Sunday, January 14, 2018

வழக்குகள் ஒதுக்கப்படுவது “தன்னிச்சையாக” இருக்கக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் நால்வர் திறந்த மடல்


புதுதில்லி, ஜன. 15-
“நீதித்துறையின் மீதும், உச்சநீதிமன்றத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை மீளவும் ஏற்படுத்திட” உடனடியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று வலியுறத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான, நீதியரசர் தீபக் மிஷ்ராவுக்கு, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மூவரும் இணைந்து ஒரு திறந்த மடல் அனுப்பி இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,  மதராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச். சுரேஷ் ஆகிய நால்வரும் இணைந்து கையொப்பமிட்டு, ஒரு திறந்த மடலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஞாயிறு அன்று அனுப்பி இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
“அன்பார்ந்த தலைமை நீதிபதி அவர்களே,
உச்சநீதிமன்றத்தின்  மூத்த நீதிபதிகள் நால்வர்,  வழக்குகள் ஒதுக்கீடுகள் செய்யும் விதம் குறித்து, அதிலும் முக்கியமாக கூருணர்ச்சிமிக்க ‘சென்சிடிவ்’ வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமர்வாயங்களுக்க ஒதுக்கீடு செய்திருப்பது சம்பந்தமாக, ஓர் சீரியசான பிரச்சனையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வழக்குகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், ஜூனியர் நீதிபதிகளால் தலைமை தாங்கப்படும் குறிப்பிட்ட சில அமர்வாயங்களுக்கு மட்டும் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஆழ்ந்த கவலையுடன் அவர்கள் இதனைத் தெரிவித்திருக்கிறார்கள். இது, நீதி பரிபாலன அமைப்பு முறைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கடும் தீங்கினை ஏற்படுத்திடும்.
நாங்கள், உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளும் எழுப்பிய பிரச்சனைகளுடன் நாங்கள் ஒத்துப்போகிறோம். வழக்குகளை அமர்வாயங்களுக்குப் பிரித்து அனுப்பும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு என்ற போதிலும், இவ்வாறு பிரித்து அனுப்புவதைத் தன்னிச்சையாக செய்வது, அதுவும் கூருணர்ச்சிமிக்க  ‘சென்சிடிவ்’ மற்றும் முக்கியமான வழக்குகளை பொறுக்கி எடுக்கப்பட்ட ஜூனியர் நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி அனுப்பலாம் என்று இதற்குப் பொருள் அல்ல.        
இந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அமர்வாயங்களுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது மற்றும் வழக்குகளைப் பிரித்துக் கொடுப்பது என்பது பகுத்தறிவின் அடிப்படையிலமைந்த (rational). நேர்மையான (fair) மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் (transparent) மிகவும் தெளிவான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் அமைந்திட வேண்டியதும் அவசியம். நீதித்துறையின் மீதும் உச்சநீதிமன்றத்தின்மீதும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உடனடியாக இதனைச் செய்திட வேண்டும்.  
எனினும், இதனைச் செய்யும்வரையிலும், நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட, அனைத்துக் கூருணர்ச்சி மிக்க ‘சென்சிடிவ்’  மற்றும் முக்கியமான வழக்குகளும், உச்சநீதிமன்றத்தின் மிகவும் மூத்த (senior most) நீதிபதிகளின் அரசமைப்புச்சட்ட அமர்வாயத்தால் நடத்தப்பட வேண்டியது முக்கியமாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக மட்டும்தான், உச்சநீதிமன்றம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்குகளை நீதிபதிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் முறையானது, மிகவும் முக்கியமான மற்றும் கூருணர்ச்சிமிக்க ‘சென்சிடிவ்’ வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட முடிவினை எய்துவதற்காக,   துஷ்பிரயோகம் செய்திடவில்லை என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திடும்.
எனவே, நாங்கள் இது தொடர்பாகத் தாங்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுமாறு வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு முன்னாள் நீதியரசர்கள் பி.பி.சாவந்த், ஏ.பி.ஷா, கே. சந்துரு மற்றும் எச். சுரேஷ் ஆகிய நான்கு நீதிபதிகளும் தங்கள் திறந்த மடலில் தெரிவித்துள்ளார்கள்.
(ந.நி.)


“ஆதார்” கட்டாயம் என்பதைக் கைவிடுக


தி டிரிப்யூன் நாளேடு, 100 கோடிக்கும் மேலான ஆதார் எண்களின் விவரங்களைத் தங்கள் செய்தியாளர் எப்படிப் பெற்றார் என்ற ஒரு புலனாய்வு செய்தியை, ஜனவரி 4 அன்று வெளியிட்டிருந்தது. செய்தியாளர் 500 ரூபாயை ஒரு விற்பனையாளரிடம் பேடிஎம் (Paytm) மூலமாகக் கொடுத்து, தனக்கென்று ஒரு இணைய முகவரியை கடவுச்சொல்லுடன் ஏற்படுத்திக்கொண்டு, ஆதார் அமைப்பான யுஐடிஏஐ எனப்படும் யூனிக் ஐடண்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியா (UIDAI-- Unique Identification Authority of India)வில் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு பெயரையும், அவர்களின் முகவரி, போட்டோ, தொலைபேசிஎண் மற்றும் மின் அஞ்சல் முகவரியுடன் பெற முடிந்திருக்கிறது. 
யுஐடிஏஐ அமைப்பினரும் மத்திய அரசாங்கமும் பயோமெட்ரிக் தரவுகள் இல்லாமல் ஆதார் விவரங்களை எவரும் பெற முடியாது என்று கூறிவந்ததை எந்த அளவிற்கு போலியான கூற்று என்பதை  செய்தியாளரின் புலனாய்வு போட்டு உடைத்திருக்கிறது.
ஆதார் திட்டம் ஐமுகூ அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. அவ்வாறு அது தொடங்கப்பட்ட சமயத்திலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்திட்டம் குறித்து, எண்ணற்ற ஆட்சேபணைகளை எழுப்பியது. அவற்றில் ஒன்று, இந்தத் திட்டத்தின்கீழ் கணினியில் மென்பொருளைத் தயாரிக்கும் பணியை இரு அமெரிக்க நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அவை இந்திய மக்களிடம் சேகரிக்கும் அனைத்துத் தரவுகளையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அவற்றுக்கு உண்டு. இவ்வாறு, அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்பினை வைத்துக்கொண்டுள்ள இந்த இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆதார் அட்டைதாரர்களின் தரவுகள் ஏற்கனவே முழுமையாகத் தெரியும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் தனியார் வர்த்தக நலன்களுக்குப் பயன்படுத்தப்படவும் முடியும் என்பது நாம் எழுப்பிய மற்றுமொரு ஆட்சேபணையாகும்.  அரசாங்கத்தின் இணைய தளங்களில் ஆதார் விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏற்கனவே ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. தி டிரிப்யூன் புலனாய்வு, அரசாங்கத்தாலும், ஆதார் அமைப்பாலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படும் வளையத்திற்குள் புகுந்து எவ்வளவு எளிதாக விவரங்களை வெளிக்கொணரமுடியும் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.
ஆதார் பயோமெட்ரிக் தரவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு அதிர்ச்சியளித்திடும் நிகழ்வு, சென்ற மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏர்டெல் போன் நெட்வொர்க்கிற்கு மத்திய அரசாங்கம் அதனுடைய மொபைல் போன்களை ஆதார் எண்களுடன் இணைத்துக்கொள்ள அதிகாரம் அளித்திருந்தது. ஏர்டெல் நிறுவனம், அந்த ஆதார் எண்களில் உள்ள நபர்களை, தன்னுடைய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) யுடன் வாடிக்கையாளராவதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்ததன் மூலம் துஷ்பிரயோகம் செய்திருப்பது தெரிய வந்தது. வாடிக்கையாளர்களின் சம்மதத்தைப் பெறாமலேயே, மிகப் பெரிய அளவில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பயன்பாடுகளுக்கான மான்யத் தொகைகளை, மக்களுக்கு அவர்கள் கடைசியாக ஆதார் எண்களை எந்த வங்கியில் வைத்திருக்கிறார்களோ அந்த வங்கிகள் மூலமாக அவர்களுக்குச் செலுத்தி வந்தது. தற்போதுள்ள விதிகளின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றிற்காக மான்யங்கள் வாடிக்கையாளர் பெயரில் கடைசியாக எந்த வங்கியில் ஆதார் எண்ணுடன் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த வங்கிக்கு அனுப்பப்பட்டுவிடும்.
இந்த விதத்தில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இத்தகைய மான்யங்கள் தொகை 190 கோடி ரூபாயைத் தங்கள் வங்கியில் சேகரித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆதார் எண்களை இதற்கு முன்பு பதிவு செய்துவைத்திருந்த தங்களுடைய முறையான வங்கிகளில் மான்யங்களைப் பெறமுடியாதபோதுதான், இவ்வாறு ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் துஷ்பிரயோகம் வெளிச்சத்திற்க வந்தது. யுஐடிஏஐ இப்போது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.  அவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. ஆயினும் அந்த வங்கி மோசடி செய்த தொகையுடன் ஒப்பிடும்போது, யுஐடிஏஐ அபராதம் விதித்துள்ள தொகை மிகவும் குறைவாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொது விநியோக முறையில் ரேஷன் பொருள்களை வாங்குவதற்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழான பயன்பாடுகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்களைக் கட்டாயமாக்கக்கூடாது  என்று கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. பொது விநியோக முறையின் கீழ் ரேஷன் பொருட்கள் பயோமெட்ரிக் சான்றுறுதியைப் பெற்ற பிறகுதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சான்றுறுதி அளிக்கும் முறை அமலுக்கு வந்துள்ள ராஜஸ்தான், ஜார்கண்ட், தெலங்கானா போன்ற மாநிலங்களில்,  லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் பொருட்களைப் பெற முடியாது கொடுமை நடந்துள்ளது. இவ்வாறு அவர்களின் ரேஷன் பொருள்களை மாநில அரசாங்கங்கள் கவர்ந்துகொண்டுவிட்டன.   காரணம், இம்மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள மிஷின்களில் கைரேகை அடையாளம் பதியும் கருவி செயல்படவில்லை. பல வழக்குகளில் ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவே இல்லை.
விளைவு, ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது நிறைந்த சந்தோஷி குமாரி என்னும் சிறுமி பட்டினிக் கொடுமையால் இறந்தது போன்ற துயரார்ந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் இதர இடங்களிலும் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பொது விநியோக முறைக்கு ஆதார் அடையாளம் அவசியம் என்பது இவ்வாறு நாட்டில் ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பிற்குப்  பகையானதாக மாறி இருக்கிறது.
இந்த லட்சணத்தில் அரசாங்கமானது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு உட்பட வாழ்க்கையின் அனைத்து விதமான சங்கதிகளுக்கும் ஆதார் அடையாளத்தை இப்போது திணித்துக் கொண்டிருக்கிறது. சில அரசாங்க மருத்துவமனைகள் கூட ஆதார் அட்டை அடையாளத்தை, நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன் கோரக்கூடிய அளவிற்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன. ஆதார் அடையாளம் இல்லாமல் ஒருவர் நாட்டின் பிரஜையாகவே இருக்க முடியாது, அ வரை இந்த அரசாங்கம் ஒரு மனிதனாகவே மதிக்கமாட்டோம் என்கிற நிலைக்கு  அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது.
ஆதார், ஓர் எதேச்சாதிகார அரசாங்கத்தின் கைகளில் மற்றுமோர் ஒடுக்குமுறை கருவியாக மாறி, குடிமக்களுடைய அந்தரங்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது அரசின் நுண்கண்காணிப்பினைக் கொண்டுவருவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
ஆதார் எண்கள் யுஐடிஏஐ நிறுவனத்திடம் அப்படியொன்றும் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த, தி டிரிப்யூன் நாளிதழுக்கு எதிராகவும், அதன் செய்தியாளருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்திருப்பதிலிருந்தே அரசாங்கம் மற்றும் யுஐடிஏஐ அமைப்பின் உளப்பாங்கை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆதார் அமைப்புமுறை குறைபாடுகளுடன் கூடியது என்றும், பூரணத்துவமற்ற அமைப்பு என்றும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அரசாங்கமானது இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த செய்தியாளர் மீதும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
அனைத்து அடிப்படை சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று கொண்டுவருவதை நிறுத்திக்கொள்வதே இந்த முட்டுக் கட்டையிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழியாகும். அனைத்து வங்கிக் கணக்குகளையும், மொபைல் தொலைபேசி எண்களையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்கிற உத்தரவை அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளாக, ஆதாருக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருந்துகொண்டிருக்கின்றன. இந்த மிகவும் முக்கியமான பிரச்சனைமீது காலத்தே முடிவு எடுக்காமல் நீதிமன்றம்  அசமந்தமாக மனுக்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது.
2017 நவம்பரில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வாயம் இப்போது இந்த மனுக்களை விசாரித்துக்கொண்டிருக்கிறது.  இது மக்களையும், நாட்டின் ஜனநாயக சுதந்திரங்களையும் மிகவும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருப்பதால்,  நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பினை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதில் வழங்கிட வேண்டும்.
