Monday, September 5, 2016

காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சித் தூதுக்குழு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தது


காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சித் தூதுக்குழு
அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தது
புதுதில்லி/ஸ்ரீநகர், செப். 5-
காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சித் தூதுக்குழுவினர் அனைத்துத்தரப்பு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பல்வேறுவிதமானவர்களையும் சந்தித்தனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் சென்றுள்ள முப்பது உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஸ்ரீநகரில் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களையும், சிவில் சமூகப் பிரமுகர்கள், பிரஜைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் பலரையும் சந்தித்தது. நாங்கள் ஆளுநர் என்.என். வோராவை மாலையில் சந்தித்தோம். அவர்கள் அனைவருமே எங்களிடம் மாநிலத்தில் நிலவும் பல்வேறுவிதமான சூழ்நிலைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களையும் எங்களிடம் விவரித்தார்கள்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சார்ந்த சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சார்ந்த ஜேபி யாதவ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த து. ராஜா மற்றும் நான் மாநிலத்தில் இயங்கும் அனைத்துவிதமான அரசியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்கிட வேண்டும் என்று தீர்மானித்தோம்.  அதன் ஒரு பகுதியாக ஐந்து ஹரியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்களின் நான்கு பேர், யாசின் மாலிக், பேராசிரியர் அப்துல் கனி பட், மிர்வாய்ஸ் ஒமர் பரூக் மற்றும் சபீர் ஷா எங்களைச் சந்தித்தனர். ஆயினும் அவர்கள் எங்களுடன் அரசியல் பிரச்சனைகளை விவாதிக்க மறுத்துவிட்டார்கள். அனைத்துக் கட்சித் தூதுக்குழுவினரிடம் அவ்வாறு விவாதிக்கக்கூடாது என்று  ஹரியத் கூட்டாக தீர்மானித்திருப்பதாக எங்களிடம் தெரிவித்தார்கள்.
நாங்கள், காஷ்மீர் மக்களுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்களின் துன்ப துயரங்களில் பங்குகொள்வதற்காகவும், அதற்கு முற்றுப்புள்ளி காண வேண்டும் என்பதற்காகவும் வந்திருக்கிறோம் என்று அவர்களிடம் கூறினோம்.
மேலும் நாங்கள், இதனை பரஸ்பரம் அரசியல் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே நடந்திடும் என்றும், இந்தக் கணத்தில் இல்லாவிட்டாலும் பிறிதொருமுறை பேச முன்வர வேண்டும் என்றும் அனைத்துத்தரப்பினரிடமும் தெரிவித்தோம்.
முதலில் பேசி இப்போதுள்ள இப்போதுள்ள பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுவது முக்கியம் என்றும், பின்னர் பெரிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை நோக்கி முன்னேறுவோம் என்றும் அவர்களிடம் கூறினோம்.
சையது அலி ஷா கிலானி வீட்டிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, அவர் எங்களை சந்திக்க வில்லை. ஆனால், அவர், ஹரியத் பேசக்கூடாது என்று தீர்மானித்திருப்பதாக எங்களிடம் கூறினார்.
இவ்வாறு அனைத்துத்தரப்பைச் சேர்ந்தவர்களிடமும் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம். ஏனெனில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று மாநிலத்தில் உள்ள அனைத்துத்தரப்பினரிடமும் கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
(ந,நி.)

No comments: