Tuesday, June 2, 2015

வெற்றுப் பிரச்சாரம் வயிற்றை நிரப்பாது!

பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி அதன் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் தொடங்கி இருக் கின்றன. பிரதமர் மோடி ஊடகங்களின் படாடோபமான பிரச்சாரங்களுக்கிடையே முதலாமாண்டு கொண் டாட்டத்தை மதுராவில் தொடக்கி வைத்திருக்கிறார். நாடு முழுதும் இதனையொட்டி 200 பொதுக் கூட்டங்கள் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் தலா குறைந்தது மூன்று பொதுக் கூட்டங்களையும், மூன்று பத்திரிகை யாளர் மாநாடுகளையும் நடத்திட வேண்டும் என்றும், அதாவது நாடு முழுதும் குறைந்தபட்சம் 200 பொதுக்கூட்டங்களிலும், 200 பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் கட்டளை யிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்கள் பங்கேற்கும் 200 கூட்டங்களுடன் மேலும் 200 கூட்டங்கள் கூடுதலாக இருந்திடும். பிரதமர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அயல்நாடுகளில் பயணம் செய்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் தன்னுடைய பகட்டு ஆரவாரத்தன்மையை நன்கு காட்டிவிட்டு வந்திருக்கிறார். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜக அதேபோன்று நாட்டு மக்கள் மத்தியில் தங்கள் வாய்வீச்சுக் கலையைக் காட்ட விருக்கின்றன.
ஊடகங்களுக்கு விளம்பரம் வாரியிறைப்பு
பிரதமர் தன் பிரச்சாரத்தை மதுராவிலிருந்து தொடங்கியிருப்பது கள்ளங்கபடமற்ற ஒன்று அல்ல. நாடு முழுதும் மதக்கலவரங்களை உருவாக்க வேண்டும் என்கிற மிகவும் மோசமான இழிநோக்கத்துடன்தான் அங்கிருந்து இது தொடங்கப்படுகிறது. ராமன் பிறந்த இடம் (அயோத்தி), கிருஷ்ணன் பிறந்த இடம் (மதுரா) மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை `விடுவிக்கப்படும்’ என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பேசி வருவதை நினைவுகூர்க. அதற்குப் பொருத்தமான வகையில் பிரதமர் மோடிக்கு மதுராவின் உள்ளூர் பாஜக எம்பியான ஹேம மாலினியால் கிருஷ்ணன் சிலை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பிரச்சாரம், பல நூறு ஆண்டு காலமாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதற்கும் அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் மதவெறி விஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் பலிகொள்வதற்கும், நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினர் மத்தியில் ஓர் ஆழமான பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்குவதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வென்ற தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, உ.பி. யில் வென்ற பனாரஸ் தொகுதியை மட்டும் இருத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை மதுராவில் இருந்து தொடங்குகிறார். உண்மையில் இவை அனைத்தும் கெட்ட சமிக்ஞைகளேயாகும்.தனக்கு விசுவாசமாக இருக்கும் அனைத்துவகை ஊடகங்களுக்கும் பல வண்ண விளம்பரங்களை அரசாங்கம் வாரி இறைத்திருப்பது அதிகமாகி இருக் கிறது. எனவே, ஊடகங்கள் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கம் தன் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அதிக வித்தியாசத்துடன் தேறிஇருக்கிறது என்று அளந்திருப்பதில் ஆச்சரியப்படு வதற்கு எதுவும் இல்லை.
(தி டைம்ஸ் ஆப் இந்தியா) ஒருவர் தேர்விற்கு அமரும்போதுதான் மதிப்பெண்கள் கொடுக்கப்படும். இங்கே, இந்த அரசாங்கம் எந்தவிதமான தேர்வையும் எழுதாமல் இருக்கும் நிலையிலேயே, ஊடகங்கள் இந்த அரசாங்கத்திற்கு மதிப் பெண்களை வாரி வழங்கி இருக்கின்றன. ஊடகங்களின் வாயிலாக ஊட்டி, வளர்க்கப் படுவதன் காரணமாக எழுந்துள்ள `செல்வாக்கி’ன் தாக்கம் எப்படி இருந்தபோதிலும், சொந்தமாகவே ஊடக நிறுவனங்களை வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகள் இந்த அரசாங்கத்திற்குத் துதிபாடுவதில் போட்டிபோடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
கார்ப்பரேட்டுகள் ஊடகங் களை விலைக்கு வாங்கியிருப்பது அவற்றின் மூலம் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கான முயற்சியேயாகும். கார்ப்பரேட்டுகள் ஊடகங்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தி, துதிபாடுவது என்பது எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதன் காரணமாக, மக்கள் மத்தியில் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
முதல் பக்கத்தில் துதி தலையங்கத்தில் விமர்சனம்
இதன்காரணமாகத்தானோ என்னவோ, பத்திரிகைகளின் முதல் பக்கத்தலைப்புச் செய்தியில் அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு விழா குறித்து `ஓகோ’ என்று துதி பாடியிருந்தாலும், அதன் தலையங்கங்களில் இந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பது என்பதும் தொடர்ந்துள்ளது. ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். மேலே கூறியதுபோன்று தி டைம்ஸ் ஆப் இந்தியா இந்த அரசாங்கத்தைத் தூக்கி வைத்துப் பாராட்டியுள்ள அதே சமயத்தில், அதன் தலையங்கப்பகுதியோ, “... தேஜகூட்டணி அரசாங்கத்தின் முதல் ஓராண்டு ஆட்சிக் காலத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது கடினம்தான். ஏற்றுமதிகளும் தொழில்உற்பத்தியும் தேக்க நிலையில் இருக்கின்றன.
2014-ல் சற்றே உயர்ந்திருந்த `சென்செக்ஸ்’ புள்ளிகள் மீண்டும் இறங்குமுகத்தில் வீழத் தொடங்கிவிட்டன. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒவ்வோராண்டும் ஒரு கோடி பேர் வேலைதேடி வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைந்து கொண்டிருப்பதால் `நல்லகாலம் பிறப்பதற்கான’ நம்பிக்கைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன,’’ என்று எழுதியிருப்பதுடன் இதேபோன்று மேலும் பல கருத்துக்களையும் அளித்துள்ளது.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, “இந்த அரசாங்கம் எவ்விதத்திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலோ செயல்படுவதுபோலத் தோன்றவில்லை,’’ என்று கூறுகிறது.
மேலும் அது, “இந்த அரசாங்கம் தன்னிடம் உள்ள தகவல்தொழில்நுட்பங்கள் வழியாக மக்களிடம் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறது.
ஆதரித்தவர்களே குறைகூறுகிறார்கள்
தி ஆசியன் ஏஜ் நாளேடு, “... ஆட்சியிலிருப்போர் மக்களுக்கு அளித்துள்ள வானளாவிய வாக்குறுதிகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் மத்தியிலும் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இவை நிறைவேற்றப்படுவதென்பது மிகவும் ஒளிமங்கிய நிலையிலேயே இருப்பதால், இந்த அரசாங்கத்தை வலுவாக ஆதரித்தவர்களே இப்போது இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருப்பதாகக் குறைகூறத் தொடங்கி விட்டனர்,’’ என்று கூறுகிறது. மேலும் அது, “நாடு முழுதும் விவசாயத்துறை கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த அரசாங்கம் யாரைத் தூக்கிநிறுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அந்தக் கார்ப்பரேட் துறையே, அதிலும் குறிப்பாக பெரும் வர்த்தக நிறுவனங்களே, இப்போது இந்த அரசாங்கத்தைக்குறைகூறத் தொடங்கி இருக்கின்றன,’’ என்றும் கூறுகிறது.
தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு கூட, “இந்த அரசாங்கத்தின் கொள்கையைத் தீர்மானிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள்கூட இப்போது இந்த அரசாங்கம் தங்களுக்கு நம்பிக்கை மோசம் செய்துவிட்டதோ என சந்தேகம் கொள்ளத் தொடங்கி, எதிர்ப்பினைக் காட்டும் போக்கு உருவாகி இருக் கிறது. எதிர்க்கட்சிகள் குறித்து மோதல்போக்கைக் கடைப் பிடிப்பதற்குப் பதிலாக அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். அடுத்த நான்கு ஆண்டு கால நிகழ்ச்சிநிரல் அப்படித்தான் அமைந்திட வேண்டும். வருடாந்திரக் கொண்டாட்டங்கள் குறித்து வாக்காளர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்,’’ என்று எச்சரித்திருக்கிறது. தி பிசினஸ் ஸ்டாண்டர்டு தலையங்கமும் இதேதொனியை எதிரொலித்திருக்கிறது. தன் தலையங்கத்தில் அது இறுதியாக, “இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த ஓராண்டின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு, 2016 மே 26 அன்று விளம்பரம் செய்து தான் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ள வேண் டும் என்கிற அவசியம் இல்லாத அளவிற்கு, சிறந்தமுறையில் செயலாற்ற வேண்டும்,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
நிறைவேறா வாக்குறுதிகள்
தி இந்து நாளேடு, “இந்த அரசாங்கத்தின் முதலாம் ஆண்டின் இறுதியில், இவை கூறிய வாக்குறுதிகளில் பல இன்னமும் முன்மொழிவுகளாகவே நீடிக்கின்றன. பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எதுவுமே நடக்காததன் காரணமாக, இவையெல்லாம் அடுத்த நான்காண்டுகளில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பே கிடையாது அல்லது வாய்ப்பு அபூர்வம் என்றே தோன்றுகிறது,’’ என்று கூறியிருக்கிறது. அது மேலும், “இந்த அரசாங்கத்தின் அரசியல் வரவு செலவுப் பதிவேட்டில் வரவுப் பக்கத்தைக் காட்டிலும் செலவுப் பக்கமே நீண்டதாக இருக்கிறது,’’ என்று தன் தலையங்கத்தை முடித்திருக்கிறது.
இவ்வாறு நாட்டின் முக்கிய பத்திரிகைகள் தங்கள்தலையங்கங்கள் மூலம் கொஞ்சம் நம்பகத்தன் மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண் டிருக்கின்றன. ஆயினும், `நான்காவது தூண்’ என்று அழைக்கப்படும் ஊடகங்களின் நம்பகத்தன்மை, அரசாங்கத்திடமிருந்து கணிசமான அளவிற்கு விளம்பரங்களைப் பெறக்கூடிய நிலையில், நீடிக்குமா என்பது சந்தேகமே.வெறும் பிரச்சாரங்கள் மூலமாக மட்டும் மக்கள் வயிறு நிரம்பிடாது மற்றும் எப்போதும் நிரப்பிடவும் முடியாது என்பதை பெரும்திரளாக மக்களை அணி திரட்டுவதன் மூலம் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்திற்கு நன்கு உறைக்கும் விதத்தில் சொல்ல வேண்டும்.
இன்றைய எதார்த்த நிலைமைகள் நம் வயிற்றை நிரப்பிடப் போதுமானதல்ல என்பதால், இந்த அரசாங்கம் தன் மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திடவும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் மதவெறிப் பிரச்சாரங்களைக் கூர்மைப் படுத்து வதைத் தவிர்த்திடவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
(மே 27, 2015)
(தமிழில்: ச.வீரமணி)


No comments: