Thursday, April 2, 2009

70 இடங்கள் உறுதி-இடதுசாரிகளால்தான் மக்களைக் காக்க முடியும்-அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கப்போகிறார்கள்

மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டும் 70க்கம் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று யூனியன் டெர்ரிடரி இண்டிபெண்ட் என்னும் ஏடு கூறுகிறது. அந்த ஏட்டில் வந்துள்ள செய்திக் கட்டுரை வருமாறு:
இடதுசாரிக் கட்சிகள்தான் உண்மையான அரசியல் கட்சிகள். அவைகளால்தான் மக்களுக்குத் தேவையான மக்கள் நலம்சார்ந்த கொள்கைகளை வடித்தெடுக்க முடிகின்றன. அவர்கள் மக்களிடம் தெளிவான கொள்கைகளுடன் செல்கிறார்கள். மக்கள் நலஞ்சார்ந்த அரசாங்கத்தை அமைத்திட தங்களுக்கு அதிகாரம் வழங்குமாறு கோருகிறார்கள். இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய மிக எளிய வாழ்க்கைமுறை அதே சமயத்தில் மிக உயர்ந்த சிந்தனையாளர்களாக விளங்குதல், அனைத்துத்தரப்பு மக்களும் விரும்பக் கூடியவர்களாக அவர்களை மாற்றியிருக்கின்றன. அவர்கள் எப்போதும் மக்களை நேசமுடன் அணுகும் முறையினால் மக்கள் மத்தியில் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் மற்ற கட்சியினரையும் மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளைப் பின்பற்ற நிர்ப்பந்தம் அளித்து வருகிறார்கள்.

வரவிருக்கும் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை ஆளக்கூடிய அளவிற்கு இடங்களைப் பெறப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, 70 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமான இடங்களைப் பெற்று, நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு உருவாகப் போகிறார்கள்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப்பின், இடதுசாரிக் கட்சிகள்தான் அதிகாரமையமாக உருவாகப்போகிறது என்றும், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் நம்புகிறார்கள். ‘‘சித்தாந்தரீதியாக, சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக் போன்ற இடதுசாரிக் கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைய முடியாது. அதேபோன்று, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியுடனும் அவர்களால் தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை’’ என்று ஒரு விமர்சகர்க
கூறினார்.
மேலும் அவர், ‘‘இவ்விரு கூட்டணிகளுமே பணக்காரர் ஆதரவு - ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளையே கடைப்பிடித்தன’’ என்றும், ‘‘இதன் காரணமாக நாட்டில் அதிகரித்து வரும் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றால் இடதுசாரிக் கட்சிகள் மிகவும் ஆத்திரமடைந்திருக்கின்றன’’ என்றும், இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும், நாட்டிற்கு மூன்றாவது மாற்றைக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்றும் அவர் கூறினார்.

கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, மத்தியில் அடுத்த ஆட்சி மூன்றாவது முன்னணிக்குத்தான் என்பதையும், அதில் இடதுசாரிக் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தம் என்பதையும் ஊகித்துணர முடிகிறது.
இடதுசாரிக் கட்சிகள் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மற்றும் சில மாநிலங்களில் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் அவர்களால் முக்கியமான பங்களிப்பினைச் செய்திட முடியும். ‘‘நிச்சயமாக இடதுசாரிக் கட்சிகள் 70 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவார்கள். இதில் மிகவும் சிறந்த அம்சம் என்னவென்றால், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், சாமானியர்களைப் போலவே மிகவும் எளிமையானவர்கள். மக்கள் அவர்களை மிக எளிதாக அணுக முடியும். தொலைபேசியில் அவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, எந்தவிதத் தயக்கமுமின்றி அவர்கள் எடுத்துப் பேசுகிறார்கள். இது அவர்களுக்கு வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. ‘‘நம் தலைவர்களும் நம்மைப் போலவே எளிமையானவர்கள்’’ என்கிற உணர்வை இது வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்படுத்துகிறது. ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சொகுசு வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியும் உள்ள துதிபாடிகளின் செயல்களும் இவர்களை அவர்களிடம் நெருங்கவே அனுமதிக்க மறுக்கிறது.

பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சொகுசு வாழ்க்கை, மக்களுக்கும் அவர்களுக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ்காந்திக்கு அடுத்து காங்கிரசில் மக்கள்தலைவர் எவரும் இல்லை. இதேநிலைதான் பாஜகவிலும், வாஜ்பாய் உடல் நலிவுற்றதை அடுத்து ஓரளவுக்கு அத்வானியைக் கூறலாம். வேறு மக்கள் தலைவர் எவரும் பாஜகவிலும் இல்லை. ஒருவர் ராகுல் காந்தியைப் பார்க்க விரும்பினால் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் கெடுபிடிகள் மிக அதிகம்.

அதேசமயத்தில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களான பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா, குருதாஸ் தாஸ் குப்தா, வாசுதேவ் ஆச்சார்யா, ஏ.பி.பரதன் போன்றோர் சாமானிய நாட்டுப்புற ஏழை மக்களை மட்டுமல்ல, நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய அனைத்துத்தரப்பு மக்களாலும் நேசமுடனும் மதிப்புடனும் ஈர்க்கக்கூடிய தலைவர்களாக உயர்ந்துள்ளார்கள். மற்ற சிறிய கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
(நன்றி: யூனியன் டெர்ரிடரி இண்டிபெண்டண்ட்)

தமிழில்: ச.வீரமணி

Tuesday, March 31, 2009

கல்வி மற்றும் சுகாதாரத்துறை -bமக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை -ஐமுகூ அரசாங்கம் காப்பாற்றத் தவறிவிட்டது:நிலோத்பால் பாசு

புதுடில்லி, மார்ச் 31-
ஐமுகூ அரசாங்கம், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் செவ்வாய் அன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘கல்வி: காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை, ’’ மற்றும் ‘‘சுகாதாரத் துறை: உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது’’ என்னும் தேர்தல் பிரச்சார பிரசுரங்களை வெளியிட்டு, நிலோத்பால் பாசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இவ்விரு துறைகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் தாங்கள் எவ்வளவு செலவிட்டோம் என்பதை அவர்கள் கூறிடவில்லை.
ஐமுகூ அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய சமயத்தில் ஐ.நா. ஸ்தாபனம் ஆண்டுதோறும் வெளியிடும் மனித வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடிஅநவே சுநடிசவ)யில் மொத்தம் உலகில் உள்ள 171 நாடுகளில் இந்தியா 128ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு 132ஆவது இடம் கிடைத்திருக்கிறது. ஒவ்வோராண்டும் பட்ஜெட் தாக்கல் செய்திடும்போது, நிதி அமைச்சர் அவர்கள் பொருளாதார ஆய்வு அறிக்கையையும் (நஉடிnடிஅiஉ ளரசஎநல டிக ஐனேயை), பட்ஜெட்டால் விளைந்த பயன்கள் (டிரவஉடிஅந ரெனபநவ) இரண்டையும் வெளியிடுவார். ஆனால் இந்த ஆண்டு அவற்றை வெளியிடாமல், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு தப்பித்துக் கொண்டார்.
இந்தியாவை ஒரு சூப்பர் பவராக மாற்றப்போகிறோம் என்று தம்பட்டம் அடித்திருக்கிறார்கள். ஆனால் ஐ.நா.வின் அறிக்கையோ இந்தியா எவ்வளவு பரிதாபகரமான நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
ஐமுகூ அரசாங்கமானது தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்குவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் 2004-05ஆம் ஆண்டில் 2.67 சதவீதம் மட்டுமே ஒதுக்கியிருந்த அரசு, 2008-09இல் 3.08 சதவீத அளவிற்கே உயர்த்தியிருக்கிறது. இந்த உயர்வுக்கும் பல மாநில அரசுகள் கல்விக்காக உயர்த்திய ஒதுக்கீடுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட ஒன்றாகும்.
கல்வி உரிமை சட்டமுன்வடிவை நடைமுறையில் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இதன்மூலம் நாட்டில் 38 கோடி மக்களுக்குக் கல்வி பெறும் உரிமையை - எழுத்தறிவைத் - தராது மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.
மாறாக, கல்வித்துறையை தனியார் கொள்ளையடிக்கக் கூடிய வகையில் வணிகமயப்படுத்தியுள்ளார்கள்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு (சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு) அரசு ஒதுக்கீடு செய்து வந்த தொகையானது ஒவ்வோராண்டும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 2007-08ஆம் ஆண்டில் 12,020.2 கோடி ரூபாயாக இருந்தது, 2008-09இல் 11,940 கோடியாகக் குறைந்தது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் சமயத்தில் அது 11,933.9 கோடியாக மேலும் குறைக்கப்பட்டது.
நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை - 38 கோடி மக்களை - எழுத்தறிவற்றவர்களாகவே வைத்துக்கொண்டு - நாட்டை சூப்பர் பவராக மாற்றப் போவதாகத் தம்பட்டம் அடிக்கிறார்கள். எழுத்தறிவற்றவர்களில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் அதிகமானவர்களாகும். இவர்கள் நிலைமை மேலும் பரிதாபகரமானதாகும்.
சுகாதாரத் துறை
அதேபோல் சுகாதாரத் துறையிலும் ஐமுகூ அரசு அறிவித்துள்ள ‘‘அனைவருக்கும் சுகாதாரம்’’ என்கிற முழக்கம் கானல் நீராகவே தொடர்கிறது. சுகாதாரத் துறைக்கு அரசின் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.9 சதவீதமேயாகும். உலகில் உள்ள நாடுகளில் மிகவும் கீழ் நிலையில் உள்ள நிலையாகும். நம்மைவிட சற்றே கூடுதலாகச் செலவு செய்கிற நாடுகளில் புருண்டி, மியான்மர், பாகிஸ்தான், சூடான் மற்றும் கம்போடியா ஆகியவைதான் வருகின்றன. ஐமுகூ அரசு பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2இலிருந்து 3 சதவீதம் வரை உயர்த்தும் என்று கூறியிருந்த உறுதிமொழியையும் இவ்வாறு அது காற்றில் பறக்கவிட்டுவிட்டது.
இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. நாட்டில் உள்ள குழந்தைகளில் 56 சதவீதத்தினர் தேசியத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் தடுப்பூசி மருந்துகள் தயார் செய்து வந்த நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஐமுகூ அரசு மூடியதை அடுத்து, தடுப்பூசி மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளின் விலைகளும் விஷம் போல் ஏறியுள்ளன.
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால் அது எதிர்கால இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும். இதை மக்கள் நன்கு உணர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதுமான அளவு கவனம் செலுத்தக் கூடிய மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த முன்வர வேண்டும்.
இவ்வாறு நிலோத்பால் பாசு கூறினார்.

Sunday, March 29, 2009

காங்கிரஸ்: நினைப்பும் நிலையும்


யதார்த்த நிலைமைகளைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தன்னுடைய மிக முக்கியமான கூட்டணிக் கட்சியினர் எவரும் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளக்கூட மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியானது, தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடக்கூடிய சமயத்தில், தாங்களே இப்போதுள்ள பிரதமரின் தலைமையின் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.


தேர்தல் காலத்தில், ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் கட்சியின் நிலை குறித்து, யதார்த்த நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், மாபெரும் கனவுகள் காண்பதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் உண்டுதான். ஆனால், ஒரு மாபெரும் ஜனநாயக அமைப்பில் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் எஜமானர்கள் அதன் மக்களேயாவார்கள். தேர்தலில் மக்கள் அளித்திடும் முடிவுகளின் அடிப்படையில்தான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு, ஆட்சிபுரிவார்கள் என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், இடதுசாரிக் கட்சிகள் குறித்தும் மூன்றாவது முன்னணி குறித்தும் கூறப்பட்டிருக்கும் வாசகங்களைச் சற்றே ஆராய்ந்திடுவோம்.
காங்கிஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மூன்றாவது முன்னணியை ‘‘குழப்பமானவர்களின் கூட்டணி’’ என்ற விதத்தில் வர்ணித்திருக்கிறது.

(1) மூன்றாவது முன்னணிக்கு மாற்றுக் கொள்கைகள் கிடையாது,

(2) அது பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கே உதவுகிறது மற்றும்

(3) அது நிலைக்கத்தக்கதல்ல என்பவைகளே அதன் வாதமாகும்.

இப்பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு முன்பாக, மற்றொரு அம்சம் குறித்து பரிசீலிப்பது அவசியம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘‘மூன்றாது முன்னணிக்கு உந்து சக்தியாகத் திகழும் இடதுசாரிக் கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து வந்தன. அவர்கள் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமலேயே ஆட்சியாளர்கள் மீது அதிகாரம் செலுத்த முயற்சித்தார்கள்,’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதலாவதாக, நாடாளுமன்றத்தில் நுழைந்த 61 இடதுசாரி உறுப்பினர்களில் 54 பேர், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தோற்கடித்தவர்கள் என்றபோதிலும், நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கம் ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்கும் மதவெறி சக்திகளை அரசு அதிகாரபீடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அளிக்க வேண்டுமென்பதற்காக, ஐமுகூ அரசாங்கத்தை, இடதுசாரிக் கட்சிகள் மிகவும் முதிர்ந்த தன்மையுடனும் பொறுப்புடனும் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதெனத் தீர்மானித்தன. இவ்வாறு ஆதரிப்பதற்காக, ஆட்சி அதிகாரத்தில் எந்தப் பங்கையும் இடதுசாரிகள் கோரவில்லை. இன்றைய நடைமுறை அரசியலில், அரசு அதிகாரம் மற்றும் அதன் விளைவாக அளிக்கப்படும் சுகபோக வாழ்க்கை வசதிகளைத் துச்சமென நிராகரித்துவிட்டு, கொள்கைகள் வழிநின்று, செயல்படுவது என்பதே அபூர்வமான ஒன்றாகும். இவ்வாறுதான், இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாத அதே சமயத்தில் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, ‘‘ராணுவம்சாரா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு’’ ஐமுகூ அரசாங்கம் ஆதரவு அளித்ததையொட்டி இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையானது, ‘‘இந்தியாவின் உச்சபட்ச தேசிய நலனுக்காகத்தான்’’ அவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக மேலும் கூறுகிறது. அவர்கள், சொல்லாமல் விட்ட ஓர் அம்சம் என்னவெனில், இந்த ஒப்பந்தமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான போர்த்தந்திரக் கூட்டணியின் முழுமையான அங்கம் என்பதையும், அந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நசுக்கப்பட்டுவிட்டது என்பதுமாகும். இரானுக்கு எதிராக சர்வதேச அரங்கத்தில் இந்தியா வாக்களித்ததும், இஸ்ரேலுடன் இப்போது இந்தியா அதிகமான அளவில் கூடிக் குலாவுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இவ்வாறு போர்த்தந்திரக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதன் விளைவுகளேயாகும்.

மூன்றாவதாக, இடதுசாரிக் கட்சிகள் ஐமுகூ அரசாங்கத்திற்க, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆதரவினை அளித்து வந்தன. ஐமுகூ ஆட்சியிலிருந்த அத்தனை ஆண்டு காலத்திலும், இத்திட்டத்தை அது அமல்படுத்துவதற்காகவும், அதிலிருந்து அது விலகிச் செல்லாமல் இருப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்து வந்தனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியதன் மூலமும், இந்தியர்கள் ஜார்ஜ் புஷ்சை நேசிக்கிறார்கள் என்று உலகிற்கு அறிவித்ததை அடுத்தும், மன்மோகன் சிங் அரசாங்கம் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை மீறிவிட்டது. ‘‘இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையானது சர்வதேச உறவுகளின் பல்துருவக் (multipolarity) கோட்பாட்டை மேம்படுத்தக்கூடிய விதத்தில் பின்பற்றிடும். அதனை ஒருதுருவ கோட்பாட்டை (unilateralism) நோக்கி இழுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திடும்,’’ என்று குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இதனை மீறி, அமெரிக்காவானது, ஈராக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை வலுவந்தமாக ஏற்படுத்தி. ஒருதுருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், ஐமுகூ அரசாங்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போர்த்தந்திரக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘‘அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் அதே சமயத்தில், அனைத்து பிராந்திய மற்றும் உலகப் பிரச்சனைகளிலும் இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நிலைப்பாடு, நிலைநிறுத்தப்படும்’’ என்றும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டிருந்தபோதிலும், அதற்கு முற்றிலும் மாறாக, நாம் மேலே பார்த்ததுபோல, நம்முடைய நாட்டின் அயல்துறைக் கொள்கையானது, அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரைவு தயார் செய்யப்பட்ட சமயத்தில், முதலில் அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகள் கொள்வது தொடர்பாகத்தான் வரையப்பட்டிருந்தது. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு வேண்டுமானால் அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தியபிறகுதான், அது நாம் மேலே குறிப்பிட்டவாறு பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ஐமுகூ அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை மீறியது. தான் ஏற்கனவே ஆசைப்பட்டவாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போர்த்தந்திர உறவுகளை செய்து கொள்வதையே விரும்பியது. இவ்வாறு, ஐமுகூ அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்குத் துரோகம் இழைத்ததால்தான், இடதுசாரிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவையே நிதர்சன உண்மைகளாகும்.

நாம் இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஐமுகூ அரசாங்கத்தின் சாதனைகள் என்று பட்டியலிட்டுள்ள அனைத்துமே, இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் மற்றும் தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்டவைகளேயாகும். ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து இடதுசாரிகள் வெளியேறுவது என்று தீர்மானித்த பிறகுதான், ஐமுகூ அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தன் பழைய திட்டங்களுக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. ஐமுகூ அரசாங்கத்தை இடதுசாரிகள் ஆதரித்து வந்தவரை, அது பொதுத்துறை நிறுவனங்களை நீர்த்துப்போகச் செய்திடுவதற்கான எந்த முயற்சியையும் அனுமதித்திடவில்லை. கூடுதலாக. இப்பகுதியில் நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப்போல, ஐமுகூ அரசாங்கமானது நவீன தாராளமயப் பொருளாதார மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்த முயற்சித்தபோது அதனை அவ்வாறு மேற்கொள்ள விடாது இடதுசாரிகள் தடுத்ததன் விளைவாகத்தான், இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நம் நாட்டையும் பாதிக்காது. ஓரளவிற்குப் பாதுகாத்திட முடிந்திருக்கிறது.

உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்கையில், மூன்றாவது அணி சம்பந்தமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு இப்போது வருவோம். முதலாவதாக, மூன்றாவது முன்னணிக்கு மாற்றுக் கொள்கைகள் இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஐமுகூ அரசாங்கமோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ ஏதேனும் கொள்கைத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார்களா? அனைத்து அரசியல் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன திட்டங்களை அமல்படுத்துவோம் என்று, தங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திடும். கடந்த இருபதாண்டுகளில், அமைந்திட்ட கூட்டணி அரசாங்கங்கள் அனைத்துமே, தேர்தலுக்குப் பின் உருவானவைதான். 1996இன் ஐக்கிய முன்னணியாக இருந்தாலும் சரி, 1998 இல் உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது 2004இல் உருவான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக இருந்தாலும் சரி. கூட்டணி உருவானபிறகுதான் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்காக ஒரு பொதுத் திட்டம் வரையப்பட்டு, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.


ஐமுகூ அரசாங்கம் உருவானபோதும் இவ்வாறுதான் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரையறுத்து உருவாக்கப்பட்டது. 2009 தேர்தல் முடிந்தபிறகும் இதேபோன்று மதச்சார்பற்ற கட்சிகளின் முன்னணியில் ஒரு மாற்று செயல் திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவுமில்லை.

இரண்டாவதாக, இடதுசாரிக் கட்சிகளின் மாற்று முன்னணியால் ‘‘பாஜக வளர்வதற்கே வழிவகுக்கும்’’ என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறது. இதுவும் வெறுமையான ஒன்றேயொழிய வேறில்லை. இடது முன்னணி தீர்மானகரமான சக்தியாக உள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் பாஜகவினரால் நாடாளுமன்றத்தை விடுங்கள், சட்டமன்றத்தில் கூட ஓரிடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. மாறாக, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள வடமாநிலங்களில்தான், பாஜக வளர்வதற்கு அது வழிவகுத்துத் தந்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் காலத்தில்தான் காங்கிரஸ் கட்சியானது கர்நாடகா, உத்தர்காண்ட், பஞ்சாப் மற்றும் இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தன்னுடைய மாநில அரசாங்கங்களை, பாஜகவிடம் இழந்துள்ளது. இவ்வாறு, பாஜக மீண்டும் உயிர்பெறுவதற்கு உதவி செய்திருப்பது யார்?
மூன்றாவதாக, மூன்றாவது மாற்று முன்னணி உறுதியாக இருக்காது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. கடந்த கால அரசாங்கங்களின் அனுபவங்கள் அவ்வாறுதான் இருக்கின்றன. இவ்வாறு உறுதியற்று இருந்தமைக்கு அவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த பெரிய கட்சிகள்தான் காரணமாகும். வி.பி. சிங் அரசாங்கத்திற்கு இடதுசாரிக்கட்சிகளும், பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. அத்வானியின் எரியூட்டும் ரதயாத்திரைக்குப்பின்னர் பாஜக தன் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, அவரது அரசாங்கம் வீழ்ந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியானது சந்திரசேகர் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தது. அதுவும் ராஜிவ்காந்தியை யாரோ இரு காவல்துறையினர் வேவுபார்க்கிறார்கள் என்று அற்பக் குற்றச்சாட்டைக் கூறி, ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து, அதுவும் வீழ்ச்சி யடைந்தது. பின்னர் 1996இல் மக்களின் ஆதரவை இழந்த நிலையில் காங்கிரஸ் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவும், பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. 13 நாட்கள் மட்டுமே ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசாங்கம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்ததை நினைவுகூர்க. காங்கிரஸ் கட்சி இதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த சமயத்தில் அதன் பிரதமரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. சில மாதங்கள் கழித்து, ஐக்கிய முன்னணியின் ஓர் அங்கமாக இருந்த திமுக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி ஆதரவினை விலக்கிக் கொண்டு அது வீழக் காரணமாக இருந்தது. (பின்னர் அதே திமுக-வுடன் தற்போது ஐமுகூ அரசாங்கம் தன் முழுக் காலத்தையும் கழித்திருக்கிறது என்பது என்னே விநோதம்!) இவ்வாறு காங்கிரஸ் துரோகம் செய்யாமல் இருந்திருந்தால், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கவும் முடியாது, 1998இல் ஆட்சியை அமைத்திருக்கவும் முடியாது. காங்கிரஸ் கட்சி மட்டும் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் அளித்திருந்த தன் உறுதிமொழியைக் காப்பாற்றியிருந்தால், ஐக்கிய முன்னணி அரசாங்கமானது 2001 வரை நீடித்திருந்திருக்கும். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை கீழே தள்ளுவதற்காக, காங்கிரஸ், பாஜகவுடன் சேர்ந்து - முன்பு வி.பி.சிங் அரசாங்கத்தை வீழ்த்தியது போலவே இப்போதும் - வாக்களித்தது. இவ்வாறு, பாஜக வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தது யார்?
கடந்த காலங்களில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அரசாங்கங்கள் உறுதியற்றிருந்ததற்கான அனுபவங்கள் அவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த கட்சிகளேயாகும். இதற்குத் தீர்வு 2009இல் அமைய இருக்கும் மாற்று மதச்சார்பற்ற முன்னணியானது தன் சொந்த பலத்தில் அமைந்திடுவதிலேயே அடங்கியிருக்கிறது.

இத்தகைய மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திடுவதை உத்தரவாதப்படுத்துவதுதான் எதிர்கால இந்தியாவுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நலம் பயக்கும்.

(தமிழில்: ச.வீரமணி)