Thursday, December 3, 2009

மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணைபோகிறவர்களைத் தனிமைப்படுத்திடுவோம்-சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லி டிச. 3-
மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணை போகிறவர்களைத் தனிமைப்படுத்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் தலைப்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘பயங்கரவாதம் தொடர்பாக, ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற சமயத்தில், ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷார் தனக்கு அளித்த கவுரவப் பட்டத்தைத் திருப்பி அளித்து, கூறிய சொற்றொடரே என் நினைவுக்கு வருகிறது.

இப்போது நடைபெறும் பயங்ரவாத அச்சுறுத்தல்களுக்கும் எதிராக அதுவே மிகச் சரியான மிக வலுவான வெளிப்பாடு என்று கருதுகிறேன். தாகூர் சொன்னார்: ‘‘எனக்கு இடியோசை போன்ற குரலைக் கொடுங்கள், இத்தகைய தன் இனத்தையே தின்னும் இத்தகைய அரக்கர்களுக்கு எதிராக என் கருத்தை வீசியெறிகிறேன். இவர்களது கொலைபாதக நடவடிக்கைகள் தாயையும் விட்டுவைக்காது, குழந்தையையும் விட்டுவைக்காது.’’ இவ்வாறு பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது தேசவிரோத, மனிதகுல விரோத நடவடிக்கைகளாகும். இது தாயையும் விட்டு வைக்காது, குழந்தையையும் விட்டுவைக்காது. இதுபோன்ற செயல்களை நானோ என் கட்சியோ ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தியாவில் பயங்கரவாதம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட பிரிவிற்குள்ளும் வகைப்படுத்த முடியாது. அதேபோல் இதனை எந்த ஒரு எல்லைக்குள்ளும் அல்லது எந்த ஒரு மத வரையறுக்குள்ளும் முடக்கி விடவும் முடியாது.

நாம் நம்முடைய நாட்டில் மகாத்மா காந்தியை ஒரு மதவெறியனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்தோம்; நாம் நம் பிரதமர் ஒருவரை சீக்கிய வெறியனின் குண்டுகளுக்கு இரையாக்கியுள்ளோம்; தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நம் பிரதமர் ஒருவரை எல்டிடிஇ-இனரின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலி கொடுத்தோம். இப்போது ஒவ்வொரு நாளும் எண்ணற்றோரை இழந்து கொண்டிருக்கிறோம். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் நடவடிக்கைகளின் காரணமாக நூற்றுக்கணக்கானோரை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்துவிதமான மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தினையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையில் நாம் இருந்து வருகிறோம். இந்துத்வா பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

நாட்டில் பயங்கரவாதம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திற்கு, அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவினருக்குச் சொந்தமானது அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மதவெறிக் கண்ணோட்டத்துடனோ அல்லது அரசியல்சாயத்துடனோ பார்த்தால், அதன் முழு பரிணாமத்தை உணரத்தவறிவிடுவோம்.
இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரதமர் கூறியிருக்கிறார். இதனை எதிர்த்து முறியடித்திட வேண்டுமானால், நாம் அனைவரும் அவரது கூற்றை ஐயமற ஏற்றுக்கொள்ள வேண்டும். அது வளர்வதற்கான சூழ்நிலையை எந்தவிதத்திலும் அனுமதித்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதனை நாம் முறியடித்திட முடியாது.

அடுத்ததாக, நாட்டில் வளர்ந்துவரும் பொருளாதார சமத்துவமின்மை. ஆம், பயங்கரவாதம் வளர்வதற்கான வளமையான மண்ணாக பொருளாதார சமத்துவமின்மை இருந்திடும். இன்று ஒருபக்கத்தில் நாம் ஆசியாவிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம். தங்கள் வீட்டைக்கட்டுவதற்காக 4000 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய நபர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மறுபக்கத்தில் ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட வருமானம் இல்லாத நபர்களும்இருக்கிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் நாட்டில் 77 சதவீதமாகும். இத்தகைய பொருளாதார சமத்துவமின்னை மேலும் மேலும் விரிவாகிக்கொண்டே போனால், அதுதான் பயங்கரவாத நடவடிக்கைகள் வளர்வதற்கான வளமான அடிப்படையாகும்.

அடுத்து சில மாநிலங்களில் ஆட்சி யாளர்களே கொடுங்கோலர்களாக இருத்தல். சொராபுதீன் வழக்கு உங்களுக்குத் தெரியும், இஸ்ரத் ஜஹான் வழக்கு உங்களுக்குத் தெரியும், இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் விரக்தியின் விளைவாக இத்தகைய பயங்கரவாத செயல்களில் இறங்கிடத் தள்ளப்படுகிறார்கள். அதுபோன்று நடைபெற அனுமதிக்கக் கூடாது. எனவே, மக்களை வகுப்புவாத ரீதியாகவோ, மதரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ, வேறெந்த விதத்திலுமோ பிரித்திட அனுமதிக்கக் கூடாது.
26/11 தாக்குதலின் ஓராண்டு தினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கிறோம். 26/11 தாக்குதல் நடைபெற்றதை அடுத்து இந்த அவையில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் அரசுக்குப் போதிய அதிகாரங் களை அளிக்கும் வகையில் இரு புதிய சட்டங்களை நிறைவேற்றினோம். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் கூட்டாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அதில் சில வழிகாட்டும் நெறிமுறைகள் கூறப்பட்டிருந்தன. ஆனால் அவை இதுநாள் வரை பின்பற்றப்படவில்லை. கடந்த ஓராண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதனை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஏராளமாகப் பேசினோம். ஆனால் எடுத்த முடிவின் அடிப்படையில் அநேகமாக எதுவுமே செய்யப்பட வில்லை. மத்திய - மாநில அரசுகளின் கீழ் இயங்கிடும் உளவு அமைப்புகளுக்கிடையே எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை. அதேபோல் நம் கடல் எல்லையைப் பாதுகாத்திட பல்வேறு விதமான ரோந்துப் படைகள் உள்ளன. அவற்றிற்கிடையிலும் எந்தவிதமான ஒருங் கிணைப்பும் கிடையாது.

நாம் நாடு முழுதும் கடைப்பிடித்து வரும் 1861ஆம் ஆண்டு போலீஸ் சட்டம், ‘மிகவும் மோசமான’ ஒன்று. ‘மிகவும் மோசமான’ என்று நான் கூறுவதற்குக் காரணம் இச்சட்டமானது நம் ‘நாட்டு மக்களை’ (இப்படித்தான் பிரிட்டிஷார் அதனை அழைத்தார்கள்) ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். ஆனால் அதனை அப்படியேதான் பின்பற்றுகிறோமேயொழிய எந்தவிதமான புதிய மாற்றத்தையும் அதில் கொண்டுவரவில்லை. ஐ.நா. ஸ்தாபனமானது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, குறைந்தபட்சம் 222 போலீசார் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால் நம் நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 145 போலீசார் என்பதுதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் உள்ள விகிதம் என்பது ஒரு லட்சம் பேருக்கு 117 என்பதேயாகும். இவை அனைத்திலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திடாமல், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதென்பது நடைமுறை சாத்தியமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக துல்லியமான முறையில் நடவடிக்கைகள் எடுத்திட முன்வர வேண்டும். அரசு, 26/11 தாக்குதல் தினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கும் இப்போதாவது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட வேண்டும்.

மாவோயிஸ்ட் வன்முறை

மாவோயிஸ்ட் வன்முறை வளர்ந்து வருவது தொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து சில வாக்கியங்கi மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
‘‘இடதுசாதி அதிதீவிரவாதம் என்பது மாபெரும் சவாலாக எழுந்திருக்கிறது. சமீப காலங்களில் நக்சலைட் குழுக்களால் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மோசமான வகையில் தாக்கக்கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. இடதுசாரி அதிதீவிரவாதம் என்பது உண்மையில் மிகவும் சிக்கலான ஒன்று. இதனை மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பக்கத்தில் நக்சலைட் வன்முறைக்கு ஆளாகியுள்ள பகுதிகளில் சட்ட ஆட்சியை ஏற்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அதே சமயத்தில் நக்சலிசம் போன்ற பிரச்சனைகள் உருவாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்திட வேண்டும்.’’
பிரதமர் இவ்வாறு இரு அணுகுமுறைகளை அடிக்கோடிட்டிருக்கிறார். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் நக்சலிசம் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைதல். பிரதமர் தன் உரையில் பல புள்ளிவிவரங்களை அளித்திருக்கிறார். 2009 இல் நவம்பர் 16 வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, நாட்டில் கொல்லப்பட்டுள்ள 1979 நபர்களில் மாவோயிஸ்ட் வன்முறையாளர் களால் மட்டும் 873 பேர் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். நாட்டில் செயல்படும் அனைத்துவிதமான பயங்கரவாத அமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யும்போது, மாவோயிஸ்ட்டுகள்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தெரியவருகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது நிறுவப்பட்டிருக்கிறது. பிரதமர் கூறும் இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இதனை முறியடித்திட முன்வர வேண்டும். மாறாக, வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்களை அரசியலாக்கியதுபோல் இதனையும் நீங்கள் அரசியலாக்க முயற்சித்தால், நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறோம் என்றே நான் சொல்வேன். நான் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வருகிறோம். இப்போதுதான் அங்கே மாவோயிஸ்ட் வன்முறை தோன்றியிருக்கிறது. காரணம் என்ன?

இன்று (புதன்கிழமை) காலைகூட எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்கள் முன்னாலேயே மாவோ யிஸ்ட்டுகளால் வெட்டிக் கொல்லப் பட்டிருக்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின் நடைபெற்றுள்ள மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களால் எங்கள் முன்னணி ஊழியர்கள் 130 பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். எனவே மிகுந்த மன வலியோடும், மனவேதனையோடும் இங்கே இதனை நான் பேசிக் கொண்டிருக் கிறேன்.

மாவோயிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட்டுகளும் ஒன்றுவிட்ட அண்ணன் - தம்பிகள் என்றும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக மிகவும் தாமதமாக மார்க்சிஸ்ட் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
மக்கள் வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 1967இல் ‘நக்சலைட்’ என்கிற வார்த்தை உருவானது. மேற்கு வங்கத்தில், நக்சல்பாரி என்னும் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த சென்ற ஒருசிலர் பிரிந்து சென்றனர். பின்னர் தங்கள் கட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்று அமைத்துக் கொண்டனர். ‘‘நாங்கள் பூர்ஷ்வா ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோம்’’ என்று கூறி அவர்கள் எங்களைவிட்டு விலகிச் சென்றனர். நாங்கள் இடதுசாரி சக்திகளை ஜனநாயக நீரோடைக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் அதேசமயத்தில், மாவோயிஸ்ட்டுகள் அவர்களை அராஜகம் மற்றும் வன்முறை வலைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் அதே சமயத்தில், அவர்கள் அதனை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் ‘‘பூர்ஷ்வா ஜனநாயகத்தை’’ உயர்த்திப் பிடிக்கிறோமாம். அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள்தான் அவர்களின் பிரதான இலக்காக இருந்து வந்திருக்கிறோம். நாங்கள் அவர்களின் தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான தோழர்களைப் பலிகொடுத்திருக்கிறோம். நக்சலைட்டுகளின் தாக்குதலில் எங்கள் கட்சி ஊழியர்களை இழந்த அளவிற்கு வேறெந்தக் கட்சியும் இழந்ததில்லை. வங்கத்தில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் எண்ணற்றவர்களை இழந் திருக்கிறோம். ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கிட்டத்தட்ட மூன்று பகுதிகளாகப் பிளவுண்டது.
மார்க்சிய தத்துவத்தைத் தவறான வகையில் புரிந்துகொண்டதன் அடிப்படையில் நக்சலைட் இயக்கம் (இன்று அது மாவோயிஸ்ட் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது) உருவானது. இவர்களது தவறான சித்தாந்தத்திற்கு எதிராக இவ்வியக்கம் தோன்றிய நாளிலிருந்தே நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வோம். எனவே எங்கள் இவர்களுடன் இணைத்து, ஒருவர்க்கொருவர் ‘ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிகள்’ என்று விழிப்பதென்பது, வரலாற்றை வேண்டுமென்றே திரித்துக்கூறும் செயலேயாகும். உண்மையை வேண்டுமென்றே மறைத்திடும் செயலேயாகும்.

இன்று மிகமுக்கியமான கேள்வி என்னவெனில், மேற்கு வங்கத்தில் உருவான நக்சலைட்டுகள் 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கே வந்தது எப்படி என்பதேயாகும். இதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.
காங்கிரஸ் உறுப்பினர் கேசவ ராவ் பேசியதுபோல், நிலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முழக்கமிட்டபோதிலும், உண்மையில் அவர்கள் அதனைச் செய்திடவில்லை. இதனை அவர் தன் உரையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால்தான் நக்சலிசம் வளர்ந்ததென்று அவர் கூறினார். இதனை அவர் ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளார். அதற்காக நான் அவருக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மேற்கு வங்கத்தில் நிலச் சீர்திருத்தங்கள் முழுமையாக அமல் படுத்தப்பட்ட பின்னணியில் 32 ஆண்டுகள் கழித்து அவர்கள் எப்படி மீள நுழைய முடிந்தது? இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, மேற்கு வங்கத்தில்தான். நாட்டில் மேற்கு வங்கம், கேரளா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில்தான் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப் பட்டிருக்கின்றன.

