Friday, June 5, 2015

இஸ்ரேலுக்காக பாலஸ்தீனத்தை கைவிடும் மத்திய அரசு



பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் இது நடைபெறும் என்றும் அயல்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு ஓர் இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை. இத்தகைய பயணத்தின் முக்கியத்துவம் என்னவெனில், இருநாடுகளுக்கும் இடையே இதுநாள்வரை இருந்து வந்த ராணுவ உறவுகளுக்கு அதிகாரப்பூர்வ முத்திரை அளிப்பதேயாகும்.
சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போன்று, இந்திய - இஸ்ரேல் உறவுகள் “மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.’’இஸ்ரேல் மற்றும் யூத தேசியஇன இயக்கத்துக்கும் பாஜக-வின் தத்துவார்த்தப் பின்புலத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமையை அறிந்தவர்கள், இஸ்ரேலுக்கு நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாகப் பயணம் செய்ய இருப்பது குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள். முந்தைய தேஜகூட்டணி அரசாங்கத்தின்போதும், அன்றைய துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி 2000ம் ஆண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ஏராளமான எண்ணிக்கையில் கையெழுத்தாயின.
இந்தியா 1992ல் நரசிம்மராவ் அரசாங்கம் இருந்தபோதே இஸ்ரேலுடன் முழுமையான அளவில் தூதரக உறவுகளை நிறுவிவிட்டது. நரேந்திரமோடி அரசாங்கம் அமைந்தவுடனேயே இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகள் மேற்கொள்ளப்படும் என்று பறைசாற்றப்பட்டது. இஸ்ரேல் ராணுவ அமைச்சர் மோஷே யாவ்லான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு வந்தார். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வருவதென்பது இதுவே முதல் தடவை. அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, “இரு நாடுகளும் திரைமறைவுக்குப்பின்னால் பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களில் ஒத்துழைப்பை நல்கிட வழிவகைகளைக் கண்டறிந்திருக்கின்றன,’’ என்று கூறி, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் வெளிச்சத்திற்கு வராத வகையில் விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவிற்கு அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை விநியோகம் செய்யும் நாடுகளில் இஸ்ரேல் தற்சமயம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இஸ்ரேலில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகூ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வலதுசாரி மற்றும் யூதவெறிக் கட்சிகள் இவரது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாலஸ்தீனத் தலைவர்களுடன் ஓர் அரசியல் தீர்வுக்கு எவ்விதமான சாத்தியக்கூறு இருந்தாலும் அதனைச் செல்லாததாக்கக்கூடிய விதத்தில் நேதன்யாகூ அரசாங்கம் அரக்கத்தனமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இஸ்ரேல் துணை அயல்துறை அமைச்சராக இருக்கும் ஜிப்பி ஹோடோவெலி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் மேற்கு கரைப் பகுதி இஸ்ரேலுக்குச் சொந்தமானவை என்றும் ஏனெனில் அவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும் பகர்ந்திருக்கிறார்.
அமைச்சரவையில் `விரிவான இஸ்ரேல்’ பகுதியைச் சார்ந்த வழக்குரைஞர்கள் மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் மேற்கு கரைப் பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதிலேயே ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட, ஒரு மார்க்கமாக, மேற்கு கரைப் பகுதியில் யூதர்கள் குடியேற்றத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் யூதர்களின் நாடு என்று பிரகடனம் செய்வதற்கான ஒரு சட்டமுன்வடிவு முந்தைய நாடாளுமன்றத்திலிருந்து நிலுவையில் இருந்து வருகிறது. இத்தகைய வெறிபிடித்த பிற்போக்கான இஸ்ரேல் அரசாங்கத்திற்கு ஆதரவினை விரிவுபடுத்திக் கொள்வதில் மோடி அரசாங்கத்திற்கோ, பாஜக-விற்கோ எவ்விதமான மன உளைவும் இருக்கப் போவதில்லை.
இந்தியாவின் நிலைப்பாடு இதுநாள்வரை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது. அத்தகைய நிலைப்பாட்டினைக் குழிதோண்டிப் புதைத்திட இந்த அரசு இப்போது வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கிவிட்டது.எதிர்பார்த்ததைப்போலவே, கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரவேற்றுத் தலையங்கங்கள் தீட்டி இருக்கின்றன, உண்மையான அரசியல் நடவடிக்கை என்று போற்றிப் புகழ்ந்திருக்கின்றன. இந்திய - இஸ்ரேல் உறவுகள் புதிய பரிணாமம் எடுத்திருப்பது இந்தியாவின் ஒட்டுமொத்த அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்காவின் பூகோள-அரசியல் கேந்திர நடவடிக்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகச் செய்திடும் சூழ்ச்சியேயாகும். இந்த அடிப்படையில்தான் மோடியின் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியப் பயணங்களும் அமைந்திருந்தன. இவ்விரு நாடுகளும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான முறையில் கூட்டணிகள் வைத்திருக்கும் நாடுகளாகும். இவ்விரு நாடுகளுடனும்தான் மோடி அரசாங்கம் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறது.அமெரிக்காவின் போர்த்தந்திர நிலைப்பாட்டின்படி, இந்தியா கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான நாடு இஸ்ரேல் ஆகும். அமெரிக்காவின் தலைமையின் கீழ் அத்தகையதொரு போர்த்தந்திரக் கூட்டணியை உருவாக்குவதற்கான மற்றொரு நடவடிக்கைதான் தற்போதைய மோடியின் இஸ்ரேல் பயணம். இந்தப் பயணம், இதுநாள்வரை இந்தியா, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு எவ்விதமான நெகிழ்வுத்தன்மையுமின்றி அளித்துவந்த ஆதரவு கைவிடப்பட இருப்பதற்கான அறிகுறியுமாகும்.
 ஜூன் 3, 2015
தமிழில்: ச.வீரமணி



No comments: