Showing posts with label prakash. Show all posts
Showing posts with label prakash. Show all posts

Friday, May 22, 2009

கட்சி பெற்றிடும் படிப்பினைகள், கட்சியை மேலும் உருக்குபோன்று உறுதிப்படுத்திடும். -பிரகாஷ் காரத்




நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க, வழிவகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 205 இடங்களில் வென்றிருக்கிறது. அது தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 262 இடங்களைப் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது முன்பிருந்ததைவிட 61 இடங்களைக் கூடுதலாகப் பெற்று தன்னுடைய வலுவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த தன்னுடைய முன்னாள் சகாக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியானது இம்முறை மிகவும் சவுகரியமான முறையில் ஆட்சியை அமைத்திட விருக்கிறது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இரண்டாவது முறை அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக 116 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது அவர்கள் பெற்றிருந்த எண்ணிக்கையைவிட 22 குறைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி 159 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது முன்பு பெற்றிருந்ததைவிட 18 குறைவாகும். காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் மொத்தத்தில் 78 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.


தேர்தல் முடிவின் பொருள்

தேர்தல் முடிவின் பொருள் என்ன? இதனை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? முதலாவதாக நாம் குறித்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்னவெனில், நாட்டின் சில பகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு மனோபாவம் இருந்தது என்பது உண்மை என்றபோதிலும், ஒட்டுமொத்த அளவில் நாடு முழுமையும் அவ்வாறிருந்ததாகக் கூறுவதற்கில்லை என்பதேயாகும். வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தோமானால், காங்கிரஸ் கட்சியானது 2004இல் பெற்றதைவிட வெறும் 2 சதவீத வாக்குகளே கூடுதலாகப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் தரப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியானது 28.55 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2004இல் அதற்கு 26.53 சதவீதம் கிடைத்திருந்தது. காங்கிரசுக்கு கேரளம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் தன் நிலையினை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரிசா, ஜார்கண்ட், அஸ்ஸாம், குஜராத், சட்டீஸ்கார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தன்னுடைய தளத்தை இழந்துள்ள நிலையுடன் ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்து பார்க்கையில், காங்கிரஸ் கட்சி சார்பாக அனைத்திந்திய அளவில் பெரிய அலை வீசியதாகக் கூறுவதற்கில்லை. இம்மாநிலங்களில் எல்லாம் காங்கிரசின் வாக்கு சதவீதம் மற்றும் இடங்கள், 2004இல் இருந்ததைவிடக் குறைந்திருக்கின்றன. ஆந்திராவில் அதன் இடங்கள் அதிகரித்திருந்தபோதிலும், அதன் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.
மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், காங்கிரஸ் 2 சதவீதம் வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ள அதேசமயத்தில், பாஜகு சுமார் 3 சதவீத அளவிற்கு வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது. பாஜகவின் இழப்பு, காங்கிரசுக்கு ஆதாயமாக அமைந்திருக்கிறது. ஆயினும் ஒட்டமொத்த அளவில் இரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதமும் அவை 2004இல் பெற்ற அளவிலேயே அநேகமாக இருக்கின்றன. 2004இல் இரு கட்சிகளும் சேர்ந்தே 48.69 சதவீத அளவிற்குத்தான் வாக்குகளைப் பெற்றிருந்தன. உண்மையில் 2009இல் இது 47.35 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 2004இல் காங்கிரசும் பாஜகவும் பெற்ற இடங்களை விடக் கூடுதலாக இப்போது பெற்றிருந்தபோதிலும், அவை பெற்ற வாக்குகளின் சதவீதம் இவ்வாறு குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் பெற்று வந்த வாக்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலை என்பது தொடர்கிறது.

பாஜக நிராகரிக்கப்பட்டிருக்கிறது

தேர்தல் முடிவின் மூலமாக இரண்டாவது நாம் குறித்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்பது, பாஜக மற்றும் அதன் அரசியல் மேடை தோல்வியடைந்திருப்பதாகும். தங்களால்தான் நல்லதோர் அரசாங்கத்தை அமைத்திட முடியும் என்றும், தங்களால்தான் நாட்டைப் பாதுகாத்திட முடியும் என்றும் பாஜக கூறிவந்ததை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். பாஜக தன்னுடை தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சனைகளையும் மதவெறி அடிப்படையில் பார்த்ததை மக்கள் பார்த்தார்கள். வருண் காந்தியின் விஷத்தைக் கக்கிய மதவெறிப் பேச்சுக்களும் இந்தியாவின் எதிர்காலத் தலைவராக நரேந்திர மோடியை சித்தரித்ததையும் மக்கள் பார்த்தார்கள். உயர்ந்துவரும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாய நெருக்கடி ஆகிய எதனையும் பாஜக முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டது. இவை காரணமாக பாஜக மக்களால் மிகவும் ஆழமான முறையில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. தேஜகூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே பீகாரில் நன்கு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பாஜக காரணம் அல்ல. மாறாக, நிதிஷ் குமார் அரசாங்கத்தின் மீது மக்களுக்கிருக்கும் நல்லெண்ணமும், நிதிஷ்குமார் பாஜகவின் மதவெறி மேடையிலிருந்து தன்னை வெகுவாக விலக்கிக்கொண்டிருப்பதும் காரணங்களாகும்.

பாஜக-வானது ஒரிசா மாநிலத்திலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்புதான் பாஜக-விடமிருந்து பிஜூஜனதா தளம் தன்னைக் கத்தரித்துக் கொண்டது. ஆனால் நடைபற்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியானது மொத்தம் உள்ள 145 இடங்களில் 103 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2004இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பிஜூஜனதா தளம் - பாஜக கூட்டணியானது 93 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இவ்வாறு, பிஜூஜனதா தளமானது, தன்னை பாஜகவிடமிருந்து கத்தரித்துக் கொண்டபின் தன் நிலையினை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் வெற்றிக்கான காரணங்கள்

தேர்தல் முடிவின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய மூன்றாவது அம்சம் என்னவெனில், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின்பால் பிரேமை கொண்டிருந்தபோதிலும், அது மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தியது, பழங்குடியினர் வன உரிமைகள் சட்டம், அரிசி மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Supprt Price)யை அதிகரித்திருப்பது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளை இவ்வாறு குறிப்பிடலாம். இவற்றில் பல இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்டவைகளாகும். விவசாய நெருக்கடி தொடர்ந்திட்டபோதிலும் மேற்படி நடவடிக்கைகள் கிராமப்புர மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணத்தை அளித்தன. இவற்றுடன் பல மாநில அரசுகளும் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஆந்திராவில் அரிசி ஒரு கிலோ 2 ரூபாய்க்கான திட்டம், தமிழ்நாட்டில் அரிசி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ திட்டம் மற்றும் சில சமூக நல நடவடிக்கைகளை இவ்வாறு கூறலாம். ஒரிசாவிலும் கூட, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கான திட்டம் நவீன் பட்நாயக் அரசாங்கத்திற்கு ஆதரவினை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். அதே சமயத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ)யின் உயர் வளர்ச்சி விகிதமானது நாட்டின் வளங்கள் மற்றும் வருமானங்களைச் சரியானமுறையில் மறு விநியோகம் செய்ததாகக் கூறுவதற்கில்லை. மாறாக, நாட்டில் மக்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு கூர்மையாக அதிகரித்திருக்கிறது. இது காங்கிரசின் தளம் விரிவுபடுவதையும் சுருக்கியிருக்கிறது.
சிறுபான்மையினர் மத்தியில், பாஜக-வானது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதில் உறுதியாக இருந்ததும், அவர்களை காங்கிரசுக்கு ஆதரவாக மாற்றியதற்குக் காரணங்களாகும். நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை, இவர்கள் ஒரு வலுவான மாற்றாக பார்த்திடவில்லை. காங்கிரசுக்கு சிறுபான்மையினர் ஆதரவு இடம்பெயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
காங்கிரஸ் கட்சி, பயங்கரவாத அச்சுறுத்தலை ஒன்றுபட்டு எதிர்த்திட வேண்டும் என்றும், மதவெறி அச்சுறுத்தல் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்திடும் என்றும் மக்கள் நினைத்ததும், காங்கிரசுக்கு ஆதாயமாக மாறியுள்ளது.

இடதுசாரிகளுக்குப் பின்னடைவு

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஏற்பட்ட இழப்புகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் கேரளாவில் இடதுஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 20 இடங்களில் முன்னெப்போதம் இல்லாத அளவிற்கு 18ஐப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைக்கூட பெறவில்லை. ஆனால் அதேபோன்று இந்தத் தடவையும் இருந்திடாது என்றும், இடதுசாரிகளுக்கு இடங்கள் குறையக்கூடும் என்று இடதுசாரிகள் எதிர்பார்த்திருந்தபோதிலும், இந்த அளவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்கத்திலும் கூட இந்தத் தடவை காங்கிரசும் திரிணாமுல் காங்கிரசும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதாலும், அனைத்து கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகளும் ஒன்றிணைந்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத்திருப்பதால் சில இடங்கள் குறையலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இவ்விரு மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கும் தோல்வியிலிருந்து இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு வெறும் 16 இடங்களே கிடைத்துள்ளன. இதுவரை மக்களவையில் இவ்வளவு குறைவான இடங்களை கட்சி பெற்றதில்லை. இவ்வாறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களை ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்வளவு மோசமான முறையில் நிலைமைகள் மாறியிருப்பதற்கான காரணிகளைக் கண்டறிய சுய விமர்சனரீதியில் பரிசீலனை செய்யப்பட்டாக வேண்டும். தேசிய அளவில் உள்ள காரணிகளையும், மாநில அளவில் உள்ள காரணிகளையும் - இவ்விரு அளவிலான காரணிகளையுமே - ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். கட்சியால் தேசிய அளவில் வகுக்கப்பட்ட தேர்தல் உத்தி மற்றும் நாடு தழுவிய அளவிலான அரசியல் சூழ்நிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்துடன் மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள பிரத்யேகமான காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2009 மே 18 அன்று நடைபெற்ற அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில், இவ்வாறு ஒரு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் இதனை ஜூன் மாதம் நடைபெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டத்தில் இறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பணித்துள்ளது. தோல்விக்கான காரணங்களை அடையாளம் கண்டபின், தவறுகளையும் பலவீனங்களையும் களைந்திட, தேவையான அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளை கட்சி எடுத்திடும். இதன் அடிப்படையில், கட்சியிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்களை மீண்டும் கட்சியின்பால் அணிதிரட்டிட, தளராது விடாமுயற்சியுடன் செயலாற்றிடும். கட்சியின் அகில இந்திய மாநாடு வகுத்தளித்துள்ள ஸ்தாபனக் கடமைகளின் அடிப்படையில் கட்சியை வலுப்படுத்துவதற்கும் அதன் வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் இத்தகைய சுயவிமர்சன ரீதியிலான மறுபரிசீலனை வழிவகுத்திடும்.

மூன்றாவது மாற்று

அரசியல் தலைமைக்குழுவில் நடைபெற்ற விவாதங்களின்போது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணி ஒன்றை, தேர்தலுக்கான மூன்றாவது மாற்றாக அமைத்திட வேண்டுமென்கிற கட்சியின் முயற்சியானது பூர்வாங்கமான முறையில் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 2009 ஜனவரியில் கொச்சியில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில், இதற்கான தேர்தல் உத்தி வகுக்கப்பட்டு, ‘‘இடதுசாரிக் கட்சிகள் மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து, ஒரு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாற்றை ஓர் எதார்த்தபூர்வமானதாக மாற்ற செயல்படும்’’ என்ற திசைவழியைத் தந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டது. கர்நாடகாவில் தொகுதி உடன்பாடு கண்டது. தேர்தல் சமயத்தில் இம்மாநிலங்களில் ஏற்பட்ட தேர்தல் உடன்பாடுகளின் அடிப்படையில், நாம் அவற்றை, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு தேசிய அளவிலான மாற்றாக மக்கள் மத்தியில் சித்தரிக்க முயற்சித்தோம். மேற்கு வங்கத்திலும் கேரளாவில் இடதுசாரிகள் தோல்வி, ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இடதுசாரிகள் வைத்திருந்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பெறாதது, தேசிய அளவில் ‘‘மூன்றாவது மாற்று’’ வலுவான முறையில் அமைந்திட வாய்ப்பளிக்காமல் செய்துவிட்டது. இவ்வாறு பல்வேறு மாநிலங்களிலும் அமைந்த கூட்டணிகள், தேசிய அளவில் ஒரு நம்பகமான (credible) மற்றும் உறுதியான (viable) மாற்றாக அமைந்திடவில்லை. மேலும், மாநிலங்களில் அமைந்திட்ட இத்தகைய கூட்டணிகளால், தேசிய அளவிலான கொள்கைத் திட்டம் எதையும் அளித்திட முடியவில்லை.
இவ்வாறு மூன்றாவது மாற்றை முன்வைத்ததன் மூலமாக இரு அனுகூலங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, பாஜக தலைமையிலான தேஜகூட்டணியானது, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சேர்மானத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கூட்டணியினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக, மதச்சார்பற்ற காங்கிரஸ் அல்லாத சேர்மானமானது 21 சதவீத வாக்குகளைப் பெற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் அதன் அகில இந்திய மாநாட்டில் வகுக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு மூன்றாவது மாற்றை அமைப்பதற்கான வல்லமையைப் பெற்றிருக்கிறது. அதாவது, தேர்தல் கூட்டணியாக மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளிலிருந்து முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த மாற்றுக் கொள்கைகளுக்காக, இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக இணைந்த கட்சிகளின் கூட்டணியாக அது விளங்கியது.

பண பலம்

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பணபலம் பயன்படுத்தப்பட்டது, மிகவும் மோசமானதோர் அம்சமாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சட்டவிரோதமாக வந்த பணம் புகுந்து விளையாடியது.

பணபலம் மிகவும் கேவலமான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் மதுரைத் தொகுதி மிகவும் மோசமானதோர் உதாரணமாகும். மற்ற மாநிலங்களிலும் கூட, இத்தகு போக்கு வளர்ந்து வருகிறது. இது ஜனநாயகப் பண்புகளை மாசுபடுத்திடும். வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காகப் பலல கட்சிகளுங்ம ஏராளமாகப் பணத்தைப் பெற்றிருக்கின்றன. இத்தகைய போக்கானது ஒட்டுமொத்த ஜனநாயக நடைமுறைக்கே ஓர் அச்சுறுத்தலாகும். குறிப்பாக இதுபோன்று கேவலமான முறையில் பணபலத்தைப் பயன்படுத்துவது இடதுசாரிகளின் நலன்களுக்கும் எதிரானதாகும்.

இடதுசாரிகளின் பங்கு

உலகப் பொருளாதார நெருக்கடியானது இந்தியப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தருணத்தில், மன்மோகன் சிங் அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பொறுப்புக்கு வருகிறது. மிகப் பெரிய அளவில் வேலை யிழப்புகள், ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்பிரிவுகள் மூடல், கிராமப்புற மக்களை வாட்டி வதைத்திடும் விவசாய நெருக்கடி ஆகியன தொடர்கின்றன. மக்களை மேலும் மேலும் சொல்லொணா அவலத்திற்குத் தள்ளவிருக்கும் நவீன தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்திட, மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வரும். அதே சமயத்தில், மத்திய அரசு சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்திற்காகவும், பொருளாதார இறையாண்மையைப் பாதுகாத்திடுவதற்காகவும், மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து போராடும். இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்படும். மக்கள் பிரச்சனைகளின்பால் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன், கட்சி தன்னுடைய ஒன்றுபட்ட நடவடிக்கைகளையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்திடும்.
தேர்தல் முடிவுகளுக்குப்பின்னர், மேற்கு வங்கத்தில் கட்சியின் மீதும் இடதுசாரிக் கட்சிகள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மே 16க்கு முன்னர், 26 தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், அலுவலகங்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்கள் மீது தாக்குதல்கள் விரிவடைந்துள்ளன. கட்சி ஊழியர்களை மிரட்டி, அடக்கி மக்கள் மத்தியில் அவர்களது செயல்பாடுகளை முடக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் உதவியுடன் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை கட்சியும் இடது முன்னணியும் உறுதியாக தடுத்து நிறுத்திடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுமுன்னணிக்கும் ஏற்பட்டுள்ள பின்னடைவினால் கம்யூனிச எதிர்ப்பு முகாம்கள் குதூகலமடைந்திருக்கின்றன. இதற்குமுன்னரும் பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற பல சிரமமான காலகட்டங்களிலிருந்து மீண்டு வந்திருக்கின்றன. ஏகாதிபத்தியம், மதவெறி மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்தி தொழிலாளர் வர்க்கத்தின் லட்சியத்திற்காக உறுதியுடன் நின்று முன்னேறி வந்திருக்கின்றன. இந்தத் தேர்தல் தோல்விகளின் மூலமாக கட்சி பெற்றிடும் படிப்பினைகள், மக்களுக்கான போராட்டங்களை முன்னிலும் வீர்யத்துடன் நடத்திடக்கூடிய வகையில், கட்சியை மேலும் உருக்குபோன்று உறுதிப்படுத்திடும்.

தமிழில்: ச.வீரமணி

Friday, April 24, 2009

இலங்கை அரசு உடனடியாகப் போரை நிறுத்திட வேண்டும் -இந்திய அரசு, இதற்கு இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும்: பிரகாஷ் காரத்



புதுடில்லி, ஏப். 24-
இலங்கை அரசு, உடனடியாகப் போரை நிறுத்திட வேண்டும், இதற்கு இந்திய அரசு, இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசியல் தலைமைக்குழு சார்பில் செய்தி அறிக்கையை வெளியிட்டு, பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் சிக்கிக்கொண்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சொல்லொணா அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்பு கவுன்சில், இலங்கை அரசாங்கத்தை உடனடியாகப் போரை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். போரை உடனடியாக நிறுத்திட வேண்டும், எல்டிடிஇ-இனரால் வலுக்கட்டாயமாக இருத்தி வைக்கப்பட்டுள்ள மக்களையும் பாதுகாத்திட வேண்டும். எல்டிடிஇ-இனர் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில் அவர்களிடமிருந்தும் போர் நிறுத்தத்திற்கான அறைகூவல் வர வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாமிட்டுள்ள பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் உட்பட அனைத்து நிவாரணக் குழுக்களையும் அனுமதித்திட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது இப்போது நம்முன் உள்ள தலையாயக் கடமை என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எல்டிடிஇ-இனரும் தங்கள் பயனற்ற எதிர்ப்பினை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கமானது, தன்னுடைய அயல்துறைச் செயலாளரையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இவர்கள் மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்தை மேலும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இலங்கை அரசாங்கத்திடம் போரை உடனடியாக நிறுத்திடுமாறும், எல்டிடிஇ-இனரிடம் நிராயுதபாணியாகி சரணடைந்திடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கடுமையாக இருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவிடும் வகையில் சர்வதேச உதவி அமைப்புகள் வருவதற்கு இலங்கை அரசு அனுமதித்திட வேண்டும். இவற்றை இலங்கை அரசு நிறைவேற்றிட, இந்திய அரசு அதிகபட்ச அளவிற்கு நிர்ப்பந்தத்தை அளித்திட வேண்டும்.
எல்டிடிஇ சரணடைந்தால்தான் போர் நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்று இலங்கை அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. எல்டிடிஇ வலுவிழந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவும் வகையில் அரசு போரை நிறுத்திட வேண்டும். இது மிகவும் அவசரமாகச் செய்யப்பட வேண்டும். இவ்வாறு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய அரசு தலையாய முன்னுரிமை கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
இலங்கை அரசு போர்நிறுத்தம் (ceasefire) செய்ய முன்வர வேண்டும் என்று ஏன் கோரவில்லை என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, போர்நிறுத்தம் (ceasefire) என்பது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் உடன்பட்டு மேற்கொள்வது என்றும், எல்டிடிஇ-இனர் இதற்கு உடன்படாத நிலையில் இவ்வாறு செய்ய முடியாது என்றும் எனவேதான் எல்டிடிஇ-இனர் உடன்படாவிட்டாலும், போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போர் இடை நிறுத்தம் (cessation of hostilities) என்கிற வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்றும் பிரகாஷ் கூறினார்.
(ச.வீரமணி.)

Monday, April 13, 2009

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத - மாற்று அணிக்கு -ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது-பிரகாஷ்காரத்


பதினைந்தாவது மக்களவைக்கான முதல் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நடைபெறும் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதென்பது தெளிவாகியுள்ளது. காங்கிரசும், பாஜகவும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சொல்லியதுபோல இது ஒன்றும் இரு அணிகளுக்கு இடையிலான தேர்தலாக இல்லை. மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜகஅல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து, காங்கிரசுக்கும், பாஜக-விற்கும் பல மாநிலங்களில் சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. காங்கிரசும் பாஜக தலைமையும் மூன்றாவது அணி மீது தாக்குதல்களைத் தொடுத்த பின்னணியில் இத்தகு நிலைமை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மூன்றாவது அணியைத் தாக்கிக் கொண்டிருந்திருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் அமைப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய கூட்டணிகளுக்கு கொள்கையோ திட்டமோ கிடையாது என்றும் இது நாட்டிற்குப் பேரிடர் ஏற்படுத்திவிடும் என்றும், கூறியிருக்கிறார். எல்.கே. அத்வானி, பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில், மூன்றாவது அணியை ஒரு ‘‘கேலிக்குரிய மாயை’’ என்று அழைத்திருக்கிறார்.
இவ்வாறாக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவற்றை மதிப்பிழக்கச்செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளும் ஆறு மாநிலக் கட்சிகளும் பல மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு கொண்டிருப்பதானது, காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாபெரும் சவாலாக எழுந்துள்ளதுதான், இவ்விரு கட்சிகளுமே மூன்றாவது அணியைத் தாக்குவதற்குக் காரணமாகும். அவர்கள் கூறுவதுபோல, மூன்றாவது அணி என்பது ஒரு மாயையாக இருந்தாலோ அல்லது கோட்பாடற்ற கதம்பக் கூட்டணியாக இருந்தாலோ, பின் ஏன் இவ்விரு கட்சிகளும் இந்த அளவிற்குத் தாவிக் குதிக்கின்றன?
இவர்களின் கோபத்திற்கான விடையை, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்வதன் மூலம் காண முடியும். 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரசுக்கு 26.53 சதவீத வாக்குகளும், பாஜக-விற்கு 22.16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இவ்விரு கட்சிகளின் வாக்குகளையும் இணைத்தால்கூட அது 48.67 சதவீதம்தான், அதாவது 50 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் வருகிறது. இவ்விரு கட்சிகளும், கணிசமான அளவில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளைத் தங்கள் பக்கத்தில் இருத்திக்கொள்ளவில்லையெனில், அவற்றின் வெற்றிவாய்ப்பு என்பது கானல் நீர்தான்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் பல அதனைக் கழட்டிவிட்டுவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் திமுக-வுடனும், ஜார்கண்டில் ஜேஎம்எம்-உடன் ஒருவிதமான உடன்பாடும் கண்டிருக்கிறது. தேசியவாதக் காங்கிரசைப் பொறுத்தவரை, மகாராஷ்ட்ரா மற்றும் கோவாவில் மட்டும் உடன்பாடு கொண்டிருக்கிறது. மற்றமாநிலங்களில் அது காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுகிறது. காங்கிரசின் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானுடன் கைகோர்த்துக் கொண்டு, காங்கிரஸ் தற்போது தக்க வைத்துள்ள மூன்று இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. உத்தரப்பிரதேசத்திலும், அதன் மற்றொரு கூட்டாளிக்கட்சியான, சமஸ்வாதிக் கட்சி, சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் இரு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, ஒரிசாவில் பிஜூஜனதா தளத்திடமிருந்து வந்த தாக்குதலிலிருந்து அது இன்னமும் மீளவில்லை. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள், இடதுசாரிகளுடன் இணைத்து, பல மாநிலங்களிலும் வீறுகொண்டு எழுந்துள்ளன. ஆந்திராவில் தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் பாமக, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரிசாவில் பிஜூஜனதா தளம் ஆகியவற்றுடன் சேர்ந்து வலுவான கூட்டணிகளாக மாறியுள்ளன.
ஐமுகூ போலல்லாத, தேர்தலுக்கு முன்பே ஒரு வலுவான கூட்டணியாக இது மாறியிருக்கிறது. இது, தேர்தலுக்குப்பின்னர் மேலும் ஒரு முழுமையான வடிவத்தைப் பெறும். இவ்வாறாக, மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளின் கூட்டணியானது ஒரு யதார்த்தபூர்வமானதாக மாறியிருக்கிறது.
காங்கிரசும், பாஜகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இவை ஒன்றையொன்று, தத்தம் தேர்தல் அறிக்கையை மற்றது காப்பியடித்துவிட்டதாகக் குறைகூறிக் கொண்டிருக்கின்றன யாரை, யார் காப்பியடித்திருக்கிறார்கள் என்பது மக்களைப் பொறுத்தவரைக்கும் தேவையில்லாத ஒன்று. ஆனால், குறித்துக்கொள்ளவேண்டிது என்னவென்றால், இவை இரண்டுமே, ஒரே மாதிரியானவை - அதாவது ஒரே மாதிரியான உறுதிமொழிகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்பதாகும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அளித்து வந்த எதிர்ப்பினை பாஜக விலக்கிக் கொண்டிருப்பதிலிருந்து இதனைத் தெளிவாகக் காண முடியும். பாஜக-வானது, அணுசக்தி ஒப்பந்தம் மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. 2008 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது இத்தகு நிலைப்பாடு அவர்கள் மேற்கொண்ட ஒன்றாகும். ஆயினும், தேர்தல் அறிக்கையில், இந்தக் கோரிக்கையை பாஜக கைவிட்டுவிட்டது. பாஜக ஆட்சியிலிருந்த சமயத்தில், அயல்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், ஒருபடி மேலேயே சென்று, அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை ரத்து செய்திட முடியாது என்றே கூறியிருக்கிறார். இவ்வாறாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதில் ஒத்த கருத்துடன்தான் இருக்கின்றன.
இத்தகைய பொதுவான அணுகுமுறை மற்ற பல அடிப்படைக் கொள்கைகளுக்கும் விரிவடைகின்றன. உதாரணமாக, காங்கிரசும் சரி அல்லது பாஜகவும் சரி, தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துதல் குறித்து எதுவுமே கூறிடவில்லை. நாடாளுமன்றத்திற்கான தேர்தல்அறிக்கையில் காங்கிரஸ் கட்சியானது நிலச்சீர்திருத்தம் குறித்து எதுவுமே கூறாதது இதுதான் முதல்தடவை. நாட்டின் இரு முதலாளித்துவ கட்சிகளின் மத்தியில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்பதையும், நிலச்சீர்திருத்தம் குறித்து உதட்டளவில் கூறுவதற்குக்கூட அவை தயாராயில்லை என்பதையுமே இவை காட்டுகின்றன.
இரு கட்சிகளுமே மீண்டும் அனைவருக்குமான பொது விநியோகமுறையை அமல்படுத்தத் தயாரில்லை. இப்போது உள்ளதுபோன்ற மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற பொது விநியோக முறையையே அமல்படுத்துவதைத் தொடரவும், இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினைரை பொது விநியோக முறைக்கு வெளியில் நிறுத்திடவும் அவை முடிவு செய்திருக்கின்றன என்பதும் அவற்றின் தேர்தல் அறிக்கைகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.
இரு கட்சிகளுமே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் இருக்கின்றன. அதனால்தான் அவை தங்கள் தேர்தல் அறிக்கைகளில், மத்திய மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.
இவ்வாறாக இரு கட்சிகளுமே மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவேதான், மூன்றாவது அணி மக்கள் மத்தியில் வலிவும் பொலிவும் பெற்று மிகவும் வீறுகொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, March 24, 2009

மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைத்திடுவோம் - இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல்


புதுடில்லி, மார்ச் 24,
மத்தியில் மதச்சார்பற்றஅரசாங்கத்தை அமைத்திடுவோம் என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சார்பில் செய்தியாளர்கள் கூட்டம் செவ்வாயன்று மதியம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் டி.ராஜா, பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரத பிஸ்வாஸ் மற்றும் தேவராஜன், ஆர்எஸ்பி சார்பில் சந்திரசூடன் மற்றும் அபானிராய் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘இடதுசாரிக் கட்சிகள் சேர்ந்து, பதினைந்தாவது மக்களவைக்கான அறைகூவலை விடுக்கிறது. இவ்வனைத்துக் கட்சிகளும் தேர்தலையொட்டி ஏற்கனவே தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றிணைந்து இடதுசாரிக் கட்சிகள் புரிந்திட்ட பங்களிப்பினையும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் விவாதித்து, தங்களுக்கு அளித்திருக்கிறோம். எனவே அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில்ல ஐமுகூ அரசாங்கத்துடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து அம்சங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டிருக்கின்றன. ஐமுகூ அரசாங்கம் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுத்தபோதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் உரிய நேரத்தில் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன. ஐமுகூட்டணி குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு எதிராகச் சென்றபோதெல்லாம் அதனைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில் இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றியிருக்கிறோம் என்பதையும் அதேபோன்று நாட்டின் இறையாண்மை யையும், மக்களின் நலன்களையும் வாழ்வாதாரத்தையும் இடதுசாரிக் கட்சிகள் காப்பாற்றி இருக்கின்றன என்பதையும் இன்றையதினம் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இரண்டாவதாக, பாஜக மற்றும் அதனுடன் இணைந்த மதவெறி சக்திகளும் மக்கள் மத்தியில் மதவெறி உணர்வை எழுப்ப முயற்சித்த போதெல்லாம் அவற்றை உறுதியாக எதிர்த்துநின்று அவற்றின் செயல்பாடுகளில் உள்ள கேடுபயக்கும் அம்சங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வந்துள்ளோம்.
மூன்றாவதாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ஒரு பரந்த மேடையையும் கட்டியிருக்கிறோம்.
இத்தகைய மாற்றுக் கொள்கைகள், ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் அமைப்பதற்கான அடிப்படையாக அமைந்திடும் என்று நாங்கள் நம்புகிறோம். பொருளாதாரக் கொள்கைகள், சமூகநீதி மற்றும் சமூகநலக் கொள்கைகள், சுயேட்சைமயான அயல்துறைக் கொள்கை மற்றும் முக்கிய பல அம்சங்களை வடித்திருக்கிறோம். இதன் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளை வலுப்படுத்தி, மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திட அனைவரும் முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
ஏ.பி.பரதன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசியதாவது:
‘‘இன்றையதினம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இடதுசாரிக் கட்சிகள் எதிர்மறை அணுகுமுறையோடு நடந்துகொண்டதாக விமர்சித்திருக்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டமுன்வடிவுகளை யெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தகவல் அறியும் சட்டமுன்வடிவாக இருந்தாலும் சரி அல்லது தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவாக இருந்தாலும் சரி அல்லது பழங்குடியினர் வனஉரிமைகள் பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும் சரி அவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதன் ஷரத்துக்கள் எங்ஙனம் இருந்தன, இடதுசாரிக் கட்சிகள் அவற்றில் தலையிட்டு, உரிய திருத்தங்களைச் செய்தபின் அதன் ஷரத்துக்கள் எங்ஙனம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றும் பாருங்கள். எந்த அளவிற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கின்றன என்பது புரியும். இவ்வாறு உண்மையில் இடதுசாரிக் கட்சிகள் ஆக்கபூர்வமாகத்தான் செயல்பட்டிருக்கின்றனவே ஒழிய, எதிர்மறையில் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியாளர்கள் பல பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க முயற்சித்தார்கள். அதனை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியுள்ளன. இது ஆக்கபூர்வமான அணுகுமுறையா அல்லது எதிர்மறையான அணுகுமுறையா என்று கேட்க விரும்புகிறேன்.
வங்கித்துறையில், இன்சூரன்ஸ் துறையில் ஒட்டுமொத்தத்தில் நிதித்துறையில் தனியார் பங்குகளை அதிகரித்த ஆட்சியாளர்கள் முயற்சித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதன்மூலம் வங்கித்துறையைக் காப்பாற்றியுள்ளோம்.
இவ்வாறு இடதுசாரிக்கட்சிகள் ஆக்கபூர்வiமாகச் செயல்பட்டு உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் காப்பாற்றியிருப்பது இடதுசாரிக் கட்சிகள்தான். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் செயல்படாதிருந்திருந்தால் இந்தியாவின் பொருளாதாரமே நிலைகுலைந்து போயிருக்கும்.
எதிர்காலத்தில் நாட்டின் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட, மதச்சார்பற்ற ஜனநாயகம் காக்கப்பட, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராடி வந்துள்ளன.
இவ்வாறு கடுமையாகப் போராடிவரும் இடதுசாரிக் கட்சிகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பதினான்காவது மக்களவையில் இருந்த உறுப்பினர்களைவிட அதிக அளவில் பதினைந்தாவது மக்களவையில் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பிவைத்திடுமாறு இந்திய மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார்.
---