசதியாக விழுங்கிவிட்டு, தோல்களை நம்மீது எறிகிறார்கள்.இந்திய நாட்டின் பெருமை மீட்டெ டுக்கப்பட வேண்டுமென்றால், சமதரும ஜனநாயகவாதிகள் தங்களது வேற்று மைகளையும் வித்தியாசத்தையும் கடந்து ஒன்றுபட வேண்டும். அவர்கள் ஒன்று படுவதன் மூலம்தான் நமது நாட்டின் வளங்கள் பாரபட்சமின்றி அனைவருக் கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உத்தர வாதப்படுத்த முடியும். நாம் அனைவரும் உண்டு, அனைவரும் உடுத்தி, இருக்கிற வேலையை அனைவரும் பகிர்ந்து செய்து எல்லா வளமோடும் பெருவாழ்வு வாழ அந்த ஒற்றுமை உரமாகும். நமது நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை சாதாரண மனிதன் வளர்ச்சிக்கும், கல்வி மேம் பாட்டிற்கும், சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களின் தேவைக்கும் பயன் படுத்த வேண்டும்.

1991 முதல் அதாவது உலகமயக் கொள்கைகள் அமலாக்கத் தொடங்கி யதிலிருந்து, நமது பொருளாதாரம் அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்குப் புறம் பாகவும், டாலர் தாகத்துடனும் செயல் படுத்தப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் பொறுப்புக்குபோட்டியிட்ட சசி தரூர் கூற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சொத்து 200 பில்லியன் டாலர் உயர்கிறது; அன்னியச் செலா வணி கையிருப்பு 200 பில்லியன் டால ரைத் தாண்டியுள்ளது. இவ்வளவு இருந் தும் நமது டாலர் தாகம் தீராமல் நமது தங்கத்தினை லண்டன் சந்தையில் அட மானம் வைத்து டாலரைக் குடிக்கிறோம். உலக பில்லியனர்களில் 27 பேர் இந்தியர்கள், பெரும்பான்மையோர் இந்தியாவில் வசிக்கிறார்கள். நமது நாட்டின் 80 கோடி ஏழை மக்கள், மாதத் திற்கு 15 டாலருக்கும் குறைவான வரு மானம் உள்ளவர்களும் இவர்களோடு தான் வசிக்கிறார்கள்.

இன்றைக்கு உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை மக்கள் இருந்த இடம் மாறாமல் அங்கேயே இருக்கிறார்கள். இத்தகைய துன்ப துயரங்களிலிருந்து விடுபடுவதற் கான எச்சரிக்கை மணிதான் தமது குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலின் குடியரசு தின உரை!

உலகமயமாக்கலின் வளர்ச்சியும் பலன்களும் நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்றும், நமது நாட்டின் உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஏழை குடிசையில் உள்ள சாமானிய மனிதனின் வாழ்க்கையும் வளர்ச்சியடைவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி கூறியதுபோல் ஒவ்வொரு ஏழைப் பாட்டாளியின் கண்களின் கடைசி சொட்டுக் கண்ணீரும் துடைத்தெறியும் வரை நமது லட்சியம் உறங்கக்கூடாது.

நாம் நமது ஆட்சியாளர்களைப் பார்த்து சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. நமது நேரு கூறியது போல், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ என்று உறுதிபட சொல்வாரா? இந்திராகாந்தி செய்தது போல் சோனியாகாந்தி நமது தேசியவாதம் என்பது சமதரும சோஷலிஸத்தைக் கட்டுவதுதான் என்று உறுதியேற்றுக் கொள்வாரா? நமது குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல், ‘இந்தியாவின் உயிர், சில நகரங்களில் இல்லை, கிராமங்களில் தான் வாழ்கிறது’ என்ற காந்தியின் உறுதியினை சுவீகரித்துக் கொள்வாரா?வானுயர்ந்தக் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், அன்னிய மோகத்தால் தூண்டப்பட்ட சொகுசான ஆடம்பர வாழ்க்கை, தனியார்மயமாக் கல் மற்றும் எங்கெங்கும் நடக்கும் கொள்ளை, மலிந்து கிடக்கும் ஊழல் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து மீண்டும் காந்தியையும், நேருவையும், இந்திராகாந்தியையும் படுகொலை செய்துள்ளன. காந்தியத்துக்கு எதிரான உலகமயமாக்கல் கொள்கைகளும், தனியார்மயமாக்கல் கொள்கைகளும் உச்ச ஸ்தாயியில் உச்சரிக்கப்பட்டு, புதிய காலனியாதிக்கத்திற்கு பாதையை அகலத் திறந்துவிடப்படுகின்றன. நமது நாட்டின் உன்னத மூலதனம் என்பது மனிதநேயத்தை உருவாக்கு வதில்தான் வாழ்கிறது. மாறாக, ஊதாரித்தனமான ஆடம்பரத்திலோ அல்லது நட்சத்திர கலாச்சாரத்திலோ இல்லை- இவையெல்லாம் சுதந்திரத்திற்கும், சமத ருமத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், ஜனநாயக அரசியலுக்கும் சுயசார்புத் தன்மைக்கும் எதிரானவை. இந்திய மக்கள் புதிய சுதந்திரப் போரினைத் துவங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

(கடந்த 5.2.08 அன்று ‘தி இந்து’வில் வந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழாக்கம் : வெ.ராகுல்ஜி.

No comments: