Thursday, June 2, 2016

பகாசுரன் - ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள்


அவர்களது விடுமுறை சுற்றுலாவின் ஐந்தாவது நாள் துவங்கியது. எய்ம்ஸ், இந்தியா கேட், குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு அவர்கள் முன்னர் சென்றனர். தற்போது ரவிககும் பிரதீப்புக்கும் மற்ற முக்கிய இடங்களைக் காட்ட அபி  திட்டமிட்டிருந்தான்.
காலையில் ராஜ்காட்டிற்கு செல்லவேண்டுமென்று ரேகா விரும்பியதை அனைவரும் ஆதரித்தனர். சிறுவர்கள் வேறெங்காவது செல்லலாம்.  நல்ல மெல்லிய  கீதங்களைக் கேட்டுக்கொண்டு பரந்து விரிந்த சிறு சிறு மணற்குன்றுகளின் மேல் நடப்பதை அவர்கள் ரசித்தனர். மகாத்மா காந்தி என்ற மாமனிதருக்கு மரியாதை தெரிவிக்க வரும் பயணிகளுடனும் காலை நடைபயிற்சியாளர்களுடனும் அவர்கள் இணைந்து கொண்டனர்.
காலைச் சிற்றுண்டிக்கு வீடு திரும்பினர். சிறுவர்கள் மிருகக்காட்சிச் சாலைக்கும் அதன் பின் புரானா கிலா என்று அழைக்கப்படும் புராதன கோட்டைக்கும் செல்ல ஆயத்தமானார்கள். இந்த இரண்டு இடங்களையும் பார்த்த பின்னர் அவர்கள் சாந்தினி சவுக்  பகுதிக்குச் சென்றனர்.
கன்னாட் ப்ளேசில் அவர்கள் கண்ட பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தது சாந்தினி சவுக் பகுதி.  எல்லா கட்டிடங்களும் மிகவும் பழைய கட்டிடங்கள். மிகவும் சாதாரணமாகத் தோற்றமளித்தன. ஆங்காங்கே தூசு படிந்த கம்பிகள் தோரணம் போல் தொங்கிக்கொண்டிருந்தன.
 ராஜ்பாத்  போன்ற கம்பீரமான சாலைக்கு முற்றிலும்  மாறாக இந்தப் பகுதியில்  சிறிய சிறிய சந்துபொந்துகள் இருந்தன.  ஆனால் பல முக்கியக் கடைகள் அங்குதான் இருந்தன. அந்தக் கடைகளின் பெயர் பலகைகள் அவற்றின் பாரம்பர்யத்தை விளக்கின. முகலாய மற்றும் ஆப்கான் உணவுகள், ஜிலேபிக்காரர்கள், புரோட்டாக்காரர்கள் மற்றும் கராச்சி அல்வாக்காரர்கள் என பல வகையான உணவு விற்பனையாளர்கள்  தங்கள் கடைகளை திறந்திருந்தனர். அங்கிருந்த ஒவ்வொரு கடையும் ஒரு பழமையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.
புரோட்டாக்காரர்கள் நிறைந்த ஒரு சந்துக்கு அபி அவர்களை அழைத்துச் சென்றான். அங்கே ஓர் உணவகத்தில் மதிய உணவிற்காக அவர்கள் நின்றனர்.  அங்கிருந்த பல தரமான புரோட்டாக்களை பார்த்தது எதை வாங்குவது என முடிவு செய்ய அவர்களுக்கு நேரமானது. அவர்கள் அமர்ந்து ஆற அமர யோசித்து,  தங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டனர். நன்றாக உண்ட பின்னர் சுவைமிகுந்த லஸ்ஸியைக் குடித்து நன்கு ஏப்பம் விட்டனர்.
பின்னர் நகைக்கடைகள், துணிக்கடைகள் மற்றும் பல கடைகள் உள்ள தெருக்களுக்குச் சென்றார்கள். அவை ஒவ்வொன்றும் மிகவும் நெருக்கமாக இருந்தன. வெளி நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு வந்தவர்களை  ஏற்றிக்கொண்டு சைக்கிள் ரிக்ஷாக்கள் அந்த நெருக்கமான கடைவீதிகளில் வளைந்து நெளிந்து சென்றன.
இந்தச் சுற்றுப்புறத்தைப் பார்த்து முகம் சுளித்தபடி ரவி கேட்டான்,  ‘‘இது என்ன இடம் அபி? மிகவும் மோசமாக உள்ளதே. வாகனங்கள், சைக்கிள்கள், பாதசாரிகள், தலைமைச்சுமை வியாபாரிகள் என தெருவே மோசமாக இருக்கிறதே, இந்த சைக்கிள் ரிக்ஷாக்கள் வேறு இந்த இடத்தை மிகவும் நெரிசலுடையதாக ஆக்குகின்றன. பாதசாரிகளுக்கான நடைபாதைகள் முழுவதும் கடைகளும் வியாபாரிகளும்  ஆக்கிரமித்துள்ளனர். இந்த இடம் முழுவதும் மிகவும் அசுத்தமாக வேறு உள்ளனவே.’’
 ஒரு விதமான அலட்சியத்துடன் அந்தப் பகுதியில் ரோந்துக்கு வரும் போலிஸ்காரர்களை ஒரு வித வெறுப்புடன் பார்ததுக்கொண்டே, வானங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பாதையில் ரவி மிகவும் சாதுர்யமாகப் புகுந்து நடந்து வந்தான். அபி அவர்களிடம், ‘‘ஒருவேளை இவ்வளவு களேபரத்தையும் நகராட்சி அதிகாரிகளும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்,’’ என்றான்.
ஆனால் இவர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தான் பிரதீப். அவனுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது.  ‘‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறது.  இந்த இடம் ஒரு திருவிழாக்கூட்டம் போல் உள்ளது. எவ்வளவு வகைகளில் பொருட்கள் இருக்கின்றன, இங்கு பொருள் வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போல் இருக்கிறது,’’ என்றான்.
டி  சர்ட்டுகள், கைக்குட்டைகள், சிறிய மின் பொருட்கள் என்று அவர்களுக்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்க அவர்கள் நன்கு சுற்றினார்கள்.  பிரதீப் பேரம் பேசுவதில் வல்லவன். எப்பொழுது கடைத்தெருவிற்கு சென்றாலும் அவன்தான் பேரம்பேசி பொருட்களை வாங்குவான்.  அவர்கள் மாலைக்குள் வீடு திரும்பவேண்டும். அதற்குள் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்க அவர்கள் கமலா நகருக்குச் சென்றனர்.
அந்த நாளின் இறுதி நேரம் வந்தது.  அவர்களது செல்லப் பிராணிகள் சோபாவின் மேல் வசதியாக உட்கார்ந்திருந்தன. ஃப்ருட்டி பிரதீப்பை நன்றியுடன் பார்த்தது. தனது காதுகளை ஆட்டி, நாக்கை சுழட்டி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.  ஃப்ருட்டியின் சைகைகளை பிரதீப் பாராட்டினான். அதில் சந்தேகமேயில்லை  என்று ஆமோதித்தான் அபி. அவைகளது மற்ற சைகைகள் குறித்து பிரதீப் கேட்டான். அவர்களது கண்ணாமூச்சி விளையாட்டு மற்றும் மற்ற விளையாட்டுக்கள் குறித்து அபி பகிர்ந்துகொண்டான்.
அவைகள் தலையை குனிந்து பின்னங்காலை சற்று தூக்கினால், தாங்கள் விளையாடுவதற்குத் தயார் என்று கூறுவதாக அர்த்தம். அவைகள் உரக்கக் குரைத்தல், ஊளையிடுதல், சிணுங்குதல், தேம்பியழுதல், கரைத்தல், உறுமுதல் மற்றும் அவற்றின் விந்தையான போக்கு அனைத்தும் எங்களுக்கு அத்துப்படி.  அவர்களது காதுகளைக் கீழே தொங்கபோடுதல், வாலை உயர்த்துதல் மற்றும் கீழே போடுதல் ஆகியவற்றின் பொருளும் எங்களுக்குத் தெரியும். வாலை விரைப்பாக வைத்துக்கொண்டால் அவைகள் கோபமாக இருக்கிறது என்று அர்த்தம். அவைகள் மிகவும் நட்புடன் உலாவரும்போது தனது பற்களைக் காட்டும். அதே சமயம் தனது இடுப்பையும் பிடரியையும்  தூக்கிக்கொண்டு பற்களைக் காட்டினால் அவைகள் கோபமாக இருக்கின்றன என்று பொருள். அவற்றின் மயிர்கள் சிலிர்த்தால், அவை பயப்படுகின்றன என்று பொருள். அதே சமயம் தரையில் உருண்டால்,  மிகவும் பயந்துவிட்டது என்று பொருள். இப்படி அவைகள் குறித்து பல தகவல்கள் உள்ளன.
இவற்றையெல்லாம் அபி கூறக் கேட்ட ரவிக்கு ஆச்சர்யம். நீ ஒரு நாய்களுக்கான மனநல மருத்துவர்  போல் பேசுகிறாய் என்று அபியிடம் ரவி சொன்னான்.  நாயை விரும்பும் அனைவரும் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றான் அபி.  அதன்பின் நீண்ட கொட்டாவி விட்டு அபி தூங்க சென்றுவிட்டான்.
ஆனால் ரவிக்கு இன்னும்  தூக்கம் வரவில்லை. அன்று நடந்த பல சம்பவங்களை அவன் நினைவுகூர்ந்தான். புராதன கோவில்கள் குறித்த அவர்களது உரையாடல் அவன் நினைவுக்கு வந்தது.
மாமா இங்கு பலர் பல கோவில்களை பழம்பெருமை வாய்ந்தது என்று கூறுகின்றனர். பழைய கோவில்களில் உள்ள கடவுள்கள்  புதிய கோவில்களில் உள்ள கடவுள்களை விட சக்தி வாய்ந்தவைகள் என்று  அவர்கள் சொல்ல விரும்புகிறார்களா?
இவனது கேள்வி குறித்து அவனது மாமா மிகவும் மகிழ்ந்தார். ‘‘கடவுள் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். உன்னுடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். தங்களது வணிகத்தை  வளர்ப்பதற்காக சிலர் மக்களின் மத உணர்வுகளுடன விளையாடுகின்றனர்.’’ என்று அவர் மேலும் கூறினார்.
தில்லி ஒரு விசித்திரமான நகரம்.  இங்கு பலர் பறவைகளுக்கு தானியங்களை தானமாக வழங்குவார்கள். ஆனால் ஏழைகளுக்கு தானம் அளிக்கமாட்டார்கள். பல ரயில் நிலையங்களுக்கு அருகே மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பறவைகளுக்கு  தான்யமும் தண்ணீரும்  அளிப்பதை நீ பார்த்திருக்கலாம். சிலர் குரங்குகளுக்கு ரொட்டியும் வாழைப்பழமும் அளிப்பார்கள். இவை  பெரும்பாலும்  செவ்வாய்க் கிழமைகளில் நடக்கும்.  ஆனால் பறவைகளின் தேவைக்கு அதிகமாக இவர்கள் அளிப்பதால் பல இடங்களில் தானியங்கள் வீணாகி, சிதறிக்கிடக்கும். அனாதைச் சிறுவர்கள் அவற்றை சேகரித்து சாலையோர வியாபாரிகளிடம் விற்றுவிடுவர். அவர்கள் அதனை மாவாக அரைத்து, நொறுக்குத் திண்பண்டமாக மாற்றி, சந்து பொந்துகளில் விற்றுவிடுவர்.
‘‘என்ன?’’ சுமன் தனது முகத்தைச் சுளித்துக்கொண்டு கேட்டார். ‘‘ஆம், அதுதான் உண்மை,’’ என்று சேகர் பதிலளித்தார்.
ஏமாற்று வேலை, ஊழல், நேர்மையற்ற தன்மை கொண்ட மக்கள்தான் முதலில் தாங்கள் மிகவும் பாதுகாப்பற்று இருப்பதாக  உணர்வார்கள். எனவே மற்றவர்களை விட இவர்கள் அதிக பக்தியுடன் காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு ஜோதிடர்களும் குருக்களும் காளான்களைப் போல் மண்டிக்கிடக்கின்றனர்.  இவர்களது   பாவங்களைப்  போக்க பரிகாரம் உண்டு என  அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு  கோவில்களும்  பல்கிப் பெருகின்றன.  பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில், பழம்பெருமை வாய்ந்த அனுமன் கோவில் என்று பெயர்ப்பலகைகளுடன் அவையும் பல்கிப்பெருகுகின்றன.  அன்பளிப்பு என்ற பெயரில் அவர்கள் கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கிறார்கள்.   இதனை உற்று நோக்கினால், சமூகத்தின் ஏமாற்றுக்காரர்களை, மதத்தின் ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது விளங்கும்.  ‘‘இவர்களுள் பெரிய ஏமாற்றுக்காரன் யார்?’’, என்று சேகர் வினவியதும் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
ரவியின் முகத்தில் மீண்டும் புன்னகை. ஆனாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. அன்றைய தினம் நடைபெற்ற கைக்குட்டை கதையை நினைத்து நினைத்து பிரதீப் தனக்குள் சிரித்துக்கெண்டான்.
கமலா நகரில் பொருட்களை வாங்கிக்கெண்டு அவர்கள் திரும்புகையில், ‘‘நான் ஒரு அறிவாளி, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நான் ஒரு அறிவாளி’’ என்று பாடிக்கொண்டே பிரதீப், தான் சாந்தினி சௌக்கில் நன்கு பேரம் பேசி வாங்கிய கைக்குட்டையை மற்றவர்களுக்குக் காண்பித்தான்.  ‘‘மாமி, நாம் மட்டும் சற்று கவனமாக இல்லையென்றால் இவர்கள் நம்மை ஏமாற்றிவிடுவார்கள். பாருங்கள், ஒரு டஜன் கைக்குட்டை  முந்நூறு ருபாய் என்று அந்த வியாபாரி கூறினான். ஆனால் நான் ஐம்பது ருபாய்க்கு பேரம் பேசினேன்.  ஆனால் அவன் தன் பிடிவாதத்தை விட வில்லை. கடைசியில் அவற்றின் மேல் எனக்கு எந்த விருப்பமும்  இல்லாதது போல்  அந்த  இடத்தை விட்டு  நான்  விலகுவது போல் பாசாங்கு செய்தேன்.  ஆனால் அவன் என் பின்னாலேயே ஓடி வந்தான். ஐம்பது ருபாய்க்கு அவற்றை அவன்  தந்தான். நான்   எவ்வாறு பேரம் பேசினேன் என்று  அபியையும்  ரவியையும்  கேட்டுப்பாருங்கள்,’’ என்று ப்ரதீப் தனது திறமை குறித்து பெருமிதம் கொண்டான்.
‘‘நீ திறமைசாலி, எல்லோரும் நீ சொல்வதை ஒப்புக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும்,’’ என  ரேகாவும்  பிரதீப்பை பாராட்டினார். பிரதீப்பின்  உள்ளம்  குளிர்ந்தது. தான் வாங்கிய கைக்குட்டைகளை ரேகாவிடம் அளித்தான் பிரதீப்.
அவற்றை பிரித்துப் பார்த்த ரேகா, ‘‘ஏன் இவ்வளவு சிறிய கைக்குட்டைகளை வாங்கினாய்? இவை குழந்தைகளுக்கானது அல்லவா?’’ என்று கேட்டார்.
‘‘சிறியவையா, நான் பெரிய கைக்குட்டைகளை அல்லவா வாங்கினேன். அவற்றிற்கல்லவா பேரம் பேசினேன்,’’ என்றான் பிரதீப். ரேகா அந்தக் கைக்குட்டைகளை பிரதீப்பிடம் காண்பித்தார்.
‘‘ஓ, இவையல்ல  நான் தேர்ந்தெடுத்த கைக்குட்டைகள். நான் தேர்ந்ததெடுத்தவற்றில் நான்கில் ஒரு பங்குதான் இவை இருக்கின்றன,’’ என்றான் பிரதீப்.
‘‘அப்படியென்றால் நீ ஏமாந்துவிட்டாய் குழந்தை, இங்குள்ள வியாபாரிகள் மிகவும் சாதுர்யமானவர்கள் தெரியுமா?’’ என்று சிறுபுன்முறுவலுடன் கூறினார் ரேகா. தர்மசங்கடத்தால் வாயடைத்துப்போனான் பிரதீப். ‘‘அந்த வியாபாரியை மீண்டும் பார்க்க முடியுமா?’’ என்று அபியிடம் வினவினான். ‘‘அவர்கள் எப்போதும் ஒரே இடத்தில்  வியாபாரம் செய்வதில்லை,’’  என்றான் அபி. அவனது ஒட்டுமொத்த பெருமையும் நொறுங்கிப்போனது.
அவனது முகம் வாடியதைக் கண்ட சேகர் அவனுக்கு ஆறுதல் கூறினார். ‘‘பிரதீப், கவலைப்படாதே.  இது மிகவும் சாதாரணமான விஷயம்.  தில்லியில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர். நல்ல அனுபவமுள்ளவர்களே பலமுறை ஏமாந்துள்ளனர் தெரியுமா. இது தில்லி. நினைவிருக்கட்டும்,’’ என்றார்.
‘‘உங்கள் மாமா சொல்வது சரிதான். இதற்காக மிகவும் வருத்தப்படாதே. இது சாதாரணமான விஷயம்,’’ என்றார் ரேகா.  தன்னிடம் மிகவும் நட்புடன் பழகும் ஒரு பல் மருத்துவரிடம் தான் எப்படி ஏமாந்தேன் என்று அவர் கூறினார்.
எப்பொழுதும் போல் எனது பற்களை சோதனை செய்யத்தான் நான் அந்த மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அவர் சொன்னதையெல்லாம் கேட்டு நான் திடுக்கிட்டுவிட்டேன். என்னுடைய பற்கள் மிகவும் மோசமானவையாம். என்னுடைய பல பற்களை அடைக்க வேண்டுமாம்.  சில பற்களுக்கு வேர் சிகிச்சை செய்ய வேண்டுமாம். என்னுடைய தாடை எலும்பிலும் சில சிகிச்சைகள் அளிக்க வேண்டுமாம். இவ்வாறு அவர் கூறிவிட்டு, இவற்றிற்கெல்லாம் 25 ஆயிரம் ருபாய் செலவாகும் என்றும், இருந்தாலும் எனக்காக இவற்றை 20 ஆயிரம் ருபாய்க்கு சலுகை விலையில் செய்வதாகவும் அந்த மருத்துவர் கூறினார்.  அவர் மிகவும் நல்ல மருத்துவர் என்பதால் அவர் கூறியவற்றை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் அவர் கூறிய அனைத்தையும் என்னால் நம்பவும் முடியவில்லை.  நான் எனது பற்களை சராசரியாக பரிசோதனை செய்து சுத்தம் செய்து கொள்பவள்தான். அப்படியிருக்க என்னுடைய பல பற்கள் எப்படி மோசமான நிலையிலிருக்கும்? எனது சந்தேகத்தை உங்கள் மாமாவிடம் கூறினேன். ஏதோ தவறு எங்கோ நிகழ்ந்துள்ளது.  எனவே உண்மை என்னவென்று அறிந்துகொள்ள ஏதாவது ஒரு அரசு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று உங்கள் மாமா  கூறினார்.  அங்கு என் கதையைக்  கேட்ட மருத்துவர்கள் வாய்விட்டு சிரித்தனர். ஒரே ஒரு பல்லில் மட்டும் சொத்தை உள்ளது. அதனை நிரப்ப வேண்டும். மற்றபடி  எனது  மற்ற பற்கள் நல்ல நிலையில்தான்  உள்ளன  என்று அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு மிகவும் திருப்தியாக  இருந்தது. எங்களது வேலை  முடிந்தது. 
இங்க பாரு பிரதீப், தில்லியில் எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் ஏமாந்துள்ளனர். எனவே இந்த கைக்குட்டை சம்பவத்தை நினைத்து வருத்தப்படாதே என்றார் ரேகா.  பிரதீப்  விரிவாக புன்னகைத்தான்.
அவனை மீண்டும் பழையநிலைக்குக் கொண்டு வர ரேகா அவனிடம் தனது உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘நீ நிறைய புதிர் போடுவாயாமே. என்னிடம் எந்த புதிரையும் போட்டதில்லையே? ஏன்? எனக்கும் புதிருக்கு விடையளிக்கத் தெரியும். எங்கே ஒரு புதிரைப் போடு,’’ என்றார்.
உடனே பிரதீப்பிற்கு உற்சாகம் பிறந்தது. ஒரு நாக்கு சுழற்றியை ரேகாவிடம் அவன் போட்டான்.
‘‘எனக்கு ஓர் எண்ணம் உதித்தது. ஆனால் எனக்கு தற்போது உதித்த எண்ணம் நான் முன்பு எண்ணிய எண்ணம் அல்ல என்று எண்ணினேன்.  நான் முன்பு எண்ணிய எண்ணம் போல் தற்போதைய எண்ணம் இருந்தால் நான் அவ்வாறு எண்ணியிருக்கவே மாட்டேன்,’’ என்றான் ப்ரதீப்.
‘‘ஏய், குழப்பாதே,’’ என்றார் ரேகா. இதைக் கேட்டவுடன் அனைவரும் சிரித்தனர். 
இந்த அனைத்து சம்பவங்களையும் படுக்கைக்குப் போன பின் நினைத்துப் பார்த்தான் பிரதீப். இவற்றை எண்ணிய பிரதீப் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டான். அவன் ஏதோ கனவு கண்டு புன்னகைப்பதாக அபி நினைத்தார்.  ஆனால் சாந்தினி சவுக் பகுதியில் நடந்தவற்றையும் மாமாவின் வார்த்தைகளையும்  நினைத்த ரவிக்குத் தூக்கமே வரவில்லை.
ரவி அவரிடம், ‘‘மாமா, சாந்தினி சவுக்கிலும் கமலா நகரிலும்  கூட்டமான கூட்டம். பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட நடைபாதைகள் எங்கும் கடைகள்.  இதற்கிடையில் பேரம் பேசி அலைந்து விற்பவர்கள் வேறு. நேற்று நாம் சென்ற கரோல்பாக்கிலும் அப்படித்தான். இது எப்படி நடக்கிறது? போலீஸ் என்ன செய்கிறது?’’  என்று கேட்டான்.
‘‘அவர்களை ஒழுங்குபடுத்துவது போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பணிதான். ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை. அதில் ஏதோ குழப்பம் இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது,’’ என்றார் சேகர்.  ‘‘அது ஒரு கூட்டுக்கொள்ளை தெரியுமா? சட்டத்திற்குப் புறம்பான முறையில் வாகனங்களை நிறுத்துதல், விபச்சாரம், போதை பொருள் வர்த்தகம், சூதாட்டம், கள்ளச்சாராயம்  உட்பட பல்வேறு குற்றங்கள் அங்கு நடைபெறுகின்றன. உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தக் கும்பலும் இயங்க முடியாது. ஏன், சோதனை சாவடிகளில் கூட  மிகவும் நிறுவனமயப் படுத்தப்பட்ட முறையில் இலஞ்சம் வசூலிக்கப்படுகிறது. இந்த நகரத்தின்  தெருக்களில்  அலையும் கால்நடைகளை  அக்கம்பக்கத்து மாநிலங்களுக்கு கடத்திச்செல்லும் கால்நடை திருடர்கள் கூட்டம் பலவும் சோதனைச் சாவடிகளில் உள்ள காவல்துறையினரின் உதவியுடனேயே தங்கள் திருட்டுக்களை அரங்கேற்றுகின்றனர்,  தெரியுமா?’’
உத்தர பிரதேசத்திலிருந்து மூன்று சக்கர வாகனங்களில் வருவோரிடம் மிகவும் நட்புடன் நடந்துகொள்ளும் போலீஸ்காரர்கள், அற்ப விதிமுறை மீறல்களுக்காக உள்ளூர்காரர்களிடம்  கெடுபிடியுடன்  நடந்துகொள்வார்கள்.  இவர்கள் ஊழலை வெட்ட வெளிச்சமாக்குவதற்கென ஒரு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஐந்து போலீஸ்காரர்களும் அவர்களது உதவியாளர்களும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். இவர்கள் மாதா மாதம் இலஞ்சம் வாங்கிகொண்டிருந்தது தெரியவந்தது, என்றார் சேகர்.
பிரதீப்பிற்கு ஒரு சந்தேகம், நாம் பயணம் செய்யும்போது  போக்குவரத்து விதிமுறைகளை  மீறினால் போலீஸ்காரர்கள் நமக்கு  அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராதத் தொகையை நாம்  உடனடியாக செலுத்தத் தவறினால்  என்ன நடக்கும், என்று சேகரைக் கேட்டான்.
சிறப்பு போக்குவரத்து விவகாரங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளில் இது ஒன்று என சேரும். நீதிமன்றங்களில் உள்ள அகல்மதுகளால் பின்னர் இவை விடுவிக்கப்படவேண்டும்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என எனக்குப் புரியவில்லை என்றான் பிரதீப்.
நீதிமன்றத்ல் உள்ள அகல்மதுள், அங்கு பெரும்பாலும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அபராதம் செலுத்தாதவர்களின் சீட்டுக்களை பாதி தொகை கட்டி தளளுபடி செய்ய சொல்வான். இவ்வாறு செய்வதற்காக அவனுக்கு சில கமிஷன்கள் உண்டு. இப்படி பிழைப்பு நடத்தி தன் சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்பவர்களும் உண்டு.
இந்த மோசடியில் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருப்பவர்களும் உண்டு.  ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமானால் உயர் நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும்.  இதனை ஊடகத்திற்கு தெரிவிக்கக்கூடாது என்றும் எங்களுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு.  தலைமை ஊழல் தடுப்பு ஆணையம் மோசடிக்கான ஆணைகளை வெளியிட்ட பின்பும் கூட, இத்தகு சம்பவங்கள் மாநில அரசிடம் உள்ளன. எப்படியோ இந்த அகல்மதையும அவரது முகவரையும பிடிப்பதில் நாங்கள் வெற்றிபெற்றோம்.  இருப்பினும் அந்த நீதிபதிக்கு அவர்களுக்கும்  இருந்த  தொடர்பு  மெய்ப்பிக்கப்படவில்லை.
‘‘இலஞ்சம் வாங்குவதற்காக கையும் களவுமாக பிடிபடும் அரசு அதிகாரிகள் மீது கருணை காட்டுவது தவறானது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.  அவர்களின் மாபெரும் திட்டத்தை நாம் கண்டுகொள்வதேயில்லை. சட்டரீதியான நடைமுறை என்பது மிகவும் மந்தமாக இருப்பதால், குறைந்தபட்சம் இவ்வாறு பிடிபடுபவர்கள் குறித்து மக்கள் மத்தியில் நன்கு தோலுரித்துக் காட்ட வேண்டியது அவசியம். அதன்மூலம் மற்றவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டு, அவர்களை இத்தகு குற்றங்கள் செய்யாது தடுத்திட ஓரளவுக்கு உதவிடும்,’’ என்றார் சேகர்.
இதைக்  கேட்டவுடன்  சாந்தினி  சவுக்கின் சைக்கிள் ரிக்ஷாக்கள் குறித்து   பிரதீப்பிற்கு  நினைவு வந்தது. கிட்டத்தட்ட 50 ரிக்ஷாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக  அந்தப் பகுதியில் உள்ளன. உண்மையிலேயே அவர்களுக்கு அந்தப் பகுதியில் வேலை இருக்கிறதா என்று கேட்டான்.
இவையெல்லாம் நகராட்சி செய்யும் வேலை. ஒரு முறை இவர்களை கண்டறிவதற்காக செய்யப்பட்ட பணி கேலிக் கூத்தாகிப்போனது. இவர்களை ஓர் இடத்தில் அடைத்து வைத்து விசாரித்தால், அங்குள்ள அதிகாரியிடம் இலஞ்சம் கொடுத்து அவர்கள் தப்பித்தனர்.
ரவிக்கு தூக்கம் வரவில்லை.  பிரதீப் பலவிதமான நினைவுகளில் இன்னும் மூழ்கியிருந்தான். கரீமில் சுவைத்த பிரியாணி அவன் நினைவை விட்டு அகலவில்லை.
அவர்கள் வெளியில் சென்ற போது மதிய உணவுக்குப் பிறகு ஜூம்மா மசூதி செல்ல திட்டமிட்டிருந்தனர்.  மாலையில் செங்கோட்டையில ஒலியும்ஒளியும் பார்த்து விட்டு கரீமில் இரவு உணவுக்காக சென்றனர். அவர்கள் வீட்டிற்குச்  சென்ற பிறகு, முதியவர்கள் புல் தரையில் மெதுவாக நடை பயிற்சி சென்றதைக் கண்டார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் ரேகாவிடம் பிரதீப், மாமி மிகவும் பசிக்கிறது என்றான். ஏன் கரீமில் பிரியானி சாப்பிடவில்லையா என்றார்  ரேகா.  ‘‘மாமி, சாப்பிட்டோம். வெறும் எலும்பு பிரியாணிதான் சாப்பிட்டோம். கறி பிரியாணி சாப்பிடவில்லை என்றான் பிரதீப். எனக்கு உண்மையிலேயே பசிக்கிறது. எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்   என்றான்  பிரதீப்.  உடனே  ரேகா அடுப்படிக்கு சென்று அவர்களுக்காக  ஆம்லெட்  தயாரித்தாள். தனது  அண்ணி  தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் எவ்வளவு அன்புடன் இருக்கிறார் என்பதையெண்ணி  சுமன் நெகிழ்ந்து போனாள்.
ஆம்லெட்டின் வாசனை வந்ததும் நாய்க்குட்டிகள் அடுப்படியை நோக்கி ஓடின. உங்களுக்கும் உண்டு, கவலைப்படாதீர்கள், கொஞ்சம் பொறுங்கள் என்றார் ரேகா. அவர் சொன்னதைப் புரிந்துகொண்டதுபோல் அவைகள் வாலாட்டி நன்றி தெரிவித்தன. இந்த நாய்க்குட்டிகளை நினைத்துக் கொண்டே பிரதீப் நன்கு உறங்கிவிட்டான். ஆனால் ரவிக்கு தூக்கமே வரவில்லை. வாகனங்களை நிறுத்தும் இடங்களில் இருந்த கொள்ளையர்களைக்  குறித்தே  அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.  
அன்று மாலை அவர்கள் ஆம்லட்டுடன் காபி அருந்திக் கொண்டிருந்த போது அவர்களைப் பற்றி சேகர் விரிவாக விளக்கினார். அவர்கள் போலீசாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.  அதெப்படி முடியும் என்றான் பிரதீப். நான் ஒரு கதை சொல்கிறேன். அதிலிருந்து நீ புரிந்துகொள்வாய் பார் என்றார் சேகர்.
தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான ஒரு மார்கெட்.  மிகவும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் முன்பு தீவிரவாதக் குண்டுவெடித்தது உனக்கு நினைவிருக்கும்.  எனவே அத்தகு மார்கெட்டுகளில் அரசு தற்போது டி.வி. கேமராக்கள் பொறுத்தி அனைவரையும் கண்காணிக்கிறது.  அந்தப் பகுதி காவல் நிலைய அதிகாரியின் அறைக்குள் இந்த கேமராக்களில் பதிவாகும் வீடியோவை உடனுக்குடன் பார்க்கலாம். அவர் தனது அறையிலிருந்துகொண்டே மார்கெட்டில் என்ன நடக்கிறது என்று எளிதாகப் பார்க்கலாம். 
இந்தப் பகுதியின் கடைக்கரர்களும் வாடிக்கையாளர்களும்  தங்கள் வாகனங்களை நிறுத்த ஓர் இலவச  நிறுத்துமிடம்  உள்ளது.  எல்லாம்  நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது,  ஒரு புதிய காவல் நிலைய அதிகாரி பொறுப்பேற்கும் வரை.  புதிய நிலைய அதிகாரி நிறுத்துமிட திருடர்களுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை திரைமறைவில் ஏற்படுத்தியிருந்தார். இதில் சில மத்தியஸ்தர்களும் வேறு சில போலீஸ்காரர்களும்  ஈடுபட்டிருந்தனர்.  இவர்கள் அனைரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தும் அளவிற்கு நெருக்கமாயினர்.
ஒரு குளிர்கால காலைப் பொழுதில், சில உள்ளூர் ரவுடிகள் அந்த மார்க்கெட்டுக்குள் புகந்தனர்.  அவர்கள் இலவச நிறுத்துமிடத்தை கட்டண நிறுத்துமிடமாக மாற்றினர்.  மக்களுக்கு ஒரே குழப்பம். போலீஸ்காரர்களிடம் வினவினால், ஆமாம் தற்போது கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.  இந்தக் கும்பல் ரசீது வேறு வழங்க ஆரம்பித்தது. பலர் எந்தக் கேள்வியும் கேட்காமல் பணம் செலுத்தினர் ரசீது வாங்கினர். சிலர் எதிர்த்தனர்.  கோபம்கொண்ட ரவுடிகள் எதிர்த்தவர்களை அடித்தனர்.  இவர்களை சமரசம் செய்ய முயன்ற போலீசார், பேசாமல் கட்டணம் செலுத்திவிடுங்கள் என்று  மக்களுக்கு சமாதானம் கூறினார்.  எல்லோரும் கட்டணம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தக் கொள்ளை கும்பலுக்கும் போலீசாருக்கும் நல்ல வருமானம்.  இவர்கள் அபராதக் கட்டணத்தை இரட்டிப்பாக்கும் வரை  இவர்களின் தேனிலவு தொடர்ந்தது.
கட்டண தொகை இரட்டிப்பானது  பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  ஆனால் ஒரே ஒரு கடைக்காரர் இதனை எதிர்ப்பது என்று முடிவு செய்தார்.  அவரை அந்த ரவுடிகள் நையப் புடைத்தனர்.  எல்லோர் முன்னிலையிலும் அவரை அடித்தனர்.  போலீஸ்காரர்கள் வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தனர்.  முழுவதுமாக மனமுடைந்து போன  கடைக்காரர் இந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டுவிடக்கூடாது, இவர்களை பழிவாங்கியே தீரவேண்டும் என்று உறுதி கொண்டார். தகவல் உரிமைச் சட்டத்தின்மூலம் பல தகவல்களைத் திரட்டினார்.  போலீஸ்காரர்களுடன் இணைந்து கொண்டு  ரவுடிகள் நடத்தும் வெட்கங்கெட்ட செயல் இது என்று கண்டறிந்தார். மேலும்  சில ஆதரவாளர்களைத் திரட்டி  காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
நிலைய அதிகாரி அவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார். இந்த கட்டண உயர்விற்காக நீங்கள் ஏன் இவ்வளவு  எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று நிர்வாகிகள் முடிவெடுத்தால் அதன் பின் ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும்.  நீங்கள் வேறு வழியின்றி கட்டணத்தை செலுத்த வேண்டியதுதானே என்று அவர் மிரட்டினார்.  நீங்கள் கட்டணம்  செலுத்தவில்லை என்று  காண்டிராக்டர் புகார் அளித்தால் நான் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.  கொள்ளை
கும்பலுக்கு எதிராக நிலைய அதிகாரி எந்த நடவடிக்கை எடுக்காததிலிருந்து இந்த மோசடி அனைத்தும் அவரது ஆசிர்வாதத்துடன்தான்  நடைபெறுகிறது  என்பது புரிந்தது.
வேறு வழியில்லாமல் அவர்கள்  தில்லி வளர்ச்சிக் கழகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்கள் இந்த பிரதிநிதிகளின் பிரச்சினைக்கு ஆதரவளித்தனர்.  தாங்கள் எந்த காண்டிராக்டருக்கும்  ஒப்பந்தம்  அளிக்கவில்லை  என்று கூறி, அந்த கொள்ளை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு புகாரை அதே நிலைய அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர்.  அந்த நிலைய அதிகாரி தனது நிலைப்பாட்டை உடனே மாற்றிக்கொண்டு  அவர்களுக்கு பதில் அனுப்பினார். அதில் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் மறுத்து, எந்த காண்டிராக்டரும் எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
‘‘அதெப்படி, மக்களுக்கு ரசீது வழங்கிய பிறகு இவ்வாறு எப்படி கூற முடியும்?’’ என்று ரவி கேட்டான். 
‘‘நீ சொல்வது முற்றிலும் சரி. அவர்களிடமிருந்து அவருக்கு மாதா மாதம் இலஞ்சம் தவறாமல்  சென்று கொண்டிருந்தது. அதனால் அவர் இவ்வாறு ஓர் அறிக்கை அளித்தார்,’’ என்றார் சேகர். மிகவும் விரக்தியுற்ற அவர்கள் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்கள். அதன்படி  அவர்கள் ரவுடிக் கும்பலை கூண்டோடு பிடிப்பதற்காக ஊடகங்களின் உதவியுடன் ரகசியத் திட்டமொன்று தீட்டினார்கள்.
உளவுக் கேமராக்கள் தகவல் சேகரிக்க ஆரம்பித்தன.  காண்டிராக்டர்களும் அவரது ஆட்களும் வெளிப்படையாகவே கட்டணம் வசூலித்தனர்.  கட்டண நிறுத்துமிடம் என்ற பெயர்ப்பலகையும் அதற்கு அவர்கள் வெளியிடும் ரசீதுகளும் காமிராவில் நன்கு பதிவு செய்யப்பட்டது. காண்டிராக்டருடனும் அவரது ஆட்களுடனும் போலீஸ்காரர்கள் எப்படி பழகுகிறார்கள் என்று படம் பிடிக்கப்படடது. ஞாயிற்றுக்கிழமைகளில் கடை விரிக்கும் சிறு கடைக்காரர்களிடம் கூட  காண்டிராக்டர்கள்.  அளவிற்கு அதிகமாகக் கட்டணம் வசூலித்தனர்.   ரோந்து வரும் போலீஸ்காரர்களுக்கும்  மற்ற போலீஸ்காரர்களுக்கும் இதில் பங்கு இருந்தது. தரையில் அமர்ந்து சிறு வணிகம் செய்யும்  வியாபாரிகளிடம்  கூட  இலஞ்சம் பெற்றனர். இவற்றில் பெரும் பகுதி நிலைய அதிகாரியின் கைக்கு சென்றது.  இத்தனை செயல்களும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.
இவ்வளவு ஊழலையும் கண்டுபிடித்த பிறகு வலுவான ஆதாரங்களுடன் இலஞ்ச ஊழல் தடுப்புத் துறை ஒரு விரிவான அறிக்கையை தயார் செய்து காவல் துறை ஆணையரிடம் சமர்ப்பித்தது. நிலைய அதிகாரிக்கு எதிராகவும், மார்கெட்டில் பணியமர்த்தப்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு   எதிராகவும்  நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
‘‘பிறகு என்ன நடந்தது?’’  என ஆவலுடன் கேட்டான் பிரதீப்.
மிக மகிழ்ச்சியுடன் இலஞ்ச ஊழல் தடுப்புத் துறையினர் காவல்துறை ஆணையரின் அறையில் நுழைந்தனர்.  தங்களுடைய ஆய்வுக்கும் அறிக்கைக்கும் நல்ல பலன் கிடைக்கும் என நம்பினர்.  ஆனால் அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 
ஒருமெல்லிய புன்னகையுடன் ஆணையர்  அவர்களை வரவேற்றார்.  பிரம்ம குமாரிகள் அமைப்பினரின்  ``ஓம் சாந்தி’’   பயிலரங்கத்திற்குப் பிறகு அவர் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார்.  அந்த அறிக்கையை தயாரித்த இலஞ்ச ஒழிப்பு அதிகாரியின் விளக்கத்தை அவர் நன்கு கேட்டறிந்தார். ஆனால் படிப்படியாக அவர் தனது அமைதியையும் பொறுமையையும் இழந்தார்.  ஒரு சில கேள்விக்கணைகளைத் தொடுத்தார். நேரம்  செல்ல செல்ல எரிச்சல் அடைய ஆரம்பித்தார்.  குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு அதிகாரி அடுக்கிக்கொண்டே செல்கையில், என்னவோ அவர்தான் தவறு செய்தவர் மாதிரி அனைவரும் அவரை வெறுப்புடன் உற்று நோக்கினர்.
தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த இரகசிய விசாரணையை  அவர்கள்  எவ்வாறு மேற்கொள்ளலாம்  என்று  அவர் அந்த  ஊழல் தடுப்பு  அதிகாரியைக் கேட்டார்.  இப்படி செய்தால்தான் ஊழலில் கூட்டாக ஈடுபட்டிருப்பவர்களை கண்டறிய முடியும் என்று அந்த அதிகாரி எவ்வளவு விளக்கம் அளித்தும்   அதனை  அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது தலையை இங்கும் அங்கும் நன்கு ஆட்டி, தனது வெறுப்பைக் காண்பித்தார். அந்த அறைக்குள் நுழைந்த மற்ற அதிகாரிகள் ஆணையர் கோபமான நிலையில் இருப்பது கண்டு பின்வாங்கினர். ``ஓம் சாந்தி’’ பிரார்த்தனை அந்நேரத்தில் தோற்றுப்போனது.
அவர் அமைதிக்கு வர சில நேரமானது. தனது இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு ஊழல் தடுப்பு அதிகாரிகளின் துடுக்குத்தனத்தை நினைத்து ஆத்திரமுற்றார். மேசையின் மீது ஓங்கி ஒரு குத்துவிட்டு, ``இனிமேல் இந்த மாதிரி இரகசிய விசாரணையை எல்லாம் நிறுத்திவையுங்கள்’’ என்றார்.   இந்த ஆணையைக் கேட்ட அதிகாரி நிலை குலைந்து  அவரை உற்றுநோக்கினார். இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த பணிக்கு அவர்களுக்கு கிடைத்த தண்டனை அவர்கள் செவியில் இடிபோல் இடித்தது. எந்த வித முணுமுணுப்பும் இன்றி அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
``இவர்கள் அனைவரையும் விட நிலைய அதிகாரியை எதற்காக அந்த ஆணையர் ஆதரிக்க வேண்டும்’’ என்று வினவினான் ரவி.
``அந்த நிலைய அதிகாரியை அந்த இடத்தில் பணியமர்த்தியதே இந்த ஆணையர்தான். மற்றவற்றை நீயே யூகம் செய்து புரிந்துகொள்.  ஊழல் என்பது ஒரு நோய். அது அனைவரையும் பாதிக்கும். வாழும் கலை, ஓம் சாந்தி போன்ற தியான முறைகள் பயின்றவரையும் அவை பாதிக்கும்,’’ என்றார் சேகர்.
``பணம் பேசும்போது யாரும் இலக்கணம் சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதில்லை,’’ என்று இடைமறித்தான் பிரதீப். 
ரவி கேட்டான்: ‘‘பணம் அந்த அளவிற்கு மனிதர்களின் அறிவை  மழுங்கடித்து ஊழல் பெருச்சாளிகளாக்குகிறதா?’’
இந்தக் கேள்வியை ரவி கேட்டவுடன் சேகருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘‘அற்புதம். தில்லி வந்து நான்கு நாட்களுக்குள் நீங்கள் மிகவும் தைரியசாலி ஆகிவிட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கற்றுக்கொள்ள முடியாதவற்றை  ஒரு சில தினங்களிலேயே உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அற்புத நகரம் தில்லி. தெரியுமா?’’
ஆதாரங்களுக்காக அலைந்து திரிந்த மக்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. மனதளவில்  அவர்கள் காயப்பட்டுத்தான் போயிருந்தார்கள். ஒட்டுமொத்த ஜனத்திரளுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அந்த கடைக்காரரால் மறக்க முடியவில்லை. அவர் உயர் நீதி மன்றத்திற்குச் சென்றார்.  இது தெரிந்தவுடன் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.  நீதிமன்றத்திற்கு வரும முன்பே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நிலைய அதிகாரி மாற்றப்பட்டார்.  உயர்நீதிமன்றத்திற்கு இது தெரிவிக்கப் பட்டது. இந்த விவகாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் கோபம் விலக்கப்பட்டது. கடைசியில் இந்த வழக்கின் புலன் விசாரணை நன்கு வளைந்து கொடுக்கும் ஒரு அதிகாரியின் மடியில் விழுந்தது.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அப்பாவி மனுதாரர்கள் வேறு காரணங்களுக்காகத் துன்புறுத்தப் பட்டார்கள். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளித்ததற்காக அவர்களுக்குக் கிடைத்த பரிசு இது. போலீஸ்காரர்களுக்கு எதிராக புகார் அளிக்க என்ன துணிச்சல் அவர்களுக்கு?’
‘‘கிராமப்புறங்களில் இது நடந்தால் புரிந்துகொள்ளக்கூடிய விஷயமே. ஆனால் முன் மாதிரி நகரம் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் தில்லியில் இது நடந்தால்  மன்னிக்கவே முடியாது’’ என்றான் ரவி.
‘‘ரவி, மக்கள் புத்திசாலிகளாக இருந்தால், அவர்கள் நல்ல தலைவர்களை, நேர்மையான தலைவர்களை ஆட்சியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.  நன்கு வலுவான சுதந்திரமான லோக்பால் மற்றும் லோகாயுக்தா அமைப்புகள் விரைவில் சாத்தியமாகும். அப்போது நிலைமை முற்றிலும் மாறும். உயர் மட்டங்களில் உள்ள ஊழலை இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் அடி மட்டத்தில் உள்ள ஊழலை எளிதில் கையாளலாம்.  இதுவும் ஒரு யுத்தம்தான். தளபதியைத் தாக்கினால், அவனது சிப்பாய்கள் தலைதெறித்து ஓடுவார்கள் அல்லவா’’ என்றார் சேகர். 
ரவி அபியையும் பிரதீப்பையும் பார்த்தான். அவர்கள் நிம்மதியாக தூங்கிகொண்டிருந்தார்கள்.  ஆனால் அவனது மனம் நிம்மதியில்லாமல் ஊசலாடிக்கொண்டிருந்தது.  அவன் சிக்கலானது என்று கருதிய ஒரு  பிரச்சினைக்கு  எந்தத் தீர்வும் கண்ணில் தெரியவில்லை.  மாமா ஏதோ சொன்னார். ஆனால் ஏதேனும் அவசர அழைப்பு என்றால் யாரை  வீட்டில விட்டுச்செல்வது என்பது குறித்து அவர் முழுதும் சொல்லவில்லை.
அந்நேரம் பாப்லு புல்தரையில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது.  அதனை பார்த்து புஜ்ஜியும் ஓடி விளையாடியது. இவர்களது விளையாட்டு குழந்தைத்தனமாக இருப்பது போல் இவர்களை ஒரு மாதிரியாக பார்த்தது ஃப்ருட்டி.  தனது குட்டியான புஜ்ஜி சேகரின் காலடியை அடைந்து மெல்ல உறங்கியதை கண்டு ரசித்தது ஃப்ருட்டி.
‘‘அம்மா, இங்கே பாருங்கள். ஃப்ருட்டி தனது குட்டியை எப்படி வளர்க்கிறது என்று,’’ என ஆச்சரியமாக தனது அம்மாவிடம் கூறினான் பிரதீப். ‘‘விலங்குகள் எல்லாம் தனது உலகத்தில் ஒழுக்கமாகத்தான் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் ஏன் இப்படி கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை’’ என்றும் கூறினான் பிரதீப்.
அவனது கூற்றை முற்றிலும் ஆதரித்தார் அவனது மாமா சேகர்.  ஆமாம், விலங்குகள் உலகம் பாராட்டப்படக்கூடியதுதான்.  தனக்கு பசிக்காத போது எந்த விலங்கும் உணவு தேடாது.  தனது வயிறு நிறைந்த பிறகு எந்த பெரிய விலங்கும் வேட்டைக்கு செல்வதில்லை.  அவர்களது பாலுணர்வு இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான். உடலில் சூடு உள்ளபோதுதான் நாய்கள்உடலுறவு கொள்கின்றன.  ஆனால் மனிதர்களைப் பாருங்கள்.
 நமக்கு பசியில்லாதபோது கூட நாம் சாப்பிட விரும்புகிறோம்.  பாலுறவிற்காக செயற்கையான முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். பணத்தாசை என்று வருகிறபோது  அதைப்பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. பாலியல் பலாத்காரங்களும் ஊழலும் நமது பேராசையின் எடுத்துக்காட்டுகள். விலங்குகள் தனக்கென சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நாம் விலங்குகளை விட மோசம்.
‘‘மாமா, நீங்கள் பல விதமான ஊழல் மற்றும் குற்றம் குறித்து பல்வேறு தகவல்களை அளித்துள்ளீர்கள். குற்றவாளிகளை சீர்திருத்த நமது அமைப்புகள் எவ்வாறு தோற்றுள்ளன என்றும் நீங்கள் கூறினீர்கள்.  குற்றம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்  என்று நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை, அதனைக் கட்டுப்படுத்த  ஏதேனும் வழி இருக்கிறதா?’’ என்றான் பிரதீப்.
அவனது கேள்வி பல்வேறு எண்ண அலைகளை சேகருக்குள் ஏற்படுத்தியது. ‘‘குற்றம் அதிகரிக்கும் போது மக்கள் அதனை கூக்குரலிட்டு வெளிப்படுத்துகிறார்கள். மக்கள்தொகை அதிகரிக்கும் போது பொருளாதார நடவடிக்கைகளும் அதிகரிக்கின்றன. எங்கெல்லாம் புலம்பெயர்தல் அதிகமாக இருக்கின்றதோ, எங்கெல்லாம் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கின்றதோ, எங்கெல்லாம் ஏழை பணக்காரர் வேறுபாடு அதிகமாகிறதோ, அங்கெல்லாம் குற்றங்கள் பெருகுவது இயற்கை.’’
‘‘அப்படியென்றால் குற்றங்களைத் தடுக்கவழிதான் என்ன?’’ என்று வினவினான் பிரதீப்.
‘‘ஒழுக்கம்தான் ஒவ்வொரு மனிதனையும் சீர்படுத்தும். ஒரு மனிதனின் குணநலன் பல்வேறு மதிப்புகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் பின்பற்றி வளர்ந்தால் சமூகத்தில்  குற்றங்கள் குறையும். குடும்பம், சமூகம், மற்றம் மதம் ஆகியவை ஒரு மனிதனின் ஒழுக்கத்தை வளர்த்தால் குற்றங்கள் குறையும். குற்றவாளிகளை தண்டிப்பதையும் சீர்திருத்துவதையும் நீதிமன்றங்கள் செய்யும்’’ என்றார் சேகர்.
‘‘ஒரு பொருளின் மதிப்பைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் விலையை அல்ல. ஒவ்வொரு பெற்றோரும் அவரவர் தொழில்களிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  பல பெற்றோர் மிகவும் அப்பாவிகளாக உள்ளனர்.  இத்தகு தருணத்தில் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல நீதியை சொல்லி வளர்ப்பதற்கு யார் இருக்கிறார்கள்? பெற்றோர்களுக்கு எங்கு நேரம் இருக்கிறது? குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று எப்படி தெரியும்?’’ என்றான் பிரதீப்.
உடனே ரேகா குறுக்கிட்டு, ‘‘எல்லோரையும் அப்படி சொல்லி விடாதே. நமது குடும்பங்களில் நாம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லி கொடுத்துத்தான் வளர்க்கிறோம். சுப்ரமணியம் குடும்பத்திலும் அப்படித்தான். பல குடும்பங்கள் குழந்தைகளுக்கு நன்னெறியை போதிக்கின்றன,’’ என்றார்.
‘‘இல்லை ரேகா. நாம் அனைவரும் சேர்ந்து ஒரு சிறிய துளிதான். பிரதீப் சொல்வதுதான் உண்மை,’’ என்றார் சேகர். ‘‘சரி, சமூகத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று பிரதீப்பை நோக்கிக் கேட்டார் சேகர்.
இக் கேள்விக்கு ரவி பதில் சொன்னான். ‘‘பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள் அறிவைத் திணிக்கும் இடங்களாகத்தான் உள்ளன.’’ இதற்குள் பிரதீப் குறுக்கிட்டு, ‘‘வயோதிகர்கள் நாடாள்கிறார்கள். இளைஞர்கள் முகநூலில் முகம் புதைத்துள்ளார்கள். இத்தகு தருணத்தில், ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பற்றி விவாதிப்பதற்கு முக்கிய குழுக்களுக்கு ஏது நேரம்?இணையத்துடன் இணைந்துவிட்ட குழந்தைகளோ, அவர்களது பெற்றோர் அவர்களது கம்ப்யூட்டரை நோட்டம் விடும் போதெல்லாம்அதன் வால்பேப்பரைத்தான் அவர்களுக்குக் காட்டுகின்றனர். நகரங்களில் அண்டை வீட்டுக்காரர்கள் கூட ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை. யாரும் எதிலும் குறுக்கிடுவதில்லை,’’ என்றான்.
‘‘நீ சொல்வது முற்றிலும் சரி. மதத்தைப் பற்றிக் கூறவதற்கு ஏதேனும் உண்டா?’’ என்றார் சேகர்.
அபி குறுக்கிட்டு, ‘‘எனக்குப் புரிந்தவரை, குற்றவாளிகள் மற்றும் சாமானிய மனிதன் இருவருக்குமே கடவுளும் மதமும் ஒன்றுதான். குற்றவாளிகள் தங்கள் குற்றங்களின் மூலம் தங்களுக்குப் பணம் தேவை என நினைக்கிறார்கள். வணிகர்களும் பகாசுரன்களும் தவறான முறையில் செல்வம் சேர்ப்பதற்காக கடவுளின் ஆசிர்வாதத்தைக் கேட்கிறார்கள்.  அத்தகு மக்களை முதல் வரிசையில் உட்கார வைத்து குருக்கள் வளர்த்துவிடுகிறார்.  எந்த மதமும் அவர்களது குணாதிசயத்தை மாற்றப் போவதாக எனக்குத்  தோன்றவில்லை.  தங்களது குற்றச்செயலை மாற்றுவதற்குப் பதிலாக, வெறும் சடங்குகளில் அவர்கள் திருப்தி அடைகிறார்கள்.’’
‘‘குடும்பம், சமூகம், மதம் ஆகிய மூன்றுமே குற்றங்களைத் தடுக்கத் தோற்றுவிட்டன. எனவே நமக்கு முன்னால் உள்ள ஒரே தீர்வு குற்றத் தீர்ப்பு அமைப்புகள். - காவல்துறை, வழக்கறிஞர்கள்,  வழக்குத் தொடர்பவர்கள், நீதிபதிகள் மற்றும் சிறைச்சாலைகள். குற்றத் தீர்ப்பு  அமைப்பின் நுழைவாயில்தான் போலீஸ்காரர்கள். பணமும் அதிகாரமும் படைத்தவர்களுக்கு சாதகமாக நடப்பதும், ஏழை மக்களை வாட்டுவதும்,  இத்தகு நடைமுறைகள் மூலம் குற்றத்தை மறைப்பதும் பல்வேறு போலீஸ்காரர்களின் செயலாக உள்ளது. சிலர் நேர்மையான முறையில் புலன் விசாரணை செய்தாலும் எல்லா வழக்குகளுமே நீதிமன்றத்தை அடைவதில்லை. ஏனெனில் சாட்சிகளும் தடயங்களும் கிடைப்பதில்லை. ஒரு சில வழக்குகள்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன.  அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும்  எதிர்க்கட்சி வழக்கறிஞர்களும் வழக்குகளை நல்ல முறையில் நடத்துவார்கள் என்று நினைக்கிறீர்களா?’’ என்றார் சேகர்.
‘‘பல வழக்குகள் பற்றியும் தீர்ப்புகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். சில நேரங்களில் நீதி தவறுகிறது.  ஒரு வழக்கறிஞரின் உண்மையான பணி வாய்மையை வெளியே கொண்டுவருவது என்றால் அவர்களது வெற்றி தோல்வி பற்றி ஏன் இவ்வளவு குழப்பம்?’’ என்றான் ரவி.
அவனது சிந்தனை ஓட்டத்தை சேகர் பாராட்டினார். ‘‘இது குறித்து இரண்டாவது மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.  நல்ல வசதியானவர்கள் நன்கு புத்திசாலியான வழக்கறிஞரை தெரிவு செய்கின்றனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர்  பாதிக்கப் பட்டவருக்காகவும் போலீசுக்காகவும் வாதாட வேண்டியிருக்கிறது.  இவர்களுக்கு இடையேயான வேறுபாடு அதிகம் காணப் படும்போது குற்றவாளிகள் சில தொழில்நுட்ப காரணங்களால்  விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. பொய்களுக்கு உண்மையின் சாயம் பூசப்படுகிறது. உண்மையான நிலை மறைக்கப்டுகிறது.  அதனால் தீமை வெற்றிபெற்றாலும் அதனை வெற்றி என அவர்கள் கொண்டாடுகின்றனர். பாதிக்கப்பட்டவன் மேலும் பாதிக்கப்படுகிறான். அதுதான் இதில் சோக முடிவு,’’ என்றார் சேகர்.
‘‘ஒரு வழக்கறிஞரின் தந்திரம் எந்த உண்மையையும் புரட்டிப்போடும் சக்தி வாய்ந்தது,’’ என்றான் பிரதீப். ‘‘ஒரு கல்லறையில் ஒரு வழக்கறிஞரும் ஒரு நேர்மையானவனும் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு சிறுவன் அவனது அப்பாவிடம் அதெப்படி ஒரு கல்லறைக்குள் இரண்டு பேரைப் புதைப்பார்கள் என்று கேட்டான்,’’ என்று பிரதீப் கூறியவுடன் அனைவரும் சிரித்தனர். 
‘‘கங்குலி என்று ஒருவன் இருந்தான். அவன் ஒரு பெரிய கடையில் திருடிக்கொண்டிருந்தபோது அங்குள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் அவனைக் கையும் களவுகமாக பிடித்தனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவன் மீது உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
‘‘நீ எப்படி வாதாடுவாய்?’’ என்று அவனைப் பார்த்துக் கேட்டார் நீதிபதி.
‘‘கனம் நீதிபதி அவர்களே. நான் குற்றமுடையவனா அல்லது குற்றமற்றவனா எனறு வாதிடுவதற்கு முன்பு எனக்கென ஒரு வழக்கறிஞரை நீதிமன்றம் அளிக்கவேண்டும்’’  என்று அவன் கேட்டுக்கொண்டான்.
‘‘கங்குலி, நீ கையும் களவுமான பிடிபட்டுள்ளாய். உன்னைக் காப்பாற்ற எந்த வக்கீல என்ன சொல்ல முடியும்?’’ என்றார் நீதிபதி.
‘‘கனம் நீதிபதி அவர்களே, அவர் எவ்வாறு என்னை ஆதரித்துப் பேசுகிறார் என்று நான் காணவேண்டும்’’ என்றான் கங்குலி. ‘‘வக்கீல்கள் இப்படித்தான் என்றால் நீதிபதிகள் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?’’ என்று கேடடான் பிரதீப்.
‘‘இல்லை. சில நீதிபதிகள் உண்மையிலேயே மனசாட்சியுடன் செயல்படுவர்.  எல்லா விதமான தடைகளையும் தாண்டி  உண்மையைக் கண்டறியும் நீதிபதிகள் உள்ளனர். வக்கீல்களின் விவாதங்களில் மயங்கி குற்றவாளியை விடுவிக்கும் நீதிபதிகளும் உள்ளனர்.  சிலர் குற்றவாளியுடன் கைகோர்த்துக் கொண்டு தீர்ப்பு வழங்குபவர்களும் உள்ளனர்.’’ என்றார் சேகர்.
‘‘நம்முடைய அப்பா தனது சக ஊழியர்களான சில நீதிபதிகளைப் பற்றி பல விஷயங்கள் கூறியது உனக்கு நினைவிருக்கிறதா,’’ என தங்கை சுமனைப் பார்த்துக் கேட்டார் சேகர்.
‘‘ஆமாம். அவர் உயிருடன் இருந்தபோது அவர் நிறைய நமக்க கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் கற்றுக்கொடுத்த  ஒழுக்கத்தினால்தானே நாம் இப்படி வளர்ந்துள்ளோம்,’’ என்றார் சுமன்.
‘‘அதுமட்டுமல்ல, பலமுறை வழக்கை தள்ளிப்போடுவது, வழக்குகளில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றாலும்  குற்றங்கள் தடுக்கப்படுவதில்லை’’ என்றார் சேகர். ‘‘அதெப்படி’’ என்றார்கள் சிறுவர்கள் அனைவரும் ஒரே குரலில்.
‘‘வழக்கு உடனடியாக விசாரணைக்கு வந்தால்தான்  குற்றவாளி தண்டிக்கப்பட்டு உண்மை நிலைநாட்டப்படும். இல்லையென்றால் சட்டத்தைப் பற்றி யார் கவலைப்படுவர்?  பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட எழுபத்தாறு வயதான ஒருவனின் தண்டனையை உச்ச நீதமன்றம் சமீபத்தில்  ஏற்றுக்கொண்டது  தெரியுமா.  ஆனால் அவன் 20 வருடங்களுக்கு முன்பு செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது?இது எந்த விதத்தில் தண்டனை? எந்த விதத்தில் இது பிறரைகு குற்றம் செய்யாமல் தடுக்கும்? இது வெறும் சட்ட ரீதியான சடங்குதானே?’’
‘‘இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரை நினைத்துப் பாருங்கள். கற்பழிக்கப்பட்ட போதும் அதன் பின் விசாரணையின் போதும் எவ்வளவு சிக்கல்களை அவள் கடந்து வரவேண்டும்? ஜாமீனில் வெளிவந்து அந்த ஆள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தான்.  ஆனால் கற்பழிக்கப்பட்டவள் என்ற முத்திரையுடன் அந்த பெண் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருந்தாள்,’’ என்றார் சேகர்.
இதைக் கேட்டவுடன் ரேகா, ‘‘ ஏன், நிர்பயா வழக்கையே எடுத்துக்கொள்ளுங்களேன். துரதிருஷ்டவசமாக அந்தப் பெண்  தனது உயிரை இழக்கவேண்டியிருந்தது.  அந்த சிறார் குற்றவாளி தண்டிக்கப்படுவானா என்று தெரியவில்லை. பாலியல் பலாத் காரத்திற்கான தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு அது ஓர் எச்சரிக்கையாக இருக்கும். சிறார் குற்றவாளிகளுக்கான சட்டத்திலும் மாற்றம் தேவை,’’ என்றார்.
இதைக் கேட்டவுடன் சுமன், ‘‘ரேகா சொல்வது முற்றிலும் சரி. பாலியல் பலாத்காரம் மட்டுமல்ல, ஒவ்வொரு குற்றத்திலுமே  பாதிக்கப்பட்டவரை கருத்தில் கொண்டு நீதிவழங்கப்பட வேண்டும். வெறும் போலீஸ்காரர்களும் அரசு வழக்கறிஞர்களும் மட்டும் நீதி வழங்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது,’’ என்றார்.
‘‘உண்மைதான் மாமா. பாதிக்கப்பட்டவரைப் பற்றி யாருமே நினைப்பதில்லை. நம்முடைய  சட்ட நடைமுறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படவில்iயென்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் ஓட வேண்டியிருக்கும்,’’ என்றான் பிரதீப்.
‘‘நாம் இப்பொழுது சிறைச்சாலைகளைப் பற்றி பேசுவோம். தண்டனையின் நோக்கம் ஒருவரை திருத்துவதுதான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை சீர்திருத்துவது,’’ என்றார் சேகர்.  உடனே பிரதீப் இடைமறித்தான்.’‘லம்பூவின் கதையின் மூலம் சிறைகளில் என்ன நடக்கிறது என நீங்கள் எனக்கு சொல்லியிருக்கிறீர்கள்தானே? குற்ற நடவடிக்கைகளை வளர்த்துவிடும் கல்லூரிகளாகத்தான் சிறைச்சாலைகள் உள்ளன. அதிகாரிகளின் உதவியோடு பகாசுரன்களும் பணக்கார குற்றவாளிகளும் சொகுசாக சிறைகளில் வாழ்வதாக  நாங்கள் பத்திரிகைகளில் படித்துள்ளோம், ’’ என்றான் பிரதீப்.
‘‘நீ சொல்வது முற்றிலும் சரிதான். எப்பொழுது இந்த நான்காவது முறையும் தோற்றுப்போகிறதோ அப்பொழுது குற்றங்கள் அதிகரிக்கத்தான் செய்யும்,’’ என்றார் சேகர் பெருமூச்சு விட்டவாறே.
தனது தாகத்தை தீர்க்க தண்ணீர் அருந்திகொண்டே ரவி கேட்டான், ‘‘இதற்குத் தீர்வுதான் என்ன?’’சேகர் ஏதோ சொல்ல வந்தபோது அவரது தொலைபேசி மணி ஒலித்தது. நடு இரவில்  அவருக்கு ஏதோ பணி இருந்தது.

 தனது படுக்கையில் படுத்துக்கொண்டே இவற்றிற்கான தீர்வு என்னவென்று யோசித்தான் ரவி. அது அவனது சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.  இந்த எண்ண ஓட்டங்களால் களைத்துப் போன அவன் கடைசியில் நீண்ட கொட்டாவி விட்டு  உறங்கி விட்டான்.

No comments: