Showing posts with label Sitaran Yechury. Show all posts
Showing posts with label Sitaran Yechury. Show all posts

Sunday, August 16, 2020

‘புதிய இந்தியா’வின் கதை: இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதேயாகும்

 

‘புதிய இந்தியா’வின் கதை:

இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதேயாகும்

-சீத்தாராம் யெச்சூரி

இந்திய சுதந்திரதினத்தின் 73ஆவது ஆண்டுதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் எதிர்காலத்தில் அதற்கு மரணசாசனம் எழுதும் விதத்தில் புதியதொரு கதை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரத்தை எய்திய இந்தியா, 2019 ஆகஸ்ட் 5இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-A ஆகிய பிரிவுகளை ரத்து செய்ததன் மூலமும், பின்னர் 2020 ஆகஸ்ட் 5 அன்று ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடி முறையாக அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலமும் இந்தியாவின் உண்மையான விடுதலைக்கான தினமாகும் என்று ‘புதிய இந்தியாவை’க் கதைப்பவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இவர்களின் இந்தப் புதிய கதை, வீரஞ்செறிந்த இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும், அதன்பின் உருவாகியுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும்  முற்றிலும் நேரெதிரானதாகும். இதுதான் பிரதமர் மோடியின் அயோத்தி உரையின் சாரமாகும். இது குறித்து பின்னர் நாம் வருவோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நம் மக்கள் மற்றும் நம் நாட்டின் வளமான பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாங்கினைப் பிரதிபலிப்பதாகும். இந்தியாவில் உள்ள வேற்றுமைகளுக்கு இடையேயுள்ள பொதுவான பண்புகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். மொழிரீதியாக, இனரீதியாக, மத ரீதியாக மற்றும் இதுபோன்றுள்ள அனைத்து வேற்றுமைகளின் பன்முகத்தன்மைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் சமத்துவ அடிப்படையில் மதித்து, நடந்துகொள்ள வேண்டும். இவ்வேற்றுமைப் பண்புகளை ஒரே சீராக்குகிறோம் என்ற பெயரில் திணிக்கப்படும் எவ்வித முயற்சியும் சமூக வெடிப்புக்கே இட்டுச் செல்லும். ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அங்கமான பாஜக, அரசாங்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு மத அடிப்படையில் சீரான தன்மையைத் திணித்திடும் முயற்சிகள், ஓர் எதேச்சாதிகார/சர்வாதிகார ஆட்சியின்கீழ் உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரிகள் (internal enemies) என அவர்களால் வர்ணிக்கப்படுபவர்களுக்கு எதிராக பாசிஸ்ட் முறைகளைப் பிரயோகிப்பதன் மூலம் ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு வேட்டுவைத்திடும்.

இத்தகையதொரு ‘புதிய இந்தியா’வை நிறுவுவது என்பது, மோடி அரசாங்கத்தின் கண்டுபிடிப்பு அல்ல. இதற்கு சுமார் நூறாண்டுகால வரலாறு உண்டு. 1925இல் ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டதிலிருந்து, 1939இல் கோல்வால்கரால் ஒரு பாசிச இந்து ராஷ்ட்ரத்தின் குறிக்கோளை எய்திட, சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் ஸ்தாபனக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வரலாற்றைப் பெற்றிருக்கிறது.

இந்திய மக்கள் இவர்களின் சித்தாந்தத்தை நிராகரித்ததுடன், விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்று அமைத்திட்ட சுதந்திர இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக உறுதியானமுறையில் பிரகடனம் செய்தார்கள். இது, 1947இல் நாடு பிளவுண்டு பாகிஸ்தான் ஓர் இஸ்லாமியக் குடியரசாக அமைக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிரானதாகும். எனினும், அப்போதிருந்தே, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு குணாம்சத்தை மாற்றியமைப்பதற்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கடந்த எழுபதாண்டு காலமாக செயல்பட்டு, இன்றுள்ள நிலையை எட்டியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள்

இவர்களின் ‘புதிய இந்தியா’விற்கு முதலாவதாகவும், முதன்மையானதாகவுமான தேவை என்பது இந்திய அரசமைப்புச்சட்டத்தால் வரையறுக்கப்பட்டு, கெட்டிப் படுத்தப்பட்டுள்ள பழைய இந்தியாவை ஒழித்துக்கட்டுவதாகும். அரசமைப்புச்சட்டத்தின் மீதான இத்தாக்குதல்கள் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியில் உக்கிரமடைந்துகொண்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு என அனைத்தும் அரித்துவீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அரசமைப்புச்சட்டத்தின் மீதான இத்தாக்குதல் மூலம், அரசமைப்புச்சட்டத்தின் செயல்பாடுகளையும், மக்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்த உத்தரவாதங்களையும் பேணிப்பாதுகாத்திடக்கூடிய விதத்தில்,  சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து, செயல்பட்டுவந்த அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் அவற்றை அரித்துவீழ்த்த வேண்டியது அவசியமாகிறது. அரசமைப்புச்சட்டத்தால் வரையறுக்கப்பட்டபடி, நம் குடியரசின் மூன்று முக்கிய அங்கங்களாக ஆட்சி அதிகாரம் (Executive), நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் (the legislature) மற்றம் நீதித்துறை (the judiciary) ஆகிய மூன்றும் விளங்குகின்றன. ஒவ்வொன்றும் தனித்தனிதான். ஆனாலும் ஒன்றுக்கொன்று தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு உதவுவனவாகும்.

நாடாளுமன்றம் மிகவும் மோசமானமுறையில் ‘பெரும்பான்மையின் கொடுங்கோன்மை’யை (‘tyranny of the majority’) அமல்படுத்தும் ஒன்றாக குறைக்கப்பட்டு, அரித்துவீழ்த்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற நடைமுறைகள், கமிட்டி செயல்பாடுகள் மற்றும் விவாதங்கள் அனைத்தும் அரித்துவீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்போக்கு மிகவும் ஆபத்தானதாகும். எப்படியெனில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மையக்கருவே, மக்களின் இறையாண்மையை மக்களுக்குப் பதில்கூற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுவதன் மூலமும், அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய விதத்திலும் செயல்படுத்துவதன் மூலமேயாகும். இப்படித்தான், நாம், இந்திய மக்களாகிய நாம்… என்று அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் அளிக்கப்பட்டுள்ளதுபோன்று நாம் நம்முடைய இறையாண்மையை நடைமுறைப்படுத்துகிறோம். நாடாளுமன்றம், செயல்படா நிலைக்கு மாறுமானால், பின், மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்வது என்பதற்கோ, ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் சொல்வது என்பதற்கோ, விடைகொடுக்கப்பட்டுவிடுகிறது. இதன்மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக் கொண்டுவிடுகிறது.

நீதித்துறை

அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துக்கள் ஆட்சி செய்பவர்களால் மீறப்படக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தும்விதத்திலும், அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களை உயர்த்திப்பிடித்திடும் விதத்திலும் ஒரு சுயேச்சையான நீதித்துறை நிறுவப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக மிகவும் அபாயகரமானமுறையில் நாம் பார்த்துவருவதைப்போன்று, நீதித்துறையின் பாரபட்சமற்ற போக்கும், சுதந்திரமும் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுமானால், பின் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்படுவது என்பது தொடர்பாக நீதித்துறையின் மேற்பார்வை என்பதே இல்லாது ஒழிந்துவிடும்.

தேர்தல் ஆணையம்

நாட்டில் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதன் மூலமும், போட்டியிடும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை அளிப்பதன் மூலமும் நம் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போக்கை நிலைநிறுத்திட இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சுதந்தரமாகவும் பாரபட்சமற்றமுறையிலும் ஒரு மைல்கல்லாக இருந்து வந்திருக்கிறது. இதுவும் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது, பின் அரசாங்கங்கள் உண்மையில் மக்களின் தீர்ப்பையோ அல்லது மக்களின் குரலையோ பிரதிபலிப்பதாகக் கூற முடியாது.

அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிடும் நிறுவனங்களான மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கத்துறை, இலஞ்ச ஒழிப்புத்துறைகள் (Vigilance Department, etc.,) முதலானவை நாட்டில் கிரிமினல் மற்றும் சிவில் குற்றங்கள் புலனாய்வு செய்யப்படுவதையும், அக்குற்றங்களைப் புரிந்தோர் நாட்டின் சட்டங்களால் தண்டிக்கப்படுவதையும் உத்தரவாதம் செய்யும் விதத்தில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தன. இவையும் அரசின் அரசியல் அங்கமாக சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு செயல்படத்தொடங்கினால், பின் ஆளும் கட்சியினரின் அனைத்துக் குற்றங்கள் மற்றும் ஊழல்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதோடு, அவர்களை எதிர்ப்போரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள், மிரட்டப் படுவார்கள் மற்றும் வாய்மூடி மௌனிகளாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அரசமைப்புச்சட்டம் முழுமையாக அரிக்கப்படுவதும் அதன்கீழ் இயங்கிடும் நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுத்து, ‘கூட்டுக்களவாணி முதலாளித்துவம்’ கொழுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதும், ஆளும் கட்சியால் மாபெரும் அளவில் பணபலத்தைக் குவிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்திடும். இது, ஒரே அடியில், ஜனநாயகத்தின் தரத்தை அரித்துவீழ்த்திடும். இது, எந்தவொரு தேர்தலிலும் ஓர் அரசாங்கம் அமைவதற்கான மக்களின் தீர்ப்பை குதிரை பேரத்தின் மூலமாக மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைமைகளை உருவாக்கி விடும். (இப்போது பல மாநிலங்களில் பாஜக தேர்தலில் தோற்றாலும் பின்னர் அங்கே வென்ற சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கி அரசாங்கம் அமைவதற்கு வழிவகுத்துக்கொடுத்திருப்பது  வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது)  

பகுத்தறிவின்மீது தாக்குதல்

இத்தகைய ‘புதிய இந்தியா’வின் கதை வெற்றிபெற வேண்டுமானால், இவர்களின் சித்தாந்தத்திற்கேற்ப இந்திய வரலாற்றை மாற்றியமைத்திடும் வேலையைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனவேதான் இந்தியக் கல்வி அமைப்புமுறையையும், தங்களின் பகுத்தறிவற்ற, பத்தாம்பசலித்தனமான புராணக் குப்பைகளையும், கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திடும் விதத்தில் பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பதும் இவர்களுக்கு அவசியமாகிறது. அதற்காகத்தான் அறிவியல்மனப்பான்மையுடன் விளங்கும் பாடங்களை அப்புறப்படுத்த வேண்டியதும் இவர்களுக்குக் கட்டாயமாகிறது. இதேபோன்று கலாச்சாரத்துறையிலும், அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் கல்விமையங்களை, இந்தியக் கலாச்சாரத்தின் ஒத்திசைவு பரிணாமவளர்ச்சியை மூடிமறைத்துவிட்டு, தாங்கள் விரும்பும் ஒரேசீரான மற்றும் ஒரேவகையான கலாச்சாரத்தைத் திணித்திடும் விதத்தில் மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகிறது. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையுடன் விளங்கும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டிடும் கலாச்சாரத்திற்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். இதன் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதி, கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக இந்தியாவின் ஒத்திசைவு வரலாற்றைக் கற்பதைக் கைவிட்டுவிட்டு, அதற்குப்பதிலாக தங்கள் சித்தாந்தத்திற்கேற்ப புராண இதிகாசங்களை வரலாறாக எழுதவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அகழ்வாராய்ச்சி, கடந்தகாலத்தின் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டு மேற்கொள்வதற்கு எதிராக, இந்துத்துவாவின் அறிவியலற்ற கருத்துக்களையொட்டி, வரலாற்றை எழுதக்கூடிய விதத்தில் சாட்சியங்களை உருவாக்கிட வேண்டியிருக்கிறது.

இவர்களின் ‘புதிய இந்தியா’வின் வெற்றி என்பது நம் சமூகத்தில் ஒரு புதிய குறியீட்டுவாதத்தை உருவாக்குவதன் மூலம் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது. இதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்கூட, எப்படி ஹிட்லர் தன்னுடைய இழிபுகழ் கூம்பை (Dome) பெர்லினில் கட்டினானோ அதேபோன்று இங்கேயும் மிகவும் அதிக அளவில் செலவு செய்து புதிய நாடாளுமன்ற வளாகத்தை (Central Vista), இவர்கள் கட்டத் துணிந்துள்ளார்கள். நேருவின் நவீன இந்தியாவின் கோவில்கள் என்று அழைக்கப்படுபவைகளுக்கு பதில்சொல்லக்கூடிய விதத்தில் புல்லட் ரயில்கள் மற்றும் நவநாகரிகப் பெயர்களில் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

‘புதிய இந்தியா’வின் கதை, அவ்வளவு எளிதாக வெற்றிபெற முடியாது என்பதால்தான், இவர்கள் ஊடகங்களின் உடந்தையுடன் இந்திய மக்களைப் பீடித்துள்ள உண்மையான பிரச்சனைகளை மறைத்தும், அவர்களின் வேதனைகளை வெளிக்கொணராது தடுத்தும், அவற்றுக்குப் பதிலாக பொய்ச் செய்திகள், கட்டுக்கதைகள் மூலமாக மக்களின் உணர்வுகளை மாற்றியமைத்திட, மழுங்கடித்திட முயல்கின்றனர்.

தங்களின் உயிர்மூச்சாக விளங்கும் மதவெறி இந்துத்துவா வாக்குவங்கியை நிலைநிறுத்திக்கொள்வதற்காக, தங்களுடைய ‘புதிய இந்தியா’வின் ஓர் அத்தியாவசியமான பொருளாக, தலித்துகளுக்கு எதிராக, பழங்குடியினருக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்களையும் வன்முறை வெறியாட்டங்களையும் கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாக எப்போதும் சமூகப் பதற்றச் சூழ்நிலையைப் பரப்புவதையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அயோத்தியில் ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடியின் பேச்சு

அயோத்தியில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக அடிக்கல்நாட்டு விழாவில் ஆற்றிய உரை ஒருவிதத்தில் இவர்களின் ‘புதிய இந்தியா’வின் சிந்தனையை வெளிப்படுத்தும்விதத்தில் அமைந்திருந்தது.

உச்சநீதிமன்றம், அயோத்தி தாவாவில் தீர்ப்பு வழங்கியது என்றபோதிலும், அது நீதி வழங்கிடவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, நாட்டில் உள்ள சட்டத்தின்படி ஒரு கிரிமினல் நடவடிக்கை என்று கூறியுள்ளது. அதனைச் செய்தோரை விரைவில் தண்டித்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால், தாவாவுக்குரிய அந்த இடத்தில் மசூதியை இடித்திட்ட நபர்கள் வசமே கோவிலைக் கட்டுவதற்கான பணியையும் ஒப்படைத்தும் தீர்ப்பளித்திருக்கிறது. ஆயினும் இந்தக் கட்டுமானப் பணியை ஓர் ‘அறக்கட்டளை’ மூலமாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது.

ஆயினும், கோவில் கட்டும் பணியை ஓர் அதிகாரபூர்வமான அரசாங்க செயல்பாடாகவே பிரதமரும், அரசாங்கமும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி எடுத்துக் கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள பிரதமர் அதனை மீறும் விதத்தில் சென்றுள்ளார். ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருடைய மதத்தைத் தேர்வு செய்யும் அரசமைப்புச்சட்ட உத்தரவாதங்களைப் பாதுகாத்திடுவதும் உத்தரவாரதப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும். இந்த அரசாங்கத்திற்கும், நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, மதம் கிடையாது.  இத்தகைய அரசமைப்புச்சட்டத்தின் மீறமுடியாத முன்மொழிவு பிரதமராலேயே காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.   இவ்வாறு பிரதமர் மீறியிருக்கும் செயல், ஆர்எஸ்எஸ் அரசியல் திட்டத்தின் கீழான ‘புதிய இந்தியா’விற்கான சமிக்ஞையாகும்.

பிரதமர் மோடியின் பேச்சில் மிகவும் மோசமான அம்சம் என்பது அவர், நாட்டின் விடுதலைப் போராட்ட இயக்கத்தை, கோவில் கட்டும் இயக்கத்துடன் ஒப்பிட்டிருப்பதாகும். அவர் கூறியதாவது: விடுதலைப்போராட்டத்திற்காக தியாகம் செய்யாத இடம் என்று நம் நாட்டில் எதுவும் இல்லை. ஆகஸ்ட் 15, பல லட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் உருவகமாகும். இந்திய சுதந்திரத்திற்காக ஆழமாக ஏங்கிய எண்ணற்ற மக்களின் ஏக்கமாகும்.  அதேபோன்றே, ராமர் கோவில் கட்டுவதற்காக பல நூறாண்டுகளாக பல தலைமுறையினர் தன்னலமற்ற முறையில் தியாகம் செய்திருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டது. இவர்களின் ஆர்எஸ்எஸ் தொலைநோக்குப் பார்வையோ இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் கழித்துக்கட்டும் பார்வையைக் கொண்டது. இந்திய சுதந்திரப் போராட்டம் அனைவரையும் ஒன்றிணைக்கும் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக, நாட்டிலுள்ள வெகுஜனத் திரளுக்கு உத்வேகத்தை  ஊட்டி, அணிதிரட்டி, 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத்தை எய்துவதற்கு இட்டுச் சென்றது. இவர்களின் ‘புதிய இந்தியா’வின் தற்போதைய கதையளப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொன்றையும் நேரடியாக மறுதலித்திடும் ஒன்றாகும்.

அதிலும் மிகவும் முக்கியமாக, ஆர்எஸ்எஸ் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அதற்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி டாம்லே ஆகியோரின் ‘காவியின் சகோதரத்துவம், 1987’ என்னும் நூல்கூட, (The Brotherhood in Saffron by Walter K Anderson and Shridhar D Damle, 1987) ஆர்எஸ்எஸ் இயக்கமானது விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல், அது அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற ஆதாயங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனாவாதியான, மறைந்த நானாஜி தேஷ்முக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்: ஏன், ஆர்எஸ்எஸ் ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? உண்மையில், பம்பாய் உள்துறை, 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில், ஆர்எஸ்எஸ் குறித்துக் கீழ்க்கண்டவாறு கருத்தினை வெளியிட்டிருந்தது: சங் பரிவாரம், சட்டத்திற்குட்பட்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டது. குறிப்பாக, 1942இல் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாது தவிர்த்தது.

இந்த உண்மைகளை மூடிமறைப்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இப்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக, அவதூறை அள்ளிவீசிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டுதினத்தைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற, நாடாளுமன்றத்தின் நள்ளிரவு அமர்வின்போது அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா என்ன கூறினார் என்பதை நினைவுகூர்வது நலம் பயத்திடும். அப்போது அவர் கூறியதாவது: கான்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் அகமதாபாத் ஆலைகளில் பெரிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்குப்பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டனில் உள்ள அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி கூறப்பட்டிருந்ததாவது: அதன் உறுப்பினர்களில் பலருடைய நடத்தை, அவர்களில் பெரும்பகுதியினர் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களைக் கொண்டதாக இருப்பது என்பது எப்போதும் தெளிவாகத் தெரிகிறது.

இதைவிட அதிகமாக சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா?      

இந்தியாவின் எதிர்காலத்தை அழிப்பதைத் தடுத்திடுவோம்

இவர்களின் ‘புதிய இந்தியா’ என்பது, இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவது மட்டுமல்ல, இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தையும், அதனுடன் தொடர்புடைய அரசமைப்புச்சட்ட நிறுவனங்களையும், அதிகாரக்குழுமங்களையும், மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களையும், மக்களின் வாழ்க்கை மற்றும் சிவில் உரிமைகளையும் அழித்து ஒழிப்பது மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதன் மூலமும், தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலமும் இவர்களுக்கெதிராக சண்டையை மூட்டிவிட்டு இந்தியாவின் எதிர்காலத்தையே அரித்துவீழ்த்துவதுமாகும்.

இவர்களின் ‘புதிய இந்தியா’ இந்தியாவின் பொருளாதார சுயசார்பையும், அதன் அடித்தளங்களையும் அரித்துவீழ்த்துகிறது. கடந்த ஆறு ஆண்டு காலமாக இந்தியாவின் பொருளாதாரம் அழித்து ஒழித்துக்கட்டப்பட்டிருப்பது இதற்கு சாட்சியமாக விளங்குகிறது. இப்போது நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதற்காக இவர்கள் அளித்துள்ள பொருளாதார வரைபடம் பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியாவின் கனிம வளங்கள், இந்தியாவின் வனங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தின் அரசமைப்புச்சட்ட உரிமைகளை ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருத்தல், இந்தியாவின் செல்வம் அனைத்தையும் அந்நிய மற்றும் நம்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுத்திருப்பது ஆகிய அனைத்துக்கும் வகை செய்கிறது.  இந்தியாவின் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காகவும், இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதாரவிலை, விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, கொள்முதல் ஆகியவை தொடர்பாக இருந்துவந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டக்கூடியவிதத்திலும் அவசரச் சட்டங்கள் கொண்டுவந்திருப்பது ஆகிய அனைத்தும் பொது விநியோக முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும், வேளாண்-வர்த்தகத்தில் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய ஆபத்திற்கும் இட்டுச் செல்லும். இவை நமக்கு உணவு அளித்துவரும் உழவர்களை முழுமையாக நாசத்திற்குள்ளாக்கிவிடும்.

இவர்களின் இந்தப் ‘புதிய இந்தியா’, இவ்வாறாக, நம்முடைய அரசமைப்புச்சட்ட ஒழுங்கே இல்லாது ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். நம் மக்களின் வாழ்வாதாரங்கள், சுதந்திரம், கண்ணியம் மற்றும் பெரும்பான்மை மக்களின் செழுமை ஆகியவற்றையும் ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். இந்தியாவின் பன்முகத்தன்மை, அதன் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தையும் ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் பகுத்தறிவுடனான வாழ்க்கையைப் பின்பற்றுதல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டும் நெருக்கடிக்கும் இட்டுச்செல்லும்.

இவ்வாறு, இவர்கள் முன்வைத்திடும் ‘புதிய இந்தியா’வின் ஆபத்துக்களைத் தடுத்துநிறுத்தி, முறியடிப்பது அவசியமாகும். அதற்கேற்றவிதத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின சபதத்தை நாம் அனைவரும் எடுத்துக்கொள்வோம்.

(தமிழில்: ச. வீரமணி)

 

Monday, January 21, 2013

புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு - அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்




சீத்தாராம் யெச்சூரி
ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் -இன்றும் நாளையும்என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு உதயமானதின் 90ஆவது ஆண்டு விழாவும் (சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1922 டிசம்பரில் உதயமானது.) இதனுடன் சேர்ந்து கொண்டாடப் பட்டது.
இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியமானவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி,கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சி, பொஹிமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி, லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் ரஷ்யன் சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியும்  (சிபிஆர்எப்-Communist Party of Russian Federation) ஆகும்.
ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல்களில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ள பின்னணியில் இச்சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளை ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, டூமா என்கிற ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 30 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் ஆறு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு சிபிஆர்எப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திப்பினைத் தொடங்கி வைத்த ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுத் தலைவரான கெனடி ஜுகானோவ், மாஸ்கோவில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்திப்பு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டானது , சோவியத் யூனியன் உதயமான 90ஆம் ஆண்டுடன், இரண்டாவது உலக யுத்தத்தில் திருப்பு முனையாக அமைந்த, ஹிட்லரின் பாசிஸ்ட் ராணுவம் நிர்மூலமாக்கப்பட்டு, 27 ஜெனரல்களுடன் மூன்று லட்சம் பாசிஸ்ட் படையினர் சரண் அடைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டாலின்கிராடு வெற்றியின் 70ஆம் ஆண்டு தினமுமாகும்.  இதன்பின்னர், பாசிஸ்ட் படையினர் பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்த மூன்றாண்டுகளில், பெர்லினில் ஹிட்லரின் தலைமையகமான ரெய்ச்ஸ்டாக்கில் செங்கொடியை உயர்த்தியதை அடுத்து அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்ட செய்தி உலகுக்குப் பறைசாட்டப்பட்டது.
ஜுகானோவ் பேசுகையில், உலகப் பொருளாதார நெருக்கடி குறித்தும் வரவிருக்கும் காலங்களில் அது மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்தார். இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் பொதுவாக இரு அம்சங்களில் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்தார். அதாவதுஅனைத்துக் கட்சிகளும் மார்க்சிசம்-லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவை என்பதோடு, முதலாளித் துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவி உண்மையான மனிதகுல விடுதலையை எய்துவதன் மூலம் மட்டுமே தற்போதுள்ள முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டவைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டிடவரலாற்றிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும்  நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  சீத்தாராம் யெச்சூரி இச்சந்திப்பில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். இச்சந்திப்பில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரு சுற்றுக்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.  முதல் சுற்றில் ஒவ்வொருவருக்கும் இருபது நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் சுற்றில் அனைவரும் பேசியபின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சர்வதேச நிலை குறித்து அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள விவாதங்கள் உதவின. அதேபோன்று தங்கள் நாடுகளில் தாங்கள் மேற்கொண்டுவரும் உத்திகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் அனைவரும் விளக்கினார்கள். இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜுகானோவ் கூறியதைப்போல, உண்மையில் நீண்ட காலத்திற்குப்பின் நாம் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதுபோன்றதொரு கூட்டத்தில் நான் 1987இல், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் 70ஆம் ஆண்டு தினத்தில் கலந்துகொண்டேன். அதன்பின் நடைபெற்ற நிகழ்வுகள் சோவியத் யூனியன் தகர்விற்கும், எதிர்ப்புரட்சி வெற்றி பெறவும் இட்டுச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம்.
தாங்கள் விடுத்திருந்த அழைப்பில், அனைத்துக் கட்சியினரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று ஐயந்திரிபறக் குறிப்பிட்டிருந்ததால் நான் என் உரையைத் தயார் செய்து எடுத்துவரவில்லை. அதற்காக மொழிமாற்றுநர்கள் அருள்கூர்ந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். ஜுகானோவ்  கூறிய கருத்துக்களின் மீது ஒருசிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன்.
அவர்கூறியதைப் போல, வரலாற்றின் அனுபவங்களிலிருந்து முறையாகப் படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசம் வீழ்ச்சிய்டைந்தது குறித்து உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பலதங்களுக்குள் பகுப்பாய்வினைச் செய்து, சொந்த முடிவுகளுக்கு வந்துள்ளன.  1992 ஜனவரியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் 14ஆவது கட்சிக் காங்கிரசில் எங்கள் பகுப்பாய்வினை நாங்களும் செய்திருக்கிறோம்.  ஆயினும் இதன் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் இதுகுறித்து அலசி ஆராய்ந்து ஒரு மதிப்பீட்டிற்கு வரும்வரை, நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் முழுமையடைந்தது என்றோ போதுமானதென்றோ இயற்கையான முறையில் சொல்ல முடியாது.  கடந்த இருபதாண்டு காலமாக அத்தகையதொரு மதிப்பீட்டினை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு ஆய்வு தங்களிடமிருந்து  இதுவரை வரவில்லை. இப்போதாவது ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி   இந்த இடைவெளியை - மிக முக்கியமான இந்த இடைவெளியை - நிரப்பிட முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அது மேற்கொள்ளும் ஆய்வு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசத்தின் எழுபதாண்டு கால அனுபவங்களை முறையாகப் புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் உதவிடும்.
 மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக  மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு சோசலிச சமூகத்தைச் உருவாக்கிய காலம் அது, பாசிசத்தின் தோல்விக்கு அதனுடைய பங்களிப்பு, அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து காலனியாதிக்கங்கள் முடிவுக்கு வந்தமை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திலேயே வலுவானதொரு அரணாக மாறியது அனைத்தும் இக்காலகட்டத்தில்தான் நடைபெற்றது. இவ்வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாகும். எதிர்கால மனிதகுல நாகரிகத்தினை வடிவமைத்திட்டவைகளாகும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் இப் போது  கடந்த காலமாகிப்போனது.
கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் ஐந்து அம்சங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். முதலாவது, மார்க்சிசத்தின் சாராம்சம், லெனின் கூறியதைப் போன்று ‘‘துல்லியமான நிலைமைகளிலிருந்து துல்லியமான பகுப்பாய்வினை மேற்கொள்ளவேண்டும்’’ ('உடிnஉசநவந யயேடலளளை டிக உடிnஉசநவந உடினேவைiடிளே') என்பதில் அடங்கியிருக்கிறது என்கிற உண்மை இந்த அனுபவங்களிலிருந்து உறுதியாகி இருக்கிறது. இரண்டாவதாக, சோவியத் யூனியன் தகர்வு எந்தவிதத்திலும் மார்க்சிச-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலை மறுதலித்திடவில்லை. அதேபோன்று சோசலிச சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்கிற மனிதகுலத்தின் தூண்டுதலையும் அது மறுதலித்திட வில்லை. மூன்றாவதாக, நாம் முன்பு தவறாகக் கருதிக் கொண்டிருந்ததைப்போன்று, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் இடைப்பட்ட காலம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இது, வர்க்கப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றஏற்றத் தாழ்வுகளும், முன்னோக்கிச் செல்லுதலும் அதே போன்று பின்னோக்கிச் செல்லுதலும் மாறி மாறி நடைபெற்ற காலமுமாகும். இருபதாம் நூற்றாண்டு முன்னோக்கிச் சென்ற காலமாக இருந்த அதே சமயத்தில், நூற்றாண்டு முடியும் தருவாயிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பின்னோக்கிச் செல்லும் காலமாக இருந்தது. நான்காவதாக, முதலாளித்துவம் என்பது அது என்னதான் கடும் நெருக்கடிக்கு உள்ளானபோதிலும் தானாக நிர்மூலமாகிவிடாது. இறுதியாக, வரலாற்றின் குறிப்பிட்ட எந்தக் காலத்திலும், முன்னேறிவரும் சோசலிச சக்திகளின் இடைமாற்றக் காலத்தின்போது, அடிப்படைத் தீர்மானிக்கும் சக்தி, ’வர்க்க சக்திகளின் சமநிலை வலிமையை சரியாக மதிப்பீடு செய்வதையும் மற்றும் துல்லியமான முறையில் அரசியல் கொள்கைகளை உருவாக்குவதையும் சார்ந்தே இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய வர்க்கசக்திகளின் சமநிலை வலிமை  ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.
தற்போதைய அரசியல் நிலைமை
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆறு அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, இன்றைய நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்தியம்  உலகின் மீது தன்னுடைய ஒருதுருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாகத் திணித்திட விரும்புகிறது. பொருளாதாரம், அரசியல், ராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்துத் துறைகளிலும் அவ்வாறு திணித்திட வேண்டும் என்று அது விரும்புகிறது.  இரண்டாவதாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் உலக மூலதனமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சபட்ச லாபம் (யீசடிகவை அயஒiஅளையவiடிn) என்கிற தன்னுடைய கருணையற்ற குறிக்கோளை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் காலமாகும். ஆயினும், சர்வதேச நிதிமூலதனத்தின்  வெளிப்பாடு   ஏகாதிபத்தியம் தொடர்பாக லெனினது புரிதலை எந்தவிதத்திலும் மறுதலித்திடவில்லை. தொழில்துறையினருக்கும் வங்கிகள் மூலதனத்திற்கும் இடையிலான பிணைப்பு நிதி ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் (நேஒரள நெவறநநn iனேரளவசயைட யனே யெமேiபே உயயீவையட டநயனiபே வடி கiயேnஉயைட டிடபையசஉhநைள) என்கிற லெனினது புரிதல் எவ்விதத்திலும் மறுதலிக்கப்படவில்லை.  உச்சபட்ச லாபம் என்கிற தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகையே தங்களது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள்.  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தவிர்க்கமுடியாத வகையில் யுத்தங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  லெனின் ஏகாதிபத்தியம் தொடர்பாகக்கூறிய கருத்துக்கள் அவ்வாறு அவர் கூறி பத்தாண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே முதல் உலகப் போர் எழுந்ததன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் மூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உள்நாட்டு யுத்தமாக - அதாவது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஒரு வர்க்கப் போராக  மாற்றி அதனுடைய சங்கிலியில் எங்கு பலவீனமான கொக்கி இருக்கிறதோ அதனை உடைத்தெறிய வேண்டும் என்கிற லெனினது புரட்சிகர தந்திரோபாய புரிதலையும்  மிகச்சரி என்று மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.  ரஷ்யப் புரட்சி லெனினது இந்தப் புரிதலை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியது.
இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம் என்பது குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய மையத்தில் மட்டும் சுருங்கிக் கொண்டிருக்கவில்லை.மாறாக அது உலகம் முழுதும்  உச்சபட்ச லாபம் என்கிற குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற வெறித்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.   இவை அனைத்தும் இன்றைய தினம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. மாறாக,  ’’அதிகரித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில்  நிதிமூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும், தொழில்துறை, வணிகத்துறை போன்ற மற்ற அனைத்து வகையான மூலதனங்களும் அதன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் மற்றும் அதன் தலைமையின் கீழ் கொண்டுவரப்படும்’’ என்கிற ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கணிப்பினை மிகச்சரி என்று இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன. இன்றையதினம் லெனின் சொல்லிவைத்தாற் போன்று இவை மிகவும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. லெனின்அவருடைய கால கட்டத்திலிருந்த துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாகப் பரிசீலித்து ஏகாதிபத்தியம் குறித்த  அவரது புரிதலை பிரயோகித்து, ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திமுடித்தார்.  அந்தக் காலகட்டம்தான் இன்றைய தினம் மாறியிருக்கிறதே யொழிய, லெனினது பகுப்பாய்வு அல்ல.
மூன்றாவதாக, இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் சுரண்டலை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவு படைத்திருக்கிறது. சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்று எண்ணற்ற துறைகள் அதன் கொள்ளை லாப வேட்டைக்கு இன்றைய தினம் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்காவதாககொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்பதையேக் குறியாகக்கொண்ட  அதனுடைய தங்குதடையற்ற சுரண்டல்தான் இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடிக்கு முதற்காரணமாகும். இந்நெருக்கடி இன்றைய தினம் அதன் ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறது. உலக மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாகவே கூர்மையான வீழ்ச்சியுடன் இது தொடங்கியது. அதீத உற்பத்தி நெருக்கடியை எதிர்பார்த்து உலக முதலாளித்துவம் அதலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு மிக எளிதான விதத்தில் கடன்கள் அளிக்க முன்வந்தன. இவ்வாறு கடன் வாங்கிய மக்கள் அதனைச் செலவழிப்பதன் மூலம் தாங்கள் பெறும் கொள்ளை லாபம் தொடரும் என்று அது கருதியது. ஆனால் கடன் வாங்கிய மக்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஏற்பட்டது. அது, 2008ஆம் ஆண்டைய உலக நிதி மந்தநிலைக்கு (படடியெட கiயேnஉயைட அநடவனடிறn) இட்டுச் சென்றது. இந்நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரணங்கள் (hரபந யெடை-டிரவ யீயஉமயபநள)  வழங்கின. இவ்வாறு கார்ப்பரேட் திவால்நிலைமைகள் அந்தந்த நாடுகளின் அரசுகளின் திவால் நிலைமைகளாக மாற்றப்பட்டதை அடுத்து நெருக்கடியின் நான்காவது கட்டம் ஏற்பட்டது. பின்னர் முதலாளித்துவ நாடுகள் தங்கள் திவால்நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கின. இது நெருக்கடியின் ஐந்தாவது கட்டமாகும். அரசுகளின் இந்நடவடிக்கைகளினால் மக்களின் வாங்கும் சக்தி மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டது. இது நெருக்கடியின் ஆறாவது கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான காரணங்களாகும். எனவேதான் வரவிருக்கும் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஜுகானோவ் கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன். உண்மையில், 2014ஆம் ஆண்டும் இந்த ஆண்டைவிட மேலும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறியதை விரிவுபடுத்தி நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தாங்கள் வாங்கியுள்ள அபரிமிதமான கடன்களை மீண்டும் செலுத்த முடியா நிலை ஏற்பட்டு அவை மீண்டும் திவால்நிலைக்கு வரும்போது நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நெருக்கடி தீர முதலாளித்துவ அமைப்பினால் விடை காண முடியாது. அதனுடைய அரசியல் மாற்றான, சோசலித்தால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்.
ஐந்தாவதாக, உலகம் முழுதும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகள். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஓர் உத்வேகமூட்டும் உதாரணமாக முன்னிற்கின்றன. ஆயினும், இங்கும் கூட, சோசலிச கியூபாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே நவீன தாராளமயத்திற்கு மாற்றினை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை அளிக்கக்கூடிய விதத்தில் முன்னேறும் என்று நாம் நம்புவோமாக.
பிரதான கடமை
இறுதியாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வரும் எதிர்ப்பலைகளை ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் நவீன தாராளமயத்திற்கும் எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள யுத்தங்களுக்கு எதிராகவும் உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமயமாதல் (உடiஅயவந உhயபேந) போன்றவற்றிற்கு எதிராகவும் உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும். உலகளாவிய வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக  ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   இவ்வியக்கத்தின் அச்சாணியாக கம்யூனிஸ்ட்டுகள் நிற்க வேண்டும்.
இதனை எப்படிச் செய்யப்போகிறோம் என்பதே இன்றைய தினம் நம்முன் விவாதத்திற்கு வந்துள்ள முக்கிய அம்சம். இங்கு பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொன்றுமே  தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை புரட்சிகரமான முறையில் மாற்றி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. புறச் சூழல் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை புரட்சிகரமாகத் தூக்கி எறியக்கூடிய அளவிற்கு  மிகவும் கனிந்துள்ளது என்றபோதிலும், லெனினிஸ்ட் அகக்காரணி, அதாவது மார்க்சிச-லெனினிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளின் தலைமையின் கீழ் சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினரின் வர்க்கப் போராட்டங்களின் வலுபலவீனமாகவே  இருப்பது தொடர்கிறது.  தற்போதுள்ள அகக்காரணிபுறச் சூழலை ஒரு புரட்சிகரமான எழுச்சிக்குப் பயன்படுத்தக்கூடிய அளவில் சக்திபடைத்ததாக இல்லை. அவ்வாறு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளிலும் வந்துள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன் உள்ள பிரதானக் கடமையாகும்.
இந்தியாவில் எங்களுடைய அனுபவங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற மத்திய அரசாங்கத்தின் மூலம் தங்களுடைய நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திட அனுமதிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் இடதுசாரி சக்திகள் வலுவாகவுள்ள இடங்களில் அதனைப் பலவீனமாக்குவதற்காகவும் அதனைத் தாக்குவதற்காகவும் ஒன்று சேர்ந்தன. இவர்களின் அரசியல் கூட்டணி மாமேதைகளான காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் வரிகளில் கூறியுள்ள வாசகங்களை நினைவூட்டும்விதத்தில், இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். இம்மாநிலத்தில் கடந்த முப்பதாண்டு களாக  தொடர்ந்து ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியிலிருந்தோம். 2009இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப்பின் 600க்கும் மேற்பட்ட நம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் நம்மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்துவரும் அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தகையப் பகுதிப் போராட்டங்களின் மூலமாகத்தான் வலுவான வர்க்கப் போராட்டங்களைக் கட்டிட முடியும். எங்களுடைய அனுபவத்தில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே, அகக்காரணியை  வலுப்படுத்திட முடியும் என்று கருதுகிறோம்.
இதேபோன்று மற்ற தோழர்களின் கருத்துக்களையும் அவர்கள் பெற்ற படிப்பினைகளையும் தெரிந்துகொள்வதில் ஆவலாக இருக்கிறேன்.
இறுதியாக, இந்த ஆண்டு மாஸ்கோ மிகவும் குளிராக இருக்கிறது. இத்தகைய கடும் குளிர்காலத்தின்போதுதான் லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி மகத்தான வெற்றி பெற்றது என்கிற உண்மையும், இதேபோன்ற நிலைமைகளின் கீழ்தான் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் முறியடிக்கப்பட்டது  என்கிற உண்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக்கூடிய மூலக்கூறுகளாகும்.   தத்துவார்த்த உறுதியுடன் தீர்மானகரமான முறையில் செயல்பட்டால் அனைத்துவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும் என்பதனை இவை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. 
இதுவரை என் உரையைக் கவனமாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தோழர்களே.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(தமிழில்: ச.வீரமணி)