Tuesday, April 9, 2013

இலங்கைப் பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும்?:ஹர்தீப் எஸ். பூரி




இலங்கை அரசாங்கமானது, தங்கள் நாட்டின் தமிழ்க் குடிமக்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தவில்லை எனில், இந்தியா இலங்கை தொடர்பாக மாற்றி சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தியாவின் அயல்துறைக் கொள்கையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுவது என்பது ஆட்சியாளர்களின்  எதார்த்த உண்மைகளின் அடிப்படையிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டன. இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை மற்றும் மனித  உரிமைக் கவுன்சிலில் அது வாக்களித்த விதம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
1956இல் இலங்கையின் ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே என்று சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயகே சட்டம் இயற்றியதிலிருந்து பிரச்சனை தொடங்கிவிட்டது.  அப்போது இந்தியாவில் புதுதில்லியிலிருந்த அரசியல் வர்க்கத்தில் சில பிரிவினர் இதனை வரவேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வினை ஒருமுகப்படுத்துகிறது என்று இதற்கு அப்போது அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் தமிழ் மக்கள் இரண்டாம்தரக் குடி மக்களாக மாற்றப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு என்பது படிப்படியாக ஆனால் உறுதியாக நிறுவப்பட்டது.  யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பா இளைஞர் பிரபாகரனால் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் கொழும்பில் வெடித்தன. இது தமிழ் தீவிரவாதம் வளர்வதற்கும் இட்டுச் சென்றது.
அடுத்து, சிங்களவர்கள் மத்தியில், பெரும்பான்மையான சிங்களவர்கள், ‘‘தமிழ் தீவிரவாதத்திற்கு, (பலர் இதனை பயங்கரவாதம் என்றே கருதினார்கள்) பாக் நீரிணைப்புக்கு அப்பாலிருந்து வரும் ஆதரவைத் துண்டித்து விட்டோமானால் அதனால் வெற்றி பெற முடியாது’’ என்று கருதினார்கள். பிரதமர் ராஜிவ் காந்தி நிலைமையைச் சரிசெய்ய விரும்பினார். இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்தியா  நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.   இதன் பொருள், இலங்கையைத் துண்டாட முயற்சிப்பவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என்பது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கும் இந்தியா ஒத்துழைத்திடும் என்பதுமாகும். ஆயினும் இந்தியா தரப்பில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, தமிழ்ச் சிறுபான்மையினர், கண்ணியத்தோடு, இலங்கையின் பன்முகக் கலாச்சார (multicultural), பல்வேறுஇன (multiple ethnic), பல்வேறுமொழிகளின் (multilingual) சம அந்தஸ்து உள்ளவர்களாகநடத்தப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.
தீர்மானம் மிகவும் சுருக்கப்பட்டுவிட்டது
எல்டிடிஇ-இனருக்கு எதிராக அல்லது மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக கொழும்புவின் ராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாகஎல்டிடிஇ-இனருக்கு எதிரான சண்டையில் கடைசி நூறு நாட்களில் மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் அது புரிந்த யுத்தக் குற்றங்கள் குறித்துத்தான் கேள்வி கேட்கின்றன. எல்டிடிஇ-இனரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் மிதந்தபோது அவர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட உரையாடல்களும், காணொளிகளும் ஆவணப்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் ஒலி மற்றும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இலங்கை அரசாங்கத்தை மிகவும் இக்கட்டிற்குள் தள்ளி இருக்கின்றன. 2012 மார்ச்சில் மனித உரிமைகள் கவுன்சிலின் 19ஆவது அமர்வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பது மிகவும் சுருக்கப்பட்ட ஒன்றேயாகும். அது என்ன கோருகிறது. இலங்கை அரசாங்கம் தானே அமைத்திட்ட, தன் சொந்த  கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச ஒற்றுமை ஆணையம் (Lessons Learnt and Reconciliation Commission) அளித்திட்ட பரிந்துரைகளை அமல்படுத்துக என்பதே அத்தீர்மானத்தின் வாசகமாகும். இதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டால் அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இலங்கை அரசாங்கம் இதனை நேரடியாக ஏற்காமல் தட்டிக்கழிக்கும் விதத்திலேயே நடந்துகொண்டு வருகிறது.  இலங்கை அரசாங்கம் புரிந்திட்ட அட்டூழியங்கள் தொடர்பாக அதிகமான அளவிற்குக் காணொளிகள் வெளிவரத்தொடங்கியுள்ளதை அடுத்து, அவற்றிற்கு இலங்கை அரசாங்கம் பதில்சொல்ல வேண்டிய கோரிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இலங்கைக்கு எதிராகவும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 2012 மார்ச்சில் வாக்களித்த இந்தியாவிற்கு, 2013 மார்ச்சில் மாற்றி வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  குறிப்பாக இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய விதத்தில் உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காத நிலையில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டியிருந்தது.
இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண இரு நாடுகளுமே விரைந்து விடை காண வேண்டும். இது இரு நாட்டின் நலன்களுக்குமே அவசியமாகும். இல்லையெனில் இருக்கும் ரணங்கள் சீழ்பிடிக்க அனுமதித்தது போலாகிவிடும்.
இனப்படுகொலைகள், இனத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுதல், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மூடி மறைப்பதன் மூலம் இறையாண்மை எந்தக்காலத்திலும் வெற்றி பெற்றதில்லை. இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரிக்காது என்று கூறுவதெல்லாம் அபத்தமான ஒன்றாகும். இதன் மீது நாம் கொள்கைரீதியாக தீர்மானகரமான நிலை இதற்கு முன்பு எடுத்திருக்கிறோம். 1983இல் கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்த சமயத்தில், இலங்கைக்கு எதிராக பாகுபாடுகளைத் தடுத்தல் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் உதவி-ஆணையத்தில் (Sub-Commission on Prevention of Discrimination and the Protection of Minorities) இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை  இந்தியா போதுமான துணிவுடன் கொண்டு வந்தது.  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனியர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மோசமாக நடந்துகொள்ளும் இஸ்ரேலுக்கு எதிராகவும் இதேபோன்ற தீர்மானங்கள் வந்தபோது அவற்றிற்கு ஆதரவாக நாம்  வாக்களித்திருக்கிறோம். நம்முடைய நாட்டின் நலன் பாதிக்கப்படுமானால், இதுபோன்று பல நாடுகளின் பிரச்சனைகளிலும் அது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசாக (DPRK) இருந்தாலும் சரி, அல்லது ஈரானாக இருந்தாலும் சரி, நாம் எவ்விதத்தயக்கமுமின்றி  சரியான நிலை எடுத்திருக்கிறோம்.

அரசியல்வாதிகளின் வஞ்சம்நிறைந்த திட்டங்கள் என்று கூறி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வுகளை புறந்தள்ளுவது என்பது ஆட்சியாளர்கள் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்பது மட்டுமல்ல, வருவதற்கு முன் காக்காவிட்டால் எரிமுன்னர் வைத்த வைக்கோல்போல எரிந்து சாம்பலாகிவிடுவோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  2009 ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மதித்து நடக்காது முரண்டு பிடிக்கும் இலங்கையை இந்தியா ஏன் பொறுப்பாக்கக் கூடாது?

13ஆவது திருத்தம்

இந்தியா, எல்டிடிஇ-க்கு எதிராக இருக்கலாம், ஆனால் தமிழர்களுக்கு எதிராக இருப்பதை அனுமதிக்க முடியாது.  பிரச்சனை என்னவெனில், இலங்கையிலிருந்த தமிழ்ச் சிறுபான்மையினர் மத்தியிலும் மற்றும் இந்தியாவில் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மை பிரிவினர் மத்தியிலும், சிங்களவர்களின் அடக்குமுறைக்கு எதிராக உண்மையான கேடயமாக இருந்து வெற்றிகரமான முறையில் அதனை எதிர்கொண்டது எல்டிடிஇ இயக்கம் மட்டுமே என்கிற கருத்து அழுத்தமாக இருக்கிறது.   இந்த உணர்வினை நாம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரே பாதுகாப்பு, ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளபடி 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அதிகாரப் பரவலேயாகும்.

இலங்கைப் பிரச்சனையின் மீது, தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் பலவற்றுடன் இணைந்து அஇஅதிமுகவும் திமுகவும் ஒரே பக்கத்தில்தான் நிற்கின்றன. இலங்கை அரசாங்கம் தன் உள்ளத்தை  உளப்பூர்வமாக மாற்றிக் கொள்ளவில்லை எனில் பிரச்சனை சீழ் பிடித்து அழுகும் வரை தொடரும்.  2013 மார்ச் 27 அன்று இலங்கைப் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாயா ராஜபக்சா, ‘‘தேசியத் தலைமைக்கு எதிராக எப்போதும் குறிவைத்துக் கொண்டிருப்பவர்களிடம், மாகாண நிர்வாகத்தை எப்படி ஒப்படைக்க முடியும்? மாகாண நிர்வாகங்களின் தயவில் இருக்க நாங்கள் விரும்பவில்லை,’’ என்று கூறியிருக்கிறார்.  தற்போது இருந்துவரும் மாகாண கவுன்சில்களையேக் கலைத்துவிடக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு செயலாளர் பரிந்துரை செய்திருப்பதுபோலத் தோன்றுகிறது. இந்த நிலையில் இவர்கள் எங்கே 13ஆவது திருத்தத்தை அளிக்கப் போகிறார்கள்?
இந்தியாவுக்கு அவர்கள் என்ன உறுதிமொழிகள் அளித்திருந்த போதிலும்இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ‘‘சகோதரர்கள்’’, அரசியல் சமரசத்திற்கோ அதிகாரப்பரவலுக்கோ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவுகூட இருப்பதுபோல் தோன்றவில்லை.   சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவேண்டும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாத இத்தகைய ‘‘பெரும்பான்மைவாதம்’’(“majoritarianism”)  சிங்கள நாடாளுமன்ற வலுவைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் குறுகிய, குணக்கேடான அரசியல் சிந்தனையேயாகும்.

புத்த பிக்குகளின் தலைமையில், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சமீபத்தில் புரிந்துள்ள தாக்குதல்கள், மொழி, மதம் மற்றும் கலாச்சார சிறுபான்மையினர் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள  தடித்தனமான, பண்பாடற்ற இழிசெயல்களேயாகும். யுத்த குற்றங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததன் மூலமாக இந்தியா மிகச் சரியாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியா அக்கறை காட்டவில்லை என்றால் சீனா ஆக்கிரமித்துவிடும் மற்றும் செல்வாக்கு செலுத்திவிடும் என்பதெல்லாம் நம்மைச் சுற்றியுள்ள சிறிய அண்டை நாடுகள் அடிக்கடி நம்மீது ஏவும் பூச்சாண்டியேயாகும். சீனர்கள் மிகவும் மதிநுட்பம் உடையவர்கள். இந்தியா போன்று அவர்களும் பொருளாதாரம் மற்றும் வணிக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளவே முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையில் நம்மால் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள முடியாத பல வணிகத் திட்டங்களை அவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

இலங்கை, இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு என்பது மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நம்மோடு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த நாடுமாகும்.   இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக ஆனால் பலமாகக் கட்டப்பட்டவையாகும்.  இலங்கை, தமிழ் மக்களை கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்தவில்லை என்றால், இந்தியாவு, இலங்கைக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. அவ்வாறு நடந்திடாமல், ஏதேனும் ‘‘சாக்குப்போக்குகள்’’ சொல்லுமானால், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வலுவாகக் குரல் கொடுக்கவில்லை என்றால், அதற்கு எதிராக வீசப்படும் செங்கற்கட்டிகளை எதிர்கொள்ள அது தயாராகிக்கொள்ள வேண்டியதுதான்.

(கட்டுரையாளர்,நியூயார்க்கில் ஐ.நா.மன்றத்தில் இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தவர். 2013 ஏப்ரல் 9 அன்று தி இந்து நாளிதழில், வெளியான கட்டுரை.  தமிழில்: ச.வீரமணி)

Sunday, April 7, 2013

பொது முதலீடே சரியான கொள்கையாகும்



பிரதமர், இந்தியத் தொழில் அதிபர்கள் மாநாட்டிலும் ஆண்டுப் பேரவைக் கூட்டத்திலும் உரையாற்றினார். அப்போது அவர், ‘எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறதுஎன்பது போன்ற கருத்தை முன்வைத்ததுடன், ‘‘நாம் 8 விழுக்காடு வளர்ச்சியை மீண்டும் பெற முடியும் என்றே கருதுகிறேன்’’ என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘‘சுதந்திரத்திற்குப் பிந்தைய, நாட்டின் பொரு ளாதார வரலாற்றில் ஒரு தீர்மானகரமான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக் கிறோம்,’’ என்றும் ‘‘இந்திய முதலாளிகள் நாம் அமல்படுத்தும் கொள்கையில் நம்பிக்கை வைத்திட வேண்டும்’’ என்றும் ‘‘தேவையற்ற முறையில் எதிர்மறை எண்ணங்கள் என்னும் சேற்றில் சிக்கிக்கொள்ளாமல் தங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் அறிவுரை பகர்ந் திருக்கிறார். பிரதமரின் உரையைக் கேட்கும்போது, ‘‘ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டால், பிச்சைக்காரர்களும் குதிரை சவாரி செய்வார்கள்’’ என்கிற 16ஆம் நூற்றாண்டின் நர்சரிப் பள்ளிப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் மேலும், ‘‘அரசு விரைந்து செயல்படவில்லை எனில், ஏற்கனவே மந்தமாகிப்போயுள்ள நம் வளர்ச்சி, 5 விழுக்காடு அளவிற்கே ஆண்டு முழு வதும் நிலைத்து நின்றுவிடும் என்று இன்று கருத்தொற்றுமை ஏற்பட்டிருக் கிறது’’ என்றும், ‘‘எனவே அரசு மிகவும் வேகமாகவும் தீர்மானகரமாகவும் செயல் படவேண்டியது அவசியம்’’ என்றும் பேசியிருக்கிறார்.உள்ளீடான வளர்ச்சிகுறித்து உதட்டளவில் சேவை செய்திடும் இத்தகைய நடவடிக்கை பிரதமரின் உள்ளக்கிடக்கையின்படி நிதி திரட்டலை ஒருமுனைப் படுத்த வேண்டும் மற்றும் நாட்டில் சிறந்த முறையில் முதலீட்டுக்கான சூழலை உரு வாக்க வேண்டும் என்பதுதான். இன்றுள்ள உலக நிலைமையில் இது மிகவும் அவசியம் என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
நிதி ஒருமுகப்படுத்தலைப் பொறுத்த வரை பிரதமர் மேற்கொண்டுள்ள நடவ டிக்கை என்பது மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை, குறிப்பாக எரி பொருள் மானியங்களைக் குறைத்தது தான். பெட்ரோல் விலை மீதிருந்த கட்டுப் பாடுகள் இப்போது முழுமையாக நீக்கப் பட்டுவிட்டன. அடுத்த சில மாதங்களில் டீசல் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப் பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார். சமையல் எரிவாயுக்கான மானியத்திற்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆதார் மேடையின் மீதான நேரடி ரொக்கப் பட்டுவாடா திட்டம் மக்களுக்கு அளித்து வரும் மானியங்களை மேலும் குறைத்திட இருக்கிறது. இவ்வாறெல்லாம் இவர் கூறுகிற அதே சமயத்தில், நாட்டில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் பல லட்சம் கோடி ரூபாய்கள் வரிச் சலுகைகள் அளித்திருப்பது பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் வசூலிக்கப்படாமல் ரத்து செய் யப்பட்டிருக்கிறது. இத்தொகை ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறையை விட அதிகமாகும். பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் என்பவை வளர்ச்சிக்கான ஊக்கத்தொகை’ (`incentives’) என்று இவர்களால் வர்ணிக்கப்படும் அதே சமயத்தில், ‘மானியங்கள்என்ற பெயரில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளோ இவர்களது அகராதியின்படி பொருளாதாரத்தின் மீதான சுமைக ளாகும். ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்கை வரவிருக்கும் காலங்களிலும் தொடரவிருக்கின்றது. இதன் பொருள் நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டிட, மக் கள் மீது சுமைகள் மேலும் மேலும் ஏற்றப்படும் என்பதேயாகும். பொதுத்துறையை நம்முடைய பொரு ளாதாரத்தின் உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நேருவின் தொலைநோக்குப்பார்வையிலிருந்து தற் போதைய பிரதமர் தன் தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளார். ‘‘அரசாங்கம் வளர்ச்சியின் பிரதான உந்து சக்தி அல்ல. மாறாக, தனியார் துறை தலைமையிலான பொருளாதாரமே வளர்ச்சியின் பிரதான உந்து சக்தியாகும். நான் மீண்டும் வலி யுறுத்திச் சொல்கிறேன், நாம் ஒரு தனியார் துறை தலைமையிலான பொருளாதாரத்தையே நடத்திக் கொண்டிருக்கிறோம். 75 விழுக்காடு முதலீடு தனியார் துறையிலிருந்துதான் வருகிறது. எனவே வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்பவர், உண்மையில் தனியார் முதலீடுதான்.’’  என்று பிரதமர் தனியார்துறையை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். உள்நாட்டு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகாரவர்க்கத்தின் தடை களைக் களைந்திட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டிய லிட்ட பிரதமர், தற்போது அந்நிய முதலீட்டைக் கவர்வதற்கான நடவடிக்கைகளையும் மிகவும் வேகமாகச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ‘‘அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை நாம் கொடுத்திருக்கிறோம்’’ என்று பிரதமர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, விமானப் போக்குவரத்து மற்றும் பல் துறைகளில் அந்நிய முதலீட்டாளர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டிருப்பதைத் தெரிவித்த அதே சமயத்தில் பிரதமர், ‘‘வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகமான அளவில் செய்ய முடியுமா என்பது குறித்து அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்துகொண் டிருக்கிறோம்,’’ என்றும் அறிவித்துள்ளார். வெளிப்படையாய்ச் சொல்லவில்லை என்றாலும் நடைமுறையில் அடுத்த சுற்று புதிய தலைமுறை சீர்திருத்தங்களை அறிவித்துள்ள அவர், ‘‘இதர சீர்திருத்த நட வடிக்கைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக, நிதித்துறை தொடர்பாக சட்டம் இயற்றும் சீர்திருத்தங்கள் குழு அளித்துள்ள எண்ணற்ற பரிந்துரைகள் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன,’’ என்றும் அறிவித்துள்ளார். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னாலிருந்த கொள்கைக் கோட்பாட்டை மறுதலிக்கும் வண்ணம் இந்தியாவின் சேமிப்புகளை அந்நிய வங்கிகள் கபளீகரம் செய்யக்கூடிய விதத்தில், தனியார் அந்நிய வங்கிகளை அனுமதிக்க வகை செய்யும் விதத்தில், வங்கிச் சேவைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சமீபத்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை பிரதமர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2008இல் உலகப் பொருளாதார மந்தம் இந்தியாவில் முழுமையான அழிவினை ஏற்படுத்துவதிலிருந்து எந்த நட வடிக்கைகள் இந்தியாவைப் பாதுகாத்தனவோ, அந்த நடவடிக்கைகள் அனைத் தையும் கைவிட இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது உலக நிதி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவிற்கும் மிக அதிக அளவில் ஊறுவிளைவித்திடும்.‘‘பிரச்சனையைச் சரியான முறையில் ஆய்வு செய்வதன் அடிப்படையில் ஒரு சரியான கொள்கை வகுக்கப்பட வேண்டும்’’ என்று பிரதமர் விசித்திரமான முறையில் கூறியிருக்கிறார். பொருளாதார மந்த நிலைதான் இங்கே பிரச்சனையே. ஆனால், சரியான கொள்கை என்பது தவறான ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர், ‘‘பொருளா தாரத்தின் வளர்ச்சி விகிதம் முதலீட்டு விகிதத்துடன் வலுவானவிதத்தில் ஒத்துப்போக வேண்டும்,’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், ‘‘2011-12ஆம் ஆண்டில் பொது மற்றும் தனியார் முதலீடு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இவ்வாறு முதலீட்டில் ஏற்பட்டிருக்கிற வீழ்ச்சி மாற்றிய மைக்கப்பட வேண்டும்.’’ பிரதமர் மேலும், ‘‘சீர்திருத்தங்களை ஒன்றன்பின்ஒன்றாக தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இதனைச் சரிசெய்திட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். இதன் பொருள் ஆரம்பத்தில் பிரதமர் கூறியிருப்பதைப்போன்று அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்திற்கு அபரிமிதமான ஊக்கத்தொகைகள் (மானியங்கள் என்று படிக்கவும்) அளிப்பது என்பதாகும். நாம் ஆட்சியாளர்களிடம் வைக்கும் முக்கியமான கேள்வி, முதலீடுகள் வீழ்ச்சியடைந்ததற்கான அடிப்படைக் கார ணம் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாகவே தாங்கள் முதலாளிகளுக்கு அபரி மிதமான சலுகைகள்தான் அளித்து வந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந் திருக்கிறதே, காரணம் என்ன? பொருளாதாரத்தில் மக்களின் வாங்கும் சக்தி இல்லாமல் போனதே இதற்குக் காரணமாகும். இதுவே எதார்த்த உண்மையாகும். பொருளாதாரத்தில் வாங்கும் சக்தி இல்லையென்றால் முதலீடுகள் மட்டுமே வளர்ச்சியை உற்பத்தி செய்துவிடாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்கப்பட வேண்டும். அப்போதுதான் லாபமும் கிடைக்கும், வளர்ச்சியும் ஏற்படும். இதற்கு, மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தாக வேண்டும். உலகப் பொருளாதார மந்தமும் அதனைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தில் கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியும் ஏற்பட்டதால், உள்நாட்டு முதலீட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளிநாட்டில் விற்க முடிய வில்லை. நாட்டிற்குள்ளும் மக்களுக்கு அளித்து வந்த மானியங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டதாலும், எரிபொருள்கள் மீதான விலைகளை நிர்வாகரீதியாக கடுமையாக உயர்த்தி இருப்பதாலும், பண வீக்க விகிதம் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருப்பதாலும், நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி கடுமையாகக் கசக்கிப் பிழியப்பட்டு விட்டது. இவ்வாறு, உலக அளவிலும் உள் நாட்டு அளவிலும் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளதானது சரிசெய்யப்பட வேண்டுமானால், அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டுமானால், நாட்டு மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக் கப்பட்டாக வேண்டும். இது எப்படி சாத்தியமாக முடியும்? ஐ.மு.கூட்டணி அரசாங்கமானது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் அளித்து வரும் அபரிமிதமான வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக அவை வசூலிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளில் செலுத்தப்பட வேண்டும்.
இவை நமக்கு மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட் டுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற் கும் இட்டுச் செல்லும். இவற்றின் விளைவாக விரிவடையும் உள்நாட்டுத் தேவை, கூடுதலான முதலீடுகளுக்கான தூண்டு விசையாக அமைந்து இந்தியாவை ஒரு வலுவான, நிலையான வளர்ச்சிப் பாதையில் வைத்திடும். பிரதமர் முதலாளிகளுக்கு உணர்ச்சியூட்டக்கூடிய விதத்தில் பேசியிருப்பதில் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும் மயங்கிடக்கூடாது. அவர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக மட்டுமல்ல, தங்கள் சொந்த நலன்களுக்காகவும் வேண்டியாவது, பொது முதலீடுகளை அதிகப்படுத்துமாறும் தங்களுக்கு அபரிமிதமான சலுகைகள் அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். திருவாளர் பிரதமர் அவர்களே, இதுவே, ‘‘பிரச்சனையின் சரியான ஆய்வின் மீது’’ அமைந்த ‘‘சரியான கொள்கை’’யாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
(தமிழில்: ச.வீரமணி)


Thursday, April 4, 2013

அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம்-ஜனநாயக முறையில் முளையிலேயே கிள்ளி எறிவோம்-அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி சூளுரை












புதுதில்லி, ஏப்ரல் 4-
மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார் என்று சடலக்கூராய்வு சான்றிதழ் முலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.   இக்கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம். 1975இல் இருந்ததைப்போன்று அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம். இதனை முளையிலேயே ஜனநாயக முறையில் கிள்ளி எறிவோம் என்று இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையினரின் அனுமதி பெற்று பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையை ஏவினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினர்  சுதிப்தே குப்தா கொல்லப்பட்டார். இது விபத்துதான் என்றும் அடித்துக் கொல்லப்படவில்லை என்றும் மாநில அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இல்லை இது கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக்கூராய்வு சான்றிதழில் உறுதி செய்யப்பட்டது. 
சுதிப்தே குப்தா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுதும் அனைத்திந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தில்லியில் உள்ள வங்கபவன் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தில்லிப் பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணியில் வந்த மாணவர்களை வங்கபவனுக்குள் செல்ல காவலதுறையினர் அனுமதிக்கவில்லை.  வாயில் கதவை அடைத்து வைத்தனர். ஆயினும் மாணவர்கள் முழக்கமிட்டவாறே வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.
பின்னர் வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் 1975இல் மேற்கு வங்கத்தில் நடைபெற்றதைப்போன்ற அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர இப்போதைய திரிணாமல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதியோம்.  சுதிப்தா குப்தா கொலை செய்யப்படவில்லை, அது விபத்துதான் என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இல்லை, இ து கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக் கூராய்வு சான்றிதழ் (போஸ்ட்மார்ட்டம் சர்ட்டிபிகேட்) மூலம் தெளிவாகிவிட்டது. எனவே நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கொலைக்குக் காரணமானவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 1975இல் நடந்ததுபோல் அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். இதனை ஒருபோதும் அனுமதியோம். ஜனநாயக ரீதியாக இதனை முளையிலேயேக் கிள்ளி எறிவோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
பேரணி/ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேஎன் பாலகோபால், எம்பி ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர சர்மா, தில்லி மாநில செயலாளர் புஷ்பிந்தர் கிரேவால் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
---