Saturday, March 3, 2018

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்க!



பாகிஸ்தானுடனான மோடி அரசாங்கத்தின் கொள்கையானது, எப்பக்கம் செல்வதென்று வழிதெரியாது, விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்டில் இந்த அரசாங்கம் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை விலக்கிக்கொண்டபின், இதுவரையிலும், ‘பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும்வரை பேச்சுவார்த்தைகள் கிடையாது’ என்ற நிலையில் உறுதியாக இருந்து வருகிறது. 2016 செப்டம்பரில் நடைபெற்ற எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு, இந்தியாவின் உறுதியான பதிலடி என்று தம்பட்டம் அடித்து வந்தது. அப்போது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கரால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, தொடர்ந்த போர்நிறுத்த மீறல்களுக்குப்பின்னர், இதுவே சரியான பதிலடி என்று கூறப்பட்டது.ஆயினும், துல்லியத் தாக்குதல்கள் நடைபெற்றதற்குப் பின்னரும்கூட, எல்லைப் பகுதியிலும், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையிலும் துப்பாக்கிச் சண்டைகளும், குண்டு வீச்சுகளும் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. 2003 நவம்பரில் போர் நிறுத்தம் அறிவித்தபின்னர், 2017ஆம் ஆண்டுதான் இதுவரை நடைபெற்ற அத்துமீறல்களிலேயே அதிக அளவிலான எண்ணிக்கையைக் கண்டிருக்கிறது. எல்லை தாண்டிய பகுதிகளில் 860 நிகழ்வுகளும், சர்வதேச எல்லையில் மேலும் 120 நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் – அதாவது 2017 டிசம்பர் மற்றும் 2018இன் முதல் இரண்டு மாதங்களில் – நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலேயே 400 அத்து மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. நடைபெற்றுள்ள மோதல்களில் பாகிஸ்தானின் தரப்பில் 23 படைவீரர்களை இழந்திருப்பதாகக் கூறப்படும் அதே சமயத்தில்,இந்தியாவின் தரப்பில் 16 படைவீரர்களை இழந்திருக்கிறோம்.தொடர்ந்து வெடிகுண்டு மற்றும் பீரங்கிப்படைத் தாக்குதல்கள் இரு பக்கங்களிலும் எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றன. இந்தியாவின் தரப்பில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 22இலிருந்து, உரி பகுதியில் வாழ்ந்துவந்த 2000 கிராமத்தினர், உரி நகரில் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் அவ்வப்போது மூடப்பட்டு வருகின்றன, மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகச் சீர்குலைந்துள்ளன.

ராணுவம் - பிஎஸ்எப் படை முகாம்கள் மீது தாக்குதல்
துல்லியத் தாக்குதல்கள், இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்களை நிறுத்திடவில்லை. சமீபத்திய தாக்குதல் என்பது ஜம்முவில் சஞ்ச்வான் இராணுவ முகாமிலும், ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முகாமிலும் நடத்தப்பட்டிருக்கின்றன.எல்லைப்பகுதியில் நடைபெறும் அனைத்துக் கிளர்ச்சிகளும், பிரிவினைக் கோரிக்கைகளும் பாகிஸ்தானால் உருவாக்கி அனுப்பப்பட்டவை என்கிற மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான பார்வையானது, ஜம்மு-காஷ்மீருக்குள் ஓர் அரசியல் பேச்சுவார்த்தையை நடத்திடுவதற்கான எந்தவொரு ஆழமான நடவடிக்கையையும் எடுப்பதிலிருந்து தடுத்துவருகிறது. அப்பகுதியில் அது மேற்கொண்டுவரும் முழுமையான இராணுவ அணுகுமுறையானது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் முதல்வர் மெஹபூபா முப்தி, “நடைபெற்றுவரும் ரத்தக்களறிக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமானால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை அவசியமாகும்…. பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், பேச்சுவார்த்தை நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை,” என்று உரையாற்றியிருக்கிறார். இதனை பாஜகவும் மத்திய அரசும் உடனடியாக நிராகரித்திருக்கின்றன. பாஜகவின் பொதுச் செயலாளரான ராம் மாதவ், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தைகளும் பின்னிப்பிணைந்து போக முடியாது என்று உடனடியாகக் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார்.

அப்பாவிகள் பலி அதிகரிப்பு
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதன்மூலம், மோடி அரசாங்கம் என்னசெய்வதென்று தெரியாது, விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முடிவேதும் ஏற்படவில்லை. எல்லைப் பகுதியில் அறிவித்திருந்த போர்நிறுத்தம் கந்தல் கந்தலாகியிருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய கொள்கை காரணமாக, பாதுகாப்புப் படையினரும், அப்பாவி மக்களும் பலியாகிக் கொண்டிருப்பது என்பதுதான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.மத்திய மோடி அரசாங்கம், இத்தகைய கடிவாளமிட்ட மோதல் நிலைப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டியது உடனடித் தேவையாகும். முதலாவதாக, எல்லைப் பகுதியிலும் ஜம்மு-காஷ்மீர் எல்லையிலும் போர் நிறுத்தம் மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட, பேச்சு வார்த்தைகள் அவசியம். இதற்கு, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். எல்லை தாண்டிவரும் தீவிரவாதிகளின் அத்துமீறல்களை ஒடுக்கிட, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்துவதுடன் இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.

அரசியல் தீர்வுக்கு அவசியம்
அதே சமயத்தில், அரசாங்கம் பாகிஸ்தானுடன் ஓர் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். மத்திய அரசாங்கத்தின் “பேச்சுவார்த்தைகள்” இல்லை என்கிற நிலை தற்போது தொடர்ந்தபோதிலும், இரு நாட்டின் தேசிய பாதுகாப்புஆலோசகர்கள் மூன்றாவது நாடுகளில் சந்தித்திருக் கிறார்கள். இந்தியா, மார்ச் மூன்றாவது வாரத்தில் தில்லியில் நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் முறைப்படி அமையாத அமைச்சரகக் கூட்டத்தில் (informal ministerial meeting) பங்கேற்குமாறுபாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் அழைக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும்தொடங்குவது எப்படி என்பதற்கான பேச்சுவார்த்தை களும் தொடரப்பட வேண்டும். மோடி அரசாங்கம் தன்னுடைய வீறாப்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் காஷ்மீர்பிரச்சனை மீதான தேசபக்தியுடனான நிலைப்பாடு எதுவாகஇருந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பது, ஜம்மு – காஷ்மீர் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அவசியமானதொரு அம்சம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிப்ரவரி 28, 2018
தமிழில்: ச.வீரமணி



Sunday, February 25, 2018

மோடிகளின் மோசடியும் சலுகைசார் முதலாளித்துவமும்





தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும் கடந்த ஐந்தாண்டுகளில், 8,670 வழக்குகளில் 612.6 பில்லியன் (61ஆயிரத்து 260 கோடி) ரூபாய் அளவிற்கு ‘கடன் மோசடி’ நடைபெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீரவ் மோடியும், மொகுல் சோக்சியும் பாஜகவின் தலைவர்கள் சிலருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது பலருக்கு நன்கு தெரியும். இந்த அரசாங்கத்தால் மிகவும் பயனடைந்துவரும் அனில் அம்பானிக்கு இவர்கள் மிகவும் வேண்டியவர்கள். சலுகைசார் முதலாளித்துவமும் ஊழல் அரசியல்வாதிகளுடன் அதற்குள்ள பிணைப்பும் நாட்டில் செயல்படா சொத்துக்கள் மற்றும் வங்கித்துறையின் நெருக்கடிக்கு மூலவேர்களாகும்.


இந்திய வங்கித்துறையின் வரலாற்றில் முன்னெப்்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் வெட்கங்கெட்டமுறையிலும் அதிர்ச்சியளிக்கக்கூடியவிதத்திலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரும்அளவில் மோசடி நடந்திருக்கிறது. இந்தியாவின்பணக்காரர்கள் வரிசையில் 85ஆவது நபராக இருக்கக்கூடியபேர்வழியான நீரவ் மோடியும் அவரது மாமா மொகுல்சோக்சி என்பவரும் வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச்சதி செய்து,பலமுறை போலி புரிந்துணர்வு கடிதங்களைப் பெற்று 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப்பணத்தை மோசடியாகக் கையாடல் செய்திருக்கின்றனர்.2011ஆம் ஆண்டிலேயே துவங்கிய இவர்களின் மோசடி, இப்போது 2017இல் மோடியின் ஆட்சியில் உச்சத்திற்கு வந்திருக்கிறது. மோடியின் புதிய இந்தியாவில் “வணிகத்தை எளிதாகச் செய்வது” என்கிற முழக்கத்தின் பொருள் இதுதானோ?
மோடியின் நிகழ்ச்சியில்...
மோடி அரசாங்கத்தின்கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள உத்திகளின்படி, நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் (சிபிஐ-ஆல்)அவர்கள் ஈடுபட்ட கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பாகப் புலன்விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாகவே, ஜனவரி முதல்வாரத்திலேயே, இந்நாட்டை விட்டு மிகவும் சௌகரியமானமுறையில் வெளியேறிவிட்டார்கள். இதேபோன்றுதான் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையாஆகியோரின் வழக்குகளிலும் நடைபெற்றன. இதில் மிகவும் கபடத்தனமான செயல் என்னவென்றால், இவ்வாறுமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நீரவ் மோடி, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியுடனும் இதரஇந்திய வர்த்தகப் பிரமுகர்களுடனும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் என்பது அதோடுமுடிந்துவிடவில்லை. அது பல வங்கிகளில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும்கடந்த ஐந்தாண்டுகளில், 8,670 வழக்குகளில் 612.6 பில்லியன் (61ஆயிரத்து 260 கோடி) ரூபாய் அளவிற்கு ‘கடன் மோசடி’ நடைபெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கறார் விதிமுறைகள் கை கழுவப்பட்டது
வங்கித்துறையில் தாராளமயம் மற்றும் வங்கிகள் எப்படியாவது இலாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான நெறிமுறைகளையும் மீறிஅளிக்கப்பட்டுள்ள உத்தரவுகளும் இவ்வாறு கடுமையான பாதிப்புகளை உருவாக்கி இருப்பதையே நடைபெற்றுள்ள ஊழல்கள் காட்டுகின்றன. வங்கிகள் சமீப காலத்தில் மேற்கொண்ட அதிவேகமான தாராளமய நடவடிக்கைகள் இடர்மிகுந்த முதலீடுகளை ஏற்பதற்கும், அவை வழக்கமாக மேற்கொள்ளும் நுண்ணிய கறாரான விதிமுறைகளை கைகழுவுவதற்கும் இட்டுச் சென்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ளதுபோலவே பல வங்கிகளிலும் ஊழல்கள் நடைபெற்றிருப்பதற்கு, அடிப்படையான காரணம் ஆட்சியாளர்கள் பின்பற்றும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் என்று கூறுவதற்குப் பதிலாக, நவீன தாராளமயக் கொள்கையைத் தூக்கிப்பிடித்திடும் பேர்வழிகள் இப்போதுதங்களுக்கு கடன்கள் வழங்கிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், பொதுத்துறை வங்கிகளையும் தாக்கத் துவங்கியுள்ளனர். பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும் குரல்எழுப்பத் துவங்கியுள்ளனர். தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், வங்கிகளில் ஊழல் நடைபெறுவதைத் தவிர்த்திட, அவற்றின்மீது தனியாரின் பங்களிப்பினைஅதிகரித்திட வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
தனியார் வணிக வங்கிகளின் செயல்பாடுகள்...
இவ்வாறு கூறுபவர்கள் கடந்த காலங்களில் தனியாரிடம் இருந்த வணிக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வது நலம் பயக்கும். சுதந்திரம் பெற்றபின் 1969வரை செயல்பட்டுவந்த 559 தனியார் கமர்சியல்வங்கிகள் தகர்ந்து தரைமட்டமாகின. இதன் காரணமாக அவற்றில் முதலீடு செய்திருந்த சேமிப்பாளர்கள்நிலை அதோகதியானது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைச் சந்தித்த 25 தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன. இதில், “புதிய தலைமுறை தனியார் வங்கி” என்றுகூறப்பட்ட தி குளோபல் டிரஸ்ட் வங்கியும் அடக்கம்.வங்கி ஊழல்களுக்கு மூலக் காரணம், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதேயாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் ஆய்வுசெய்திடும் துறை(இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்) இதுகுறித்து வாயைத் திறக்காமல் மவுனம் சாதிக்கிறது. வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும்(NBFCs-Non-Banking Financial Companies)சுயமாகவே சான்றிதழ்கள் கொடுப்பது அனுமதிக்கப்பட்டன. இவை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று விதி இருந்தாலும், இவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது நடைமுறையில் பெயரளவில்தான் இருந்தன.
சுக்குநூறான மோடியின் வீறாப்பு
வங்கித்துறையில் நிலவிவந்த போட்டிச்சூழலானது எப்படியாவது இலாபம் ஈட்டவேண்டும் என்கிற குறிக்கோளுடன் பல பொதுத்துறை வங்கிகளை, நுண்ணிய முறையில்ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாது, இடர்மிகுந்த வழிகள்பலவற்றை மேற்கொள்வதற்கு உந்தித்தள்ளின.மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள ரபேல் போர்விமானங்கள் வாங்கியது தொடர்பான பேரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல் மறைத்திருப்பதைத் தொடர்ந்து, இப்போது நீரவ் மோடி மற்றும் மொகுல் சோக்சி ஆகியோரின் கையாடல்களும் சேர்ந்து ஊழலற்றஆட்சியை அளித்திடுவோம் என்கிற மோடி அரசாங்கத்தின்வீறாப்பை சுக்குநூறாக்கி இருக்கிறது. நீரவ் மோடியும், மொகுல் சோக்சியும் பாஜகவின் தலைவர்கள் சிலருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது பலருக்குநன்கு தெரியும். இந்த அரசாங்கத்தால் மிகவும் பயனடைந்துவரும் அனில் அம்பானிக்கு இவர்கள் மிகவும் வேண்டியவர்கள். சலுகைசார் முதலாளித்துவமும் ஊழல் அரசியல்வாதிகளுடன் அதற்குள்ள பிணைப்பும் நாட்டில் செயல்படா சொத்துக்கள் மற்றும் வங்கித்துறையின் நெருக்கடிக்கு மூலவேர்களாகும்.
(பிப்ரவரி 21, 2018)
 தமிழில்: ச.வீரமணி


Sunday, February 11, 2018

ஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

தலையங்கம்
பிரதமரும், பாஜகவும் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரேசமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சமயத்தில், ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது தொடர்பாக ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். அப்போதுதான் அரசியல் கட்சிகள் மத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக ஒரு கருத்தொற்றுமைக்கு வர முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
ஜனநாயக விரோதமானது
அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் அரசின் கஜானாவிற்கு அதிக செலவு பிடிக்கிறது என்றும் எனவே ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தலாம் என்றும் இவர்களால் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு முன்பு அமல்படுத்தப்படும்தேர்தல் நடத்தை விதி‘ (‘Model Code of Conduct’) காரணமாக, வளர்ச்சித்திட்டங்களின் கீழான நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைகின்றன என்றும் இவர்கள் இதுகுறித்து விவாதத்தை முன்வைக்கிறார்கள். மேலும், ஒவ்வோராண்டும் தேர்தல்கள் நடைபெறுவதால் மனிதவளம் மீதுபெரும் சுமை ஏற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரேசமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள், இயற்கையில் தொழில்நுட்பரீதியானதாகும் அல்லது நடைமுறைசாத்தியமற்றதாகும். ஒரே நேரத்தில் தேர்தல் என முன்வைக்கப்படும் கருத்தாக்கம் என்பது அடிப்படையில் ஜனநாயக விரோதமானது என்பதாலும் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையின் ஆணிவேரையே பிடுங்கி எறியக்கூடியது என்பதாலும்தான் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது, அரசாங்கங்கள் நாடாளுமன்ற/சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து தங்களைக் கழற்றிக்கொள்வதற்கு இட்டுச்செல்லும். இது அரசமைப்புச் சட்டத்தின் கீழான பொறுப்புகளை மீறும் செயலாகும். அரசமைப்புச்சட்டத்தின்கீழ், ஓர் அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது தோல்வி அடைந்தாலோ அல்லது நிதிச்சட்டமுன்வடிவில் தோல்வி அடைந்தாலோ அந்த அரசு ராஜினாமா செய்யக் கடமைப்பட்டதாகும். அதன்பின்னர் மாற்று அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அவை கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற மக்களவைக்கோ அல்லது மாநில சட்டமன்ற பேரவைகளுக்கோ அரசமைப்புச்சட்டத்தின்கீழ் நிலையான பதவிக்காலம் நிர்ணயிக்கப்படவில்லை.
கொடூரமான முன்மொழிவு...
கொல்லைப்புற ஏற்பாடு...
ஒரேசமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக, ஏராளமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக, நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று, மக்களவைக் கலைக்கப்படுவது தவிர்க்கப்படமுடியாத நிலை உருவானால் மற்றும் மீதமுள்ள மக்களவைக்கான பணிக்காலம் குறுகியதாக இருக்குமானால், அத்தகு சமயங்களில் மீதமுள்ள காலத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை நீடித்திடலாம் என்பதாகும். இதற்காக அடுத்த தேர்தல் நடந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் புதிய அமைச்சரவை அமையும்வரைக்கும், குடியரசுத் தலைவர், தனக்கு அறிவுரைகள் வழங்குவதற்காக தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு ஓர் அமைச்சரவையை அமைத்துக்கொள்வாராம். இத்தகைய மிகவும் கொடூரமான முன்மொழிவு குடியரசுத்தலைவரை, ஆட்சியை நடத்திடும் தலைவராக மாற்றிடும். இது, நாட்டை ஆளுவதற்காக, குடியரசுத் தலைவரைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரும் ஏற்பாடேயாகும்.இதுதொடர்பாக மற்றொரு அனுமானமும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால், இவ்வாறு ஓர் அவை கலைக்கப்பட்டால், அந்த சமயத்தில் அதன் மீதமுள்ள பணிக்காலம் அதிக காலத்திற்கானதாக இருக்குமாயின், தேர்தல் என்பது மீதம் உள்ள பணிக்காலத்திற்கு மட்டும்தான் நடைபெறுமாம். அதாவது, மக்களவை இரண்டு ஆண்டு காலம் நீடித்திருந்தபின் கலைக்கப்படுமாயின், பின்னர் நடைபெறவிருக்கும் தேர்தலின் மூலம் புதிதாகப் பணியேற்பவர்கள் மீதமுள்ள மூன்று ஆண்டு காலத்திற்குத்தான் பொறுப்பிலிருப்பார்கள். எனவே, உண்மையில் இவ்வாறு அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுமாயின், இவர்கள் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கான நோக்கமே அடிபட்டுப்போகிறது. அதேபோன்று, சட்டமன்ற பேரவைகள் தன்னுடைய பணிக்காலத்தில் பெரும்பகுதி கழிந்தபின்னர், கலைக்கப்படுமாயின், மீதமுள்ள பணிக்காலத்திற்கு அந்த மாநிலத்தின் ஆளுநர், ஆட்சியை நடத்திடுவார். இந்த ஏற்பாடும் மத்திய ஆட்சி அங்கே கொண்டுவரப்படுகிறது என்பதன் பொருளேயாகும்.
அடிப்படை உரிமையை பறிக்கும்
ஆயுளை வெட்டுவதும் நீடிப்பதும்
மக்களவையையும் மாநில சட்டமன்றப் பேரவை களையும் சீரமைத்திடுவதற்காக முன்வைக்கப்படும் மற்றொரு வழி, இதற்காக சில சட்டப் பேரவைகளின் காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது என்பதாகும். உதாரணமாக, நிதி ஆயோக், அளித்துள்ள முன்மொழிவில் திரிபுரா மாநில பேரவையின் பணிக்காலத்தை 15 மாதங்களுக்கு வெட்டியும், பீகார்மாநில பேரவையின் பணிக்காலத்தை 13 மாதங்களுக்கு நீட்டித்தும் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு ஒரு பேரவையின் பணிக்காலத்தை வெட்டுவதோ அல்லது நீட்டிப்பதோ மிகவும் ஜனநாயக விரோதமான செயலாகும், நாட்டின் குடிமக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையைப் பறித்திடும் செயலாகும். ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே தந்திரமானவிதத்தில் பல்வேறு யோசனைகளையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முன்மொழிந்திருக்கிற மற்றுமொரு பரிந்துரை என்னவெனில், ஓர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், அப்போதே அவையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இதன் பொருள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்தை அப்புறப்படுத்து வதற்காக தாங்கள் பிரயோகிக்க இருக்கும் உரிமையின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதோடு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நிபந்தனையும் விதிப்பதாகும். நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் ஆட்சிக்காலம் குறித்த இத்தகைய எண்ணவோட்டங்கள் ஆளும் வர்க்கங்களின் எண்ணவோட்டங்களேயாகும். இவை நவீன தாராளமயக்கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போகின்றவை களாகும்.
கூட்டாட்சி அமைப்பின் மேன்மை
நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கும் உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதையோ, அல்லது பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் மாநில அரசாங்கத்தை மத்திய அரசு கலைத்துவிட்டு, புதிதாகத் தேர்தல் நடத்துவதையோ ஏற்க முடியாது.இந்தியா பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பல்வேறு கலாச்சாரங்களுடன் உள்ள மாபெரும் நாடாகும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் கூட்டாட்சித்தத்துவத்துடன் அமைந்துள்ள அரசியல் ஜனநாயகம்தான் இங்கே நிலைத்துநிற்க முடியும். பல்வேறு மாநிலங்களுக்கும் பல்வேறு சமயங்களில் தேர்தல்கள் நடைபெறுவது கூட்டாட்சி அமைப்பின் கூறுகளில் ஒன்றாகும்.பாஜகவின்ஒரே தேசம், ஒரே தேர்தல்என்கிற முழக்கமானது, அக்கட்சி, “ஒரே தேசம், ஒரேகலாச்சாரம், ஒரே மொழிஎன்று நம்பிக்கொண்டிருப்ப துடன் ஒத்துப்போகின்ற ஒன்று. அரசமைப்புச்சட்டத்தைத் திருத்தி, ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டுமென்கிற கருத்தாக்கம், மத்திய எதேச்சதி காரத்துவத்தையே வளர்த்திடும். இது உறுதியுடன் எதிர்க்கப்பட்டு, முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
பிப்ரவரி 7, 2018
தமிழில்: .வீரமணி