Sunday, July 2, 2017

ஜிஎஸ்டி: மாநிலங்களின் உரிமைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன -பிரபாத் பட்நாயக்

 

இந்திய அரசமைப்புச் சட்டமானது நாட்டில் அரசியல் கூட்டாட்சிக் கட்டமைப்பை (political federal structure) முழுமையாக்கும் விதத்தில் ஒரு கூட்டாட்சி நிதிக் கட்டமைப்பையும் (a financial federal structure) நிறுவியிருக்கிறது.  மாநிலங்கள், தங்களுடைய தேவைகள் ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசை நாடக்கூடிய விதத்தில் பிச்சைக்காரர்கள் நிலைக்குத் தள்ளப்படுமானால், பின்னர் அதன் காரணமாகவே அது, தற்போதுள்ள கூட்டாட்சி அமைப்பையே தகர்த்திடும் நிலைக்கு எடுத்துச் சென்றிடும். எனவேதான் அரசமைப்புச் சட்டமானது சில குறிப்பிட்ட  வரிகளை மாநிலங்களே விதித்துக்கொள்ள அதிகாரம் அளித்திருந்தது. மேலும் நிதி ஆணையம் தொடர்பான நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடி, மத்திய அரசால் விதிக்கப்படாது விடுபட்டுள்ள வரிகளில் அத்தியாவசியமானவை எவை என்று ஆராய்வதற்கும், மாநிலங்களின் உண்மையான தேவைகளை உணர்வதற்கும் வாய்ப்பளித்தது.
எனினும், மத்திய அரசு, கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களைப் பட்டினிப் போடும் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியது.  அநேகமாக அனைத்து மாநில அரசுகளையும் தங்கள் தயவை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களைப்போல மாற்றி அமைத்துவிட்டது. நிதி  ஆணையத்தின் அதிகார வரம்பு எல்லையையும் தன்னிஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டது. இவை அனைத்தும் நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உணர்வுகளை மீறும் செயல்களாகும். இவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.
மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன   
  2017 ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாநிலங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு, மாநில அரசுகளின் அரசமைப்புச்சட்ட உரிமைகளை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. வேண்டுமானால் நாட்டின்வளர்ச்சிக்காகஇது அவசியம் என்று சிலர்  வாதிடலாம். மாநில அரசுகள் மட்டத்தில் விற்பனை வரி இருந்து வந்தது. மாநில  அரசின் வரிவருவாயில் சுமார் 80 சதவீதம் விற்பனை வரியிலிருந்துதான் வந்துகொண்டிருந்ததுமாநிலங்களின் வருவாய்க்குப் பிரதான  அம்சமாக விற்பனை வரிதான் இருந்து வந்ததுஇனி விற்பனை வரியை எந்த மாநில அரசும் விதிக்க முடியாது. இனி  ஜிஎஸ்டி வரிதான். இந்த வரி நேரடியாக மத்திய அரசுக்கு சென்றுவிடும். இதன்பின்னர்  ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மாநிலத்திற்கு  நிதியை ஒதுக்கிடும். இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசுடன் சேர்ந்து,  மாநில அரசின் சார்பிலும்  ஓர் உறுப்பினர் இருப்பார். ஆனால் அவருக்கு அநேகமாக எந்த அதிகாரமும் கிடையாது. இவ்வாறு இந்த ஜிஎஸ்டி மூலமாக மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன என்பது தெள்ளத்தெளிவாகும்.
மாநில அரசுகளுக்கு இருந்த வரி விதிக்கும் அதிகாரங்களை மாநிலங்கள் இழந்தபின்னர், எத்தனை ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதற்கான இழப்பீடுகளை அளித்து வரும்?  எவருக்கும் தெரியாது. இது, அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு சம்பந்தப்பட்ட கேள்வியாகும். எப்படி, இப்போதைய நாட்டின் அரசியலமைப்பை மத்திய ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பினாலும், “இந்து ராஷ்ட்ரம்என்று பிரகடனம் செய்ய முடியாதோ, அதேபோன்று, மாநிலங்களின் அதிகாரங்களையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் விரும்பினாலும்கூட, மத்திய அரசால் தன்னிஷ்டத்திற்குப் பறித்துக் கொள்ளமுடியாது. அவ்வாறு செய்தால், அது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.
ஜிஎஸ்டி எனப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரிஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு அதிக அளவில் பங்களிப்பினைச் செலுத்திடும் என்று ஒருதரப்பினரால் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க போலித்தனமான  பொருளாதாரக்கூற்று ஆகும். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு எவ்விதமான அடிப்படையும் கிடையாதுவரி சீர்திருத்தங்கள் மூலமாகவெல்லாம் முதலாளிகளின் முதலீடுகளை அதிகரித்திட முடியாது. ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களை முதலாளிகள் தங்கள் பைகளில் நிரப்பிக்கொள்வார்களேயொழிய, அவற்றை முதலீட்டிற்கோ, வளர்ச்சிக்கோ பயன்படுத்த மாட்டார்கள்.
அமெரிக்காவில் எந்தவிதத்தில் இருக்கிறது?
ஜிஎஸ்டி அமெரிக்காவில் எந்தவிதத்தில் இருக்கிறது? நாடு தழுவிய அளவில் சந்தையை  உருவாக்குவதற்கு, பல்வேறுவிதமாக விதிகங்கள் விதித்திட்ட போதிலும்  அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீரான ஜிஎஸ்டி தேவை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவையே மேற்கோள் காட்டப்படுகிறதுஉண்மையில் அமெரிக்காவில் இவ்வாறு ஒரே சீரான விகிதம் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான விகிதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனஉலகின் மிக வலுவான முதலாளித்துவ நாடான  அமெரிக்காவில் ஒரே சீரான சந்தை இல்லை என்பது முரண்நகைதான்இப்போது இந்தியாவில் ஜிஎஸ்டி  அமல்படுத்தப்பட்டிருப்பதுபோல அமெரிக்காவில் சீரான விகிதம் இல்லாததற்கு காரணம் என்ன? ஏனெனில் அந்த நாடு கூட்டாட்சித் தத்துவத்தைப் பெரிய அளவில் மதிக்கிறது.  (கூட்டாட்சித் தத்துவத்தை அமெரிக்கா எந்த அளவிற்கு ஆழமாக (சீரியசாக) எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம், அங்கேயுள்ள ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்நாட்டின் மேல்சபையான செனட் சபைக்கு இரு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது மிகப்பெரிய மாநிலமான நியூ யார்க் அல்லது கலிபோர்னாவிற்கும் இரண்டு பிரதிநிதிகள்தான். அதேபோன்று மிகச் சிறிய மாநிலமான டெலாவாரே அல்லது ரோடீ ஐலாண்ட்டிற்கும் இரண்டு பிரதிநிதிகள்தான்.)  உலகின் மிக வலுவான முதலாளித்துவ நாடு என்று சொல்லப்படக்கூடிய  அமெரிக்காகூட, கூட்டாட்சித் தத்துவம் போன்ற அரசமைப்புச்சட்ட மாண்புகளை உயர்த்திப்பிடிக்கிறது. முதலாளிகள் விருப்பத்திற்கு அது செவிசாய்க்கவில்லை. ஆனால் இந்தியா  ஏன் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானதும், நாட்டின் ஒற்றுமைக்கு ஓர் ஆழமான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.  இது மாநிலங்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்கி இருக்கிறது. இதன்காரணமாக மத்திய ஆட்சி எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையை அமைத்துத்தந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான  நிகழ்ச்சிப்போக்காகும்.  மாநில அரசுகள் தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் தங்கள் தேவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசின் தயவையே நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது மத்திய அரசுக்கு, மாநில அரசுகளைத் தங்கள் இஷ்டத்திற்கு, தங்கள் விருப்பம்போல் ஆட்டிப்படைப்பதற்கான வாய்ப்பினை அளித்திடும்.  “குடியரசுத்தலைவருக்கான எங்கள் வேட்பாளரை ஆதரிக்கவும், உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்,” என்றோ அல்லதுநாங்கள் விரும்பும் அல்லது நாங்கள் கோரும் இந்து ராஷ்ட்ரத்தை ஆதரிக்கவும், உங்கள் தேவைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்,” என்கிற ரீதியிலோ அவை அமையும். சுருக்கமாகச் சொல்வதானால், மதச்சார்பின்மைக்கான போராட்டமும், ஜனநாயகத்திற்கான போராட்டமும் நம் நாட்டின் கூட்டாட்சித்தத்துவத்தின் மீது அமைந்துள்ள  அரசியலமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்ததாகும்இவ்வாறு ஜிஎஸ்டி மாநில அரசுகளின் நிதிக் கட்டமைப்பின் மீது கைவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும்.
மத்தியில் அதிகாரம் குவிவதற்கு எதிராக ஏற்கனவே பல மாநிலங்களில் எதிர்ப்புக்கிளர்ச்சிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அம்மாநிலத்தின்  அரசமைப்புச்சட்டத்தின் 370 ஆவது பிரிவின்கீழான அதிகாரங்களை வெட்டிச் சுருக்கும் என்பதால் ஜிஎஸ்டிக்கு எதிராக கிளர்ச்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஆளும் வர்க்கங்களோ, கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் இயங்கிடும் ஊடகங்களோ கவலைப்படவில்லைஉண்மையில் இது தொடர்பாக விவாதம் எதுவும் புதுதில்லியில்  நடைபெறவில்லை.
ஜிஎஸ்டி ஏற்பாட்டின்மூலமாக ஒரு குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் அளிக்கப்பட்டு, அதற்கும் மேல் மாநில அரசுகள் தாங்கள் விரும்பிய வண்ணம் வரி விதித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டால் பிரச்சனைகள் வேறுமாதிரியாக இருக்கக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படாது இருக்கக்கூடும்ஆனால், மாநிலங்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில்தான் நிர்ணயித்திடும் எனக்கூறி மாநிலங்கள் அதற்குள் கட்டிப்போடப்படுமானால், அது மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களாகும். அதனை நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அனுமதிக்க முடியாது.
(தமிழில்: . வீரமணி)


Saturday, July 1, 2017

ஜூலைக்குள் ஊதிய மாற்றம் வராத நிலையில், மீண்டும் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


ஜூலைக்குள் ஊதிய மாற்றம் வராத நிலையில், மீண்டும் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 1-
ஜூலை மாதத்திற்குள் ஊதிய மாற்றம் வராத நிலையில் இடைக்கால நிவாரணம் அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் காலவரையற்றவேலை நிறுத்தம் நடத்தவேண்டியிருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு ஊழியர்களின் எட்டாவது ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் காலவரையை 30.06.2017ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் 12வது மாநில மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை உடனே செய்ய வேண்டும், அதுவரை அரசு ஊழியர்கள் இப்போது வாங்கும் ஊதியத்தில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும், அவுட்சோர்சிங், தொகுப்பூதிய நியமனங்களை ரத்து செய்து தற்போது பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணாவிட்டால் 2017 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர் கள் மேற்கொள்வார்கள் என அரசுக்கு எச்சரித்திருந்தோம். பிப்ரவரி மாதத்தில் அலுவலர் குழுவை அமைத்துவிட்டு போராட் டம் தொடங்கும் வரை வாளாவிருந்த அரசாங்கம், போராட்டம் தொடங்கிய இரண்டாவது நாளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசி, 2017 ஜூன் 30க்குள் ஊதிய மாற்றத்திற்கான அலுவலர் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு விடும் எனவும், ஜூலை 2017க்குள் ஊதிய மாற்றம் செய்யப்பட்டுவிடும் எனவும் உறுதிமொழி கொடுத்தது.
மூத்த அமைச்சர்கள் நடத்தியபேச்சுவார்த்தையின் போது புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று சில நாட்களே ஆன நிலையில், அரசு ஊழியர்கள் அரசுக்கு கொஞ்சமாவது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அக்கறையுள்ள அரசு இது என்றும், அதனால் போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போது இடைக்கால நிவாரணம் கோரியபோது அலுவலர் குழுவின் காலவரையரை மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் நிச்சயம் எழாது எனவும், 2017 ஜூன் 30ஆம் தேதிக்குள் அலுவலர் குழுவின் பரிந்துரை அறிக்கை பெறப்பட்டு, ஜூலை 2017க்குள் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவிடும் எனவும், அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அதனால் இடைக்கால நிவாரணம் பொருத்து கோரிக்கை தேவையில்லாதது எனவும் கூறினர். ஒருவேளை 2017 ஜூன் 30க்குள் அலுவலர் குழு ஊதிய மாற்ற பரிந்துரைகளை அளிக்காவிட்டால் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தனர். அமைச்சர்கள் அவ்வளவு ஆணித்தரமாக இடைக்கால நிவாரணம் என்ற பேச்சே எழாது என்று கூறியதன் அடிப்படையிலும், புதிய முதல்வர், புதிய அமைச்சர்கள், புதிய அரசாங்கம் என்பதால் அவர்களுக்கு இவை குறித்து முடிவெடுக்க கால அவசாசம் வழங்க வேண்டும் என்ற நியாயத்தின் நிலைபாட்டினாலும், தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்தப் போராட் டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அமைச்சர்களுடனான பேச்சு வார்த்தையின்போது, புதிய ஓய்வூதியத் திட்டம் சம்பந்தமாகவும், காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயிப்பது குறித்தும் பேசியபோது, அவர்கள் எல்லாவற்றுக்கும் 2017 ஜூலை வரை கால அவகாசம் கேட்டனர். சென்ற முறை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்பட்ட ஊதிய மாற்றத்தில் ஓராண்டு நிலுவைத் தொகை மறுக்கப்பட்டது என்பதையும் அது 1.1.2006 முதல் கருத்தியல் ரீதியாகவும். 1.1.2007 முதல் பணப்பலனுடனும் அமல்படுத்தப்பட்டது என்பதையும் ஏற்கெனவே அரசின் கவனத்திற்கு பலமுறை நாம் கொண்டு சென்று நிலுவைத் தொகையினை கேட்டோம். அப்போது அரசுத் தரப்பில், அடுத்த ஊதிய மாற்றத்தில் காலதாமதமோ, கருத்தியல் ரீதியான கணக்கீடுகளோ இல்லாமல் அலுவலர் குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும், பிந்தைய ஆண்டுகளில் தவணைத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டது.
13-02-2014 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் முன்வைத்த 2014-15ஆம் ஆண்டிற் கான பட்ஜெட் வரவு - செலவு திட்ட உரையில் வருவாய் கணக்கில் செலவுகள் தலைப்பின்கீழ் 1ஆம் பத்தியில் “ 2016-17ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்கள் போலன்றி, இக் குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் எனவும் பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத் தொகை வழங்க வேண்டிய சூழ்நிலை எழாது எனவும் கருதப் பட்டுள்ளது.’’ என்று கூறப்பட்டுள் ளது. ஆனால், இப்போது வந்துள்ள அரசாணை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அப்போதைய நிதியமைச்சர் வழங்கிய உறுதிமொழிகளுக்கும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளுக்கும் முற்றிலும் முரணாக உள்ளது.
ஜூன் 30க்குள் அலுவலர் குழு பரிந்துரைகள் வழங்காத நிலையில், இனி ஜூலை 30க்குள் ஊதிய மாற்றம் வருவது சாத்தியமில்லை என்பது நிதர்சனம் எனில் அமைச் சர் பெருமக்கள் மூவரும் நமது பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி ஊதிய மாற்றம் ஜூலை 2017க்குள் ஏற்படுத்தப்படாத நிலையில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியத்தை 2017 ஜூலை 17ஆம் தேதிக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் சொல் கேட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகமெங்கும் தொடர வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


டிரம்ப்லேண்டில் மோடி


People’s Democracy
தலையங்கம்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா விற்கு ஐந்தாவது தடவையாக பயணம் செய்திருக்கிறார். இந்தத் தடவை அவர் முதன்முறையாக ஜனாதிபதி டொனால்டு டிரம்பை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்து, இந்தி யாவானது, அமெரிக்க-இந்திய நீண்டகால ராணுவசூழ்ச்சித் திட்டத்தின் இளைய பங்காளி என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.வெள்ளைமாளிகைக்கு மோடியின் விஜயம்தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் சிலஐயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக்கூடியவிதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்த தால், இதற்குமுன் எவரும் ஊகித்துணர முடியாத அளவிற்கு இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந்தன. புவிவெப்பமயமாதல் தொடர்பாக பாரீஸ்ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு எதிராக டிரம்பின்விமர்சனம், இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் வேலைசெய்வதற்கு எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப் பாடுகள், அமெரிக்க வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யக் கூடாது என்று அவர் அழுத்தம் செலுத்தி வந்தது போன்ற அம்சங்கள் டிரம்ப்பால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்று இந்திய அரசாங்கத்தின் தரப்பில் கருதப் பட்டு வந்தது.அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி அம்சங்கள்அனைத்திற்கும் மோடி அரசாங்கம் வளைந்துகொடுத்திருக்கிறது. மோடியின் பயணத்தின் நிறைவில் இரு நாடுகளுக்கும் இடையே வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை இத்தகைய அணுகு முறையுடன்தான் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.இருநாடுகளுக்கும் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் ஒத்துழைப்பினை ஆழப்படுத்திட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?இந்தியா, அமெரிக்காவிடமிருந்து இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில், 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடல் கண்காணிப்பு ஆயுதத் தளவாடங்களை இந்தியா வாங்க இருக்கிறது.மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் ராணுவ ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அமெரிக்க பகாசுர ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்கீட் மார்ட்டின், இந்திய நிறுவனமான டாடாவுடன் இந்தியாவில் கூட்டாக எப்.16 போர்விமானங்களைக் கட்டுவதற்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஜூலை மாதத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான கப்பல் படைகளுக்கு இடையே நடைபெறவுள்ள மலபார் கூட்டுப் பயிற்சி குறித்தும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இந்தியா அணி சேர்ந்ததற்குப்பின்னர், இவ்விருநாட்டின் தலைவர்களும் தங்கள் பிணைப்பை, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ‘பொறுப்புள்ள பணியாளர்கள்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். தென்சீனக் கடல் தொடர்பான இவர்களது அறிக்கை, ‘இப்பிராந்தியம் முழுவதும் கடல்வழியே பயணிப்ப தற்கும், கடலுக்கு மேல் வான்வழியே செல்வதற்கும், வணிகரீதியாக செயல்படுவதற்கும் உள்ள சுதந்தி ரத்தை மதித்திடுவதன் முக்கியத்துவம்’ குறித்தும் குறிப்பிட்டிருப்பதானது, சீனாவிடமிருந்து விலகிச் செல்ல விருப்பம் தெரிவித்து, மோடி சமிக்ஞை அளித்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.
வடகொரியாவுக்கு குறி
இந்த அறிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைபாடும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (DPRK)தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை எதிர்த்திட இவ்விருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதிகொள்கிறது’ என்று இந்தியா கூறியிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் இத்திட்டங்களுக்கு ஒத்துழைத்திடும் அனைத்துத்தரப்பினருக்கு எதிராகவும் இணைந்து செயல்படவும்’ இந்தியா உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்தியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு எதிராக தீவிரமான முறையில் நிலைபாட்டினை மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்காவுக்கு இந்தியா தாராளம்
அமெரிக்காவிற்குள்ளேயே அதிக வேலைகளை உருவாக்குவதற்கு இந்தியா தன்னா லான அனைத்தையும் செய்திடும் என்கிற உத்தர வாதத்தை மீண்டும் டிரம்ப்புக்கு அளிக்கக்கூடிய அளவிற்கு, மோடி சென்றிருப்பதுபோலவே தோன்றுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 100 போயிங்ரக பயணிகள் விமானங்களை வாங்கிடும் என்கிறஅறிவிப்பானது, டிரம்ப்பால் வரவேற்கப்பட்டி ருக்கிறது. இது அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உதவும் என்று அவர் கூறியிருக்கிறார். அதேபோன்று, இருநாடுகளின் கூட்டறிக்கையானது, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனிக்்கும் இந்திய அணுமின் கழகத்திற்கும் இடையே,ஆறு அணு உலைகள் வாங்குவது சம்பந்தமான இறுதிக்கட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் குறிப்பிட்டிருக் கிறது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் சமீபத்தில்தான் தன்னுடைய திவால் தன்மையை பிரகடனம் செய்திருக்கிறது. இவ்வாறு திவாலாகிப்போன நிறுவனத்தை தூக்கிப்பிடிப்பதற்கு, இந்திய மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கிட மோடிஅரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. மேலும், மேற்படி அணுமின், திட்டங்களை நிறைவேற்றக் கூடிய விதத்தில் தோஷிபா நிறுவனத்தின் தலைமை யிலான வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்திற்குத் தற்போது போதிய அளவிற்கு வல்லமை உண்டா என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது.
இந்தியச் சந்தைக்கு குறி
டிரம்ப் நிர்வாகம் தங்களை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் இந்தக் கூட்டறிக்கையை உருவாக்கியுள்ள அதே சமயத்தில், இந்தக் கூட்டறிக்கையானது, இருநாடு களுக்குமிடையே சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகக் கொள்கைகளை உயர்த்திப்பிடித் திடுவோம் என்று வஞ்சகமானமுறையில் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை ஒருங்கிணைந்த முறையில் மறுஆய்வு செய்திட இருக்கிறோம் என்ற முன்மொழிவும்கூட, நம்நாட்டைப்பொறுத்தவரை ஓர் ஆபத்தான அறிகுறியையே காட்டுகிறது.
இதனை அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இப்போதி ருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், வர்த்தகப் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்ற சமயத்தில், டிரம்ப் மோடியிடம் கூறியிருப்பதுடன் பொருத்திப் பார்த்திட வேண்டும். அமெரிக்காவில் உற்பத்தியாகும் அனைத்துவிதமான பொருட்களும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி, இனி இந்திய சந்தைக்குள் பாயும் என்பதே இதன் பொருளாகும்.‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்னும் மோடியின் முழக்கத்திற்கு அமெரிக்கா எப்படி உதவும் என்பது குறித்து கூட்டறிக்கையில் எதுவும் இல்லை. அதேபோன்று இந்தியாவின் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஒப்பந்தத்தை நிறை வேற்றிட இந்தியா பசுமைத் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு அமெரிக்கா எந்த விதத்தில் உதவிடும் என்பது குறித்தும் கூட்டறிக்கையில் எதுவும் இல்லை.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் களுக்கு எச்-1பி விசா வசதிகளைத் தொடர்வது சம்பந்தமாகவும் எவ்விதமான உறுதிமொழியும் இக்கூட்டறிக்கையில் இல்லை. கூட்டறிக்கை தொடர்பாக மோடி அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடிய ஒரே யொரு வெளிப்பாடு என்னவெனில், பாகிஸ்தான்தன் எல்லையை பிற நாடுகள் மீதான பயங்கர வாதத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தாது என்பதைஉத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டி ருப்பதாகும். இது, இதற்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அறிக்கை யுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
எனினும்,டிரம்ப் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் உள்ளநிலைமைகளைச் சமாளித்திட பாகிஸ்தானைத் தான் ராணுவ சூழ்ச்சிக்கான தளமாக பார்ப்பது இப்போதும் தொடர்கிறது. மோடி பகட்டான ஆரவாரத்துடன் மும்முறைடிரம்பைக் கட்டித்தழுவிய போதிலும், இருநாடு களுக்கும் இடையேயான கூட்டறிக்கையானது, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய விதத்திலும், இந்தியாவின் நலன்களை மிகவும் எச்சரிக்கையுடன் கண்டு கொள்ளாமல் உதாசீனம் செய்துள்ள நிலையில் இருப்பதையுமே காட்டுகிறது.
ஜூன் 29, 2017
தமிழில்: ச. வீரமணி