Friday, November 5, 2010

பராக் ஒபாமா இந்தியப் பயணம்:பிரகாஷ் காரத்



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவிற்கு நவம்பர் முதல்வாரத்தில் வருகை தருகிறார். சென்ற முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வந்திருந்த போது, நாடு முழுதும் விரிவான அளவில் அவரது வருகைக்கு எதிராக எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன. அவரது பயணத்தின்போது பிரதானமாக இராக்கில் நடைபெற்ற யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது பயணத்திற்கு எதிராக உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், புஷ் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதும் உலகம் முழுதும் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்த்தப் பட்டது. அமெரிக்க செனட் சபையில் இராக்கில் நடைபெறும் யுத்தத்தினை எதிர்த்துக் குரல் கொடுத்த ஆப்ரிக்க-அமெரிக்கரான இளம் அதிபர் பராக் ஒபாமாவிடம் மக்களுக்குப் பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. புஷ் சகாப்தத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே உலகம் பார்த்தது. ஒபாமா நிர்வாகத்தின் சுமார் ஈராண்டு கால ஆட்சியானது, அவ்வாறான எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவற்றைப் பொய்ப்பித்து விட்டன. ஆட்சி புரியும் விதம் மாறியிருக்கிறது என்றபோதிலும், அமெரிக்க அயல்துறைக் கொள்கையின் சாராம்சத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் எதுவும் இல்லை.
இராக்கில் போரிட்டுக் கொண்டிருக்கும் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருந்தபோதிலும், 50 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்களும் மற்றும் இதர கூலிப் படையினரும் இன்னமும் இராக்கிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவத் தலங்கள், அமெரிக்க நலன்களை மேற்பார்வையிடுவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் அந்நாட்டின் எண்ணெய் வளங்களில் ஒரு பெரும் பங்கினைக் கைப்பற்றுவதுதான். ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து ஈரானை, அணுசக்திப் பிரச்சனையில் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை நான்காவது முறையாகப் பெறுவதற்கான விஷயத்தில் முன்னணியில் நிற்கிறது. பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிட உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், ஒபாமா நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. ஏனெனில் அது அமெரிக்காவில் வலுவாக விளங்கிடும் யூதர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப வில்லை. அது தொடர்ந்து இஸ்ரேலின் சட்டவிரோதமான ஆட்சியையும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அதன் விரிவாக்கத் திட்டங்களையும் கவனிக்காதது போலிருப்பது தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானத்தில், ஒபாமா 30 ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புக்களை அனுப்பியிருக்கிறார். அப்பிராந்தியத்திற்காக ‘‘ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்’’ போர்த்தந்திரத்தை (‘‘Af-pak’’ strategy)த் திட்டமிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க-நேட்டோ படையினரால் தாலிபான்களை நசுக்க முடியவில்லை, மாறாக ஆப்கான் மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒபாமா நிர்வாகம் கியூபாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள சட்டவிரோத பொருளாதாரத் தடை தொடர்கிறது. கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டுமானால், அங்கு ‘‘ஜனநாயகத்திற்காக’’ நடைபெறும் தொடர் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமாம்.
ஒபாமா எடுத்திருக்கிற உருப்படியான நடவடிக்கை என 2009இல் பிரேக்கில் ஆற்றிய உரையைக் கூறலாம். அப்போது அவர் உலகம் முழுதும் முற்றிலுமாக அணுஆயுதங்களை ஒழித்திட அறைகூவல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் அது போர்த்தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty (START III)) செய்து கொண்டது. இதன்படி இரு நாடுகளும் தங்களுடைய அணுஆயுதங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் சரியென்று ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டிய திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்குப் பின், ஒபாமா நிர்வாகம் ஒன்றை உறுதிப்படுத்திவிட்டது. அது, ஆட்சியிலிருப்பவர்கள் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக உலக அளவிலான போர்த்தந்திர நடவடிக்கைகளிலும், அயல்துறைக் கொள்கைகளிலும் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவர மாட்டார்கள் என்பதுதான்.
அமெரிக்கப் பொருளாதாரம் இன்னமும் மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில்தான், வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 9.6 விழுக்காடு அளவிற்கு உச்சத்தில் இருக்கக்கூடிய நிலையில்தான், ஒபாமா இந்தியாவிற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலைமையானது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த ஆதரவைக் குறைத்திருக்கிறது. இது சமீபத்தில் அங்கே நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களில் டெமாக்ரடிக் கட்சி கடும் இழப்பினை அடைந்திருப்பதில் பிரதிபலிக்கிறது. எனவே, ஒபாமாவின் பயணம் இந்தியாவின் சந்தைகளை மிக அதிக அளவில் அமெரிக்காவின் பக்கம் திறந்திடவும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையிலும் வேளாண்துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்திட அனுமதிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒபாமா நிர்வாகம் இந்தியாவுடன் ‘அவுட்சோர்சிங்’ வர்த்தம் வைத்துக்கொள்வதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகளை அளித்திட வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

ஒபாமாவின் விஜயம் இந்தியாவில் பல்வேறுவிதமான சிந்தனைப் போக்குகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆள்வோர் மத்தியில் அதிக அளவில் அமெரிக்க ஆதரவு மனப்பாங்கு இருப்பதால், இவ்வாய்ப்பை அமெரிக்காவுடனான போர்த்தந்திரக் கூட்டணியை (strategic alliance) வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ராணுவத்துறையில் மேலும் விரிவான அளவில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் புதிய துறைகளில் அமெரிக்காவின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்திடவும் ஒப்புக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, வலதுசாரிகளில் ஒரு பிரிவினரும், கார்பரேட் ஊடகங்களும் சீனாவிற்கு எதிராகச் சரியான போட்டியை அளித்திட வேண்டுமானால் இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கிளிண்டன் நிர்வாகத்தின்போது வாஜ்பாய் அரசாங்கத்தால் ‘‘ஜனநாயகங்களின் சமூகம்’’ (“Community of Democracies”) என்ற பெயரில் அமெரிக்கா வானளாவப் புகழப்பட்டதையெல்லாம் கடந்த காலத்தில் நாம் பார்த்தோம்.

இந்தியாவில் இன்றும் கூட, பலர் புஷ் சகாப்தம் மீது நாட்டம் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே இந்தியாவிற்கு மிகவும் சிறந்தவராக ஜார்ஜ் புஷ் இருந்திருக்கிறார் என்று அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென் கூறியிருக்கும் வாசகங்களே இதற்குச் சான்று. அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதற்காக ஏங்குபவர்கள் புஷ் சகாப்தத்தை இழந்துவிட்டதற்காக மிகவும் கவலைப் படுகிறார்கள். இந்தியா, அமெரிக்காவின் நம்பகமான போர்த்தந்திரக் கூட்டணி நாடாக மாறும்பட்சத்தில், இந்தியாவை ஒரு மாபெரும் வல்லரசாக உருவாக்க முடியும் என்று உறுதிமொழி அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. ஆயினும், புஷ்சும்கூட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்புநாடாக இந்தியா வருவதை ஏற்க மறுத்துவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, புஷ்சிற்கும் ஒபாமாவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அங்கீகரிக்கிறோம். அதே சமயத்தில், ஒபாமா நிர்வாகமும் உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் அடிப்படை அணுகுமுறையின் தொடர்ச்சியே என்பதையும் நாம் அறிவோம். அதனால்தான் ஒபாமாவின் பயணத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர் தலையீடுகளுக்கு நாட்டு மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்திடுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தத் தீர்மானித் திருக்கிறோம். நாட்டில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திட அமெரிக்க அரசாங்கம் அளித்திடும் நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்ளுக்கு நாட்டின் கேந்திரமான துறைகளான வேளாண்மை, சில்லரை வர்த்தகம் மற்றும் உயர் கல்வித்துறைகளைத் திறந்துவிட வசதிசெய்து தருவதற்கும் மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான சிறிய கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய விதத்தில் நாட்டிற்குள் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதித்திட ஒபாமா பயணம் பயன்படுத்தப் படக்கூடாது. மத்திய வர்த்தக அமைச்சரும் (Commerce Minister) ஐமுகூ அரசாங்கத்தின் ஒருசில பிரிவுகளும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வகைசெய்திடும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2005இல் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புத்துறை கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (Indo-US Defence Framework Pact) கீழ் அமெரிக்கா மேலும் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. அவற்றின்படி இந்திய ராணுவம், அமெரிக்க பெண்டகனின் துணைப்படை போல் மாறிவிடுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்துதான் ஆயுதங்களைப் பெரிய அளவில் வாங்க வேண்டும் என்பதில் ஒபாமா மிகவும் குறியாக இருக்கிறார். ஏற்கனவே, இந்தியா சி-17 ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கிட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன. அமெரிக்கர்கள் மேலும் 126 போர் விமானங்களை இந்தியாவை வாங்க வைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவற்றின் மதிப்பு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு வைத்திருப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இத்தகைய ஒத்துழைப்பானது நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையையும், போர்த்தந்திர சுயாட்சி (strategic autonomy)யையும் கடுமையாகப் பாதிக்கும்.

போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி உத்தவாதப்படுத்தப்படுவதற்கு அதிபர் ஒபாமா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட வேண்டும். உலகில் நடைபெற்றுள்ள மிகமோசமான தொழிற்சாலைப் பேரிடர் விபத்துக்கு ஓர் அமெரிக்க நிறுவனம்தான் பொறுப்பாக இருந்திருக்கிறது. வளைகுடாக் கடற்கரையில் எண்ணெய்க் கசிவினை சுத்தம் செய்வதற்காக பல பில்லியன் டாலர்களை ஒபாமாவால் பெற முடியும் என்றால், போபால் நச்சுக் கசிவுக்குக் காரணமான டவ் கெமிகல்ஸ் (Dow Chemicals) நிறுவனத்திடமிருந்து இழப்புகளுக்கு ஈடான தொகை அவரால் ஏன் பெற முடியாது?

அமெரிக்க அரசு, கடந்த நாற்பது ஆண்டு காலமாக அரபு நாட்டின் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல் அரசுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. அதேபோன்று கியூபா மீதான பொருளாதாரத் தடையை நிறுத்த வேண்டும் என்றும், நிர்ப்பந்த நடவடிக்கைகள் எதுவும் எடுத்திடாது அணுசக்திப் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் கோருகிறார்கள்.

நவம்பர் 8 அன்று நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் அவர் உரையைக் கேட்பார்கள். அதே நாளன்று, நாடு முழுதும் இந்திய மக்களின் எண்ணங்களைத் தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்படும். அவற்றை அதிபர் ஒபாமாவும் கேட்டிட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மெகா ஊழல் ஆ.ராசாவை நீக்குக! சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுதில்லி, நவ.4-

2ஜி தொலைபேசி அலைவரி சைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்கெனவே கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுக் களையும், மத்திய தலைமை தணிக் கை அதிகாரி உறுதிப்படுத்தி இருக் கிறார் எனவே அதன் அடிப்படை யில் பிரதமர் செயல்பட வேண்டும், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை பதவி யிலிருந்து நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கூறினார்.

புதுதில்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டம் நடை பெற்றது. அதில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஆ. ராசா வின் கீழ் இயங்கும் தொலைத் தொடர்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறதென்றும், எனவே அமைச்சர் ஆ.ராசாவைப் பதவிநீக் கம் செய்து, முறையான விசாரணை நடத்தி, ஊழலுக்குக் காரணமான வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அர சுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட் டக்கூடிய விதத்தில் உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும் என் றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி வந்தோம். இது தொடர் பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்று கடிதங்கள் எழுதியிருக்கி றோம். 2008 பிப்ரவரியில் ஒரு கடித மும், 2008 நவம்பரில் ஒரு கடிதமும் பின்னர் கடைசியாக 2010 மே- யில் ஒரு கடிதமும் எழுதியிருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உண்மை என்று மத்திய தலைமைத் தணிக் கை அதிகாரி தற்போது தெரிவித் திருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் கார ணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப் பை நாங்கள் கூட குறைத்து மதிப் பிட்டுவிட்டோம். உண்மையில் அதன் மதிப்பு என்பது சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடிக் கும் அதிகம் என்று தெரிவித்திருக்கி றார். நாட்டில் இவ்வளவு பெரிய மெகா ஊழல் இதற்குமுன் நடை பெற்றதில்லை.

தலைமைத் தணிக்கை அதிகாரி மேலும், 2008 ஜனவரியில் கொடுக் கப்பட்ட 122 உரிமங்களில் 85 உரிமங்கள், மத்திய தொலைத் தொடர்புத்துறை வரையறுத்துள்ள நிபந்தனைகளை திருப்திப்படுத்த வில்லை என்றும் குறிப்பிட்டிருக்கி றார். 72 உரிமங்கள் போதுமான அளவு மூலதனம் இல்லாத கம் பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டி ருப்பதாகவும், 27 உரிமங்கள் தொலைத்தொடர்புத்துறை வரை யறுத்துள்ள நிபந்தனைகளைத் திருப்திப்படுத்த தவறிவிட்டன என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கிற ஊழலின் அளவை ஆராய்ந்தோமானால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மூன்று விழுக்காடாகும். சுகா தாரத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையைவிட எட்டு மடங்கிற்கும் அதிகமாகும். கல்விக் காக ஒதுக்கியுள்ள தொகையைவிட மூன்றரை மடங்காகும். இந்த மிகப் பெரும் மெகா ஊழலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங், நாட் டில் உள்ள சட்டவிரோத மூலதனம் குறித்து அடிக்கடி கவலைப்படு கிறார். ஆனால் இவரது ஆட்சியில் தான் மெகா ஊழல்கள் மூலம் சட்டவிரோத மூலதனம் நாட் டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் ஊழல், தற்போது மும்பை யில் கார்கில் வீரர்களுக்கு வீடுகள் கட்டித்தந்ததில் ஊழல். சட்ட விரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடித்து அயல்நாடு களுக்கு ஏற்றுமதி செய்த ஊழல், எல்லாவற்றையும் விஞ்சும் 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல். இவை அனைத்தும் சட்டவிரோத மூலதன மின்றி வேறென்ன?

எனவே பிரதமர், இந்த மெகா ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். தற் போது 3ஜி அலைவரிசை ஏலத் திற்கு விட்டதுபோல் மீண்டும் 2ஜி அலைவரிசையை ஏலத்திற்கு விட்டு, இழந்த தொகையை, உரிமம் பெற்றவர்களிடமிருந்து வசூலித் திட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அரசுக்கு இழப்பு ஏற் பட அனுமதித்திடக் கூடாது. அத் தொகைகளை உரிமம் எடுத்தவர் கள் தர மறுத்தால், அவர்களுக்கு அளித்த உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, அவர்கள் ஊழல் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி தெரிவித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுத்திட வேண்டும்.

இந்த விசாரணைகள் பாரபட்ச மின்றி நடைபெறுவதை உறுதிப் படுத்திட இந்த ஊழல்கள் நடை பெற்ற சமயத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதும் அதன் அமைச்சராக இருப்பவருமான ஆ.ராசா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Friday, October 29, 2010

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூர முகம் - மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது



விக்கி லீக்ஸ்(Wicky Leaks) என்னும் இணைய தளம் வெளிப்படுத்தி இருக்கும் அமெரிக்க அரசின் ரகசிய யுத்த ஆவணங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமுகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறது. ‘உலகை உய்விக்க வந்த உத்தமன்’ என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், மற்ற நாடுகளில் நடைபெறும் ‘மனித உரிமைகள் மீறல்கள்’ தொடர்பாக அடிக்கடி ஆர்ப்பரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை சொரூபத்தை அது உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. ‘விக்கி லீக்ஸ்’ வெளியிட்டிருக்கும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களில் கண்டுள்ள விவரங்களிலிருந்து, இராக்கில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது வெளி உலகிற்குத் தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள், 2004 முதல் 2009 வரையிலான காலத்தில் இராக்கில் சண்டை நடந்த சமயத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் யுத்த நடவடிக்கைகளைத் பட்டியலிட்டிருக்கின்றன. எவ்வளவு கீழ்த்தரமான முறையில் அமெரிக்க மற்றும் அதற்கு ஆதரவாக நின்ற நாடுகளின் துருப்புக்கள் இராக்கியர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான முறைகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டன என்பதை இந்த ஆவணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க ஆதரவு இராக் படைகள் அபு கிராய் சிறைச்சாலையில் நடத்தியுள்ள கொடூரமான அத்துமீறல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

‘விக்கி லீக்ஸ்’ இந்த ஆவணங்களை ‘தி நியுயார்க் டைம்ஸ்’, ‘தி பிரிட்டிஷ் டெய்லி’, ‘தி கார்டியன்’, பிரஞ்சு இதழான ‘லீ மாண்டே’ (Le Monde) மற்றும் ஜெர்மன் சஞ்சிகை ‘டெர் ஸ்பீஜெல்’ (Der Spiegel) ஆகியவற்றிற்குக் கிடைக்குமாறு செய்திருக்கிறது. இதனை அடுத்து இது உலகின் மனச்சாட்சியையே உலுக்கிவிட்டது. இந்தக் கசிவுகள் அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் கசிவுகளாகக் கருதப்படுகின்றன.

‘விக்கி லீக்ஸ்’ ஆவணங்கள் வெளிப் படுத்தியுள்ள கொடூர சித்திரவதைகள், கொலைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் அடிப்படையில் இராக்கில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராணுவம் ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொண்டிட பராக் ஒபாமா கட்டளையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.நா. ஸ்தாபனத்தின் சித்திரவதைகள் தொடர்பான தலைமைப் புலனாய்வாளர் மான்ஃபிரெட் நோவாக் சித்திரவதைகளுக்கு எதிராக ஐ.நா.கன்வென்ஷனின் நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதை இவை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார். எனவே, ஒபாமா நிர்வாகம், இதன்மீது புலனாய்வு செய்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டிஷ் கூட்டணி அரசாங்கமானது, இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள், உண்மையில் மிகவும் ‘அசாதாரணமானவை’ என்றும் ‘அதிர்ச்சியளிக்கக்கூடியவை’ என்றும் சித்தரித்திருக்கிறது. இங்கிலாந்தின் துணைப் பிரதமரான, நிக் கிளெக், ‘‘டோனி பிளேர் அரசாங்கமானது 2003 மார்ச்சில் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு இராக்கில் நுழைந்தது ‘சட்டவிரோதமான’ செயல்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆவணங்கள் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் விவரங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. இராக்கில் போர் தொடுக்க அமெரிக்கா, அதிகமான அளவில் தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களைச் சார்ந்திருந்ததாகவும், உலகில் மேற்கொண்ட யுத்தங்கள் எதிலும் இதற்கு முன் அது இவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் ஆவணங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவானது இராக்கிலும் பின்னர் ஆப்கானிஸ்தானத்திலும் நடைபெற்ற சண்டைகளில் தன் நாட்டின் போர்வீரர்களைவிட அதிகமான அளவில் ஒப்பந்தக்காரர்களை ‘அவுட்சோர்சிங்’ முறையில் அமர்த்தி இருந்தது என்பதும் இவ்வாறு அதிர்ச்சியளிக்கும் விவரங்களில் ஒன்றாகும். தன் நாட்டின் போர் வீரர்களைவிட ஒப்பந்தக்காரர்கள் எண்ணிக்கை அதிகம் என்று அது கூறுகிறது. ஆப்கானிஸ்தானத்தில் இன்றைய தினம் வன்முறையைப் பரப்பிக் கொண்டிருப்பதும், அதன் மூலம் தாலிபான்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதும் இத்தகைய ஒப்பந்தக்காரர்கள்தானாம். இதனை அடுத்து இப்போது அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் அதிக அளவு துருப்புக்களைப் பயன்படுத்த இருப்பதையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நவீன நாகரிக உலகில் இவ்வாறு மனித உரிமை மீறல்கள் மற்றும் மிகக் கொடூரமான யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளமைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பதில் சொல்லியேயாக வேண்டும்.
அதிபர் ஒபாமா நம் நாட்டிற்கு விரைவில் வர இருக்கும் இச்சமயத்தில், இந்தியா இப்பிரச்சனைகளை எழுப்பிட வேண்டும். இராக்கில் அமெரிக்க ராணுவப் படையெடுப்புக்கு மறுப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டும். (உண்மையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, இடதுசாரிகள் கண்டனம் (condemn) தெரிவிக்க வேண்டும் என்றுதான் கோரியிருந்தார்கள். ஆயினும் மற்ற கட்சிகள் அதற்கு உடன்படாது, இவ்வாறு ‘மறுப்பு தெரிவித்து’ (disapprove) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.) மேலும் இந்தியா அமெரிக்க அதிபரிடம், மும்பையில் 26/11 நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உள்ள தொடர்புகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தொடர்பாகவும் பேசிட வேண்டும். அவன், இரட்டை ஏஜண்டாக இருந்தது - அதாவது பாகிஸ்தானில் அவன் பயங்கரவாதிகளின் முகாம்களில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், லஸ்கர்-இ-தொய்பா மூலமாக அல்கொய்தா இயக்கத்திற்கும் அமெரிக்க உளவு ஸ்தாபனங்களுக்கும் - வேலை செய்துகொண்டிருந்தான் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. ஹெட்லி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து 12 பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறான். ஹெட்லியின் மூன்று மனைவிமார்கள் அமெரிக்க அரசாங்கத்தை முதலில் 2005இலும் பின்னர் மீண்டும் 2008இலும் ஹெட்லி, லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றும், மும்பையில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான் என்றும் எச்சரித்திருந்தார்கள் என்று ‘தி நியுயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தபோதிலும் அவற்றின் மீது அமெரிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம், இத்தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு பிரதானமாக இருப்பது வெளியுலகத்திற்குத் தெரிய வந்துவிடலாம் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கலாம் என்று ‘தி நியுயார்க் டைம்ஸ்’ மேலும் குறிப்பிட்டிருக்கிறது.

இப்பிரச்சனை தொடர்பாகவும் ஒபாமா நிர்வாகம் தெளிவுபடுத்திட வேண்டும். இந்தியாவிற்கு எதிராக அதன் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளில் எவர் ஈடுபட்டாலும் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம் என்கிற திட்டவட்டமான உறுதிமொழியை இந்தியாவிற்கு அது அளித்திட வேண்டும். ஆயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நலன்களுக்கு உகந்தவிதத்தில்தான் செயல்படும் என்பதையே வரலாறு நமக்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. எக்காலத்திலும் வேங்கை தன் புள்ளிகளை மாற்றிக்கொள்ளாது.
இராக்கிற்கு எதிராக போர் புரிந்ததற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிய அனைத்தும் தவறானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஆயினும், அதன் அடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியம், மீண்டும் ஒருமுறை, தன் கொடூரமான முகத்தை, உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளையும் மனித குல விடுதலையையும் நேசிக்கும் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அது செய்திட்ட கொலைபாதகச் செயல்களுக்கு அதனைப் பொறுப்பேற்கவும் கோர வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)