(ஜனவரி 10, 2018)     

(தமிழில்: ச.வீரமணி) 

Friday, January 5, 2018

கார்ப்பரேட்டுகள் செல்வாக்கையும், லஞ்சத்தையும் சட்டபூர்வமாக்கிடும் பாஜக அரசு


 தலையங்கம்
தேர்தல் பத்திரங்கள் குறித்து முதன்முறையாக 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபோது ஐயுறவுடன் நாம் என்ன ஊகித்தோமோ அது தற்போது நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான திட்டத்தின் விவரங்களைக் கோடிட்டுக் காட்டியிருப்பதிலிருந்து உறுதியாகி இருக்கிறது. இந்தத் திட்டமானது, கார்ப்பரேட்டுகள் ஆளும் கட்சிக்குப் பெரிய அளவில் நிதி அளிப்பதற்கு, சட்டபூர்வமாக வசதி செய்து தருவதைத்தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதேயாகும்.
இந்தத்திட்டம் குறித்து நிதியமைச்சர் கூற்றின்படி, தேர்தல் பத்திரங்கள் பிராமிசரி நோட் போன்று ஒரு கொணர்பவர் கருவியாக (bearer instrument-ஆக) இருந்திடும். பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வு செய்யப்பட்ட கிளைகள் தேர்தல் பத்திரங்களை வெளியிடும். அவற்றை முறையான வங்கிக் கணக்குகள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். பத்திரங்கள் 1000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் என்கிற முறையில் இருந்திடும். பத்திரங்கள் அதற்கான பாரத ஸ்டேட் வங்கியின் அதற்காக ஒதுக்கப்பட்ட கிளைகளில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் பத்து நாட்களுக்குக் கிடைத்திடும்.
பத்திரங்களுக்கு 15 நாட்களுக்கான உயிர் உண்டு. அதற்குள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கு அதனைக் கொடுத்துவிட வேண்டும். அந்தக் கட்சிகள் தங்களுடைய வங்கிக் கணக்கு மூலமாக அதனைப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.    யாரிடமிருந்து அந்தப் பத்திரம் வாங்கப்பட்டது என்கிற உண்மையை அதை வாங்கிய அரசியல் கட்சி வெளிப்படுத்த வேண்டியதில்லை.
இவ்வாறான தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், துப்புரவான முறையிலும் கொண்டுவந்திடும் என்று நிதியமைச்சர் கூறுகிறார். என்னே வஞ்சகமான வார்த்தைகள்! உண்மைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் உண்டா? வெளிப்படைத்தன்மைதான் உங்கள் லட்சியம் என்றால், தேர்தல் பத்திரத்தைக் கொடுப்பவர் யார் என்பதையும், எந்தக் கட்சி அதை வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்திட வேண்டும். இல்லையா?
இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் கொண்டுவந்திருக்கும் முறையானது ஆளும் கட்சிக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது, இலஞ்சத்தையும், ஊழலையும் சட்டபூர்வமாக்கிட வழிதிறந்து விட்டிருக்கிறது. கம்பெனிகள் ஆளும் கட்சிக்கு அபரிமிதமான முறையில் நன்கொடைகள் அளிப்பது, அவை தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வதற்கான ஊக்க மருந்தாக செயல்படும். ஏற்கனவே சென்ற நிதித்திருத்தச் சட்டமுன்வடிவின்மூலம், கம்பெனி சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், கம்பெனிகள் முந்தைய மூன்று ஆண்டுகளில் கிடைத்த நிகரலாபத்தில் சராசரியாக 7 சதவீதம் வரைதான்  அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கமுடியும் என்றிருந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுவிட்டது. மேலும், அந்தத் திருத்தத்தின் மூலம், கம்பெனிகள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்துள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்கிற தேவையையும் கைகழுவிவிட்டது.   
இவ்வாறு, ஒரு கம்பெனி ஓர் அரசியல் கட்சிக்கு வரையறை எதுவுமில்லாமல் நன்கொடைகள் அளித்திட முடியும். மேலும், தேர்தல் பத்திர அமைப்பு மூலம் எந்தக் கட்சி அந்தப் பத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இதுவரை பல்வேறு விதங்களில் ஆட்சியாளர்களிடம் சலுகைகள் பெறுவதற்காக லஞ்சம்கொடுத்துவந்த நிறுவனங்கள், இனி மிக எளிதானமுறையில் தேர்தல் பத்திரங்களை அளிப்பதன் மூலம் அவற்றைச் செய்திடும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பது என்பது இந்தத் திட்டத்தின்படி மிகப் பெரிய தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூலமாக நடந்திடும். தேர்தல் பத்திரங்களை வாங்கும் நிறுவனம், அதனைப் பெற்ற அரசியல் கட்சி ஆகியவற்றின் அடையாளங்கள், பொது மக்கள் பார்வைக்கு வராமல் போனாலும், பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக அந்தத் தகவல்களை ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே எந்த வொரு நிறுவனமும் அல்லது அதிக அளவு நன்கொடை கொடுப்பவரும், எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதன் மூலமாக, ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாவதற்குத் துணிய மாட்டார்கள்.   
அநாமதேயமான பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் லஞ்சத்தை சட்டபூர்வமாக்கிடவே வசதி செய்து கொடுத்திடும். தற்சமயம் அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்தம் ஒன்றை வாங்க முயலும் ஒரு நிறுவனம், அதனைப் பெறுவதற்காக மேசைக்கு அடியில் சட்டவிரோதமாக லஞ்சத்தைக் கொடுத்து வருகிறது. இதுபோன்று இனி செய்யத் தேவையில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலமாக சட்டபூர்வமாகவே இனிவருங்காலங்களில் அது தன் வேலைகளைச் செய்துகொள்ளலாம்.  உதாரணமாக, ஒரு நிறுவனம் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு, 10 சதவீதம் கமிஷன் தர வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனமானது 100 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்களை வாங்கி ஆளும் கட்சிக்குக் கொடுத்து தன் வேலையை முடித்துக் கொள்ளும். இத்தகைய நன்கொடைகள் குறித்து பொதுமக்கள் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அதேபோன்று புலனாய்வு அமைப்புகளும் அந்த நிறுவனத்தை இது தொடர்பாக கேள்வி எதுவும் கேட்டிடவும் முடியாது.
அதுமட்டுமல்ல, இனிவருங்காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட தேர்தல் பத்திரங்கள் மூலமாக இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, மக்களுக்குத் தெரியாமல், நன்கொடைகள் அளிப்பதற்கு, தேர்தல் பத்திரத் திட்டம் வசதி செய்து கொடுத்திருக்கிறது. ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவின்கீழ், அந்நிய நிறுவனங்கள் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது.   அதன்படி, அந்நிய நிறுவனங்களின் துணை அமைப்புகளாக இந்தியாவில் இயங்கிடும் நிறுவனங்களால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்கப்பட்டால், அவற்றை இந்திய நிறுவனங்கள் அளித்ததாகவே கருதிட வேண்டும் என்று கொண்டுவந்தது. இந்தத்திருத்தத்தின் மூலம், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுப்பது சட்டரீதியானதாக மாற்றப்பட்டிருக்கிறது.
இவ்வாறு ஆட்சியாளர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், வருமான வரிச் சட்டம் போன்றவற்றில் கொண்டுவந்த திருத்தங்கள் அனைத்துமே, நிதிச் சட்டமுன்வடிவு மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன.  இதனால் இந்தத்திருத்தங்கள் தொடர்பாக மாநிலங்களவையின் விவாதத்திற்கோ, பரிசீலனைக்கோ அல்லது வாக்கெடுப்புக்கோ தேவையில்லாமல் செய்துவிட்டார்கள்.
மோடி அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மிகவும் நாணங்கெட்ட முறையில் இவ்வாறு நன்கொடைகள் வாங்குவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் உறுதிபட எதிர்க்கப்பட வேண்டியவைகளாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் பத்திரத் திட்டத்தை ஏற்காது. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுப்பதை கட்சி தொடர்ந்து உறுதிபட எதிர்த்து வந்திருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு முக்கியமான அம்சம், அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுப்பதைத் தடைசெய்திட வேண்டும் என்பதாகும். மாறாக, கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்திற்கு வெளிப்படையாக நன்கொடைகள் கொடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவற்றை அரசாங்கம் தேர்தல் செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போதுள்ள சட்டத்தின் ஷரத்துக்களின்படி, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெற்றால், அத்தகைய நன்கொடைகளை அளிப்பவர்களின் அடையாளங்கள், முகவரி,  பான் கார்டு (PAN card ) எண் போன்ற விவரங்களுடன்  பதிவு  செய்யப்பட  வேண்டும் என்றே விரும்புகிறது. தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழுள்ள ஷரத்துக்களின்படி இதை மீறுவதற்கு அனுமதித்திடக் கூடாது.
(ஜனவரி 3, 2018)
(தமிழில்: ச.வீரமணி)