Friday, December 17, 2021

மகளிரின் மண வயதை 21ஆக உயர்த்தியதை ரத்து செய்திட வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை

 


மகளிரின் மண வயதை 21ஆக உயர்த்தியதை ரத்து செய்திட வேண்டும்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை

புதுதில்லி, டிச.17-

ஒன்றிய அரசாங்கம், மகளிரின் மண வயதை 18 வயதிலிருந்து 21ஆக உயர்த்தியிருப்பதை ரத்துசெய்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கீர்த்தி சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகளிரின் மண வயதை 18இலிருந்து 21ஆக உயர்த்தியிருக்கும் ஒன்றிய அமைச்சரவையின் முடிவுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முற்றிலுமாக ஒத்துப்போகவில்லை.  பெண்களின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளபோதிலும், பெண்களின் மிகவும் அடிப்படைத் தேவைகளான ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அளிப்பதில் ஒன்றிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முழுமையாக பயனற்றதாகும்.

உண்மையில் இது எதிர்விளைவையே ஏற்படுத்திடும். பெண்களின் திருமண வயதை உயர்த்தியிருப்பதன் மூலம் பெண்கள் தங்கள் கணவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். தாங்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொள்வது முன்பே இமாலயப் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், இவ்வாறு வயதை உயர்த்தியிருப்பது அவர்களின் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவதற்கான வழியாகவும் செயல்படும்.

இளம் நபர்களிடையே ஒருமித்த பாலியல் செயல்பாடு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுவதால், பெண்களைக் கடத்தல், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தல் மற்றும் 2006ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்களைப் புரிவதற்கும், இவ்வாறு இணைந்தவர்களைப் பிரித்து வைப்பதற்கும், ஆண்களைச் சிறையில் அடைப்பதற்கும் இட்டுச்சென்றுள்ளதாகவும் பல ஆய்வுகள் காட்டுகின்றன, நம் அனுபவங்களிலிருந்தும் அதனை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். எனவே ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கை பெண்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமைகளான அந்தரங்கம் (privacy) மற்றும் சுயேச்சையான முடிவுகள் எடுப்பதற்கான உரிமைகளில் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.

அதேபோன்றே இவ்வாறு மகளிரின் மண வயதை உயர்த்தியிருப்பது அவர்களுக்கிடையே பாலின சமத்துவத்தை ஏற்படுத்திடும் என்பதும் தவறேயாகும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் வயதை 18ஆகக் குறைத்திட வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு வந்திருக்கிறது. அதாவது, எப்போது ஒருவர் வாக்களிப்பதற்கான உரிமையைப் பதினெட்டு வயதில் பெற்றுவிட்டாரோ அப்போதே அவர் தான் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கான தகுதியையும் பெற்றுவிடுகிறார். 18ஆவது சட்ட ஆணையமும் திருமண வயது ஆண்களுக்கும் 18 என நிர்ணயித்து சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இது, பையனை பல்வேறு குற்றத் தண்டனைகளுக்கு ஆளாவதிலிருந்து தடுத்திடும்.

ஒன்றிய அரசாங்கம் தன் கீழ் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS), கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு முதலானவற்றிற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்துவரும் நிலையில், இவ்வாறு பெண்களின் திருமண வயதை உயர்த்தியிருப்பது திசை திருப்பும் உத்தியேயாகும் என்பது தெளிவாகத்     தெரிகிறது.

நாங்கள் மேலே குறிப்பிட்டதுபோன்று பெண்களின் ஊட்டச்சத்து நிலை அவர்கள் பிறந்த காலத்திலிருந்து, அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்காக அரசு நிர்ணயிக்கும் 21 வயது வரையிலும் போதுமான அளவிற்கு இல்லாது மிகவும் குறைவாகவே இருந்து வரும் நிலையில்,  அவர்கள் திருமணம் செய்வார்களானால், அதன்பின் அவர்களுக்குக் குழந்தை பிறந்தால், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் சுகாதாரம் அல்லது இறப்பு விகிதத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது.

எனவே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மகளிரின் மண வயதை 21ஆக உயர்த்திடும் முடிவை ஒன்றிய அரசாங்கம் ரத்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

(ந.நி.)

 

No comments: