Thursday, January 31, 2008

பாஜக-வின் பகட்டாரவாரம்

பாஜக-வின் பகட்டாரவாரம்
டில்லியில் நடைபெற்ற பாஜக-வின் சமீபத்திய தேசிய கவுன்சில் கூட்டத்தில், அனைத்துவிதமான இந்துத்துவா கொள்கைகளும் அரங்கேறி ஆடியிருக்கின்றன. ராஜ்நாத் சிங் தன்னுடைய தலைமையுரையில், வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டியது குறித்தும், முஸ்லீம்கள் முகஸ்துதி செய்யப்படுகிறார்கள் என்றும் பயங்கரவாதத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் பேசியிருக்கிறார். குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டு, ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகளை விட, முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல் பட்டிருப்பதால், அது மீண்டும் ஆட்சிக்கு வர இருக்கிறது’ என்று ஜோதிடம் கூறியிருக்கிறார். ஆனால், முன்னெப்போதுமில்லாத அளவிற்கு பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்த பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஆறு ஆண்டு கால ஆட்சியின் இருள்படர்ந்த பதிவுகளை மக்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. வாஜ்பாய் அரசாங்கத்தின் நாசகர விவசாயக் கொள்கைகள்தான் விவசாய வளர்ச்சியை மந்தப்படுத்தி, அதனைத் தொடர்ந்து விவசாய நெருக்கடி உருவாக இட்டுச் சென்றுள்ளது. விவசாயம் குறித்து பாஜக நிறைவேற்றியுள்ள தீர்மானமே, ‘எப்படி பாஜக தலைமையிலிருந்த அரசாங்கம் விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது’ என்பதை நினைவுபடுத்தும் ஒரு நினைவூட்டாகவே அமைந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொருளாதார நடவடிக்கைகளை நினைவுகூரும்போது, மிகவும் நகைப்புக்கிடமான ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரத்iயே மக்களுக்கு நினைவுபடுத்திட அது இட்டுச் செல்கிறது. ‘பொடா’ சட்டம் இல்லாததால்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியிருப்பதும் ஏற்கக்கூடியதாக இல்லை. ‘பொடா’ சட்டம் அமலில் இருந்த போதுதான் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது என்பனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மதவெறி என்னும் கடிவாளத்தைக் கண்களின் இருபுறமும் கட்டிக்கொண்டிருக்கும் பாஜக-வினரால் முஸ்லீம் மதச் சிறுபான்மையினர் மீது ஏவப்பட்ட அட்டூழியங்களைப் பார்த்திட முடியாது. இது ஒன்றும் ‘வாக்கு வங்கி’ அரசியலோ அல்லது ‘சிறுபான்மையினரை முகஸ்துதி’ செய்வதோ அல்ல. நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மை இனமாக இருக்கக்கூடிய முஸ்லீம் இனத்திற்கு, நாட்டின் ஒரு பகுதியில் நியாயமான நீதி வழங்கப்பட வில்லை என்னும் பிரச்சனையாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, சிறுபான்மையினருக்கும், வறிய பிரிவினருக்கும் சமூக நீதி அளித்திடுவோம் என்று கூறியுள்ள உறுதிமொழியை உளமார நிறைவேற்றிட முன்வர வேண்டும்.நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டை மூடிமறைத்திடும் ஒரு செய்கையாகவே பாஜகவின் கட்சிக் கமிட்டிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு தோன்றுகிறது. அதிலும் கூட கட்சியின் மத்திய நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்றக் குழு இரண்டிற்கும் மிகவும் கவனத்துடன் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள்.சமீபத்தில் நடைபெற்ற கூட்டமானது, கட்சியின் ‘பிரதமர் வேட்பாளராக’ எல்.கே. அத்வானி முன்னிறுத்தப்பட்டதை அடுத்து நடைபெற்ற முதல் தேசியக் கவுன்சில் கூட்டமாகும். நாட்டின் எதிர்காலப் பிரதமராக அத்வானி தெரிவு செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக, அரசியல் வானில் அத்வானிக்கு ‘‘சிறப்பான இடம்’’ உண்டு என்று சித்தரித்திருக்கிறார். ஆனால் உண்மை நிலையோ வேறாகும். அத்வானி மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாபர் மசூதி தகர்வு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக மதவெறி நஞ்சைக் கக்கும் பேர்வழி என்பது உலகம் முழுதும் நன்கு தெரிந்த உண்மை. எனவே அத்வானி, இந்துத்வா சித்தாந்தத்தை ஏற்காத மாநிலக் கட்சிகள் அடங்கிய ஒரு விரிவடைந்த கூட்டணிக்குத் தலைவராக விளங்குவதற்கு ஏற்ற நபர் அல்ல. இப்போதிருப்பதைவிட மேலும் பல கட்சிகள் தங்களை ஆதரித்தாலன்றி தங்களால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை பாஜக நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. ஆனால் அத்வானியையை பிரதமராகத் தெரிவு செய்திருப்பது, கூட்டணியை விரிவாக்கும் முயற்சிகளுக்குத் தடையாகவே அமைந்துள்ளது. பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் வெறித்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்திய அரசியலில் ‘‘கிரெம்ளின்வாதம்’’ (Kremlinisation) இருப்பதாக அளந்திருக்கிறார். இஸ்ரேல் மீது பிரேமையும், அமெரிக்கா மீது எஜமான விசுவாசமும் உள்ள ஒரு நபரால்தான் இவ்வாறு குருட்டுத்தனமாக இடதுசாரிகள் மீது வசைச்சொற்களை வாரி இறைக்க முடியும். இந்தியாவின் அமைச்சர்களிலேயே அத்வானி ஒருவர்தான் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் அமெரிக்காவில் லாங்லி என்னும் இடத்தில் உள்ள அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ. -இன் தலைமையிடத்திற்கு விஜயம் செய்த ஒரே ஒரு நபராவார். இடதுசாரிக்கு எதிரான பாஜகவின் கோபம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2004இல் ஆட்சியில் அமர்ந்த அன்றிலிருந்து இன்று வரைக்கும், பாஜகவைப் போலல்லாமல் இடதுசாரிக் கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து எழுப்பி வந்திருக்கிறது, நவீன தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வந்திருக்கிறது, நாட்டின் இறையாண்மையையும், நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையையும் பாதுகாத்து வந்திருக்கிறது. பாஜகவின் மதவெறி அரசியலை இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து தோலுரித்து வருவதானது அவர்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற முடியாத வகையில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்திருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக சொல்வதற்கு எந்தவித முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்ற மாநில அரசாங்கங்கள் அனைத்தையும் குஜராத்தை முன்மாதிரியாக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், நாட்டின் மற்ற பகுதிகள் குஜராத் அல்ல. இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்காரில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் அதனை பாஜக அறிந்துகொள்வது நிச்சயம். அம்மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில், பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களை கூச்சநாச்சமின்றித் தூக்கிப் பிடிப்பதில், படுமோசமான லஞ்சஊழல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றில் புதிய வரலாறே படைத்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் கூற்றுக்கு முற்றிலும் முரணான விதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் கடந்த நான்காண்டுகளில் கடுமையான சரிவினைச் சந்தித்துள்ளது. ஐமுகூ அப்படி ஒன்றும் சரிந்திடவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடக்கதிலிருந்தே ஓர் அங்கமாக இருந்ததில்லை. அதன் பங்களிப்பு என்பது, மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவது என்பதும், மக்களின் - நாட்டின் உண்மையான பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வருவது என்பதும்தான். பாஜக என்னதான் வாய் கிழியக் கத்தினாலும் யதார்த்த உண்மைகளிலிருந்து விரைவில் அது பாடம் கற்றுக் கொள்ளும்.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்: ச. வீரமணி

No comments: