Friday, August 19, 2016

கட்சி ஊழியர்கள்மீது திரிணாமுல் தாக்குதல் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


கட்சி ஊழியர்கள்மீது திரிணாமுல் தாக்குதல்
சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆகஸ்ட்-
சாமானிய மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தனிமைப்படுத்திட திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இரு நாட்களாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலேயே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். இது தொடர்பாக இன்றைய (வெள்ளிக்கிழமை) தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் சீத்தாராம் யெச்சூரி மற்றும் கட்சியின் தலைவர்கள் கூறியதாக வந்திருக்கும் செய்தி பின்வருமாறு:
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற பயங்கரவாதத்தை 70களில்கூட நாங்கள் சந்தித்திடவில்லை. வங்கத்தின் கிராமப்புறங்களில் எங்கள் ஊழியர்கள்மீது தாக்குதல்கள் மிகவும் மூர்க்கமாக இருக்கின்றன.  உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாக இதனை முறியடித்திட நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். வரும் செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தம் மமதா பானர்ஜிக்கு ஒரு சவாலாக இருக்கும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியிருப்பது தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது, எங்கள் கட்சியிலிருந்து ஊழியர்கள் வெளியேறியிருப்பது தொடர்பாக ஒவ்வொருவர் குறித்தும், அவர்கள் அவ்வாறு வெளியேறியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும்  தனித்தனியே ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
கட்சியில் செயலற்று இருக்கக்கூடிய கட்சி ஊழியர்களையும், திரிணாமுல் காங்கிரசுடன் கள்ளத்தனமாக உறவு கொண்டிருப்போர் குறித்தும் அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம். எங்கள் ஸ்தாபனத்தை வலுப்படுத்திட அது உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் கட்சியிலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு, அவற்றை எங்கள் ஸ்தாபனத்திலிருந்து தூக்கி எறிந்திடுவோம், என்று பெயர் கூற விரும்பாது ஒரு மூத்த தலைவர் தெரிவித்தார்.
 பெயரளவில், செயலற்று இருக்கக்கூடிய உறுப்பினர்களை இனி அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம். கட்சி சிறப்பானமுறையில் செயல்படுவதற்காக, கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்திடவும் தீர்மானித்திருக்கிறோம். புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கு கடும் விதிமுறைகளையும்  ஏற்படுத்தி இருக்கிறோம். எங்களுக்கு சிறிய கிளைகள் அல்ல, மாறாக வலுவான கிளைகளே தேவை,என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டு நாட்களும் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியுடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் கலந்து கொண்டார். செப்டம்பர் 30 முதல் நடைபெறவுள்ள கட்சியின் மாநில பிளீனம் மாநாட்டின் வரைவு தீர்மானம் மாநிலக்குழுவில் விவாதிக்கப்பட்டது.  செப்டம்பரில் பிளீனத்தில் வரைவு தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மாவட்டக்குழுக்களின் கருத்தக்களையும் பெற கட்சி தீர்மானித்துள்ளது.

(ந.நி.)  

இந்தியா, தேசத் துரோக சட்டப்பிரிவை கிழித்தெறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது



இந்தியா, தேசத் துரோக சட்டப்பிரிவை கிழித்தெறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது
பேச்சுரிமை என்பது ஜனநாயகத்தின் முத்திரைக்கல்லாகும்.  தேசத்துரோக சட்டப் பிரிவுகளுக்கு அதில் இடம் இல்லை. எனினும், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தேசத்துரோகம் சம்பந்தமான 124-அ பிரிவு இன்னமும் நீடிக்கிறது. சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றம், தேசத்துரோகம் என்பதன் வரம்பு குறித்து வரையறுப்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவுக்கும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-அ பிரிவுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய உறவுமுறை குறித்து தெளிவுபடுத்தி இருந்தது. ஆயினும், அதனைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, அதன்பின் தொடர்ந்து வந்த மத்திய, மாநில அரசுகள் அனைத்துமே தங்கள் மனம்போனபடி தேசக்குற்றச்சாட்டுக்களை பிரயோகித்தன. கீழமை நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றம் இதுகுறித்து அளித்துள்ள தெளிவான தீர்வறிக்கைகள் குறித்து கவலைப்படாது, அரசுகள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அவற்றின் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
1962இல், கேதார் நாத் சிங் (எதிர்) பீகார் மாநில அரசு என்னும் வழக்கில், தலைமை நீதியரசர் புவனேஷ்வர் பிரசாத் சின்கா என்பவர் தலைமையிலான அரசமைப்புச்சட்ட அமர்வாயம், தேசத்துரோகம் குறித்து ஐயந்திரிபற தெளிவானதோர் வரையறையை அளித்தது. அரசாங்கத்தை வன்முறை சாதனங்கள் மூலமாக மற்றும்/அல்லது சீர்குலைவு உருவாக்கும் எண்ணத்துடன், அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்திடும் எண்ணத்துடன் வன்முறையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தையோ அல்லது நிர்வாகத்தையே விமர்சனம் செய்வது, அது என்னதான்  காரமானதாக இருந்தாலும் அல்லது தவறான தகவலாக இருந்தாலும், தேசத்துரோக வரையறைக்குள் வராது. வன்முறையைத் தூண்டுவது என்பது அதன் மூக்கிய மூலக்கூறாகும்.  இது 23 ஆண்டுகள் கழித்து, நீதியரசர்கள் ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் பைசுனாதீன் ஆகியோரால் பல்வந்த் சிங் (எதிர்) பஞ்சாப் மாநில அரசு வழக்கில் மீளவும் வலியுறுத்தி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேசத்துரோகம் என்பதை ஈர்ப்பதற்கு எதுவெல்லாம் காரணிகளாக இருக்கும் என்று மிகவும் தெளிவாக உச்சநீதிமன்றத்தினால் வரையறுத்து கூறப்பட்டுள்ள போதிலும், தேசத்துரோக வழக்குகள் தங்கள் முன் விசாரணைக்கு வரும்போது, அவற்றையெல்லாம் கீழமை நீதிமன்றங்கள் பிரயோகிக்கத் தவறிவிடுகின்றன. நீதித்துறையின் கீழ் மட்ட அளவில் உயர்நீதித்துறை அளிக்கின்ற தீர்வறிக்கைகள் குறித்து கவலைப்படுவதே கிடையாது. உயர் அளவிலான நீதித்துறைக்கும் கீழ் மட்டத்திலான நீதிமன்றங்களுக்கும் இடையில் இருக்கின்ற இந்த இடைவெளியை சரி செய்திட ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
1951இல் ஜவஹர்லால் நேரு, தேசத் துரோக சட்டப்பிரிவு மிகவும் ஆட்சேபகரமானது மற்றும் அருவருப்பானது. … எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக, அதனை ஒழித்துக்கட்டுவது நல்லது,என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் செய்யவில்லை. விரைவாக மட்டுமல்ல, பின்னர் வந்தவர்கள் தாமதமாகவும்கூட இதனைச் செய்யவில்லை. தேசத் துரோக சட்டப்பிரிவுகளைக் கிழித்தெறிய வேண்டிய தருணம் இதுவேயாகும்.
(நன்றி: தி எகனாமிக் டைம்ஸ், 2016 ஆகஸ்ட் 19 தலையங்கம்)

தமிழில்: ச. வீரமணி

Tuesday, August 16, 2016

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 14,052 தில்லி அரசின் அறிவிப்புக்கு சிஐடியு நன்றி


குறைந்தபட்ச ஊதியம் ரூ. 14,052 
தில்லி அரசின் அறிவிப்புக்கு சிஐடியு நன்றி
புதுதில்லி, ஆக. 17-
குறைந்தபட்ச ஊதியத்தை 14,052 ரூபாயாக உயர்த்திட தில்லி மாநில அரசு முடிவு செய்திருப்பதற்கு சிஐடியு-வின் தில்லி மாநிலக் குழு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளது. 
இது தொடர்பாக சிஐடியுவின் தில்லி மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி மாநில அரசின் குறைந்தபட்ச ஊதியங்கள் ஆலோசனை வாரியம் அளித்திட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, பல்வேறு வகையினங்களுக்கும் 50 சதவீதம் வரை உயர்வு அளித்து 2016 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு தில்லி மாநில சிஐடியு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு பல்வேறு வகையினங்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தபின்பு. குறைந்தபட்ச ஊதியம், திறமையற்றவர்களுக்கு (unskilled) 14,052 ரூபாயும், பாதி திறமையுள்ளவர்களுக்கு (semi-skilled) 15,471 ரூபாயும், திறமையுள்ள (skilled) தொழிலாளர்களுக்கு 17,033 ரூபாயும் அளிக்கப்படும். 
இவ்வாறு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வர்த்தகக் கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் சாரம் எதுவும் கிடையாது. அவர்கள் கூறும் ஒரே சாக்கு என்னவெனில், வர்த்தகர்களும், தொழில்நிறுவனங்களும் தங்கள் தொழில்களை அற்ப கூலி அளித்து வரும் அண்டை மாநிலங்களுக்கு மாற்றிக் கொள்ளும்  என்பதும் இதனால் தில்லியில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதுமாகும்.  
சிஐடியுவும் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு சங்கங்களும். பணவீக்கத்தின் காரணமாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளதை மீட்பதற்கு உதவிடும் விதத்தில்,  குறைந்தபட்ச ஊதியம் 20 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கடந்த 4, 5 மாதங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. முதல்வரின் இந்த அறிவிப்பு இவ்வாறு தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் விளைவேயாகும். 
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வினை தில்லியை ஒட்டியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத்திற்கும் நீட்டித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அங்கு வாழும் மக்களும் இதேபோன்று கடும் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனை நாடு முழுதும் விரிவுபடுத்துவதற்கும். மற்றும் இதர கோரிக்கைகளுக்காகவும் வரும் 2016 செப்டம்பர் 2 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெறுவதற்கும் உழைக்கும் மக்களைத் திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்திடும்.
 (ந.நி,)