Friday, January 3, 2014

‘ஆம் ஆத்மி’யின் எதிர் காலம்! :பிரகாஷ் காரத்




பிரகாஷ் காரத்
ஓராண்டுக்கு முன்பு தில்லியில் அமைக் கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. நாட்டின் தலைநகரில் ஒரு புதிய கட்சி வேகமாக எழுந்திருப்பது நாட்டில் உள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற வட்டாரங்களால் பொதுவாக வரவேற்கப்பட்டிருப்பதுடன் அதிக அளவு விவாதத்திற்குரிய ஒன்றாகவும் மாறி இருக்கிறது.
ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி
இது ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கேயாகும். ஆயினும், ஓர் அரசியல் கட்சி அமைக்கப்பட்ட வுடன் மிக வேகமாக மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது இது முதல் தடவை அல்ல. ஆந்திராவில் என். டி. ராமராவ் அமைத்த தெலுங்கு தேசம் கட்சி 1982ல் சட்டமன்றத் தேர்தல்களின்போது வியக்கத்தக்க விதத்தில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதேபோன்று எண்பதுகளில் அனைத்து அசாம் மாணவர் சங்கம் எனப்படும் ஏஏஎஸ்யு (AASU)இயக்கத்தின் அடிப்படையில் அசாம் கண பரிசத் கட்சியும் அசாம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.
இக்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக்கொள்வதில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும்கூட இவை இன்னமும் மாநிலக் கட்சிகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவ்விதத்தில் ஏஏபி கட்சியின் வளர்ச்சி கவனிக்கத்தக்க ஒன்றாகும். அதனால் மத்தியத்தர வர்க்கத்தினரிடம் ஒரு வலைப்பின்னலை உருவாக்கி, மத்தியத்தர வர்க்கத்தினரின் ஆதரவைத் திரட்ட அக்கட்சிக்கு முடிந்திருக்கிறது. பின்னர் தன் செல்வாக்கை மாநகரின் அடித்தட்டு மக்களிடமும் விரிவாக்கிக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் செல் வாக்கில் இருந்து வந்த தில்லியில் இதனை ஏ.ஏ.பி. கட்சியால் செய்ய முடிந்திருக் கிறது.
2011ல் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து ஏஏபி உருவானது. அந்த சமயத்தில், ஜன லோக்பால் சட்டமுன் வடிவுக்காக அண்ணா ஹசாரே இயக்கம் நடத்திய சமயத்தில் அது மத்தியத்தர வர்க்கத்திடமிருந்து, அதிலும் குறிப்பாக தில்லி இளைஞர்களிடமிருந்து, விரிவான அளவில் ஆதரவைப் பெற்றது. ஊழல் எதிர்ப்பு ஒன்றை மட்டும் முழுமையாக முதன்மைப்படுத்திய இவ்வியக்கம், ஒருசில மாதங்களுக்குப் பின்னர் நீடித்திருக்க முடிய வில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிலரும் ஓர் அரசியல் கட்சியை அமைக்க வேண்டும் என்ற தீர்மானமும், அதீதமாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணம் மற்றும் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தியதும் இப்புதிய கட்சி மக்களிடம் செல்வாக்கை அதிகரித்திடவும், புதிய ஊழியர்களைக் கவரவும் உதவியது.
இவ்வாறு காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு எதிராக ஏஏபி வெற்றி பெற்றிருப்பதானது ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்போக்கேயாகும். சாதாரணமாக அரசியலில் அக்கறையற்று இருக்கக்கூடிய மத்தியத்தர வர்க்கத்தினரை ஈடுபடுத்தி இயங்க வைத்திருப்பதும், இளைஞர்கள் மத்தியில் நல்லவிதமான சிந்தனைகளுடன் அரசியல் ஈடுபாட்டை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும். தில்லி அரசாங்கத்திற்கு ஒரு மாநில அரசாங்கத்திற்குரிய அளவில் முழு அளவில் அதிகாரங்கள் இல்லை என்றபோதிலும் ஏஏபி அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அதே சமயத்தில், காங்கிரசும் பாஜகவும் தங்களுடைய வழக்கமான அரசியல் கட்டமைப்புக்கு வெளியிலிருந்து வரும் ஓர் அரசியல் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.
ஏஏபியின் தேர்தல் அறிக்கை மக்களின் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறது. மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 700 லிட் டர் வரைக்கும் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படும், கிராம சபைகள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்படும், ஒப்பந்த ஊழியர்கள் முறைப்படுத்தப்படுவார்கள் போன்று உறுதிமொழிகள் தரப்பட்டிருக்கின்றன.
கொள்கைகள் குறித்து மவுனம்
ஊழல் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து ஏஏபி முன்மொழிவுகள் அளித்துள்ள அதே சமயத்தில், இப்பிரச்சனைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், எவ்விதமான பொருளாதாரக் கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றப் போகிறது என்பது குறித்தும் எதுவும் கூறாது இதுவரை மவுனம் சாதித்து வருகிறது. உதாரணமாக, தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்து வருவதற்குக் காரணமே மாநகரில் மின் விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைத்ததுதான். அதேபோன்று நவீனதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடுதான் உயர்மட்ட அளவில் ஊழல் நிறுவனமயப் படுத்தப்பட்டிருப்பதற்கும் காரணமாகும். அதேபோன்றதுதான் ஒப்பந்த ஊழியர்கள் நியமனமும்.
ஆனால், ஏஏபி இதுவரை தான் பின்பற்றப்போகும் கொள்கைகள் குறித்து எதுவுமே கூறவில்லை. நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக எதையாவது அவர்கள் வைத் திருக்கிறார்களா? இவை தொடர்பாக வெளிப் படையாக எதுவும் கூறாமல் மறைப்பதற்கான முயற்சிகளே இருப்பதுபோல் தோன்று கிறது. இதற்கு, அக்கட்சியைச் சுற்றிஅணிசேர்ந்திருப்பவர்களின் சமூக அடித் தளத்தில் காணப்படும் முரண்பாடுகளே காரணமாக இருக்கலாம். ஓர் ஏஏபி தலைவர், ’’இடதுசாரிக் கொள்கை-வலதுசாரிக் கொள்கை என்பது போன்ற பேச்சுக்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கு எப்போதுமே பொருந்தாது’’ என்கிற பாணியில் கருத்துகூறும் அளவிற்குச் சென்றிருக்கிறார். மேலும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து சிறந்த மாடல் உருவாகி வருவதாகவும் அவர் பேசியிருக்கிறார். ஆனால், லத்தீன் அமெரிக்க மாடல் என்பது தெள்ளத் தெளிவாக நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று என்பதை அவர் நினைவுகூர்ந்திட வேண்டும்.
ஏஏபி-யானது பாஜகவின் முன்னேற்றத் தை வலுவான முறையில் தடுத்து நிறுத்தியிருப்பதோடு, ஊழல் புரிவதிலும் கொள்கைகளிலும் காங்கிரசிலிருந்து இக்கட்சி வேறுபட்டதல்ல என்பதையும் நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.
மத்தியத்தர வர்க்கத்திடமும் இளைஞர்களிடமும் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள், தில்லியில் ஏஏபி மேற்கொண்ட பிரச்சாரத்தின் மூலம் நன்கு மழுங்கடிக்கப்பட்டது. ஆயினும், வகுப்புவாதம் குறித்த தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், வகுப்புவாத இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் மீதான தாக்குதல் குறித்தும் ஏஏபி இதுவரை மவுனம் சாதித்தே வருகிறது. வகுப்புவாதத்திற்கு எதிராக தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று ஏஏபி நம்புகிறதா? இப்போது ஏஏபி தேசிய அளவிலான ஒரு கட்சியாக மாறவும், மற்ற மாநிலங்களிலும் தேர்தல்களில் போட்டி போடவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படியானால் அதுதன்னுடைய அடிப்படையான திட்டங்களையும் கொள்கைகளையும் வெளிப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். அப்போதுதான் அக்கட்சி எப்படிப்பட்டது என்பதையும் அது எந்த திசை வழியில் செல்லும் என்பதையும் மக்களால் தீர்மானிக்க முடியும். ஏஏபி இதுவரையிலும் இடதுசாரிக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஒரேமாதிரி குறை சொல்லியே தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறது.
செயல்பாட்டில் கம்யூனிஸ்ட்டுகளின் பாணி
ஏஏபி தன்னுடைய நற்பண்புகளாக, கறைபடியாத, லஞ்சத்திற்கு இடமளிக்காத, எவ்விதமான சுகபோக வாழ்க்கை வசதிகளுக்கும், அதிகாரம் அளித்திடும் சலுகை களுக்கும் இடமளிக்காதவர்களாக இருப்போம் என்றும் மக்களின் நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டே கட்சியைநடத்துவோம் என்றும் கூறிக் கொண்டி ருக்கிறது. இவை அனைத்துமே ஒட்டு மொத்தத்தில் கம்யூனிஸ்ட்டுகள் கடைப் பிடிக்கும் பாணியும் நடைமுறையுமாகும். உதாரணமாக கட்சிக்கு நிதி எப்படி வருகிறது என்று பார்ப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே சிறிய அளவில் வெகுஜனப் பங்களிப்புகளின் மூலமும், கட்சி உறுப்பினர்கள் அளித்திடும் லெவி தொகை கள் (அதாவது கட்சி உறுப்பினர்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளிக்கப்படுவதன்) மூலமும்தான் கட்சிக்கு பிரதானமாக நிதி வருகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் வாளி மூலம் மக்களிடம் நிதி சேர்ப்பதைப் பார்த்திருக்கும் எவரொருவரும் இதனை நன்கு தெரிந்து கொண்டிருப்பார்கள். சமீபத்தில், செப்டம்பரில் கேரளா முழுவதும் இரு நாட்கள் நடைபெற்ற இத்தகைய வாளி வசூலில் கட்சி நிதியாக 5 கோடியே 43 லட்ச ரூபாய் வசூலாகியது. அரவிந்த் கெஜ்ரிவாலும் மற்றும் அவர்தம் அமைச்சரவையில் உள்ள இதர அமைச்சர்களும் தங்களுக்கு அதிகாரப் பூர்வமாக அளிக்கப்பட்ட ஆடம்பரமான வசிப்பிடங்களை நிராகரித்திருப்பதையும், அளவான வீடுகளிலிருந்தே பணியைத் தொடருவோம் என்று அறிவித்திருப்பதையும் தில்லி மக்கள் பாராட்டி இருக்கிறார்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் அமைத்துத்தந்துள்ள பாரம்பர்யம் இது. இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு மற்றும் நிருபன் சக்ரவர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் முதலமைச்சர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆரம்பத்தில் அமைச்சராக இருந்தபோதும், பின்னர் முதலமைச்சராக மாறிய பின்னரும்கூட இரு படுக்கையறை கொண்ட அடுக்கு மாடி வீடு ஒன்றில்தான் வசித்தார். கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் அப்பழுக்கற்ற தலைவர் என்ற சித்திரத்தைப் பெற்றிருக்கிறார். தற்போதைய திரிபுரா முதல்வரான மாணிக் சர்க்கார் தன்னுடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் நாட்டிலேயே ’’மிகவும் ஏழை முதலமைச்சர்என்று அறியப்பட்டிருக்கிறார்.
ஏஏபி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறது?
எளிமையைப் பின்பற்றுவதன் மூலமும் பொது வாழ்வில் புதிய நெறிமுறைகளை அறிவித்திருப்பதன் மூலமும் ஏஏபி அரசாங்கம் புதிய முன்மாதிரியை அமைத்திருப்பது நன்று. ஆயினும் இத்தகைய நற்பண்புகளையும் நெறிமுறைகளையும்தான் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களும் எப்போதும் பின்பற்றி வந்துள்ளன, வருகின்றன என்பதை அது மறந்துவிடக் கூடாது. அரசாங்கங்கள் மட்டுமல்ல, மக்கள் மிகவும் எளிதாக இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க முடியும் என்பதும், அவர்களும் மிக எளிய முறையிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
அரசியலற்றவர்களும், இன்னும் சொல்லப்போனால் அரசியலுக்கு எதிரான கருத்து கொண்டவர்களும்தான் ஏஏபி-யின் துவக்கப் புள்ளிகள் ஆவர்; நடுத்தர வர்க்க - அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்த வந்த இந்த நபர்கள், ஆளும்வர்க்க அரசியலில் இருந்து விலகிச் செல்வதையோ, உழைக்கும் மக்களுக்காக உறுதியுடன் நிற்கிற கம்யூனிஸ்ட்டுகளைப் போல செயல்பட முனைவதையோ தடுத்து நிறுத்தவே முயற்சிப்பார்கள். இடதுசாரிகளின் நிகழ்ச்சி நிரல் மிகவும் தெள்ளத் தெளிவானது. அது தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவான கொள்கைகளையும், சமூக நீதி மற்றும்அதிகாரம் ஜனநாயகப்படுத்தப்பட்டு பரவ லாக்கப்பட வேண்டும் என்பதையும் அதுகொண்டிருக்கிறது.
இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் 1957ல் கேரளத்தில் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையிலிருந்து, மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடை பெற்ற அனைத்து இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களும் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தியதிலும், உழைக்கும் மக்களுக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்தியதிலும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையைக் கொண்டுவந்து அதிகாரங்களைப் பரவலாக்கியதிலும் மற்றும் ஊழலற்ற அமைச்சரவைகளை நடத்தியதிலும் முன்னுதாரணங்களாகத் திகழ்ந்துள்ளன.
நாட்டில் இன்றைய தினம், ஆளும் வர்க்கங்களின் இரு பிரதான கட்சிகளாக விளங்கும், காங்கிரசும் பாஜகவும், மக்களின் மீது சொல்லொண்ணாத் துன்ப துயரங்களை ஏற்றி வைத்துள்ளன. சர்வதேச நிதி மூலதனம் மற்றும் இந்திய பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களைக் காக்கும் விதத்தில் கொள்கைகளைப் பின்பற்றி சுரண்டலை உக்கிரப்படுத்தியுள்ளன. அவை பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகள்தான் உயர்மட்ட அளவிலான லஞ்சத்திற்கு ஊற்றுக்கண்ணாகும்.
துரதிர்ஷ்டவசமாக, இடதுசாரிகள் தவிர ஒரு சில கட்சிகள் மட்டுமே, காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு மாற்றாக வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. எனவே, ஏஏபியும் இப்போது தில்லி தேர்தல்களுக்குப் பின்னர் முக்கியமானதொரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. மாற்றுக் கொள்கைத் திசை வழி என்ன என்பது குறித்து இது அறிவிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறதா? நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் சாமானிய மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சியைக் கட்ட இருக்கிறதா? இவற்றின் அடிப்படையில்தான் புதிதாக உருவாகி யுள்ள ஏஏபி கட்சியின் எதிர்காலம் அமைந் திருக்கிறது.
- தமிழில்: ச.வீரமணி



No comments: