Saturday, December 31, 2011

மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிட வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்



‘‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’’ தன் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2011 முடிந்து 2012இல் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் நம் வாழ்வாதாரங்களைத் தீர்மானிக்கக்கூடிய மூன்று முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் 2011இல் நடைபெற்று அவை 2012ஆம் ஆண்டிற்கும் தொடரவிருக்கின்றன.

முதலாவதாக, உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக, அகில இந்திய அளவில் லோக்பால் சட்டமும், மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா சட்டமும் கொண்டு வருவதற்கானதொரு சட்டமுன்வடிவு மக்களவையில் மட்டும் கடைசியில் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிப்பற்காக இதுபோன்ற அமைப்புகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக ஒரு சட்ட முன்வடிவு முதன்முறையாக 1968 மே 9ஆம் நாள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும், தேர்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நான்காவது மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் அச்சட்டமுன்வடிவும் காலாவதியாகிவிட்டது. அதேபோன்று, 1971 ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் ஐந்தாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்துக் காலாவதியானது. மறுபடியும் நாட்டிலிருந்த அவசரநிலைக்காலம் முடிவடைந்தபின், ஜனதா கட்சி அரசாங்கத்தின் காலத்தில், 1977 ஜூலை 28 அன்று கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவும், மற்றொரு தேர்வுக்குழு அதனைப் பரிசீலனை செய்து முடிப்பதற்கு முன்னமேயே ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டதால், காலாவதியாகிப்போனது. மீண்டும் ஒருமுறை, 1985 ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் கூட்டுத் தேர்வுக் குழுவினரின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போக முடியாததால் வெளிச்சத்திற்கே வர வில்லை. போஃபோர்ஸ் ஊழலை அடுத்து ராஜீவ்காந்தி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒரு லோக்பால் சட்டமுன்வடிவு 1989 டிசம்பர் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும்கூட 1991 மார்ச்சில் ஒன்பதாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. 1996இலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது, மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின்பேரில் 1996 செப்டம்பர் 13 அன்று ஒரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மீது விரிவான ஆய்வினை மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழு தன் அறிக்கையை 1997 மே மாதத்தில் சமர்ப்பித்தது. ஆயினும், மீண்டும் ஒருமுறை, இவற்றின் அடிப்படையில் ஒரு சட்டமுன்வடிவை இறுதிப்படுத்துவதற்கு முன்னமேயே பதினோராவது மக்களவை கலைக்கப்பட்டதால் இச்சட்டமுன்வடிவும் காலாவதியானது.

1996இல் 13 நாட்கள் மட்டும் ஆட்சி செய்துவிட்டு, ஆட்சியைவிட்டு அகன்றபின், பின்னர் மறுபடியும் இரண்டாவது தடவையாக 13 மாதங்கள் ஆட்சி செய்த வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் 1998 ஆகஸ்ட்டில் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியது. அதுவும் 1999இல் 12ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. பின்னர் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2001 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டமுன்வடிவை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த போதிலும் பாஜக அதனைச் சட்டமாக்கிட எந்தவிதமான முயற்சியும் எடுத்திடவில்லை. இப்போது ஒன்பதாவது முறையாக லோக்பால் சட்டமுன்வடிவும் லோகாயுக்தா சட்டமுன்வடிவும் நாடாளுமன்றத்தின் முன் வந்திருக்கிறது. மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஒருவிதத்தில் இறுதியாக இதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வந்திருப்பதால், அங்கே பரிசீலனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நிறுவனங்கள் வலுவானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, நான்கு முக்கிய பிரச்சனைகள் மீது திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த அமைப்புகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் மிகவும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஊழலுக்கு இடங்கொடாது, குற்றமிழைத்தோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை வெளி சக்திகள் தலையிட்டு தடுக்க முடியாத வகையில், சுயேச்சையாக இயங்கக்கூடிய வகையில் வலுவானதொரு புலனாய்வு எந்திரம் அளிக்கப்பட வேண்டும், இச்சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கார்பரேட்டுகள் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் அரசு சாரா அமைப்புகளையும் கொண்டுவரவேண்டும், மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்படாது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்தத் திருத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அளிக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநிலங்களவையில் இச்சட்டமுன்வடிவு நிறைவேறும் பட்சத்தில், இச்சட்டமுன்வடிவு மக்களவைக்கு அவற்றை ஏற்பதற்காக மீளவும் அனுப்பப்பட வேண்டும். அரசாங்கம், லோக்பால் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அமைப்புகள் மேலும் வலுவானதாக அமைந்திட ஏற்பட்டிருக்கக்கூடிய வித்தியாசங்களைச் சரிசெய்வதற்காகக் கூட்டு தேர்வுக் குழுவை (துடிiவே ளுநடநஉவ ஊடிஅஅவைவநந) அமைத்திடலாம், அல்லது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வரலாம்.
எது எப்படி இருந்தபோதிலும், உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக, சரியான அமைப்புகளை உருவாக்குவதற்காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத்தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார். தன் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆயினும் அவர், நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதே. ஒரு ஜனநாயக நாட்டில்,அரசியல் இயக்கங்களின் உயிர்த்துடிப்புடன் மக்கள் எந்த அளவிற்கு அதிகமாக அரசியல் இயக்கங்களில் பங்குபெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்துத்தான் அந்நாட்டின் ஜனநாயகத்தின் முதிர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தோமானால் அண்ணா ஹசாரேயும் அவர்தம் குழுவினரும் அரசியல் இயக்கங்களில் பங்களிக்க முன்வந்திருப்பதும், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் அவர்களின் நிலைப்பாடு சரியா, இல்லையா என்பதை இனி மக்கள் தீர்மானித்துக்கொள்ள விட்டிருப்பதும் வரவேற்கத் தக்கதேயாகும்.

ஆயினும், உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் முழுமையாக வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், இவர்களது பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் அநேகமாகக் காணப்பட வில்லை அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், இன்று காணப்படும் மிகப்பெரிய அளவிலான ஊழல்கள் அனைத்தும் கடந்த இருபதாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் கீழேதான் நடந்துள்ளன. ஊழல் என்பது சான்றோர் பழிக்கும் வினையாகத்தான் நம் சமூகத்தில் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றையதினம் நம்மைச் சுற்றியும் காணப்படும் ஊழல் என்பது மிகவும் வித்தியாசமானவைகளாகும். பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் அறநெறியற்ற குணங்களையும், இழிவழிகளிலும் திடீர்ப்
பணக்காரர்களாவதற்கான வாய்ப்பு வசதிகளையும் உருவாக்கித் தந்திருக்கின்றன. இன்றைய தினம் நாட்டில் உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலின் முக்கிய காரணிகளாக விளங்கும் கார்பரேட்டுகளையும், தனியார்களையும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமேயாகும். இவ்வாறாக ஊழலை ஒழிப்பதென்பது அறநெறி சார்ந்த ஒன்று மட்டுமல்ல, நம் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிப்பதனை மறுத்திடக்கூடிய வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய வள ஆதாரங்களை மிகப்பெரிய அளவில் திருப்பிவிடக்கூடிய நடவடிக்கை களுக்கும் எதிரானதாகும்.

உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியானமுறையில் இணைத்திடாமல் வலுவானமுறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் உயர்மட்ட அளவில் ஊழல் புரிந்திட ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவர்கள் புரிந்திடும் ஊழல்களை ஒழிக்க முடியாது. இதனை நன்கு கணக்கில் எடுத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் மீதான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளது.

ஆயினும், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோசமான முறையில் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதன் பொருள், ஒரு பக்கத்தில் உலகப் பொருளாதார மந்தம் ஆழமாகியுள்ள பின்னணியில் நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் வாழ்நிலைமை மேலும் மோசமாக வீழ்ச்சியுறும் அதே சமயத்தில், மறுபக்கத்தில் உயர்மட்ட அளவில் இயங்குபவர்களின் ஊழல் மூலமாகவும், அறநெறியற்ற நடவடிக்கைகளின் விளைவாகவும் நம் நாட்டின் செல்வாதாரங்கள் மேலும் கொள்ளையடிக்கப்படும். எனவேதான், புத்தாண்டில் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்றிட, ஆட்சியாளர்களின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு எதிராக வலுவான போராட்டங்களுக்குத் தயாராகிட வேண்டும்.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய பின்னணியில் மக்களின் வாழ்க்கைச் சுமைகள் தொடர்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் அரித்திடுவதற்கு இட்டுச்செல்லுமாகையால், சிறந்ததோர் வாழ்க்கை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, வரவிருக்கும் ஆண்டில் சிறந்ததோர் வாழ்க்கைக்காக நம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்காகவும், நாட்டு மக்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை அளிப்பதற்காகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறோம்.

நாட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிடவும், ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிடவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, December 25, 2011

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும்?--மார்கண்டே கட்ஜூ

குடியரசு தினத்தன்று பாரத ரத்னா விருதுகள் வழங்கும் பிரச்சனை இப்போது செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது. உருது கவிஞர் மிர்சா காலிப், வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தபோது பலர் அதை எதிர்த்தனர். அவர்கள் உயிருடன் இல்லை என்பதும், உயிருடன் இல்லாதவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் அதற்குக் காரணம் கூறினார்கள்.

சரியான நபர்களாக இருந்தால் அவர்கள் இறந்திருந்தபோதிலும்கூட அவர்களுக்கு விருதுகள் வழங்குவதில் தவறேதுமில்லை என்பதே என் கருத்தாகும். பாரத ரத்னா விருதுகள் கடந்தகாலங்களில் அவ்வாறு சிலர் இறந்தபின்னரும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. இதற்கு இரு எடுத்துக்காட்டுகள்: சர்தார் பட்டேலும் டாக்டர் அம்பேத்காரும் ஆவார்கள்.
கவிஞர் மிர்சா காலிப் நம் காலத்தைச் சேர்ந்த கவிஞர். ராமரைப் போன்று புராண புருஷர் அல்ல. அதேபோன்று கௌதம புத்தர் போன்று பழங்காலத்தவருமல்ல. நிலப்பிரபுத்துவ பாரம்பர்ய பழக்க வழக்கங்களினூடே அவர் வளர்க்கப் பட்டிருந்தபோதிலும், நவீனகால நாகரிகத்தின் அனுகூலங்களை உற்றுநோக்கி உள்வாங்கியிருந்ததன் மூலம் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்தவர்.

அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:

‘‘இமான் முஜே ரோக் ஹே, ஜோ கெஞ்சே ஹே முஜே குஃபர்
கபா மேரே பீச்சே ஹே, கலேசா மேரே ஆகே’’

‘கலேசா’ என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தேவாலயம். ஆனால் இங்கே அவர் நவீன நாகரிகத்தைக் குறிப்பிடுகிறார். அதேபோன்று, ‘கபா’ என்றால் மெக்காவின் புனித இடத்தைக் குறிக்கிறது. ஆனால் இங்கே அவர் நிலப்பிரபுத்துவத்தைக் குறிப்பிடுகிறார். எனவே இக்கவிதையின் உண்மையான பொருள்:

‘‘மத நம்பிக்கை என்னைப் பின்னே இழுக்கிறது, ஆனால் கடவுள் இருக்கிறாரா என்கிற ஐயம் என்னை முன்னே தள்ளுகிறது,
நிலப்பிரபுத்துவம் என் பின்னே இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னே இருக்கிறது’’
கலிப் இவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை நிராகரித்து, நவீனகால நாகரிகத்தை வரவேற்கிறார். எப்போது? 19ஆம் நூற்றாண்டின் மத்தியகால வாக்கில், இந்தியா நிலப்பிரபுத்துவத்தின் கீழ் முழுமையாக மூழ்கி இருந்த காலத்தில்.

உருது கவிதைகள் என்பவை இந்தியக் கலாச்சாரத்தின் பொக்கிஷத்திற்குள் ஒளிவீசும் ரத்தினக்கற்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. (இணையதளம் www.kgfindia.com-இல் காணப்படும் ‘உருது என்றால் என்ன’ என்கிற என் கட்டுரையைப் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.) மாபெரும் மொழியான உருதுக்கு மிகப்பெருமளவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 1947க்கு முன்னர், இந்தியாவில் உள்ள பெருவாரியான பகுதிகளில் படித்த வர்க்கத்தினரின் பொது மொழியாக உருது விளங்கியது. அவர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோ, சீக்கியர்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ - எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆயினும், 1947க்குப் பின்னர் சில சுயநல சக்திகள் உருது ஓர் அந்நிய மொழி என்றும், அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான மொழி என்றும் பொய்ப் பிரச்சாரத்தை உருவாக்கின.

மிர்சா காலிப் உருது மொழியின் உன்னதக் கவிஞர். நம் பல்வகைக் கலாச்சாரத்தின் சிறந்த பிரதிநிதி. அவர் ஒரு முஸ்லீமாக இருந்தபோதிலும், முழுமையான அளவில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர். அவருக்கு இந்து நண்பர்கள் ஏராளமாக உண்டு. அவர் இறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் நம் கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாததொரு பகுதியாக உருது இன்றும் விளங்குவதால் அவர் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2011 ஏப்ரல் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜாஷன்-இ-பஹார் முஷைரா என்னும் சிறப்புக் கூட்டத்தில்தான் கலிப் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்கிற என் வேண்டுகோளை நான் முதலில் முன்வைத்தேன். என் வேண்டுகோள் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட்டது. அவர்களில் இன்றைய மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆயினும், ஒரு முன்னணி இதழ் என்னுடைய வேண்டுகோளை ‘வெறிபிடித்த உணர்ச்சி’(‘ளநவேiஅநவேயடளைஅ படிநே நெசளநசம’) என்று விவரித்திருந்தது.
சரத் சந்திரர் சட்டோபாத்யாயா

அதேபோன்று சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். சரத் சந்திரர் தன் கதைகளில் சாதிய முறை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, மூடப் பழக்க வழக்கங்கள், (அவரது ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ரஹீன், தேவதாஸ், பிராமணனின் மகள், கிராமின் சமாஜ் கதைகளைப் பார்க்க) போன்று இன்றளவும் இந்தியாவைப் பீடித்துள்ள கொடிய சமூகக் கேடுகள் மீது மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்திருந்தார்.

கல்கத்தா டவுன் ஹாலில் 1933இல் சரத் சந்திரரைக் கௌரவிக்கும் வண்ணம் நடைபெற்றதொரு கூட்டத்தில் சரத் சந்திரர் கூறியதாவது:
‘‘நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். இவ்வாறு நான் கடன்பட்டிருப்பது எனக்கு முன் இத்துறையில் தடம் பதித்துள்ள முன்னோர்களுக்கு மட்டும் அல்ல. இந்த உலகத்தைச் சிருஷ்டித்து, அதற்குப் பிரதிபலனாக எதுவுமே பெறாத, தங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லாத சாமானிய மக்களுக்கும், யாரும் கேட்பாரற்றுக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வரும் நலிவடைந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்படியும், தங்களுக்காக சமூகத்தில் குரல் கொடுக்கும்படியும் அவர்கள்தான் எனக்கு உத்வேகத்தை அளித்தார்கள். இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொண்ணாக் கொடுமைகளை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஒவ்வோராண்டும் வசந்தம் வருவது என்னவோ உண்மைதான். ஆனால் அதன் அழகை, புதிதாகப் பூக்கும் மலர்களின் இனிய நறுமணத்தைச் சுவாசித்திட, குயில்களின் பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் பார்க்க முடியாத வண்ணம் என் பார்வை சிறைப்படுத்தப்பட்டிருந்தது.’’

நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சராசரியாக ஒவ்வொரு நாளும் 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சுகாதாரக் கவனிப்பின்மை, வீட்டுவசதியின்மை, கல்வியின்மை போன்று பிரச்சனைகள் பல்வேறு ரூபங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சரத் சந்திரரின் இந்த உரையானது எழுத்தாளர்கள் பலரை இன்றளவும் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளது.

சுப்பிரமணிய பாரதியார்
அதேபோன்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், முழுமையான தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய மாபெரும் தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

பெண்கள் விடுதலைக்கு ஆதரவாக பாரதி எழுதிய சக்திவாய்ந்த கவிதையை இங்கே தருகிறேன். நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சமயத்தில் ‘ஹின்சா விரோதாக் சங் (எதிர்) மிர்சாபூர் மோட்டி குரேஷ் ஜமாத் மற்றும் பலர்’ வழக்கில் 2008 மார்ச் 14 அன்று அளித்திட்ட தீர்ப்பில் இதனை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன் றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்.

பாரதியின் மற்றொரு கவிதை:

கும்மியடி தமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி.

ஏட்டையும் பெண்கள் தொழுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் கலிபையும், சரத் சந்திரரையும் சுப்பிரமணிய பாரதியையும் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாம் எந்த அளவிற்குமிகவும் கீழ்த்தரமான கலாச்சார மட்டத்தில் சிக்கிக்கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம் என்பதனையே இது காட்டுகிறது. நாம் நம் உண்மையான வீரர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்கிறோம், மாறாக மேலெழுந்தவாரியானவர்களை உயர்த்திப் பிடிக்கிறோம். இந்தியாவில் இன்றைய தலைமுறை அநேகமாக முற்றிலும் பண்பாடிழந்து விட்டது என்று கூறுவதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நடிகர்கள்-நடிகைகள், கிரிக்கெட் மற்றும் மேலெழுந்தவாரியான விஷயங்கள் என்றாகிவிட்டன.
இன்றைய இந்தியா எந்தத் திசையில் செல்வதென்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு நல்ல திசைவழியைக்காட்டி நாட்டு மக்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்பவர்களே இப்போது நமக்குத் தேவை. அத்தகையோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இல்லை. கிரிக்கெட் விளையாடுபவர்கள், திரைப்பட நடிகர்கள் போன்று எவ்வித சமூகப் பிரக்ஞையுமற்றவர்களுக்கு கொடுப்பது என்பது விருதினையே கேலிக்குரியதாக ஆக்கிவிடும்.

(மார்கண்டே கட்ஜூ,
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும்,
இந்திய பிரஸ் கவுன்சில் இன்னாள் தலைவருமாவார்.)
நன்றி: தி இந்து நாளிதழ், 21.12.11
தமிழில்: ச.வீரமணி

Saturday, December 24, 2011

கடுமையான பொருளாதாரச் சூழ்நிலையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுக



யர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களைச் சமாளிப்பதற்காக லோக்பால் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் நிலவும் கடும் பொருளாதாரச் சூழ்நிலையும், வரவிருக்கும் காலங்களில் மேலும் கடுமையான முறையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கைகளும் நாட்டின் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேலும் கொடூரமானத் தாக்குதலைத் தொடுக்க விருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடுமையாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் ஐமுகூ-2 அரசாங்கத்தின் ‘‘ஆபத்பாந்தவரான’’ நிதி அமைச்சர், நாட்டின் கார்பரேட் முதலாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். 2011 அக்டோபர் மாதத்திற்கான தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெ@ம் -5.1 விழுக்காட்டைப் (minus 5.1 percent) பதிவு செய்திருக்கிறது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு 54 ரூபாய் என்று வரலாறு படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகுப்புற வீழ்ந்திருக்கிறது. இவ்வாறு ரூபாயின் மதிப்புக் குறைவதனால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் என்ற போதிலும், ஏற்றுமதியாகும் பொருள்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மதிப்பீடுகளும் கடுமையாகக் குறைந்திருக்கின்றன. மாநிலங்களவையில், 63 ஆயிரத்து 180 கோடி ரூபாய்கள் கூடுதலாக ஒதுக்குவதற்காக நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பதிலளித்த நிதி அமைச்சர், ‘‘வரவிருக்கும் நெருக்கடியை சமாளித்து மீளக்கூடிய வல்லமையை’’ இந்தியா பெற்றிருக்கிறது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு நிதித்துறையில் மேலும் தாராளமய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் அடிக்கோடிட்டிருக்கிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? இத்தகைய தாராளமய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவின் ஆதரவினைப் பெற்றிட வேண்டும் என்பதேயாகும். இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் காலத்தின்போது கொண்டு வரப்பட்டவையே என்பதையும் அவர் அப்போது அவர்களுக்கு நினைவூட்டியிருக்கிறார்.

இத்தகைய தாராளமய நடவடிக்கைகளுக்கு பாஜகவிடமிருந்தும் உடனடியாக ஒத்துழைப்பு கிடைத்திடும் என்பது திண்ணம். ஆயுள் காப்பீட்டுக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்தத்தைத் தோற்கடித்து ஐமுகூ-2 அரசாங்கத்தை பாஜக காப்பாற்றியது. பாஜக மட்டும் அரசாங்கத்தைக் காப்பாற்ற முன்வராதிருந்திருக்குமானால் அந்தச் சட்டமுன்வடிவு தோற்றுப்போயிருக்கும். தற்போது ஓய்வூதிய நிதிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காகக் கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவின்போதும், வங்கிகளில் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரும்போதும், இவ்வாறு காங்கிரசும் பாஜகவும் ஒத்துப்போக ஒப்புக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய சீர்திருத்தங்கள் அனைத்தும் சர்வதேச முதலீட்டாளர்களையும், அந்நிய நிதி மூலதனத்தையும் ‘‘இந்தியாவிற்கு வருக, எங்கள் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்க’’ என்று நயந்து பேசி இச்சகம் செய்து வரவழைப்பதைக் குறியாகக் கொண்டதாகும். அந்நிய மூலதனம் இவ்வாறு நாட்டிற்குள் வருவதானது இந்தியாவின் நிதிநிலைமைகளை அழகுபடுத்திடும் என்றும், இந்திய முதலாளிகளுக்கும் ‘சென்செக்ஸ்’ என்னும் பங்குச்சந்தை புள்ளிகளுக்கும் நம்பிக்கையூட்டிடும் என்றும் நம்பப்படுகிறது. இதனை அடுத்து, ‘‘அனைத்தும் நன்றாகவே நடக்கிறது’’ என்று கூறுபவர்களையும் இது திருப்திப்படுத்திடும்.

ஆயினும் இவை அனைத்துமே சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றிட எதுவுமே செய்யப்போவதில்லை. மாறாக, சர்வதேச நிதி மூலதனம் மிகப்பெரியஅளவில் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வாய்ப்பு வசதிகளை உருவாக்கித் தருவது என்பதானது நம் நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களை மேலும் கொடூரமான முறையில் வறிய நிலைக்கே தள்ளிவிடும்.
மேலும், அந்நிய நிதிமூலதனம் இந்தியாவிற்குள் வருவது மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஆரோக்கியமானதாகத் தெரியலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அடிப்படைகளை மேலும் கடுமையாகப் பாதிக்கும். ‘சென்செக்ஸ்‘ என்னும் பங்குச்சந்தை புள்ளிகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுக்கலாம். இந்திய கார்பரேட் முதலாளிகளுக்கும் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகைகளை அனுமதித்திடலாம். ஆயினும் நாட்டின் பெரும்பான்மையான சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட இவை எதுவும் செய்யப் போவதில்லை.

அரசாங்கம் கூடுதல் செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவின் மூலம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரும் சமயத்தில், நிதி அமைச்சர் அவர்கள், இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதற்கு எரிபொருள்கள் விலை உயர்வும், மக்களுக்கு அளித்திடும் மான்யங்கள் அதிகரித்திருப்பதுமே காரணங்கள் என்று கூறியிருக்கிறார். ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக மான்யங்கள் அளிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றும் ஒப்பாரி வைத்திருக்கிறார். ஆனால், அதேசமயத்தில், நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர், இந்த ஆண்டில், இதுவரை மட்டுமே, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளிலிருந்து மட்டும் அரசுக்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறதே என்ற உண்மையைக் கூறியபோது, அவர் வாயே திறக்கவில்லை. அதாவது, மக்களுக்கு அளிக்கப்படும் மான்யங்களைவிட அதிக அளவில் அரசாங்கம் மக்களிடமிருந்து வரிகள் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறது. அரசின் வருவாயில் பெரும்பகுதி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு வந்ததேயாகும். இவ்வாறு விலை உயர்வால் இத்தொகைகளை அரசுக்கு வாரி வழங்கியிருப்பது மக்களே. அதாவது, மக்கள்தான் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவிற்கு மான்யங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கமானது இத்தகைய ‘அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்’ மூலமாக, வருகின்ற கூடுதல் மூலதனம் இந்திய கார்பரேட் முதலாளிகள் கைகளில் சேர்ந்து அவர்கள் அடிக்கும் கொள்ளை லாபங்கள் நாட்டின் முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மொத்த உள்நாட்டுஉற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறது. இது தவறான ஊகமே. இதில் அரசு எங்கே தவறு செய்கிறதென்றால், இவ்வாறு முதலாளிகள் உற்பத்தி செய்திடும் பொருள்கள் விற்கப்பட வேண்டும் அல்லவா? அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ள நிலையில் அவற்றை வாங்கவே வழிதெரியாது விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ள நிலையில் இத்தகைய முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை அவர்கள் எப்படி வாங்குவார்கள்?
இவ்வாறு மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும், உள்நாட்டுத் தேவை மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையிலும் முதலாளிகளுக்கு முதலீடுகளுக்காக மூலதனத்தை அளிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சி வந்துவிடாது. நாட்டில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதனைச் செய்திட வேண்டுமானால் நாட்டில் பெரிய அளவில் பொது முதலீடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் இவ்வாறு பொது முதலீடுகளின் மூலம் நாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் மக்களுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்திடும். அவர்களின் சொந்த வீட்டுத் தேவைகளும் விரிவாக்கப்படும். இதையெல்லாம் அரசாங்கம் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் மும்முரமாக செயல்படுத்திடவும், அதன் மூலம் சர்வதேச மூலதனமும் இந்திய கார்பரேட் முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டிடவும் ஐமுகூ 2 அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

2008ஆம் ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் (stimulus packages)மூலம் எவ்விதமான பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஏற்படவில்லை என்பதை சமீபத்திய பொருளாதார மந்த நிலைமை மெய்ப்பித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் வரவேண்டிய வரிபாக்கிகளைத் தள்ளுபடி செய்ததன் மூலம் இவ்வாறு கார்பரேட் முதலாளிகளுக்கு அளித்த ஊக்கத் தொகைகள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாய்களாகும். இதில், 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய்கள் கார்பரேட்டுகளுக்கும் அதிகபட்சம் வருமான வரி செலுத்துவோருக்கும் நேரடியாகவே அளித்திட்ட சலுகைகளாகும். விளைவு என்னாயிற்று? பொருளாதார நெருக்கடி வேகமாக மாறி இன்றைய தினம் நம்மைத் திகைக்க வைத்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியின்போதும் பெரிய அளவில் பயனடைந்தோர் ‘‘ஒளிரும் இந்தியா’’வைச் சேர்ந்தவர்களேயாவார்கள். கடந்த மூன்றாண்டுகளில், இந்தியாவில் உள்ள அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52க்குச் சென்று பின்னர் அது 69 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த 69 பேர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் சேர்த்துப் பார்த்தோமானால் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குச் சமமாக இருக்கும். அதேசமயம் மறுபக்கத்தில் நாட்டு மக்களில் 80 கோடிக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
அடுத்து, அரசுத்தரப்பில் அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்திருப்பதும் தவறான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. பணக்காரர்களுக்கு அளித்துள்ள அபரிமிதமான சலுகைகளுடன் ஒப்பிடுகையில், நிதிப் பற்றாக்குறையாகக் காட்டப்பட்டிருக்கும் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் என்பது மிகவும் அற்பத்தொகையேயாகும். அரசுக்கு வரவேண்டிய சட்டப்படியான வரிகள் அனைத்தும் வசூலிக்கப்பட்டிருந்தால், நிதிப்பற்றாக்குறைக்கே வாய்ப்பில்லை. மேலும் நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி, பொது முதலீடுகள் மூலம் பெரிய அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக வளர்ந்து அதன் மூலம் நாட்டின் பெருவாரியான மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பாடு அடைந்திருக்கும்.

ஐமுகூ-2 அரசாங்கமானது ஒரு வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி, உயர்மட்ட அளவில் நடைபெற்றுவரும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்திடவும், அதன்மூலம் அரசுக்குக் கூடுதலாகக் கிடைத்திடும் வள ஆதாரங்களை நாட்டு மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்திட அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் தாராளமயப்படுத்திட மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்திடக்கூடாது. இதனையும் மாற்றக்கூடிய வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிடவேண்டும். இரு கட்சிகளுமே அந்நிய மூலதனம் மற்றும் இந்திய கார்பரேட் முதலாளிகளின் நலன்களைக் காத்திட வேலை செய்யக்கூடிய அளவிற்கு, நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட செயல்படவில்லை என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்திட வேண்டும். கூடுதலாக, பாஜக, தன்னுடைய நாசகர மதவெறி நிகழ்ச்சிநிரலையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

(தமிழில்: ச.வீரமணி)