Showing posts with label Covid-19. Show all posts
Showing posts with label Covid-19. Show all posts

Thursday, May 20, 2021

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? -மருத்துவர் மாத்யு வர்கீஸ்

 


கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை

சீனா ஏன் தோல்வியுறவில்லை?

-மருத்துவர் மாத்யு வர்கீஸ்

தமிழில்: ச.வீரமணி

[தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கருதும் மருத்துவர்கள் ஒருசிலரேயாகும். அதில் மருத்துவர் மாத்யு வர்கீஸ் ஒருவர். மருத்துவர் மாத்யு வர்கீஸ், பொது சுகாதார வல்லுநரும், புதுதில்லி, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் இயக்குநருமாவார். இப்போது நாட்டில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடர்பாக ஃப்ரண்ட்லைன் செய்தியாளர், டி.கே.ராஜலட்சுமி அவர்களிடம் அவர் அளித்த நேர்காணல்:]

கேள்வி: கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டை மீறி ஏன் மற்றும் எப்படிப் போனது? சென்ற ஆண்டு செப்டம்பரின் மத்தியிலேயே இத்தொற்று மிகவும் வேகமாகப் பரவியதிலிருந்தே இதன்மீது அரசாங்கம் செயல்படுவதற்கு நேரம் இருந்ததே!

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: நாட்டில் எவரேனும் ஒருவர் அரசாங்கத்தின் கொள்கையை அல்லது அரசாங்கத்தின்மீது குறைகாண முயற்சித்தார் என்றால், பின்னர் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர், அரசாங்கத்தின்மீது குறை சொல்லும் அளவிற்குச் சென்றால், பின்னர் அவர் அரசாங்கத்திற்கு வேண்டப்படாத நபராக மாறிவிடுகிறார். உண்மையான ஜனநாயகம் என்பது இதில் எதுவும் கிடையாது. சிந்தனைகள் வெளிப்படைத்தன்மையுடனும், துல்லியமாகவும், நேர்மையாகவும் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பவர்கள் மீது அரசாங்கம் பாயக்கூடிய விதத்தில் நம் நாட்டின் ஜனநாயக அமைப்புமுறை இருந்து வருகிறது. நம்மைப்போன்ற ஒரு நாட்டில் மக்களை எப்படி சௌகரியமாக வைத்திருப்பது என்றும், அவர்களின் துன்ப துயரங்களை எப்படிக் குறைப்பது என்றும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் நான் இதனைப் பார்க்கிறேன்.

நள்ளிரவில் 1.30 மணிக்கு எனக்கு ஒரு சிறுவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவருடைய அம்மாவைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். என் தொலைபேசி எண் அவனுக்கு எப்படித்தெரிந்தது என எனக்குத் தெரியவில்லை. அவன், அவனுடைய அம்மாவிடம் சாய்ந்துகொண்டு மூச்சை இழுத்து விடுமாறு கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான். இதுபோன்ற நிலைமைகள் மிகவும் கொடியது. ஒரு குழந்தை தன் தாய் தன் கண் முன்னாலேயே இறப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். என்னே கொடுமையான விஷயம்! உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்ட எங்களால், என்ன செய்ய முடியும்? நோயுற்றிருப்பவர்களைக் கவனித்தக்கொள்பவர்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள். நிலைமைகள் மிகவும் மனதைக் கசக்கிப் பிழிகின்றன. எந்த அரசாங்கமாக இருந்தாலும், அதன் சித்தாந்த நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், இதுபோன்ற நிலைமை நடக்கக்கூடாது என்பதை நாம் உத்தரவாதம் செய்திட வேண்டும். சுகாதார அமைப்புமுறை உரியவிதத்தில் இருக்க வேண்டும். நோய்க்கு ஆளாகி வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் துன்பதுயரங்களைத் தணிக்கும் விதத்தில் வசதிகள் அமைந்திருக்க வேண்டும். இப்போது இதுபோன்ற நிலைமை இல்லை. எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்து, இந்த அமைப்புமுறையைச் சரிசெய்வதில் இருக்கின்ற குறைகள் என்ன என்று ஆராய்ந்து  அதனைக் களைந்திட வேண்டும்.

கேள்வி: பல ஆண்டு காலம் ஒரு மருத்துவராக இருந்து அனுபவப்பட்டுள்ள நீங்கள், இதுபோன்று முன்னெப்போதும் இருந்ததில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: இதற்கு முன் இதுபோன்றதொரு நிலைமையை நாம் எப்போதும் சந்தித்ததில்லை. ஒரு நோயாளியின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, தன்னுடைய கணவரின் ஆக்சிஜன் செறிவூட்டல் அளவு வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவர்கள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் (concentrators) வைத்திருக்கிறார்கள். அவர் மேலும் தன் கணவரின் செறிவூட்டல் அளவு 83 என்றும் கூறினார். நான் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்றேன். ஆனால் ஆம்புலன்ஸ் வண்டிகளே கிடைக்கவில்லை. அது நள்ளிரவு. ஆக்சிஜன் செறிவூட்டல்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் அமைப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது செயல்படவில்லை. அந்த நோயாளியின் உறவினர் ஒருவர் அவருடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கை கிடைக்கவில்லை. இதுபோன்று நெஞ்சைப் பிழிந்திடும் நிகழ்வுகள் பலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். 

ஒரு 30 வயது பெண்மணி. அவர் கருவுற்று 32 வாரங்கள் ஆகின்றன. அவருடைய ஆக்சிஜன் செறிவூட்டல் அளவு 80ஆக இருக்கிறது. எனவே அவரை ஏதேனும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம். ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை அனுமதித்திடவில்லை. காரணம் அவரை அனுமதிப்பதற்குத் தேவையான ஐசியு படுக்கைகள் அவர்களிடம் இல்லை. அந்தக் குடும்பம் ஒரு ஆம்புலன்சிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்த ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. பின்னர் அவர் வேறொரு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். அப்போது பானிபட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியு படுக்கை காலியாக இருப்பதாக செய்தி வந்து அங்கே அவரை கொண்டு சென்றார்கள். அதற்குள் செறிவூட்டல் அளவு 70க்கு வந்துவிட்டது. பின்னர் அவர் வயிற்றில் உள்ள சிசுவுடன் இறந்துவிட்டார். இதுபோன்று ஒவ்வொரு நாளும் ஏராளமான கதைகளுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஏன் இந்த அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன? தில்லி இந்த அளவுக்கு மோசமான நிலையை எதிர்கொள்ளாது என்று அனைத்துத்தரப்பினர்களும் கருதினார்களா?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: ப்போது வந்துள்ள அலை மிகவும் வேகமாகப் பரவும் தொற்று ஆகும். முன்பு வந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்தக் குடும்பத்தில் ஒருவர்தான் தொற்றுக்கு ஆளானார். ஆனால் இப்போது வந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் தாக்குகிறது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வருபவர்களையும் அது தொற்றிக்கொள்கிறது. வைரஸானது அதீதமான தொற்றோடு இல்லாதிருந்தால் இது நடக்காது. இத்தொற்று 80 சதவீதம் லேசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. ஆனால் 20 சதவீதம் மிகவும் சீரியசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இவ்வாறு பீடிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அவசியம். நோய்த்தொற்று வெளியே தெரியாது இருப்பவர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகையால் ஒரு குடும்பத்தில் அனைவரும் ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டால், ஒருவர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார். 

முன்பு வந்த முதல் அலையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமாவதற்கு ஏழு நாட்களாயின. ஆனால் இரண்டாவது அலை தொற்றிக்கொண்டால், நான்கைந்து நாட்களிலேயே நிலைமை மோசமடைந்து விடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் நிறைய பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சென்ற முறை மருத்துவமனைகளில் இவ்வளவு நெருக்கடி இல்லை. இந்தத்தடவை வசதிபடைத்தவர்களுக்குக்கூட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை.

கேள்வி: மருத்துவமனைகளில் உள்ள சாதாரண படுக்கைகளுக்கும், ஐசியு படுக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துவிட்டால் என்ன செய்வது?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: நான், செயிண்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனையில் இயக்குநராக இருந்த காலத்தில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்த விஷயங்களில் ஒன்று, நோயுற்றிருப்பவரிடம் எங்கள் மருத்துவமனையில் ஒரு வெண்டிலேட்டர் இல்லை என்று கூறுவதாகும். இதற்கு எப்போதும் பற்றாக்குறை இருக்கும். எந்தவொரு மருத்துவமனையாக இருந்தாலும், 10-15 சதவீதப் படுக்கைகள்தான் ஐசியு-க்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இவற்றிலும் சிலவற்றில்தான் வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்து, வெண்டிலேட்டர்கள் இயக்கும் ஊழியர்கள் கிடைப்பது என்பதும் அரிது. வழக்கமான மருத்துவர் ஒருவரால் அதனை இயக்கிட முடியாது. நான் கணிசமாக சில ஆண்டுகள் பயிற்சி பெற்று மருத்துவராக இருந்தவன்தான். ஆனால் எனக்கும் ஒரு வெண்டிலேட்டரை இயக்கத் தெரியாது.  எனவே ஒரு மருத்துவமனையில் வெண்டிலேட்டர்கள் வாங்க முன்வந்தாலும், அவற்றை இயக்கும் ஊழியர்களை அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது.

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றே காரணமாகும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வைத்திருப்பதனை எதிர்பார்த்துத் திட்டமிட்டிருக்க முடியும். ஏற்கனவே இவை மிகவும் குறைவாக இருந்தன. மேலும் நோய்த்தொற்றாளர்களைக் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சிபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் பற்றாக்குறையுடன் காணப்படுகிறது.

வெண்டிலேட்டர்கள் உயர்தொழில்நுட்பக் கருவியாகும். இதன் விலை சுமார் 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரைக்கும் இருந்திடும். சாதாரணமாக அடிப்படையான வெண்டிலேட்டரை 7 லட்சம் ரூபாய்க்குப் பெற்றிடலாம். ஆனால், உயர்தொழில்நுட்ப வெண்டிலேட்டர்தான் இப்போது நமக்கு மிகவும் தேவையாகும். அநேகமாக இப்போது பல மருத்துவ மனைகளில் உள்ள வெண்டிலேட்டர்களால் பயனேதும் இல்லை.  உயர்தொழில்நுட்ப வெண்டிலேட்டர்களின் தேவை ஒவ்வொரு நகரத்திற்கும் தேவைப்படுகிறது. மேலும் அதனை இயக்கிடும் ஊழியர்களும் மிகப் பெரிய அளவில் தேவைப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் முதல் அலை வந்தபோதே நாம் வெண்டிலேட்டர்களின்றி சிரமப்பட்டோம். அப்போதும் ஐசியு படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பெரிய பிரச்சனையாகத்தான் இருந்தது. ‘வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்கள் எப்போது சாவார்கள், நமக்கு இடம் கிடைக்கும்’ என்று மற்றவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். 

நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் அரசாங்கம் இதற்குத் திட்டமிட வேண்டும். இதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பப் பயிற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிறுவனங்களை ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறெல்லாம் செய்தாலும்கூட இப்போதிருந்திடும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானவை அல்ல.  தனிமைப்படுத்தப்பட வேண்டிய நோயாளிகள், லேசான பாதிப்புகளுடன் வரக்கூடிய நோயாளிகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரையும் எப்படி நாம் கையாளப் போகிறோம்? இப்போது எவரேனும் ஒருவரின் நோய்த்தொற்று சீரியசாகிவிட்டதென்றால், அவரை வைப்பதற்கு வெண்டிலேட்டர் இல்லை என்றால், அவருடன் வந்திருக்கும் உறவினர்களிடம் வெண்டிலேட்டர்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறோம். ஏழையாக உள்ள உறவினர்கள் இங்குமங்கும் ஓடுவதைத் தவிர அவர்களால் என்ன செய்ய முடியும்?

சிகிச்சையளித்திடும் நெறிமுறைகளே பேரிடர்க்கு ஆளாகியிருக்கிறது.  சிசிச்சை முறைகள் லேசாகப் பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், மிதமாகப் பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றன.  ஒருவரின் நிலை, லேசானதா, மிதமானதா அல்லது கடினமானதா என்பதற்கு அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவு அளவை வைத்து நிர்ணயித்திட வேண்டும்.

இப்போது நாம் என்ன பார்க்கிறோம்? அரசின் கொள்கை முடிவுகள் வலுவானவைகளாக இல்லை. உதாரணமாக, அனைத்து அரசாங்க மருத்துவமனைகளும் கோவிட் மருத்துவமனைகளாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ஒருவர் அங்கே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு கோவிட் தொற்று இருந்திட வேண்டும். பல இடங்களில் பல பேர் பொய்யாக ‘நெகடிவ்’ எனக் கூறப்பட்டிருக்கிறார்கள். எனவே உண்மையில் ‘பாசிடிவ்’ ஆகித் தொற்றுக்கு ஆளானவர்கள், சுதந்திரமாகச் சுற்றித்திரியும்போது தொற்றை அதிகப்பேருக்குப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் நிலைமைகள் கையை மீறிப் போய்விடுகின்றன.

எனக்கு உத்தர்காண்டில் ஒரு குடும்பத்தைத் தெரியும். அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் ‘பாசிடிவ்‘ என அறிவிக்கப்பட்டார்கள். பின்னர் உள்ளூரிலிருந்த நர்சிங் ஹோம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் கடைசியாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். குடும்பத்திலிருந்த அனைவருமே சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதால் அவர்களைப் பார்த்துக்கொள்ள எவருமில்லை. எனவே தில்லியிலிருந்த அவர்களின் சகோதரர், தன்னுடைய மகனுடன் அங்கே விரைந்தார். அவர்களைச் சோதனை செய்தபோது அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டார்கள். கடைசியல் சகோதரர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள், ஒருவர் தில்லியிலும், ஒருவர் ரிஷிகேஷிலும் இறந்துவிட்டார்கள். இவர்களுக்கு சிகிச்சையளித்திடும் மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போமோ என்று பயந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்குப் பர்சனல்  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் நோயாளிகளைத் தொடுவதில்லை  என்ற போதிலும், இந்தப் பயம் அவர்களிடம் காணப்படுகிறது.

கேள்வி: கோவிட் சிகிச்சைக்கான நெறிமுறைகளுடன் நீங்கள் ஒத்துப்போகவில்லையா?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: ஐவர்மெக்டின் (Ivermectin) எதற்கான மருந்து என்று பார்த்திருக்கிறீர்களா? இணைய தளத்தில் தேடிப்பாருங்கள். அது ஒட்டுண்ணி, உருளைப்புழு, நாக்குப்பூச்சி போன்ற ஒட்டுண்ணி தொடர்பான தொற்றுகளுக்கானதாகும். இது கோவிட்-19ஐக் குணப்படுத்தும் என்பதற்கு எந்த சாட்சியமும் கிடையாது. அந்த மருந்துகளே சந்தேகத்திற்குரியவை களாகும்.   

அதேபோன்றே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா தெரபி (plasma therapy) சிகிச்சை, பிளாஸ்போ தெரபி (plasbo therapy) சிகிச்சையைவிட அதிக வலுவுள்ளது என்பதற்கும் எவ்விதமான சாட்சியமும் கிடையாது என்று கூறியிருக்கிறது. பின் ஏன் இந்த மருந்துகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை? பிரச்சனை என்னவென்றால் இப்போதுள்ள சிகிச்சை நெறிமுறைகளின்படி மருத்துவர்கள் இதைத்தான் பரிந்துரைப்பார்கள். ஒரு நோய் புதிதாக இருக்குமானால், அந்த நோய் குறித்து போதுமான புரிதல் மக்கள் பெற்றிருக்கமாட்டார்கள். இதுபோன்ற சமயங்களில் மக்களும் இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.   

ஹார்வார்ட் மற்றும் ஸ்டான்போர்டு போன்ற நிறுவனங்களில் எலும்பியல் துறையில் 30 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவருமே மருத்துவத்துறையைச் சார்ந்த எலும்பியல் மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்களில் 15 பேர் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியர்களாக இருப்பார்கள். இதுபோன்று நம் மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சி மாணவர் குழுக்கள் கிடையாது. இங்கே இது மிதமிஞ்சிய ஒன்றாகக் கருதப்பட்டது. முன்பெல்லாம் வேலைகள் உத்தரவாதமாக இருந்தன. மத்திய அரசின் தேர்வாணையம் (UPSC) மூலம் நியமனம் செய்யப்படுபவர்கள் எல்லாம் நிரந்தரப்படுத்தப்பட்டனர். இன்றையதினம், அனைத்துப் புதிய நியமனங்களும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன. ஓய்வூதியத்திற்கு வாய்ப்பு இல்லை. இந்த மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தாண்டு காலம் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் யார் சிறந்த மருத்துவர்கள் என்று அநேகமாக அனைவருக்கும் தெரியும். பின்னர் அவர்களைத் தனியார் மருத்துவமனைகள் வேட்டையாடித் தங்கள் மருத்துவமனைகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறாக இப்போது நாட்டில் மருத்துவத்துறையில் கார்ப்பரேட்மயம் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஒருவருக்கு ஓய்வூதியம் இல்லை என்கிற பட்சத்தில், அவர் கார்ப்பரேட் துறைகளில் வேலைக்குச் சேர்ந்து எந்த அளவிற்கு சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்.

கேள்வி: உலகில் நன்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளே சுகாதார அமைப்பில் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்றும், எனவே இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறதே!

மருத்தவர் மாத்யு வர்கீஸ்: ஆம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப்பொறுத்தவரை அதுதான் நடந்திருக்கிறது. சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதுதான். ஆனாலும், அவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் திண்டாடுகிறார்களா? இல்லை. பெரிய மருத்துவமனைகள் அனைத்தும் தங்கள் சொந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இங்கே என்ன நிலைமை? தில்லியில் நஜாப்கர் சாலையில் செயல்பட்டுவந்த பெரிய இந்தியன் ஆக்சிஜன் லிமிடெட் ஆலை மூடப்பட்டுவிட்டது. அங்கேயிருந்த மாசு உண்டாக்கும் அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டதால், அதுவும் மூடப்பட்டுவிட்டது.

500 படுக்கைகளுக்கு  மேல் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் ஆலைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனைக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமாக அரசாங்கம் அறிவித்திட வேண்டும். 

இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையில் சீனா ஏன் தோல்வியுறவில்லை. அவர்களிடம் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது என்றோ பர்சனல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றோ எவரும் கூறமுடியாது. அங்கே பெரிய அளவில் மக்கள் புலம்பெயர்ந்து செல்லவில்லை. அவர்கள் எந்த நோயாளியையும் சிகிச்சை செய்யாமல் துரத்தி அனுப்பிடவில்லை.  மேற்கத்திய நாடுகள் ஒருவரை சிகிச்சைக்காக அனுமதித்திட சில நிபந்தனைகளை வைத்திருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்துவிட்டால் அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் டிராலிகளிலும், ஆம்புலன்ஸ்களிலும் நோயாளிகள் இறந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுகாதார அமைப்புமுறை எக்காரணம் கொண்டும் தனியார்மயமாகக்கூடாது.

(நன்றி: ஃப்ரண்ட்லைன்)

 

Friday, May 8, 2020




கொரானா வைரஸ் தொற்றை முறியடிப்பதில்
மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்கும்
-சீத்தாராம் யெச்சூரி
மூக முடக்கம் மே 17 வரைக்கும் நீட்டிக்கப்பட்ட போதிலும், மே 4க்குப் பின்னர் கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப்பட்டிருக்கின்றன.  இது அநேகமாக எதிர்பார்த்த ஒன்றுதான். மே 5 தேதியில், இந்தியாவில் 3,875 புதிய வழக்குகள் ஒரே நாளில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஒருவார காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் ஒரு நாளைய சராசரியுடன் ஒப்பிடும்போது இரண்டரை மடங்கு அதிகமாகும். மே 4க்கும் 5க்கும் இடையே 194 பேர் இறந்திருக்கின்றனர். இது இதுவரை ஒரு நாளில் இறந்தவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தொற்று பீடிக்கத் தொடங்கியபின்னர் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.
வெறுமனே சமூக முடக்கம் மட்டும் கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கோ பயன்தராது என்று நாம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறோம். சமூக முடக்கம், இத்தொற்றால் ஏற்படக்கூடிய கடும் பாதிப்புகளை ஒத்திவைத்திடும். அவ்வளவுதான். ஆனால் இதனைத் தடுத்திட வேண்டும் என்றால் அதற்கு அனைத்து மக்களையும் முறையாகவும், அறிவியல்பூர்வமாகவும் சோதனை செய்து, ‘பாசிடிவ்’  என்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களைப் பிரித்து,  முழுமையாகத் தனிமைப்படுத்தி வைத்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சிகிச்சை அளித்து, குணப்படுத்திட வேண்டும்.
கேரளா ஒரு முன் உதாரணம்
இதற்கு இடது ஜனநாயக முன்னணியின் தலைமையின் கீழ் கேரள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஓர் உதாரணமாகும்.   கொரானா வைரஸ் தொற்றின் ஆபத்தை மிகவும் வலுவானமுறையிலும், அறிவியல்பூர்வமாகவும் எதிர்கொண்ட ஒரு மாநிலம் என்றும், அதாவது, சோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, ஆதரவு அளித்த கேரளாவின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இந்தத் தொற்று வேகமாகப் பரவுவதற்கு முன்பே உரியமுறையில் முன்னெச்சரிக்கைகள் விடுத்தபோதும், ஆளும் பாஜக அரசாங்கம் அதனை முன்கூட்டியை தடுத்திட எவ்விதமான நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இத்தொற்று தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களை சோதித்துப் பார்த்திடும் விகிதம் நம் நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. (அதாவது, பத்து லட்சம் பேர்களில் 864 பேருக்கு மட்டும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது, ஸ்பெயினில் 41,332 பேர் என்பதுடன் ஒப்பிட்டால், நாம் எந்த அளவிற்குப் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது 2020 மே 5 தேதியக் கணக்கு.)
சமூக முடக்கம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை
சமூக முடக்கம் அறவிக்கப்பட்ட விதம்தான் புலம்பெயர் தொழிலாளர்களின் மிகவும் மோசமான நிலைமைக்குக் காரணமாகும். வெறும் 4 மணி நேர கால அவகாசத்தில் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதால் மாநில அரசாங்கங்களோ அல்லது மக்களோ இதனால் ஏற்படும் நிலைமைகளைச் சமாளிக்கத் தயாராயில்லாத நிலையில் இருந்தார்கள். திடீரென்று புலம் பெயர் தொழிலாளர்கள் வேலையையும், வருமானத்தையும், அவர்கள் தங்குமிடங்களையும் பறித்தது. இதனால் நிர்க்கதிக்கு உள்ளான அவர்கள் தொலைதூரங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று வீதிகளில் திரண்டார்கள். ஒருவிதத்தில், எந்த நோக்கத்திற்காக சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டதோ அதையே,  அதாவது கொரானா வைரஸ் தொற்றுக்கான நோய்க்கிருமிகள் பரவாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தையே,  மனிதர்களுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தையே, இது முறியடித்தது. சமூக முடக்கக் காலத்தை நம்முடைய சுகாதார வசதிகளை, சுகாதார ஊழியர்களுக்கான சுய பாதுகாப்புக் கருவிகள் பெறுதல், வெண்டிலேடர்கள் போன்றவற்றுடன்  போதுமான அளவிற்கு  மருத்துவ வசதிகளைப் பெருக்குதல்  ஆகியவற்றிற்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும். எனினும் இது நடக்கவில்லை. தேவையின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டிற்கு தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்திட கட்டளைகள் பிறப்பித்திருக்க வேண்டும். ஸ்பெயின் போன்று சில நாடுகள் அனைத்துத் தனியார் மருத்துவ வசதிகளையும் தேசியமயமாக்கும் அளவிற்கு சென்றிருக்கின்றன.
வேலைகளை இழந்து, பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றிட தேவையான அளவிற்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவுமே நடந்திடவில்லை. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு அடுத்த மூன்று மாத காலத்திற்கு, மாதந்தோறும் 7,500 ரூபாய் வீதம் ரொக்க மாற்று செய்யப்பட வேண்டும் என்று நாம் தொடக்கத்திலிருந்தே கோரிக் கொண்டு இருக்கிறோம்., மேலும், மத்திய அரசின் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் 77 மில்லியன் (7 கோடியே 70 லட்சம்) டன்கள் உணவு தான்யங்களை இலவச ரேஷன் மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பசியால் வாடும் மக்களைக் காப்பாற்றிட வேண்டும் என்றும் கோரி வருகிறோம்.
மத்திய அரசாங்கம், இவற்றைச் செய்திட முன்வருவதற்கு மறுத்திருக்கிறது. குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் பிரதமரின் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பல நூறாயிரம் கோடி ரூபாய்கள் வசூலிக்கப்பட்டிருக்கிறது, வசூலிக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இந்தத் தொகை, குரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு,  போதுமானதற்கும் அதிகமாகவே இருக்கும்.
அளவுக்கு மீறிய அதிகாரக் குவிப்பு
மத்திய பாஜக அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைக் கையாளும் விதம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. முதலாவதாக, மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக் கடந்த இரு காலாண்டுகளுக்கு அளித்திடாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதன் காரணமாக மாநில அரசாங்கங்கள், கொரானா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குப் போதிய நிதி வசதி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பது மாநில அரசாங்கங்கள்தான். மாநில அரசாங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமல் திடீரென்று தேசிய சமூகமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இப்போது பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் மாநில அரசாங்கங்களின் பொறுப்புதான் என்றும் எனவே அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசாங்கங்கள்தான் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் தான் உருவாக்கி இருக்கின்ற சிறப்பு நிதியத்திற்கு அனைத்து அரசு ஊழியர்களையும் கட்டாயப்படுத்தி ஒரு நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதிலிருந்து எவ்விதமான உதவியையும் இதுவரை செய்திடவில்லை.
மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பில், பாதிக்கும் மேலான தொகை ஏற்கனவே அறிவித்திருந்த மத்திய அரசுத் திட்டங்களுக்கானவையாகும். இந்தத்தொகை கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவேயாகும்.  இதனைக் குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவாவது, அதாவது சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்திட வேண்டும், அதன் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை அவைகள் மேற்கொள்வதற்குத் தாராளமான நிதி உதவியினைச் செய்திட வேண்டும்.
இதனைச் செய்திட மத்திய அரசு தவறும்பட்சத்தில், வருவாயைப் பெருக்கிட  மாநில அரசுகளுக்கு உள்ள ஒரேவழி  பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுவின் விலைகளை உயர்த்துவதுதான். இது, ஏற்கனவே கொரானா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்களின்  துன்பதுயரங்களையும், சுமைகளையும் மேலும் அதிகப்படுத்திடும்.
இவையெல்லாவற்றையும்விட மிகவும் மோசமான விஷயம், இப்போது புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்டிருக்கிற சிறப்பு ரயில்களுக்கான போக்குவரத்துக் கட்டணத்தை மாநில அரசுகளே அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகும். இது கிரிமினல்தனமானதாகும். இது, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் 360ஆவது பிரிவின்கீழான நிதி அவசரநிலையாகும். இது, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக வலுவாகப் போராடுவதற்கான நம் சக்தியை ஆழமானமுறையில் அரித்துவீழ்த்துகிறது.
மாநில அரசாங்கங்களுக்கு நிதி உதவிகளை உடனடியாகச்செய்திட வேண்டும். ஆனால், மத்திய அரசாங்கம், இதனைச்செய்வதற்குப் பதிலாக, சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக இந்தியன் ரயில்வே 85 சதவீத செலவினத்தைச் செய்திருப்பதாக நொண்டிச் சமாதானங்களைக் கூறிக் கொண்டிருக்கிறது. ரயில்வே போக்குவரத்து மக்கள் பொதுப் போக்குவரத்தாகும். இதன் செலவினங்களை வெறும் லாப நட்டக் கணக்காகப் பார்க்கக் கூடாது. உலகில் உள்ள நாகரிகமான நாடுகள் அனைத்துமே பொதுப் போக்குவரத்தை ஒரு சேவையாகவும், மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசையாகவும் தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன.
மே 5 அன்று, உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை மீதான பொதுநல மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு நிதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்திடம் போக்குவரத்துக் கட்டணத்தை மாநில அரசுகள்தான் தர வேண்டும் என்று கூறி நீதிமன்றம் கூறியதை ஏற்க மறுத்திருக்கிறது. மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெற்ற தொகை எவ்வளவு என்று நீதிமன்றத்திடம் கூறவும் மறுத்துவிட்டது. இதன் விவரங்களை வெளிப்படுத்தவதற்கு தனக்கு எவ்விதமான அறிவுரைகளும் அரசால் வழங்கப்படவில்லை என்று அரசு வழக்குரைஞரான அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுதான் பாஜக அரசாங்கத்தின் இரட்டை வேடம். பொய்ப்பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களைச் சார்ந்தே அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
பாஜகவிற்கு கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையைத் தவிர வேறெந்த சிந்தனையும் கிடையாது
கொரானா வைரஸ் தொற்றுக் காலத்தில்கூட மக்களின் நலன்கள் குறித்தோ மற்றும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்தோ கவலைப்படாது, மத்திய அரசாங்கத்தின் ஒரே சிந்தனை தன்னுடைய கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான். கோடானுகோடி மக்கள் வறிய நிலைக்கும், பசி-பஞ்சம்-பட்டினி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு எவ்விதமான நிதி உதவியும் செய்ய மறுத்திடும் அதே சமயத்தில், மத்திய அரசாங்கம், தேசிய சமூக முடக்கக் காலத்திலும்கூட, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கியிருந்த கடன் தொகையான 68 ஆயிரத்து 800 கோடி ரூபாய்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்களாவார்கள். இதன் பெயர்தான் கருணையற்ற கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பதாகும். மக்களின் பசி-பஞ்சம்-பட்டினியைப் போக்க இவர்களிடம் பணம் கிடையாது. அவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் அனுப்பி வைத்திட பணம் கிடையாது. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களின் டெபாசிட் தொகைகளைக் கடனாகப் பெற்றுத் திருப்பிச்செலுத்தாது சூறையாடிய, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்றுவதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது.
கொள்ளை லாபமே குறிக்கோள்
சமூக முடக்கக் காலத்திலும், முதலாளிகளாலும் கார்ப்பரேட்டுகளாலும் கிரிமினல்தனமான முறையில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்மென்கிற வெறி தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் ரிலயன்ஸ் நிறுவனம் 17.7 சதவீதம் தன் லாபத்தை அதிகரித்திருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உலக அளவில், அமெரிக்காவின் உயர் பத்து பில்லியனர்கள் தங்கள் செல்வாதாரங்களை 208 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக சேர்த்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அதேசமயம் மறுபக்கத்தில், கோடானு கோடி தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள், ஊதிய வெட்டுக்கு ஆளாகியுள்ளார்கள்.   தேசிய சமூக முடக்கம் தொடங்கியபின்னர், சுமார் 14 கோடி பேர் வேலைகளை இழந்து, வேலையில்லாதோர் பட்டாளத்துடன் இணைந்துள்ளார்கள் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) மதிப்பிட்டிருக்கிறது. முதலாளித்துவத்தின்கீழ் மனிதாபிமானமற்ற சுரண்டலின் கோர வடிவங்கள் இவையாகும்.
பல முதலாளித்துவ நாடுகள் கூட தங்களின் மக்களை இன்றைய இக்கட்டான நேரத்தில் காப்பாற்றுவதற்காக, பெரிய அளவில் நிதித்தொகுப்புகளை அளித்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் நிதித் தொகுப்பை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா 10 சதவீதம் அறிவித்திருக்கிறது. இதனை மேலும் உயர்த்தப்போவதாகவும் உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கியிருப்பது தொடர்கிறது. இதனை உயர்த்திட மறுத்து வருகிறார்கள்.
ஆனால் அதே சமயத்தில் மத்திய அரசாங்கம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவினத்தில் பிரதமருக்காகப் பிரம்மாண்டமான முறையில் புதிய வீடு கட்டுவதற்காகவும், மத்திய விஸ்டா என்னம் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடங்கள்  புதிதாகக் கட்டுவதற்குமான முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே, இவர்களுக்குத் தங்கள் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்தச் செல்வதற்குப் பணம் இருக்கிறது. இத்துடன் கூடுதலாக, ‘பிஎம்கேர்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிதியத்தையும் உருவாக்கி, கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி அபரிமிதமாகப் பணத்தை வசூல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதிலிருந்தும் ஒரு காசு கூட கொரானா வைரஸ்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இதுவரையிலும் செலவு செய்திட முன்வரவில்லை. அதேபோன்று கொரானா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதற்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் பயன்படுத்திடவில்லை. இந்த சிறப்பு நிதியத்தில் சேர்ந்துள்ள தொகை குறித்து அரசாங்கத்தின் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட முடியாது. இதில் சேர்ந்துள்ள தொகை குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் அல்லது கணக்கும் இல்லை.
கொரானா வைரஸ் தொற்று வெளிப்படுவதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது. இப்போது பாஜக மத்திய அரசாங்கமானது, நம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தங்கள் மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.
பயமுறுத்தும் எதேச்சாதிகாரம்
ஆளும் வர்க்கங்கள் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும்போதெல்லாம் எதேச்சாதிகாரமான முறையில் அரசாங்கம் மற்றும் மக்கள் மீது தங்களுடைய கட்டுப்பாடுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான வேலைகளில் எப்போதுமே இறங்கிடும். இத்தகைய செயல்பாடுகள் இப்போதும் மிகவும் நாணமற்றமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.   அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரையும் மிகவும் அரக்கத்தனமான சட்டங்களான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (UAPA) மற்றும் தேசியப் புலனாய்வு சட்டம் (NIA) ஆகியவற்றின்கீழ் பதிவு செய்யப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைதியானமுறையில் கிளர்ச்சிகளை மேற்கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், புகழ்மிக்க வல்லுநர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை இவ்வாறு காலில்போட்டு மிதிப்பதும், தங்களுக்கு எதிராகக் கருத்துக்கூறுபவர்களை வேட்டையாடுவதும் இக்காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் பின்பற்றப்படுவதை நோக்கி …
மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், இப்போதைய பாஜக அரசாங்கத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாமலிருப்பதாகும். பாஜக அரசாங்கம், தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெறிபிடித்த பாசிஸ்ட் அரசாக மாற்ற வேண்டுமென்கிற திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில்தான் குறியாக இருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றுப் பரவலுக்கே முஸ்லீம்கள், சிறுபான்மையினர்தான் காரணம் என்று இவர்கள் பரப்பிய வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவாக சமூகத்தில் மக்கள் மத்தியில் வகுப்புவாத அடிப்படையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம், அதனுடைய 7.14ஆவது பத்தியில் இந்த அம்சத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் சமயத்தில், அது ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லும் என்று பாஜகவின் ஆபத்துக்களைக் குறிப்பிட்டிருக்கிறது.
எனவே, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தையும், பாஜக மத்திய அரசாங்கம் ஆளும் வர்க்கங்களும், அதன் கூட்டுக் களவாணி முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில்  மக்களைச் சுரண்டுவதை உக்கிரப்படுத்திக் கொண்டிருப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மிகவும் மோசமானமுறையில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாக  மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.    எட்டு மணி நேர வேலை என்பது பல மாநிலங்களில் 12 மணி நேர வேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின்  ஊதியங்களும் கடுமையான முறையில் வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு பக்கத்தில், இந்த நிலைமையை மத்திய அரசாங்கம் தன்னுடைய எதேச்சாதிகாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. நம்முடைய அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தைக் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களின் அடிப்படை உரிமைகளைச் சூறையாடி, அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் குவித்துக் கொண்டிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவதும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்புதான்என்று மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி உதவி செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்குத் தான் பகிர்ந்து அளிக்க வேண்டிய சட்டபூர்வமான நிலுவைத் தொகைகளைக்கூட அளிக்க மறுத்து வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியாகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள், புகழ்பெற்ற பிரமுகர்களைக் குறிவைத்துக் கைதுசெய்திருப்பதன் மூலமும், தங்களுக்கு எதிராகக் கருத்து கூறும் எவராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமாகவும், பாஜக மத்திய அரசாங்கம் தன்னுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது.
இறுதியாக, ஆட்சியாளர்கள் மதவெறித் தீயை விசிறிவிடுவதை உக்கிரப்படுத்தியிருப்பதும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியிருப்பதும், நாட்டில் குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரின் ஒன்றுபட்டுப் போராட்டத்தினை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய முஸ்லீம் வெறுப்பு மனோபாவம் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக உலகில் பல நாடுகள் எதிர்வினையாற்றி இருக்கின்றன. ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகள் உலகில் உள்ள பல நாடுகளிடமிருந்து இந்தியாவைத் தனிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நம் போராட்டத்தையும் பலவீனப்படுத்திடும்.
எனவே, இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்கும் மற்றும் புதுப்பிப்பதற்கும் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை அமல்படுத்த வைப்பதற்கு நிர்ப்பந்தம் அளித்திடும் விதத்தில் அதிகபட்ச அளவில் மக்களையும், அரசியல் கட்சிகளையும், வெகுஜன அமைப்புகளையும் மற்றும் மக்கள் இயக்கங்களையும் அணிதிரட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நம் அனைவரின் கடமையாகும். கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் இந்த சமயத்தில், பொருளாதாரத்திற்கான வரைபடத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது வெளியில் வெளியிட்டிருக்கிறது. இவற்றை நம் பிரச்சாரங்களின் போது மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
நாடு முழுதும் உள்ள நம் கட்சிக் கிளைகள் அனைத்தும் கோடானுகோடி மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிப்பதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தொடரும். இன்றைய தினம் எழுந்துள்ள ஆழமான சவால்களை எதிர்கொள்வதில் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்பது என்றென்றும் தொடரும்.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, March 22, 2020



பொருளாதார மந்தத்தின் பின்னணியல் பரவும் நோய்:
அரசு என்ன செய்ய வேண்டும்?
இரண்டையும் தடுக்க மோடி அரசின் திட்டம் என்ன ?

கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாகத் தாக்கி இருக்கிறது. பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் இன்னமும் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை.  மார்ச் 18 தேதியன்று அளிக்கப்பட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, இந்தத் தொற்று 164 நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 7 ஆயிரத்து 800 பேர் இறந்திருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக உலகப் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மந்தநிலை (recession) ஏற்படும் என்பது நிச்சயம்.

2008ஐ விட பெரிய நெருக்கடி காத்திருக்கிறது
பொருளாதார நடவடிக்கைகள் பல துறைகளிலும், குறிப்பாக போக்குவரத்து, சுற்றுலா, எண்ணெய்த் துறை மற்றும் சேவைத் துறைகளிலும் முடங்கிவிட்டது. விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்திருக்கின்றன. உற்பத்திச் சங்கிலிகளும் உலகம் முழுதும் உடைந்து கிடக்கின்றன. இது நேரடியாக உற்பத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பாதிக்கும். பங்குச் சந்தைகள் சரிந்திருக்கின்றன. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் ஊக்குவிக்கப்பட்ட பங்குச்சந்தை ஏற்றம் இப்போது சரிந்துவிட்டது. நிதித் சந்தையில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சி உண்மையான பொருளாதாரத்தைப் பாதித்து, பொருளாதார மந்தத்தை ஆழமாக்கி இருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் கடன்கள் மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய நிலையில், இந்த நிலைமை நிதிச் சந்தையிலும் தொற்றுநோய் போல் பரவிடும். இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நிலைகுலைவுக்கான அச்சுறுத்தல் அநேகமாக 2008ஐவிட பெரிய அளவில் இருந்திடும்.

அனுபவத்திலிருந்து பாடம் கற்றிடுக!
கொரோனா வைரஸ் தொற்று உருவான சீனத்தில் தற்போது தொற்று விகிதம் கிட்டத்தட்ட முற்றிலும் குறைந்திருக்கிறது. மாறாக சீனாவுக்கு வெளியேதான் அதிக அளவில் பாதிப்புகள் இருக்கின்றன. தொற்று பரவும் விகிதம் உலகம் முழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில், கொரோனாவைரஸ் தொற்று நம் நாட்டில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கட்டமைப்பைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள சுகாதார அமைப்புகள் எந்த அளவிற்குப் போதாமையுடனும் பலவீனமாகவும் இருக்கின்றன என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. அரசாங்கமானது, மற்ற நாடுகளில் பொது சுகாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில் அவை எந்த அளவிற்குத் திறமையாக மேலாண்மை செய்கின்றன என்பதையும் அலசி ஆராய்ந்து, அவற்றின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் அடிப்படையில் மக்கள் மத்தியில் தங்கள் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தி, மக்களின் நம்பிக்கையையும் பெற்றிட வேண்டும்.

ஏற்கெனவே நிலவும் பொருளாதார மந்தம்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே, இந்தியா போன்ற பல நாடுகளில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் தொற்றும், பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தி, பொருளாதார மந்தத்தை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்லும். கொரோனா வைரஸ் தொற்று குறித்துப் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லாத நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவித்திடும் விவரங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாகவே இருந்திடும். மார்ச் 18 அன்று 151 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு மற்றும் தடைகள், பள்ளிக்கூடங்கள் மூடியிருத்தல், சமூக ரீதியாக ஒதுங்கியிருத்தல் போன்றவை ஏற்கனவே பொருளாதாரத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. வேலைதேடி புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துகொண்டிருக்கின்றனர். பயணக்குழுக்கள், கட்டுமானத்துறை, ஓட்டல்கள், விடுதிகள், சுற்றுலாத்துறை மற்றும் பல துறைகளில் கதவடைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் முடக்கப்பட்டிருப்பதால், மேலும் பல தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் வீட்டிற்கு அனுப்பப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற பொருளாதாரமும் கடுமையாக சீர்குலைந்துள்ளதால் கிராமப்புற வேலையின்மையும் தீவிரமாகும்.

செலவு செய்யத் தயங்கும் மத்திய அரசு
இத்தகைய நிலைமையை எதிர்கொள்வதற்கு ஏற்றவிதத்தில் ஒருங்கிணைந்த திட்டம் எதையும் மத்திய அரசாங்கம் உருவாக்கிடவில்லை. இதுவரை இதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து (State Disaster Relief Fund) தான் மத்திய அரசு செலவு செய்துகொண்டிருக்கிறது. மாநிலங்கள் எப்படியிருந்தாலும் இந்த நிதியத்திலிருந்து தாங்களாகவே செலவு செய்துகொள்ள முடியும்.   
சந்தை நம்பிக்கை மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்காக, இந்திய ரிசர்வ் வங்கி, ஏப்ரலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டிட முடிவு செய்திருப்பதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. ஆட்சியாளர்களின் நவீன தாராளமய அணுகுமுறைதான் கொரோனாவுக்கு எதிராக எவ்விதமான தயாரிப்பு வேலைகளும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும், கொரோனா வைரஸைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதில் பலவீனமான முறையில் இருப்பதற்கும் இட்டுச் சென்றிருக்கின்றன. இவ்வாறு செலவு செய்திடாமல் இருக்கும் போக்கு சரியல்ல.

பகுத்தறிவற்ற தாராளமயம்
கொரோனா வைரஸ் தொற்று நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் பகுத்தறிவின்மையையும், பலவீனத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளித்திட மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வருமானத்திற்கான வழிவகைகளைச் செய்வதற்கும் மாநில அரசுகளுக்கு போதுமான அளவிற்கு நிதி உதவிகள் செய்யும் விதத்தில் பெரிய அளவில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன ?
·          அரசாங்கம் பொது சுகாதார அமைப்பினை வலுப்படுத்தும் விதத்தில் அதற்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்திட வேண்டும். அதன்மூலம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்வதற்கும், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதற்கும் ஏற்ற விதத்தில் மருத்துவமனை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். 
 
·         வேலை வாய்ப்புகளையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்திடும் விதத்தில் பொதுச் செலவினங்களை உடனடியாக அதிகப்படுத்திட வேண்டும். 
 
·         பொருளாதாரத்தின் பல துறைகளை புனரமைப்பதற்காக அத்தியாவசியமான முறையில் நிதித் தொகுப்புகள் தேவைப்படுகின்றன. அரசாங்கம் அவற்றிற்கு நிதி அளித்திட வேண்டும்.
 
·         அரசாங்கம் பெரிய கார்ப்பரேட்டுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் திவால் தன்மைகளிலிருந்து அவற்றைக் காப்பாற்றுவதே தங்கள் கொள்கை என்று இருந்துவிடக்கூடாது.
 
·         இந்திய ரிசர்வ் வங்கியும், இதர வங்கிகளும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட துறைகளுக்கும் கடன்கள் வழங்கிட வேண்டும். சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கும் எளிதான முறையில் கடன்கள் அளித்திட முன்வர வேண்டும். சில்லரை வர்த்தகர்கள் மற்றும் வீதிகளில் விற்பனை செய்வோரின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும்.
 
·         மத்திய அரசாங்கம், மாநிலங்களுக்குக் கடன் கொடுக்கும் வரையறையை இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 0.5 சதவீதமாவது அதிகரித்திட வேண்டும்.
 
·         மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும், ஊதிய விகிதங்களை அதிகரித்திடவும் மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும்.
 
·         கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கும், கிராமப்புற ஏழை மக்களுக்கும் உதவும் வகையில் பொது விநியோக முறை வலுப்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட வேண்டும், இலவசமாக ரேஷன்கள் அளிக்கப்பட வேண்டும்.
 
·         மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கத்துடன் இணைந்து, வாழ்வாதாரங்களை இழந்துள்ள முறைசாராத் தொழிலாளர்களுக்கு உதவிடும் விதத்தில் ஒரு நிதியம் உருவாக்கிட வேண்டும். ஸ்தாபன ரீதியான துறைகளிலும், தொழிற்சாலைகள் கதவடைப்பு செய்துள்ள நாட்களிலும்,  தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை அளித்திட கார்ப்பரேட்டுகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
 
·         கொரோனா வைரஸ் தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாகப் பரவி வருவதால், அரசாங்கம் அவசரகதியில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். உலக நாடுகள் பல இதனைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உதவிகளைச் செய்திட வேண்டும். குறிப்பாக உழைக்கும் மக்கள், ஏழை மற்றும் வடுப்படும் நிலையில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும்.

மார்ச் 18, 2020
தமிழில்: ச.வீரமணி