Thursday, May 2, 2019

மதவெறி விஷத்தைக் கக்கும் மோடியின் தேர்தல் பிரச்சாரம்



சீத்தாராம் யெச்சூரி
சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம் என்று உலகம் முழுதும் உள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் போராட்டங்களின்மூலம் ஒருவர்க்கொருவர் ஒருமைப்பாட்டை இம் மே தினத்தன்று தெரிவித்துக்கொண்டுள்ள அதே சமயத்தில், அத்தகைய மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்திடும் விதத்தில் பாஜகவும் நரேந்திர மோடியும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் மதவெறி விஷத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளில் முதல் மூன்று கட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. இவற்றில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 302 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளதைப் பார்த்தோம். இந்தத் தொகுதிகளில் பாஜக தற்போது 113 இடங்களைப் பெற்றிருக்கிறது.
அடுத்து நான்கு கட்ட வாக்குப் பதிவுகளில் மீதம் உள்ள 241 இடங்களுக்குத் தேர்தல் நடந்து, வரும் மே 19உடன் நிறைவடைகின்றன. இவற்றில் பாஜக, தற்போது 161 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, மூன்றில் இரண்டு பங்கு இடங்கள். இந்த இடங்களைப் பாஜக-வினால் தக்கவைத்துக் கொள்ள முடியாது போகுமாயின், அதனால் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அவா அதற்கு நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் நடைபெற்றுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவுகளிலும், அதற்குத் தற்போது இருக்கும் இடங்களில் 50 சதவீதத்தைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனைப் பாஜகவும் மிகவும் துல்லியமாக உணர்ந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, அடுத்த நான்கு கட்ட வாக்குப் பதிவுகளின்போதும், மக்கள் மத்தியில் மதவெறி விஷத்தைக் கக்கியாவது, மக்களின் வாக்குகளைப் பறித்திட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் எதையுமே நிறைவேற்றாது மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதும், அதன் மிகவும் பயங்கரமான மற்றும் மிகவும் பரிதாபகரமான ஆட்சி பரிபாலனமும், இந்தியப் பொருளாதாரத்தையே முழுமையாக நாசப்படுத்தியுள்ளமையும், ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமும், ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றி வைத்திருப்பதும், மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான அளவிற்கு சகிப்பின்மையை உருவாக்கியிருப்பதும் இந்த மோடி  அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே கணிசமான அளவிற்கு எதிர்ப்பு உணர்வைக் கட்டி எழுப்பியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் ஒரு பக்கத்தில் நம் ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களைக் கூறி மக்களின் வாக்குகளைக் கோருவதுடன் தங்களால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திட முடியும் என்று காட்டிக் கொண்டு வருகின்றன. (இது குறித்து ஏற்கனவே நாம் ஒரு கட்டுரை எழுதியுள்ளோம்.)
மற்றொரு பக்கத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறிவிட்டு அதன்மூலம் வாக்குகளைக் கவர்ந்திட முயல்கின்றன. இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும்கூட இவர்கள், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இவற்றில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 370 மற்றம் 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்தல் மற்றும் நாடு முழுதும் ஒரேமாதிரியான உரிமையியல் (சிவில்) சட்டம் கொண்டுவருதல் முதலானவையும் அடங்கும். மேலும் கூடுதலாக, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில்,  முஸ்லீம்களுக்குக் குடியுரிமையை மறுக்கும் விதத்தில் மத அடிப்படையில் மிகவும்  மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவையும் சட்டமாக நிறைவேற்றிவிடுவோம் என்றும் உறுதிமொழி அளித்திருக்கின்றனர்.
வெறிபிடித்த வெறுப்புப் பிரச்சாரம் மூலம் மக்களிடையே துவேஷத்தை உருவாக்கும் முயற்சி
இவ்வாறான இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கிணங்க, தற்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் இந்து வகுப்புவாத வாக்குவங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்கிற மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். இவ்வாறு நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும்  மிகவும் கேடுகெட்ட முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், தேர்தல் ஆணையமோ நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இதுவரையிலும் முன்வரவில்லை. இது இந்திய ஜனநாயக நலனுக்கான தீய அறிகுறியாகும்.
இந்துத்துவா வகுப்புவாத வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான், பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது நோயாளியாக இருப்பதாகக் கூறி பிணையில் வந்துள்ள பிரக்யா சிங் தாகூர் என்கிற சாமியாரினி மத்தியப் பிரதேசம், போபால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சங்கதியாகும். இவ்வாறு இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டியுள்ள நரேந்திர மோடி, அவரை, நம் நாகரிகப் பாரம்பர்யத்தின் அடையாளம் என்று புகழ்ந்திருக்கிறார்.
மோடியின் புகழுரையால் புளகாங்கிதம் அடைந்துள்ள சாமியாரினி பிரக்யா சிங் தாகூர், தன் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசியல் மேடையையும் பயன்படுத்தத் துவங்கி விட்டார். ‘மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புக்குழு’வின் தலைவராக இருந்த நேர்மையான மற்றும் துணிவு மிக்க ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்காரே அவர்களையே – அவர்தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரையே - மிகமோசமாகத் திட்டிக் கண்டிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டார். ஹேமந்த் கர்காரேதான் மாலேகான் வெடிகுண்டு விபத்து தொடர்பான வழக்கைப் புலனாய்வு செய்து, இவற்றினைச் செய்தது பிரக்யா சிங் தாகூர் தலைமையிலான இந்துத்துவா வெறியர்கள் என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து அவர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தவர்.  பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நபர், என்ன தைர்யம் இருந்தால் ‘ஓர் இந்து தேசத்தில்,’ ‘இந்து மதத் தலைவரான’ என்மீது ஹேமந்த் கர்காரே வழக்கு தொடர்வார்! நான் இட்ட ‘சாபம்’தான் அவர் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தரம் தாழ்ந்த பேர்வழியாவார். 26/11 மும்பை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கு கர்காரே பிரதான குறியாக இருந்தவர் என்பதும், அவர்களால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இத்தகைய மதவெறியர்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களாக அமைந்துள்ளன.    
முன்னாள் மத்திய அரசு ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், குடியரசுத் தலைவருக்கு இவர் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதில், இவர் பாஜக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும்,  அதிலும் குறிப்பாக, அவரைத் தேர்வு செய்திருப்பதை மிகவும் உற்சாகத்துடன்  நாட்டின் பிரதமரே வரவேற்றிருப்பதற்கும் தங்கள் அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மேலும் சக குடிமக்களுக்கு, நாட்டின் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் பிரிவினை சூழ்நிலை உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதை நிராகரித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள், நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, நமக்கு நாமேதான் நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றும் அதனை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான தங்கள் கடிதத்திற்கு இவர்கள் அளித்துள்ள தலைப்பு, ‘நம் பாரம்பர்யம், பயங்கரவாதத்தால் உருவானது அல்ல,’ என்று குறிப்பிட்டிருப்பதுடன் மோடி மீது அவரது செயவ்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி, மேலும் வியப்பூட்டும் விதத்தில் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். என்ன தெரியுமா? இந்துக்கள் என்பவர்கள் எந்தக்காலத்திலுமே வன்முறையாளர்களாக இருந்ததில்லையாம்! தான் பிரதமர் பதவியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, மோடி இந்தியாவின் வரலாறு என்பது மிகக் கொடூரமான யுத்தங்களும் போர்க் களங்களும் நிறைந்தவை என்பதை அழிக்கப் பார்க்கிறார்.  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான மோடி, போதனை செய்து வந்த ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரு புராணங்களுமே அல்லது இதிகாசங்களுமே வன்முறையுடன் நிகழ்ந்த யுத்தங்களும் மோதல்களும் நிறைந்தவை என்பதை எப்படி மறந்தார் என்பதே ஆச்சர்யமாகும். நம்முடைய வரலாற்றிற்கு தற்போது ஆதாரமாக இருப்பதே இந்த இரு இதிகாசங்களும் மட்டும்தான். இந்திய வரலாற்றில் ‘மௌரியப்’ பேரரசின் முதல் மாமன்னராகத் திகழ்ந்த அசோகர், கலிங்கப் போரின்போது ஏற்பட்ட ரத்தக் களரியைக் கண்டு மனம் வெதும்பி, பின்னர் புத்தமதத்தைத் தழுவியதை நினைவு கூர்க.   இந்துயிசத்தைத் துறந்து, புத்திசத்தைத் தழுவிய பின்னர்தான் அசோகர், சகிப்புத்தன்மை, பிறரிடம் பரிவு காட்டுதல் மற்றும் பரஸ்பரம் மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றின் மூலமாக  வாழ்க்கையின் உன்னத லட்சியத்தைக் கண்டார்.   தன்னுடைய இந்தச் செய்தியை ஸ்தூபிகளில் செதுக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் மூலமாக உலகம் முழுதும் கொண்டு சென்றார். அந்த ஸ்தூபிகளில் உள்ள வெட்டெழுத்துக்களில், நான், மக்களை படைகளைக்கொண்டு கட்டாயப்படுத்தி வெல்வதைவிட, அவர்களிடையே அன்பு செலுத்துவதன் மூலமாக (தர்மத்தின் மூலமாக) அவர்களை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்,என்று செதுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், அசோகரின் அடையாளமாக விளங்கும் சக்கரம் இன்றையதினம் நம் மூவர்ணத் தேசியக் கொடியில்வ பெருமைமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது. அசோகரின் ஸ்தூபிகளில் உள்ள நான்கு சிங்கங்கள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ அடையாளமாகும். அவருடைய ஒரு ஸ்தூபியில் உள்ள பொன்மொழிகளில் ஒன்று, ஒருவன் தன் இனத்தின் மீதான அர்ப்பணிப்பின் காரணமாக, அதனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனை மதிப்பதும், அதே சமயத்தில் இதர இனங்களைக் கண்டிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவானேயானால் அவன் தன் சொந்த இனத்திற்கே மிக அதிகமான அளவில் ஊறு விளைவிக்கிறான்,என்று கூறுகிறது.
ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பலின் இன்றைய நடவடிக்கைகள் அனைத்தும் அசோகர் ஸ்தூபிகளில் பொறித்து வைத்துள்ள பொன்மொழிகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாக இருந்து வருகின்றன.
அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்” - “HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”
இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என இப்போது மோடி அடக்கி வாசித்தாலும், இந்துக்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதென்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. வினாயக் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துத்துவா என்னும் சொல்லை உருவாக்கியவர். ஒரு தத்துவார்த்த அரசியல் கொள்கைத்திட்டத்திற்கான குணத்தையும் அதற்கு அவர் அளித்திட்டார். இவ்வாறு இவர் அளித்திட்ட இந்துத்துவா கொள்கைக்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.  இதனை எய்துவதற்கு இவர் முன்வைத்த முழக்கம்தான், அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்(“HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”) என்பதாகும்.   இதனால் உத்வேகம் பெற்றவரும், ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனர் கே.பி. ஹெக்டேவார் அவர்களின் மூளையாகச் செயல்பட்டவருமான பி.எஸ். மூஞ்சே என்பவர், பாசிஸ்ட் சர்வாதிகாரி பெனிடோ முசோலினியை சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணம் செய்தார். இவர்களிடையே சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. மூஞ்சே தன்னுடைய சொந்த நாட்குறிப்பில்  இதனை 1931 மார்ச் 20 என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் எழுதியுள்ள தன்னுடைய நாட்குறிப்பில் இத்தாலியப் பாசிசம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், தன்னை மிகவும் ஈர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா திரும்பிய பின்னர், மூஞ்சே, 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்வி சங்கம் (Central Hindu Military Education Society) என்ற ஒன்றை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும்.  இவை  அனைத்தும் பயங்கரவாதம் தொடர்பான ரேடாரின் மூலம் புலனாய்வு செய்யப்பட்டவைகளாகும். ஆர்எஸ்எஸ்-இன் குருவாகத் திகழும் கோல்வால்கர், 1939இல் நாசி பாசிசத்தின்கீழ்  ஹிட்லர் யூதர்களைக் களையெடுத்த நடவடிக்கைகளைக் கண்டு களிபேருவகை கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் சிஷ்யர்களுக்கு, இந்துஸ்தானில் உள்ள நாம் கற்றுக் கொள்ளவும், ஆதாயம் அடையவும் இவை நமக்கு நல்ல பாடங்களாக  அமைந்திடும், என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் வெகு ஆண்டுகள் கழித்து, அவர் 1970இல், பொதுவாகக் கூறுவதென்றால்6, தீய சக்திகள் (இங்கே இந்துக்கள் அல்லாதவர்கள் என்று திருத்தி வாசிக்கவும்) நல்ல விதமாக, இனிய மொழியில் கூறினால் புரிந்துகொள்ள மாட்டார்கள்.  அவர்களை வன்முறை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும், என்று மேலும் கூறியிருக்கிறார்.
இந்துத்துவா மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள்
2000, ஜனவரி 22இல் தேதியிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியிருந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில், மர்சியா கசோலரி (Marzia Casolari),  இந்துத்துவா குழுக்களின் மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள் இருப்பதை சான்றாவணங்களின் மூலமாக நிறுவியிருக்கிறார்- இந்துத்துவாவின் தத்துவார்த்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் இத்தாலியப் பாசிசமும், ஜெர்மன் நாசிசமும் வடிவமைத்திருக்கின்றன என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அவர், 1920இன் தொடக்கத்தில் துவங்கி, இரண்டாம் உலகப் போர் வரையிலும், இந்து தேசியவாதிகள், பாசிஸ்ட் இத்தாலியின் அரசியல் எதார்த்த நிலைமைமையும் அதன் பின்னர் நாசி ஜெர்மனியையும் தங்களுக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக விளங்குவதைப் பார்த்தார்கள், என்றும் கூறுகிறார். இந்துத்துவா சித்தாந்தத்தில் பாசிஸ்ட் செல்வாக்கு எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்றால், அது, நாட்டில் வாழ்கின்ற இதர இனத்தினரையும், மதத்தினரையும் தங்கள் எதிரிகளாக மாற்றக்கூடிய அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ‘உள்ளார்ந்த எதிரி’ என்கிற சொற்றொடர் ஏன்கனவே சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்திலும் ஒளிந்திருக்கிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், அதனைத் தொடர்ந்து ஜெர்மன் இனவெறிக் கொள்கையும், ஜெர்மனியின் யூதர்கள் பிரச்சனையை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, பாசிஸ்ட் தத்துவார்த்தத்தின் அடிப்படையில் மிகவும் துல்லியமானமுறையில். அந்நாட்டின் பாசிசத்தைத் இந்தியாவிற்கேற்ப மாற்றி, ‘உள்ளார்ந்த எதிரி’ கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்க கொண்டு சென்றுள்ளன.
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தத்துவார்த்தப் பின்புலம் என்பது முசோலியின் பாசிசம் மற்றும் ஹிட்லரின் நாசிசம் ஆகியவற்றுடன் மிகவும் ஆழமானமுறையில் பின்னிப்பிணைந்தது என்று உரிய சான்றாவணங்கள் மூலமாக, இவ்வாறு மிகவும் ஆணித்தரமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவைக் கட்டி எழுப்பிட இவ்வாறு இந்துத்துவா தத்துவார்த்த அடிப்படை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அத்தகைய இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மூஞ்சே சொல்வது என்ன தெரியுமா?
அந்தக் காலத்து சிவாஜி போன்ற சர்வாதிகாரி அல்லது இந்தக்காலத்து முசோலினி அல்லது ஹிட்லர் போன்று சர்வாதிகாரிகள் இல்லாமல் இத்தகைய தத்துவார்த்த அடிப்படையில் நாம் நம் சொந்த இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட முடியாது.  … ஆனால் இவ்வாறு கூறுவதால் அத்தகைய சர்வாதிகாரிகள் உருவாகும்வரை நாம் நம் கைகளைக் கட்டிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் அதற்கானதொரு திட்டத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தாலியில் ‘பாசிஸ்ட்டுகள்’ என்ன செய்தார்களோ, ஜெர்மனியில் ‘நாஜிக்கள்’ என்ன செய்தார்களோ அவற்றை எதிர்கால இந்தியாவில் சங்கிகள் செய்வார்கள் என்று நம்புவதாக. மூஞ்சே கூறியிருப்பது என்பது மிகையான ஒன்று அல்ல.
மூஞ்சே, 1934இல் போன்ஸ்லா ராணுவப் பள்ளி என்னும் தன்னுடைய சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கான வேலையைத் துவக்கினார். இதற்காக, அதே ஆண்டில், மத்திய இந்து ராணுவக் கல்விச் சங்கத்தையும் அமைத்தார்.  அதன் நோக்கம், இந்துக்கள் மத்தியில் ராணுவரீதியிலான புத்துயிராக்கத்தைக் கொண்டுவர வேண்டும் மற்றும் இந்து இளைஞர்களை இந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையில் வலுவானவர்களாக உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
அப்போது இந்து மகா சபையில் தலைவராக இருந்த சாவர்க்கரும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையையே இந்துத்துவாவின் கொள்கைக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டிருப்பதையும் கட்டுரையாளர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். சாவர்க்கர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர் இந்தியாவில் முஸ்லீம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை 1938 அக்டோபர் 14 அன்ற அவர் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு தேசம், அங்கே பெரும்பாலானவர்களாக வாழ்பவர்களால் அமைக்கப்படுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் ஜெர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே அங்கே வாழ்ந்த யூதர்களுக்கு ஒரு வகுப்புவாத இயக்கமாகும்.  
பின்னர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: தேசிய இனம் என்பது பெரும்பகுதியான பூகோளப் பகுதியை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனை, மதம், மொழி மற்றும் கலாச்சாரத்திலும் ஒற்றுமை இருந்திட வேண்டும். இதன் காரணமாகத்தான் ஜெர்மானியர்களும், யூதர்களும் ஒரே இடத்தில் வசித்த போதிலும் ஒரே நாட்டினராக – ஒரே தேசிய இனத்தினராக -   கருத முடியவில்லை.
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்
நரேந்திர மோடியும் அவர் தற்போது அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளும் எங்கிருந்து உத்வேகம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இவற்றைவிட வேறென்ன ஆதாரங்கள் தேவை? தேர்தல் ஆதாயத்திற்காக ‘இந்துக்களின்’ பெயரால் இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தும் மாக்கியவெல்லியின் சூழ்ச்சியாகும். பாரதம் என்கிற இந்தியாவைப் பாதுகாத்திட இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி

Saturday, March 23, 2019

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திடும்




தி இந்து நாளிதழில் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

(நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களைத் தவிர மற்ற அனைத்துத் தரப்பு மக்களும், பாஜகவின் ஆட்சியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று தி இந்து நாளிதழ் நேர்காணல் கண்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் உத்திகள் குறித்தும், இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:)

கேள்வி: தேர்தல் மிகவும் நெருங்கிவந்துவிட்டபோதிலும், மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதில் இன்னமும் தயக்கம் காட்டிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு கூறுவது உண்மையல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களையுமே கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பெரும் பணக்காரர்களைத் தவிர, மற்ற அனைத்துத் தரப்பினருமே  கடந்த ஐந்தாண்டுகளில்  கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான பிரச்சனை இதுவேயாகும். இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் கிளப்பிவிடுவதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியில்  கூருணர்ச்சிமிகுந்த பிரச்சனைகளை உருவாக்கிடவும் அதன்மூலம் மதவெறித் தீயை விசிறிவிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவற்றை இவர்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் தீவிரப்படுத்திடுவார்கள். இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகள் முக்கியமான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தேர்தலின் முடிவினைத் தீர்மானிக்கப் போகிறது.
கேள்வி: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாலக்கோட்டில் விமானப் படையினர் நடத்திய தாக்குதல்கள் தேர்தலின் முடிவினை மாற்றியமைத்திடாதா?
சீத்தாராம் யெச்சூரி: மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதற்காக ஆட்சியாளர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால்தான் பிரதமரே மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இப்பிரச்சனைகள் அரசியலாக்கப் பார்த்தார். இவரைத் தொடர்ந்து பாஜக தலைவரும், மத்திய அமைச்சர்களும் பாலக்கோட்டில் நடைபெற்ற விமானப் படையினரின் தாக்குதல் குறித்தும் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து பூஜ்யத்திலிருந்து, 450 பேர் வரையும் இறந்ததாக, தங்கள் இஷ்டத்திற்கு அள்ளிவீசினர். அந்த இடத்தில் பயன்படுத்திய செல்போன்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அவற்றைப் பயன்படுத்திய அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று நம் நாட்டின் உள்துறை அமைச்சரே கூறியதைப் பார்த்தோம்.   இதற்கு ஆதாரம் என்ன என்று எதிர்க்கட்சியினர் எவரும் கேட்கவில்லை. நாம் கூறியதெல்லாம், நம் விமானப்படையினர் தாக்க வேண்டிய இடங்களைச் சரியாகக் குறியிட்டு, வெற்றிகரமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதாகக்கூறி விமானப் படையினரை நாம் பாராட்டியிருக்கிறோம். இப்போது, அதன் விளைவு என்ன? விமானப் படையின் தளபதி கூறியிருப்பதைப்போல,
இப்பிரச்சனைகள் மீது  அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதேயாகும். அரசாங்கம் இவ்வாறு பதில் சொல்வதற்குப் பதிலாக, ‘எதிர்க்கட்சியினர் ராணுவத்தினரை எதிர்க் கேள்விகள் கேட்பதாக,’ எதிர்க்கட்சியினர் மீது திருப்பித்தாக்குதல் தொடுத்திருக்கிறது. இது முற்றிலும் மடத்தனமாகும். நாங்கள் கூறுவதென்னவெனில் இதன்மூலமாக இந்த அரசாங்கம் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்பதேயாகும். ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று அரசாங்கம் கூறியது.  ஆனால் அது நடைபெறவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அவை புல்வாமா நிகழ்வு வரையிலும் தொடர்ந்தன. இப்போது, பாலக்கோட்டிற்குப் பின்னர், இது பயங்கரவாதத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று கூறப்பட்டது. இதுவும் உண்மையல்ல. இதன்பின்னர் 12க்கும் மேற்பட்ட நம் பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்முவில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடந்திருக்கிறது. இவையெல்லாம் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பதற்றநிலைமைகளை பாஜக-வினர் தங்களுக்குச் சாதகமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால். அதில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. இந்திய வாக்காளர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில், எதிர்க்கட்சியினர் – ஆளுங் கட்சியினர் என்ற பேதம் கிடையாது. பயங்கரவாதம் என்பது நாட்டின் எதிரி. நாடு ஒன்றுபட்டு நின்று அதனை எதிர்த்திடும்.  ஆனாலும் பயங்கரவாதிகள் நாட்டு மக்களிடம் காணப்படும் ஒற்றுமையை, தங்களின் நடவடிக்கைகளின் மூலமாக பிரித்திட முயற்சிக்கிறார்கள்.  இவர்கள் வீசிய இத்தகைய சூழ்ச்சி வலையில் ஆட்சியாளர்களும் பாஜகவும் வீழ்ந்து சிக்கிக்கொண்டுவிட்டனர்.

கேள்வி: மேற்கு வங்கத்தில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்திட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை  காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறதே. இதன் தாக்கம் இடது முன்னணிக்கு எப்படி இருக்கும்?
சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில், எப்போதுமே அங்கே கூட்டணி இருந்ததில்லை. பாஜகவையும் திரிணாமுல் காங்கிரசையும் தோற்கடித்திட வேண்டும் என்கிற எங்கள் குறிக்கோளை எய்துவதற்கு ஒரு முயற்சியை மேற்கொண்டோம். அதற்காக, பாஜக-விற்கு எதிரான வாக்குகளும், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளும் ஒரேயிடத்தில் குவிவதற்கான வேலைகளைச் செய்வோம் என்று நாங்கள் கூறினோம். இதேபோன்ற குறிக்கோளையுடைய மற்றவர்களுடனும் இணைந்துபோக தயாராக இருக்கிறோம் என்றும் நாங்கள் கூறினோம். எங்கள் நோக்கங்களை மேலும் தெளிவாக விளக்குவதற்காக, தற்போது பாஜக அல்லாது மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அல்லாது காங்கிரஸ் கட்சியும் இடது முன்னணியும் பெற்றுள்ள இடங்களில் பரஸ்பரம் போட்டியிட வேண்டாம் என்றும், நாங்கள் காங்கிரஸ் வென்ற இடங்களில் போட்டியிட மாட்டோம் என்றும் தாமாகவே முன்வந்து ஒரு யோசனையை முன்வைத்தோம். ஆனால் இதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. நாங்கள் வென்றுள்ள இடங்களிலும் அவர்கள் போட்டியிடும் விதத்தில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் அவ்வாறு செய்வதிலிருந்து எங்களை நாங்கள் தவிர்த்து வந்தோம். ஏனெனில் மக்கள் முன் நாங்கள் வைத்திட்ட வேண்டுகோளில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்பதையும், இதற்குத் துரோகம் இழைப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.  சென்ற மக்களவைத் தேர்தலில் 27 சதவீதம் வாக்குகளைப் பெற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. இங்கே மிக முக்கியமான பிரச்சனை, இடங்களின் எண்ணிக்கை அல்ல. பாஜக அல்லாத, திரிணாமுல் காங்கிரஸ் அல்லாத வாக்குகளை மிக அதிகமான அளவில் பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதே இங்கே மிகவும் முக்கியமாகும்.

கேள்வி: இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எவ்வாறு இருந்திடும்?
சீத்தாராம் யெச்சூரி: பொறுத்திருந்து பார்ப்போம். பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டையுமே தோற்கடிக்கக்கூடிய ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது வாக்காளர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்திடும். இதில் கூட்டணி அல்லது முன்னணி என்று கூறும் பிரச்சனையே கிடையாது.   

கேள்வி: மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே எதிர்க்கட்சியினர் பாஜகவிற்கு எதிராக அணிதிரள்வதை காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய பெரிய அண்ணன் மனப்பான்மை காரணமாக ஒத்துவராமல் வீணடிக்கிறது என்று நீங்கள் குறைகூறுகிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: நான் எவரையும் கூறைகூறும் ஒருவனல்ல. அவர்களின் முடிவுக்கு அவர்களுக்குப் பல காரணங்கள் மற்றும் நோக்கங்கள் இருக்கலாம். எங்கள் கவலை, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன், குறிப்பாக வங்க மக்களின் நலன் அடிப்படையிலானதாகும். அதன் அடிப்படையில் ஒரு திட்டத்தை தயாரித்து முன் வைத்தோம். தேர்தலில் தங்களின் முன்னுரிமைகள் என்ன என்று ஒவ்வொரு கட்சியுமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எங்கள் முன்னுரிமைகளை கீழ்க்கண்டவாறு தீர்மானித்திருக்கிறோம்: முதலாவது, பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்போம். இரண்டாவது, மத்தியில் அமரும் ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த முறையில் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற்படுத்திட நிர்ப்பந்தம் அளிக்கக்கூடியவிதத்தில், இடதுசாரிகளை வலுப்படுத்துவோம். மூன்றாவது, மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திடுவோம். தேர்தல்களும் அரசியலும் பள்ளிக்கூடக் கணக்கு போன்றதல்ல. (Elections and politrics is not arithmetic.) மக்கள் கடந்த காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள்.
அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு என்று  வாக்கு சதவீதத்தைக் கூட்டிக் காண்பிப்பதில் அர்த்தமே இல்லை. இரண்டும் இரண்டும் 22ஆகவும் மாற முடியும் அல்லது பூஜ்யமாகவும் மாற முடியும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி தன்னுடைய முன்னுரிமைகளைச் சரியானமுறையில் பெற்றிருக்கவில்லை என்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதன்மீது நான் விமர்சனம் செய்ய முடியாது.

கேள்வி: மக்களவையில் ஒற்றை இலக்கத்தில் இடங்களைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கூட்டணி அமைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: நான் கட்சியின் பொதுச் செயலாளராக மாறியபோது, மக்களவையில் எங்களுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் இடங்கள் இருந்தன. 2004க்கும் 2014க்கும் இடையே எங்கள் வீழ்ச்சி இருந்தது. இப்போது, நாங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறோம் என்றால், அமைய இருக்கும் ஆட்சியில் அவர்களின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எங்கள் இடங்களை அதிகரித்திட வேண்டும் என்பதாகும். இன்றைய தினம், நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுமே விவசாய நெருக்கடி குறித்து அல்லது வேலையில்லாக் கொடுமை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன. இதற்கு எங்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் காரணமாகும். மக்கள் இயக்கங்களின் மூலமாக அனைத்துக் கட்சியினரின் நிகழ்ச்சிநிரல்களிலும் நாங்கள் செல்வாக்கினை செலுத்தியிருக்கின்றோம். ஆனால் அவை நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கவேண்டியிருக்கிறது. இதற்கு எங்கள்  எண்ணிக்கை அதிகரிப்பதன்மூலமாக எங்கள் இருப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.  நாட்டில் எங்குமே எங்களை யாராவது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களா என்று நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட பகுதிகளில் எங்கள் சொந்த பலத்தில்தான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம்.
(நன்றி: தி இந்து)
(தமிழில்: ச. வீரமணி)

Thursday, March 21, 2019

2019 பொதுத் தேர்தல்கள்: பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்கவேண்டியதன் அவசியம்




சீத்தாராம் யெச்சூரி

நாடு, 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் போர்க்களத்திற்குள் இறங்கி இருக்கிறது. ஆட்சியிலுள்ள கட்சியானது, தாங்கள் கூறிய உறுதிமொழிகளை கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றியுள்ளனவா என்று மக்களால் ஆராய்ந்துபார்க்கப்பட்டு நீதி வழங்கும் வழக்கமான ஒரு தேர்தல் இது அல்ல. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் தேர்தலின்போது முன்நிற்கும். ஆனால் இது அப்படிப்பட்ட ஒரு தேர்தல் மட்டும் அல்ல.
எனினும், இந்தத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏன் அவ்வாறு நாம் கூறுகிறோம்? ஏனென்றால், இதன் முடிவில், நம் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. நாட்டின் எதிர்காலமும் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின்கீழ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து அரசமைப்புச்சட்ட அமைப்புகள் மற்றும் அதிகாரக்குழுமங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
மத்திய பாஜக ஆட்சி, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் அம்சங்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்திய வாக்காளர்கள் முன் உள்ள பிரதானமான பணி, இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதை உறுதிப்படுத்துவதும், இதற்கு மாற்றாக நம் அரசமைப்புச்சட்டத்தின் குடியரசைப் பாதுகாத்திடக்கூடிய விதத்தில் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கத்தை நிறுவுவதும், அதன்பின்னர், அதனை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் முன்னேறுவதுமாகும். எனினும், இதற்கு, மோடி அரசாங்கத்தால் தற்போது பின்பற்றப்பட்டுவரும் கொள்கைத் திசைவழியை  மக்களுக்கு ஆதரவான விதத்தில் மாற்றியமைக்கக்கூடியதோர் அரசாங்கமாக மாற்றி அமைத்திட வேண்டும். இதற்கு, 17ஆவது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் எண்ணிக்கை வலுவானவகையில் அமைந்திட வேண்டியது அவசியம்.    
கடந்த ஐந்தாண்டுகளில், பாஜகவின் ஆட்சியில், நம் அரசமைப்புச் சட்டத்தின் நான்கு அடிப்படைத் தூண்களும், அதாவது மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய நான்கும், திட்டமிட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன.
மதச்சார்பற்ற ஜனநாயகம்
பாஜகவின் ஆட்சியில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. மக்கள் மத்தியில் மதவெறி மிகவும் அஞ்சத்தக்கவிதத்தில் விசிறிவிடப்பட்டது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட தனியார் ராணுவங்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், அறநெறிப் போலீஸ் என்ற பெயரிலும், தலித்துகள் மீதும் முஸ்லீம்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன.  மதவெறி அடிப்படையிலான இவர்களது இத்தகைய நடவடிக்கைகள், நாடு முழுதுமே ஒரு விதமான வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும் சூழலை  உருவாக்கி இருக்கின்றன.  நம் மக்கள் மத்தியில் இதுகாறும் நிலவிவந்த சமூக நல்லிணக்க நடைமுறையையே கடுமையாக ஒழித்துக்கட்டக்கூடிய அளவிற்கு நாட்டில் இயங்கும் பல்வேறு பொதுவெளிகள் மதவெறி நஞ்சுக்கு இரையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் காவிமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நம் கல்வி அமைப்புமுறையே காவிமயத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் காவிமயத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று, நாட்டிலுள்ள அனைத்துக் கலாச்சார மையங்களும், கல்வி மையங்களும் கல்வித்தகுதியே இல்லாத அல்லது பெயரளவில் கல்வித்தகுதி பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் பேர்வழிகளால் நிரப்பப்பட்டு வருகின்றன. வளமான மதச்சார்பற்ற சமரசஞ்சார்ந்த இந்திய வரலாற்றை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்து புராணங்களில் கூறப்படும் கட்டுக்கதைகளையே வரலாறாகத் திணிப்பதற்கான முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைப்போன்றே வளமான இந்திய தத்துவவியல் பாரம்பர்யத்தையும், இந்து இறையியல் தத்துவத்திற்குள் திணிப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் வரையறுத்துள்ள ஒரு வெறிபிடித்த  சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கு வழிவகை ஏற்படுத்தும் விதத்தில் இவையனைத்தையும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவையனைத்தும் நம் இந்தியக் குடியரசின் அடிப்படைகளையே தகர்த்தெறிந்துவிடும். மதச் சிறுபான்மையினர் மற்றும் இதர சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திடும். அவர்களின் வாழ்வாதாரங்கள் மீதும் மிகவும் நாணங்கெட்டவிதத்தில் தாக்குதல்களை அதிகரித்திடும். ஒட்டுமொத்தத்தில் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமே கடும் ஆபத்தினை விளைவித்திடும்.
இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகக் கருதப்பட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாதுகாப்பைப் பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை வெட்டிச் சுருக்குவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அந்தரங்கத்தின் மீதான அடிப்படை உரிமைகள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் மக்களின் இதர பிரிவினரும் தங்கள் கோரிக்கைகளுக்காக அணிதிரள்வதற்கான உரிமைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும்,  சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சில தாக்குதல்களாகும்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு
பொருளாதாரத்தில் தன்னிறைவு என்பதைப் பொறுத்தவரையில், மோடி அரசாங்கமானது இந்தியாவை இந்தக் குறிக்கோளை எய்துவதிலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் விலக்கிக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில், சர்வதேச மூலதனம் மற்றும் உள்நாட்டுப் பெரு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரும் விதத்தில் நம் பொருளாதாரத்தின் கதவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி என்னும் இரட்டைத் தாக்குதல்கள் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் நாசத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகவும் இட்டுச் சென்றது. கடந்த ஐந்தாண்டுகளில், பதிவுசெய்யப்பட்டுள்ள, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, அரசாங்கத்தின் தரப்பில் இது தொடர்பான தரவுகளின்மீது பல்வேறு தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் கூட, இப்போதுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது கடந்த பல ஆண்டுகளில் மிகவும் மோசமான ஒன்று என்றே காட்டியுள்ளது.  வேலையின்மை கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்த கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் நாசப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகத் தொடர்வதன் காரணமாக, விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.  விவசாய விளைபொருள்களுக்கு, உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என்கிற உறுதிமொழிக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதன் மூலம் விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தைப் படிப்படியாக அழித்துக்கொண்டிருப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கான வேலைகள் பறிக்கப்பட்டு, நாட்டுப்புற மக்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத நிலைமையாகும். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மந்த நிலைமையுடன், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வுகளும், நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களை வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளியிருக்கிறது.
நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றியதும், பொருளாதாரத்தை நாசப்படுத்தியதும் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வை  அதிகரித்திடவும் இட்டுச்சென்றுள்ளன. நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் செல்வத்தில் 73 சதவீதம் மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருக்கின்ற செல்வந்தர்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது.
மோடியின் தன்னிறைவு
பிரதமர் மோடி தன்னிறைவு என்பதற்கு புதியதொரு விளக்கத்தினைத் தந்துகொண்டிருக்கிறார். தன்னிறைவு என்பதை அவர் தானும் தான் சார்ந்திருப்பவர்களும் என்கிற விதத்தில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார். (Self-reliance means self and reliance.) இவரது அரசாங்கத்தின்கீழ் இவர்கள்  ஊட்டி வளர்த்திடும் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. தங்களுக்கு வேண்டிய கூட்டுக்களவாணி முதலாளிகள் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை வங்கிகளில் மக்கள் சேமித்துவைத்திருந்த தொகைகளையும் மிகப்பெரிய அளவில் சூறையாடிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.  இவ்வாறு இவர்கள் வங்கிகளில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாத தொகை என்பது சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. மோடிக்கு மிகவும் வேண்டிய கார்ப்பரேட்டுகள் நாட்டில் நடைபெற்றுள்ள ரபேல் ஊழல் போன்று பல ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். 
இவ்வாறு தாங்கள் உதவிடும் கூட்டுக் களவாணி முதலாளிகள் யார் என்று மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே, மோடி அரசாங்கம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக புதிய சட்டங்களையே இயற்றியிருக்கிறது. இதில், தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது என்பதும் ஒன்றாகும். இச்சட்டத்தின் மூலம் வங்கிகளில் தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் யார், எந்தக் கட்சிக்கு அவர்கள் அவற்றைத் தருகிறார்கள் என்று மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ரகசியத்தைக் கொண்டுவந்திருப்பதன் மூலமாக, மோடி அரசாங்கம், தங்களுக்கு உதவிடும் கூட்டுக்களவாணிகள் யார் என்பதை மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நம்புகிறது. இருந்தாலும்கூட, நாட்டில் வெளியாகியிருக்கின்ற தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதம் பாஜகவிற்குத்தான் சென்றிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  இவ்வாறு மோடி அரசாங்கமானது அரசியலில் ஊழலை சட்டபூர்வமாகவே மேற்கொண்டுவருகிறது.
கூட்டாட்சித் தத்துவம்
நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் ஆணிவேர், கூட்டாட்சித் தத்துவமாகும். இது, தற்போது கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி சலுகைகளை வாரி வழங்குவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பகைமையுடன் நடந்துகொள்வதன்மூலமாக மத்திய மாநில உறவுகள் சீர்கேடடைந்து வருவதுடன், திட்டக் கமிஷனை ஒழித்துக்கட்டியதன் மூலமாக மாநில அரசுகள் தங்கள் திட்டச் செலவினங்கள் தொடர்பான பிரச்சனைகளை எடுத்துச் சென்று அவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டன.  இப்போது மாநில அரசுகள், மத்திய அரசின் கருணையால் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசியப் பேரிடர் அல்லது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகப் பிரத்யேகமான திட்டங்கள் எதையாவது கொண்டுவந்தால் அவற்றுக்காக மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசிய வளர்ச்சிக் கவுன்சில் முற்றிலுமாக செயல்படவில்லை. இதன் காரணமாக மாநில அரசுகள் தங்கள் தேவைகளைச் சொல்லி, தங்களுக்குத் தேவையான நிதியைப் பெறக்கூடியவிதத்தில் செயல்பட்டு வந்த ஓர் அமைப்பு இல்லாமல் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது.
ஜிஎஸ்டி அமைப்பு முறையானது, மாநில அரசுகளுக்கு இருந்த வருவாய் ஈட்டும் வழிமுறைகளைப் பறித்துவிட்டது.  தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் முறையானது, மாநில அரசுகள் தங்கள் வருவாயில் கணிசமான அளவிற்கு இழப்பினைச் சந்திப்பதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன்மூலம் மாநில அரசுகள் தாங்கள் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பதில் சிரமப்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில், பாஜக அரசாங்கமானது, அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்திற்குக் கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, பாசிச சித்தாந்த முறையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கு மிகவும் சரியாகப் பொருந்துகிறது.
சமூக நீதி
நம் அரசமைப்புச் சட்டம், மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீதி வழங்குவதை உத்தரவாதம் செய்கிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் இம்மூன்று முனைகளிலும் மக்களுக்கு பெரிய அளவில் அநீதி இழைக்கப்பட்டு வந்ததைப் பார்த்தோம். தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு,  கொல்லப்பட்டுள்ளார்கள். வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்றே சமூகநீதியை உத்தரவாதப்படுத்தும் முறையில் கொண்டுவரப்பட்டிருந்த தலித்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்)சட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களில் தலித்/பழங்குடியினர் நியமனம் செய்யப்படும் பட்டியல் முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கின்றன.  தங்கள் உரிமைகளைப் பாதுகாத்திட தலித்துகள் போராட முன்வரும்போது, அவர்கள் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் செயல்படும் தனியார் ராணுவங்கள் அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்களை ஏவுகின்றன. பாஜக அரசாங்கங்கள், தலித்துகளைத் தாக்கும் கயவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதையும், தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்மீதே பொய் வழக்குகள் போடுவதையும் மேற்கொண்டு வருகின்றன.
மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் மீதான தாக்குதல்களும் மிக அதிகமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல்ரீதியான தாக்குதல்களும் மிகவும்  அதிகரித்திருக்கின்றன. மிகவும் கொடூரமான கூட்டு வன்புணர்வுக் குற்றங்களும், இளம்பெண்கள் கொல்லப்படுவதும், இளஞ்சிறுமிகள் கூட கொல்லப்படுவதும் எந்த அளவிற்கு நம் சமூகம் மனிதாபிமானமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற இழி செயல்கள் நம் சமூகத்தில் முன்னெப்போதும் நடந்ததில்லை.
அதிகரித்துவரும் போராட்டங்கள்
மோடி அரசாங்கம் மற்றும் அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவருவதை சமீப ஆண்டுகளில் பார்க்கிறோம். தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பெரிய அளவிலான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.  நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் போர்ப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினர், தங்கள் வாழ்வாதாரங்கள்மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காத்திடும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தும் போராடுவதற்காக ஒரே பதாகையின்கீழ் ஒன்றிணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகரித்துவரும் போராட்டங்களை சீர்குலைத்திட, ஒன்றுபட்டு நிற்கும் மக்களை திசைதிருப்பிட, மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடவும் மற்றும் மக்களின் உணர்ச்சியைக் கிளப்பும்விதத்தில் பிரச்சனைகளை உருவாக்கவும் மோடி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு
கடந்த ஐந்தாண்டுகளில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் அம்மாநில மக்களை மேலும் தனிமைப்படுத்தக்கூடிய அளவிற்கு கொண்டுசென்றுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள் படிப்படியாக அதிகரித்திருக்கின்றன. 2009-க்கும் 2014-க்கும் இடையே 109 பயங்கரவாதத் தாக்குதல்களாக இருந்தது, 2014-க்கும் 2019க்கும் இடையே 626ஆக அதிகரித்திருக்கின்றன. அதேபோன்று உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் எண்ணிக்கையும் 139இலிருந்து 483ஆக உயர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் கொல்லப்பட்டது 12இலிருந்து 210ஆக உயர்ந்திருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் என்பவையும் 563இலிருந்து 5596ஆக அதிகரித்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கையின் விளைவாக காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவது என்பது 2014இல் 16 ஆக இருந்தது, 2018இல் 198ஆக உயர்ந்திருக்கிறது.   ‘காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் அனைத்துத்தரப்பு இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் அதன்மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு, மோடி அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இதன் கொள்கை கடிகாரத்தின் பெண்டுலம் போன்று இங்குமங்கும் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதல் இத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் எனக் கூறப்பட்டது. ஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 44 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டார்கள். இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானில் பாலக்கோட்டில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். எனினும் பயங்காவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவத்தினர் பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நின்று உறுதியுடன் குரல் கொடுக்கிறது. எனினும், மோடி அரசாங்கமும் பாஜகவும் இப்பிரச்சனையை, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தினை விளைவித்திடும் என்பதுபோல், அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  
கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் சந்தித்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கு மோடி அரசாங்கமும் பாஜகவும்தான் காரணம் என்று முடிவு செய்துள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மோடியும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்த அரசாங்கத்தையும், தங்கள் வாழ்வாதாரங்களை நாசப்படுத்தியுள்ள இதன்பின் நிற்கின்ற சக்திகளையும்  தூக்கி எறிந்திட மக்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.  தங்களுக்கு எதிராக மக்களிடம் கொழுந்துவிட்டெரிகின்ற கோபாவேசத்தைத் திசைதிருப்புவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் தூண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  இத்தகைய இவர்களின் இழி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இத்தகைய சக்திகள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டால், இப்போதிருக்கும் அரசமைப்புச்சட்டம் நீடிக்குமா என்பதே சந்தேகமாகும்.
இப்போது மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுபவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாக்ஷி மகராஜ், 2019இல் நடைபெறும் தேர்தல்தான் இந்தியாவில் நடைபெறும் கடைசித் தேர்தல் என்று கூறியிருக்கிறார். இதனை பிரதமரோ அலலது பாஜகவோ மறுதலித்திடவில்லை. மக்கள் இவ்வாறு இவர்களால் விடப்பட்டுள்ள எச்சரிக்கையை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இத்தகைய இழிசக்திகளை தேர்தலில் தோற்கடித்திடவும், மக்கள் நலனைப் பிரதிபலிக்கக்கூடியதான, இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கக்கூடியதான திசைவழியில் செல்லக்கூடியதான,  சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடியதான மாற்று அரசாங்கத்தை அமைத்திடத் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
வரவிருக்கும் தேர்தலில் இந்தக் குறிக்கோள்களை எய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் உறுதிபூண்டுள்ளன.
(தமிழில்: ச. வீரமணி)