Showing posts with label Lokpal. Show all posts
Showing posts with label Lokpal. Show all posts

Monday, December 23, 2013

லோக்பால் சட்டமுன்வடிவு: ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்

இறுதியாக, லோக்பால் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நாட்டின் மேல்மட்டங்களில் நிலவும் ஊழலை எதிர்கொள்வதற்கான ஓர் அமைப்பு நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவானது,  இச்சட்டமுன்வடிவில் மேற்கொள்ளப் பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்வுக்குழு அளித்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இணைக்கப்பட்டு, மாநிலங்களவையில் சட்டமுன்வடிவு நிறைவேறி அதன்பின்னர் மக்களவையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, கடைசியில் லோக்பால் நாட்டின் சட்டமாக மாறி இருக்கிறது.இவ்வாறு இந்தச் சட்டம் நிறைவேறு வதற்கு 45 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. 1968-ல் மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் இத்தகையதோர் அமைப்பு அவசியம் என்று முதன்முதலாக பரிந்துரைத்திருந்தது.
அதிலிருந்தே இது தொடர்பாக இதுவரை எட்டு வரைவு சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டன. ஆயினும் சச்சரவுக்குரிய முக்கியமான அம்சங்கள் பலகுறித்து உடன்பாடு ஏற்படாததால் இது சட்டமாவதற்கான சாத்தியம் இல்லாமல் போயிற்று. இந்த வரிசையில் இந்தக்கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவானது ஒன்பதாவது சட்ட முன்வடிவாகும். லோக்பால் போன்றதொரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரியதில் கடந்த முப்பதாண்டு காலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்துவந்தது. போபர்ஸ் ஊழல்கள் நாட்டையே குலுக்கிய சமயத்தில் அதனைத் தொடர்ந்து ஆட்சியே மாறிய சமயத்தில், நாட்டின் மேல்மட்டங்களில் நிலவும் ஊழலை வலுவான முறையில் தடுக்கும் விதத்திலும், வர்த்தகர்கள்-அதிகாரவர்க்கம்-அரசியல்வாதிகளுக்கு இடையே வலுவாகவுள்ள புனிதமற்ற இணைப்புச் சங்கிலியை உடைக்கும் விதத்திலும் வலுவான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
அப்போது 1989-ல் ஆட்சியிலிருந்த வி.பி. சிங் தலைமையிலான அரசாங்கம் தான் பிழைத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டதால், மார்க்சிஸ்ட் கட்சி இதுபோன்றதொரு சட்டமுன்வடிவை நிறை வேற்ற வலியுறுத்தியது. அதன்பின்னர் இரு சமயங்களில், 1996இலும் 1997இலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியி லிருந்து ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது என்கிற மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய முன்னணி அரசாங்கம், லோக்பால் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவந்தது. எனினும் அது சட்டமாக நிறைவேறவில்லை. மீண்டும், 2004-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் ஐமுகூ-1 அரசாங்கம் அமைந்தசமயத்தில் உருவான பொது குறைந்தபட்ச திட்டத்தில் லோக்பால் நிறுவப்படும் என்கிற லட்சியம் சேர்க்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட சட்டமுன்வடிவுதான் தற்போது இறுதி யாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவ் வாறு லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பும் அமைக்கப்படுவதற்கான சட்டமுன்வடிவு நிறை வேறிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இடைவிடாது உறுதியாகப் போராடி வந்துள்ளது. உயர்மட்டத்தில் நிலவும் ஊழ லுக்கு எதிராக பல அமைப்புகள் போராடி வந்த போதிலும் அவ்வாறு அமைக்கப்படவிருக்கும் புலனாய்வு அமைப்பான, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) சுயாட்சித்தன்மை மற்றும் அதிகார வரம்பெல்லை ஆகியவை குறித்து இந்தச்சட்ட முன்வடிவில் மிகப்பெரிய அளவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் குறிப்பிடத் தக்க அளவில் உள்ள சில குறைபாடுகளையும் எதிர்காலத்தில் சரிசெய்திட வேண்டியது அவசியம்.ஒட்டுமொத்தத்தில் ஊழலுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், லோக்பால் அமைக்கப்படுவதுடன் மேலும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அதனுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டி இருப்பதை, திரும்பத்திரும்ப வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
1988ஆம் ஆண்டு லஞ்சஊழல் தடுப்புச் சட்டத்திலும் ஊழலின் வரையறையை மேலும் விரிவானதாக மாற்றக்கூடிய விதத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகருதுகிறது. தற்போதுள்ள சட்ட வரையறைஎன்பது மிகவும் குறுகிய ஒன்றாக, அதிகாரத் தில் உள்ளோர் சொந்த ஆதாயத்திற்காக அல்லது வளத்திற்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பதுடன் சுருக்கிக் கொள்கிறது. பல வழக்குகளில், அதிகாரத்தில் உள்ளோர் தங்கள் அதிகாரத்தை தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைய துஷ்பிரயோகம் செய் கிறார்கள். தற்போதுள்ள 1988 லஞ்சஊழல் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நபர்’’ என்ற வரையறையின்கீழ் நிறுவனங்கள் வராததால் இவ்வாறு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வோர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. மேலும் பல சமயங்களில் அதிகாரத்திலுள்ளோர் செய்யும் களவுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். எனினும் அவர்களின் நடவடிக்கைகளின் காரணமாக பொது கஜானாவிற்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற் படுவதைப் பார்க்கிறோம்.
உதாரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் பல அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்கப்பட்டிருக் கின்றன. இதற்கு அதிகாரத்திலுள்ளோர் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருப்பதுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. எனவே வேண்டும் என்றே எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வரம்புமீறிய முறையில் ஆதாயம் எதையும் கொடுப்பவர் அல்லது பொது ஊழியர் எவரிடமிருந்தாவது சட்டவிதிமுறைகளை மீறி வரம்பு மீறிய ஆதாயம் அடைபவர்’’ என்று சேர்த்து லஞ்ச ஊழலுக்கான வரையறையை விரிவாக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக ஊழல் தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காகத் தனி சட்டமுன்வடிவு ஒன்று இரு அவைகளிலும் கொண்டுவருவதற்காக, இரு அவைகளின் நிகழ்ச்சி நிரலிலும் சேர்க் கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் உறுதி தரப்பட்ட அதே சமயத்தில், அப்படியானால் அதனை லோக்பால் சட்டமுன்வடிவிலும் இணைத்து, அரசிடமிருந்து ஒப்பந்தம் அல்லது டெண்டர் ஏலத்தைப் பெற்றிட ஊழல்வழிகளில் ஈடுபடும் அனைத்துத் தனியார் நிறுவனங்களையும் அதன் செயல் எல்லை வரையறைக்குள் ஏன் கொண்டுவரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக ஒரு துல்லியமான திருத்தத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்மொழிந்தோம். ஆயினும் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையாக உள்ள இரு கட்சிகளும் - காங்கிரசும் பாஜகவும் - அவர்களுக்கு நிதிஉதவி செய்வோரை, அவர்களுக்குப் படியளப் போரைப் பாதுகாப்பதற்காக - கைகோர்த்து நின்று - இதனைத் தோற்கடித்துவிட்டது.
ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பக்கத்தை, அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களை லோக்பால் சட்டத்தின் வரையறைக் குள் கொண்டு வராதவரை, அவ்வாறு கொண்டு வந்து அவை அரசியல் கட்சிகளுக்கு அள்ளித் தருவதை ஒழித்துக்கட்டாத வரை, ஊழலை நிச்சயமாக ஒழித்திட முடியாது. உண்மையில், லோக்பால் சட்டம் கொண்டுவருவதுடன், தேர்தல்களில் அபரிமிதமான முறையில்பணபலமும், புஜபலமும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் தீவிரமானமுறையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வராதவரை, ஊழலை வலுவானமுறையில் ஒழித்துக்கட்ட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டது.மேலும் தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதை ஆய்வு செய்திடும் முறை மிகவும் பலவீனமாகவும், அதிருப்தி அளிக்கக்கூடிய விதத்திலுமே இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரை, அரசியலமைப்புச் சட்டத்தின் 105 ஆவது பிரிவு, பேச்சு மற்றும் வாக்களிக்கும் சுதந்திரம் தொடர்பாக அவர்களுக்குப் பாது காப்பை அளிக்கிறது.
இவ்வாறு இவர்களுக்கு அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரமும், வாக்களிக்கும் சுதந்திரமும் ஊழலுக்கு வழிவகுக்காமல் இருக்கிறதா என்பதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் இன்றைய தினம் எதுவும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் வேலைகள் குறித்து ஆய்வு செய்த தேசிய ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரி விற்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதனைச் செய்திட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் (வாக்களித்தல், பேசுதல் போன்ற) செய்கைகள் மூலம் எவ்வகையிலாவது ஊழல் நடவடிக்கை எதிலாவது ஈடுபட்டார் எனில் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய விதத்தில் அவரது செய்கையை ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரக்கூடிய விதத்தில் ஒரு சட்டம் தேவைப்படுகிறது. ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி புரிந்த காலத்தில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அரசு தன்னிச்சையாக நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதற்குப்பின்னர், 2008-ல் மக்களவையில் அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஆட்சி யிலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக ஐமுகூ-1அரசாங்கம் ``காசு கொடுத்து வாக்கு’’வாங்குவதற்காக எந்த அளவிற்கு இழிசெயல்களில் ஈடுபட்டதென்பதையெல்லாம் நாடு நன்கறியும்.
எனவே இதுபோன்றதொரு சட்டம் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமாக மாறி இருக்கிறது.அதேபோன்று ஊழலை வெளிச்சத் திற்குக் கொண்டுவருவோரை பாதுகாப்பது என்பதும் இன்றையதினம் மிகவும் அத்தியாவசியமாகி இருக்கிறது. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோரைக் கண்காணித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சட்டமுன்வடிவையும் லோக்பால் சட்டத்துடன் சேர்த்தே கொண்டு வந்திருக்க முடியும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக லோக்பால் சட்டமுன்வடிவுடன் அதனையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட முடியவில்லை. லோக்பால் சட்டமுன்வடிவை அவசரத்துடன் நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது. அதேபோன்று, 2010ஆம் ஆண்டு பொது நலன் பகிரங்கப்படுத்தல் (தகவல் பாதுகாப்பு) சட்டமுன்வடிவையும் வலுப்படுத்தி விரைந்து நிறைவேற்றிட வேண்டும். ஒரு வலுவான மற்றும் திறம்பட இயங்கக்கூடிய லோக்பால் நிறுவப்படுவதுடன், ஊழலை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்று அரசு கருதுமானால், கீழ்க்கண்டவாறு ஆறு பரிந்துரைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது
(1) இதன் வரையறைக்குள் வரக்கூடிய விதத்தில் நீதித்துறையின் நடத்தைகளையும் கொண்டுவந்திட வகை செய்யும் விதத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
(2) பொதுமக்கள் குறைபாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரஜைகள் சாசனத்தை பாதுகாக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
(3) ஊழலில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரிவு திருத்தப்பட வேண்டும்.
(4) தேர்தல்களில் கிரிமினல்களின் பண பல அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
(5) மாநில அளவில் பணியாற்றும் பொது ஊழியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய விதத்தில் மாநில அளவில் உருவாக்கப்படும் லோக் அயுக்தாக்கள் அமைந்திட வேண்டும்.
(6) வரி ஏய்ப்போரால் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
எனவே, லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் இறுதியாக நிறைவேற்றி இருக்கும் அதே சமயத்தில், அரசாங்கத்தின் உயர்பீடங்களில் நாளும் அதிகரித்து வரும் ஊழல்களை ஒழித்துக்கட்ட வேண்டுமானால் மேலே கூறியவாறு மேலும் பல சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்.
ஆயினும், நாட்டில் அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல் என்னும் கொள்ளைநோயை ஒழித்துக்கட்டுவது என்பது இதற் கெதிராக சமூகத்தின் சமூக உணர்வு மட்டத்தையும் ஒட்டுமொத்தமாக உயர்த்துவதன்மூலமே சாத்தியமாக்கிட முடியும். இதற்கு நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் அறநெறிப்பண்பும் உயர்ந்த அளவில் இருந்திட வேண்டும். ஆனால் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளில் இடதுசாரிக் கட்சிகள் தவிர மற்ற கட்சிகளில் பெரும்பாலானவற்றிடம் இதனைக் காண முடியவில்லை. நாட்டிலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் ஊழல் புரிவதில் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஊழல் சேற்றில் உழலும் அரசியல் கட்சிகளிடமிருந்து நம் சமூகத்தைக் கழுவித் தூய்மைப்படுத்தக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்றே இன்றைய அவசியத் தேவையாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

Saturday, December 17, 2011

வலுவான லோக்பால் சட்டம் தேவை



ரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் மற்றும் பல்வேறு பொதுநிறுனங்களிலும் நிலவும் ஊழல்கள் ஒழிக்கப்படக்கூடிய வகையில் ஒரு வலுவான லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் படலாம் என்கிற முறையில் அபரிமிதமான ஆர்வத்துடன் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவக்கூடிய பின்னணியில்தான் அரசாங்கம் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த வரைவு சட்டமுன்வடிவின் மீது அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் பலமுறை சொல்லி வந்ததைப்போல், கடந்த இருபதாண்டு காலமாகவே நாட்டில் லோக்பால் போன்றதொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்திருக்கிறது. போஃபோர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியபின், அதன் விளைவாக அரசாங்கத்திலும் அரசியல் தலைமையில் மாற்றம் வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, உயர்மட்டங்கள் நடைபெறும் ஊழலை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரி வந்திருக்கிறது. 1989இல் விபி சிங் அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்த சமயத்தில், இத்தகையதோர் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. அந்த சமயத்திலும், பின்னர் இரு தடவைகளிலும், 1996இல் தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவில் ஆட்சியில் நீடித்த சமயத்திலும் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அது சட்டமாக நிறைவேறக்கூடிய சூழல் உருவாகவில்லை. மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கம் உருவாவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் இடதுசாரிகளின் தயவை நாடியிருந்த சமயத்தில், அதனுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்கிற உறுதிமொழியைச் சேர்க்கப்பட்டது.

மேற்கண்டவாறு நாம் முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து சமயங்களிலும் வரைவு சட்டமுன்வடிவு பல்வேறு பிரச்சனைகளில் சச்சரவுகள் இருந்து வந்ததால் வெளிச்சத்திற்கே வரவில்லை. அதில் மிகவும் முக்கியமான விஷயம், இச்சட்டத்தின் வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது குறித்ததாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே, அதிலும் குறிப்பாக போஃபோர்ஸ் ஊழலுக்குப் பின், பிரதமரும் லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்தத் தடவையும் அரசின் உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள பின்னணியில், மக்களின் கோபாவேசம் அதிகரித்துள்ளது.
ஐமுகூ-2 அரசாங்கமானது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலை விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அடாவடித்தனத்தின் காரணமாக, 2010இல் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமையாக வீணடிக்கப்பட்ட கசப்பான உண்மையை அடுத்து, நாடாளுமன்றத்தின் மீதே மக்களுக்கிருந்து வந்த நம்பிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவ்வாறு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபாவேசத்தை அறிந்தபின்னர் ஐமுகூ-2 அரசாங்கம் கடைசியில் முந்தைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வரைவு சட்டமுன்வடிவை மீளவும் தாக்கல செய்ய முன்வந்துள்ளது.

தற்போது, நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய விவாதங்களை முடித்துள்ள நிலையில், சட்டமுன்வடிவானது இறுதி வடிவத்திற்கு வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இதன் மீது அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, வரைவு சட்டமுன்வடிவை ஒரு வலுவான சட்டமுன்வடிவாக மாற்றிட, அச்சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும், திருத்தங்களையும் சமர்ப்பித்தார். அவ்வாறு அவர் சமர்ப்பித்த குறிப்புகளுடன், தற்போது நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும், கீழ்க்கண்ட முன்மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது.

(1) லோக்பால் சட்டத்தின் அதிகாரவரம்பெல்லைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது தொடர்பாக ஒரு பொதுவான கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. லோக்பாலின் வரையறைக்குள் பிரதமரும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக அரசு துல்லியமான பரிந்துரைகளுடன் வர வேண்டும். எக்காரணம் கொண்டும், சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் பிரதமர் அலுவலகத்தின் வணிகத் தொடர்புகள் எதுவும் இதன் வரையறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படக் கூடாது.

(2) ஊழலை வலுவாகக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நீதித்துறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும் நியமனங்கள், மாற்றல்கள் தொடர்பாக ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் அவற்றை விசாரிக்கக்கூடிய அளவிற்கு ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(3) நாட்டில் தேர்தல்கள் நடைபெறும்போது பணபலம் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழித்திட வகைசெய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படாமல் நம் நாட்டில் இலஞ்ச ஊழலை வலுவாக ஒழித்திட முடியாது.

(4) அனைத்து மட்டங்களிலும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் தொடர்பாக வரும் குறைபாடுகளை விசாரிப்பதற்குத் தனியே குறைதீர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
(5) லோக்பால் சட்டத்தின் அதிகாரங்கள் ஊழலில் ஈடுபடும் அனைத்துத்தர அதிகாரிகளின்மீதும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அளவிற்கு விரிவாக்கப்பட வேண்டும். இதேபோன்று அனைத்து இனத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மாநில மட்டத்தில் லோகாயுக்தாக்கள் அமைக்கப்பட வேண்டும்.

(6) லோக் பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) மீது பிரத்யேக அதிகாரவரம்பெல்லையுடன் தனியே ஒரு புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஊழல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்கக்கூடிய அளவிற்குத் தனி புலனாய்வு அமைப்பாக இது அமைந்திட வேண்டும். மத்தியப் புலனாய்வுக் கழகமும் லோக்பால் வரம்பெல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித அதிகாரமுமற்ற, வலுவற்ற அமைப்பாக லோக்பால் மாற்றப்பட்டுவிடக் கூடாது.

(7) லோக்பால் கீழான தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் சுயேச்சையான தேர்வுக் குழுவின் மூலமே மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்குநரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

(8) இத்தகைய நியமனங்களுக்கான தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் பெயர்களைத் தயார் செய்வதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்படுதல் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

(9) ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீச்சுடன் நடத்திட, 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் வரையறை (னநகinவைiடிn) திருத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இன்றுள்ள சட்டத்தின்படி லஞ்சம் பெறுபவர் மட்டுமே குற்றத்துடன் பிணைக்கப்படுகிறார், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குப் புறம்பாக முறைகேடாக ஆதாயம் அடைபவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்படுவதில்லை. யாருடைய செயல்பாடுகளினாலும் முடிவுகளினாலும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறதோ அவர்கள் அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கொண்டுவரப் பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை ஆகியவை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் அதே சமயத்தில், அவர்கள் லஞ்சஊழலில் ஈடுபட்டால் இதனை அமல்படுத்திடக் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 105ஆவது விதி திருத்தப்படுவது உட்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், இகழார்ந்த ஜேஎம்எம் லஞ்சை வழக்கில் நடைபெற்றதைப்போல லஞ்சம் கொடுத்தவர் தண்டிக்கப்படுவதையும், லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதையும் (exonerated) தடுத்திட முடியாது. இது தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க மற்றொரு உதாரணம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீது 2008இல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்ற அசிங்கமாகும்.

(11) ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவாக அமைந்திட வேண்டுமானால், ஒப்பந்தங்கள், உரிமங்கள் முதலானவற்றைப் பெற்றிட கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் லஞ்சலாவண்யங்களை விசாரிக்கக்கூடிய அளவிலும் லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசின் உதவிகளைப் பெறும் அனைத்து அமைப்புகளும் இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

லோக்பால் சட்டம் தொடர்பான விதிகள் ஆட்சிகள் மாறும்போதெல்லாம் மாறக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. முறையான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள இந்த ஆலோசனைகள் அரசு உரிய முறையில் பரிசீலித்து உரிய திருத்தங்களுடன் மீண்டும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டிட வேண்டும்.
இவ்வாறு அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்மொழிவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனை மீது ஓர் அவசரகதியில் அரசாங்கத்தை செயல்பட வைப்பதை உத்தரவாதப்படுத்திட நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான வகையில் நிர்ப்பந்தம் அளித்திடக் கூடிய வகையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)