துணைத் தலைவர்: கர்நாடக மாநிலத்திலும் ...

சீத்தாராம் யெச்சூரி: அந்த அளவிற்குக் கிடையாது. நான் நிலச்சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘உழுபவனுக்கு நிலம் அளிப்பது’ குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். ‘சுரங்க உடைமை யாளர்களுக்கு (அiநே டிறநேசள) அளிப்பது குறித்து அல்ல. (குறுக்கீடு). கர்நாடகாவில் நடந்திருப்பது அதுதான். நான் உழுபவனுக்கு நிலம் அளிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். எப்படி மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்கத்திற்குள் மீள வந்தார்கள்? புறச் சூழ்நிலைகள் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் அவர்கள் அங்கு வரவில்லை. அவர்கள் அங்கே இறக்குமதி செய்யப்பட்டு, கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி இறக்குமதி செய்யப்பட்டார்கள் என்பதை உங்களுக்கு இப்போது கூறவிரும்புகிறேன்.

உங்கள் அரசாங்கத்தில் கூட்டணியாக உள்ள ஒரு கட்சியால் அவர்கள் அங்கே இறக்குமதி செய்யப்பட்டார்கள். (குறுக்கீடு)

இது உண்மை.
(குறுக்கீடு)

மாவோயிஸ்ட்டுகளின் நந்திகிராம் மண்டலக் குழு, வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையை படிக்கிறேன்.

(பின்னர் சீத்தாராம் யெச்சூரி படித்தவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.)

துணைத்தலைவர்: பெயரைக் கூறாதீர்கள். அதனை அடித்துவிடுங்கள்.
‘‘...நீங்கள் சொனாசுராவில் நடைபெற்ற பேரணியில், 2007இல் மார்க்சிஸ்ட்டுகள்தான் நந்திகிராமுக்கு எங்களைக் கொண்டுவந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். இது பொய் என்று உங்களுக்குத் தெரியும்.’’ இது மாவோயிஸ்ட்டு மண்டலக் குழுவின் மாவோயிஸ்ட் தலைவரால் கூறப்பட்டது. மேலும் அவர் கூறுகிறார்...(குறுக்கீடு)

அவர் பேசிய உரையிலிருந்து எப்படி, ஒரு கட்சியைச் சேர்ந்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களுடன் சேர்ந்து நின்று பேசியிருக்கிறார்கள் என்பதையும் காட்டவே இதனைக் கூறுகிறேன்.
(குறுக்கீடு)

துணைத்தலைவர்: பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்.

சீத்தாராம் யெச்சூரி:
பிரதமர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பலமுறை கூறியிருக்கிறார்கள். இந்த வன்முறையாளர் களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதனைத்தான் நான் கூற விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு கூறவிடாமல் பொறுமையின்றி என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பேச்சை முடித்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள்.

துணைத் தலைவர்: இல்லை, இல்லை, நான் ஒன்றும் பொறுமையின்றி இல்லை.
விவாதத்தை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.

சீத்தாராம் யெச்சூரி:
இந்த அவையின் மூலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் உருவாக்கிய நம் சொந்த ஃபிரான்கன்ஸ்டீன்களால் அதாவது ஆக்கியவர்களையே அழிக்கும் அரக்கர்களால் - நம் தலைவர்கள் பலரை நாம் இழந்திருக்கிறோம். குறிப்பாக காங்கிரஸ் பல தலைவர்களை இழந்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் ஃபிரான்கன்ஸ்டீன்களால் கொல்லப்பட்டார்கள். மேலும் இதேமாதிரி ஃபிரான்கன்ஸ்டீன்களை உருவாக்காதீர்கள். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஃபிரான்கன்ஸ்டீன்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஆதரிக்காதீர்கள். (குறுக்கீடு). மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடும் நபர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். (குறுக்கீடு)
நம்முடைய சொந்த அனுபவங்களிலிருந்து அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சிபுரிய மக்கள் உங்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்கள். ஃபிரான்கன்ஸ்டீன்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவையே இல்லை. இருந்தும் ஏன் நீங்கள் அத்தகைய அணுகுமுறையைக் கையாளு கிறீர்கள்? (குறுக்கீடு)

இங்குள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களையும், அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாத நடவடிக்கைகளை மதவெறிக் கண்ணோட்டத்தோடு அணுகாதீர்கள், சொந்த குறுகிய அரசியல் லாப நோக்கோடு அணுகாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக நின்று போராடுவோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ச.வீரமணி)

No comments: