Friday, February 25, 2022

ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்



ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்

-தமிழில் : ச. வீரமணி

[ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.”]

கேரள மாநில அரசாங்கம், ஆளுநர்கள் நியமனம் அல்லது ஆளுநர்களைத் திரும்ப அழைப்பது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குத் திருத்தங்களை முன் மொழிந்து, ஒன்றிய அரசாங்கத்திற்கு எழுதியிருக்கி றது.  ஒன்றிய அரசுமாநிலங்கள் அரசு ஆகியவற்றிற்கி டையேயான உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் புஞ்ச்சி (Justice Punchhi) ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இது செய்யப்பட்டி ருக்கிறது.  ஆளுநர்களின் பங்கு குறித்து மாற்றங்கள் தேவை என்று நீண்டகாலமாக உணரப்பட்டு வந்த தன் அடிப்படையைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடை கூறும் விதமாக இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் இப்போது ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் ஏஜண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

156ஆவது பிரிவில்  திருத்தம் வேண்டும்

ஆளுநர் ஒருவர் தன்னுடைய அரசமைப்புச்சட்டக் கடமைகளைச் செய்கையில், அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளை மீறுகிறார் என்று காணும்போது, அவரைத் திரும்ப அழைத்திடும் விதத்தில் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளித்திட அரசமைப்புச் சட்டத்தின் 156ஆவது பிரிவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இக்கடிதத்தில் கேரள அரசாங்கம் மேலும் கேட்டிருக்கிறது. சமீப காலங்களில், மோடி 2014இல் பிரதமராக வந்த பின்பு, ஆளுநர்கள் நியமனம் என்பது ஒன்றிய  அரசாங்கத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் தேவைக ளுக்குச் சேவகம் செய்யும் விதத்தில் மிகவும் வெட்கக்கேடான விதத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆளுநர்களில் சிலர் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர்கள். மற்றவர்கள் ஆளும் கட்சியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிற வர்களும், ஒன்றிய அரசின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். கேரளாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான், அரசமைப்புச்சட்ட நெறிமுறைகளையெல்லாம் கிடப்பில்போட்டுவிட்டு மிக மோசமான நிலைப்பாடு களை எடுத்துக் கொண்டிருக்கிறார். நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆரம்பத்தில் சட்டமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்காகக் கையெ ழுத்திட மறுத்துவிட்டார். எனினும், கடைசிக் கட்டத்தில் மனந்திருந்தி அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு முழு உரையையும் வாசித்தார். பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனங்களின்போதும் மாநி லப் பல்கலைக் கழகங்களின்  வேந்தர் என்ற முறையில் அவருடைய பங்கு  சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.   

கண்ணூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மறு நியமனம் தொடர்பாக முதலில் அவர் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். பின்னர் அது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவை  கேரள உயர்நீதிமன்றத்தால் சரிசெய்யப்பட்டு, நியமனம்  செல்லத்தக்கது என்று கூறப்பட்டிருக்கிறது.

 

மாநில நிர்வாகத்தில் தலையிடும் போக்கு

பாஜக ஆட்சியில் இல்லாத வேறு சில மாநிலங்க ளிலும் ஆளுநர்கள் மிகவும் நாணமற்ற முறையிலும், ஒருதலைப்பட்சமாகவும் நடந்து கொண்டிருக்கி றார்கள். மேற்கு வங்க ஆளுநர், ஜகதீப் தன்கர், முதலமைச்சருக்கு எதிராகவும், மாநில அரசாங்கத் திற்கு எதிராகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங் கத்தின் துறைத் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பணிகளிலும் ஈடுபட்டார். மகாராஷ்டிராவில், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநில அரசாங்கத்தால் மாநில சட்டமன்ற மேல வைக்கு நியமனம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்க ளுக்கான பரிந்துரைகள் மீது முடிவெதுவும் எடுக்காது  அவற்றின் மீது உட்கார்ந்திருந்தார். பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனத்திலும் வேந்தர் என்ற அந்தஸ்தில் தன் இஷ்டத்திற்குத் தலையிட்டார். இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநர் தலை யிட்டதன் காரணமாக, சட்டமன்றத்தில் 2021 டிசம்பரில் மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளன.  

இந்தத் திருத்தங்கள், ஆளுநரான வேந்தருக்கும் துணை வேந்தருக்கும் இடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சரை இணை வேந்தராக நியமிக்கப்படுவதற்காகவும், துணை வேந்தர்கள் நியமனங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திருத்தத்தின்மூலம் ஆளுநர், அவருக்கு அனுப்பப் படும் இரு நபர்களின் பெயர்களில் ஒருவரை அவர் ஒரு மாத காலத்திற்குள் தேர்ந்தெடுத்திட வேண்டும் என்று கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என்.ரவியும்கூட பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சம்பந்தமாக நேரடியாகப் பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார். ‘நீட்தேர்வு சம்பந்தமாக, சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நீண்டநாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து விட்டு, திருப்பி அனுப்பியிருந்தார். பிரச்சனை என்ன வென்றால்,  ஒரு குறிப்பிட்ட ஆளுநர் அல்லது வேறொரு வர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதல்ல. அதற்கும் மேல்  ஆழமான அளவில் பிரச்சனைகள் இதில் அடங்கி யிருக்கிறது

 

ஒன்றிய அரசுக்கு கடமைப்பட்டவர்களாக...

ஆளுநர்களை நியமனம் செய்வது தொடர்பாக,  அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய நிலை,  அந்த நபர் ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படக் கூடிய நிலை இருந்து வருகிறது. இது தவிர்க்க முடியாத விதத்தில்  அந்தப் பதவியில் நியமனம் செய்யப்படும் நபர், முழுமையாக ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு இட்டுச்செல்கிறது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் ஆளுநரை நியமனம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்வரை, ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுவது, அதற்காகப் பொது வாழ்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் அல்லது அரசியல்வாதி கள் அல்லாத சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்ற வர்களை அப்பதவிக்காகப் பரிந்துரைப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது

உண்மையில், கடந்த கால அனுபவங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் அல்லாது ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆளுநர் பொறுப்பு க்கு வந்திருந்தவர்கள், மிகவும் மோசமாகவே நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பதவி யில் வேலை எதுவும் இன்றி சம்பளம் மட்டும் வாங்குவதற்காக முற்றிலுமாக ஒன்றிய அரசாங்கத் திற்கே கடமைப்பட்டவர்களாக இருந்து வந்திருக்கி றார்கள்.

 

ஸ்ரீநகர் மாநாட்டு பரிந்துரை

அதனால்தான், ஒன்றிய அரசாங்கம்-மாநில அர சாங்கங்கள் உறவுகள் தொடர்பாக 1983இல் ஸ்ரீநகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் , ஆளுநர் பதவிக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திட வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிபதி சர்க்கா ரியா ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன்மொழிவி லும், புஞ்ச்சி ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன் மொழிவிலும், இதையே கூறியிருந்தது. 2008 அக்டோப ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, ஒன்றிய அரசாங்கம்-மாநில அரசாங்கங்கள் இடையே உறவுகளை மாற்றியமைப்பது தொடர்பான அணுகு முறை ஆவணம் (‘Approach Paper on Restruct uring of Centre-State Relations) ஒன்றை நிறை வேற்றியது. இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாவது

ஒன்றிய அரசாங்கத்தால் மாநிலங்களுக்கு ஆளு நர்கள் நியமனம் செய்யப்படும் முறை காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. இது கூட்டாட்சி ஜனநாயக அரசியலுக்கு உகந்ததல்ல. ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.” இப்போதுள்ள ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஆளுநர் நியமனம் தொடர்பாகவோ மற்றும் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவோ எவ்விதமான சீர்திருத்தத்திற்கும் சாத்தியம் இல்லை. என்ன செய்ய முடியும் என்றால் எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருந்திட வேண்டும். இத்துடன் மாநில சட்டமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் போன்றவற்றில், சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள விதிமுறைகளையும் வரம்புகளையும் ஆளுநர் மீறமுடியாத விதத்தில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.   

பிப்ரவரி 23, 2022, 
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி


Saturday, February 12, 2022

 


முகத்திரை விலக்கப்பட்ட

சாவர்க்கர்

-ச.வீரமணி

 “வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27  அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.  வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட,   “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிர1 கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது,  பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு  ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார்.   இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின்  தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ,  இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார்.1 மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.2 இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.

“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.   இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம்  மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு  ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.

சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும்  இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.    

சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.

பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதத்தில் வெளிவர விருக்கிறது.

இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.

..