Sunday, January 19, 2014

நாடாளுமன்ற ஜனநாயகத்தை அரிக்கும் ஆராதனை

காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, இவர்கள் 2014 பொதுத் தேர்தலுக்காக புதியதொரு அரசியல் ராகத்தை முழுமைப்படுத்திட காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் காங்கிரஸ் கட்சி அவ்வாறுதான் தீர்மானிக்க இருக்கிறதா, அல்லது வேறு மாதிரி சிந்தித்துக் கொண்டிருக்கிறதா என்பது அவர்கள் உள்கட்சி விவகாரமாகும். காங்கிரஸ் கட்சியின் முடிவு எப்படி இருந்த போதிலும், அருவருக்கத்தக்க நமோ - ராகா ஆராதனைகள் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளங்களையே ஆழமான முறையில் அரித்திடும் ஒன்றாகும்.

தற்போதைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையே குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தை வழங்கக் கூடிய வகையிலான ஜனநாயகமாக மாற்றக்கூடிய ஆபத்து இதில் அடங்கி இருக்கிறது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் மையநிலையைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ``இந்திய மக்களாகிய, நாம்’’ என்பதன் பொருள் என்ன? நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மூலமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் பிரதிநிதிகளை முறையாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம்நாட்டின் இறையாண்மை உத்தரவாதப் படுத்தப்படுகிறது என்பதே. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். ஒரு கட்சி அல்லது பல கட்சி களின் கூட்டணி, எது நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் பெரும்பான்மை கொண்டி ருக்கிறதோ அது தன்னுடைய தலைவரை ஆட்சி அமைப்பதற்காகத் தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது.
இவ் வாறு நாட்டில் தற்போதுள்ள நடைமுறைத் திட்டத்தில், தனிநபர் ஒருவரை ``பிரதமர் வேட்பாளராக’’ முன்னிறுத்துவது செயல் படாமல்கூட போகக்கூடும். ஏனெனில் அவ்வாறு முன்னிறுத்தப்படும் நபர் தான் போட்டியிடும் தொகுதியில் தோற்கடிக்கப்படலாம். 1977ல் மிகவும் பலமாக இருந்த இந்திராகாந்தியே தேர்தலில் தோல்வியுற்றதை நினைவுகூர்க. இந்தக் காரணத்தினால்தான், இடதுசாரிக் கட்சித் தலைவர்களைத் தவிர,அநேகமாக மற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஒரு தொகுதிக்கும் மேலேபோட்டியிடும் வழக்கம் இருந்து வரு கிறது. நம்முடைய தற்போதைய பிரதமர்கடந்த பத்தாண்டுகளாக மக்களவைக் கான தேர்தலில் போட்டி யிடவே இல்லை.அதுபோன்று நரசிம்மராவும் பிரதமரான பின்னர்தான் தேர்ந் தெடுக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகளும் உண்டு.இதனால்தான் நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மிகவும் புத்தி சாலித்தனமாகவும், சரியான முறையிலும், நம் நாட்டின் பண்பாடு, மொழி, இனம், மதம் ஆகிய அனைத்திலும் பல்வேறு வேற்றுமைகள் காணப்பட்ட போதிலும் அவர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கக் கூடிய விதத்தில், நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இவ்வாறு நாட்டிலுள்ள அனைத்துப் பிரிவினரும் சரியான விகிதத்தில் நாட்டின் அமைப்புகளில் பங்குபெறுவதன் மூலம் மட்டுமேதான் நாட்டின் சிக்கல் நிறைந்த சமூக எதார்த்த நிலையில் ஜனநாயகத்தை மிகவும் வீரியம் மிக்கதாக முன்னிறுத்த முடியும்.
மேலும், நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவே, ``பாரதம் எனப்படுகின்ற இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’’ என்று தெளிவாகக் கூறுகிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகவும் அடிப்படையாக அமைந்திருக்கின்ற இத்தகைய கூட்டாட்சித் தத்துவமானது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையின் மூலமாக மட்டுமே பாதுகாத்து, வலுப்படுத்திட முடியும். அமெரிக்காவிலோ அல்லது பிரான்சிலோ இருக்கக்கூடிய ஜனாதிபதி ஆட்சி முறையானது ஒரே இனம் மற்றும் ஒரே மொழி பேசக்கூடிய நாட்டிற்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம். இங்கிலாந்தில்கூட, நம் நாடாளு மன்ற ஜனநாயக அமைப்புமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஏனெனில் அங்கே பிரிட்டிஷ், வெல்ஷ், ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் இனத்தவர் அதன் அங்கமாக இருந்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் நீண்ட காலமாகவே தற்போதைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றன.

பாஜக தன்னுடைய 1991ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ``தற்போதைய நாடாளுமன்ற அமைப்பு முறைக்குப் பதிலாக ஜனாதிபதி அமைப்பு முறை நம் நாட்டிற்கு உகந்ததாக இருக்குமா என்பது குறித்து ஆராய ஓர் ஆணையம்’’ அமைக்கப்படும் என்று கூறியிருந்தது.ஜனாதிபதி அமைப்பு முறை என்பது ஒரு தலைவரின் கீழ் அனைத்து அதிகாரங் களையும் குவிப்பது என்பதாகும். நாடாளுமன் றத்திற்கு நேரடியாகப் பதில் சொல்ல கட்டாயம் இல்லாத நபர்களை கட்டாயம் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதி நியமிப்பார்.இத்தகைய அமைப்பு முறையை நியாயப் படுத்துவதன் மூலம் பாஜக-வானது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்ற முறையில் , இந்தியக் குடியரசின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையை தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்றிட வழியேற்படுத்தித்தர முன்வந்திருக்கிறது. கடந்த காலத்தில் பல்வேறு கட்சிகளின் கூட்டணியில் பாஜக இருந்ததன் காரணமாக, தன்னுடைய வெறித்தனமான மதவெறி நிகழ்ச்சிநிரலை தாங்கள் விரும்பிய அளவிற்கு அதனால் நிறைவேற்ற முடியவில்லை.

மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், நம் குடியரசின் பொன்விழா நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் உரையாற்றுகையில், ``நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்கள் மிகவும் ஆழ்ந்த சிந்தனை மற்றும் விவாதத்திற்குப் பின்னர்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை, அரசாங்கத்தின் வடிவமாக, அமைத்துத் தந்திருக்கிறார்கள். அரசியல் நிர்ணயசபையில் டாக்டர் அம்பேத்கர், ``நாடாளுமன்ற அமைப்பு முறையின் மூலம் அமைந்திடும் அரசாங்கம் ஒவ்வொரு நாளும் பட்டை தீட்டப்பட்டுக்கொண்டே இருக்குமாதலால் இத்தகைய அமைப்புமுறைதான் மிகவும் பொறுப்புடன் கூடியது மற்றும் மிகவும் வலுவானது என்று கருதி வரைவுக் குழு இதனையே தேர்வு செய்கிறது’’ என்று விளக் கினார். அரசாங்கம் ஒவ்வொரு நாளும் மக்களுக்குப் பதில் சொல்வது என்பது மிகவும் கடினம். எனவேதான், அரசியல் நிர்ணயசபை மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து, நாடாளுமன்ற அமைப்பு முறையையே சிறந்தது என்று தேர்வு செய்கிறது. இது ஒன்றும் பிரிட்டிஷ் முறையை அப்படியே நகலெடுத்த ஒன்று அல்ல. அல்லது காலனியாதிக்கக் காலத்தில் இந்தியா இம்முறைக்குப் பழக்கப் பட்டுவிட்டது என்பதனாலும் இவ்வாறான முடிவுக்கு அரசியல் நிர்ணயசபை வரவில்லை.``நாடாளுமன்ற அரசாங்கம் சம்பந்தமாக பிரிட்டனுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், இதன் மூலவேர்கள் நம் நாட்டில் நீண்ட காலமாகவே இருந்துவரும் கிராமப் பஞ்சாயத்துக்களின் அமைப்பு முறையில் இருந்து வருகின்றன என்று காந்திஜி கண்டுணர்ந்திருக்கிறார்.

அரசியல் நிர்ணயசபையில் அம்பேத்கர், புத்திஸ்ட்டுகளின் சங்கங்களும் நாடாளு மன்ற அமைப்புமுறையில் அமைந்துள்ள நிறு வனங்கள் என்று கூறியதுடன் அவற்றின் செயல்பாடுகளில் நவீன ஜனநாயகக் கருவி களான தீர்மானங்கள், பிரிவுகள், கொறடா அமைப்புமுறை போன்ற அனைத்தும் இருப்பதையும் விளக்கினார். இவ்வாறு பாரம்பரிய மாகவே நாம் பெற்றிருக்கக்கூடிய இத்தகைய அடிப்படைக்கூறுகள்தான் நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை எளிதாக அமல்படுத்துவதை சாத்தியமாக் கியது. இதல்லாமல், டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணயசபையில் நாட்டில் எதேச்சதிகாரம் தலைதூக்காது இருக்க வேண்டு மெனில் இத்தகைய நாடாளுமன்ற அமைப்பு முறையே உகந்தது என்று வரைவுக்குழு இதனைத் தேர்வு செய்கிறது’’ என்றும் கூறி னார்.நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் கூட அவசரநிலைப் பிரகடனம் அமல் படுத்தப்பட்ட காலத்தில் எதேச்சதிகார ஆட்சியின் அனுபவத்தையும் நாம் எதிர் கொண்டிருந்திருக்கிறோம்.

இத்தகைய ஆபத்துகள் ஜனாதிபதி அமைப்புமுறையில் ஏராளமாகும். மிகவும் ஆழமான முறையில் விவாதித்து,நடைமுறையிலும் சரியான ஒரு அமைப்புஎன்று நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்தஅமைப்பு முறையை தேர்தல் ஆதாயம்பெற வேண்டும் என்கிற அரிப்பின் காரண மாக தூக்கி எறிந்திட அனுமதித்திடக் கூடாது. மறைந்த குடியரசுத் தலைவர் எச் சரித்திருப்பதைப்போல, “அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ள நம் அடிப்படைத் தத்துவம் மற்றும் அர சியலமைப்புச் சட்டத்தின் சமூக - பொருளாதார ஆன்மா என்றென்றும் தீயவர் களிடமிருந்து பாதுகாக்கப்படுவதை நாம் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.’’ தற்போதைய துன்ப துயரங்களிலிருந்து விடுபட ஆட்சியாளர்கள் தங்கள் கொள்கை களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றுமக்கள் மத்தியிலிருந்து வந்த நிர்ப்பந்தத் தின் காரணமாக கூட்டணி கட்சிகள் எல்லாம் இவர்களிடமிருந்து கழன்று சென்று விட்ட திலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, காங்கிரசும் பாஜகவும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையையே அழித்துவீழ்த்திடவேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கின்றன.

பாஜகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளில் சிவசேனை, அகாலிதளம் (பாதல்) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இப்போதும் பாஜகவுடன் இருக்கின்றன. அதேபோன்று 2009ல் காங் கிரஸ் கட்சி ஐமுகூ-2 அரசாங்கத்தை அமைத்திட உதவிய கட்சிகளில் தேசியவாத காங் கிரஸ் கட்சியும் (என்சிபி), ஜம்மு-காஷ்மீர் தேசியமாநாடும் மட்டுமே காங்கிரசுடன் இருக் கின்றன. தங்கள் வாழ்க்கையில் சொல்லொண்ணா அளவிற்குத் துன்ப துயரங்கள் ஏற்பட்டிருப்ப தற்கு காங்கிரசும், பாஜகவுமே காரணம் என்பதை நாட்டின் பெரும்பான்மை மக்கள்உணரத் தொடங்கிவிட்டனர். பொருளாதாரக் கொள்கைகள் அல்லது ஊழல் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது என்பதை அவர்கள்தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டுள் ளார்கள். ஊழல் கறைபடிந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளதும், ஊழல் புரிந்தமைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பேர்வழி ஒருவர், இப்போதும் குஜராத் அமைச்சரவையில் தொடர்வதும், ஊழல் தொடர்பாக பாஜகவின் லட்சணத்தை நன்றாகவே தோலுரித்துக்காட்டிவிட்டது.

இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்பட்ட அனுபவமும் உறுதிப்படுத்தியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி அல்லது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலாக இருந் தாலும் சரி, இவற்றின் மீது ஆழமான முறையில் விவாதம் நடைபெறாது நாடாளு மன்ற நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட் டதைப் பார்த்தோம். விவாதங்கள் நடைபெற்றிருக்குமானால் வாஜ்பாயி தலைமை யில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களும் வெளி வந்திருக்கும். நவீனதாராளமயக் கொள்கைகளை அமல் படுத்துவதிலும், கோடிக்கணக்கான ஊழியர்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய விதத்தில் ஓய்வூதிய நிதியத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வங்கிகள் தேசியமயம் என்னும் கொள்கையைக் கைவிட்டு, அவற்றைத் தனியாரிடமும் அந்நிய நிதி நிறுவனங்களிடமும் தாரை வார்த்து அதன்மூலம் சர்வதேச நிதி ஊகவர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாக்கப் படும் நடவடிக்கையாக இருந்தாலும் சரி, காங்கிரசும் பாஜகவும் ஒரே பக்கத்தில்தான் இருந்தன.

நாட்டின் நிலைமை இவ்வாறிருக்கையில், எங்கேனும் தேர்தலில் மாற்றுக்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், அது மக்களின் ஆதர வினைப் பெறும் என்பதை, சமீபத்திய சட்ட மன்றத் தேர்தல்களின்போது பார்த்தோம். இத்தகைய ஆதரவு நாட்டிலுள்ள மத்திய தர வர்க்கத்திடம் வெகுவாகவே காணப்படுகிறது. ஓர் ``லட்சிய’’ ஜனநாயக மதச்சார்பற்ற மற்றும் ஊழலற்ற அரசு உருவாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பம் அவர்கள் மத்தியில் நிலவுவதை அறிந்து அதற்கேற்ற முறையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்குவோம், தற்போதைய மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்திடுவோம் என்று உறுதிமொழிகளை அள்ளித்தெளித்த ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தில்லியில் ஆட்சி யை அமைக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. ஆயினும், ஊழல் மற்றும் பொருளாதாரச் சுமைகள் போன்ற ``நோய்கள்’’ ஆட்சி யாளர்கள் பின்பற்றக்கூடிய கொள்கைகளின் விளைவாக விளைந்தவை என்பதால் ஊழலற்ற முறையில் ``லட்சிய’’ அரசை அமைப் பது அவ்வளவு எளிதல்ல. அது காங்கிரஸ் கூட்டணியாக இருந்தாலும் சரி அல்லது பாஜக கூட்டணியாக இருந்தாலும் சரி.
அத்தகைய ``லட்சிய’’ அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் மாற்றுக் கொள்கைகளுடன் மட்டுமே அது சாத்தியம். எவ் விதமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றப்போகிறோம், வகுப்புவாத சக்திகளுடன் எவ்விதமான உறவினை வைத்துக்கொள்ளப்போகிறோம், (ஏஏபியின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையினர் பாஜக பிரதமர் வேட்பாளரையே விரும்புவதாக ஒரு கருத்துக்கணிப்பு காட்டியிருக் கிறது), அயல்துறைக் கொள்கை என்ன, அண்டை நாடுகளுடன் நம் உறவுகள் எப்படி இருக்கும் என்கிற முக்கியமான அம்சங்களில் ஏஏபி மவுனம் சாதிக்கிறது. இவை குறித்தெல்லாம் எதுவுமே கூறாது மவுனம் சாதிப்பது என்பது சலுகைசார் முதலாளித்துவ ஊழலின் தற்போதைய போக்கிற்கே ஊக்க மளித்திடும். முதலாளித்துவத்தின் கொள்ளை லாப வேட்டைக்கு சாமானிய மக்களை பலிகடா ஆக்குவதற்கே வழிவகுத்திடும்.மாற்றுப் பொருளாதாரக் கொள்கை என்பது அனைவருக்கும் உரிமைகளை உத்தர வாதப்படுத்திட வேண்டும்.

அவை கருணை அடிப்படையில் எதையும் பெறுவது அல்ல. உணவுப் பாதுகாப்பு, அனைவருக்கும் இலவச சுகாதாரப் பாதுகாப்பு, அனைவருக்கும் இல வசக் கல்வி, வேலை உரிமை அல்லது வேலைகிடைக்கும்வரை போதுமான அளவிற்கு வேலையில்லா நிவாரணம், மூத்த குடிமக்கள் அனைவருக்குமான திட்டங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் ஆகியவை மாற்றுக் கொள்கையின் அடிப் படைகளாக அமைந்திட வேண்டும். இத்த கைய மாற்றுக்கொள்கைகள் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, ஒரு வலுவான பொருளாதார முன்னேற்றத்திற்கான கொள்கையின் அடிப்படையிலும் விரும்பத் தக்கதாகும். இவ்வாறாக மக்களை மேம் படுத்துவதன் மூலம் அவர்களது வாங்கும் சக்தி கணிசமான அளவிற்கு அதிகரித்து அதன் மூலம் மிகவும் உள்நாட்டுத் தேவைகளும் அதிக அளவில் தோற்றுவிக்கப்படும். இவை நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக அமைந்து வேலைவாய்ப்பும் பெருகுவதற்கு இட்டுச் செல்லும். இவ்வாறு ஒரு சங்கிலித் தொடர்போன்று நாட்டில் நிலையான மற்றும் நேர்மையான வளர்ச்சி இயக்கம் அமைந்திடும்.

இவ்வாறு நம் தேவை என்பது வெறும் தேர்தல் மாற்று அல்ல, மாறாக கொள்கை மாற்றே நமக்குத் தேவையாகும். 2014ல் இடது-ஜனநாயக-மதச்சார்பற்ற மாற்றின் அடிப்படையில் அத்தகையதொரு கொள் கையை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்தில் மக்களின் போராட்டங்களை வலுப் படுத்துவதன் மூலமே இதனை அடைந்திட முடியும். 

- தமிழில்: ச.வீரமணி


No comments: