Tuesday, March 5, 2013

வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தசரஸ் நகரத்திலிருந்து மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணத்தின் வடக்குப் பயணக்குழு பிருந்தா காரத் தலைமையில் புறப்பட்டது








வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தசரஸ் நகரத்திலிருந்து
மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணத்தின்
வடக்குப் பயணக்குழு பிருந்தா காரத் தலைமையில் புறப்பட்டது
அமிர்தசரஸ், மார்ச் 5-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணத்தின் மூன்றாவது பயணக்குழுவான வடக்குப் பயணக்குழு தன் பயணத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தசரஸ் நகரத்திலிருந்து ஞாயிறு அன்று தொடங்கியது.
பஞ்சாப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஷோஹன் சிங் ஜோஷ் அவர்களின் மகனான டேவிந்தர் சிங் ஜோஷ்  வடக்குப் பயணக்குழுவின தலைவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிருந்தா காரத்திடம் பயணத்தைத் துவக்கும் அடையாளமாக பயணக்குழுவின் செங்கொடியை ஒப்படைத்தார்.  பஞ்சாப்பில் பயணக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான கட்சியின் பஞ்சாப் மாநில செயற்குழு உறுப்பினர் விஜய் மிஷ்ரா உடன் இருந்தார்.
முன்னதாக, பயணக்குழு தன் பயணத்தைத் துவக்குவதற்கு முன்னர்பிருந்தா காரத், ஜாலியன்வாலாபாக் பூங்காவிற்குச் சென்று அங்கு பயணக்குழுவினருக்கு வரவேற்பளித்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் அங்குள்ள தியாகிகளின் ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தா காரத், ‘‘மக்களின் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்திடும் காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகளிடமிருந்து முற்றிலும் வித்தியாசமான விதத்தில் சிறந்ததொரு மாற்றுக் கொள்கையை மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கிற மாற்றுக் கொள்கையைப் பரிசீலனை செய்யுங்கள் என்று மக்களை அழைப்பதே இப்பயணக்குழுவின் செய்தியாகும்’’ என்று கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய பிருந்தா காரத், ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாகவே விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று விளக்கினார். ‘‘ஐமுகூ-2 அரசாங்கம் நேற்றிரவு கூட 20ஆவது தடவையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி இருக்கிறது’’ என்று  பிருந்தா காரத் சுட்டிக்காட்டினார்.
‘‘காங்கிரசும், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே’’ என்று வர்ணித்த பிருந்தா காரத், ‘‘பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதெல்hலாம், அந்நிய மற்றும் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்குச் சேவை செய்திடும்  நவீன தாராளமயக் கொள்கைகளையே தூக்கிப் பிடிக்கும்’’ என்றார்.
நாட்டின் நான்குமுனைகளிலிருந்தும் புறப்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போர் முழக்கப் பயணக்குழு மார்ச் 19 அன்று தில்லியில் சங்கமிக்கிறது என்றும் அன்று தில்லி, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றும் பிரம்மாண்டமான பேரணி/பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு, போர் முழக்கப் பயணத்தை மாபெரும் வெற்றியாக்கிட வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
நாட்டுப்புற ஏழைத் தொழிலாளர்களும், பெண்களும்  பெரும் திரளாகக் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா, ஹர்யானா மாநில செயலாளர் இந்திரஜித் சிங், பஞ்சாப் மாநில செயலாளர் சரன் சிங் விர்தி முதலானோர் உரையற்றினார்கள்.
ஜம்மு
மார்ச் 3 அன்று ஜம்முவிலிருந்து புறப்பட்ட பயணக்குழு  அமிர்தசரசில் வடக்குப் பயணக்குழுவுடன் இணைந்து கொண்டது.  கட்சியின் ஜம்மு மண்டலக் குழு செயலாளரான ஷியாம் பிரசாத் கேசார் ஜம்மு குழுவிற்குத் தலைமை வகித்து நடத்தி வந்தார். அவரும் கூட்டத்தில் உரையாற்றினார்.
(அமிர்தசரசிலிருந்து கே. வீரய்யா)



No comments: