Tuesday, December 13, 2011

முதலாளித்துவத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை உருவாக்கிடுவோம்-சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகள் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி சங்கநாதம்

ஏதென்ஸ், டிச. 12-
முதலாளித்துவத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை உருவாக்கிட நாம் அனைவரும் களத்தில் இறங்குவோம் என்று சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு, கீரிஸ் நாட்டின் ஏதென்ஸ் தலைநகரில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டினை நடத்திடும் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அலெகா பப்பரிகா மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி மாநாட்டின் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தோழர்களுக்கும் முதற்கண் என் புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு உலகம் முழுதும் ஒருமுறை சுற்றியபின்னர் மீண்டும் ஏதென்ஸ் தலைநகரில் நடைபெறுவதும் அதில் பங்கேற்றிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.
உலகில், முதலாளித்துவ முறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அல்லாத மக்களும் கூட முதலாளித்துவ முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உலகம் முழுதும் போராடிக்கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு கிரீஸ் நாட்டிலும் அத்தகைய போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடும் கிரீஸ் நாட்டின் தோழர்களுக்கும் மக்களுக்கும் நம் வீரஞ்செறிந்த ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கிரிஸில் மக்களின் போராட்டங்கள் வீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் நாம் இங்கே இம்மாநாட்டை நடத்திக்கொண்டிருப்பதன் மூலம் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
இம்மாநாட்டின் கருப்பொருள் மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்தது. முதலாவது, சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சிக்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்ட அனுபவம். சோவியத் யூனியனில் நடைபெற்ற எதிர்ப் புரட்சியானது, மார்க்சிச-லெனினிசத்தின் புரட்சிகர அறிவியலையோ அல்லது சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றுவதையோ எவ்விதத்திலும் மறுதலிக்கவில்லை.
சோசலிசத்தைக் கட்டுவதில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடுகள், ஏகாதிபத்தியம்/முதலாளித்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டல், சோசலிசம் குறித்து அதீதமான மதிப்பீடு மற்றும் மார்க்சிச-லெனினிசத்தின் அறிவியல்பூர்வமான மற்றும் புரட்சிகரக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றமை ஆகியவையே சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சி உருவானதற்குக் காரணங்களாகும்.
இம்மாநாட்டுக் கருப்பொருளின் இரண்டாவது அம்சம் குறித்துக் கூறுகையில், மேலே கூறியவாறு நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகள் ஏகாதிபத்தியமானது உலகம் முழுதும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் தன்னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத்திட மூர்க்கத்தனமாகத் தாக்குதலைத் தொடுத்திட வழிவகுத்தது. ஆயினும் கூட, முதலாளித்துவம் அபரிமிதமானமுறையில் வளர்ச்சி அடைந்திருந்தபோதிலும்கூட, அதனால் தன்னை ஒரு சுரண்டலற்ற அமைப்பாகவோ அல்லது நெருக்கடியற்ற அமைப்பாகவோ மெய்ப்பிக்க முடியவில்லை என்பது மீண்டும் வலுவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய முடிவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, உலகில் உள்ள பல கட்சிகள் இத்தகைய முடிவுகளுக்கு வந்திருந்தன. அவை இன்றையதினம் எவ்விதப் பிசிறுமின்றி சரியானவையே என்று மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எடுத்திடும் ஒவ்வொரு முயற்சியும்ம அதனை மேலும் ஓர் ஆழமான புதிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

உற்பத்தி உறவுகளை அழித்திடுவதையே தன் ஒவ்வொரு முயற்சியின் போதும் உலக முதலாளித்துவம் கைக்கொள்கிறது. இதன் காரணமாக அது மக்கள் மீதான சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் கார்பரேட்டுகள் தங்களுக்கு ஏற்பட்ட திவால் நிலையே அந்தந்த நாட்டு அரசுகளின் திவால் நிலையாக மாற்றியதிலிருந்து இக்கொடூரத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அதன் காரணமாக அந்த அரசுகள் மக்களுக்கு அளித்து வந்த பல்வேறு நலத் திட்டங்களை வெட்டிக்குறைத்தன. இவ்வாறு அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்தோங்கி வருகின்றன. இதனை லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நம்மால் பார்கக முடிகிறது. அமெரிக்காவில் நடைபெறும் ‘‘வால் ஸ்ட்ரீட் எதிர்ப்பு’ கிளர்ச்சிகள் முதலாளித்துவ முறையையே கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கின்றன. இன்றைய கடும் நெருக்கடிக்குக் காரணங்கள், முதலாளித்துவ முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளால் அல்ல, இம்முறையே தவறு என்று அவை உரக்கக் கூறத் தொடங்கியுள்ளன.
முதலாளித்துவத்தைத் தூக்கி எறியவும், சோசலிசத்தைக் கட்டிடவும் வலுவான முறையில் தொழிலாளர்வர்க்க சர்வதேசியத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியையும் கட்டவேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும். இதற்கு இங்கு குழுமியுள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளும் தங்கள் நாடுகளில் நடைபெறும் வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் அதே சமயத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்கிற அரசியல் மாற்றுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்திட வேண்டும்.

இத்தகைய போராட்டங்களை நாம் நம் நாடுகளில் உள்ள துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ற வகையில் நம் போராட்ட வடிவங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
இதற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் நான் ஓர் உதாரணத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இந்திய அரசு, சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட முடிவு செய்திருந்ததை. அதனை அது கொண்டுவர முடியாமல் அதற்கு நிர்ப்பந்தம் கொடுத்து அதனைத் திரும்பப் பெற வைத்த பின்னரே நான் இங்கே வந்திருக்கிறேன். இந்தத் துறையில் இந்தியாவில் சுமார் 5 கோடி மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரையும் சேர்த்தால் இது சுமார் 25 கோடி பேர்களாகும். எனவே, வால்மார்ட் இப்போதைக்கு இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

அரசுகள் பொது முதலீட்டை அதிகரிக்குமானால் அதன்மூலம் வேலைவாய்ப்புப் பெருகும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிக்கும். எனவே அரசுகள் முதலாளிகளுக்கு ‘‘ஊக்கத்தொகை’’ stimulus) அல்லது ‘‘நிவாரண உதவிகள்’’ (‘bail out’ packages) அளிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு உதவும் வகையில் பொது முதலீட்டை அதிகரிக்க வைத்திட வேண்டும்.
‘முதலாளித்துவ முறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அது மீள்வதற்கு வழிவகைகள் சொல்லாமல் ஏன் அம்முறையையே தூக்கி எறியவேண்டும் என்று சொல்கிறீர்கள்’ என்று நம்மைப்பார்த்து சிலர் கேட்கிறார்கள். ஏனெனில் நாம் சொல்லும் தீர்வுக்ளை முதலாளிகள் கேட்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் குறிக்கோள் கொள்ளை லாபம். நாம் கூறும் வழிமுறைகள் அதற்கு இடம் கொடுக்காது.

எனவேதான் சோசலிசம் என்கிற நம் அரசியல் மாற்றை வலுப்படுத்திடக்கூடிய வகையில் மக்களை அணிதிரட்டிட வேண்டும்.
வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள், நிச்சயமாக முதலாளித்துவ அமைப்பு முறையை ஒருநாள் தூக்கி எறியும்.
முதலாளித்துவத்திற்கு எதிரான புறச் சூழ்நிலைகள் வேகமாகவும் நமக்குச் சாதகமாகவும் வளர்ந்து வருகின்றன. ஆயினும் மாமேதை லெனின் எச்சரித்ததுபோல அதற்கேற்ற வகையில் நம் அகக் காரணிகளையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். மார்க்சிசம்-லெனினிசம் என்கிற புரட்சிகரத் தத்துவத்தினை ஏற்றுக்கொண்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

வரலாற்றுத் தொலைநோக்கில் நிச்சயம் சோசலிசம் தவிர்க்க முடியாதது. அது தாமதப்படலாம், ஆயினும் அது வருவதை எவரும் தடுத்திட முடியாது. எவ்வளவு விரைவாக அது வரும் என்பது நம்மையே சார்ந்திருக்கிறது. அதனை விரைவுபடுத்தும் பணியில் நம் பணிகளை நாம் முடுக்கி விடுவோம்.

‘‘சோசலிசத்திற்கு எதிர்காலம் உண்டா?’’ என்று இனியும் எவரும் கேட்கக் கூடாது. சோசலிசத்திற்கு மட்டுமே எதிர்காலம் உண்டு.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவு பிரகடனத்தின் மீது பிரதிநிதிகள் விவாதம் செய்தபின் அது ஏற்கப்பட்டது. பின்னர் மாநாடு டிசம்பர் 11 அன்று நிறைவடைந்தது.
--

No comments: