Sunday, May 11, 2014

நிவாரணம் கோரி மக்கள் அலைதான் வீசுகிறது


-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
பதினாறாவது மக்களவைக்காக நடைபெற்ற தேர்தல்களில் மொத்தம் உள்ள ஒன்பது கட்டங்களில்  எட்டு கட்டங்கள்  நிறைவடைந்துள்ளன. இன்னும் ஒரே ஒரு கட்டம்தான் மீதம் உள்ளது என்ற போதிலும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் தீர்மானகரமான கட்டமாக இது அமைந்திருக்கிறது. பொதுவாகத் தேர்தல்கள், மிகப்பெரிய அளவில் வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் உருக் குலைக்கப்பட வில்லை என்றபோதிலும், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் இருந்தன. கடைசியாக நடைபெற்றக் கட்டத்தின்போது, மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டமாக நடைபெற்றத் தேர்தலில், மாநிலத்தின் ஆளும் கட்சி வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாகவும், மிகப்பெரிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. தேர்தல் ஆணைய எந்திரத்தால் தன்னுடைய வீடியோ கண்காணிப்பு மூலமாக, அத்தகைய வாக்குச்சாவடிகள் கைப்பற்றலை முழுமையாக மேலாண்மை செய்ய முடியவில்லை. உண்மையில் பல முக்கியமான வாக்குச்சாவடிகளில் அத்தகைய ஏற்பாடுகளே இல்லை. மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் அத்தகைய வாக்குச்சாவடிகளில் நிலைநிறுத்தப்பட வில்லை. தனிப்பட்டவர்கள் சிலர் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் எப்படியெல்லாம் வாக்காளர்களை மிரட்டி அவர்களுக்குப்பதிலாகத் தாங்கள் வாக்களித்தார்கள் என்பதைப் பதிவு செய்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கிறார்கள்.  மேற்கு வங்கத்தில் மே 7 அன்று கடைசியாக நடைபெற்ற தேர்தல்களிலும் மீண்டும் மிகப்பெரிய அளவில் ஆளும் கட்சியினர் சட்டவிரோதமானமுறையில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆளும் கட்சியினர் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்ட வாக்குச்சாவடிகளில் அவற்றைச் சரிசெய்யக்கூடிய விதத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு மனுச் செய்திருக்கிறோம்.   இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆயினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அடுத்து நான்காவதாக கட்டத்தில் நடைபெறக்கூடிய தேர்தலின்போதும் இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும், ஜனநாயகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிடவும் திரிணாமுல் காங்கிரசுக்கு மிகவும் தெளிவான முறையில் தைர்யத்தைக் கொடுத்திருக்கிறது.  வீடியோ கேமராக்கள் வலுக்கட்டாயமாக மூடி வைக்கப்பட்டிருப்பது, அல்லது வேண்டும் என்றே வேறுபக்கம் திருப்பி வைக்கப்பட்டிருப்பது போன்ற புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 17இல் தேர்தல்கள் நடக்க இருக்கும்  கடைசி மற்றும் தீர்மானகரமான கட்ட வாக்களிக்கும் நாளன்றும் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளில் மீண்டும் ஈடுபடும் என்பது நிச்சயம். இவ்வாறு ஜனநாயகத்தையும், ஜனநாயக தேர்தல் நடைமுறையையும்  மிகப்பெரிய அளவில் சிதைப்பது அனுமதிக்கப்படக்கூடாது. காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளைப்போலவே புஜபலம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் முறையான பரிசீலனைக்கு உட்படுத்தி. உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு விஷயங்கள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டிய அதேசமயத்தில், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை சுனாமியாக மாறி நாட்டையே சூறையாடியிருப்பதுபோல் தோன்றுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஓராண்டு காலமாகவே அவரை எதிர்காலப் பிரதமர் என்று தூக்கி நிறுத்திய விளம்பரத் தட்டிகள், நடைமுறையில் மோடி எதிர்ப்பு காரணியாகவே (ANTI-INCUMBENCY FACTOR) செயல்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. நாடு முழுதும் இருந்து வந்துள்ள கள ஆய்வுகள் அழுத்தமான முறையில் பாஜக வெற்றி பெறும் என்று  ஊடகங்கள் ஊதித்தள்ளியுள்ள கருத்துக்கணிப்புக்கும் எதார்த்தத்திற்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பதை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தினை மிகவும் பரிதவிக்க வைத்த விஷயம் என்னவெனில், அது மிகவும் கனவு கண்டு கொண்டிருந்த இந்தி பேசும் மாநிலங்களில்கூட அதற்கு எந்த வரவேற்பும் இல்லாதிருந்ததுதான். மோடி குறித்து பிரச்சாரம் இருந்தபோதிலும், உள்ளூர் பிரச்சனைகள்தான் பிரதானமான பாத்திரம் வகித்தது, என்பதே தலைப்புச் செய்தியாக அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. பீகாரில், லாலு மீண்டும் பாஜகவின் ரதத்தை நிறுத்தியது ஒரு புறத்திலும், மறுபுறத்தில் நிதிஷ், வளர்ச்சியின் பயன்களை அறுவடை செய்திருப்பதும் செய்திகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில், மக்கள் சாதிய ரீதியாக ஏற்கனவே முலாயம்மைச் சுற்றிலும், மாயாவதியைச் சுற்றிலும் அணிதிரண்டு விட்டார்கள் என்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் உள்ளூர் காரணிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்திடுவதற்காக, நாம் எதிர்பார்த்ததைப் போலவே மதவெறித் தீயை விசிறிவிட்டுப் பார்த்தது.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக எஜமானர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த பேர்வழி ஆரம்பத்தில் மதவெறிப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்துவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சமாஜ்வாதிக் கட்சித் தலைவரின் தொகுதியான அசம்கார் பயங்கரவாதிகளின் தளமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளை அள்ளி விசிக்கொண்டிருக்கிறார். மிகவும் மட்டரகமான முறையில் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அனைத்துவிதமான வகுப்புவாத வாக்கு வங்கிக் கொள்கைகளிலும் அது இறங்கி இருக்கிறது. மே 5 அன்று, பைசாபாத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் (இத்தொகுதியில்தான் அயோத்தி இருக்கிறது) நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்டத்தின் மேடையின் பின்னணியில் ராமர் படம் வைக்கப்பட்டிருந்தது. தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்ற உறுதிமொழி மீளவும் எழுப்பப்பட்டு அதன் மூலம் மதவெறித் தீயை கூர்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் மே 4 அன்று வங்கத்தில் அசன்சால் தொகுதியில் பேசுகையில் மோடி, தான் பிரதமரான பின்னர் வங்கதேச வாசிகள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்ப தயாராகிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.  இந்துக்கள் வரவேற்கப்படக்கூடிய அதே சமயத்தில் தங்கள் இலக்கு முஸ்லீம்கள்தான் என்பதை அவர் மிகவும் தெளிவாக்கி இருக்கிறார். இதுஉண்மையான அனைத்து இந்திய வங்க முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறுப்பை உமிழும் வேலை என்பது மிகவும் தெளிவான ஒன்றாகும்.  இவ்வாறு மோடி வங்க முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கியதைத் தொடர்ந்துதான் அஸ்ஸாமில் போடோ லாந்து தீவிரவாதிகள் இதுவரை 31 பேரைக் கொல்வதற்கும் பலரைக் காயமடையச் செய்வதற்கும் காரணமாக அமைந்தன என்று ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.  வங்க தேசத்திலிருந்து வரும் செய்திகளும் மிகவும் கவலை அளிப்பவையாக உள்ளன. அங்குள்ள மதச்சார்பற்ற சக்திகள் மோடியின் பேச்சை வன்மையாக விமர்சித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், மத அடிப்படைவாத சக்திகள் இந்துக்களை குறிவைக்கத் தொடங்கி இருக்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்து வகுப்புவாதமும் முஸ்லீம் அடிப்படைவாதமும் தாங்கள் ஜீவித்திருப்பதற்காக  ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கும் என்று நாம் கூறிவருவதை இந்த செய்தி மீண்டும் ஒருமுறை மெய்ப் பித்திருக்கிறது. உண்மையில், இதுநாள்வரை நம்மால் போற்றிப்பாதுகாத்து வரப்பெற்ற அடிப்படை மனித உரிமைகள், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தால் அதன் தேர்தல் ஆதாயத்திற்காக பலிபீடத்தின்முன் வைக்கப் பட்டிருக்கின்றன.  இதேதொனியில், ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போது நடைபெறும் சூதாட்டம் (MATCH FIXING) போல, புதுவிதமான சூதாட்டம் இப்போது பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வங்கத்தில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. வகுப்புவாத உணர்வை வளர்த்து மக்களிடையே வேற்றுமையை விரிவுபடுத்து வதன் மூலம் தங்கள் தங்கள் வாக்கு வங்கிகளை ஒருமுகப்படுத்துவதற்கான போராட்டமாக இது நடந்துகொண்டிருக்கிறது.  மோடிக்கும் மமதாவிற்கும் இடையே நடைபெறும் சொற்போரைக் கூர்ந்து கவனித்தோமானால்பாஜக தன்னுடைய வெறித்தனமான இந்துத்துவா ஆதரவுத்தளத்தை ஒருமுகப்படுத்த முயற்சிக்கும் அதே சமயத்தில்தற்சமயம் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வரும் சிறுபான்மையினர், திரிணாமுல் காங்கிரசுடன் விரக்தியுற்று இடது முன்னணிக்கு ஆதரவாகத் திரும்பிவிடக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தக்கூடியவிதத்தில் இருப்பதையும் காண முடியும். பாஜக, தேர்தல் முடிந்தபின், மத்தியில் ஆட்சியை அமைக்க வேண்டுமானால், மேலும் பல கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை நன்கு உணர்ந்துள்ளதால், பாஜக அரசாங்கத்திற்கு திரிணாமுல் ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் வங்கத்திற்கான சலுகைகள் குறித்து பாஜக தலைவர் பேசுவதையும் கேட்க முடிகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் இரட்டை வேடம் என்பது இதுதான்.
திரிணாமுல் காங்கிரஸ் கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் ஒட்டி உறவாடியது என்கிற உண்மையுடன், அதன் தலைவி இரு கட்சிகளின் கீழான ஆட்சிகளிலும் ரயில்வே அமைச்சராக இருந்தார் என்பது மட்டுமல்லஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான முறையில் ஒட்டுறவை வைத்திருந்தார் என்பதும் உண்மையாகும். 2003இல்குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து, அதன் நெருப்பு நன்கு கனிந்துகொண்டிருந்த சமயத்திலேயே, திரிணாமுல் காங்கிரசின் தலைவி ஆர்எஸ்எஸ் விழா ஒன்றில் பங்கேற்றதும், அந்த விழாவில் அவர், வங்கத்தின் துர்கை என்று போற்றிப் புகழப்பட்டதும், நடந்தது. இதற்கு, பிரதிபலனாக, திரிணாமுல் காங்கிரசின் தலைவி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, உண்மையான தேசப்பற்றாளர்கள்  என்று கூறி வானளாவப் போற்றிப் புகழ்ந்தார். அத்தோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை, அதற்கும் ஒருபடி மேலே சென்று, நீங்கள் (ஆர்எஸ்எஸ்) நாட்டை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், என்றும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் (ஆர்எஸ்எஸ்-உடன்) நாங்களும் இருக்கிறோம், (தி டெலிகிராப், செப்டம்பர் 15, 2003) என்றும் பேசினார். இப்போது, இவ்வாறுஇவர்களிருவரும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதுபோல் சூதாட்டம் (அயவஉ கஒபே) மேற்கொண்டிருப்பது வாக்கு வங்கி அரசியலின் மிகவும் மட்டரகமான வடிவமாகும். இவை அனைத்துக்கும் மத்தியில், மக்களை மிகவும் பாதித்துள்ள அடிப்படைப் பிரச்சனையை இவர்கள் பார்க்கவே மறுக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான நிவாரணம் குறித்து பேசவே மறுக்கிறார்கள். பணவீக்கம், வேலையின்மை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் துன்பதுயரங்கள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் மக்களுக்குத் தேவை. இத்தகைய நிவாரணம் மாற்றுக் கொள்கைகளால் மட்டுமே அளிக்கப்பட முடியும். அதாவது தற்போதைய பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றால் நியாயப்படுத்தப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளால் மட்டுமே அளிக்கப்பட முடியும். உண்மையில், இந்தத் தேர்தலில் எங்காவது அலை வீசியது என்றால், அது இவ்வாறு நிவாரணம் கோரி எழுந்த மக்களின் அலைதான். மக்கள் அலையின் வெற்றி, தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. மக்கள், வெளி நிர்ப்பந்தம் எதற்கும் அல்லது கவர்ச்சி எதற்கும் உட்படுத்தப்படாது, வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, வரும் மே 12 அன்று நடைபெறும் கடைசிக் கட்டத் தேர்தலை உத்தரவாதமாக நடத்திட தேர்தல் ஆணையம் உறுதியுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)    

No comments: