Sunday, March 18, 2012

ஏழைகள்பால் அக்கறை செலுத்தா அரசு



நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் துவக்குவதற்கு முன் நடைபெற்றுள்ள இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் சமீப காலத்தில் மிக நீண்டதொரு உரையை குடியரசுத் தலைவர் நிகழ்த்தி இருக்கிறார். (ராஜேந்திர பிரசாத் தவிர) குடியரசுத் தலைவர் பதவி வகித்த எவரொருவரும் திரும்பவும் அப்பதவிக்கு வருவதில்லை என்கிற உண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இப்போது குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையை இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் ஆற்றிய பிரிவுபசார உரையாகவே கொள்ளலாம்.அவரது உரை 106 பத்திகளைக் கொண்டிருந்தது. ஆயினும்கூட, அதில் தொலைநோக்குப் பார்வையோ அல்லது அவர் கடந்த சில ஆண்டுகளாக அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகவோ எதுவுமே இல்லை என்பதைக் கூற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையாக உள்ள ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்திடும் விலை வாசி உயர்வு குறித்தோ, நம் நாட்டு விவசா யிகள் தற்கொலைப் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது குறித்தோ அவர் எதுவும் கூறாது மவுனம் சாதித்திருப்பதிலிருந்து, அவர் மூலமாக இந்த அரசு ஏழை எளிய மக்களின் அவல நிலை குறித்துக் கிஞ்சிற்றும் சொர ணையற்று தடித்தனத்துடன் இருப்ப தைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையை, குடியரசுத் தலைவர், அநேகமாக அப்படியே மீண்டும் கையாண்டிருந்ததானது இதற்கு முன்னெப்போதும் இல்லாத புதியதோர் அம்சமாகும். ‘‘என்னுடைய அரசாங்கம் இன்றைய தினம் நாடு எதிர் நோக்கியுள்ள ஐந்து முக்கிய சவால்களின் மீது செயலாற்றும்,’’ என்று குடியரசுத் தலைவர் உரையாற்றி இருக்கிறார். அந்த சவால்கள் என்னென்ன? பிரதமர் புத்தாண்டு உரையில் குறிப்பிட்டிருந்த அதே ஐந்து சவால்கள்தான். அதாவது, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதா ரங்கள் மீதான பாதுகாப்பு (அதாவது மக்களின் கல்வி, உணவு, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீதான பாதுகாப்பு) என்கிற அதே ஐந்து சவால்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சவால்களை இந்த அரசு எப்படி எதிர்கொண்டு சமாளிக்க இருக்கிறது? நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்த வரை - அது உள்நாட்டுப்பாதுகாப்பாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி - அவற் றை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆயினும் குடியரசுத் தலைவர், பிரதமர் புத்தாண்டு உரையாற்றியபோது கூறிய இதர மூன்று குறிக் கோள்களான பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பாதுகாப்பு களுக்கு வலியுறுத்திய, இகழார்ந்த பொது - தனியார் - ஒத்துழைப்பு (PPP_Public – Private - Partnership) மீது அதிக அழுத்தம் தந்து எதிரொலித்திருக்கிறார். இவர்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான பாதுகாப்பு குறித்து எந்த அளவுக்கு ‘சாதனை’ படைத்திருக்கிறார்கள் என்பதை குடியரசுத் தலைவர் உரையாற்றியதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையே மிகவும் தெள்ளத்தெளி வாகக் காட்டிவிட்டது. ‘‘நம் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் இரு இந்தியர்களை, அதாவது ஒரு பக்கத்தில் ‘ஒளிரும்’ இந்தியர்களையும் மறுபக்கத்தில் ‘அவ திப்படும்’ இந்தியர்களையும், அதாவது ஒரு மிகச்சிறிய அளவிலான சிறுபான் மையினருக்கு ‘ஒளியையும்’, மற்ற பெரும்பான்மையாக உள்ள அனைவருக்கும் ‘அவதியையும்’ உருவாக்கி இருக்கி றது’’ என்று நாம் அடிக்கடி கூறி வந்ததை, இதே குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற வுடன் ஆற்றிய கன்னிப் பேச்சில் தெரிவித்ததை, மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்களுக்கு வக்காலத்து வாங்கும் தலைவர்கள், நாட்டில் 53.2 விழுக்காட்டினர் - அதாவது சுமார் 60 கோடி பேர் - மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே விழுக்காட்டு அளவிற்கு நம் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை என்பதை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தி இருக்கிறது. சுமார் 50 விழுக்காட்டினருக்கு முறையான துப்புரவு வசதி கிடையாது. 68 விழுக்காட் டினர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரையே அருந்துகிறார்கள். 37.1 விழுக்காட்டினர் ஒரேயொரு அறையிலேயே வசித்து வரு கிறார்கள். நம் மக்கள் தொகையில் மூன் றில் ஒரு பகுதியினருக்கு மின் இணைப் புகள் கிடையாது. 50 விழுக்காட்டுக் குடும்பங்கள் இன்னமும் விறகையே தங்கள் எரிபொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. 5 விழுக்காட் டிற்கும் குறைவான குடும்பத்தினரே கார் வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட மோசமான அம்சம் என்னவெனில், 18 விழுக்காட்டுக் குடும்பத்தினர் (இதில் கிராமப்புறங்களில் 23 விழுக்காட்டுக் குடும்பத்தினரும் அடக்கம்) எவ்வித சொத்துக்களும் இல்லாதவர்கள். இதன் பொருள், இவர்களுக்கு ஓர் அறைகூட வசிப்பதற்குக் கிடையாது. அதாவது, நாட்டுப்புற மக்களில் நான்கில் ஒருவர் வசிக்க வீடு என்று எதுவுமில்லாமல் வெட்ட வெளியில் வானமே கூரையாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய இந்தியாவில் மக்கள் வாழ்க்கைத் தரத்தின் எதார்த்த நிலை இதுவேயாகும்.இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் நிச்சயமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் - சமத்துவமின்மையை அதிகரிக்க வகைசெய்யும் - கொள்கைகளை மாற்றியமைத்திட வேண்டும். ஆனால் இதனை இந்த அர சாங்கம் செய்யப்போவதில்லை என்பதையே குடியரசுத் தலைவர் தன்னுடைய நீண்டதொரு உரையில் தெளிவுபடச் சொல்லி இருக்கிறார். மாறாக புதிய நவீன தாராளமய சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்த இருக்கிறார்களாம். அதன் மூலம் இரு இந்தியர்களுக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகமாகும் என்பது திண்ணம்.சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இவர்கள் கூறிய ஐந்து பாதுகாப்புகளையும் எய்த வேண்டியது அவசியம் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், நாட்டு மக்க ளில் பெரும்பான்மையோருக்கு இதற்கு எதிரானவற்றையே ஆட்சியாளர்கள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதார்த்தமாகவுள்ளது. இவ்வாறு நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பை அளித்திட வேண்டுமானால், அவர்கள் தங்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதற் கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டு மானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓர் உண்மையான வாழ்வாதாரப் பாது காப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் அரசின் கொள்கைத் திசை வழியை மாற்றியமைத்திட வெகுஜனப் போராட்டங்களைத் தீவிரமாக்கிட வேண்டியது அவசியம்.
தமிழில்: ச.வீரமணி

No comments: