Sunday, April 7, 2013

பொது முதலீடே சரியான கொள்கையாகும்



பிரதமர், இந்தியத் தொழில் அதிபர்கள் மாநாட்டிலும் ஆண்டுப் பேரவைக் கூட்டத்திலும் உரையாற்றினார். அப்போது அவர், ‘எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறதுஎன்பது போன்ற கருத்தை முன்வைத்ததுடன், ‘‘நாம் 8 விழுக்காடு வளர்ச்சியை மீண்டும் பெற முடியும் என்றே கருதுகிறேன்’’ என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘‘சுதந்திரத்திற்குப் பிந்தைய, நாட்டின் பொரு ளாதார வரலாற்றில் ஒரு தீர்மானகரமான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக் கிறோம்,’’ என்றும் ‘‘இந்திய முதலாளிகள் நாம் அமல்படுத்தும் கொள்கையில் நம்பிக்கை வைத்திட வேண்டும்’’ என்றும் ‘‘தேவையற்ற முறையில் எதிர்மறை எண்ணங்கள் என்னும் சேற்றில் சிக்கிக்கொள்ளாமல் தங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் அறிவுரை பகர்ந் திருக்கிறார். பிரதமரின் உரையைக் கேட்கும்போது, ‘‘ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டால், பிச்சைக்காரர்களும் குதிரை சவாரி செய்வார்கள்’’ என்கிற 16ஆம் நூற்றாண்டின் நர்சரிப் பள்ளிப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் மேலும், ‘‘அரசு விரைந்து செயல்படவில்லை எனில், ஏற்கனவே மந்தமாகிப்போயுள்ள நம் வளர்ச்சி, 5 விழுக்காடு அளவிற்கே ஆண்டு முழு வதும் நிலைத்து நின்றுவிடும் என்று இன்று கருத்தொற்றுமை ஏற்பட்டிருக் கிறது’’ என்றும், ‘‘எனவே அரசு மிகவும் வேகமாகவும் தீர்மானகரமாகவும் செயல் படவேண்டியது அவசியம்’’ என்றும் பேசியிருக்கிறார்.உள்ளீடான வளர்ச்சிகுறித்து உதட்டளவில் சேவை செய்திடும் இத்தகைய நடவடிக்கை பிரதமரின் உள்ளக்கிடக்கையின்படி நிதி திரட்டலை ஒருமுனைப் படுத்த வேண்டும் மற்றும் நாட்டில் சிறந்த முறையில் முதலீட்டுக்கான சூழலை உரு வாக்க வேண்டும் என்பதுதான். இன்றுள்ள உலக நிலைமையில் இது மிகவும் அவசியம் என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
நிதி ஒருமுகப்படுத்தலைப் பொறுத்த வரை பிரதமர் மேற்கொண்டுள்ள நடவ டிக்கை என்பது மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை, குறிப்பாக எரி பொருள் மானியங்களைக் குறைத்தது தான். பெட்ரோல் விலை மீதிருந்த கட்டுப் பாடுகள் இப்போது முழுமையாக நீக்கப் பட்டுவிட்டன. அடுத்த சில மாதங்களில் டீசல் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப் பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார். சமையல் எரிவாயுக்கான மானியத்திற்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆதார் மேடையின் மீதான நேரடி ரொக்கப் பட்டுவாடா திட்டம் மக்களுக்கு அளித்து வரும் மானியங்களை மேலும் குறைத்திட இருக்கிறது. இவ்வாறெல்லாம் இவர் கூறுகிற அதே சமயத்தில், நாட்டில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் பல லட்சம் கோடி ரூபாய்கள் வரிச் சலுகைகள் அளித்திருப்பது பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் வசூலிக்கப்படாமல் ரத்து செய் யப்பட்டிருக்கிறது. இத்தொகை ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறையை விட அதிகமாகும். பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் என்பவை வளர்ச்சிக்கான ஊக்கத்தொகை’ (`incentives’) என்று இவர்களால் வர்ணிக்கப்படும் அதே சமயத்தில், ‘மானியங்கள்என்ற பெயரில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளோ இவர்களது அகராதியின்படி பொருளாதாரத்தின் மீதான சுமைக ளாகும். ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்கை வரவிருக்கும் காலங்களிலும் தொடரவிருக்கின்றது. இதன் பொருள் நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டிட, மக் கள் மீது சுமைகள் மேலும் மேலும் ஏற்றப்படும் என்பதேயாகும். பொதுத்துறையை நம்முடைய பொரு ளாதாரத்தின் உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நேருவின் தொலைநோக்குப்பார்வையிலிருந்து தற் போதைய பிரதமர் தன் தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளார். ‘‘அரசாங்கம் வளர்ச்சியின் பிரதான உந்து சக்தி அல்ல. மாறாக, தனியார் துறை தலைமையிலான பொருளாதாரமே வளர்ச்சியின் பிரதான உந்து சக்தியாகும். நான் மீண்டும் வலி யுறுத்திச் சொல்கிறேன், நாம் ஒரு தனியார் துறை தலைமையிலான பொருளாதாரத்தையே நடத்திக் கொண்டிருக்கிறோம். 75 விழுக்காடு முதலீடு தனியார் துறையிலிருந்துதான் வருகிறது. எனவே வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்பவர், உண்மையில் தனியார் முதலீடுதான்.’’  என்று பிரதமர் தனியார்துறையை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். உள்நாட்டு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகாரவர்க்கத்தின் தடை களைக் களைந்திட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டிய லிட்ட பிரதமர், தற்போது அந்நிய முதலீட்டைக் கவர்வதற்கான நடவடிக்கைகளையும் மிகவும் வேகமாகச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ‘‘அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை நாம் கொடுத்திருக்கிறோம்’’ என்று பிரதமர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, விமானப் போக்குவரத்து மற்றும் பல் துறைகளில் அந்நிய முதலீட்டாளர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டிருப்பதைத் தெரிவித்த அதே சமயத்தில் பிரதமர், ‘‘வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகமான அளவில் செய்ய முடியுமா என்பது குறித்து அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்துகொண் டிருக்கிறோம்,’’ என்றும் அறிவித்துள்ளார். வெளிப்படையாய்ச் சொல்லவில்லை என்றாலும் நடைமுறையில் அடுத்த சுற்று புதிய தலைமுறை சீர்திருத்தங்களை அறிவித்துள்ள அவர், ‘‘இதர சீர்திருத்த நட வடிக்கைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக, நிதித்துறை தொடர்பாக சட்டம் இயற்றும் சீர்திருத்தங்கள் குழு அளித்துள்ள எண்ணற்ற பரிந்துரைகள் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன,’’ என்றும் அறிவித்துள்ளார். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னாலிருந்த கொள்கைக் கோட்பாட்டை மறுதலிக்கும் வண்ணம் இந்தியாவின் சேமிப்புகளை அந்நிய வங்கிகள் கபளீகரம் செய்யக்கூடிய விதத்தில், தனியார் அந்நிய வங்கிகளை அனுமதிக்க வகை செய்யும் விதத்தில், வங்கிச் சேவைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சமீபத்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை பிரதமர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2008இல் உலகப் பொருளாதார மந்தம் இந்தியாவில் முழுமையான அழிவினை ஏற்படுத்துவதிலிருந்து எந்த நட வடிக்கைகள் இந்தியாவைப் பாதுகாத்தனவோ, அந்த நடவடிக்கைகள் அனைத் தையும் கைவிட இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது உலக நிதி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவிற்கும் மிக அதிக அளவில் ஊறுவிளைவித்திடும்.‘‘பிரச்சனையைச் சரியான முறையில் ஆய்வு செய்வதன் அடிப்படையில் ஒரு சரியான கொள்கை வகுக்கப்பட வேண்டும்’’ என்று பிரதமர் விசித்திரமான முறையில் கூறியிருக்கிறார். பொருளாதார மந்த நிலைதான் இங்கே பிரச்சனையே. ஆனால், சரியான கொள்கை என்பது தவறான ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர், ‘‘பொருளா தாரத்தின் வளர்ச்சி விகிதம் முதலீட்டு விகிதத்துடன் வலுவானவிதத்தில் ஒத்துப்போக வேண்டும்,’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், ‘‘2011-12ஆம் ஆண்டில் பொது மற்றும் தனியார் முதலீடு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இவ்வாறு முதலீட்டில் ஏற்பட்டிருக்கிற வீழ்ச்சி மாற்றிய மைக்கப்பட வேண்டும்.’’ பிரதமர் மேலும், ‘‘சீர்திருத்தங்களை ஒன்றன்பின்ஒன்றாக தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இதனைச் சரிசெய்திட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். இதன் பொருள் ஆரம்பத்தில் பிரதமர் கூறியிருப்பதைப்போன்று அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்திற்கு அபரிமிதமான ஊக்கத்தொகைகள் (மானியங்கள் என்று படிக்கவும்) அளிப்பது என்பதாகும். நாம் ஆட்சியாளர்களிடம் வைக்கும் முக்கியமான கேள்வி, முதலீடுகள் வீழ்ச்சியடைந்ததற்கான அடிப்படைக் கார ணம் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாகவே தாங்கள் முதலாளிகளுக்கு அபரி மிதமான சலுகைகள்தான் அளித்து வந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந் திருக்கிறதே, காரணம் என்ன? பொருளாதாரத்தில் மக்களின் வாங்கும் சக்தி இல்லாமல் போனதே இதற்குக் காரணமாகும். இதுவே எதார்த்த உண்மையாகும். பொருளாதாரத்தில் வாங்கும் சக்தி இல்லையென்றால் முதலீடுகள் மட்டுமே வளர்ச்சியை உற்பத்தி செய்துவிடாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்கப்பட வேண்டும். அப்போதுதான் லாபமும் கிடைக்கும், வளர்ச்சியும் ஏற்படும். இதற்கு, மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தாக வேண்டும். உலகப் பொருளாதார மந்தமும் அதனைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தில் கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியும் ஏற்பட்டதால், உள்நாட்டு முதலீட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளிநாட்டில் விற்க முடிய வில்லை. நாட்டிற்குள்ளும் மக்களுக்கு அளித்து வந்த மானியங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டதாலும், எரிபொருள்கள் மீதான விலைகளை நிர்வாகரீதியாக கடுமையாக உயர்த்தி இருப்பதாலும், பண வீக்க விகிதம் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருப்பதாலும், நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி கடுமையாகக் கசக்கிப் பிழியப்பட்டு விட்டது. இவ்வாறு, உலக அளவிலும் உள் நாட்டு அளவிலும் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளதானது சரிசெய்யப்பட வேண்டுமானால், அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டுமானால், நாட்டு மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக் கப்பட்டாக வேண்டும். இது எப்படி சாத்தியமாக முடியும்? ஐ.மு.கூட்டணி அரசாங்கமானது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் அளித்து வரும் அபரிமிதமான வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக அவை வசூலிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளில் செலுத்தப்பட வேண்டும்.
இவை நமக்கு மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட் டுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற் கும் இட்டுச் செல்லும். இவற்றின் விளைவாக விரிவடையும் உள்நாட்டுத் தேவை, கூடுதலான முதலீடுகளுக்கான தூண்டு விசையாக அமைந்து இந்தியாவை ஒரு வலுவான, நிலையான வளர்ச்சிப் பாதையில் வைத்திடும். பிரதமர் முதலாளிகளுக்கு உணர்ச்சியூட்டக்கூடிய விதத்தில் பேசியிருப்பதில் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும் மயங்கிடக்கூடாது. அவர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக மட்டுமல்ல, தங்கள் சொந்த நலன்களுக்காகவும் வேண்டியாவது, பொது முதலீடுகளை அதிகப்படுத்துமாறும் தங்களுக்கு அபரிமிதமான சலுகைகள் அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். திருவாளர் பிரதமர் அவர்களே, இதுவே, ‘‘பிரச்சனையின் சரியான ஆய்வின் மீது’’ அமைந்த ‘‘சரியான கொள்கை’’யாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
(தமிழில்: ச.வீரமணி)


Thursday, April 4, 2013

அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம்-ஜனநாயக முறையில் முளையிலேயே கிள்ளி எறிவோம்-அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி சூளுரை












புதுதில்லி, ஏப்ரல் 4-
மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார் என்று சடலக்கூராய்வு சான்றிதழ் முலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.   இக்கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம். 1975இல் இருந்ததைப்போன்று அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம். இதனை முளையிலேயே ஜனநாயக முறையில் கிள்ளி எறிவோம் என்று இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையினரின் அனுமதி பெற்று பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையை ஏவினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினர்  சுதிப்தே குப்தா கொல்லப்பட்டார். இது விபத்துதான் என்றும் அடித்துக் கொல்லப்படவில்லை என்றும் மாநில அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இல்லை இது கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக்கூராய்வு சான்றிதழில் உறுதி செய்யப்பட்டது. 
சுதிப்தே குப்தா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுதும் அனைத்திந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தில்லியில் உள்ள வங்கபவன் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தில்லிப் பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணியில் வந்த மாணவர்களை வங்கபவனுக்குள் செல்ல காவலதுறையினர் அனுமதிக்கவில்லை.  வாயில் கதவை அடைத்து வைத்தனர். ஆயினும் மாணவர்கள் முழக்கமிட்டவாறே வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.
பின்னர் வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் 1975இல் மேற்கு வங்கத்தில் நடைபெற்றதைப்போன்ற அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர இப்போதைய திரிணாமல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதியோம்.  சுதிப்தா குப்தா கொலை செய்யப்படவில்லை, அது விபத்துதான் என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இல்லை, இ து கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக் கூராய்வு சான்றிதழ் (போஸ்ட்மார்ட்டம் சர்ட்டிபிகேட்) மூலம் தெளிவாகிவிட்டது. எனவே நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கொலைக்குக் காரணமானவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 1975இல் நடந்ததுபோல் அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். இதனை ஒருபோதும் அனுமதியோம். ஜனநாயக ரீதியாக இதனை முளையிலேயேக் கிள்ளி எறிவோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
பேரணி/ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேஎன் பாலகோபால், எம்பி ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர சர்மா, தில்லி மாநில செயலாளர் புஷ்பிந்தர் கிரேவால் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
---

Tuesday, April 2, 2013

‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’:என்நெஞ்சைத் தொட்டுவிட்ட மிகச் சிறந்த புத்தகம்:பிரகாஷ் காரத் பெருமிதம்






புதுதில்லி, ஏப். 2-
தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (The Making of the Madras Working Class) என்னும் புத்தகம் லெப்ட்வேர்ட் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டு அவர்களது அலுவலகமான ‘‘மே 1’’ அரங்கத்தில் மார்ச் 21 அன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நூலினை வெளியிட்டுப் பேசியதாவது:
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர  தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடுமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃட்வேர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளியீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக்கொண்டேன்.
நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும்  இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.
தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாநகரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்பகால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநகரத்தில் தொழிற்சாலைகளும்  தொழிலாளர்களும் உருவான பின்னணி குறித்தும்  இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவதாகப் பதிவு செய்யப்படட தொழிற்சங்கமாக மதராஸ் லேபர் யூனியன்தான்  கருதப்படுகிறது.  மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக பின்னிஎன்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது.  1918இலிருந்து பின்னிஆலைதான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக்கத்தின் மையமாக இருந்திருக்கிறது.  பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும்போது அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென்னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்கவேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந்திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்ததையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப்பிட்டிருக்கிறார். 
மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர்பார்க்க முடியாத பின்புலத்திலிருந்த வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறுவனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார்.  தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணிகளும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடைகளின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக்கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.
மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ளள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்குவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது.
தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் பின்னியில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார்.
சென்னையில் அப்போது ரயில்வே கம்பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது.  அந்த சமயத்தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கியிருக்கிறார்.
தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (Home Rule Movement) சேர்ந்த பல தலைவர்கள் தலைமையேற்று நடத்தி இருக்கின்றனர். சென்னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும்அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள்தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக்கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக்கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங்கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் பின்னிஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத்தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1933க்குப்பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலர்  தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார்.  தொழிலாளர் வர்க்கத்தின் பல போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆயினும் அவர் அந்த சமயத்தில் தொழிலாளர்களுக்கென்று ஓர் அமைப்பினைக் கட்டத் தவறிவிடுகிறார். அவர் அந்நாட்களில் தமிழ்நாடு மற்றும் சென்னை மாநகரின் தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்கேற்றிருக்கிறார். ஆயினும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும், ‘தாதாஎன்று அன்புடன் அழைக்கப்பட்ட அலீம் ஹைதர் கான் முயற்சியால் முதல் கம்யூனிஸ்ட் குழுவும் உருவானபிறகுதான்  தொழிற்சங்க இயக்கத்தில் இடதுசாரித் தலைமை வெளிப்படத் துவங்கியது.  தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் அதன்பின்னர்தான் தொழிற்சங்க இயக்கத்துடன் அறிமுகமானார்கள்.
வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகையதொரு நிலையைப் பெற முடியவில்லை. உண்மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கினார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக்கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற்சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை.
வீரராகவன் அப்போது தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்ட சீர்திருத்தவாத் தலைவர்கள் குறித்து மிகவும் விமர்சனரீதியாக இந்நூலில் எழுதியிருக்கிறார். பல சமயங்களில் பின்னிதொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் சீர்திருத்தவாதத் தலைமையைவிட வேகமாக முன்னேறிச் சென்றிருக்கிறார்கள். தலைவர்களின் விருப்பங்களையெல்லாம் மீறி முன்னேறியிருக்கிறார்கள்.  வாடியோ போன்று தலைமை தாங்கியவர்களின் உணர்வுகளை முழுமையாக மதிக்கக்கூடிய அதே சமயத்தில், தொழிலாளர்களின் வாழ்க்கை மீது அவர்கள் மனப்பூர்வமாகக் கரிசனம் கொண்டிருந்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளும் வீரராகவன், அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல என்பதையும், புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் சிந்தனைகளை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அன்றைய சென்னைத் தொழிற்சங்க இயக்கம் குறித்து ஆய்வு செய்துள்ள வீரராகவன் நான்கு விதமான முடிவுகளுக்கு வருகிறார். அவை நான்கும் மிகவும் சரியானவைகள் (valid and correct) ஆகும்.
முதலாவதாக, அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட தேசிய இயக்கம் குணாம்சத்தில் முதலாளித்துவ (பூர்சுவா) மனப்பான்மையைப் பெற்றிருந்தது. எனவே அதுபிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்குக் கொடுக்காதது மட்டுமல்ல, அவற்றை மூடி மறைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டது. தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச மற்றும் கம்யூனிச சிந்தனைகள் வளரத் தொடங்கியதைக் கண்டு அது அவர்களை அணிதிரட்டுவதையே குறைத்துக் கொண்டுவிட்டது.
இரண்டாவதாக, இடதுசாரி சக்திகள் தலைமையில் இருந்த இயக்கங்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் அடக்குமுறையை ஏவி அவற்றை நசுக்குவதில் வெற்றி கண்டன. இது சீர்திருத்தவாதத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, தொழிலாளர்களைத் தங்கள் கீழ் வைத்துக்கொள்வதிலும், அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் எழுப்புவதோடு தங்களைச் சுருக்கிக் கொள்வதிலும் நிறைவடைந்தனர்.
மூன்றாவதாக, காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் தாமதமாக வந்தபோதிலும், அரசின் கடும் அடக்குமுறை காரணமாக அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தவாதத் தலைவர்களையும் அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.
நான்காவதாக, இந்திய சமூகம் பல்வேறு கலாச்சாரங்களையும், பலவீனங்களையும் உள்ளடக்கிய ஒன்று. நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் வகுப்புவாத சிந்தனைகள் மிகவும் மோசமானமுறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சமூகமாக இது இருந்ததால், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர வர்க்க உணர்வு உருவாவதற்கு அவை மாபெரும் தடைக்கற்களாக அமைந்திருந்தன.
இவ்வாறு வீரராகவன் மிகவும் சரியான முறையில் முடிவுக்கு வருகிறார்.
வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவுகளின் அடிப்படையிலேயே இதனை எழுதியிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மட்டும் அவர் இதனை எழுதிடவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந்தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார்.
மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலாளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும். 
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராகவனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கியமானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனியார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவனுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவராக (scribe-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக்கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளிவந்துவிட்டது.
இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட  முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக்கொண்டார்.  லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர்  சுதான்வா தேஷ்பாண்டே (மேனேஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார்.
(தொகுப்பு: ச.வீரமணி)