Sunday, May 5, 2019

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது -ஏ.ஜி. நூரணி



ஆர்எஸ்எஸ் இயக்கம் விரும்புவதெல்லாம், இப்போதுள்ள மதச்சார்பற்ற இந்தியாவையும், காந்தி-நேரு அரசையும் தகர்த்திட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட வேண்டும் என்பதுமேயாகும்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் வலுவானதோர் அமைப்பாக இருக்கிறது என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ... அதன் முன்னணி பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடிதான் இப்போது நாட்டின் பிரதமர். அதன் முத்திரை நாட்டின் பல துறைகளிலும் நன்குதெரிகிறது, என்று ஆர்எஸ்எஸ்:இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் (RSS:A Menace to India) என்னும் தன்னுடைய நூலில்  நாட்டின் அரசமைப்புச்சட்ட வல்லுநரும் மற்றும் அரசியல் பகுத்தாய்நருமான ஏ.ஜி. நூரணி எழுதியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கடந்த காலத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய அரசை உருவாக்கி, கட்டி எழுப்பிய மாபெரும் சிற்பிகளான அசோகர், அக்பர் மற்றும் ஜவஹர்லால் நேருவை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்து வலதுசாரி வகுப்புவாதம் உமிழ்ந்திடும் விஷம், மிகவும் அபாயகரமான முறையில் பரவியிருக்கிறது,என்று அந்நூலின் அறிமுகவுரையில் கூறியுள்ள ஏ.ஜி. நூரணி, இவ்வாறு விஷத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த சக்திகள் வெல்லமுடியாதவையல்ல, என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவற்றை வெல்ல முடியும். அதனை எதிர்ப்பவர்கள் அனைவரும் அனைத்து மட்டங்களிலும் அது விடுக்கும் சவால்களை உறுதியுடன் எதிர்த்துநிற்கத் தயாராக இருந்தார்கள் என்றால் நிச்சயமாக அதனை வெல்ல முடியும், என்கிறார்.
அந்நூலிலிருந்து சாராம்சங்கள் சில:
காவி ஆட்சியாளர்களின் ரசனைக்கு முதலில் பலியானது, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Council of Historical Research) நிறுவனமாகும். 2015 மார்ச் மாதத்தில் சங்கிகளின் ரசனைக்கேற்ப இது மாற்றி அமைக்கப்பட்டது.
இந்து ராஷ்ட்ரம்
ஆர்எஸ்எஸ் தங்களுக்குச் சரியான நேரம் வந்திருப்பதாக நம்புகிறது. ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், 2015 பிப்ரவரி 9 அன்று, இப்போது நமக்கு சாதகமான நேரம், என்று கூறினார். அவர் அப்போது மேலும், இந்துயிசம் மட்டுமே உலகில் உள்ள ஒரே சித்தாந்தம். இது அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டுவருகிறது. ... இந்துஸ்தான் என்றால் இந்து ராஷ்ட்ரம்தான். இது ஓர் உண்மை. இந்த சிந்தனையுடன் நாம் மேலும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த தேசத்தை வல்லமை பொருந்தியமாக மாற்றிட அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும். நம் தேசம் வல்லமையுள்ளதாக மாறும்போது அது உலகம் முழுவதற்கும் பயனளித்திடும், என்றும் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
இவர்கள் இதுநாள்வரையிலும் ‘இந்து இந்தியா, உலகத்தின் ஆசானாக (விஸ்வகுரு அல்லது ஜகத்குரு) இருந்திடும்’ என்றுதான் சொல்லிவந்தார்கள். அதனுடன் ஒப்பிடும்போது மேற்கண்ட கூற்று என்பது மிதமான ஒன்றுதான். உலகமே ஆர்எஸ்எஸ் தங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறதாம்.
ஆர்எஸ்எஸ்-இன் வேலை இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது. இதனை, வெறும் பேச்சுக்களால் மட்டும் செய்துவிட முடியாது. நமக்கு நேரம் வந்து விட்டது. ஒட்டுமொத்த சமூகமும், ஆர்எஸ்எஸ் இயக்கம் நமக்குத் தேவை என்று கருதுகிறது. அவர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ் வளர வேண்டும். நாம் இந்து சமூகத்தை ஒன்றுபடுத்த வேண்டும், அச்சமற்றதாகவும், சுயசார்பு உடையதாகவும், சுயநலமற்றதாகவும் ஆக்க வேண்டும்.
மதச்சார்பற்ற அரசை அகற்றிட வேண்டும்
ஆர்எஸ்எஸ் இயக்கம், மோடியின் மூன்று துணிகர முயற்சிகள் காரணமாகவே அவர் பிரதமராக இருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறது. முதலாவதாக, பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தாதாபாய் நௌரோஜி, பத்ருதீன் தியாப்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களால் நாட்டு மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்ட மதச்சார்பற்ற அரசு என்கிற கண்ணோட்டத்தை, மக்களிடமிருந்து பறித்திட அவர் மேற்கொண்டுவரும் முயற்சி. 1931இல் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய  வல்லபாய் பட்டேலும், 1940இல் அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்திய மௌலானா ஆசாத்தும்,  சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற அரசாகும் என்று தெளிவுபடத் தெரிவித்திருந்தார்கள். மௌலானா ஆசாத்தின் உரை, அந்தச் சமயத்தில் முஸ்லீம் லீக் நாட்டைப் பிளவு படுத்த வேண்டும் என்று கூக்குரலிட்டுக்கொண்டிருந்ததற்கு எதிரானதாக அமைந்திருந்தது.  அவர் பேசியதைத்தொடர்ந்து, மாநாட்டில் ஏற்பட்ட சலசலப்பை ஜவஹர்லால் நேரு உறுதியுடன் எதிர்கொண்டார். அதிலிருந்து, இத்தகைய துயரார்ந்த நிலைமையை ஜவஹர்லால் நேரு மிகவும் சிறப்பாகக் கையாண்டு, மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாக இருப்பதற்கு இவரே பொருத்தமானவர் என்று எல்லோரால் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் உருவானார்.
இரண்டாவதாக, அசோகர் மற்றும் அக்பருக்கு அடுத்ததாக, ஜவஹர்லால் நேருதான் இந்திய அரசைக் கட்டி எழுப்பிய மாபெரும் தலைவராவார். நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமல்ல, உலகத்தின் நேசபூர்வமான நட்பையும் பெற்றிருந்தார். அரசைப் பொறுத்தவரை இவரது கருத்தாக்கம் என்பது மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் பன்முக சமூகத்தின் மீதான ஜனநாயக அரசு என்கிற அடிப்படையில் அமைந்திருந்தது. இது, ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தத்திற்கும் அதன் அரசியல் சந்ததியினருக்கும் நேரிடையாகவே முரண்பாட்ட ஒன்றாகும். எனவே, நேரு, ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை முழுமூச்சுடன் எதிர்த்தார். ஆர்எஸ்எஸ் எப்போதும் வெறுத்த ஒரு காங்கிரஸ்காரன் யார் என்றால், அது ஜவஹர்லால் நேருதான். நாடு பிளவுண்டபோது,  இந்தியாவை ஓர் இந்து நாடாக நிறுவிட வேண்டும் என்றுதான் ஆர்எஸ்எஸ் விரும்பியது. இதனை காந்தி, நேரு, பட்டேல் ஆகியோர் எதிர்த்தார்கள். நாடு சுதந்திரம் பெற்றபின்பு நாட்டை மதச்சார்பற்ற நாடாக மிளிரச் செய்வதில் நேரு பெரும் பங்கு வகித்தார். மக்கள் மத்தியில் விடாது தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு, அவர்களைப் பக்குவப்படுத்தியதன் மூலமும் மதச்சார்பற்ற அடிப்படையிலான நிறுவனங்களை உருவாக்கியதன் மூலமும் அவர் இதனை வெற்றிகரமாக செய்து வந்தார். இந்திய மக்களிடையே காணப்பட்ட பல்வேறு வேற்றுமைக் கலாச்சாரங்களையும் மதித்து, அவர்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றார். 1979 வரையில் அன்றைய ஜனசங்க தலைவர்கள் நேருவின் இத்தகைய கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள்தான். ஆனால், ஒருசில ஆண்டுகளுக்குப் பின்னர், தங்களின் பழைய நிலைக்கே திரும்பினர்.
குஜராத் மாடல்
ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் அரசியல் அங்கமான பாஜகவும் தற்போதைய மதச்சார்பற்ற அரசைத் தகர்த்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் பாசிஸ்ட் ‘தலைவர்’ கொள்கை அடிப்படையில் ஒரு வெறிபிடித்த இந்துத்துவா அரசை நிறுவிட விரும்புகின்றன.    மக்கள் மத்தியில் நிலவுகின்ற மத சகிப்புத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தாங்கள் விரும்பும் இந்து சமூகத்தை நிலைநிறுத்திட முடியும் என்று அது நினைக்கிறது. இதைத்தான் குஜராத்தில் 2002 முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பும், பின்பும் செய்தார்கள். இத்தகைய ‘குஜராத் மாடலை’ ஆர்எஸ்எஸ்-உம் அதன் பிரச்சாரகரான மோடியும் மத்தியிலும் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இத்தகைய இவர்களின் வெறித்தனத்தால் இந்தியாவின் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா மீது உலக மக்கள் இதுநாள்வரை காட்டிவந்த அன்பும் ஆதரவும் மற்றும் பாசமும் நேசமும் கூட இல்லாது அழிந்துவிடும்.
ஆர்எஸ்எஸ், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு மட்டுமே அச்சுறுத்தலான மற்றும் ஆபத்தான ஒன்று என்று சொல்ல முடியாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களுக்குமே அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான ஒன்றாகும்.
ஆர்எஸ்எஸ்-இன் இரண்டாவது பணி, நாட்டு மக்கள் மத்தியில் இந்துத்துவா வெறியை ஏற்க வைப்பதற்காக அவர்களை மூளைச் சலவை செய்த பின்னர், அவர்களிடம் தற்போதுள்ள காந்தி – நேரு அரசை அடித்து நொறுக்குவதுமாகும். 1989 தேர்தல்கள் நடந்துமுடிந்தவுடனேயே, ஜஸ்வந்த் சிங் மதச்சார்பற்ற சிற்பிகளின் சிலைகளை உடைத்தெறிவதற்கான பிரச்சாரத்தில் இறங்கினார். இத்தகைய இழிவான பிரச்சாரத்தில் மோடியும் இறங்கியிருந்தார்.
இறுதியாக, ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களையும், கிறித்தவர்களையும் சிறுபான்மையினருக்கான அந்தஸ்து எதையும் பெறுவதிலிருந்து முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும், அரசியல்ரீதியாக எவ்விதமான மதிப்பற்றவர்களாகவும் இல்லாது செய்துவிட வேண்டும் என்றும் விரும்புகிறது. இந்து வாக்கு வங்கியை திரட்டிடுக, முஸ்லீம் வாக்குவங்கிக்காக முகத்துதி செய்வோரைக் கண்டித்திடுக என்று முழக்கங்கள் எழுப்பி, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும், அதில் உள்ள இந்துக்கள் அனைவரையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோளாகும்.
2010 மார்ச் 10 அன்று சுதர்சன் ஆர்எஸ்எஸ் தலைவரானார். அப்போது அவர், பிரதமர் சுதேசிப் பொருள்களில் நம்பிக்கையுள்ள பொருளாதார ஆலோசகர்களைக் கொண்டுவர வேண்டும், என்று அறிவுறுத்தினார். மேலும், தற்போதைய அரசமைப்புச்சட்டத்தை, இந்தியாவின் சமுதாயப் பண்புகள் மற்றும் மக்களின் அபிலாசைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும், என்றும் கூறினார்.
சுதர்சனம் பொறுப்பேற்றுக்கொண்ட அன்றைய தினமே நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் கூட்டத்தில் அவர் உரைநிகழ்த்துகையில், இங்கேயுள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் அந்நியர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் முன்னாள் இந்துக்கள்தான். அவர்கள் இந்தியர்கள்தான். ஆனால் அவர்களுடைய மத நம்பிக்கைகள் இந்தியமயமாக்கப்பட வேண்டியிருக்கிறது,என்றார்.
அவர் காந்தியையும் அதேபோன்று நேருவையும் கடுமையாகச் சாடினார். காந்தி, மதமோதல்களுக்கு உகந்ததான சூழலை உருவாக்குவதற்காக இந்து சமூகத்தினரைக் குறை கூறினார், என்று கூறிய பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்க வரலாற்றின் மூன்றாவது கட்டம் நம் ஸ்தாபனத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நேரு மேற்கொண்ட முயற்சிகளைக் கொண்டதாகும், என்றார்.
பின்னர் அவர் மார்ச் 19ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நடவடிக்கையானது, இந்துக்கள் அனைவரையும் உலகம் முழுதும் பெருமிதத்துடன் பார்க்க வைத்திருக்கிறது, என்றும் கூறினார்.  
(நன்றி: தி இந்து மற்றும் லெப்ட்வேர்ட்)
தமிழில்: ச. வீரமணி

Friday, May 3, 2019

தேர்தல் ஆணையத்தின் நிகரற்ற நேர்மைத்தன்மையைப் பாதுகாத்திடுக



(பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்)
தேர்தல் ஆணையம் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையில் ஒரு கேந்திரமான பங்களிப்பினைச் செய்துவருகிறது. தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச்சட்டத்தால், நாட்டில் தேர்தல்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். அரசமைப்புச்சட்டத்தின் 324(1)ஆவது பிரிவு, ஆணையத்திற்கு, நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவதையும், தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேவையான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதையும், மேற்பார்வையிட, நடத்திட மற்றும் கட்டுப்படுத்திடத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் அளிக்கிறது.
தேர்தல் ஆணையமும் கடந்த எழுபதாண்டு காலமாக, அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தியபடி தன் பொறுப்புகளைச் செம்மையாக மேற்கொண்டு, நாட்டில் தேர்தல்களைச் சிறப்பாக நடத்தி,  தன்னுடைய அமைப்பின் நம்பகத்தன்மையை அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்குத் தேர்தல்கள் நடத்திடும் இம்மாபெரும் பணியை, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முறையாகவும், திறமையுடனும் இதுவரையிலும் நடத்தி வந்திருக்கிறது.
தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தியது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இதுவரையிலும் அநேகமாக அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் நம்பகத்தன்மையுடன் கூடிய பதிவையே பெற்று வந்திருக்கிறது. பல சமயங்களில் சிறுசிறு குறைகள் காணப்பட்டன என்ற போதிலும், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. இவ்வாறு குறைகள் ஏற்பட்டதற்கு முழுமையாகத் தேர்தல் ஆணையத்தையும் குறை கூறிட முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திட பக்குவமற்ற அதிகார வர்க்கத்தினரைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பல சமயங்களில் தேர்தல் ஆணையம் அந்த சமயத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மற்றும் ஆளும் கட்சியின் நிர்ப்பந்தங்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கிறது. ஆயினும் கூட, ஒருசில விதிவிலக்குகளை ஒதுக்கிவிட்டோமானால், ஒட்டுமொத்தத்தில் தேர்தல் ஆணையம் அரசமைப்புச்சட்டம் தனக்கு வகுத்துத்தந்துள்ள விதிமுறைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உட்பட்டே செயல்பட்டு வந்திருக்கிறது.
எனவேதான் அப்படி இருந்த தேர்தல் ஆணையம், இப்போது 17ஆவது மக்களவைக்கான தேர்தலை நடத்தும் சமயத்தில், பல்வேறு கேள்விகளை எழுப்பக்கூடிய விதத்தில் நடந்துகொண்டு வருகிறதே என்பதைக் காணும்போது மிகவும் ஆழ்ந்த கவலையை உருவாக்கி இருக்கிறது.
தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தத்தொடங்கிய பின்னர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாது பார்த்துக் கொள்வதில் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சியினரையும் சமமாகப் பாவிக்கும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பண பலம் தேர்தலை கேலிக்கூத்தாக்காத வண்ணம் பணவிநியோகத்தைக் கட்டுப்படுத்தித் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட பணிகளில் சிலவற்றை அமல்படுத்துவதில் இப்போது சுனில் அரோரா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தேர்தல் ஆணையம் போதுமான அளவிற்கு செயல்படவில்லை என்பது தெரிகிறது. அதன்மீது வந்துள்ள புகார்களில் மிகவும் முக்கியமானது, அது தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதாகும். அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை அது முழுமையாகக் கண்டுகொள்ளவில்லை.  பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வண்ணம் தேர்தல் பிரச்சாரங்களை திரும்பத் திரும்பச் செய்து வருகிறார். அவர், தன்னுடைய தேர்தல் பிரச்சார உரை ஒன்றில், காங்கிரஸ் கட்சி, இந்துக்களை அவமதித்துக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, இதற்காக மக்கள் இந்தத் தேர்தலில் அதனைத் தண்டித்திடுவார்கள் என்று அறிவித்திருக்கிறார்.  அவர் பாலக்கோட்டில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலின் அடிப்படையிலும், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவத்தினர் பெயரிலும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்குத் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார். இவ்வாறு ஆயுதப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தையும் தமதாக்கிக் கொண்டு அவர் பேசுவது என்பது, அவருக்கு வாடிக்கையாகவே  போய்விட்டது.
இவை தொடர்பாக எண்ணற்ற புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள போதிலும், இவற்றின்மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
உச்சநீதிமன்றம், ஏப்ரல் 15 அன்று, வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்பை உமிழும்  பேச்சுக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டபின்னர், தேர்தல் ஆணையம் ஆதித்யநாத், மாயாவதி, அசம் கான் மற்றும் மேனகா காந்தி ஆகியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை இரண்டு, மூன்று நாட்களுக்குத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குஜராத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய அதே கூட்டத்தில் பேசிய மற்றொரு பாஜக தலைவர் வாகானி என்பவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து அவரும் மூன்று நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது. எப்போது தெரியுமா? குஜராத்தில் வாக்குப் பதிவுகள் நடைபெற்ற நாளான ஏப்ரல் 23ஆம் தேதி இவ்வாறு ஆணை பிறப்பித்தது.
இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடுத்த பின்னர்தான், தேர்தல் ஆணையம் முதன்முறையாக ஏப்ரல் 30 அன்று ஓர் அமர்வினை நடத்தி, பிரதமர் மோடி வார்தாவில் பேசிய தேர்தல் பிரச்சார உரை மீது ஓர் ஆணை பிறப்பித்திருக்கிறது. அதாவது, வார்தாவில் பேசிய பிரதமரின் உரையில் தேர்தல் நடத்தை விதி மீறல், அல்லது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிராக, எதுவுமில்லை என்று அதில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயுதப்படையினரின் பங்களிப்பினைப் பயன்படுத்தக் கூடாது என மிகத் தெளிவாகத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த போதிலும் அதனை முழுமையாக மீறி பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்திட தேர்தல் ஆணையம் உறுதியாக மறுத்துவருகிறது. ஏப்ரல் 1 அன்று லட்டூர் என்னுமிடத்தில் அவர் ஆயுதப்படையினரின் வீரதீரச் செயல்களைத் தமதாக மாற்றிப் பேசிய சமயத்தில் நாட்டில் நான்கு கட்டங்களில் வாக்குப் பதிவுகள் முடிந்துவிட்டன. தேர்தல் நடத்தை விதி மீறல்களை மோடி மீறிவந்தபோதிலும் தேர்தல் ஆணையம் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் தேர்தல் ஆணையம் அவருக்குத் தேர்தல் நடத்தை விதிகளைத் தொடர்ந்து மீறுவதற்கு உதவி செய்து வருகிறது. கடைசியாக மே 1 அன்று,  மோடிக்கு எதிராகத் தன்னிடம் வந்த புகார் ஒன்றின்மீது, மோடி தன்னுடைய கட்சிக்கோ அல்லது தனக்கோ நேரடியாக வாக்களியுங்கள் என்று கேட்காததன் காரணமாக, அவர் தேர்தல் நடத்தை விதி எதையும் மீறவில்லை எனத் தீர்வளித்துள்ளது. இவ்வாறு அவர் சுத்தமானவர் என்று தேர்தல் ஆணையம் சான்றளித்திருப்பதானது, மோடி இவ்வாறு ஆயுதப்படையினரின் வீரதீரச் செயல்களைப் பயன்படுத்தி வருவதை மிகவும் வெட்கமின்றி புகழ்ந்துகொண்டிருக்கும்  அமித் ஷா போன்றோரை மேலும் ஊக்கம்கொள்ளச் செய்திடும்.
மேலும் தேர்தல் ஆணையமானது, மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக விளங்கும் பாஜக மேற்கொண்டுவரும் குற்றச் செயல்களுக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கை எடுத்திடத் தயக்கம் காட்டுவதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. திரிபுராவில், ஏப்ரல் 11 அன்று திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின்போது மிகப்பெரிய அளவிற்கு மோசடிகள் நடந்துள்ளன. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, சிசிடிவி கேமராக்களைச் செயல் இழக்கச் செய்வது மற்றும் எதிர்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களையும், எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களையும் விரட்டியடிப்பது போன்ற குற்றச் செயல்கள் நடந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 846 வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று போதுமான அளவிற்கு ஆதாரங்களை அளித்து, அங்கே மீளவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தது. எனினும் தேர்தல் நடந்து மூன்று வாரங்கள் கழிந்தபின்னரும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையம் அமைத்திட்ட விசாரணைக் குழுக்கள் அனைத்தும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளபோதிலும், தேர்தல் ஆணையம் வெறும் 131 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மீண்டும் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்திருப்பதாக இப்போது செய்தி வெளியாகி இருக்கிறது. திரிபுராவில் ஆளும் கட்சியாக இருந்திடும் பாஜகவை அதிருப்திப்படுத்திட தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
ஆனால் அதே சமயத்தில் இதற்கு முற்றிலும் நேர்விரோதமான முறையில்,  தமிழ்நாட்டில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டில் மிகப்பெரிய அளவில் பணம் இருந்ததாகக் கூறி, அத்தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் எதிர்க்கட்சியான திமுக-வைச் சேர்ந்தவர் என்பதே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த வித்தியாசத்திற்குக் காரணமாகும்.
தேர்தல் ஆணையம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக மோதுவதைத் தவிர்த்து வருவதானது,  அதன் மீதிருந்த நம்பகத்தன்மையைத் தகர்த்துவிட்டது.   கடந்த ஐந்தாண்டுகளில், மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிவந்த ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் தாக்குதல் தொடுத்து, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வீழ்த்தி வந்ததை நாம் பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம். அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கும் எந்தவொரு நிறுவனமும் விட்டுவைக்கப்படவில்லை. இதில், இதுவரையிலும் மிகவும் நேர்மையுடனும் பெருமைப்படும் விதத்திலும் இயங்கிவந்த தேர்தல் ஆணையமும் இப்போது, சேர்ந்துகொண்டு, தன் கவுரவத்தை  இழந்து நிற்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நேர்மையையும், வல்லமையையும் தொடர்ந்து உத்தரவாதப்படுத்திட வேண்டுமானால், ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் செல்வாக்கிலிருந்து அது விடுபட வேண்டுமானால்,  அதன் அமைப்புமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதை, தேர்தல் ஆணையத்தின் தற்போதைய பரிதாபகரமான நிலைமை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.  அந்த விதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், தேர்தல் ஆணையர்கள் முழுமையாக ஆட்சியாளர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்படும் முறை மாற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. அதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரடங்கிய குழுவின் அறிவுரையின் அடிப்படையில் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட வேண்டும். மேலும், தேர்தல் ஆணையர்கள் தங்கள் பணிக்காலம் முடிந்து ஓய்வுபெற்ற பின்னர், அரசாங்கத்தின் கீழோ, அல்லது, ஆளுநராகவோ, அல்லது, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராகவோ வருவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களின் கருணையின் கீழ் இயங்கக்கூடிய  நிறுவனமாக விட்டுவிட முடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும்.
(மே 1, 2019)
தமிழில்: ச. வீரமணி


Thursday, May 2, 2019

மதவெறி விஷத்தைக் கக்கும் மோடியின் தேர்தல் பிரச்சாரம்



சீத்தாராம் யெச்சூரி
சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம் என்று உலகம் முழுதும் உள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் போராட்டங்களின்மூலம் ஒருவர்க்கொருவர் ஒருமைப்பாட்டை இம் மே தினத்தன்று தெரிவித்துக்கொண்டுள்ள அதே சமயத்தில், அத்தகைய மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்திடும் விதத்தில் பாஜகவும் நரேந்திர மோடியும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் மதவெறி விஷத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளில் முதல் மூன்று கட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. இவற்றில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 302 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளதைப் பார்த்தோம். இந்தத் தொகுதிகளில் பாஜக தற்போது 113 இடங்களைப் பெற்றிருக்கிறது.
அடுத்து நான்கு கட்ட வாக்குப் பதிவுகளில் மீதம் உள்ள 241 இடங்களுக்குத் தேர்தல் நடந்து, வரும் மே 19உடன் நிறைவடைகின்றன. இவற்றில் பாஜக, தற்போது 161 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, மூன்றில் இரண்டு பங்கு இடங்கள். இந்த இடங்களைப் பாஜக-வினால் தக்கவைத்துக் கொள்ள முடியாது போகுமாயின், அதனால் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அவா அதற்கு நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் நடைபெற்றுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவுகளிலும், அதற்குத் தற்போது இருக்கும் இடங்களில் 50 சதவீதத்தைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனைப் பாஜகவும் மிகவும் துல்லியமாக உணர்ந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, அடுத்த நான்கு கட்ட வாக்குப் பதிவுகளின்போதும், மக்கள் மத்தியில் மதவெறி விஷத்தைக் கக்கியாவது, மக்களின் வாக்குகளைப் பறித்திட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் எதையுமே நிறைவேற்றாது மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதும், அதன் மிகவும் பயங்கரமான மற்றும் மிகவும் பரிதாபகரமான ஆட்சி பரிபாலனமும், இந்தியப் பொருளாதாரத்தையே முழுமையாக நாசப்படுத்தியுள்ளமையும், ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமும், ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றி வைத்திருப்பதும், மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான அளவிற்கு சகிப்பின்மையை உருவாக்கியிருப்பதும் இந்த மோடி  அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே கணிசமான அளவிற்கு எதிர்ப்பு உணர்வைக் கட்டி எழுப்பியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் ஒரு பக்கத்தில் நம் ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களைக் கூறி மக்களின் வாக்குகளைக் கோருவதுடன் தங்களால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திட முடியும் என்று காட்டிக் கொண்டு வருகின்றன. (இது குறித்து ஏற்கனவே நாம் ஒரு கட்டுரை எழுதியுள்ளோம்.)
மற்றொரு பக்கத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறிவிட்டு அதன்மூலம் வாக்குகளைக் கவர்ந்திட முயல்கின்றன. இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும்கூட இவர்கள், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இவற்றில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 370 மற்றம் 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்தல் மற்றும் நாடு முழுதும் ஒரேமாதிரியான உரிமையியல் (சிவில்) சட்டம் கொண்டுவருதல் முதலானவையும் அடங்கும். மேலும் கூடுதலாக, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில்,  முஸ்லீம்களுக்குக் குடியுரிமையை மறுக்கும் விதத்தில் மத அடிப்படையில் மிகவும்  மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவையும் சட்டமாக நிறைவேற்றிவிடுவோம் என்றும் உறுதிமொழி அளித்திருக்கின்றனர்.
வெறிபிடித்த வெறுப்புப் பிரச்சாரம் மூலம் மக்களிடையே துவேஷத்தை உருவாக்கும் முயற்சி
இவ்வாறான இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கிணங்க, தற்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் இந்து வகுப்புவாத வாக்குவங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்கிற மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். இவ்வாறு நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும்  மிகவும் கேடுகெட்ட முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், தேர்தல் ஆணையமோ நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இதுவரையிலும் முன்வரவில்லை. இது இந்திய ஜனநாயக நலனுக்கான தீய அறிகுறியாகும்.
இந்துத்துவா வகுப்புவாத வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான், பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது நோயாளியாக இருப்பதாகக் கூறி பிணையில் வந்துள்ள பிரக்யா சிங் தாகூர் என்கிற சாமியாரினி மத்தியப் பிரதேசம், போபால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சங்கதியாகும். இவ்வாறு இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டியுள்ள நரேந்திர மோடி, அவரை, நம் நாகரிகப் பாரம்பர்யத்தின் அடையாளம் என்று புகழ்ந்திருக்கிறார்.
மோடியின் புகழுரையால் புளகாங்கிதம் அடைந்துள்ள சாமியாரினி பிரக்யா சிங் தாகூர், தன் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசியல் மேடையையும் பயன்படுத்தத் துவங்கி விட்டார். ‘மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புக்குழு’வின் தலைவராக இருந்த நேர்மையான மற்றும் துணிவு மிக்க ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்காரே அவர்களையே – அவர்தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரையே - மிகமோசமாகத் திட்டிக் கண்டிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டார். ஹேமந்த் கர்காரேதான் மாலேகான் வெடிகுண்டு விபத்து தொடர்பான வழக்கைப் புலனாய்வு செய்து, இவற்றினைச் செய்தது பிரக்யா சிங் தாகூர் தலைமையிலான இந்துத்துவா வெறியர்கள் என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து அவர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தவர்.  பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நபர், என்ன தைர்யம் இருந்தால் ‘ஓர் இந்து தேசத்தில்,’ ‘இந்து மதத் தலைவரான’ என்மீது ஹேமந்த் கர்காரே வழக்கு தொடர்வார்! நான் இட்ட ‘சாபம்’தான் அவர் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தரம் தாழ்ந்த பேர்வழியாவார். 26/11 மும்பை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கு கர்காரே பிரதான குறியாக இருந்தவர் என்பதும், அவர்களால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இத்தகைய மதவெறியர்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களாக அமைந்துள்ளன.    
முன்னாள் மத்திய அரசு ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், குடியரசுத் தலைவருக்கு இவர் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதில், இவர் பாஜக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும்,  அதிலும் குறிப்பாக, அவரைத் தேர்வு செய்திருப்பதை மிகவும் உற்சாகத்துடன்  நாட்டின் பிரதமரே வரவேற்றிருப்பதற்கும் தங்கள் அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மேலும் சக குடிமக்களுக்கு, நாட்டின் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் பிரிவினை சூழ்நிலை உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதை நிராகரித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள், நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, நமக்கு நாமேதான் நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றும் அதனை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான தங்கள் கடிதத்திற்கு இவர்கள் அளித்துள்ள தலைப்பு, ‘நம் பாரம்பர்யம், பயங்கரவாதத்தால் உருவானது அல்ல,’ என்று குறிப்பிட்டிருப்பதுடன் மோடி மீது அவரது செயவ்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி, மேலும் வியப்பூட்டும் விதத்தில் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். என்ன தெரியுமா? இந்துக்கள் என்பவர்கள் எந்தக்காலத்திலுமே வன்முறையாளர்களாக இருந்ததில்லையாம்! தான் பிரதமர் பதவியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, மோடி இந்தியாவின் வரலாறு என்பது மிகக் கொடூரமான யுத்தங்களும் போர்க் களங்களும் நிறைந்தவை என்பதை அழிக்கப் பார்க்கிறார்.  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான மோடி, போதனை செய்து வந்த ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரு புராணங்களுமே அல்லது இதிகாசங்களுமே வன்முறையுடன் நிகழ்ந்த யுத்தங்களும் மோதல்களும் நிறைந்தவை என்பதை எப்படி மறந்தார் என்பதே ஆச்சர்யமாகும். நம்முடைய வரலாற்றிற்கு தற்போது ஆதாரமாக இருப்பதே இந்த இரு இதிகாசங்களும் மட்டும்தான். இந்திய வரலாற்றில் ‘மௌரியப்’ பேரரசின் முதல் மாமன்னராகத் திகழ்ந்த அசோகர், கலிங்கப் போரின்போது ஏற்பட்ட ரத்தக் களரியைக் கண்டு மனம் வெதும்பி, பின்னர் புத்தமதத்தைத் தழுவியதை நினைவு கூர்க.   இந்துயிசத்தைத் துறந்து, புத்திசத்தைத் தழுவிய பின்னர்தான் அசோகர், சகிப்புத்தன்மை, பிறரிடம் பரிவு காட்டுதல் மற்றும் பரஸ்பரம் மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றின் மூலமாக  வாழ்க்கையின் உன்னத லட்சியத்தைக் கண்டார்.   தன்னுடைய இந்தச் செய்தியை ஸ்தூபிகளில் செதுக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் மூலமாக உலகம் முழுதும் கொண்டு சென்றார். அந்த ஸ்தூபிகளில் உள்ள வெட்டெழுத்துக்களில், நான், மக்களை படைகளைக்கொண்டு கட்டாயப்படுத்தி வெல்வதைவிட, அவர்களிடையே அன்பு செலுத்துவதன் மூலமாக (தர்மத்தின் மூலமாக) அவர்களை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்,என்று செதுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், அசோகரின் அடையாளமாக விளங்கும் சக்கரம் இன்றையதினம் நம் மூவர்ணத் தேசியக் கொடியில்வ பெருமைமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது. அசோகரின் ஸ்தூபிகளில் உள்ள நான்கு சிங்கங்கள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ அடையாளமாகும். அவருடைய ஒரு ஸ்தூபியில் உள்ள பொன்மொழிகளில் ஒன்று, ஒருவன் தன் இனத்தின் மீதான அர்ப்பணிப்பின் காரணமாக, அதனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனை மதிப்பதும், அதே சமயத்தில் இதர இனங்களைக் கண்டிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவானேயானால் அவன் தன் சொந்த இனத்திற்கே மிக அதிகமான அளவில் ஊறு விளைவிக்கிறான்,என்று கூறுகிறது.
ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பலின் இன்றைய நடவடிக்கைகள் அனைத்தும் அசோகர் ஸ்தூபிகளில் பொறித்து வைத்துள்ள பொன்மொழிகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாக இருந்து வருகின்றன.
அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்” - “HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”
இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என இப்போது மோடி அடக்கி வாசித்தாலும், இந்துக்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதென்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. வினாயக் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துத்துவா என்னும் சொல்லை உருவாக்கியவர். ஒரு தத்துவார்த்த அரசியல் கொள்கைத்திட்டத்திற்கான குணத்தையும் அதற்கு அவர் அளித்திட்டார். இவ்வாறு இவர் அளித்திட்ட இந்துத்துவா கொள்கைக்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.  இதனை எய்துவதற்கு இவர் முன்வைத்த முழக்கம்தான், அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்(“HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”) என்பதாகும்.   இதனால் உத்வேகம் பெற்றவரும், ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனர் கே.பி. ஹெக்டேவார் அவர்களின் மூளையாகச் செயல்பட்டவருமான பி.எஸ். மூஞ்சே என்பவர், பாசிஸ்ட் சர்வாதிகாரி பெனிடோ முசோலினியை சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணம் செய்தார். இவர்களிடையே சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. மூஞ்சே தன்னுடைய சொந்த நாட்குறிப்பில்  இதனை 1931 மார்ச் 20 என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் எழுதியுள்ள தன்னுடைய நாட்குறிப்பில் இத்தாலியப் பாசிசம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், தன்னை மிகவும் ஈர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா திரும்பிய பின்னர், மூஞ்சே, 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்வி சங்கம் (Central Hindu Military Education Society) என்ற ஒன்றை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும்.  இவை  அனைத்தும் பயங்கரவாதம் தொடர்பான ரேடாரின் மூலம் புலனாய்வு செய்யப்பட்டவைகளாகும். ஆர்எஸ்எஸ்-இன் குருவாகத் திகழும் கோல்வால்கர், 1939இல் நாசி பாசிசத்தின்கீழ்  ஹிட்லர் யூதர்களைக் களையெடுத்த நடவடிக்கைகளைக் கண்டு களிபேருவகை கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் சிஷ்யர்களுக்கு, இந்துஸ்தானில் உள்ள நாம் கற்றுக் கொள்ளவும், ஆதாயம் அடையவும் இவை நமக்கு நல்ல பாடங்களாக  அமைந்திடும், என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் வெகு ஆண்டுகள் கழித்து, அவர் 1970இல், பொதுவாகக் கூறுவதென்றால்6, தீய சக்திகள் (இங்கே இந்துக்கள் அல்லாதவர்கள் என்று திருத்தி வாசிக்கவும்) நல்ல விதமாக, இனிய மொழியில் கூறினால் புரிந்துகொள்ள மாட்டார்கள்.  அவர்களை வன்முறை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும், என்று மேலும் கூறியிருக்கிறார்.
இந்துத்துவா மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள்
2000, ஜனவரி 22இல் தேதியிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியிருந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில், மர்சியா கசோலரி (Marzia Casolari),  இந்துத்துவா குழுக்களின் மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள் இருப்பதை சான்றாவணங்களின் மூலமாக நிறுவியிருக்கிறார்- இந்துத்துவாவின் தத்துவார்த்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் இத்தாலியப் பாசிசமும், ஜெர்மன் நாசிசமும் வடிவமைத்திருக்கின்றன என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அவர், 1920இன் தொடக்கத்தில் துவங்கி, இரண்டாம் உலகப் போர் வரையிலும், இந்து தேசியவாதிகள், பாசிஸ்ட் இத்தாலியின் அரசியல் எதார்த்த நிலைமைமையும் அதன் பின்னர் நாசி ஜெர்மனியையும் தங்களுக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக விளங்குவதைப் பார்த்தார்கள், என்றும் கூறுகிறார். இந்துத்துவா சித்தாந்தத்தில் பாசிஸ்ட் செல்வாக்கு எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்றால், அது, நாட்டில் வாழ்கின்ற இதர இனத்தினரையும், மதத்தினரையும் தங்கள் எதிரிகளாக மாற்றக்கூடிய அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ‘உள்ளார்ந்த எதிரி’ என்கிற சொற்றொடர் ஏன்கனவே சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்திலும் ஒளிந்திருக்கிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், அதனைத் தொடர்ந்து ஜெர்மன் இனவெறிக் கொள்கையும், ஜெர்மனியின் யூதர்கள் பிரச்சனையை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, பாசிஸ்ட் தத்துவார்த்தத்தின் அடிப்படையில் மிகவும் துல்லியமானமுறையில். அந்நாட்டின் பாசிசத்தைத் இந்தியாவிற்கேற்ப மாற்றி, ‘உள்ளார்ந்த எதிரி’ கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்க கொண்டு சென்றுள்ளன.
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தத்துவார்த்தப் பின்புலம் என்பது முசோலியின் பாசிசம் மற்றும் ஹிட்லரின் நாசிசம் ஆகியவற்றுடன் மிகவும் ஆழமானமுறையில் பின்னிப்பிணைந்தது என்று உரிய சான்றாவணங்கள் மூலமாக, இவ்வாறு மிகவும் ஆணித்தரமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவைக் கட்டி எழுப்பிட இவ்வாறு இந்துத்துவா தத்துவார்த்த அடிப்படை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அத்தகைய இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மூஞ்சே சொல்வது என்ன தெரியுமா?
அந்தக் காலத்து சிவாஜி போன்ற சர்வாதிகாரி அல்லது இந்தக்காலத்து முசோலினி அல்லது ஹிட்லர் போன்று சர்வாதிகாரிகள் இல்லாமல் இத்தகைய தத்துவார்த்த அடிப்படையில் நாம் நம் சொந்த இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட முடியாது.  … ஆனால் இவ்வாறு கூறுவதால் அத்தகைய சர்வாதிகாரிகள் உருவாகும்வரை நாம் நம் கைகளைக் கட்டிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் அதற்கானதொரு திட்டத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தாலியில் ‘பாசிஸ்ட்டுகள்’ என்ன செய்தார்களோ, ஜெர்மனியில் ‘நாஜிக்கள்’ என்ன செய்தார்களோ அவற்றை எதிர்கால இந்தியாவில் சங்கிகள் செய்வார்கள் என்று நம்புவதாக. மூஞ்சே கூறியிருப்பது என்பது மிகையான ஒன்று அல்ல.
மூஞ்சே, 1934இல் போன்ஸ்லா ராணுவப் பள்ளி என்னும் தன்னுடைய சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கான வேலையைத் துவக்கினார். இதற்காக, அதே ஆண்டில், மத்திய இந்து ராணுவக் கல்விச் சங்கத்தையும் அமைத்தார்.  அதன் நோக்கம், இந்துக்கள் மத்தியில் ராணுவரீதியிலான புத்துயிராக்கத்தைக் கொண்டுவர வேண்டும் மற்றும் இந்து இளைஞர்களை இந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையில் வலுவானவர்களாக உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
அப்போது இந்து மகா சபையில் தலைவராக இருந்த சாவர்க்கரும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையையே இந்துத்துவாவின் கொள்கைக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டிருப்பதையும் கட்டுரையாளர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். சாவர்க்கர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர் இந்தியாவில் முஸ்லீம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை 1938 அக்டோபர் 14 அன்ற அவர் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு தேசம், அங்கே பெரும்பாலானவர்களாக வாழ்பவர்களால் அமைக்கப்படுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் ஜெர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே அங்கே வாழ்ந்த யூதர்களுக்கு ஒரு வகுப்புவாத இயக்கமாகும்.  
பின்னர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: தேசிய இனம் என்பது பெரும்பகுதியான பூகோளப் பகுதியை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனை, மதம், மொழி மற்றும் கலாச்சாரத்திலும் ஒற்றுமை இருந்திட வேண்டும். இதன் காரணமாகத்தான் ஜெர்மானியர்களும், யூதர்களும் ஒரே இடத்தில் வசித்த போதிலும் ஒரே நாட்டினராக – ஒரே தேசிய இனத்தினராக -   கருத முடியவில்லை.
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்
நரேந்திர மோடியும் அவர் தற்போது அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளும் எங்கிருந்து உத்வேகம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இவற்றைவிட வேறென்ன ஆதாரங்கள் தேவை? தேர்தல் ஆதாயத்திற்காக ‘இந்துக்களின்’ பெயரால் இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தும் மாக்கியவெல்லியின் சூழ்ச்சியாகும். பாரதம் என்கிற இந்தியாவைப் பாதுகாத்திட இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி