Wednesday, February 1, 2017

ஏழைகள் மீது மேலும் சுமைகள்

ஏழைகள் மீது மேலும் சுமைகள்
மக்களின் துன்ப துயரங்கள் குறித்து இந்த பட்ஜெட் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
புதுதில்லி, பிப்.1-
மத்திய அரசின் 2017-18 பட்ஜெட் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததனால் ஏற்பட்டநாசகரமான விளைவுகளிலிருந்து சாமானிய மக்கள் இன்னமும் மீளாத சூழ்நிலையில் உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப்பிழியும் விதத்தில் பட்ஜெட் முன்மொழிவுகளை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.முன்னதாக செவ்வாயன்று அவரால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையானது, பொருள்கள் வாங்குவதும், சேவைகளைப் பயன்படுத்துவம் மிகவும் கூர்மையான அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதைத் தெளிவாகவே காட்டியது. கடுமையாக வேலையிழப்பு ஏற்பட்டிருப்பதையும், விவசாயத்தின் மூலமான வருமானங்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதையும், பணப்புழக்கம் உள்ள துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் சமூகச் சீர்குலைவு ஏற்பட்டிருப்பதையும் ஆய்வறிக்கை காட்டியது.ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்டோமொபைல்ஸ், சிமெண்ட், உருக்கு, காகிதம், அலுமினியம், ரசாயன உரங்கள் போன்ற அடிப்படையான தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் காரணமாக மிகப் பெரிய அளவில் இத்தொழில்களில் வேலையின்மை ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், 40 மில்லியன் டன்கள் உணவு இருப்பு மற்றும் போதுமான அளவிற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருந்தபோதிலும் மத்திய அரசு ‘சுருக்கும் நிதிக் கொள்கையை’ (உடிவேசயஉவiடியேசல களைஉயட யீடிடiஉநைள) தொடரவே விரும்புகிறது.
செலவினத்தைக் குறைத்து...
சென்ற ஆண்டு (திருத்திய மதிப்பீட்டில்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.4 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 12.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. செலவினத்தைக் குறைத்ததன் மூலமாகவே நிதிப் பற்றாக்குறை இலக்கு சரி செய்யப்பட்டிருக்கிறது.
மொத்த வருவாய் பற்று 2016-17-ல் (திருத்திய மதிப்பீட்டில்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4 சதவீதமாக இருந்தது. இப்போது 2017-18 பட்ஜெட் மதிப்பீட்டில் 9 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பட்ஜெட் நடவடிக்கைகள் மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட வரிகள் 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாகும்.
மறைமுக வரி மூலமாக 75 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதன்மூலம் உழைக்கும் மக்கள் மீதான சுமையை அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியை அதிகரிப்பதன் மூலம் வருவாய் பற்றை அதிகரித்திட அரசாங்கம் பெரிதும் திட்டமிட்டிருக்கிறது.
கூடுதல் வரி வருவாய் கிடைக்குமா?
அரசாங்கம் நேரடி வரிமூலம் 1.3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்க இருப்பதாக கூறியிருக்கிறது. உண்மையில் இது நடக்கப்போவதில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க கற்பனையான உயர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எல்லாம் அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோன்று வரிகள் மீது ஜிஎஸ்டி(GST)யின் தாக்கம் எந்த அளவிற்கு நிச்சயமற்று இருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
ரியல் எஸ்டேட் ஊக வர்த்தகர்கள் மற்றும் கட்டிடம் கட்டுபவர்களுக்கு அபரிமிதமான ஆதாயத்தை அளிக்கக்கூடிய விதத்திலும் நிலம் கையகப்படுத்தல் மற்றும் நிலங்களை அவர்களுக்கு அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிதியமைச்சர் செயல்பட்டிருக்கிறார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மீதான வருமான வரியானது 50 கோடிக்கும் கீழான பரிவர்த்தனை (transaction)இருந்தால் குறைத்திடுவது என ஒரு முன்மொழிவினை அளித்திருக்கிறார். இது கார்ப்பரேட்டுகள் வரி ஏய்ப்பு செய்திட புதிய மார்க்கங்களைத் திறந்துவிடும்.
நிதி அமைச்சர் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் திரும்பத்திரும்ப கூறியிருப்பதுடன் அதன்காரணமாக கடன் அளிப்பதற்காக வங்கிகளுக்கு அதிக அளவில் பணம் சேர்ந்திருப்பதாகவும் பீற்றிக் கொண்டிருக்கிறார். உழைக்கும் மக்களின் சேமிப்பு கட்டாயப்படுத்தி, பறித்து வங்கிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கிய அடுத்த நிமிடமே ஏழை மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளிலிருந்து எடுத்துவிடுவார்கள். எனவே இது நீண்ட கால அளவில் பயன் அளிக்காது.
பட்ஜெட்டின் படி வெறும் 1.48 சதவீதம்தான் மொத்த பட்ஜெட் தொகையில் பழங்குடியினரின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2.44 சதவீதம்தான் தலித்துகளுக்கான நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அவர்களின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். அதேபோன்று பாலின பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடும் மொத்த ஒதுக்கீட்டில் 5.3 சதவீதம் அளவிற்குத்தான் இருக்கிறது.
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கிராமப்புற மக்களின் வறுமையை பெரிய அளவில் ஒழிப்பதற்கான ஒரு திட்டமாகும். இதற்கான ஒதுக்கீட்டில் கணிசமான உயர்வு எதுவும் இல்லை. சென்ற ஆண்டு 47.4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் அவ்வளவுதான்.
கல்வி நிதி கடும் வீழ்ச்சி
சமூகநலத்துறைகளுக்கான செலவினங்களில் மிகச்சிறிய அளவிற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பணவீக்கத்துடன் இதனைஒப்பிட்டுப் பார்த்தோமானால், 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளால் ஏற்பட்டுள்ள ஊதிய செலவினத்தை எதிர்கொள்ளக்கூட இது போதாது. சுகாதாரத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒரு சிறிய அளவு கூடுதலாகி இருந்த போதிலும், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. (2016-17இல் திருத்திய மதிப்பீட்டில் 2.2 சதவீதமாக இருந்தது, 2017-18 பட்ஜெட் மதிப்பீட்டில் 2.16 சதவீதம்.) நிதி அமைச்சர் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று திரும்பத்திரும்ப கூறினார். ஆனால், விவசாயத் துறைக்கு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையில் அது பிரதிபலித்திடவில்லை. விவசாயத்துறைக்கான ஒதுக்கீடு 1,98 சதவீதத்திலிருந்து, 1.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அரசாங்கத்தின் தம்பட்டம் அடித்திடும் திட்டங்களுக்குக்கூட எவ்விதமான ஒதுக்கீடும் கிடையாது.
அதேபோன்றே நிதி அமைச்சர் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நிறையவே பேசியபோதிலும், அரசாங்கத்தின் மூலதனச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.86 சதவீதத்திலிருந்து, 1.84 சதவீதமாகக் குறைந்துதான் இருக்கிறது.
அபத்தமான அறிவிப்புகளே!
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது சம்பந்தமாக நிதி அமைச்சர் ஏராளமான அறிவிப்புகளை செய்திருக்கிறார். ரொக்க நன்கொடை என்பதன் வரம்பை 2000 என்று அறிவித்திருப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. ஏனெனில் பல நன்கொடைகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுப்பதற்குத் தடை விதிக்காத வரையிலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு வரம்பு விதிக்காத வரையிலும், தேர்தல் நிதி சம்பந்தமான சீர்திருத்தங்கள் எல்லாம் அபத்தமானவைகளே தவிர வேறெதுவும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில், இந்த பட்ஜெட் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதுமட்டுமல்ல, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கொடூரமானமுறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியிருக்கிறது. (ந.நி.)

No comments: