Sunday, February 16, 2014

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பசப்பல் வார்த்தைகள்

 People's Democracy Editorial

2014 மக்களவைக்கான பொதுத் தேர்தல்களையொட்டி காங்கிரஸ் அல்லாத, பாஜக
அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் உடன்பாடு உருவாகி யிருப்பதன் காரணமாக,  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களுக்கும் அதன் பிரதமர் வேட்பாளருக்கும் நம்பிக்கை யிழந்த நிலையில் ஏற்பட்டுள்ள விரக்தி மற்றும் வெறுப்பு காரணமாக அவர்கள் வெளிப்படுத்தும் வார்த் தைகள் நாகரிக எல்லையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன.  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களால் அதிலும் குறிப்பாக அவர்களால் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளரால் கட்டவிழ்த்துவிடப்படும்  பண்பாடற்ற சொற்களை பண்புடையவர்கள் எவராலும் நாகரிகமானதாகக் கருத முடியவில்லை.
இந்திய கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவினரும், அவற்றின் மூளையாக செயல் படுபவர்களும், சர்வதே நிதி மூலதனமும் அதே அளவுக்கு நிலை குலைந்து போயுள்ளன.  ஏனெனில் அவை, 1939க்குப் பிந்தைய ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில், பாசிச அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டு மக்களின் சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துக்
கட்டியும், மக்கள் மீது சொல்லொண்ணா அளவிற்கு ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுரண்
டலையும் தங்கள் கொள்ளை லாபத்தையும் தொடர்வதற்கு, ஹிட்லரின் பாசிசம் எப்படித் தங்களுக்கு உதவியதோ, அதேபோன்று ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்களின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட் பாளரை, தங்கள் சார்பில் சிறந்ததொரு நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி வந்தன.  நவீன தாராளமய சீர்திருத்தங்களை எவ்வித இடையூறுமின்றி திணித்து மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றமுடியும் என்று அவை நம்பிக்கொண்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அணி உருவாகி இருப்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “மூன்றாவது அணியின் அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தலாம்(டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்ரவரி 12, 2014) என்று சர்வதேச கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி ஒன்று குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த ஏஜன்சியின் செய்தியாளர், “தேர்தலுக்குப்பின் இந்தியா வில் துண்டு துண்டு கட்சிகளால் அமையும் கூட்டணி அரசாங்கம் பங்குச் சந்தை வணி
கத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திடும்,’’ என்றும் கவலைப்பட்டிருக் கிறார். இதற்கும் மேல் ஏதேனும் சொல்லவேண்டுமா,  என்ன? 

கார்ப்பரேட்டுகள் கனவு காண்பதுபோல் 2014தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்கள் வெற்றிபெற்று மோடியின் ஆட்சி அமைந்தால் இந்தியா மற்றும் மக்களின் நிலை என்னவாகும்? மதவெறித் தீ மேலும் கூர்மையான முறையில் விசிறிவிடப்படும் என்பதோடு, நாட்டு மக்களில் பெரும்பான்மையோருடைய  பொரு ளாதாரச் சுமைகள் மேலும் அதிகரித்திடும்.

தங்களுடைய இந்த அச்சத்தை மறைக்கக் கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ் நாட்டு மக்கள் மீது புதியதொரு சொல் விளையாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்படையான பிரச்சாரம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் வளமை குறித்தும் இருக் கிறது. ஆனால், அதன் உண்மையான இலக்கு என்பது தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரம்என்னும் நிகழ்ச்சிநிரலை மேலும் கூர்மைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே யாகும்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளன்றே, பாஜக, நாடாளுமன்றத்தில் வகுப்புவாத வன்முறை தடைச் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டதை வெற்றிகரமான முறையில் வரவிடாமல் செய்ததைப் பார்த்தோம். இதற்கு அது கூறிய காரணம் என்ன? அது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே-கூட்டாட்சித்தத்துவத்தையே-மீறுகிறதாம்.  நாட்டின் தற்போதைய கூட் டாட்சிக் கட்ட மைப்புக்கு பாஜக வக்காலத்து வாங்குவது வெறும் கண்துடைப்பேயாகும். ஏனெனில், இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளே வேறாகும்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் குருஜி என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட எம்எஸ் கோல்வால்கர்,  அளித்துள்ள `இந்து ராஷ்ட்ரம்என்கிற தத்துவார்த்தக் கட்டுமானமும் (We, Or Our Nationhood Defined, 1939, Fourth Edition, 1947) மற்றும் இக்குறிக்கோளை எய்துவதற்கு,  `சங் பரிவாரம்ஏற்படுத்தியுள்ள ஸ்தாபனக் கட்டமைப்பும் பல ஆண்டுகளுக்கு முன்பே, நம் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட் டாட்சிக் கட்டமைப்பை குழிதோண்டிப் புதைத்திட வேண்டும் என்று கூறி யிருக்கின் றன.  தற்போதுள்ள அனைத்து `சுயாட்சிமற்றும் `அரை சுயாட்சிமாநிலங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டு, `பாரதம்என்கிற ஒரே மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், `ஒரே நாடு, ஒரே மாநிலம், ஒரே நாடாளுமன்றம், ஒரே அரசாங்கம் ... எனப் பிரகடனம் செய்திட வேண்டும் என்றும், நாடு மாநிலங்களாகக் கூறுபடுத்தப்படாத ஒரே வடிவ அரசாங்கம் நிறுவப்படக்கூடிய விதத்தில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீளவும் எழுதப்படவேண்டும். என்றும்   அவை தெளிவாகவே தெரிவித் திருக்கின்றன.

ஒருபக்கத்தில் பாஜக, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களைத் தாங்கள்தான் உருவாக்கினோம் என்று பீற்றிக்கொள்ளும் அதே சமயத்தில், தெலுங்கானா மாநிலம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிக்கொண்டிருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படக்கூடாது என்று எவ்விதப் பிசிறுமின்றி கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலல் லாமல், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் `ஒரே நாடு,. ஒரே மக்கள், ஒரே தேசம்என்று தொடர்ந்து பேசி வருகின்றன. எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக-வைப் பொறுத்தவரை, கூட்டாட்சித் தத்துவம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாடுகளை, மொழிகளை, பன்முகத்தன்மைகளை அங்கீகரிக்கும் ஒன்றாகப் பொருள்கொள்ளவில்லை. மாறாக,  அவர்களைப் பொறுத்தவரை கூட் டாட்சித்தத்துவம் என்பது நாட்டை பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதும், அது மக்களின் பல்வகையான மொழி, இனம், பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதேயாகும். அனைத்து மாநில நிர்வாகங்களும் மத்திய அரசின் கருணையின்கீழ்தான் இயங்கிட வேண்டும் என்பதே அவர்கள் கோருவதாகும்.  துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள மிகச் சிறிய மாநிலங்களின், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின்,  அனுபவம் இது
தான்.  உதாரணமாக, தற்போது உத்தரப் பிரதேசத்தின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒரே குரலில் ஒரு நிலைப் பாட்டை மேற்கொள்கையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு அரசாங்கமும் உதாசீனம் செய்திட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், இதே மாநிலம் நான்கு அல்லது பல துண்டுகளாக உடையுமானால், ஒவ்வொன்றும் தன் வல்லமையை இழந்து, மத்திய அரசின் கருணை யின் கீழ் இருக்க வேண்டிய நிலை உருவாகி விடும், இல்லையா?

இதேபோன்றுதான் `குஜராத் மாடல்வளர்ச்சி என்று  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் ஆகும்.  திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள பல்வேறு விவரங்கள் அது நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு வரவாக இருந்தாலும் சரி, குஜராத் ஒடிசா, சட்டீ°கர் போன்று தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கும் பின்னால்தான் குஜராத் இருக் கிறது என்று தக்க ஆதாரங்களுடன் மெய்ப் பித்திருக்கிறது. தனி நபர் வருமானத்திலும், நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுக்கு மத்தியில் அது ஆறாவதாக இருக்கிறது. வறுமை மட்டத்
தில் ஐந்தாவதாகவும், நீண்ட காலம் உயிர் வாழ்வோர் நிலையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. மனித வள வளர்ச்சி அட்டவணையிலும்கூட அது நாட்டிலுள்ள பெரிய
மாநிலங்களின் வரிசையில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.  மக்களின் சுகா
தாரம் மற்றும் கல்வி அட்டவணையில் அது ஆறாவது இடத்தை வகிக்கிறது.  குஜராத் மாநிலத்தில் வாழும் குழந்தைகளில் 80 சதவீதத்தினரும், பெண்களில் 55 சதவீதத்தினரும் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.  இதுதான் அதன் `வளர்ச்சி மாடல்ஆகும்.  எதார்த்தநிலை இவ்வாறிருந்த போதிலும், `குஜராத் வளர்ச் சிக் கதையைஇந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் மக்கள் மத்தியில் அளந்து கொண்டுதான் இருக்கின்றன.
கேரவன்  ஏட்டின் இந்துத்துவா பயங்கர வாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான ஆசீமானாந்த் குறித்த சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையானது இந்துத்துவா பயங்கரவாத வலைப் பின்னலை தோலுரித்துக் காட்டுகிறது. 2007 பிப்ரவரியில் நடைபெற்ற சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது, 2007 மே மெக்கா  மசூதி வெடிகுண்டுத் தாக்குதல்கள், 2007 அக்டோபர் ஆஜ்மீர் தர்காவில் நடை
பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஆசீமானாந்த் தற்போது காவல் துறையினரின் சிறைக்காவலில் இருக்கிறார். 2006 செப்டம்பர் மற்றும் 2008ல் மாலே கானில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இவரின் பங்கு உண்டு என்று பெயரிருந்தபோதிலும், இன்னமும் இவர்மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நபர் கூறுகிறார்: தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்மட்ட அள வில் அனுமதி பெறப்பட்டது. அதாவது தற்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் வரை தெரியும் என்று கூறியிருக்கிறார்.  மோகன் பகவத், ஆசீமானந்திடம், “இது நிறைவேற்றப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நீங்கள் இதனை சங் அமைப்புடன் இணைத் திடக்கூடாது,’’ என்று சொன்னதாகக் கூறப்பட்டிருக்கிறது.  மேலும் ஆசிமானந்த் அளித்
துள்ள ஒப்புதல்வாக்குமூலமானது, “ஆசீமானந்த் மேற்படி குற்றங்களைச் செய்
கையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன்தான் நாட்டின் பல பகுதி களிலும் நடைபெற்ற சதித்திட்டங்கள் அனைத்திற்கும், அந்த இடங்களில் அணி திரண்டவர்களுக்கும் மற்றும் வெடி குண்டுகளை விதைத்தவர்களுக்கும் இடையே இணைப்புச் சங்கிலியாக இருந் திருக்கிறான். இவன் 2007 டிசம்பரில் மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.’’ என்கிற அளவிற்கு மிகவும் விபரமாக உள்ளன.

இந்துக்களுக்கு ஆயுதத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பது என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருவதற்கு நீண்ட வரலாறு உண்டு. வி.டி. சாவர்கர்தான், “அனைத்து அரசியலையும் இந்துமதமாக்கு. இந்துக்கள் அனைவரையும் ராணுவமய மாக்கு’’ என்ற கோஷத்தை முதலில் முன் மொழிந்தவர்.  இவற்றால் உத்வேகமடைந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரை வழிகாட்டியாகக் கொண்ட டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி, முசோலினி யைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். இந்தியா திரும்பியபின், டாக்டர் மூஞ்சே 1935ல் நாசிக்கில் மத்திய மிலிட்டரி கல்வி சொசைட்டியை நிறுவினார். இதுதான் 1937ல் நிறுவப்பட்டதும், இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தற்போது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.

1939ல் கோல்வால்கர் நாஜி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப் பினையாகும்,’’ என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் மிகவும் காலம் கடந்து 1970இல்தான் அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத வர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  அவர்களை வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,’’ என்று கூறுகிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே, தன்னுடைய ஆட்கள் பயங்கரவாத நடவடிக்
கைகளில் சிக்கிக்கொண்டால், அவர் களுடைய பயங்கரவாத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தங்களுக்கு அதனுடன் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறது. உதாரணமாக,  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை ஆர்எஸ்எஸ் இயக்கம் அவர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரல்ல என்று எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் இக்கூற்றை நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே இன்றளவும் மறுத்து வருகிறார். இதுதொடர்பாக கோபால் கோட்சே ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாதுராம், தத்தாத்ரேயா, நான் மற்றும் கோவிந்த் அனைவருமே ஆர்எஸ்எஸ்-தான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் எங்கள் வீட் டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-ல் வளர்ந்ததுதான் அதிகம். எங்களுக்கு அதுதான் குடும்பம் போன்று இருந்தது. நாதுராம் ஒரு அறிவுஜீவியாக செயல்பட்டான். அவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து விலகிவிட்டதாகக் குறிப்பிட் டிருக்கிறான். இதற்குக் காரணம், கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்-உம் காந்தி கொலைக்குப்பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். ஆனால், அவன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைவிட்டுச் சென்றிடவில்லை. (ப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994).
இந்தப் பின்னணியில்  வல்லபாய் பட்டேலை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவரால் தூக்கி நிறுத்தப்படு வது தொடர்பாக வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப்பார்ப்பது அவசியமாகும். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தது இதே பட்டேல்தான். பட்டேல் அவர்களால் தயார் செய்யப்பட்ட 1948 பிப்ரவரி 4 தேதியிட்ட அரசு செய்தியானது, “சங் பரிவாரத்தின் ஆட் சேபனைக்குரிய மற்றும் தீங்குபயத்திடும் நட வடிக்கைகள்  எவ்விதத் தடைகளும் இன்றித் தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி யிருக்கிறது. இதில் கடைசியாகப் பலியான விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியாகும்.’’ என்று கூறுகிறது.
மேலும், ஆர்எஸ்எஸ்/பாஜக தற்போது, 2002ஆம் ஆண்டில் கோத்ரா மதவெறிப் படுகொலைகள் சம்பவத்தின்போது குஜராத் மாநில அரசின் முதல்வராக இருந்து மோடி ஆற்றிய பங்களிப்புகளிலிருந்து அவரை விடுவித்து, நீதித்துறை மூலமாகவும்  அவரை “சுத்தவாளி’’  (clean chit) என்று முத்திரை குத்த முயன்று கொண்டிருக்கிறது.  2012 பிப்ரவரியில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இது தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணையை முடித்து தாக்கல் செய்த அறிக்கையை இதற்கு சாட்சியமாக அது முன்வைக்கிறது.  இது உண்மைக்கு நேர் மாறான ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழு வானது, 2006 ஜூன் மாதத்தில் அகமதாபாத், குல்பர்கா சொசைட்டி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டு அடிப்படையில் ஏராளமான சாட்சியங்கள் இருக்கும் அதே சமயத்தில், ஆயினும் மோடிக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்வதற்கு அவை போதுமானதல்ல என்றுதான் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. மேலும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர், குஜராத் முதல்வர் இந்திய தண்டனைச் சட்டம் 153(அ) (வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்), 153(ஆ)(தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தக மாக பழிசுமத்துதல்) மற்றும் 166 (சட்டத்தின் உத்தரவினை பொது ஊழியர் மீறுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரணைக்கு உட் படுத்தப்பட வேண்டியவர் என்று தெளிவாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். 2002 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக இறுதித் தீர்ப்பை பொறுத்தவரை, இன்னமும் ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.எனவே எப்படிப்பார்த்தாலும் இவர் “சுத்த வாளி’’யாக முடியாது.

2002இல் நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், மோடியின் தலைமையில் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என்கிறார்கள். மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசுக்கும் நம் மக்களுக்கும் 2002 குஜராத் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை நீதி மறுக்கப்பட்டு வருவது தொடர்கிறது. அப்போது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறிடவில்லை. இவ்வழக்குகள் அனைத்திலும் நீதி வழங்கப் படும்போது மட்டும்தான், நம் குடியரசு களங்கமில்லாததாகவும் வலுவானதாகவும்  இருக்கும். இவ்வழக்குகளில் நீதி வழங்குவது மேலும் தாமதிக்கப்படுமானால் அது நீதி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.

2014ல் நாட்டிற்குத் தேவை என்னவெனில், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாற்றாக, நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கக்கூடியதும், அதன் மூலம் நம் குடியரசை வலுப்படுத்திடவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக் கூடிய விதத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிடவும் கூடிய ஒரு வலுவான அரசியல் மாற்றை அளிப்பதுதான்.  

- தமிழில்: ச.வீரமணி


No comments: