Sunday, September 30, 2018

ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டு -சீத்தாராம் யெச்சூரி


ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டு
-சீத்தாராம் யெச்சூரி
2018 ஏப்ரலில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு, 2019 ஏப்ரல் 13 வரையிலும் ஆண்டு முழுவதும் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டை அனுசரித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது இப்போது நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் நடந்து வருகின்றன. அதில்,  போராட்டத்தின் படிப்பினைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, காலனிய நுகத்தடியிலிந்து இந்தியாவை விடுவித்திட மக்கள் மேற்கொண்டிருந்த தீர்மானத்தைப் புரிந்துகொள்ள, இதனைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுக் கோரியிருந்தது.

1919 ஏப்ரல் 13 அன்று வைசாகி தினத்தன்று, ஜாலியன்வாலா பாக்கில் நடைபெற்ற படுகொலைகள் 20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அரசியல் குற்றங்களிலேயே மிகவும் மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் கொடூரத்தன்மை, இதன் மிகவும் மட்டரகமான காட்டுமிராண்டித்தனத்திலும், மனிதகுல நாகரிகத்தின் எவ்வகையான தன்மைக்கும் ஒத்துவராததிலும் நன்கு வெளிப்பட்டது. அதிகாரபூர்வ மதிப்பீடு, இப்படுகொலைகள் நிகழ்வில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 400க்கும் மேற்பட்டவை என்றும், காயமடைந்தோர் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம் என்றும் கூறும் அதே சமயத்தில், தேசிய இயக்கத்தால் அமைக்கப்பட்ட சுயேச்சையான பல்வேறு விசாரணை ஆணையங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பல்லாயிரக்கணக்கானவர்கள் காயங்கள் அடைந்தனர் என்றும் காட்டக்கூடிய விதத்தில் ஆவணச்சான்றுகளை அளித்துள்ளன. ஜாலியன்வாலா பாக், ஒரு சிறிய நுழைவாயிலைத்தவிர சுற்றிலும் அனைத்துப்பகுதிகளும் மூடப்பட்ட ஒரு பூங்காவாகும். பிரிட்டிஷார் கொண்டுவந்த ரவுலட் சட்டத்தை கருப்புச் சட்டம்  என்று சித்தரித்து, பஞ்சாப் மாகாணம் முழுதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்று வந்தன. அதன் ஒருபகுதியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜாலியன்வாலாபாக் பூங்காவில் குழுமியிருந்தார்கள். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் ஜாலியன்வாலாபாக்கில் மேற்கொண்ட ஒடுக்குமுறையை, மிகவும் கொடூரமான இனப்படுகொலைகள் (massacre) என்று சொல்வதைத்தவிர வேறெந்த வார்த்தையாலும் குறிப்பிட முடியாது.
பின்னணி
வைசாகி தினத்தை பஞ்சாப் மாநிலத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் இணைந்தே கொண்டாடுவார்கள். ஒரே டம்ளரில் உள்ள தண்ணீரை அனைவரும் இணைந்தே குடிப்பார்கள். அதேபோன்று ஒரே தட்டில் உள்ள உணவை அனைவரும் இணைந்தே உண்பார்கள். இவ்வாறு மக்கள் அனைவரும் தங்கள் மத வேறுபாடுகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன், இவ்விழாவினைக் கொண்டாடுவதை, பிரிட்டிஷாரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தங்களுடைய பிரித்தாளும் கொள்கைக்கேற்ப, எப்படியாவது இத்தகைய மக்கள் ஒற்றுமையை உடைத்தெறிய வேண்டும் என்று நயவஞ்சமானமுறையில் திட்டமிட்டார்கள். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரை அடுத்து, இவர்களின் இத்தகைய கபடத்தனம் இவர்கள் மத்தியில் கூர்மையடைந்தது. 1857 முதல் சுதந்திரப் போர் சமயத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும், தங்கள் மதமாச்சர்யங்களை மறந்து, மொகலாய மாமன்னர் பகதூர் ஷா ஜஃப்பார் அவர்களை, பிரிட்டிஷாருக்கு எதிராக  சுதந்திர இந்தியாவின் இறையாண்மைமிக்க மன்னர் என்று பிரகடனம் செய்தனர். மக்கள் மத்தியில் காணப்பட்ட இத்தகைய ஒற்றுமை ஜாலியன்வாலாபாக்கிலும் நன்கு தெரிந்தது. இது பிரிட்டிஷார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1918இல் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வருடாந்திர அமர்வு, அடுத்த அமர்வினை பஞ்சாப்பில் நடத்துவது என்று தீர்மானித்தது. பஞ்சாப்பில் மக்களை அரசியல்ரீதியாகத் திரட்டும் வேலையாகவே பிரிட்டிஷார் இதனைப் பார்த்தனர். ஏனெனில், பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு அதிக அளவு ஆட்கள் பஞ்சாப்பிலிருந்துதான் எடுக்கப்பட்டுவந்தார்கள். இது பாதிக்கப்படக்கூடும் என்று பிரிட்டிஷார் நினைத்தார்கள். எனவே இதனை வளர விடக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். எனவே, பஞ்சாப்பில் அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வு நடைபெறுவதை தடுத்திட அவர்கள் முயற்சியில் இறங்கினார்கள். பஞ்சாப்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வினை நடத்திட, அமிர்தசரஸில் முன்னணி வழக்குரைஞராக இருந்துவந்த டாக்டர் சைபுதீன் கிச்லியூ, லாகூரில் மருத்துவராக இருந்துவந்த டாக்டர் சத்பால் ஆகியோர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார்கள். இது பிரிட்டிஷாரால் ஒரு மாபெரும் சவாலாகப் பார்க்கப்பட்டது.
ஆனாலும், பஞ்சாப் மக்கள் மத்தியில் சுதந்திரத்திற்கான வேட்கை ஏற்கனவே வேர்பிடிக்கத் துவங்கி விட்டன. கதார் கட்சியின் செல்வாக்கும், 1913-14களில் புலம்பெயர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை மற்றும் கனடா சென்றிருந்த சீக்கியர்கள் உருவாக்கி இருந்த இயக்கமும், பிரிட்டிஷார்கள் கதார் இயக்கத்தினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டிருந்த மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறையும் – இவை அனைத்தும் சேர்ந்து பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் சுதந்திர இயக்கத்தில் பெரும்திரளாக இணைந்திட உத்வேகத்தை ஏற்படுத்தி இருந்தன.
ரவுலட் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகள்
அதே சமயத்தில், பிரிட்டிஷ் காலனி அரசாங்கம் மிகவும் கொடூரமான ரவுலட் சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி இருந்தது. இவை, மேன்முறையீட்டிற்கான உரிமை எதுவும் அளித்திடாமல், புரட்சிகர நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும்  எவரொருவரையும் தண்டனை அளித்திட, மூன்று நீதிபதிகளடங்கிய நீதிமன்றத்திற்கு, அதிகாரம் அளித்திருந்தன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் எவரொருவரையும்கூட சந்தேகத்தின்பேரில் அடைத்துவைப்பதற்கு இச்சட்டம் அதிகாரங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. உள்ளூர் அரசாங்கங்கள், தங்களுக்கு ஆபத்தானவர்கள் என்று எவரைக்கருதினாலும் அவரைக் கைது செய்வதற்கு இச்சட்டத்தில் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இச்சட்ட ஷரத்துக்களுக்கு எதிராக எவரொருவரும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை.
மகாத்மா காந்தி, 1919 மார்ச் 30 அன்று, பிரிட்டிஷாரைத் தன் முடிவுகளிலிருந்து பின்வாங்கிட வலியுறுத்துவதற்காக, ஓர் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலமாக கிளர்ச்சி நடவடிக்கைக்காக அறைகூவல் விடுத்தார். அன்றையதினம் காவல்துறையினர் தில்லியில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தின்போது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கும் மேலானவர்கள் காயங்கள் அடைந்தனர். இதனைக் கண்டிக்கும் விதத்தில் இதற்கெதிராக, நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டது.
இவற்றால் எல்லாம் சற்றும் வளைந்துகொடுக்காத, பிரிட்டிஷ் அரசாங்கம், அமிர்தசரஸில் நடைபெறவிருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வினை நடக்கவிடாது கழுத்தைநெறித்திட வேண்டும் என்பதற்காக, ஏப்ரல் 10 அன்று அவற்றை முன்னின்று நடத்திய டாக்டர் சைபூதின் கிச்லியூவையும், டாக்டர் சத்பாலையும் கைது செய்தது. அவர்களைக் கண்காணா இடத்திற்கு எங்கோ எடுத்துச் சென்றது. இந்த செய்தியை மக்கள் ஆவேசமான கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் எதிர்கொண்டனர். அமிர்தசரஸில் அமைந்திருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன், தங்கள் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் பெரும்திரளாகத் திரண்டனர். அப்போது மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அலுவலகங்களையும், அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். மக்களின் ஆவேசக் கிளர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரிட்டிஷார் திணறினர். இதனால் முதலில் அமிர்தசரஸையும், பின்னர் ஒட்டுமொத்த பஞ்சாப்பையும் இராணுவ ஆட்சியிடம் பிரிட்டிஷார் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட ஓர் இராணுவ ஆட்சியே அமல்படுத்தப்பட்டது.
படுகொலைகள்
இந்தப் பின்னணியில்தான் நன்கு விளம்பரம் செய்யப்பட்டு, ஜாலியன்வாலா பாக்கில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்கத்துக் கிராமங்களிலிருந்து, அமிர்தசரஸுக்கு  வைசாகி கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இப்பொதுக்கூட்டத்தில் திரண்டனர். அமைதியான முறையில் கூட்டம் தொடங்கியது. திடீரென்று ஜெனரல் டயர் கூட்டத்திற்குள் புகுந்தான். பூங்காவிற்குள் குழுமியிருந்த மக்கள் வெளியேறிச் செல்ல முடியாதவாறு, பூங்காவின் சிறிய வாயிலை அடைத்தான். மக்களை நோக்கி சுடத் தொடங்கினான். பிரிட்டிஷ் துருப்புக்கள் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தன. அவர்களிடமிருந்த 1600 குண்டுகளும் தீரும்வரை அவர்கள் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இதற்கெதிராக மக்களின் எதிர்ப்பு, பிரிட்டன் உட்பட உலகம் முழுதும் வெடித்தது. இதன்பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது. ஹண்டர் கமிட்டி என்பது இதன் பெயராகும். அதேசமயத்தில், படுகொலைகளுக்குப்பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் அமிர்தசரஸில் வீடுகளுக்கு வழங்கியிருந்த தண்ணீர் விநியோகம் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அமிர்தசரஸில் குடியிருக்கும் மக்கள் எவ்விதமான உதவியும் செய்திடக்கூடாது என்கிற குரூரமான சிந்தனையுடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொண்டது. ஹண்டர் குழுவின் முன் அளித்திட்ட வாக்குமூலத்தில், ஜெனரல் டயர், கூறும்போது, தன் தலைமையில் படுகொலைகள் நடைபெற்றதற்காகக் கிஞ்சிற்றும் வருந்திட வில்லை. மாறாக, அவ்வாறு படுகொலைகள் மேற்கொண்டதை நியாயப்படுத்தியே வாக்குமூலம் அளித்தான். மக்களைக் கலைந்துசெல்லுங்கள் என்று எவ்விதமான எச்சரிக்கையும் விடுக்காமலே துப்பாக்கிக்சூடு நடத்தியதை அவன் ஒப்புக்கொண்டான். 1919 ஆகஸ்ட் 25 அன்று பொது ஊழியர் பிரிவுக்கு (General Staff Division) அவன் சமர்ப்பித்திருந்த அறிக்கை பின்வருமாறு:
நான் கூட்டத்தைப் பார்த்து, சுட்டேன். கூட்டம் கலைந்து செல்லும் வரை நான் சுட்டேன். என்னுடைய நடவடிக்கையை நான் நியாயப்படுத்திட வேண்டுமானால், இவ்வாறு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது சரிதான் என்றே நான் கருதினேன். அப்போதுதான் அது குறைந்தபட்சம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதினேன்.  என்னிடம் அந்த சமயத்தில் அதிகத் துருப்புக்கள் இருந்திருக்குமாயின் இறந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும். கூட்டத்தினரைக் கலைந்து செல்லுமாறு செய்வதுமட்டும் என் நோக்கமாக இருந்திடவில்லை. மக்கள் மத்தியில், குறிப்பாக பஞ்சாப் மாகாணம் முழுவதிலும்,  குறிப்பிட்ட அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே என் நோக்கமாகும். இதில் நான் கடுமையாக நடந்துகொண்டேன் என்ற கேள்விக்கே இடமில்லை.
பிரிகேடியர்-ஜெனரல் டயர், தன்னுடைய நோக்கம், பஞ்சாப் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும் என்றான். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கொல்லவேண்டும் என்றே நான் தீர்மானித்திருந்தேன்,என்று டயர் மேலும் கூறினான்.
மக்கள் போராட்டம் : ஒரு திருப்புமுனை
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிரிட்டிஷார் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டபோதிலும்கூட, அவர்களால் அமிர்தசரஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வை தடுத்து நிறுத்திட முடியவில்லை. இந்த அமர்வு காங்கிரஸ் கமிட்டியின் குறிப்பிடத்தக்கவொரு அமர்வாக மாறியது. இந்த அமர்வில்தான், மகாத்மா காந்தி முதல் சிவில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். நாட்டு மக்களின் ஒற்றுமை மேலும் வலுவடைந்தது.
ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் தனக்கு அளிக்கப்பட்டிருந்த வீரத்திருத்தகைப்பட்டத்தை (Knighthood) திருப்பி ஒப்படைத்ததன் மூலமாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக 1919 மே 31 அன்று வைஸ்ராய்க்கு எழுதியிருந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: அப்பாவி மக்கள்மீது அநியாயமாக ஏவப்பட்டுள்ள தண்டனைகளின் கொடூரத்தன்மையானது, எந்தவொரு நாகரிக அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிற்கு மிகவும் மோசமானவைகளாகும். பஞ்சாப்பில் எங்கள் சகோதரர்கள் மீது ஏவப்பட்டுள்ள அவமானங்களும், அநியாயங்களும் அரசாங்கத்தின் கள்ள மவுனத்தின் மூலமாக, நாடு முழுதும், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம், சென்றடைந்திருக்கின்றன. இத்தகைய கொடூரமான நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் வெளிப்படுத்தியுள்ள நேர்மையான சீற்றம், எங்கள் மக்களின் இதயங்களை கொள்ளைகொண்டுவிட்டன. எனினும், ஆட்சியாளர்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ள முயற்சிப்பதோடு, இத்தகைய இழிசெயல்களைப் புரிந்தமைக்காகத் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு, சுகபோகத்தில் திளைக்கின்றனர். இத்தகு சூழ்நிலையில் என்னால், என் நாட்டு மக்களுக்காக நான் செய்யக்கூடியது, கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து எழுப்பும் ஆவேசக்குரலை எதிரொலிக்கும் விதத்தில், நானும் அவர்களுடன் இணைந்துகொள்வதேயாகும். இவ்வாறு என் நாட்டு மக்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், இதனைக் கேலிசெய்யும் விதத்தில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவப் பட்டங்களைத் திரும்ப ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறு எனக்கு இந்த அரசாங்கம் அளித்துள்ள கௌரவப்பட்டங்களைத் திருப்பிஅனுப்பிவைக்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபி மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான நானக் சிங் என்பவர் ஒரு நீண்ட கவிதை, வைசாகி கொலைகாரன், (Khooni Baisakhi) என்னும் தலைப்பில் எழுதினார். இக்கவிதையை வெள்ளை அரசாங்கம் தடை செய்தது. எனினும்கூட, நாடு முழுதும் இக்கவிதை விரிவானமுறையில் சென்றடைந்தது. நாட்டில் சுதந்திரத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் இது  அமைந்திருந்தது.    
உத்தம் சிங் என்பவர்  15 வயது நிரம்பிய அநாதைச் சிறுவனாக இருந்த சமயத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை நேரில் கண்டவர், 21 ஆண்டுகளுக்குப் பின்னர், 1940 மார்ச் 13 அன்று, ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைப்புரிந்திட்ட கொலைகாரன் மைக்கேல் ஓ’டயரை, லண்டனில், காக்ஸ்டன் ஹாலில் சுட்டுக் கொன்றார். அப்போது கைதுசெய்யப்படுகையில் தன் பெயரை, ராம் முகமது சிங் ஆசாத் என்று கூறினார். உத்தம்சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, 1940 ஜூன் 12 அன்று தூக்கிலிடப்பட்டார்.  அப்போது அவர் அளித்திட்ட வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
நான் இதனைச் செய்தேன். ஏனெனில் டயருக்கு எதிராக கோபம் கொண்டிருந்தேன். அதற்கு அவன் தகுதிபடைத்தவன்தான். அவன்தான் உண்மையான குற்றவாளி. அவன் எங்கள் மக்களின் வீர உணர்வுகளை நசுக்க விரும்பினான். எனவே, நான் அவனை நசுக்கினேன். கடந்த 21 ஆண்டுகளாக, அவனைப் பழிதீர்த்திட முயற்சித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் என் வேலையை நான் செய்துவிட்டேன். சாவைக் கண்டு நான் பயப்படவில்லை. என் நாட்டுக்காக நான் இறக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் என் நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கெதிராக நான் போராடி இருக்கிறேன். இது என்னுடைய கடமை. என்நாட்டுக்காக இறப்பதைவிட மிகப்பெரிய பேறு எதுவாக இருந்திட முடியும்?
ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், பகத் சிங்கிற்கு வயது 12. அப்போது அவர் லாகூரில் மாணவராக இருந்தார். பின்னர் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு, அவர் ஜாலியன்வாலாபாக் வந்து, அங்கிருந்த ரத்தக்கறை படிந்த மண்ணை எடுத்துச் சென்றார். அது இப்போதும் பகத் சிங் நினைவு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜாலியன்வாலாபாக் படுகொலைகள், இளம் புரட்சியாளர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
ஜாலியன்வாலாபாக் படுகொலைகளின் 79ஆம் ஆண்டு தினத்தன்று தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் கூறியவற்றை நாம் மீளவும் நினைவுகூர்வோம்:ஜாலியன்வாலா பாக்கில் தங்கள் ரத்தத்தைக் கூட்டாகச் சிந்தியதன்மூலம்,   நாட்டின் விடுதலைக்காக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என்கிற செய்தியை நாட்டு மக்களுக்கு அளித்துள்ள  அனைத்து மக்களுக்கும்  வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லப்பட்ட மக்கள் மத்தியில் உண்மையான சுதந்திரத்திற்கான அபிலாசைகள் – அதாவது பசி, பஞ்சம், பட்டினியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் – இருந்ததை நாம் மறந்துவிடவில்லை. நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை அமைப்பதற்காக நடைபெறும் போராட்டத்திற்கு, ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் தொடர்ந்து உத்வேகத்தை அளித்திடும். அத்தியாகிகளின் தியாகங்கள் என்றென்றும் நமக்கு வழிகாட்டிடும் ஒளிவிளக்காக அமைந்திடும்.
     -தமிழில்: ச. வீரமணி
    

Sunday, August 19, 2018

கலைஞர் ஒரு மனந்திறந்த தலைவர் - என். சங்கரய்யா




ஒரு மனந்திறந்த தலைவர்
- என். சங்கரய்யா
கலைஞர் கருணாநிதி தொடர்பான ஃப்ரண்ட்லைன் சிறப்பிதழ், மாபெரும் தலைவர் ஒருவருக்கு மிகவும் பொருத்தமான சமர்ப்பணமாகும். அவருடன் எனக்கான தொடர்பு என்பது  அறுபதாண்டு கால நட்புடன் கூடியதாகும்.  அவருடன் நான் சுமார் அறுபதாண்டு கால நட்பினைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய பூதவுடலை அடக்கம் செய்திட இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு ஆணை பிறப்பித்த மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை, ஜனநாயகத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இந்தத் தீர்ப்பானது, கருணாநிதி வாழ்ந்த சிறப்புமிக்க வாழ்க்கையைச் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அவரை எனக்கு 1952இலிருந்து தெரியும். திமுக, “திராவிட நாடு” கோரிக்கையை உயர்த்திப்பிடித்திருந்த சமயத்தில்,  திமுகவிற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இத்தகு கருத்தாக்கம், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எதிரானதாக அமைந்திடும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினார்கள். இதன் காரணமாகத்தான், 1957இலும் 1962இலும் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது திமுகவுடன் ஒரு தேர்தல் புரிந்துணர்விற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் வர முடியவில்லை.
1962 தேர்தல்களைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பின்னர்தான்,  இரு கட்சிகளுக்கும் இடையேயான புரிதல் ஒரு சரியான ஆர்வத்துடன் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1967 பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இது, தமிழ்நாட்டில் அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இட்டுச் சென்றது.
திமுக தலைமையில் ஆட்சி அமைந்தபின்னர், சமூக நீதி தொடர்பாக எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள், சுயமரியாதைத் திருமணம் குறித்த ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  அத்தகைய திருமணத்திற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று, மாநிலத்தில் எண்ணற்ற தம்பதிகள் இம்முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தகைய திருமணங்களை நடத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு ஓர் ஒளிவிளக்காக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் இணைந்து மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களுக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் பல கூட்டுப் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன. இதன் விளைவாக, மாநில மொழிகளுக்கு விரிவான அளவில் அங்கீகாரங்களும், குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் கூட, இம்மொழிகள் இன்றையதினம் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
உண்மையில், அவர் என்னை,  தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டினார்.  நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தீண்டாமைப் பிரச்சனை தொடர்பாக மதுரையில் ஒரு மாநாட்டினை நடத்தினார். அதில் நான் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தீண்டாமைக் கொடுமைகளின் பலவிதமான வடிவங்கள் குறித்தும் விவரித்தேன். அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டதுடன், பின்னர் அவர் பதில் அளிக்கையில் தன்னுடைய அரசாங்கம் எந்தெந்த விதங்களில் எல்லாம் இதுவரை நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்றும், எதிர்காலத்தில் எடுக்க இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்தார்.   இதே போன்றதொரு மாநாட்டை நெய்வேலியிலும் நடத்தினோம். அதிலும் அவர் பங்கேற்றார்.
அதேபோன்று, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அது, அவருடைய ஜனநாயக அணுகுமுறையைக் காட்டுகிறது. திருக்குறளுக்குச் செல்வாக்கை ஏற்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்கதொரு பங்களிப்பினை ஆற்றினார். மாக்சிம் கார்க்கியின் சிறந்ததொரு படைப்பான “தாய்” நாவலை அவர் தமிழில் கவிதை வடிவத்தில் இயற்றினார்.  அந்நூலுக்கு ஒரு முன்னுரையை எழுதித்தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் வெளியீட்டு விழாவிற்கும் என்னை அழைத்திட்டார்.
அவர் ஓர் எளிமை மற்றும் மனந்திறந்த தலைவராவார். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர். மாற்றுக் கருத்துக்களை அவர் எப்போதுமே மதித்திடுவார். அவற்றில் எப்போதும் உண்மைகள் இருக்கிறதா என்று ஆய்ந்திடுவார்.
அவர், நீண்ட காலம் அரசியல் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டிய நிலையில் இன்றைய தினம் நாட்டிலுள்ள  சூழ்நிலைமை உள்ளது. வடக்கிலிருந்து வரும் குரல்கள் மிகவும் வலுவானவைகளாகவும், உரத்ததாகவும் மாறியிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற கட்சிகளைத் தன் அணியில் வைத்துக் கொள்வதைத் தொடர வேண்டும். எங்கள் நட்பு அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச. வீரமணி)
         




தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி


தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்:
பெருமதிப்பிற்குரிய கல்விமான்களே, என் அருமை நண்பர்களே,
உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும், இந்த ஒன்பதாவது மாநாடுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடு இதுதான். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில்தான் இவ்வாறு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது என்கிறபோது நாங்கள் கூடுதலாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
 

இங்கே உங்கள் முன் நிற்கையில் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு குடும்பத்தில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஒரு பங்கினை நான் கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் பிறந்தது அன்றைய மதராஸ் எனப்படும் இன்றைய சென்னை மாநகரில்தான் அல்லது அந்தக் காலத்தில் பலராலும் அழைக்கப்பட்ட சென்னைப் பட்டணத்தில்தான். மேலும் மொழி மற்றும் பண்பாட்டு அம்சங்களில் நமக்குள் பல பொதுவான பண்புகள் உண்டு.
 

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’
 
அதாவது, உலகில் அனைத்து இடங்களும் என் சொந்த நகரம்தான், உலகில் உள்ள ஒவ்வொருவரும் என் உறவினர்கள்தான்.

பிபிசி தொடர்களில் ஓர் இனிய நிகழ்ச்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பெயர் ‘இந்தியாவின் கதை’. அது ஆதிக் காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்துக் கூறியது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதகுல உயிரணுத் திட்டத்திற்கும் (Human Genome Project) நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆதி காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் மிச்சசொச்சத்தில் காணப்பட்ட உயிரணு (gene M.130)க்கள், தமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர்ச்சிப் பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் மக்களிடம் காணப்பட்டதாக அந்நிகழ்ச்சித் தொகுப்பில் கூறப்பட்டது. மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. பிச்சப்பன் அவர்கள், இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து, ஒரு வேளை இவர்கள்தான் நம் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருப்பதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாம் - ஏவாள்தான் நம் மூத்த குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றால், ஆதாம் ஆப்ரிக்காவிலிருந்து வந்தார் என்றால், ஏவாள் இந்தியாவிலிருந்து வந்தாள் என்று கொள்ளலாம். எனவே உண்மையில் இது ‘தாய் நாடு’ (Mother India) தான். நாம் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பதற்கு உண்மையில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
 
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றைத்தான் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மொழியின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் என்பது அதன் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்ததாகும்.
 


காரல் மார்க்ஸ், மொழி குறித்துக் கூறுகையில், அது ‘‘சிந்தனையின் உடனடி எதார்த்தநிலை’’ என்று அழைத்திட்டார். ஜெர்மன் சித்தாந்தம் (German Ideology) என்னும் நூலில் மொழியின் தோற்றுவாயை ஆராய்கையில் அவர் கூறியதாவது: ‘‘மொழி என்பது மனிதனின் உணர்வு தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டது, மொழி என்பது உணர்வின் நடைமுறை. இது அனைத்து மனிதர்களிடமும் தோன்றியது. அதன் காரணமாகவே என்னிடமும் அது உளதாயிருக்கிறது. உணர்வைப் போன்றே மொழியும் தேவையின் அடிப்படையிலிருந்து, அத்தியாவசியத்திலிருந்து, மற்ற மனிதர்களோடு உறவாடுதலிலிருந்து விளைந்தது.’’

மொழியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஸ்டாலின், தன்னுடைய ‘‘மார்க்சிசமும் மொழியியல் பிரச்சனைகளும்’ என்னும் நூலில் விளக்குகையில், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
‘‘மொழி என்பது சமூகத்தின் அற்புதப்பொருள்களில் ஒன்று. அதன் மூலம் சமூகத்தின் உண்மை நிகழ்வுகளிலிருந்தே மொழியும் இயங்குகிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, மொழியும் வளர்ந்தோங்குகிறது. சமூகம் மறையும்போது, மொழியும் மறைந்துவிடும். சமூகத்திற்கு அப்பால் மொழி கிடையாது. எனவேதான், மொழி என்பது அதன் சமூகத்தின் வரலாற்றுடன் பிரிக்கமுடியாதவகையில் பின்னிப்பிணைந்திருப்பதை, மொழி பேசும் மக்களின் வரலாற்றுடன், அதனை உருவாக்குபவர்கள் மற்றும் வளர்த்தெடுப்பவர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் மட்டுமே, மொழி குறித்தும் அதன் வளர்ச்சி விதிகள் குறித்தும் புரிந்துகொள்ள முடியும்.
 

‘‘மொழி என்பது ஒரு சாதனம், ஒரு கருவி. அதன் உதவியுடன் மக்கள் ஒருவர்க்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்கிறார்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். சிந்தனையுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதன் மூலம், மொழி வார்த்தைகளை உருவாக்கிப் பதிவு செய்கிறது, வார்த்தைகளிலிருந்து வாக்கியங்களைக் கோக்கிறது. இவ்வாறு மனிதனின் அறிவாற்றலுடன் கூடிய சிந்தனையும் சாதனைகளும் மனித சமூகத்தில் சிந்தனைகளைப் பரிவர்த்தனை செய்துகொள்வதை சாத்தியமாக்குகின்றன.
 

‘‘மொழி ஒட்டுமொத்தத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக, மக்களிடையே கலந்துறவாடுவதற்காக, சமூகத்தின் உறுப்பினர்களிடையே ஒத்திருப்பதற்காக, சமூகத்தின் தனிப்பட்ட மொழியினை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் மக்களின் வர்க்க நிலைப்பாட்டைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அவர்கள்அத்துணைபேர்களுக்கும் சமமாகச் சேவை செய்வதற்காக, மிகவும் நுட்பமான வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒட்டமொத்த மக்களுக்கும் பொதுவானதொரு மொழியாக இருப்பதிலிருந்து அது பிறழ்ந்து செல்லுமானால், மற்ற சமூகக் குழுக்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில சமூகக்குழுக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்குமானால், அது தன்னுடைய ஒழுக்கப்பண்பை இழந்துவிடுமானால், சமூகத்தில் மக்கள் மத்தியில் ஓர் உறவாடும் சாதனமாக இருப்பதிலிருந்து அது தன்னை அறுத்துக்கொண்டுவிடுகிறது, விரைவில் அது சில சமூகக் குழுக்களின் பிதற்றல்களாக மாறிப்போய்விடுகிறது, தரம்தாழ்ந்து கெட்டுவிடுகிறது, விரைவில் மறைந்து ஒழிந்துவிடுகிறது.’’

ஆனால், லத்தீன் போன்று உலகின் மற்ற செம்மொழிகளைப் போல அல்லாமல், தமிழ் மொழி தழைத்தோங்கி வளர்வது தொடர்கிறது என்றால், அது மக்கள் மத்தியில் - சாமானிய மக்கள் மத்தியில் - உயிரோட்டமுள்ள தொடர்பினை கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணமாகும்.

மாநாட்டின் இலச்சினையில் (‘logo’வில்), ஆழிப்பேரலைகளின் சீற்றத்தை எதிர்கொண்டு முறியடித்த கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையும், அதனைச் சுற்றிலும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பறைசாற்றும் ஏழு அடையாளச் சித்திரங்களும் (icon) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டின் சின்னத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவச் சித்திரங்களைச் சித்தரித்திருப்பதால் அது தொடர்பாக ஒன்றைத் தெரிவிப்பது நலம்பயக்கும். பல்வேறு கலாச்சாரங்கள் ஒரு பொதுவான நூலால் இணைக்கப்பட்டிருப்பதை, தொடர்ச்சியை அது தெளிவுபடுத்துகிறது. பெருமதிப்பிற்குரிய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர், டாக்டர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், முந்தைய மாநாடுகளின் போது சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில், சிந்து சமவெளி நாகரிகக் கால கல்வெட்டுக்கள், திராவிடக் கலாச்சாரத்திற்குச் சொந்தமானவைகளாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். உண்மையில், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையேயிருந்த இணைப்பை நிறுவிட அவர் முயற்சித்தார். ‘சிந்து சமவெளி எழுத்துக்களின் பொருளைக் கண்டுபிடித்தல்’ என்னும் பணிக்காக, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை’ப் பெறுவதில் வெற்றி பெற்ற, டாக்டர் அஸ்கா பர்போலா அவர்களும் கூட, இந்து சமவெளி எழுத்துக்கள், பழைய தமிழுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள, திராவிட எழுத்துக்கள் என்று பரிந்துரைத்திருப்பதும் முக்கியத்துவம் உள்ளதாகும்.
அதுமட்டுமல்ல, மாநாட்டின் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற முகப்பு வாசகத்தில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது ஒன்றே மனிதகுலம் என்பதை உரத்துச் சொல்கிறது. கலைஞர் அவர்கள் விளக்கியதுபோல் அது இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ‘‘மனிதகுலம் அனைத்தும் குறுகிய சாதி, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், அதுவே மனிதகுலத்தின் மகத்துவம்’’ என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்கிறது. நம் நாட்டின் வரலாறு , குறிப்பாக இப் பிராந்தியம், நமக்குப் போதிக்கும் முக்கியப் படிப்பினை இது.
 

பல்வேறு மொழிகளுக்கும் இடையே காணப்படும் பொதுமைப் பண்புகளும் மற்றும் அவை இன்றைய நாளில் பெற்றுள்ள வளர்ச்சிகளும், அவற்றின் செறிவான பண்பாட்டுப் பாரம்பர்யத்துடன், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மேலும் வளர்த்தெடுத்திடவும் கவனம் செலுத்திடவேண்டும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையுமே எடுத்துக்காட்டிற்காக எடுத்துக்கொள்வோம். 2005இல் மிகவும் பொருத்தமாகவே தமிழுக்கு செம்மொழிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்ட அதே சமயத்தில், தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கும் 2008இல்அதேபோன்று செம்மொழி அந்தஸ்துகள் அளிக்கப்பட்டன. தலைமுறை தலைலமுறையாக காப்பியின் மணத்தை நுகர்ந்துகொண்டும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பாடலை வானொலியில் கேட்டுக்கொண்டும் எழும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு நாம் வளர்ந்திருக்கிறோம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய இம்மூவருமே - அவர்கள் தாய்மொழி வெவ்வேறாக இருந்தபோதிலும் - தங்கள் இசையை தெலுங்கில்தான் வடித்தார்கள். ஆயினும், இந்த இசை ‘கர்நாடக இசை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இவ்வாறு நம் வேற்றுமைக்குள் இணக்கமான ஒற்றுமை காணும் பண்பு மிகவும் உன்னதமானது. தெலுங்கில் வடிக்கப்பட்ட இசையை எவ்விதச் சிரமமுமின்றி தமிழிலோ அல்லது கன்னடத்திலோ மீள அளித்திட முடியும். இதுதான் நம்மிடையேயுள்ள மா மன்னுய்திக் கோட்பாட்டின் (universalism) மகத்துவமாகும்.
நம்முடைய பாரம்பர்யம் இதனை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த எளிய உண்மையை அங்கீகரிக்க மறுத்து, ஒருசமயம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறில் நடைபெற்ற தியாகராசர் இசை விழாவின்போது ஒருவர் தமிழில் பாடியதற்காக அவர்மீது இசை வெறியர்கள் மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினாராம். மக்களைப் பிணைத்திடும் முகவராக வரலாற்றுரீதியாகச் செயல்பட்டு வரும் மொழி என்பது அதன் அடிப்படைச் சிறப்பியல்புக்கு எதிராக, தங்களுடைய வெறித்தனத்தையும் பிரிவினைகளையும் காட்டிட ஏவப்பட்டிருக்கிறது. வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ள உன்னதப் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், போராட்டத்தின்போது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக, சமூகத்தின் வளர்ச்சிக் கருவியாக மொழியைப் பார்க்கிறோம். தேசிய இனத்தை வரையறுத்திடும் நான்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாக, அதனை நாங்கள் பார்க்கிறோம். நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த காலத்திலிருந்தே, இத்தகையப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாங்கள் தெலுங்கு பேசும் மக்களுக்காக விசாலாந்திரா, மலையாளம் பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம், மராத்தி பேசுபவர்களுக்காக சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகிய மாகாணங்களுக்காகப் போராடினோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழுக்காக, முனைப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இங்கே, தியாகி சங்கரலிங்கம் பெயரைக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமுடையதாக இருக்கும். மதராஸ் ராஜதானி என்றிருந்ததை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 64 நாட்கள் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இறந்து போனார். அவர் இறந்தபின் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இம்மாநிலத்திலிருந்து வந்த முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், தொழிற்சங்கத் தலைவருமான பி. இராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் மற்றும் என். சங்கரய்யா ஆகியோர் மாநில சட்டமன்றத்தில் தமிழில் பேசுவோம் என்று பிரகடனம் செய்து, தமிழிலும் பேசினார்கள். அ. நல்லசிவம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில், தமிழில் தந்தி கொடுக்கும் முறைக்காகப் போராடினார். உண்மையில் இவர்கள் அனைவரும் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் நம் முன்னோடிகளாக விளங்கினார்கள். மக்களின் மொழியில் ஆட்சி அதிகாரம் நடைபெறாவிட்டால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். ஐயன் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் சொல்லியதுபோல,
 

காட்சிக் கெளியன் கடுஞ் சொல்லன் அல்லனேல்
 
மீக்கூறும் மன்னன் நிலம்

(அதாவது, காட்சிக்கு எளிமையும், கடுங்சொல் கூறாத இனிய பண்போடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.) (அதிகாரம் 39, குறள்: 386)

ஜனநாயகம் வெற்றிகரமாக அமைந்திட, நிர்வாகத்துடன் எளிதில் அணுகத்தக்க தன்மை முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதற்கான பல அம்சங்களில் மொழி என்பது ஆட்சியாளர்களையும் ஆட்சிக்குட்பட்டவர்களையும் இணைத்திடுவதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர் மக்களோடு கொண்டுள்ள உறவின் அளவையும் வரையறுக்கிறது. மொழி சமூகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ‘‘அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும், சமூக வாழ்க்கையிலும், மக்களின் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளிலும்’’ அவர்களுக் கிடையேயான சிந்தனைகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் கருவியாக மொழி விளங்குகிறது.
இந்தப் பின்னணியில்தான், இன்றைய அரசாங்கங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. ‘மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்’ என்ற ‘நேரு மாதிரி’ என்கிற வலைப்பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல், அந்தந்த மண்ணின் மொழி செயல்படுத்தப்படுவது உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். நிச்சயம் இதனை குறுகிய மொழிவெறி என்று எவரும் கருதிடக் கூடாது. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், அனைத்து மொழிகளையும் தழைத்தோங்கச் செய்திட அனுமதித்திட வேண்டும்.
இன்றைய உலகில் எந்த ஒரு மனிதனும் தனியொரு அடையாளத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள்அடுத்தடுத்துப் பேசப்படக்கூடிய ஒரு நாட்டில் பல்வேறு அடையாளங்கள் விரிவடைந்திருக்கின்றன.
 

எழுதப்பட்ட வரலாறு நெடுகிலும், இன்றைய எதார்த்த நிலையிலும், இந்தியாவில் உள்ள நாம், தாய்மொழி, வேலை செய்யும் இடத்தில் புழங்கும் மொழி, படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கான மொழி என்று ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் மூன்று மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக இசை எடுத்துக்காட்டை இது விளக்குகிறது. இவ்வாறு நாட்டின் பல்வேறு அடையாளங்களை, எந்த ஒரு ‘குறிப்பிட்ட’ அடையாளத்திற்கும் தனி முக்கியத்துவம் தந்துவிடாமல், பேணி வளர்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.
 

நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், என் தாய்மொழி தெலுங்கு, இந்தி பேசும் தில்லியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இங்கே உங்கள் முன் இம்மாமன்றத்தில் உலகம் முழுதுமிருந்து வந்துள்ள தமிழர்கள் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தியா.

நான் உரையை நிறைவுசெய்வதற்கு முன், பரிசீலனைக்காக மாநாட்டை நடத்துவோருக்கு முன் சில ஆலோசனைகளை வைக்க விரும்புகிறேன். தமிழ் மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்ட ஒரு மொழி, இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இலக்கியங்களைப் படைத்த, படைக்கும் ஒரு மொழி. அதுமட்டுமல்லாமல், ஏட்டில் எழுதப்பெறாத, வாய்வழி வரலாற்றுச் செல்வங்களையும் (huge treasures of oral history) அபரிமிதமாகக் கொண்டுள்ள ஒரு மொழி. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி, என்றென்றைக்கும் நிலைபேறுடையதாக மாற்றக்கூடிய விதத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப்புற இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாக நாட்டுப்புற மக்கள் மத்தியில் விளங்கிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக இம்மாநாடு சில நடவடிக்கைகளைத் தொடங்கிடும் என்று நான் நம்புகிறேன்.

தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் என்று பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கிய வளங்களின் மூலம் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்தும் இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியத் தேவையாகும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இம்மாநாட்டின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளும்போது இணைத்துக்கொள்ளப்படவும் வேண்டும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல்

என்கிறது திருக்குறள். அதாவது அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமை உடையவர்கள் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
தமிழ் மொழியை மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் அதன் வளமான பாரம்பர்யங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வோம்.


(தமிழில்: ச.வீரமணி)