Saturday, March 23, 2019

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திடும்




தி இந்து நாளிதழில் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

(நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களைத் தவிர மற்ற அனைத்துத் தரப்பு மக்களும், பாஜகவின் ஆட்சியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று தி இந்து நாளிதழ் நேர்காணல் கண்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் உத்திகள் குறித்தும், இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:)

கேள்வி: தேர்தல் மிகவும் நெருங்கிவந்துவிட்டபோதிலும், மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதில் இன்னமும் தயக்கம் காட்டிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு கூறுவது உண்மையல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களையுமே கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பெரும் பணக்காரர்களைத் தவிர, மற்ற அனைத்துத் தரப்பினருமே  கடந்த ஐந்தாண்டுகளில்  கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான பிரச்சனை இதுவேயாகும். இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் கிளப்பிவிடுவதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியில்  கூருணர்ச்சிமிகுந்த பிரச்சனைகளை உருவாக்கிடவும் அதன்மூலம் மதவெறித் தீயை விசிறிவிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவற்றை இவர்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் தீவிரப்படுத்திடுவார்கள். இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகள் முக்கியமான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தேர்தலின் முடிவினைத் தீர்மானிக்கப் போகிறது.
கேள்வி: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாலக்கோட்டில் விமானப் படையினர் நடத்திய தாக்குதல்கள் தேர்தலின் முடிவினை மாற்றியமைத்திடாதா?
சீத்தாராம் யெச்சூரி: மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதற்காக ஆட்சியாளர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால்தான் பிரதமரே மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இப்பிரச்சனைகள் அரசியலாக்கப் பார்த்தார். இவரைத் தொடர்ந்து பாஜக தலைவரும், மத்திய அமைச்சர்களும் பாலக்கோட்டில் நடைபெற்ற விமானப் படையினரின் தாக்குதல் குறித்தும் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து பூஜ்யத்திலிருந்து, 450 பேர் வரையும் இறந்ததாக, தங்கள் இஷ்டத்திற்கு அள்ளிவீசினர். அந்த இடத்தில் பயன்படுத்திய செல்போன்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அவற்றைப் பயன்படுத்திய அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று நம் நாட்டின் உள்துறை அமைச்சரே கூறியதைப் பார்த்தோம்.   இதற்கு ஆதாரம் என்ன என்று எதிர்க்கட்சியினர் எவரும் கேட்கவில்லை. நாம் கூறியதெல்லாம், நம் விமானப்படையினர் தாக்க வேண்டிய இடங்களைச் சரியாகக் குறியிட்டு, வெற்றிகரமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதாகக்கூறி விமானப் படையினரை நாம் பாராட்டியிருக்கிறோம். இப்போது, அதன் விளைவு என்ன? விமானப் படையின் தளபதி கூறியிருப்பதைப்போல,
இப்பிரச்சனைகள் மீது  அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதேயாகும். அரசாங்கம் இவ்வாறு பதில் சொல்வதற்குப் பதிலாக, ‘எதிர்க்கட்சியினர் ராணுவத்தினரை எதிர்க் கேள்விகள் கேட்பதாக,’ எதிர்க்கட்சியினர் மீது திருப்பித்தாக்குதல் தொடுத்திருக்கிறது. இது முற்றிலும் மடத்தனமாகும். நாங்கள் கூறுவதென்னவெனில் இதன்மூலமாக இந்த அரசாங்கம் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்பதேயாகும். ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று அரசாங்கம் கூறியது.  ஆனால் அது நடைபெறவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அவை புல்வாமா நிகழ்வு வரையிலும் தொடர்ந்தன. இப்போது, பாலக்கோட்டிற்குப் பின்னர், இது பயங்கரவாதத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று கூறப்பட்டது. இதுவும் உண்மையல்ல. இதன்பின்னர் 12க்கும் மேற்பட்ட நம் பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்முவில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடந்திருக்கிறது. இவையெல்லாம் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பதற்றநிலைமைகளை பாஜக-வினர் தங்களுக்குச் சாதகமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால். அதில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. இந்திய வாக்காளர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில், எதிர்க்கட்சியினர் – ஆளுங் கட்சியினர் என்ற பேதம் கிடையாது. பயங்கரவாதம் என்பது நாட்டின் எதிரி. நாடு ஒன்றுபட்டு நின்று அதனை எதிர்த்திடும்.  ஆனாலும் பயங்கரவாதிகள் நாட்டு மக்களிடம் காணப்படும் ஒற்றுமையை, தங்களின் நடவடிக்கைகளின் மூலமாக பிரித்திட முயற்சிக்கிறார்கள்.  இவர்கள் வீசிய இத்தகைய சூழ்ச்சி வலையில் ஆட்சியாளர்களும் பாஜகவும் வீழ்ந்து சிக்கிக்கொண்டுவிட்டனர்.

கேள்வி: மேற்கு வங்கத்தில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்திட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை  காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறதே. இதன் தாக்கம் இடது முன்னணிக்கு எப்படி இருக்கும்?
சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில், எப்போதுமே அங்கே கூட்டணி இருந்ததில்லை. பாஜகவையும் திரிணாமுல் காங்கிரசையும் தோற்கடித்திட வேண்டும் என்கிற எங்கள் குறிக்கோளை எய்துவதற்கு ஒரு முயற்சியை மேற்கொண்டோம். அதற்காக, பாஜக-விற்கு எதிரான வாக்குகளும், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளும் ஒரேயிடத்தில் குவிவதற்கான வேலைகளைச் செய்வோம் என்று நாங்கள் கூறினோம். இதேபோன்ற குறிக்கோளையுடைய மற்றவர்களுடனும் இணைந்துபோக தயாராக இருக்கிறோம் என்றும் நாங்கள் கூறினோம். எங்கள் நோக்கங்களை மேலும் தெளிவாக விளக்குவதற்காக, தற்போது பாஜக அல்லாது மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அல்லாது காங்கிரஸ் கட்சியும் இடது முன்னணியும் பெற்றுள்ள இடங்களில் பரஸ்பரம் போட்டியிட வேண்டாம் என்றும், நாங்கள் காங்கிரஸ் வென்ற இடங்களில் போட்டியிட மாட்டோம் என்றும் தாமாகவே முன்வந்து ஒரு யோசனையை முன்வைத்தோம். ஆனால் இதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. நாங்கள் வென்றுள்ள இடங்களிலும் அவர்கள் போட்டியிடும் விதத்தில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் அவ்வாறு செய்வதிலிருந்து எங்களை நாங்கள் தவிர்த்து வந்தோம். ஏனெனில் மக்கள் முன் நாங்கள் வைத்திட்ட வேண்டுகோளில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்பதையும், இதற்குத் துரோகம் இழைப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.  சென்ற மக்களவைத் தேர்தலில் 27 சதவீதம் வாக்குகளைப் பெற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. இங்கே மிக முக்கியமான பிரச்சனை, இடங்களின் எண்ணிக்கை அல்ல. பாஜக அல்லாத, திரிணாமுல் காங்கிரஸ் அல்லாத வாக்குகளை மிக அதிகமான அளவில் பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதே இங்கே மிகவும் முக்கியமாகும்.

கேள்வி: இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எவ்வாறு இருந்திடும்?
சீத்தாராம் யெச்சூரி: பொறுத்திருந்து பார்ப்போம். பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டையுமே தோற்கடிக்கக்கூடிய ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது வாக்காளர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்திடும். இதில் கூட்டணி அல்லது முன்னணி என்று கூறும் பிரச்சனையே கிடையாது.   

கேள்வி: மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே எதிர்க்கட்சியினர் பாஜகவிற்கு எதிராக அணிதிரள்வதை காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய பெரிய அண்ணன் மனப்பான்மை காரணமாக ஒத்துவராமல் வீணடிக்கிறது என்று நீங்கள் குறைகூறுகிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: நான் எவரையும் கூறைகூறும் ஒருவனல்ல. அவர்களின் முடிவுக்கு அவர்களுக்குப் பல காரணங்கள் மற்றும் நோக்கங்கள் இருக்கலாம். எங்கள் கவலை, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன், குறிப்பாக வங்க மக்களின் நலன் அடிப்படையிலானதாகும். அதன் அடிப்படையில் ஒரு திட்டத்தை தயாரித்து முன் வைத்தோம். தேர்தலில் தங்களின் முன்னுரிமைகள் என்ன என்று ஒவ்வொரு கட்சியுமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எங்கள் முன்னுரிமைகளை கீழ்க்கண்டவாறு தீர்மானித்திருக்கிறோம்: முதலாவது, பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்போம். இரண்டாவது, மத்தியில் அமரும் ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த முறையில் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற்படுத்திட நிர்ப்பந்தம் அளிக்கக்கூடியவிதத்தில், இடதுசாரிகளை வலுப்படுத்துவோம். மூன்றாவது, மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திடுவோம். தேர்தல்களும் அரசியலும் பள்ளிக்கூடக் கணக்கு போன்றதல்ல. (Elections and politrics is not arithmetic.) மக்கள் கடந்த காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள்.
அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு என்று  வாக்கு சதவீதத்தைக் கூட்டிக் காண்பிப்பதில் அர்த்தமே இல்லை. இரண்டும் இரண்டும் 22ஆகவும் மாற முடியும் அல்லது பூஜ்யமாகவும் மாற முடியும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி தன்னுடைய முன்னுரிமைகளைச் சரியானமுறையில் பெற்றிருக்கவில்லை என்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதன்மீது நான் விமர்சனம் செய்ய முடியாது.

கேள்வி: மக்களவையில் ஒற்றை இலக்கத்தில் இடங்களைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கூட்டணி அமைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: நான் கட்சியின் பொதுச் செயலாளராக மாறியபோது, மக்களவையில் எங்களுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் இடங்கள் இருந்தன. 2004க்கும் 2014க்கும் இடையே எங்கள் வீழ்ச்சி இருந்தது. இப்போது, நாங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறோம் என்றால், அமைய இருக்கும் ஆட்சியில் அவர்களின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எங்கள் இடங்களை அதிகரித்திட வேண்டும் என்பதாகும். இன்றைய தினம், நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுமே விவசாய நெருக்கடி குறித்து அல்லது வேலையில்லாக் கொடுமை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன. இதற்கு எங்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் காரணமாகும். மக்கள் இயக்கங்களின் மூலமாக அனைத்துக் கட்சியினரின் நிகழ்ச்சிநிரல்களிலும் நாங்கள் செல்வாக்கினை செலுத்தியிருக்கின்றோம். ஆனால் அவை நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கவேண்டியிருக்கிறது. இதற்கு எங்கள்  எண்ணிக்கை அதிகரிப்பதன்மூலமாக எங்கள் இருப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.  நாட்டில் எங்குமே எங்களை யாராவது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களா என்று நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட பகுதிகளில் எங்கள் சொந்த பலத்தில்தான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம்.
(நன்றி: தி இந்து)
(தமிழில்: ச. வீரமணி)

No comments: