Showing posts with label Markande Katju. Show all posts
Showing posts with label Markande Katju. Show all posts

Monday, August 15, 2016

நன்றி, நீதியரசர் மார்கண்டே கட்ஜூ அவர்களே : கேரள முதல்வர் கடிதம்



நன்றி, நீதியரசர் மார்கண்டே கட்ஜூ அவர்களே
கேரள முதல்வர் கடிதம்
"கேரளத்தைப் பாராட்டி உங்கள் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருப்பதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி," என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், ஓய்வுபெற்ற நீதியரசர் மார்கண்டே கட்ஜூவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
"உங்களுடைய முகநூல் பக்கத்தில் கேரளம் குறித்து கனிவான வார்த்தைகளில் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. கேரளத்தைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், கேரள முதல்வர் என்ற முறையிலும் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
தாங்கள் தங்கள் பதிவில் தெரிவித்துள்ளபடி கேரளம் பல்வேறு தேசங்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை ஏற்றுக்கொண்டு, அரவணைக்கிற ஒரு ஜனநாயக மாண்பினை எப்போதும் ஊட்டி வளர்த்து வந்திருக்கிறது.
 கேரளத்தில் தலித்துகள் எந்தக்காலத்திலும் பாகுபாடு காட்டப்பட்டதில்லை என்று தங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது வரலாற்று ரீதியாக துல்லியமானது அல்ல என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கேரளத்தில் தீண்டாமைக் கடைப்பிடிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சாதியக் கொடுமைகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் காரணமாகத்தான் இன்றைய கேரளம் உருவாகி இருக்கிறது. எனவே, கேரளத்தின் வரலாறு என்பது போராட்டங்களின் வரலாறுமாகும்.
புன்னப்புர-வயலார், கய்யூர், கரிவெள்ளூர், மொராழா, ஓஞ்சியம் முதலான பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களின் நினைவுகளால் சிலிர்க்காத மலையாளிகள் அநேகமாக மிகவும் குறைவாகும். ஸ்ரீ நாராயணகுரு, அய்யன் காளி, சகோதரன் அய்யப்பன் மற்றும் இடது முற்போக்கு சக்திகள் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக உருவாக்கிய சமூக உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. குருவாயூரில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், பாலியம் போராட்டம் ஆகியவை கடவுளைக் கும்பிடுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவைகளாகும். இவை,  கேரளாவின் வரலாற்றில் விளிம்புநிலை மனிதர்களுக்கான இயக்கங்களில் ஒளிவீசும் அத்தியாயங்களாகும்.
மேலும் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் கேரள சமூகத்தில் மக்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அளித்தவைகளாகும்.   சமூகத்தினை உயர்த்திட கல்வி அவசியம் என்பதை உணர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளும், கிறித்துவ மிஷனரிகளும் அதுநாள்வரை கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தினருக்குக் கல்வியை அளிக்க முன்வந்தனர்.  கண்டாலாவின் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது அவர்கள் முன் வைத்த முழக்கம் என்ன தெரியுமா? "எங்கள் குழந்தைகளைக் கல்வி கற்க அனுமதிக்காவிட்டால், நாங்கள் எவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்ய மாட்டோம்," என்பதாகும். அதேபோன்று சன்னார் பெண்கள் தங்கள் மார்புகளை மூடிக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றதும், கேரள முற்போக்கு சக்திகளின் போராட்டங்களின் விளைவேயாகும்.  
இவ்வாறு சமூக சீர்திருத்த மற்றும் தேசிய இயக்கங்களாலும், விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களாலும் மற்றும் இடது முற்போக்கு சக்திகளின் போராட்டங்களாலும்  பதப்படுத்தப்பட்டிருந்த கேரளத்தில், இஎம்எஸ் தலைமையில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம், நிர்வாக சீர்திருத்தங்கள், கல்விக்கான சட்டமுன்வடிவு, ஜனநாயகத்தை விரிவுபடுத்துதல், சமூகத் துறையில் பொது நிறுவனங்களின் தலையீடு ஆகியவற்றின் மூலமாக ஒரு புதிய கேரளத்தை உருவாக்குவதற்கான பாதையை வகுத்துத்தந்தது. 
இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகத்தை விரிவுபடுத்துதல் மூலமாக நிலப்பிரபுத்துவதற்கு மரண அடி கொடுத்ததன் காரணமாகவே கேரளம் இந்த அளவிற்கு தனித்து விளங்குகிறது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நிறைவாக, உண்மையான இந்தியர்கள் யார் என்கிற கேள்வி குறித்து ஒருசிலவார்த்தைகள். ஒரே விதமான இந்தியன் என்று கூறுவதற்கில்லை. அதிலும்
குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்திய பிரச்சனைகள் முன்னுக்கு வந்திருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் அவ்வாறு கூறிட முடியாது. சுதந்திரம் பெற்ற 70ஆம் ஆண்டை நோக்கி அடி எடுத்து வைக்கக்கூடிய இன்றைய நிலையில் அனைத்து விதமான வித்தியாசமான புரிதல்களையும் அங்கீகரித்திட வேண்டியது நம் கடமையாகும்.  இந்தியாவில் வாழும் தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகளையும் பாதுகாப்பதன் மூலமாகத்தான் அவர்கள் அனைவருமே இது நம் நாடு என்ற உணர்வினை இயல்பாகப் பெறுவார்கள். இதனை கேரளத்தில் நாங்கள் ஏற்கனவே எய்திவிட்டோம்.  எனினும் இது இந்தியா முழுவதும் எய்தப்படும்போதுதான், நம் அரசமைப்புச் சட்ட மேதைகளால் அளிக்கப்பட்டுள்ள உண்மையான இந்தியாவை கட்டி எழுப்பிட முடியும். இதனை விரைவில் எய்திடுவோம் என்று நான் நம்புகிறேன்.
தங்கள் கனிவான வார்த்தைகளுக்காக நான் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(தமிழில்: ச. வீரமணி)


Sunday, December 25, 2011

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும்?--மார்கண்டே கட்ஜூ

குடியரசு தினத்தன்று பாரத ரத்னா விருதுகள் வழங்கும் பிரச்சனை இப்போது செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது. உருது கவிஞர் மிர்சா காலிப், வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தபோது பலர் அதை எதிர்த்தனர். அவர்கள் உயிருடன் இல்லை என்பதும், உயிருடன் இல்லாதவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் அதற்குக் காரணம் கூறினார்கள்.

சரியான நபர்களாக இருந்தால் அவர்கள் இறந்திருந்தபோதிலும்கூட அவர்களுக்கு விருதுகள் வழங்குவதில் தவறேதுமில்லை என்பதே என் கருத்தாகும். பாரத ரத்னா விருதுகள் கடந்தகாலங்களில் அவ்வாறு சிலர் இறந்தபின்னரும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. இதற்கு இரு எடுத்துக்காட்டுகள்: சர்தார் பட்டேலும் டாக்டர் அம்பேத்காரும் ஆவார்கள்.
கவிஞர் மிர்சா காலிப் நம் காலத்தைச் சேர்ந்த கவிஞர். ராமரைப் போன்று புராண புருஷர் அல்ல. அதேபோன்று கௌதம புத்தர் போன்று பழங்காலத்தவருமல்ல. நிலப்பிரபுத்துவ பாரம்பர்ய பழக்க வழக்கங்களினூடே அவர் வளர்க்கப் பட்டிருந்தபோதிலும், நவீனகால நாகரிகத்தின் அனுகூலங்களை உற்றுநோக்கி உள்வாங்கியிருந்ததன் மூலம் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்தவர்.

அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:

‘‘இமான் முஜே ரோக் ஹே, ஜோ கெஞ்சே ஹே முஜே குஃபர்
கபா மேரே பீச்சே ஹே, கலேசா மேரே ஆகே’’

‘கலேசா’ என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தேவாலயம். ஆனால் இங்கே அவர் நவீன நாகரிகத்தைக் குறிப்பிடுகிறார். அதேபோன்று, ‘கபா’ என்றால் மெக்காவின் புனித இடத்தைக் குறிக்கிறது. ஆனால் இங்கே அவர் நிலப்பிரபுத்துவத்தைக் குறிப்பிடுகிறார். எனவே இக்கவிதையின் உண்மையான பொருள்:

‘‘மத நம்பிக்கை என்னைப் பின்னே இழுக்கிறது, ஆனால் கடவுள் இருக்கிறாரா என்கிற ஐயம் என்னை முன்னே தள்ளுகிறது,
நிலப்பிரபுத்துவம் என் பின்னே இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னே இருக்கிறது’’
கலிப் இவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை நிராகரித்து, நவீனகால நாகரிகத்தை வரவேற்கிறார். எப்போது? 19ஆம் நூற்றாண்டின் மத்தியகால வாக்கில், இந்தியா நிலப்பிரபுத்துவத்தின் கீழ் முழுமையாக மூழ்கி இருந்த காலத்தில்.

உருது கவிதைகள் என்பவை இந்தியக் கலாச்சாரத்தின் பொக்கிஷத்திற்குள் ஒளிவீசும் ரத்தினக்கற்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. (இணையதளம் www.kgfindia.com-இல் காணப்படும் ‘உருது என்றால் என்ன’ என்கிற என் கட்டுரையைப் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.) மாபெரும் மொழியான உருதுக்கு மிகப்பெருமளவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 1947க்கு முன்னர், இந்தியாவில் உள்ள பெருவாரியான பகுதிகளில் படித்த வர்க்கத்தினரின் பொது மொழியாக உருது விளங்கியது. அவர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோ, சீக்கியர்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ - எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆயினும், 1947க்குப் பின்னர் சில சுயநல சக்திகள் உருது ஓர் அந்நிய மொழி என்றும், அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான மொழி என்றும் பொய்ப் பிரச்சாரத்தை உருவாக்கின.

மிர்சா காலிப் உருது மொழியின் உன்னதக் கவிஞர். நம் பல்வகைக் கலாச்சாரத்தின் சிறந்த பிரதிநிதி. அவர் ஒரு முஸ்லீமாக இருந்தபோதிலும், முழுமையான அளவில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர். அவருக்கு இந்து நண்பர்கள் ஏராளமாக உண்டு. அவர் இறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் நம் கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாததொரு பகுதியாக உருது இன்றும் விளங்குவதால் அவர் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2011 ஏப்ரல் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜாஷன்-இ-பஹார் முஷைரா என்னும் சிறப்புக் கூட்டத்தில்தான் கலிப் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்கிற என் வேண்டுகோளை நான் முதலில் முன்வைத்தேன். என் வேண்டுகோள் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட்டது. அவர்களில் இன்றைய மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆயினும், ஒரு முன்னணி இதழ் என்னுடைய வேண்டுகோளை ‘வெறிபிடித்த உணர்ச்சி’(‘ளநவேiஅநவேயடளைஅ படிநே நெசளநசம’) என்று விவரித்திருந்தது.
சரத் சந்திரர் சட்டோபாத்யாயா

அதேபோன்று சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். சரத் சந்திரர் தன் கதைகளில் சாதிய முறை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, மூடப் பழக்க வழக்கங்கள், (அவரது ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ரஹீன், தேவதாஸ், பிராமணனின் மகள், கிராமின் சமாஜ் கதைகளைப் பார்க்க) போன்று இன்றளவும் இந்தியாவைப் பீடித்துள்ள கொடிய சமூகக் கேடுகள் மீது மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்திருந்தார்.

கல்கத்தா டவுன் ஹாலில் 1933இல் சரத் சந்திரரைக் கௌரவிக்கும் வண்ணம் நடைபெற்றதொரு கூட்டத்தில் சரத் சந்திரர் கூறியதாவது:
‘‘நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். இவ்வாறு நான் கடன்பட்டிருப்பது எனக்கு முன் இத்துறையில் தடம் பதித்துள்ள முன்னோர்களுக்கு மட்டும் அல்ல. இந்த உலகத்தைச் சிருஷ்டித்து, அதற்குப் பிரதிபலனாக எதுவுமே பெறாத, தங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லாத சாமானிய மக்களுக்கும், யாரும் கேட்பாரற்றுக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வரும் நலிவடைந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்படியும், தங்களுக்காக சமூகத்தில் குரல் கொடுக்கும்படியும் அவர்கள்தான் எனக்கு உத்வேகத்தை அளித்தார்கள். இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொண்ணாக் கொடுமைகளை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஒவ்வோராண்டும் வசந்தம் வருவது என்னவோ உண்மைதான். ஆனால் அதன் அழகை, புதிதாகப் பூக்கும் மலர்களின் இனிய நறுமணத்தைச் சுவாசித்திட, குயில்களின் பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் பார்க்க முடியாத வண்ணம் என் பார்வை சிறைப்படுத்தப்பட்டிருந்தது.’’

நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சராசரியாக ஒவ்வொரு நாளும் 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சுகாதாரக் கவனிப்பின்மை, வீட்டுவசதியின்மை, கல்வியின்மை போன்று பிரச்சனைகள் பல்வேறு ரூபங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சரத் சந்திரரின் இந்த உரையானது எழுத்தாளர்கள் பலரை இன்றளவும் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளது.

சுப்பிரமணிய பாரதியார்
அதேபோன்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், முழுமையான தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய மாபெரும் தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

பெண்கள் விடுதலைக்கு ஆதரவாக பாரதி எழுதிய சக்திவாய்ந்த கவிதையை இங்கே தருகிறேன். நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சமயத்தில் ‘ஹின்சா விரோதாக் சங் (எதிர்) மிர்சாபூர் மோட்டி குரேஷ் ஜமாத் மற்றும் பலர்’ வழக்கில் 2008 மார்ச் 14 அன்று அளித்திட்ட தீர்ப்பில் இதனை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன் றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்.

பாரதியின் மற்றொரு கவிதை:

கும்மியடி தமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி.

ஏட்டையும் பெண்கள் தொழுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் கலிபையும், சரத் சந்திரரையும் சுப்பிரமணிய பாரதியையும் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாம் எந்த அளவிற்குமிகவும் கீழ்த்தரமான கலாச்சார மட்டத்தில் சிக்கிக்கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம் என்பதனையே இது காட்டுகிறது. நாம் நம் உண்மையான வீரர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்கிறோம், மாறாக மேலெழுந்தவாரியானவர்களை உயர்த்திப் பிடிக்கிறோம். இந்தியாவில் இன்றைய தலைமுறை அநேகமாக முற்றிலும் பண்பாடிழந்து விட்டது என்று கூறுவதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நடிகர்கள்-நடிகைகள், கிரிக்கெட் மற்றும் மேலெழுந்தவாரியான விஷயங்கள் என்றாகிவிட்டன.
இன்றைய இந்தியா எந்தத் திசையில் செல்வதென்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு நல்ல திசைவழியைக்காட்டி நாட்டு மக்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்பவர்களே இப்போது நமக்குத் தேவை. அத்தகையோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இல்லை. கிரிக்கெட் விளையாடுபவர்கள், திரைப்பட நடிகர்கள் போன்று எவ்வித சமூகப் பிரக்ஞையுமற்றவர்களுக்கு கொடுப்பது என்பது விருதினையே கேலிக்குரியதாக ஆக்கிவிடும்.

(மார்கண்டே கட்ஜூ,
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும்,
இந்திய பிரஸ் கவுன்சில் இன்னாள் தலைவருமாவார்.)
நன்றி: தி இந்து நாளிதழ், 21.12.11
தமிழில்: ச.வீரமணி

Monday, November 28, 2011

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன்."--நீதியரசர் மார்கண்டே கட்ஜு

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன். ஊடகங்கள் மீதான என் விமர்சனம் அவை சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.’’

நான் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அளித்துள்ள பேட்டிகளிலும், பல்வேறு செய்தித்தாள்களில் எழுதியுள்ள கட்டுரைகளிலும் ஊடகங்கள் குறித்த என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ஆயினும், ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட நான் கூறியவற்றில் சில பிரச்சனைகள் குறித்து மேலும் தெளிவுபடுத்துமாறும் சில பிரச்சனைகள் குறித்து மேலும் விளக்கமாகக்கூறுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் கூறியவை குறித்து சிலர் கருத்துமாறுபாடு கொண்டிப்பதால், அவை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இன்றைய இந்தியா நம்முடைய வரலாற்றில் ஓர் இடைமாற்றக் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருக்கிறது. இடைமாற்றம் என்பது நிலப்பிரபுத்துவ வேளாண் சமூகத்திலிருந்து நவீன தொழில்மய சமூகத்தை நோக்கிய திசைவழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிகவும் வலிதரக்கூடிய வேதனைமிகுந்த கால கட்டமாகும். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் அடியோடழிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆயினும் புதிய நவீன தொழில்மய சமூகம் இன்னமும் முழுமையாகவும் உறுதியாகவும் நிறுவப்பட வில்லை. பழைய நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் புதிய நவீன சிந்தனைகள் அதன் இடத்தில் இன்னமும் சரியாக அமர்த்தப்படவில்லை. அனைத்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்தும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியர் மேக்பெத்தில் கூறியதைப்போல், ‘‘அழகு அசிங்கமாகிறது, அசிங்கம் அழகாகிறது.’’ (‘‘Fair is foul and foul is fair’’).
ஐரோப்பிய வரலாற்றைப் படிக்கும் எவரொருவரும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை, நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து நவீன சமூகமாக மாறிய இடைமாற்றக் காலத்தில், மிகுந்த கொந்தளிப்பு, குழப்பம், யுத்தங்கள், புரட்சிகள், தாறுமாறான ஒழுங்கற்ற நிலை, சமூகத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், அறிவுஜீவிகள் மத்தியில் மிகுந்த கிளர்ச்சிநிலை முதலானவைகள் இருந்ததை உணர முடியும். இவ்வாறு ஏராளமான மாற்றங்கள் நடைபெற்ற பின்னர்தான் ஐரோப்பாவில் நவீன சமூகம் உருவானது. அதுபோன்றதொரு கொந்தளிப்பு நிலை தற்போது இந்தியாவில் இருக்கிறது. நம்முடைய நாட்டின் வரலாற்றில் அத்தகைய மிகவும் வலியும் வேதனையும் அளிக்கக்கூடிய காலகட்டத்தினூடே நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக இதுபோன்றதொரு நிலை அடுத்து 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு இருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். இந்த இடைமாற்றமானது மக்களுக்கு எவ்விதமான வலியையோ வேதனையையோ அளிக்காது உடனடியாக நடைபெற வேண்டும் என்று நாம் விரும்பினாலும் துரதிர்ஷ்டவசமாக கடந்தகால வரலாறு அப்படி இருந்ததில்லை என்பதே எதார்த்த உண்மை.
இப்படிப்பட்ட இடைமாற்றக் காலத்தில் மனிதர்களின் சிந்தனைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. எனவே இவ்வாறு மனிதர்களின் சிந்தனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகங்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சிந்தனைகள் பௌதீக சக்தியாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்னும் சிந்தனைகளும் மதச் சுதந்திரம் (மதச்சார்பின்மை) என்னும் சிந்தனையும் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் வலுவான பௌதீக சக்திகளாக மாறின. இவ்வாறான இடைமாற்றக் காலத்தின்போது, ஐரோப்பாவில் ஊடகங்கள் (அப்போது ஊடகங்கள் என்றால் பத்திரிகைகள் மட்டுமே) நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவை நவீன ஐரோப்பாவாக மாற்றியதில் மாபெரும் அளவில் வரலாற்றுப் பங்களிப்பினை ஆற்றின.
என்னுடைய அபிப்பிராயமானது, இதேபோன்று முற்போக்கானதொரு பங்களிப்பினை இந்திய ஊடகங்களும் ஆற்றிட வேண்டும் என்பதேயாகும். சாதீயம், வகுப்புவாதம், மூடநம்பிக்கைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற பிற்போக்கான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் மற்றும் நடைமுறைகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலமும், நவீன, பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகள், மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதன் மூலமுமே இவற்றைச் செய்திட முடியும். ஒரு காலத்தில் நம் ஊடகங்கள் நம் வரலாற்றில் மாபெரும் பங்களிப்பினைப் புரிந்துள்ளன.
இந்திய ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஒலி-ஒளி ஊடகங்கள் இத்தகைய முற்போக்கான மற்றும் சமூகத்தின் பொறுப்பான பங்களிப்பினைச் செய்யவில்லை என்று நான் விமர்சித்ததை அடுத்து, அவ்வூடகங்களில் ஒரு பிரிவினரால் மிகவும் ஆவேசமாக நான் தாக்கப்பட்டேன். நான் அரசாங்கத்தின் ஏஜண்டாகச் செயல்படுவதாக தனிப்பட்ட முறையில் கூட ஒருசில ஊடகங்கள் என்னைத் தாக்கின. ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து அக்கறையுடன் சில பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோது, அவை அக்கறையுடன் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஊடகங்களை விமர்சித்ததன் மூலம் அவை தங்கள் செயல்பாட்டின் தன்மைகளை மாற்றிக்கொள்ள அவை தூண்டலாம் என்றுதான் நான் கருதினேனேயொழிய, மாறாக அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் அதைச் செய்யவில்லை. இடைமாற்றக்காலத்தில் இந்திய ஊடகங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியான பங்களிப்பு இருக்கிறது. இத்தகைய வரலாற்றுக் கடமையை ஊடக நண்பர்களுக்கு நான் நினைவு படுத்த விரும்பினேன். என்னுடைய விமர்சனத்தைச் சரியான உணர்வுடன் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருசில ஊடகங்கள் எனக்கெதிராக வசைமாரி பொழியத் தொடங்கியுள்ளன. என்னை சர்வாதிகார அரக்கன் என்பதுபோலக்கூட சில குறிப்பிட்டுள்ளன.
ஊடகங்கள் என்னை அவற்றின் மீது அக்கறை கொண்ட நண்பனாகவே கருத வேண்டும். நான் அவர்களை விமர்சித்தேன். ஏனெனில், அவை தங்களுடைய பலவிதமான குறைபாடுகளைக் கைவிட்டு, இன்றைக்கும் இந்திய மக்களின் மதிப்பினைப் பெற்றுள்ள ஐரோப்பிய பத்திரிகைகள் போன்று, செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நம் நாட்டின் மக்கள் தொதகையில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் இருக்கிறதென்றும், விலைவாசிகள் விண்ணைநோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்றும், மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதி, கல்வி வசதி கிடைத்திட வில்லை என்றும் நான் குறிப்பிட்டேன். அதேபோன்று கவுரவக் கொலைகள், வரதட்சணைச் சாவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வெறித்தனமான மூட மத நம்பிக்கைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான சமூகப் பழக்க வழக்கங்கள் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற ஆழமான பிரச்சனைகள் குறித்து எதுவும் கூறாது, இந்திய ஊடகங்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்கு வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். உதாரணமாக, சினிமா நடிகர்களின் வாழ்க்கை, ஃபேஷன் அணிவகுப்புகள், பாப் மியூசிக், டிஸ்கோ நடனங்கள், கிரிக்கெட் அல்லது ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் நிகழ்ச்சிகளைக் காட்டுகின்றன என்று விமர்சித்திருந்தேன்.
ஊடகங்கள் மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டவேண்டும்தான். ஆனால் அவை தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்குப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஒதுக்கிவிட்டு, வெறும் 10 விழுக்காடு அளவு மட்டும் சமூகப் பொருளதார அம்சங்களுக்கு ஒதுக்குகின்றன. மக்களின் உண்மையான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறாது மேலே கூறியவாறு மக்களுக்குச் சம்பந்தம் இல்லாத சினிமா நடிகர்களின் வாழ்க்கை, டிஸ்கோ நடனங்கள் போன்ற விஷயங்கள் மீது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. இவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தராததற்காகவும், மூட நம்பிக்கைகளை விதைப்பதற்காகவும் தான் நான் ஊடகங்களை விமர்சித்தேன்.
எவரொருவரும் விமர்சனத்தைக்கண்டு அஞ்சக் கூடாது. அதேபோன்று அவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது சினங்கொள்ளவும் கூடாது. மக்கள் என்னை அவர்கள் விரும்பும் அளவிற்கு விமர்சிக்கலாம். நான் அதற்காகக் கிஞ்சிற்றும் சினங்கொள்ள மாட்டேன். உண்மையில் அதன் மூலம் நான் பயனடைவேன்.
உண்மையில் எப்போதும் நான் ஒரு சுதந்திரப் பற்றாளனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு ஆதாரம் வேண்டுமென்று விரும்புவோர் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நான் நீதிபதியாக இருந்த காலத்தில் அளித்திட்ட தீர்ப்புகளைக் கண்ணுற்றால் தெரிந்து கொள்ளலாம். நீதிபதிகள் என்போர் மக்களின் சுதந்திரத்தைக் காப்பவர்கள் என்றும், இதனை உயர்த்திப்பிடிக்க நீதிபதிகள் தவறுவார்களானால் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து நழுவியவராவார்கள் என்றும் பல முறை நான் என் தீர்ப்புகளில் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆயினும் சுதந்திரம் என்பது எவரொருவரும் தாங்கள் விரும்பிய எதனையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அனைத்து சுதந்திரங்களும் பொது நலன் மற்றும் பொறுப்புக்களுக்குக் குந்தகம் விளைவிக்காதவாறு தேவையான சில கட்டுப்பாடுகளையும் கொண்டவைகளாகும்.
இதன் அடிப்படையில் சுய முறைப்படுத்தல் (self regulation) குறித்து இப்போது நாம் விவாதிக்கலாம்.
தற்சமயம தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் நிகழ்ச்சிக்ளை முறைப்படுத்தக்கூடிய விதத்தில் எவ்விதமான அதிகாரக் குழுமமும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்திய பிர° கவுன்சில் பத்திரிகைகள் மீது மட்டுமே ஆளுகை செலுத்த முடியும். இதிலும் பத்திரிகையாளர் எவரும் தங்கள் பத்திரிகை தர்மத்தை மீறி செயல்பட்டார் என்று மெய்ப்பிக்கப்படுவாரானால் இந்திய பிர ஸ்
கவுன்சில் அவருக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை என்பது என்ன தெரியுமா? மன்னித்தல் (admonition)அல்லது கண்டனம் (censure) என்பது மட்டுமே. இந்திய பிரஸ்
கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களையயும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
பிரஸ் கவுன்சிலின் கீழ் கொண்டுவரப்படுவதை தொலைக்காட்சி - வானொலி ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. எங்களை நாங்களே சுயமாக முறைப்படுத்திக் கொள்வோம் என்று அவை கூறுகின்றன. நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட அத்தகைய உரிமைகள் கிடையாது. அவர்கள் நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கண்டிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு. வழக்குரைஞர்களைக் கட்டுப்படுத்த இந்திய வழக்குரைஞர் சங்கம் இருக்கிறது. மருத்துவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் கீழ் வருகிறார்கள். இதேபோன்று நாட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு அமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார்கள். எலக்ட்ரானிக் ஊடகவியலாளர்கள் மட்டும் இவ்வாறு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறார்கள்.
உண்மையில் சுய முறைப்படுத்தல் என்று எதுவும் கிடையாது. அது ஒரு முரண்தொடையாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். இதற்கு ஊடகங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.
(நன்றி: தி இந்து நாளிதழ், 16.11.11.)
(தமிழில்: ச.வீரமணி)