Showing posts with label Lynching. Show all posts
Showing posts with label Lynching. Show all posts

Thursday, July 26, 2018

குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி



குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்
-சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட நெடிய உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அதே ஜூன் 20 அன்றுதான் ரக்பார் என்கிற அக்பர் கான், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பசுக் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டர்களால் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்.  
பாஜக அரசாங்கங்களின் ஆட்சியில் புற்றீசல்கள் போல் முளைத்துக்கொண்டிருக்கும் தனியார் ராணுவங்கள் இவ்வாறு கொலைகள் புரிவது தொடர்பாக கவலை தெரிவித்து, பிரதமர், இப்போதுவரை, உதட்டளவில்கூட எதுவும் கூறிடவில்லை. பாஜகவின் கீழ் உள்ள அரசாங்கங்கள் ‘பசுப்பாதுகாப்பு’(‘cow protection’), ‘அறநெறிப் போலீஸ்’(‘moral policing’), ‘புனிதக் காதல்’(‘love jihad’), ‘பிள்ளை பிடிப்பவர்கள்’(‘child lifters’), முதலான பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் குழுக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருவது  தொடர்கின்றன.  2017 ஏப்ரலுக்குப் பின்னர் ஆல்வார் மாவட்டத்தில் குண்டர்கள் கொலை செய்திடும்  கொடூரம் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது. பெஹுலுகான் முதலாவதாகவும், அதனை அடுத்து உமர் கானும், இப்போது அக்பார் கானும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெஹுலுகானும் அக்பர் கானும் கொல்லப்படுவதற்கு இடையே குறைந்தபட்சம் 46 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  குறைந்தபட்சம் 12 மாநிலங்களில்  பிரதானமாக முஸ்லீம்களும், தலித்துகளும் இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள கடும் விமர்சனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்குப் பதிலளிக்கையில் பிரதமர், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே, “குண்டர்கள் கொலைசெய்வதற்கு” எதிராக புதிதாக ஓர் ஒருங்கிணைந்த சட்டத்தைக் கொண்டுவருவார் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். உச்சநீதிமன்றம் இப்பிரச்சனை தொடர்பாக, “மதச்சார்பின்மை மாண்புகளைப் பாதுகாப்பது மற்றும் கும்பல் குண்டர்களின் ஆட்சியைத் தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்கு ஏதுவாக சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்துவதை உத்தரவாதம் செய்வது அரசுகளின் கடமையாகும்,” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எவ்விதமான  அறிவிப்பும் அரசிடமிருந்து வரவில்லை. அதேபோன்று, ஜார்கண்ட் மாநிலத்தில்  மிகவும் கொடூரமானமுறையில் ஸ்வாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு எதுவுமே செய்யாது, இப்போது ஜூலை 23 அன்று மோடி அரசாங்கம் இது தொடர்பாக புதியதொரு சட்டத்தை வடிவமைப்பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இவ்விஷயத்தை ஆறப் போடுவதற்காகவும், உச்சநீதிமன்றத்தின் கட்டளையை ஒன்றுமில்லாததாக ஆக்குவதற்காகவும்தான் அரசாங்கம் இவ்வாறு அமைச்சர்கள் குழுவை இப்போது அமைத்திருக்கிறது. 
அருவருப்பான விளக்கங்கள்
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மத்திய  அமைச்சர், “பிரதமர் மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கின் காரணமாக” குண்டர்கள் கொலைகள் என்னும் “ஒரு சதி” உருவாக்கப்படுவதாக மிகவும் இழிவானமுறையில் பேசியிருக்கிறார். உள்ளூர் பாஜக எம்எல்ஏ,  பசுக் கடத்தல் அல்லது பசுவை இறைச்சிக்காக வெட்டுதல் போன்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும்  அவர் கொல்லப்படுவார் என்று சென்ற டிசம்பரில் எச்சரித்திருந்ததைப் பார்த்தோம். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவதாக, பொய்யாகவே கூறப்பட்டாலும், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கூறுவதுடன் இவரது கூற்றை இணைத்துப் பார்க்க வேண்டும்.  
இப்போது ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து மிகவும் ஆட்சேபணைக்குரிய விளக்கம் வந்திருக்கிறது. அதன் முன்னணி செய்தித்தொடர்பாளரான இந்த்ரேஷ் குமார், ”மக்கள் மாட்டிறைச்சியை உண்ணவில்லை என்றால், குண்டர்கள் மூலமாகக் கொலை செய்யப்படுவது நிறுத்தப்படும்,” என்று அறிவித்திருக்கிறார். இவ்வாறெல்லாம் கூறுவதென்பது, அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்திட்ட உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறும் செயல் என்பதைத்தவிர வேறெதுவும் இல்லை. இதன்னியில், “பிள்ளை பிடிப்பவர்கள்”, “புனிதக் காதல்” என்ற பெயர்களின்கீழ் கொல்லப்படுவது குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரதமர் மவுனம் அனுசரிப்பது அவர் எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட அதிகமாகவே அர்த்தம் அளிக்கிறது. பிரதமர் மவுனம் அனுசரிக்கிறார் என்பது, இயற்கையாகவே, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும்  இத்தகைய இழிசெயல்களுக்கு அரசாங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது என்றே அர்த்தமாகும்.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதற்கு மிகச்சரியான உதாரணம்
இந்துத்துவா வெறியர்களில் ஒரு பிரிவு இவ்வாறு கொலைபாதக செயல்களில் ஈடுபடும் தனியார் ராணுவத்தினருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதும், அவர்களைப் போற்றிப் புகழ்வதும் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், மற்றொரு பிரிவு,  இவ்வாறு கொலைசெய்கிறவர்கள் சம்பவ சமயத்தில் மக்களால் பிடிக்கப்பட்டு,  அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டப்பட்டால்,  இத்தகைய நபர்களுடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்ற மறுப்பதும் தொடர்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில், இத்தகைய கிரிமினல்களுக்கு மத்திய அமைச்சர் ஒருவர்,  மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அதே சமயத்தில், இதுபோன்ற மறுப்பு அறிக்கைகளும் வருகின்றன. ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அமைப்புகள்  அனைத்தும் இத்தகைய கிரிமினல்களைப் பாதுகாப்பதுடன், சமயங்களில் அந்தக் கிரிமினல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதும் பார்த்துக் கொள்கின்றனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவாவில் மிகவும் பயங்கரமான முறையில் ஒரு சிறுமியைக் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கயவர்களைப் பாதுகாத்திடவும், அக்கிரிமினல்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தடுத்திடவும், உள்ளூர் பாஜக தலைவர்களும், வழக்குரைஞர்களும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பெஹுலுகானைக் கொலை செய்தவர்கள் குறித்து மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும்கூட அவர்கள் கைது செய்யப்படாது சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஷே கூட சில இடங்களில் போற்றிப் பாராட்டப்பட்டு, மாபெரும் “ஹீரோ”வாக கும்பிடப்பட்டிருக்கிறான். எனினும், நாதுராம் கோட்ஷே, மகாத்மா காந்தியைச் சுட்டபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் இல்லை என்றுதான் ஆர்எஸ்எஸ் கூறிக்கொண்டிருக்கிறது. இதனை நாதுராம் கோட்ஷேயின் சகோதரர் கடுமையாக மறுத்துவருகிறார்.  நாதுராம் கோட்ஷேயின் சகோதரரான கோபால் கோட்ஷே, ஓர் ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்தான் இருந்தோம். நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-இல் வளர்ந்ததுதான் அதிகம் என்று நீங்கள் கூற முடியும். அது எங்களுக்கு ஒரு குடும்பம் போன்றது.  நாதுராம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஓர் அறிவுஜீவியாக (intellectual worker) மாறியிருந்தார். அவருடைய அறிக்கையில், தான் ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு விலகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோல்வால்கரும், ஆர்எஸ்எஸ்-உம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொண்டதால், அவர் அவ்வாறு கூறியிருந்தார். ஆனாலும் அவர் ஆர்எஸ்எஸ்-ஐவிட்டு விலகிடவில்லை. (ஃப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994). ஒருவர் தற்சமயம் ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல பிரச்சனை.   இவ்வாறு வன்முறை தீவிரவாதத்தை மேம்படுத்தக்கூடிய, விஷத்தைக் கக்கும் தத்துவார்த்தக் கொள்கையை ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன்கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளும்  தன்னகத்தே கொண்டு, அதனை ஊட்டி வளர்த்தனவா, இல்லையா  என்பதேயாகும்.
தீவிரவாதப் பயிற்சி – பரம்பரை பரம்பரையாகவே அளிக்கப்படுகிறது
ஆர்எஸ்எஸ், இந்துக்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. “இந்துத்துவா”  முழக்கத்தை உருவாக்கிய நபர், வி.டி. சாவர்க்கர்தான். இந்துத்துவா என்பதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்றும், இந்துக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான ஓர்  அரசியல் திட்டம்தான் என்றும் இதில் அவர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இக்குறிக்கோளை எய்துவதற்கு அவர் முன்வைத்த முழக்கம்,அனைத்து அரசியலையும் இந்துமயமாக்கு, இந்துக்களை ராணுவமயமாக்கு” (Hinduise all politics and militarise Hindudom) என்பதாகும். இதில் உத்வேகம் அடைந்த, ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் ஹெக்டேவாரின் மூளையான, டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணமானார். இவர்களுடைய சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. இத்தாலிய பாசிசம் எப்படித் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கிறது என்பதை, மிகவும் வானளாவப் புகழ்ந்து அவர் தன்னுடைய மார்ச் 20ஆம் தேதிய நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.  பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்பியபின்னர், டாக்டர் மூஞ்சே 1935இல் நாசிக்கில் மத்திய இந்து மிலிட்டரி கல்வி சொசைட்டி என்பதை நிறுவினார்.  இதுதான் 1937இல் நிறுவப்பட்ட, இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துவருவதாகத் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருவான கோல்வால்கர், 1939இல், நாசி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும், ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப்பினையாகும்,” என்று கூறியிருக்கிறார். இதன் பின்னர் மிகவும் காலம் கடந்து, 1970இல்தான், அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப்படுத்தப்பட  வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,” என்று கூறுகிறார்.
வகுப்புவாதமும், அடிப்படைவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை. ஆர்எஸ்எஸ், தன்னுடைய குறிக்கோளை எய்துவதற்காக, “அடக்குமுறை மூலமாக தங்களுக்கு எதிரானவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக,” அது அளித்திடும் மிலிட்டரி பயிற்சியின்போது, வெறுப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஏற்றவிதத்தில் நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. இது, பல சமயங்களில், வகுப்புக்கலவரங்களாக வெடிப்பதற்கு இட்டுச் செல்கின்றன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற வகுப்புக்கலவரங்கள் தொடர்பாக ஒவ்வொரு நீதித்துறை விசாரணை அறிக்கைகளும் – 1969இல் அகமதாபாத்தில் நடைபெற்ற கலவரங்களில் ஆரம்பித்து, 1970இல் நடைபெற்ற பிவண்டி, ஜல்கான், மஹாத் கலவரங்கள் வரை, 1971 டெல்லிச்சேரி கலவரங்கள், 1979இல் நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரங்கள், 1982இல் நடைபெற்ற கன்னியாகுமரி கலவரங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளும்  மற்றும் 1992-93இல் நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையும், மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2002 குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் – என அனைத்து அறிக்கைகளுமே ஆர்எஸ்எஸ் என்று பெயரைக் குறிப்பிட்டு, அதுதான் சிறுபான்மையினருக்கு எதிராக பதட்டத்தைக் கொளுத்திப்போட்டு, மிகப்பெரிதாக எரியச்செய்து, சிறுபான்மையினருக்கு எதிராக குண்டர்களை அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபட வைத்தது என்று குறிப்பிட்டிருக்கின்றன. இந்த ஆணையங்கள் அனைத்துமே நீதித்துறையின் உயர் நிலையில் உள்ள நீதிபதிகளால் தலைமை தாங்கப்பட்டவை என்பதையும், அவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் என்பதையும், எனவே இதில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கினார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.   
வன்முறைக் கலாச்சாரம்
இந்த சமயத்தில் இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை  அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் என்ன கூறினார் என்பதை நினைவு கூர்வது அவசியம். ஏனெனில் அவரை ஆர்எஸ்எஸ்/பாஜக பேர்வழிகள் இன்றையதினம் அடிக்கடி (தவறாக) மேற்கோள் காட்டுவதைப் பார்க்கிறோம். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடைசெய்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை கூறுவதாவது: “ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் கொண்டிருக்கும் வன்முறைக் கலாச்சாரத்தின் கீழ் மேற்கொண்டுவரும்  ஆட்சேபகரமான மற்றும் தீங்கு விளைவிக்கத்தக்க நடவடிக்கைகள் பலரைக் காவு கொண்டிருக்கிறது. இதில் சமீபத்தில் மிகவும் மோசமானமுறையில் பலியாகி இருப்பது நம் காந்திஜியாகும்.” இவ்வாறு 1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் பட்டேல் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அன்றையதினம் அவர் குறிப்பிட்ட அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. தனியார் ராணுவத்தினரின் வன்முறைக் கலாச்சாரத்தின்கீழ் நாட்டின் சூழ்நிலை மிகவும் தரம் தாழ்ந்து சென்றுகொண்டிருக்கிறது.  அன்றையதினம் ஹிட்லரும், முசோலினியும் முறையே தங்களுடைய கருப்பு நிறச் சட்டையினர் மற்றும் பழுப்புநிறச் சட்டையினர் மூலமாக உயர்த்திப்பிடித்த பாசிஸ்ட் குண்டர்கள் படை மேற்கொண்டதைப்போன்ற கொலைபாதக செயல்களை, இன்றையதினம் ஆர்எஸ்எஸ் தன்னுடைய தனியார் ராணுவத்தினர் மூலமாக செய்து கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட்  ‘இந்து ராஷ்ட்ரத்தை’ அமைத்திட, இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அமைந்துள்ள மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை மாற்ற வேண்டும் என்று கோருகிறது. அதற்காகத்தான் இத்தகைய வன்முறை, பயங்கரவாத மற்றும் அராஜக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.  ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக இக்குறிக்கோளை எய்திடத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு இவர்களிடமிருந்து வந்திருக்கிற ஆபத்து முறியடிக்கப்பட்டாக வேண்டும். நாளையதினம் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட வேண்டுமானால்,  இவர்களின் பிடியிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். இவர்களின் இழிசெயல்களைத் தடுத்து நிறுத்திட நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பற்றி நிற்கும், நாட்டிலுள்ள தேசபக்தர்கள் அனைவரின் ஒற்றுமை அவசியமாகும்.
(தமிழில்: ச. வீரமணி)


Sunday, July 22, 2018

ரக்பார் கானைக் கொலை செய்தது எழுவர் கும்பல்



ரக்பார் கானைக் கொலை செய்தது எழுவர் கும்பல்
புதுதில்லி, ஜூலை 23-
ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் உள்ள கொல்கான் கிராமத்திலிருந்து சென்ற முஸ்லீம் பால் பண்ணை உரிமயாளர் ரக்பார் கானை, வெள்ளியன்று இரவு, ராஜஸ்தான் ஆல்வார் மாவட்டத்தில்  கொலை செய்தது ஏழுபேர் அடங்கிய கும்பல் என்று ரக்பார் கானுடன் சென்று, கொலைபாதகர்களிடமிருந்து தப்பித்த அஸ்லாம்  கூறியுள்ளார்.  இது தொடர்பாக அஸ்லாம், ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினரிடம் கூறியபோது, அவர்களில் ஐந்து பேர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் மூவரைக் கைது செய்திருப்பதாக, காவல் துறையிர் கூறியிருக்கின்றனர்.

அஸ்லாமின் வாக்குமூலம்
நடந்த சம்பவம் குறித்து அஸ்லாம், காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:   
“நானும், ரக்பாரும் கான்பூரிலிருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ராம்கார் அருகிலுள்ள லாலாவண்டி கிராமத்தில் ஏழு பேர் அடங்கிய கும்பல் ஒன்று எங்களைத் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முயன்றபோது, வெடிகுண்டுகளுடனும், கம்புகளுடனும் இருந்த அவர்கள், எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலேயே எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் ஓட்டிவந்த கால்நடைகள் சாலையோரம் இருந்த வயல்களில் ஓடிச்சென்று நின்றன. இவ்வாறு அவர்கள் எங்களைத் தாக்கும்போது, அவர்களில் ஒருவன், “விஜய், அவன் கால்களை உடை,” என்றும், “தர்மேந்தர், அவன் தலையில் அடி” என்றும். “நரேஷ், அவன் கைகளை உடை” என்றும் ஒருவர்க்கொருவர் கத்திக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மொத்தம் ஏழு பேர். அவர்களில் ஐந்து பேரின் பெயர்கள் ஞாபகத்தில் இருக்கிறது.”
இவ்வாறு அஸ்லாம் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். தினக்கூலித் தொழிலாளியான  அஸ்லாம், மாட்டை வாங்கிக்கொண்டு ஓட்டிவருவதற்கு உதவிடுமாறு ரக்பார் கான்  கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருடன் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்திருக்கிறார். பசுப்பாதுகாப்புக்குழுவைச் சேர்ந்த குண்டர்கள் கொலை செயல்களில் ஈடுபட்டுவருவதால், இரவிலேயே பயணம் செய்வோம் என்று ரக்பர் கான் கூறி, அவ்வண்ணமே இரவில்தான் திரும்பி வந்திருக்கிறார்கள். இரண்டு பசுக்களுடனும் அவற்றின் கன்றுக்குட்டிகளுடனும், ராம்காரின் லாலாவண்டி கிராமத்தின் உள்ள காட்டுப்பகுதி வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையில் மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டு, மாடுகள் மிரண்டிருக்கின்றன. பின்னர் பயந்துசாலையின் ஓரமாக வயல்களுக்குள் ஓடி நின்றிருக்கின்றன.
மாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்த ரக்பார் கான் அவற்றை மீண்டும் சாலைக்கு இழுத்துவர முயற்சித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்கள், எங்களைச் சூழ்ந்துகொண்டு, வானத்தில் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இரண்டு பேர் என்னை நோக்கி ஓடிவந்தனர். மற்றவர்கள் ரக்பார் கானைப் பிடித்துக்கொண்டனர். அஸ்லாம் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு, வயல்களுக்குள் ஓடிச்சென்று ஒளிந்துகொண்டுவிட்டார். ஆனால் ரக்பார் கான் பயங்கரமாகக் கத்தினார். எனினும் அவரால் அவர்களிடமிருந்து தப்பிவர முடியவில்லை.
பின்னர் அஸ்லாம் அங்கிருந்து எப்படியோ தப்பித்து, வழி தெரியாமல் சுற்றி சுற்றித் திரிந்துவிட்டு சனிக்கிழமை காலையில் 10 மணிக்கு ஊருக்கு வந்திருக்கிறார். அதற்குள் காவல்துறையினர், ரக்பார் கான் கொல்லப்பட்ட சம்பவத்தை ரக்பார் கானின் குடும்பத்திற்குத் தெரிவித்திருந்தனர்.

கிராமத்தினரும், உள்ளூர் மக்களும் ரக்பாரின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தவர்கள், அங்கு வந்த காவல்துறையினரிடம், ராஜஸ்தானிலிருந்து கால்நடைகளை வாங்கிக்கொண்டு திரும்புகிற முஸ்லீம்கள் இவ்வாறு அடிக்கடி தாக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கிறாத்ரகள், அவர்களைக் கொலையும் செய்துவிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
”நான் பால்பண்ணைத் தொழிலில் கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இதற்கு முன்பெல்லாம் இப்படி நடந்தது கிடையாது. இரண்டு, மூன்று ஆண்டுகளாகத்தான் இத்தகைய கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது இது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. உண்மையில், ஆல்வாரில் இது மிகவும் மோசமான ஒன்று. சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருக்கின்ற போலீசார், எங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டபின்னர் எங்களை அனுப்பிவிடுவார்கள்.   பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்று சொல்லிக்கொள்ளும் குண்டர்கள்தான் எங்களை வழிமறித்து, பணமும் பெற்றுக் கொண்டு, சில சமயங்களில் எங்கள் கால்நடைகளையும் ஓட்டிச்சென்றுவிடுவார்கள்,” என்று ரக்பாரின் மாமா முகமது லியாஸ் கூறியிருக்கிறார்.
ரக்பாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குருகிராம் – ஆல்வார் நெடுஞ்சாலையில் பல மணி நேரம் அமர்ந்து, குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சனிக்கிழமையன்றிரவு,  சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அதன்பிறகு ராஜஸ்தான் மற்றும் ஹிரியானா மாநில அரசு அதிகாரிகள் செயலில் இறங்கி, மறியலில் ஈடுபட்டவர்களை வந்து சந்தித்துள்ளர். அவர்களிடம் ரக்பார் கானின் குடும்பத்தார், “ரக்பார் கானைக் கொலை செய்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கிஞ்சிற்றும் கருணை காட்டக்கூடாது. எங்கள் குடும்பத்தில் ரக்பார் கான் மட்டும்தான் சம்பாதித்து வந்து, குடும்பத்தில் இருந்த ஒன்பது பேரைக் காப்பாற்றி வந்தார். எனவே எங்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர்கள் குடும்பத்தின் சார்பாக அவருடைய மாமா முகமது உமர் கோரினார்.
கொலை செய்யப்பட்ட ரக்பார் கானின் வயது 31. எழுதப்படிக்கத் தெரியாத ரக்பார் கான், கால்நடைகளைப் பராமரிப்பதுடன், கல்குவாரியிலும் பகுதிநேர தொழிலாளியாக வேலைபார்த்து, ஒன்பது பேர்கள் அடங்கிய தன் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார். அவருடைய மனைவியும் எழுதப்படிக்கத் தெரியாதவர்தான். அவருக்கு ஏழு குழந்தைகள். மூத்த பெண்ணின் வயது வெறும் 12தான்.  கடைசி குழந்தையின் வயது வெறும் 1. ரக்பார் கான் இருந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டாதவிதத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். இப்போது என்னசெய்வதென்றே தெரியவில்லை,” என்று ரக்பார் கானின் மாமா முல்தான் கூறினார்.
அஸ்லாம் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், ”ரக்பார் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவென்றால் எவ்விதத் தப்புமே செய்யாத நிலையில் அவர் கொல்லப்பட்டிருப்பதுதான். எனக்கு  அவரை சிறுவயதிலிருந்தே தெரியும்,” என்றார்.
அவர்களின் நூ கிராமத்தில் உள்ள  600 குடும்பங்களில் பெரும்பாலானவை கால்நடை வளர்ப்பையும் கல் குவாரிகளில் வேலைசெய்வதையும்தான் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. கிராமத்தில் மூன்றில் ஒரு பங்கினர் இந்துக்கள். உண்மையில் இரு சமூகத்தினரும் மிகவும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இருதரப்பினரும் இரு தரப்பினரின் திருமணங்கள் மற்றும் இதர விழாக்களிலும் பரஸ்பரம் பங்கேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், நூ கிராமத்திலிருந்து வெளியே செல்லும்போது,  நாங்கள் இந்த நாட்டையே சேர்ந்தவர்கள் அல்ல என்பதுபோல் நாங்கள் நடத்தப்படுகிறோம்,’’ என்று பெரோஸ் என்பவர் மிகவும் மனம் நொந்துகொண்டார்.
(ந.நி.)
(படக்குறிப்புகள்: 1. அஸ்லாம். 2. ரக்பார் கான் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்த உள்ளுர் மக்கள்.

Wednesday, July 18, 2018

கும்பலாகச் சென்று கொலை செய்வதைத் தனிக் குற்றமாக்கிடுக நாடாளுமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் பரிந்துரை


கும்பலாகச் சென்று கொலை செய்வதைத் தனிக் குற்றமாக்கிடுக
நாடாளுமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் பரிந்துரை

புதுதில்லி, ஜூலை 18-
கும்பல் குண்டர்கள், கொலை செய்வதைத் தனிக் குற்றமாக்கி, சட்டமியற்றவேண்டும் என்று நாடாளுமன்றத்தை, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.‘
கும்பல் குண்டர்கள், கொலை செய்யும் சமீபத்திய நிகழ்வுகளை, பயங்கரமான நடவடிக்கைகள்” (“horrendous acts of mobocracy”என்று செவ்வாய்க் கிழமையன்று, கடுமையாகக் கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இவ்வாறு கும்பல் குண்டர்கள் சென்று கொலை செய்யும் நடவடிக்கையைத் தனிக் குற்றமாகப் பாவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தினைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான மூவரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வாயம், தன்னுடைய 45 பக்கங்கள் கொண்ட தீர்ப்புரையில், மாபெரும் மக்கள்தொகை கொண்ட மாபெரும் குடியரசைச் சேர்ந்த நாம், பன்முகக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதற்கான சகிப்புத்தன்மை என்னும் மாண்பினை இழந்துவிட்டோமா” என்றும் வியந்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளில் குண்டர்கள் அடங்கிய கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, கொடூரமான முறையில் மக்களைக் கொலைகள் செய்துவருவதும், அதனை அங்குள்ள மக்கள் செய்வதறியாது திகைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதும், காவல்துறையின் செயலற்றதன்மையும், பின்னர் குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட அக்கொடூர சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு அனைவராலும் பார்க்கப்படும் நிலை இருப்பதையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். 
மனித இயல்பற்ற கோர உருவத்தினர் எச்சரிக்கை’’ (‘Beware of the monster’)
இவ்வாறு நாடு முழுதும் குண்டர்களின் கும்பல்கள் கொலைகளிலும் மற்றும் வன்முறை வெறியாட்டங்களிலும் ஈடுபடுவதை,மெல்லமெல்ல அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள்” என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இவ்வாறு கும்பல்களின் வெறித்தனமான நடவடிக்கைகள் அதிகரித்துவருவது நாட்டை, மனிதஇயல்பற்ற கோர உருவம்கொண்டவர்கள்கொண்ட ஒரு நாடாக மாற்றிவிடும், என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் தீர்ப்புரையில், நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும், அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி,  அவர்கள்  அனைவரையும் பாதுகாக்க வேண்டிய அடிப்படையான கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள், குற்றத்தைப் பொறுத்தவரை அதற்கு மதம் இல்லை. குற்றத்தைச் செய்த கயவரோ அல்லது குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபரோ எந்த இனத்தைச் சேர்ந்தவர், எந்த சாதியைச் சேர்ந்தவர், எந்த வகுப்பைச் சேர்ந்தவர் அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று பார்க்கக்கூடாது,” என்றும் தீர்ப்புரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  மேலும் அவர்கள், இவ்வாறு நடைபெறும் கும்பல் கூட்டத்தினரின் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்கக்கூடிய, சரிசெய்யக்கூடிய மற்றும் அவ்வாறு செயல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கக்கூடிய நடவடிக்கைகளையும் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவற்றை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்திட வேண்டும் என்றும், அவ்வாறு அமல்படுத்தியது தொடர்பான அறிக்கைகளைத் தங்கள் நீதிமன்றத்திற்கு அடுத்த நான்கு வார காலத்திற்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்புரையானது, பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் தலித்துகள் மற்றும் முஸ்லீம்களுக்க எதிராக மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹர்யானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வெட்கங்கெட்ட தாக்குதல்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின்மீது பிறப்பிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், எம்.பி., வரவேற்றிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், அரசாங்கத்தின் பாதுகாப்பு இல்லாமல் இத்தகைய குண்டர் குழுக்கள் இயங்கிட முடியாது,” என்றும் கூறினார். ’நாங்கள் இந்தத் தீர்ப்பினை வரவேற்கிறோம். இந்தப்பிரச்சனை மீது அரசாங்கம் விவாதம் செய்ய விரும்பவில்லை என்ற போதிலும், இதனை நாங்கள் 2015இல் எழுப்பினோம். அரசாங்கம் இந்தப் பிரச்சனைதொடர்பாக விவாதிப்பதற்கு எங்களுக்கு நேரமே ஒதுக்கிடவில்லை. நான் மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்புவது என்னவெனில், அதிகாரத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பு இல்லாமல் இத்தகைய குண்டர் குழுக்கள் இயங்கிட முடியாது என்பதேயாகும்,” என்றார்.


(ந.நி.)

Sunday, July 23, 2017

மதவெறி கொலைகாரர்களுக்கு தைரியம் கொடுப்பது எது? மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி கேள்வி


 (நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. 19-7-17 புதனன்று மாலை மாநிலங்களவையில், நாட்டில் பல மாநிலங்களில் மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் கொலை செய்யப்படுதல் மற்றும் பல்வேறு அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படுதல்  அதிகரித்து வருவது தொடர்பாக குறுகிய கால விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது):
‘‘மிகவும் கனத்த இதயத்துடன் நான் பேச எழுந்திருக்கிறேன். மேலும் சற்று நேரத்திற்கு முன்பு இந்த அவையில் நடந்த நிகழ்ச்சியின் பின்னணியில் என் உரையைத் தொடங்குகிறேன். இங்கே உள்ள சூழ்நிலை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நலம் தரக் கூடிய விதத்தில் இல்லை என்றே நாம் பார்க்கிறோம். குடியரசு நமக்கு எப்படி வந்தது? உலகத்திற்கு நம்மால் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், எந்தவொரு மேற்கத்திய ஜனநாயக நாடும் துணிச்சலுடன் சொல்ல முன்வராத சமயத்தில், நாம் நம் நாட்டில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது எந்தப் பாலினத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். அந்த சமயத்தில் அது மிகவும் புரட்சிகரமான நடவடிக்கையாக இருந்தது. அதன் அடிப்படை சமத்துவத்தை அங்கீகரிப்பது என்பதாகும். அத்தகைய சமத்துவம் இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினரும், தலித்துகளும் கொல்லப்படுவதன் மூலமாக கடுமையாகக் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எனக்கு முன்பேசிய உறுப்பினர் கொலைச்சம்பவங்களைப் பட்டியலிட்டார். எனவே நான் அதற்குள் செல்லவில்லை. ஆயினும் ஒரு சில சம்பவங்கள் எந்த அளவிற்கு மிகவும் கொடூரமாக நடந்திருக்கிறது என்று பாருங்கள். அக்லாக் என்பவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டிருக்கிறார். எதற்காக? அவர் மாட்டுக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். இது 2015இல் நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் லட்டேகர் என்னுமிடத்தில் இரு இளைஞர்கள் தூக்கில் தொங்கவிடப் பட்டிருந்தார்கள். அவர்கள் அவர்களுடைய கால்நடைகளை, கால்நடைக் கண்காட்சிக்கு கொண்டு சென்றார்களாம்.
அவ்விருவரும் முஸ்லிம் பையன்கள். ஆல்வாரில், பெஹ்லுகான் என்னும் பால் வியாபாரம் செய்பவர் கொல்லப்பட்டார். உனாவில் நடந்தது என்ன? தலித்துகள் இறந்த பசுமாடுகளின் தோல்களை உரித்துக் கொண்டிருந்தார்கள். அது துரதிர்ஷ்டவசமாக அவர்களுடைய வேலை. அதனைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களைக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் சவுக்கால் அடித்து இழுத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொடூரக்காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவியது. சமீபத்தில் கொல்லப்பட்ட ஜூனைத் மற்றும் அவருடைய சகோதரர்கள் கதையைப் பார்த்தோம். எந்த அளவிற்கு சம்பவங்கள் மிகவும் கொடூரமாக இருப்பதையும், சகிப்புத் தன்மையற்று இருப்பதையும் பாருங்கள்.
தாகூரின் வார்த்தைகள்...
ரவீந்திரநாத் தாகூர் தனக்கு அளிக்கப் பட்ட வீரத்திருமகன் பட்டத்தைத் திரும்ப ஒப்படைக்கும்போது அவர் பயன்படுத்திய வார்த்தைகளை நினைவுகூர்க. ‘‘இவ்வாறு மிகவும் கொடூரமானமுறையில் பெண்களையும், குழந்தைகளையும் விட்டுவைக்காது நரமாமிசம் சாப்பிடும் பட்டினி என்னும் அரக்கனுக்கு சாபம் இடுவதற்காக, இடியோசை போன்றகுரலை எனக்குக் கொடுங்கள்’’ என்றார். அந்த அளவிற்கு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்வுகள் நடந்து கொண்டி ருக்கின்றன. நாம் ஏன் இதனை இங்கே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்?
இத்தகைய கொடூரமான நிகழ்வுகள் தொடர்பாக நாம் இந்த அவையில் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு மக்களைக் கொல்பவர்களை சர்வதேச அளவில் பல நாடுகளில் நாம் பார்த்திருக்கிறோம். மத்திய காலத்தில் ரோமன் கத்தோலிக் சர்ச், ஸ்பானிஷ் இன்குவிஷிஷன் (Spanish Inquisition) என்ற பெயரில் நடத்திய அக்கிரமங்களை அறிவோம். அவர்கள் ஒரு நபர், யூதனா அல்லது முஸ்லிமா என்று அடையாளம் கண்டுகொள்வதற்காக அவர்களுக்கு பன்றிக்கறி சூப் கொடுத்து குடிக்கச் சொல்வார்கள். அவர்கள் குடிக்க மறுப்பதை வைத்து அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இத்தகைய நடைமுறை அமெரிக்காவில் 1940 வரை நீடித்தது. அதுவரை அமெரிக்காவில் கறுப்பர்கள் என்பவர்கள் கீழ்த்தரமானவர் களாகவே கருதப்பட்டு வந்தார்கள்.
‘‘விசித்திரமான பழம்’’ (Strange fruit) என்றுதலைப்பிட்ட பில்லி ஹாலிடே என்கிற புகழ்பெற்ற கவிஞரின் பாடல் ஒன்றை இங்குள்ள என்னுடைய மூத்த சகாக்கள் நன்கு அறிவார்கள். அந்தப் பாடல் தெற்கத்திய மரங்களில் உள்ள இலைகள் ரத்தத்துடன் காணப்படுகிறது என்கிற விதத்தில் அந்தப் பாடல் அமைந்திருக்கும். ‘தெற்கத்திய மரங்கள்’ என்பதன் பொருள் அந்தக் காலத்தில் தென் அமெரிக்காவைக் குறிக்கும். ‘இலைகளின் மீது ரத்தம்’ என்பதன் பொருள் அங்கே கறுப்பர்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்ததைக் குறிக்கும். அவர்கள் ‘யார் பன்றிக் கறி சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டார்கள். நீங்கள் ‘யார் மாட்டுக்கறி சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்கிறீர்கள்? 2017இல் என் நாட்டின் நிலை எவ்வளவு மோசமானதாக மாறி இருக்கிறது?
தனியார் ராணுவங்களுக்கு தடை
அடுத்து, நாடு முழுவதும் சுற்றித்திரியும் தனியார் ராணுவத்தினரின் நிலை என்ன? அது மாநிலங்களின் பிரச்சனை என்று பிரதமர் கூறுகிறார். அது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என்கிறார்? ஒரு மத்திய அரசின் உத்தரவின்பேரில் இத்தகைய தனியார் ராணுவங்கள் தடை செய்யப்பட வேண்டியவைகளாகும். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் தனியார் ராணுவங்களைத் தடை செய்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அமெரிக்காவில் செயல்படும் வலதுசாரி தீவிரவாத அமைப்பான கு க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan) போன்று, நீங்கள் வைத்திருக்கி றீர்கள். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட ஹிட்லர் மற்றும் முசோலியின் கறுப்பு மற்றும் பழுப்பு நிற சட்டைகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்.
இத்தகைய தனியார் ராணுவங்களைத் தனியே எந்தவொரு மாநில அரசாங்கமும் தடை செய்திடமுடியாது. அவற்றை மத்திய அரசாங்கம்தான் தடை செய்திட வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திட வேண்டுமானால், தனியார் ராணுவங்களைத் தடுத்திட இது ஒன்றே வழியாகும். நாட்டின் பல பகுதி களிலும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், நாட்டை அறநெறிப்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பெயர்களில் செயல்பபடும் பல்வேறு குழுக்களையும் தடுத்து நிறுத்திடமுடியும். இவ்வாறு இவர்கள் நாட்டின் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள் வதற்கு எந்த உரிமையும் கிடையாது.
மூன்றுவிதமான கோட்பாடுகள்
ஏன் இவைகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன? நாட்டில் சித்தாந்த அடிப்படையில் சில திட்டங்கள் (ideological project) நடை முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்களும், நானும், நாம் அனைவரும் இந்தியாவின் சுதந்திரத்தையும், அரசமைப்புச்சட்டத்தையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கிறோம். இத்தகு சுதந்திரத்தை நாட்டில் நடைபெற்ற மூன்றுவிதமான கோட்பாடுகளுக்கு இடையே நடைபெற்ற போராட்டத்தின் விளைவாகப் பெற்றுள்ளோம். விடுதலைப் போராட்ட காலத்தில் முக்கியமான கோட்பாடாக காங்கிரஸ் கட்சியின் கோட்பாடு இருந்தது. அவர்கள் சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் ஒரு மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்கும் என்று கூறினார்கள்.
இடதுசாரிகளாகிய நாங்கள், அவர்களிடமிருந்து வேறுபட்டோம். அத்துடன் நின்றுவிட முடியாது என்று நாங்கள் கூறினோம். நாங்கள், நாம் பெறும் அரசியல் சுதந்திரத்தை பொருளாதார சுதந்திரமாக மாற்றுவதற்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், அதனை சோசலிசத்தின் கீழ்தான் செய்திட முடியும் என்று அவர்களிடம் கூறினோம். இல்லையேல், சமூக ஜனநாயகக் குடியரசே வடுப்படத் தக்கதாக மாறக்கூடிய அபாயமிருக்கிறது என்றோம். இவையல்லாமல் மூன்றாவது கோட்பாடு ஒன்றிருந்தது. அதுவும் இரு விதங்களில் வெளிப்பட்டது. முஸ்லிம் லீக், இஸ்லாமிய இந்தியா குறித்துப் பேசியது. நீங்கள், இந்துராஷ்ட்ரம் குறித்துப் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பெற்றிருந்தீர்கள். இவ்விருவருமே நாட்டை மத அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். துரதிர்ஷ்டவசமாக நாடு பிளவுபட்டது.
முஸ்லிம் லீக் இஸ்லாமிய நாட்டைப் பெற்றது. நம் தலைமுறையினருக்கு, எனக்கு உட்பட இது வரலாறு. ஏனெனில் நாம் அனைவரும் சுதந்திரத்திற்குப் பின்னர்தான் பிறந்தோம். … (குறுக்கீடு) … சரி, அதுபோகட்டும். விஷயம் என்னவென்றால், நாட்டை அமைப்பதற்கு மத உணர்வுகள் அடிப்படையாக அமைந்திட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இவ்வாறு இவர்களுடைய கோட்பாடு, மற்ற இருவிதமான கோட்பாடுகளிலிருந்தும் - அதாவது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதிலிருந்தும் சோசலிசக் குடியரசு என்பதிலிருந்தும் - வேறுபட்டதாகும்.
பட்டேல் தயாரித்த உத்தரவு
சுதந்திரத்திற்குப்பின், இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக மாறியது. அந்த ஆத்திரத்தின் காரணமாகத்தான் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. இதற்கு உத்தரவிட்டவர் சர்தார் பட்டேல். அந்தத் தடை உத்தரவைத் தயாரித்தவரே அவர்தான். 1948 பிப்ரவரி 4 அன்று அதனை அவர் தயார்செய்தார். அதில் அவர் என்ன குறிப்பிட்டிருந்தார்? ‘சங் பரிவாரத்தின் ஆட்சேபகரமான மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் எவ்விதத்தங்குதடையுமின்றி தொடர்கின்றன. வன்முறைக் கலாச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். சங் பரிவாரங்களின் நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்றவர்கள் பலரை பலி கொண்டுள்ளனர். இதற்கு சமீபத்தில் பலியானவர், மிகவும் விலை மதிக்கமுடியாத நம் காந்திஜியாவார்.’ இத்தகைய வன்முறைக் கலாச்சாரம்தான் இப்போது பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. பசுப் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிற அனைவருமே ஆர்எஸ்எஸ்-காரர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் சமூக விரோதிகள், கிரிமினல்கள் என்று நாங்கள் கூறுகிறோம். நம் பிரதமரும் அப்படித்தான் கூறியிருக்கிறார்.
அவர்கள் இரவில் கிரிமினல்களாக இருக்கிறார்கள், பகலில் வேறு ஏதோவாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள், இவ்வாறு செயல்படுவதற்கு, அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது எது? இவர்களால் பரப்பப்படும் வன்முறைக்கலாச்சாரம்தான் இத்தகைய கிரிமினல்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. இவ்வாறு வன்முறைக் கலாச்சாரம் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த தையடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குத் தடைவிதித்ததைத் தொடர்ந்து அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அப்படி இல்லை. மகாத்மா காந்தி படுகொலைசெய்யப்பட்டபிறகும், நம் அரசமைப்புச்சட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அவர்கள் சொல்லியபிறகும், அவர்கள் தங்கள் வேலை களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-இன் தலைவர் ஒருமுறைகூறியதை நான் இங்கே படிக்கிறேன். ‘நம்நாட்டில் முஸ்லிமாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? அவர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். சந்தேகமில்லை. எனினும், அவர்கள்நம் நாட்டிற்கு உண்மையாக இருக்கிறார்களா? அவர்கள் இந்த மண்ணுக்கும் இதன் பாரம்பரியத்திற்கும் சொந்தக்காரர்கள் என்று உண்மையிலேயே உணர்கிறார்களா? நம்மை உருவாக்கிய இந்த மண்ணுக்கு உண்மையாக இருக்க வேண்டும், இது நம் கடமை என்று அவர்கள் நினைத்திருக்கிறார்களா? இல்லை. அவர்கள் மத நம்பிக்கை மாறியதுமே தேசத் தின் மீதான அன்பும் பக்தியும் போய்விட்டது.’ நாடு சுதந்திரம் பெற்றபின்னரும், நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பின்னரும்கூட அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
இந்நாட்டில் பிறந்த அனைவரும், அவர் எந்தமதத்தினராக இருந்தாலும், எந்த இனத்தினராக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவரும் சமம் என்று அரசமைப்புச்சட்டத்தில் நாம் அளித்திருக்கும் உரிமையுடன் இது நேரடியாகவே முரண்படுகிறது. இவ்வாறு நேரடியாகவே அவர்கள் முரண்படுகிறார்கள். இத்தகைய அவர்களின் சித்தாந்த நிலைபாடுதான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை தேசியவாதம் என்பது இந்து தேசியவாதம் அல்லது இந்துத்துவா தேசியவாதம்தான். இவர்கள் கூறும் பாரத மாதா, என்னுடைய பாரத மாதா கிடையாது. என்னுடையபாரத மாதா, முஸ்லிம்களைப் பெற்றிருக்கிறாள், கிறிஸ்தவர்களைப் பெற்றிருக்கிறாள், பார்சிக்களைப் பெற்றிருக்கிறாள், புத்திஸ்டுகளைப் பெற்றிருக்கிறாள், சமணர் களைப் பெற்றிருக்கிறாள், என்னைப்போன்று கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் பெற்றிரு க்கிறாள்.
நாம், ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிடும்போது, நாம் இவ்வாறு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்காகவும்தான் முழக்கமிடுகிறோம். அதே சமயத்தில், ‘ஜெய்ஹிந்த்’ என்றும் முழக்கமிடுகிறோம். ‘ஜெய் ஹிந்த்’ தாய்நாட்டுப் பற்றுடன் கூடிய முழக்கம் இல்லை என்பது ஏன்? ‘பாரத் மாதா கி ஜே’ மட்டும் ஏன் தாய்நாட்டுப் பற்றுடன் கூடிய முழக்கம் என்று கூற வேண்டும்? இதற்குள் மறைந்திருக்கும் நயவஞ்சகம் என்ன? …(குறுக்கீடு)… பகத்சிங் முழக்கமிட்ட ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ பற்றி என்ன கூறுகிறீர்கள்? அது தாய்நாட்டுப்பற்றுடன் கூடியமுழக்கம் இல்லையா? பகத்சிங் நாட்டுப்பற்று கொண்டவர், இல்லையா? … (குறுக்கீடு) … இவ்வாறு முழக்கங்களின் அடிப்படையில் எவரையும் பாகுபடுத்தாதீர்கள்.
ஒரு தேசாபிமானி என்றால் அவன் தேசாபிமானிதான். அவன் ஒரு இந்திய தேசாபிமானி. இத்தகைய இந்தியதேசாபிமானத்திற்காகத்தான் நாம் இருக்கிறோம். மாறாக, இந்துத்துவா தேசாபிமானத்திற்கோ அல்லது இந்துத்துவா தேசியவாதத்திற்கோ அல்ல. இந்திய தேசாபிமானத்தை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதுதான் நம் கடமையேயொழிய, மதவெறியர்கள் ஊற்றி வளர்த்திடும் இந்துத்துவா தேசியவாதத்தை அல்ல. இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வெறுப்பை ஊட்டி வளர்த்ததன் மூலமாகத்தான் ‘பசுப்பாதுகாப்பு குண்டர்கள்’ உருவாகி இருக்கிறார்கள். இவர்கள் கூறும் தேசியவாதம், நாட்டுக்கு நல்லது என்று என்னால் கருத முடியவில்லை. எனவேதான் இவர்களின் தேசியவாதம் என்ன என்பது குறித்து மேலான இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
ஹிட்லரின் தேசியவாதம்போல்
இவர்கள் கூறும் தேசியவாதம் போல் உலகில் பிற இடங்களிலும் இருந்திருக்கிறது. ஹிட்லரின் தேசியவாதம் இத்தகையதுதான். ஹிட்லரின் தேசியவாதம் எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன் தேசியவாதம்தான் பிரம்மாண்டமானது என்றும், பேருருவம் படைத்த உயிரினம் என்றும் (gigantic national organism) கூறிக்கொண்டிருந்தான். ஹிட்லர் தன்னுடைய ‘மெயின் கேம்ப்’ என்னும் நூலில் எழுதியுள்ளதைப் படிக்கிறேன். ‘இத்தகைய பிரம்மாண்டமான உயிரினம், இதற்கு எதிராகத் துளிர்விடும் மற்ற உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடிய விதத்தில் வலுவானதாக வளர்ந்திட வேண்டும்’ பிறகு இதனை நிறை வேற்றுவதற்கு ஹிட்லர் என்ன கூறினான். மெயின் கேம்பிலிருந்து மேலும் படிக்கிறேன். ‘ஜெர்மானிய இனம் (இந்த இடத்தில் இந்துத்துவா என்று மாற்றிப் படிக்க) மற்ற இனங்களுடன் இரண்டறக் கலக்காமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்குக் காரணம், பலவீனமான அல்லது நோய்க்கு ஆளான அல்லது ஊசலாட்டத்துடன்கூடிய உயிரினம் இதனுடன் கலந்தால், ஜெர்மன் தேசியவாதம் என்கிற உயிரினத்தை வலுப்படுத்திட முடியாது. மட்டமானவை எப்போதும் உயர்வானதைவிட அதிகம் இருந்திடும் என்பதால், அதனை உயர்வான உயிரினத்துடன் சேர அனுமதித்திடக் கூடாது.’
இவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி கூறிவருவதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். எனவே இத்தகைய மட்டரகமான கூறுகளைக் களைந்திட வேண்டும் என்று ஹிட்லர் கூறினான். அப்படித்தான் அவர் ஜெர்மன் தேசியவாதத்தை வலுப்படுத்த முயன்றான். அதையேதான் இவர்களும் பின்பற்றுகிறார்கள். ‘இந்துக்கள் அல்லாத அனைவரையும் களையெடுங்கள். இந்து தேசியவாதத்தை வலுப்படுத்துங்கள்’ என்பது இவர்கள் சித்தாந்தமாகும். இத்தகைய சித்தாந்தத்தைத்தான் இன்றைய தினம் இவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்து உரிமை அல்ல. இதுஇந்துத்துவா தேசியவாதம் ஆகும்.
இத்தகைய இந்துத்துவா தேசியவாதம்தான் ‘பசுப்பாது காப்புக்குழு’ போன்ற குழுக்களுக்கு சக்தியைக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிராக கொலைபாதகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இத்தகைய குழுக்களை அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பது போன்றவை என்று கருதிவிட வேண்டாம். இவை ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைத்திட்ட சமூக விரோதக் குழுக்களோ அல்லது கிரிமினல்களோ கிடையாது. வல்லபாய் பட்டேல் கூறியது போன்று வன்முறைக் கலாச்சாரம் உருவாக்கிய ஜென்மங்கள் இவர்கள். இவர்களின் வன்மு றைக் கலாச்சாரம் இத்தகைய குழுக்களை நடவடிக்கைகளில் இறக்கி விட்டிருக்கிறது.
நம் அரசமைப்புக் குடியரசின் அடித்தளமாக விளங்கும் அனைவரும் சமம் என்கிற உரிமையையே தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கடவுளைக் கும்பிடும் அடிப்படை உரிமையையே மறுக்கிறது. ஒருவர், தான் விரும்பும் மத நம்பிக்கையை மற்றொருவரிடம் பரப்பிடும் உரிமையை மறுக்கிறது. இதனை அனுமதிப்போமானால், இப்போதைய அரசமைப்புச் சட்டத்தின் ஒழுங்கையே அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறோம் அல்லது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதாகும். எனவேதான் நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களையும், தலித்துகளையும் கொன்று குவிக்கும் ‘பசுப் பாதுகாப்புக் குழுக்களுக்கு’ எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்து மதவெறியர்களின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து நாம் மட்டும் கூறவில்லை. அரசாங்கம் மிகவும் விரும்பும் வெளிநாட்டு ஊடகங்கள் கூட, குறிப்பிட்டி ருக்கின்றன.
அமெரிக்காவின் குரலுக்காவது மரியாதை கொடுங்கள்
‘தி நியூயார்க் டைம்ஸ்’ என்னும் ஊடகத்தைஅரசாங்கம் உச்சாணிக் கொம்பில் வைத்திருக்கிறது. அந்த ஊடகம் என்ன சொல்கிறது? இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு அது தன்னுடைய தலையங்கத்தில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? ‘இந்து மதவெறியர்களால் கொலைவெறித் தாக்குதல்கள் மோடியின் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் மீதான இதன் பாதிப்புகள் ரத்தத்தை உறையவைக்கக்கூடிய விதத்தில் இருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 15 இந்தியா தன்னுடைய 70 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடக்கூடிய தருணத்தில் இந்நிலைக்கு மோடி கொண்டு வந்திருக்கிறார்’ என்று எழுதியிருக்கிறது.
இந்த வாரம் ஃபைனான்சியல் டைம்ஸ் ஏடு என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? ‘இந்த அரசாங்கத்தின் பிரதமர் இந்து உரிமைக்குத் துணைபோவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கையின் காரணமாக மாட்டுக்கறி வர்த்தகம் செய்தார் அல்லது சாப்பிட்டார் என்ற சந்தேக த்தின்பேரில் இந்துமத வெறியர்கள் 25க்கும்மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தி ருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
இவ்வாறு நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் நம் அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு முற்றிலும் விரோதமான வைகளாகும். இங்கே இருக்கின்ற நாம் அனைவரும் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது நம் அனைவரையும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்குக் கீழ்தான் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளது. இதுவே இன்றைக்குக் கேள்விக் குறியாக்கப்பட்டி ருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் என்ன கூறினார்? ‘பல்வேறு திசைகளில் உற்பத்தியாகும் பல்வேறு நதிகளும் கடைசியில் கடலில் கலப்பதைப் போல, பல மதத்தினரும், ஏன் கடவுள் மறுப்பாளரும்கூட, மனித சமுதாயம் என்னும் கடலில் தான் கடைசியில் கலக்கிறார்கள்.’ பகவத்கீதை என்ன கூறுகிறது? விஷ்ணு அவதாரம் எடுத்த சமயத்தில், கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து, ‘நான் அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவேன்’ என்கிறார். இதைத்தான் என்னுடைய தாய் நாடு எனக்குக் கூறியிருக்கிறது.
நான் என்ன உடுத்த வேண்டும்? நான் என்ன சாப்பிட வேண்டும்? என்னுடைய நண்பன் யார்? இவ்வாறெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்திட நீங்கள் யார்? பசுக்களைக் கொன்றார்கள் என்று பசுப் பாதுகாப்புக்குழுவினர் முஸ்லிம்களையும், தலித்துகளையும் கொல்கிறார்கள். ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? உலகிலேயே மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தத் தொழிலில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘தேசவிரோதிகளா?’ இந்த அரசாங்கம் எங்கள் கோரிக்கைக்கு செவிமடுக் காவிட்டாலும், குறைந்தபட்சம் ஜி.20 நாடுக ளின் கருத்துக்காவது மதிப்புக் கொடுங்கள். உங்கள் மூன்று ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஐந்துமுறை பயணம் செய்திருக்கிற அமெரிக்காவின் குரலுக்காவது மரியாதை செலுத்துங்கள்.
ஷேக்ஸ்பியரை ஏன் இழுக்கிறீர்கள்?
இந்து உரிமையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதை நிறுத்துங்கள். அதன் மூலம் முஸ்லிம்கள், தலித்துகள் கொல்லப்படுவதையும் நிறுத்துங்கள். இது ஒன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை அல்ல. இந்தக் கொலைபாதக நிகழ்வுகள் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தை அரித்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கிற சித்தாந்தரீதியான கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்னும் நம் அரசமைப்புச் சட்டத்தை, தங்கள் சித்தாந்தமான ‘இந்துத்துவா ராஷ்ட்ரம்’-ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகளாகும்.  எனவேதான், இது மிகவும் ஆழமான ஒரு விஷயமாகும். எனவேதான், பசுப் பாதுகாப்புக்குழுக்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரோமியோ எதிர்ப்புக் குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாவம், ஏன் ஏழை ஷேக்ஸ்பியரை உங்கள் இயக்கத்திற்கு இழுத்து வந்திருக்கிறீர்கள்? ஏன் ‘ரோமியோ எதிர்ப்பு?’ ஏன் நீங்கள் ஷேக்ஸ்பியரை அவமானப்படுத்துகிறீர்கள்? …(குறுக்கீடு) … இந்தக் குழுக்கள் அனைத்தையும் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் எந்த மதநம்பிக்கையாளராக இருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கை யற்றவர்களாக இருந்தாலும் நம் வேற்றுமைகளைக் கடந்து இதனை நாம் விவாதித்திட வேண்டும். கடவுள் மறுப்பு என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. இந்துயிசம் எந்த அளவிற்குப் பழமையானதோ அந்த அளவிற்கு கடவுள் மறுப்பும் பழமையானதாகும். சார்வாகன் ஒரு கடவுள் மறுப்பாளன்தான். பிராமணக் கடவுள் மறுப்பாளன். எனவே கடவுள் மறுப்பாளன் என்பதாலேயே அவன் இந்தியாவிற்கு எதிரானவன் என்று முடிவு செய்துவிடாதீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் உண்டு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நம் நாடு தரம் தாழ்ந்து சென்று கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்திடுவோம். இதுவே இந்த அவைக்கு நான் அளித்திடும் செய்தியாகும். இத்தகைய மதவெறி அமைப்புகளைத் தடை செய்திட இந்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.’’
-ச.வீரமணி (19.7.17)