Sunday, May 24, 2015

மூவகை ஆபத்துகள்



மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின் கடந்த ஓராண்டிற்குள், 18 அயல்நாடு களுக்குப் பயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார். நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்திட அவர் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று நாடும் நாட்டு மக்களும் விரும்பக்கூடிய அதே சமயத்தில், பிரதமர் இப்பயணங்களின் மூலமாக உலகின்பல பகுதிகளிலுமுள்ள 40 நாடுகளுக்குச் சென்று தங்கள் வலைப்பின்னலைப் பரப்புவதில் உதவி இருப்பதாக, ஆர்எஸ்எஸ் குதூகலம் அடைந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகர் என்ற முறையில் அவர் தொடர்ந்து தன் பொறுப்புக்களை நிறைவேற்றுவார் என்பது தெளிவு.மோடி பயணம் செய்த கடைசி நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பேசுகையில்,
கடந்த அறுபது ஆண்டுகளாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டனர் என்றும், இப்போதுதான் தங்கள் அரசின் காரணமாக,நாட்டுப்பற்றுடன் தங்களை இந்தியர்என்று கூறிக்கொள்வதில் பூரிப்புகொள்கின்றனர் என்றும் பீற்றிக்கொண்டிருக் கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள்இந்தியப் பிரஜா உரிமையைப் பாதுகாத் துக் கொள்ளவும், இந்தியக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்டு)களைத் தக்க வைத்துக் கொள்ளவும் விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற மோடியும் பாஜகவும் எது வேண்டுமானாலும் செய்ய லாம்.
அருகதை இல்லை
இவையல்லாமல், இந்த ஓராண்டு காலத்தில், சுதந்திர இந்தியாவில் கடந்த அறுபதாண்டு காலமாக தொடர்ந்து ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் நிர்மூலமாக்கி இருந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்பிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடியும் பாஜக அரசாங்கமும் மிகவும் அருவருப்பையும் வெறுப்பையும் உண்டாக்கும் விதத்தில் நாட்டிற்கும், உலகிற்கும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த அறுபதாண்டுகளில், அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையிலான ஆறு ஆண்டு காலதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கமும் இருந்தது என்பதை மிகவும் கருணையற்ற முறையில் இவர்கள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.
மேற்படி அறுபதுஆண்டுகளில் மக்களுக்கு அளித்தஎண்ணற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட வில்லை என்பதிலோ, நம் நாட்டின் வளங்கள் எவ்விதத் தங்குதடையுமின்றிக் கொள்ளையடிக்கப்பட்டது என்பதிலோ, நம் மக்கள் சுரண்டப்படுவது நாளும் அதிகரித்து வந்தது என்பதிலோ எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆயினும், இவற்றை மோடி அரசாங்கம் சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது. புத்தெழுச்சி பெற்ற இந்தியாவை இந்த அரசாங்கம்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. மாறாக, நாட்டின் மீதும் நாட்டு மக்கள்மீதும் புதிய வகையில் மும்முனைகளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளை அரக்கத்தனமான முறையில் பின்பற்றிக் கொண்டிருத்தல், மதவெறியைக் கூர்மைப்படுத்தி இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற அடித்தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்து வருதல், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புனிதமாகக் கருதப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளைக் காலில் போட்டு மிதிப்பதன் மூலமாக எதேச்சதிகாரத்தை நோக்கி முன்னேறுதல் எனத் தாக்குதல்கள் கொத்தாக நம் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மோடி அரசாங்கம், டாக்டர் மன்மோகன் சிங் பின்பற்றிய அதே தாராள மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேலும் அரக்கத்தனமான முறையில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. நம் பொருளாதாரத்தின் கேந்திரமான துறைகள் அனைத்துமே மிகப் பெரிய அளவில் அந்நிய நேரடிமுதலீட்டிற்காக அகலத் திறந்து விடப்பட்டிருக்கிறது.
முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த பலவற்றை (எடுத்துக்காட்டாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை முன்பு எதிர்த்து வந்தது) இப்போது எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டது. இதில் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் பின்வாங்கல் என்பது புதிய நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டமாகும். 2013 சட்டமுன்வடிவுக்கு அது அளித்து வந்த ஆதரவை மறுதலித்துவிட்டு இப்போது மூன்று முறை நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
‘நல்ல’ விதத்தில் சித்தரிக்க நடத்தும் சித்துவேலை
நம் நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடிவிட்டு, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக நம் நிலங்களைத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிப்பதுடன், நம் நாட்டின் இயற்கை கனிம வளங்களையும், அந்நியமற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது. சலுகை சார் முதலாளித்துவம் (crony capitalism) கொடிகட்டிப் பறக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யை நல்லவிதத்தில் சித்தரிக்க வேண்டும்என்பதற்காக தேசிய வருமானக் கணக்குகளுக்கான புள்ளிவிவர அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டிருக்கிறது. எனினும்கூட, தொழில் வளர்ச்சி தொடங்கவே இல்லை. கார்ப்பரேட்டுகள் உற்பத்தி செய்தபொருட்கள் சந்தைக்கு வராமல் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு குவிந்து கிடக்கின்றன. இது வேலைவாய்ப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, வேலையில்லாத இளைஞர் பட்டாளத்தையும் அதிகப்படுத்தி இருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் நாளும் ஏறிவருவதாலும், எரிபொருள்களின் விலைகளும் தொடர்ந்து கடுமையாக உயர்த்தப் பட்டு வருவதாலும், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன.
விவசாய நெருக்கடியும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக, மொத்த விளை நிலங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வேளாண் இடுபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாலும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்களைக் கடுமையாகக் குறைத்து விட்டதாலும் விவசாயிகளில் பெரும்பாலோருக்கு விவசாயம் தங்கள் வாழ்வாதா ரங்களை எதிர் கொள்வதற்குப் போதுமான வையாக அமையவில்லை. இதன் காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. தொழிலாளர்களின் நிலைமையும் சிறந்ததாக இல்லை. 1990-91இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் 25 சதவீதமாக இருந்தது. ஆனால் அது இன்றைய தினம் 10 சதவீதத்தைவிடச் சற்றே அதிகம் அவ்வளவுதான். ஆனால், அதே சமயத்தில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார் கள். ஃபோர்ப்ஸ் (குடிசநௌ) இதழின் 2014ஆம் ஆண்டின் பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 100 பேர் பில்லியனர்களாவார்கள்.
அதாவது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் வைத்திருப்பவர் களாவார்கள். (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இன்றைய தினம் இந்திய ரூபாயின் மதிப்பில் 6,400 கோடி ரூபாய்க்குச் சம மாகும்.) 2011இல் இருந்த பட்டியலின்போது இது வெறும் 55 பேர்களாக இருந்தது. இப்போது மேலும் 45 பேர் அதிகரித்து 100 பேர்களாக மாறியிருக்கிறது. இந்த 100 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு346 பில்லியன் அமெரிக்க டாலர்களா கும். நாட்டில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 2000இல் 36.8 சதவீதமாக இருந்தது, தற்போது 2014இல் 49 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வெறும் கனவாய்ப்போன‘நல்ல கால’ வாக்குறுதி`நல்லகாலம் வருகுது’ என்று கூறி மக்களுக்கு இந்த அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் கனவாய் போய்விட்டன. இந்த ஓராண்டில், இருப்போர்க்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளி மேலும் கூர்மையாக விரிவடைந்திருக்கிறது.
அதே சமயத்தில், மக்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகி வருவதன் காரணமாக, மக்கள் தங்கள் கிளர்ச்சிப் போராட் டங்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்தஅரசாங்கம் மதவெறி நடவடிக்கைகளை யும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்ற விதத்தில், தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத் தின் லட்சியமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. `தாய்மதம் திரும்புதல்’ மற்றும் `காதலுக்கு எதிரான புனிதப்போர்’ என்ற மதவெறிப் பிரச்சாரங்களுடன் புராணக் கட்டுக்கதைகளை வரலாறாகவும், மதப் பிரச்சாரத்தை தத்துவஞானமாகவும் மாற்றுவதற்கான இழிமுயற்சிகளில் வெறித்தனமாக இறங்கி இருக்கிறது.
இவற்றின் விளைவாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களும் கல்வியாளர்களின் ஆராய்ச்சி அமைப்புகளும் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறிவியல் மனோபாவம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிஇருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகளும், கலகங்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், குறிப்பாக கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றன. மதவெறியுடன் வெறுப்பைக் கக்கும் தன் அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைக்கூட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூற மறுத்துள்ளார்.
அச்சுறுத்தும் அறிகுறிகள்
பாஜக, வெறும் 31 சதவீத வாக்கு களைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் எவ்வித ஆய்வுக்கும் ஓர் அர்த்தமுள்ள விவாதத் திற்கும் உட்படுத்தாமல், முக்கியமான பல சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் உண்மையில் அச்சுறுத்தும் சமிக்ஞைகளாகும்.
நாடாளு மன்ற நடைமுறைகளைக் காலில்போட்டு மிதிப்பது என்பது நிச்சயமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் வழியே யாகும். இது நம் குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை அழிப்பதற்கே இட்டுச் செல்லும். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்துவந்த நம் சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன், தங்கள் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அரக்கத்தனமாகப் பின்பற்றுவதும், மதவெறித் தாக்குதல்களைத் தொடுப்பதும், நம் குடியரசின் அடித்தளங்கள் மீதும் மாபெரும்தாக்குதல்களைத் தொடுக்கும் செயல் களேயாகும்.பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியின் முதலாமாண்டில் மூவகை அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
இது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோர்மீது கருணையற்ற முறையில் தாக்குதலைத் திணித்திருக்கும் அதே சமயத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்கிற `இந்தியா’ என்னும் மாபெரும் சிந்தனையை அழித்திடும் செயலுமாகும். “மிகச்சிறிய அளவிலான அரசாங்கம் மிகப்பெரிய அளவிலான ஆட்சி’’ (“minimum government maximum governance) என்று இவர்கள் கூறும் சொற்றொடரின் உண்மைப் பொருள் இதுவேயாகும். இந்த ஓராண்டில் ஊழல் வழக்கு எதுவும் வெளிப்படவில்லை என்று பிரதமர்மோடியும், பாஜகவும் பீற்றிக்கொண்டி ருக்கிறார்கள். ஐமுகூ அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டு காலங்களில் இவ்வாறு ஊழல் எதுவும் வெளிப்பட்டதாக எவரேனும் நினைவுகூர முடியுமா? சலுகைசார் முதலாளித்துவக் கொள்கைகளை அரக்கத்தனமாகப் பின்பற்றும் இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபமும் விரைவில் வெளியாகும்.
தமிழில்: ச.வீரமணி


Monday, May 18, 2015

அரசியல் சந்தர்ப்பவாதத்தின் கூட்டுக் கலவை



அகர்தலா வந்திருந்த பிரதமரை அதிகாரப்பூர்வ மரியாதை நிமித்தமாக திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் வரவேற்றபோது, அவருக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவதூறை வீசி எறிந்து வெகுகாலம் ஆகிவிடவில்லை. அதே மம்தா பானர்ஜிதான் இப்போது பிரதமர் மோடி கொல்கத்தா வருகை தந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே புதிதாக ஏற்பட்டுள்ள உறவானது, 2014 மக்களவைத் தேர்தலின்போது அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பை வரலாற்றின் பதிவேடுகளில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது.
இவர்கள் சந்திப்பின்போது இவர்களிருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடல் மொழியானது இருவருக்குமிடையே புதியதொரு உறவு மலர்ந்திருப்பதை - ஓர் அரசியல் கூட்டணி வரவிருப்பதை - கோடிட்டுக் காட்டி இருக்கிறது. இதற்கான காரணங்களுக்காக மிகவும் சிரமப்பட வேண்டிய தேவை இல்லை. மேற்குவங்கத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ள சாரதா சீட்டு நிதிநிறுவனம் மற்றும் பல்வேறு சீட்டுநிதி நிறுவனங்களின் ஊழல்கள் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகம் புலன் விசாரணைகள் நடத்தி வருவதும், இவற்றில் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசின் முன்னணி மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டும் அக்கட்சி முழுமையாக முற்றுகைக்கு உள்ளாகியும் இருக்கக்கூடிய நிலையில், அக்கட்சி அதிலிருந்து விடுபடமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்துடன் ஓர் `அரசியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டால் மட்டுமே முடியும். தற்போது இந்த ஊழல்கள் தொடர்பாக அக்கட்சிக்கு இருந்து வரும் நிர்ப்பந்தங்களிலிருந்து மீள வேண்டுமானால் இது அவசியமாகும்.
புதிய பேரம் உருவாகியுள்ளது
இவ்வாறான நம் ஊகத்தை பிரதமர் மோடியின் உரையே உறுதிப்படுத்தி இருக்கிறது. அசன்சாலில் அவர் உரையாற்றுகையில், நிலக்கரி, அலைக்கற்றை வரிசை போன்று ஐமுகூ அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் நினைவுகூர்ந்த அதே சமயத்தில், சாரதா சீட்டு நிதிநிறுவன ஊழல் குறித்து குறிப்பிட வசதியாக மறந்துவிட்டார். மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட இதே மோடிதான்,
இந்த சாரதா சீட்டு நிதிநிறுவன ஊழலைச் சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகவும் அக்கட்சியின் முதலமைச்சருக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர். உண்மையில், தில்லியில் மார்ச் 9 அன்று பிரதமர், மேற்கு வங்க முதல்வரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, சிபிஐ, சாரதா ஊழல் புலன் விசாரணைகளை நத்தை வேகத்தில் நடத்தத் துவங்கிவிட்டது. அதேபோன்று சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெரிய அளவில் மோசடிகளை செய்வதற்கு வசதி செய்து தரும் விதத்தில், பெயரளவில் மத்தியப் படைகளை அனுப்பி வைத்ததையும் பார்த்தோம்.
இதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் பிரதமரை பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனைக்காக சந்திக்க வரவில்லை. (மத்திய நிதி அமைச்சரைக்கூட சந்திக்க மறுத்துவிட்டார்.) இப்போது அவற்றுக்கு நேரெதிராக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, ஒரு ‘புதிய பேரம்’ உருவாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேற்குவங்க முதல்வரும் தனது பங்கிற்கு, இதற்கு முன்பு பாஜக மற்றும் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் கொண்டிருந்த அனைத்துவிதமான பகைமை உணர்வுகளையும் கைவிட்டுவிட்டார். இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் மிகவும் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
நஸ்ருல் மஞ்ச் அரங்கத்தில் பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இல்லாது, சுமார் 30 நிமிடங்களுக்கு இச்சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. பின்னர் இருவரும் ஆளுநர் மாளிகையில் உணவு அருந்தி இருக்கிறார்கள். மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடையாது என்பதால், நிலுவையில் உள்ள முக்கியமான சட்ட முன் வடிவுகளை நிறைவேற்றிட திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை, பிரதமர் கோரி இருக்கிறார். சமீபத்தில், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டமுன்வடிவு மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகள் சட்டமுன்வடிவு ஆகியவை நிறைவேறுவதற்கு மோடி அரசாங்கத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவியது.
இதற்கு முன் கடுமையாக எதிர்த்து வந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவிற்கு ஆதரவு அளித்திடவும் இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே `பயன்கள்’ பரஸ்பரமானவைகளாகும். பிரதமர் மோடி, சமீபத்திய அரசியல் வரலாற்றைக்கூட, குறிப்பாக, மத்திய அரசுக்கும் மேற்குவங்க மாநில அரசுக்கும் இடையேயான உறவுகளைக் கூட, மாற்றி அமைத்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார். அசன்சாலில் அவர் இந்திய இரும்பு மற்றும் உருக்கு கம்பெனி விரிவாக்கத் திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்வின்போது உரையாற்றுகையில், மாநிலத்தில் ஆட்சி செய்த இடதுமுன்னணி தொழில்மயத்திற்கு உதவவில்லை என்றும், அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலான முன்னாள் பாஜக அரசாங்கம் அளிக்க முன்வந்த உதவியையும் இடது முன்னணி அரசாங்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன? இந்திய இரும்பு மற்றும் உருக்கு கம்பெனியின் ஒட்டுமொத்த நவீனமயமும் இடது முன்னணி அரசாங்க காலத்தில்தான் தொடங்கியது. இது தொடர்பாக அடல் பிகாரி வாஜ்பாயி அரசாங்கம் எவ்வித உதவியையும் செய்ய மறுத்துவிட்டது. இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரவு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து ஐமுகூ-1 அரசாங்கத்தின் காலத்தில்தான் மத்திய அரசின் உதவியைக் கட்டாயப்படுத்தி பெற முடிந்தது. அந்த சமயங்களில் எல்லாம், மேற்கு வங்கத்தில், அன்றைய மேற்கு வங்க அரசாங்கம் மேற்கொண்ட இஸ்கோ நவீனமயம் உட்பட அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தது.
பிரதமர் மோடி, தற்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, புதிய திட்டங்கள் என்ற பெயரில் படாடோபமாக அறிவித்திருக்கிறார். இவை அனைத்துமே முந்தைய அரசாங்கங்கள் பின்பற்றிய திட்டங்கள்தான். புதிய பெயர்களைச் சொல்லி அறிவித்திருக்கிறார். இந்த சமயம் அவர் மூன்று திட்டங்களை - பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் திட்டம் - என்னும் மூன்று திட்டங்களை மிகுந்த வாணவேடிக்கைகளுடன் அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு திட்டங்களை அறிவிக்கும்போது அவர், கடந்த அறுபதாண்டுகளில் நாட்டில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்றும், தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்புதான் மக்களுக்கான நலத்திட்டங்கள் எல்லாமே தொடங்கி இருப்பதாகவும் சரடு விட்டிருக்கிறார். பிரதமர் மேலும் கூறுகையில், “ஏழைகளுக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும், வங்கிகளில் ஏழைகள் எவருமில்லை’’ என்றும் அடுக்குமொழியில் அளந்திருக்கிறார். “80 இலிருந்து 90 சதவீதம் வரையிலான மக்களுக்கு ஓய்வூதியமோ இன்சூரன்சோ கிடையாது’’.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தையும் கோடிக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஆனால், இப்போதும்கூட நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 15 கோடி மக்களுக்குத்தான் வங்கிக் கணக்கு உண்டு. இதில் மிகவும் மோசமான விஷயம், இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு ரொக்க இருப்பே கிடையாது என்பதாகும். மோடி அறிவித்திருக்கும் மேற்கண்ட மூன்று திட்டங்களுமே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, நடைமுறையில் நாட்டிலுள்ள மக்களில் 90 சதவீதத்தினர் இத்திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களும் இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத்தான் பொருந்தும்.
இத்திட்டங்கள் எதற்கும் எவ்விதமான பட்ஜெட் ஒதுக்கீடோ அரசாங்க நிதி ஒதுக்கீடோ கிடையாது என்பது அனைத்தையும் விட மோசமான விஷயமாகும். இதன் பொருள், இத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் அளித்திடும் நிதியைக் கொண்டு அவர்களுக்கு உதவிடும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதேயாகும்.
மோசடி பென்சன் திட்டம்உதாரணமாக, `அடல் பென்ஷன் யோஜனா’ என்னும் ஓய்வூதியத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முறைசாராத் தொழிலாளர்கள் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் மாதா மாதம் அளிக்கும் தொகையிலிருந்து அவர்களுக்கு 60 வயது ஆன பின்னர், அவர்கள் அளித்திடும் பங்களிப்பின் அடிப்படையில், குறைந்தபட்சம் 1000 ரூபாய்க்கும் 5000 ரூபாய்க்கும் இடையே ஒரு தொகையை அளிக்கும் திட்டமாகும். அதாவது, ஒரு நபர் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அளித்திட வேண்டும். இவ்வாறு இவர்கள் அளிக்கும் தொகைக்கு வட்டி எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. இவர்கள் அளித்த தொகையிலிருந்து ஒரு தொகை ஓய்வூதியமாக இவர்களுக்கு அளிக்கப்படுமாம். மேலும், தற்போது நாட்டில் மக்கள் உயிர்வாழ்வது என்பது சராசரி 65.5 வயதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் மாதா மாதம் தொகையை ஒருவர் செலுத்தினால், அவர்களுக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு இவ்வாறு இவர்கள் ஓய்வூதியம் அளிப்பார்கள். இவ்வாறுதான் பிரதமர் மோடியும்மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைக ளாக படாடோபமான விளம்பரங்களுக்கு இடையே அறிவித்துள்ள பல திட்டங்களின் லட்சணங்களாகும். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் “கர் வாப்ஸி’’ (வீட்டிற்குத் திரும்புவோம்) திட்டத்தை அமல்படுத்துவதில் பெற்றி பெற்றிருக்கிறார் என்றும் இதற்கு திரிணாமுல் காங்கிரசின் அரசியல் சந்தர்ப்பவாதம் உதவி இருக்கிறது என்றும் எண்ணற்ற பேச்சுகள் நாடாளுமன்றத்தின் நடைக்கூடங்களில் உலா வருகின்றன. கடந்த காலங்களில் மேற்குவங்கத்திற்குள் நுழைய பாஜகவிற்கு வழியேற்படுத்தித் தந்தது திரிணாமுல் காங்கிரஸ்தான். மம்தா பானர்ஜியே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் ஆரம்பத்தில் ரயில்வே துறைக்கும், பின்னர் நிலக்கரித்துறைக்கும் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். முந்தைய இடதுமுன்னணி அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை மற்றும் பயங்கரவாத பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டிருந்த சமயத்தில் அதற்கு ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களிடமிருந்து தாராளமாய் ஆதரவு கிடைத்து வந்தது. இப்போது மீண்டும் மத்திய அரசாங்கமும், பாஜக வும் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகம், வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியலுக்குப் பங்காளிகளாகி இருப்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது.மத்திய அரசும், மேற்குவங்க மாநில அரசும் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதன் காரணமாக மக்களின் சுமைகள் மேலும் அதிகரித்துவரும் நிலையில், இவ்விருவருக்கும் இடையிலான கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாதம் மாநிலத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில் மிகவும் மட்டரகமான இக்கூட்டுக் கலவையை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தலுக்கு மேற்கு வங்க மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களின் ஆதரவு இல்லாமல் மேற்கு வங்க மக்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தலை முறியடித்திடவோ, நாட்டையே விழுங்குவதிலிருந்து தடுத்திடவோ முடியாது. இத்தகைய அச்சுறுத்தலின் சவாலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு முறியடித்திடுவோம்.
மே 13, 2015
தமிழில் : ச.வீரமணி


நிச்சயமாக நாங்கள் எழுவோம்!


(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதையொட்டி, `ப்ரண்ட்லைன்’ ஏட்டின் சார்பில் வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் குணால் சங்கர் ஆகியோர் நடத்திய நேர்காணல்.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி பல்வேறு வழிகளில் அரசியல் ஆளுமை நிறைந்தவராவார். 1990களின் முற்பகுதியில் ஒரு நிகழ்வு. இது அன்றைய ஊடகங்களில் அதிகமாக அடிபடவில்லை. அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் சீத்தாராம் யெச்சூரியிடம் தன்னுடைய தூதுக்குழுவினர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாட்டின் சமூக-அரசியல் குறித்து நன்கு புரிந்துணர்வைப் பெற்றுள்ள யெச்சூரி தன்னுடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். “கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது முதுபெரும் காங்கிரஸ்காரரான அவருக்கு நன்கு தெரிந்திருக்கும்’’ என்று கூறி ஒரு கணம் கூட யோசிக்காமல் அந்தக் கோரிக்கையை சீத்தாராம் யெச்சூரி நிராகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு கட்சியில் தான் இருப்பது மத்திய அமைச்சராகவோ அல்லது அதற்கு இணையான பதவிகளை வகிப்பதற்கோ அல்ல என்றும் மாறாக நாட்டு மக்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காகவே என்றும் கூறினார்.
இந்நிகழ்வு ஒட்டுமொத்தத்தில் தற்போது 62 வயது நிறைந்த சீத்தாராம் யெச்சூரியின் இரு முக்கிய குணங்களை எடுத்துக்காட்டுகிறது. முதலாவது, அரசியல் எதிரிகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் அவரை அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் அரசியல் குறிக்கோள்கள் மீது அவருக்கிருக்கும் உறுதியை உயர்த்திப்பிடிக்கிறது. இவ்விரு குணங்களின் காரணமாகத்தான் பிற்பட்ட ஆண்டுகளில் பிரதமர் தேவகவுடா தலைமையில் 1996ல் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதும், 2004ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின்போதும் அவற்றின் குறைந்தபட்ச திட்டங்களை உருவாக்குவதில் சீத்தாராம் யெச்சூரி முக்கிய காரணியாக இருந்தார்.
ஆளும் கூட்டணியின் ஒட்டுமொத்த திட்டத்திற்குள் மக்கள் நலம் சார்ந்த நிகழ்ச்சிநிரலை சேர்ப்பதில் சீத்தாராம் யெச்சூரியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டவுடனேயே `ப்ரண்ட்லைன்’ சார்பில் அவரைச் சந்தித்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல், ஸ்தாபன மற்றும் நடைமுறை உத்திகளை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்று கேட்டோம். பேட்டியின் சாராம்சங்கள் வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் வெற்றி, அரசியல் செல்வாக்கு மற்றும் ஸ்தாபனப் பிடிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள  நிலையில் நீங்கள் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருக் கிறீர்கள். ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர எவ்வகையில் தங்கள் புதிய பங்கு இருந்திடும்?
சீத்தாராம் யெச்சூரி :
சந்தேகமில்லாமல் இது ஒரு பெரிய பொறுப்புதான், ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை முன்னுக்குக் கொண்டு செல்வது மிகப்பெரியதொரு சவால்தான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளில், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், இக்கடமைகள் அனைத்தும் தனிநபர் ஒருவரால் மட்டும் - அவர் எவ்வளவுதான் முக்கியமானவராக இருந்த போதிலும் - மேற்கொள்ளப்படுவதில்லை.
கட்சி ஒட்டுமொத்தமாக, கூட்டாகத்தான் இக்கடமையை எடுத்துக்கொள்கிறது. நாங்கள் கூட்டுப் பொறுப்பு என்கிற சிந்தனைக்கு உதட்டளவில் சேவை செய்பவர்கள் அல்லர். கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில், நாங்கள் கட்சி மற்றும் நாட்டின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறோம். கணிசமான அளவிற்கு விவாதங்களை நடத்தியபின்னர், நம்முன் உள்ள பிரதானக் கடமை நம்மை வலுப்படுத்திக் கொள்வது என்றும், இடதுசாரி சக்திகள் மத்தியில் பெரிய அளவிற்கு ஒற்றுமையைக் கட்டுவது என்றும், அதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளையும் விரிவாக்குவது என்றும் முடிவுகள் எடுத்திருக்கிறோம்.
ஆனால், அரசியல்-நடைமுறை உத்தி தொடர்பாக கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய நுட்பமான மாற்றங்கள் கட்சியையும், இடதுசாரி ஒற்றுமையையும் கட்டுவதற்கே, பிரதானமாக அழுத்தம் கொடுத்திருக்கிறது. மதச்சார்பற்ற சக்திகளின் ஒரு விரிவான கூட்டணியை உருவாக்குவது என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது போன்றே தெரிகிறது. இத்தகைய உத்தி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடிய நிலையில், சங் பரிவாரம் மற்றும் பாஜக ஆகியவற்றால் தலைமை தாங்கப்படும் இந்துத்துவா சக்திகள் பாசிச திசைவழியில் மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கக்கூடிய நிலையில் இது சாத்தியமா?
அரசியல் நடைமுறை உத்தி என்பது மாறிக்கொண்டிருக்கும் அரசியல் நிலைமையுடன் சேர்ந்து மாறக்கூடிய ஒன்றேயாகும். இன்றைய நடப்பு அரசியல் பின்னணியில், கட்சியின் அடிப்படைக் கடமை உண்மையில் எங்களை வலுப்படுத்திக் கொள்வதேயாகும்.
ஏனெனில், எங்கள் நாடாளுமன்ற அல்லது தேர்தல் வெற்றிகூட எங்களுடைய அரசியல் மற்றும் ஸ்தாபன வலிமையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் எங்கள் போராட்டங்களை பரஸ்பரம் சரியாகப் பொருத்துவதன் தேவை குறித்தும் மாநாட்டில் நாங்கள் விவாதித்திருக்கிறோம். சுயேச்சையாக எங்களை நாங்கள் வலுப்படுத்திக் கொள்ளாமல், மதச்சார்பற்ற சக்திகள் மத்தியில் விரிவான அளவில் கூட்டணிகளை உருவாக்குவது என்பதைக் கூட எங்களால் அடைந்திட முடியாது.
உண்மையில், பெரிய அளவில் எங்கள் வலிமையை நாங்கள் காட்டாவிடில் அத்தகைய கூட்டணிகள் கூட உருவாகாது. ஆயினும், பிரச்சனை என்ற அடிப்படையில் மதச்சார்பற்ற அமைப்புகளுக்கு மத்தியில் கூட்டு முயற்சிகள் காரியசாத்தியமாகலாம். உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவைப் பொறுத்தவரை அநேகமாக அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கின்றன.
நீங்கள் குறிப்பிட்டதைப்போல, பாசிச சக்திகள் தலைதூக்கியுள்ள பின்னணியில் இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இந்துத்துவா மதவெறி விசிறிவிடப்படுதல் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய கூட்டு முயற்சிகளை உருவாக்கிட கட்சி முன்முயற்சிகளை மேற்கொள்ளும். ஆயினும், இவ்வனைத்துப் பிரச்சனைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் வரும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவுக்கு எதிராக எங்களுடன் கை கோர்த்தவர்கள் அனைவருமே, நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டமுன்வடிவு அல்லது நிலக்கரிச் சுரங்கங்களை மறு ஏலத்திற்கு விடுதல் போன்ற பிரச்சனைகளில் எங்களுடன் வரவில்லை.
உங்கள் புதிய உத்தியானது மாநிலக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிகள் பொறுத்தவரை, அநேகமாக முற்றிலுமாக தடை விதித்திருப்பதுபோல் தோன்றுகிறதே?
இத்தகைய கூட்டணிகளை அமைப்பதில் மாநிலங்கள் சில நெகிழ்வுத்தன்மையைப் பெற்றிருக்கின்றன. மாநாட்டில் விவாதத்தின்போது தோழர் பிரகாஷ் காரத் தன் தொகுப்புரையில் சுட்டிக் காட்டியதைப்போல, நீங்கள் மாநில அளவில் நெகிழ்வுத் தன்மையையும், தேசிய அளவில் இறுகிய தன்மையையும் பெற்றிருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விஷயங்கள் பரஸ்பரம் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும்.
ஒவ்வொரு விஷயத்தையும் அதன் குறிக்கோளை அடைவதற்காக தெளிவான முறையில் அலசப்பட வேண்டும். தேர்தல் ஆதாயங்களை மட்டுமே கொண்டு அவற்றைப் பார்க்கக் கூடாது.
2004ல் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடித்திட, இடதுசாரிகள் பல்வேறுவிதமான மதச்சார்பற்ற சக்திகளையும் இணைத்துக் கூட்டணி அமைப்பதற்கு ஒரு கருவியாக இருந்தார்கள். வகுப்புவாத அச்சுறுத்தல் இப்போது பெரிய அளவில் முன்வந்திருக்கிறது. 2004இல் மேற்கொள்ளப்பட்டது போன்ற பங்கினை எதிர்காலத்தில் இடதுசாரிகள் மேற்கொள்வார்கள் என்று நீங்கள் முன்னுணர்கிறீர்களா?
2004ஆம் ஆண்டும் தனித்த ஒரு நிகழ்வு அல்ல. 1990களின் முற்பகுதியிலிருந்தே இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் திரும்பிப்பாருங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது உட்பட, நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் இவற்றில் அடங்கும். இன்றைய அரசியல் பின்னணியில், மதச்சார்பின்மை மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை முக்கியத்துவம் பெறுகின்றன. அவை வெகுஜன இயக்கங்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பிரதிபலிக்கின்றன. அடல் பிகாரி வாஜ்பாயியின் ஆறு ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின்போது அது மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. அதனையொட்டி மிகப்பெரிய அளவில் உருவான அரசியல் இயக்கம்தான் 2004 நிகழ்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச் சென்றது. இவ்வாறு இது ஒரு நீண்ட நெடிய முயற்சியாகும், மாறாக திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல. இப்போதுள்ள நிலைமையைத் துல்லியமான வார்த்தைகளில் சொல்வதென்றால், பாஜக அபரிமிதமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று கூறுகிற அதே சமயத்தில் அது பெற்றுள்ள வாக்காளர்களின் வாக்கு சதவீதம் வெறும் 31 சதவீதமேயாகும். இதன் பொருள், வாக்காளர்களில் மூன்றில் இரு பங்கினர் பாஜகவிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதாகும். எனவே பாஜகவின் வெற்றி இந்த உண்மையைப் பார்க்க விடாமல் எங்கள் கண்களை மூடிவிடவில்லை. பாஜக-விற்கு இருந்த தேர்தல் அனுகூலத்தை முறியடிக்கக்கூடிய விதத்தில் தற்போது ஜனதா பரிவார் என்ற அமைப்பின்கீழ் ஜனதா கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலைமைகள் மற்ற மாநிலங்களிலும் வளரும். அவ்வாறு வளர்ந்தால், நாங்களும் அது தொடர்பாக விவாதிப்போம். ஆனால், நாங்கள் இப்போது கூறுவது என்னவென்றால், நாங்கள் அடிப்படையில் அழுத்தம் கொடுக்க வேண்டிய அம்சம் இவை அல்ல, மாறாகக் கட்சியைக் கட்டுவது என்பதுதான். கட்சியை நன்கு வலுப்படுத்தி, அதன் கொள்கைகளை நாடாளுமன்றத்திற்கு வெளியேயான இயக்கங்களுடன் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதேயாகும்.
இதன் பொருள் இப்பிரச்சனைகளின் மீது அனைத்து சிவில் சமூகக் குழுக்களுடனும் பெரிய அளவில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆம். நாங்கள், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறபோது அதன் பொருள் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிகளை வலுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, மாறாக நாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் பலவற்றுடன் மிகப்பெரிய அளவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இடதுசாரி ஆதரவாளர்களையும் கணக்கில் கொண்டுதான் இதனைக் கூறுகிறோம். இது நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவு போன்ற பிரச்சனைகளின் மீது ஏற்கனவே நடைபெறத் துவங்கிவிட்டது.
ஆம் ஆத்மி கட்சி உருவாகியிருப்பது உண்மையில் புதியதொரு அம்சம். கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தீர்மானங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி குறித்தும், அது தில்லிவாழ் மக்களின் மனதையும், இதயங்களையும் ஈர்த்துள்ளது குறித்தும் குறிப்பிட்டு எந்தப் பகுதியும் காணப்படவில்லை. மாநாட்டின் விவாதங்களில் இது குறித்து ஏதேனும் இருந்ததா? இதிலிருந்து கட்சியின் அகில இந்திய மாநாடு படிப்பினைகளைப் பெற்றதா?
உண்மையில், கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு முன்பே இதிலிருந்து நாங்கள் படிப்பினைகளைப் பெற்றிருக்கிறோம். அடிப்படையான படிப்பினை என்பது மக்களைப் பாதிக்கக்கூடிய உண்மையான பிரச்சனைகளைப் தேர்வு செய்து அதன் அடிப்படையில் இயக்கத்தைக் கட்டுவதாகும். அரசியல் நடைமுறை உத்தி தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், நாடு தழுவிய அளவிலான பிரச்சனைகள் மீது மட்டும் இயக்கங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளக்கூடாது, ஸ்தல மட்டத்தில் உள்ள பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்பதாகும். ஆம் ஆத்மி கட்சி இதைத்தான் செய்திருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டுள்ளது. இது எங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் அதனை வலுவாக அமல்படுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இமாச்சலப்பிரதேசத் தலைநகரான சிம்லா போன்ற இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைச் செய்திருப்பதுபோல் தோன்றுகிறதே. அதன் காரணமாகத்தான் அங்கே மாநகராட்சித் தேர்தல்களிலும் அது வெற்றி பெற்றிருக்கிறது...
ஆம், அது ஒரு நல்ல அம்சம். இதேபோன்று பல இடங்களிலும் நாங்கள் செய்திருக்கிறோம். உண்மையில், கிராம மக்களுக்கு சாலை வேண்டுமா அல்லது கிணறு வேண்டுமா என்று மாநில மையத்தில் முடிவு எடுப்பதற்குப் பதிலாக, கிராம மக்களுக்கு சுயாட்சி அளித்து அவர்களிடமே கேளுங்கள்,’’ என்று ஜோதிபாசு அடிக்கடி கூறுவார். ஆம், இந்தக் கருத்தாக்கம் எங்களிடம் எப்போதுமே உண்டு, இவ்வாறு செய்வதில் சில அனுபவங்களையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். ஆயினும் இதனைப் புதிய சூழ்நிலைகள் மற்றும் புதிய தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனை வலுவான முறையில் கவனம் செலுத்தி, அமல்படுத்த வேண்டியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது என்பது மட்டுமல்ல, எங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வழியும் இதுவேயாகும். மேலும் ஆம் ஆத்மி கட்சி சமீப காலங்களில் உள்கட்சிப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள அக்கட்சியின் அரசியல் குறித்துச் சுட்டிக்காட்டப்படுவதும் தேவையாகும். ஆம் ஆத்மி கட்சி நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட இரு முக்கிய பிரச்சனைகளில் தெளிவில்லாமல் இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம். வகுப்புவாதம் மற்றும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் குறித்து அது தன் நிலையை இன்னமும் வெளிப்படுத்திடவில்லை. அக்கட்சியின் தலைவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாததற்கு இது முக்கிய காரணமாகும். எனவே, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினையில் இதுவும் ஒன்றாகும். ஸ்தலப் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தி மக்களைத் திரட்டுவது மட்டும் போதுமானதல்ல. இவற்றை பெரிய அளவிலான அரசியல் திசைவழியுடன் இணைக்காது இருப்பீர்களேயானால் இவை குறையுடையவகளேயாகும்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்விகளை எதிர்கொள்வதற்கும், கட்சி ஊழியர்கள் மீது அங்கு நேரடியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கு எதிராகவும் என்ன திட்டங்கள் தீட்டியிருக்கிறீர்கள்? நிலைமைகளைச் சமாளிப்பதற்கு கட்சியின் மாநிலக் குழுவுக்கு மத்திய தலைமை ஆதரவாக இல்லை என்கிற முறையில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனவே.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நிலைமைகளை முன்னரும் சந்தித்திருக்கிறது. எங்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது, திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல. 1970களில் காங்கிரஸ் கட்சியும் இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியை ஒழித்துக்கட்ட முயன்றது. 1972இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 2009இல் திரிணாமுல் காங்கிரஸ் அதைச் செய்திருக்கிறது. இதற்காக மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றுபடுத்தினார். ஒரு பக்கத்தில் மாவோயிஸ்ட்டுகளையும், மறுபக்கத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரையும் அவர் ஒன்று சேர்த்தார். பிற்போக்கு சக்திகளின் இத்தகைய பெரும் கூட்டணி ஒரு கூட்டுக் கலவையாகி, நாங்கள் வன்முறையாளர்கள் என்ற விதத்தில் பிரச்சாரத்தைப் பரப்பியது. குறிப்பாக கட்சிக்கும் மக்களுக்கும் இடையே இருந்த இணைப்பைக் குறி வைத்துத் தாக்கினார்கள். எனவே, இது ஒருவிதமான வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்களால் இதுநாள் வரையிலும் காப்பாற்றப்பட்டு வந்த மக்கள், எங்களால் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், தற்போது இந்த இணைப்புச் சங்கிலி இல்லாதிருப்பதைக் கண்டு என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள். மத்தியில், பாஜக ஆட்சியிலிருப்பதைப் பார்க்கிறார்கள். அவர்கள், திரிணாமுல் காங்கிரசால் ஏவப்படும் ரவுடியிசத்திலிருந்து தங்களைப் பாதுகாப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்பது மாத காலத்தில் மோடி அரசாங்கத்தின் ஆட்சி அனுபவத்தில் இந்நிலைமையும் மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது எங்கள் ஸ்தாபனத் தொடர்புகளைப் புதுப்பிக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதனைக் கெட்டிப்படுத்துவதற்குச் சில காலமாகலாம். ஆனால் நிச்சயமாக இதிலிருந்து நாங்கள் மீள்வோம் என்று நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கும், அடுத்த அகில இந்திய மாநாட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், கட்சியில் நிலவும் கோஷ்டிப்பூசல்களுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கம் பற்றி பேச்சுக்கள் அடிபடும். ஆனால், தொடர்ந்து வரும் அறிக்கைகள் அத்தகைய இயக்கங்கள் வலுவாக அமைந்துவிடவில்லை என்பதையே காட்டுகின்றன. உண்மையில், இத்தகைய போக்குகளில் பல கட்சியின் உயர்மட்ட அளவிலேயே தோன்றி இருப்பதாக ஒரு கருத்து தற்போது உருவாகி இருக்கிறதே.
இத்தகைய போக்குகளைக் கையாளுகையில், எங்கள் நோக்கங்கள் எப்போதும் நல்லவிதத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால், ஆயினும், இவற்றை அமல்படுத்தும் சமயங்களில் விரும்பத்தக்க விளைவுகள் ஏற்படாமல் இருந்திருக்கின்றன. இப்போது, இவற்றை ஆழமாக அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். 2015 முடிவதற்கு முன்பாக இதுதொடர்பாக ஆழமாகப் பரிசீலிப்பதற்காக கட்சியின் பிளீனத்தை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழில்: ச.வீரமணி