Showing posts with label V.D.Savarkar. Show all posts
Showing posts with label V.D.Savarkar. Show all posts

Saturday, February 12, 2022

 


முகத்திரை விலக்கப்பட்ட

சாவர்க்கர்

-ச.வீரமணி

 “வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27  அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.  வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட,   “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிர1 கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது,  பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு  ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார்.   இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின்  தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ,  இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார்.1 மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.2 இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.

“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.   இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம்  மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு  ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.

சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும்  இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.    

சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.

பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதத்தில் வெளிவர விருக்கிறது.

இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.

..

 

 

Sunday, July 22, 2018

இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே


இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை,
அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை.
-சந்தன் கர்மே

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களைப் பாவித்துக்கொண்டு, மற்ற இனத்தவர்களின் உழைப்பின் மூலம் அனைத்து அம்சங்களிலும் முன்னுரிமை  அளிக்கப்பட்ட அதேசமயத்தில் மற்ற இனத்தினர் எல்லாருமே வெறும் ஒட்டுண்ணி பூச்சிகளாகத்தான் கருதப்பட்டார்கள்.

நாம் புரிந்தகொண்டவரையில், இந்துத்துவா கொள்கையைத் தோற்றுவித்தவர். வீ.டி. சாவர்க்கர், ஆவார்.   1939இல் அவர் சாவித்திரி தேவி என்பவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஒரு முன்னுரை எழுதினார். 1905இல் பிறந்த மேக்சிமைன் போர்டாஸ்  (Maximine Portaz—1905-1982) என்கிற பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர்,. தன் பிரெஞ்சுப் பெயரை, சாவித்திரி தேவி என மாற்றிக்கொண்டார்.   இவர், அடால்ப் ஹிட்லரால் கலியுகத்தில் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் களைவதற்காக கடவுளின் விருப்பத்திற்கிணங்க பூலோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டவர். நாசிசத்தின் பிரச்சாரகரான சாவித்திரி தேவி, மகா விஷ்ணுதான் அடால்ப் ஹிட்லர் என்கிற மனித உருவத்தில் இருக்கிறார் என்று நம்பினார். இந்துக்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சாவர்க்கர் அவருடைய புத்தகத்திற்கு எழுதியிருந்த முன்னுரையில் எழுதி இருந்ததாவது:
“இந்துக்கள் வெகு காலமாகவே வாழ்க்கையில் எவ்விதமான குறிக்கோளுக்காகவும் சுறுசுறுப்பாக இயங்கமுடியாத அளவிற்கு செயலற்றவர்களாக மாறிவிட்டார்கள். இவர்களின் ஒரேயொரு குறிக்கோள், இந்த உலகத்திலிருந்து தப்பி,  “மோட்சத்திற்கு” செல்வது என்பதுதான். ஆனால் எப்படிச் செல்வது? கடவுளுக்கே தெரியும். பல நூற்றாண்டுகளாக நம்முடைய இந்து ராஷ்ட்ரம் அடிமைத்தளையில் தொடர்ந்து இருந்து வருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.”
சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி. அவருக்கு இந்து மதத்தின்மீது நம்பிக்கை கிடையாது. அவருடைய ஒரே குறிக்கோள், மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு அதன்கீழ் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதேயாகும்.
இந்துயிசம் என்பது அவரைப் பொறுத்தவரை இந்துத்துவா என்கிற தன்னுடைய பெரிய அளவிலான அரசியல் சிந்தனையின் ‘ஒரு சிறு பகுதி’தான். 
சாவர்க்கரின் இந்துத்துவா தத்துவத்தின்படி, ஓர் இந்து இந்தியாவை தன்னுடைய தாய்நாடாகக் (மாத்ருபூமியாகக்) கருதுபவன், தன்னுடைய மூதாதையர்களின் பூமியாக (பித்ருக்களின் பூமியாகக்) கருதுபவன், மற்றும் அவனுடைய ஒரு புண்ணிய பூமியாகக் கருதுபவன். இந்தியாவில் இந்துக்களின் நம்பிக்கைகள் தோன்றிய இடமாக இருப்பதால், இந்தியா, இந்துக்களின் நாடாகத்தான் இருந்தது. இஸ்லாமும், கிறித்தவமும் இந்தியாவிற்கு வெளியே தோன்றியதால், சாவர்க்கரின் இந்து அல்லது ‘இந்து தேசம்’ என்னும் வரையறைக்குள் அவற்றால் எளிதாகப் புகமுடியவில்லை.
மிகவும் இழிவான இனவெறி சிந்தனையில் ஊறிப்போயிருந்த சாவர்க்கர், இந்து என்னும் சொல் எப்படி உருவானது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க பெரிய அளவிற்கு முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்து என்ற சொல் சிந்து நதி என்பதில் உள்ள சிந்துவிருந்து உருவானது என்றுதான் நாம் இதுவரை தெரிந்து வைத்திருக்கிறோம். சிந்து நதியின் அருகே வாழ்ந்த மக்களைக் குறிப்பிட அச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களால் பின்பற்றப்பட்ட மதங்களைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியது. இவர்களின் பழக்க வழக்கங்களைக் குறிக்கும் விதத்தில் தனிப்பட்ட முறையில் எந்தப் பெயரும் கிடையாது, எந்தவிதமான புனித புத்தகமும் கிடையாது,  மதக்குழுக்கள் எதுவும் இதுதொடர்பாக எதுவும் எழுதி வைத்திடவில்லை.
1940-1973வரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், சாவர்க்கரின் சிந்தனைகளை எடுத்துக்கொண்டு, அதனை இன ரீதியாகத் தங்களுக்குச் சாதகமான முறையில் மேலும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.   கோல்வால்கர், நாம், அல்லது வரையறுக்கப்பட்ட நம்முடைய தேசம் (We, or Our Nationhood Defined) என்னும் நூலில் எழுதியிருப்பதாவது: “இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை நிலைநிறுத்திட, யூத இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்திட  வேண்டும் என்று ஹிட்லர் கூறியது ஜெர்மனி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமை பேசுவது அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்தது. மேலும் ஜெர்மனி நமக்கு அடிப்படையாக பல்வேறு வித்தியாசங்களுடன் உள்ள இனங்களையும் கலாச்சாரங்களையும் ஒரே இனமாக மாற்றியமைத்திட வேண்டும் என்பதையும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக அமைத்துத் தந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்துஸ்தானத்தில் நாம் படிப்பினைகளைக் கற்று, ஆதாயம் அடைந்திட வேண்டும்.”
கோல்வால்கர் இதனை எழுதியபோது, ஹிட்லர் உச்சத்தில் இருந்தார். ஹிட்லர் இப்போது வரலாறாகிப் போய்விட்டார். ஆனாலும், வரலாற்றைத் திரித்துக்கூறிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இந்துத்துவாவாதிகளுக்கு பெரிதாக ஒன்றும் மாறிடவில்லை. இந்திய வரலாற்றில் காலனியாதிக்கத்தின் பிரிவுகள் பல ஆட்சி செய்ததையெல்லாம்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குப்பதிலாக புராதன காலம் ‘நம்முடைய’ காலமாக இருந்தது என்றும், இடையில்தான் ’நாம் தாக்குலுக்கு உள்ளானோம்’ என்றும் நம்மை நம்ப வைத்திட, எண்ணற்ற சொற் புரட்டு மற்றும் போலி வாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.    ஓர் இனம், மற்றோர் இனத்தை ஆக்கிரமிப்பதற்கான செயல்களில் இறந்கி இருந்தது என்கிற விதத்தில் தங்கள் விசாரணைகளைத் தொடர்கிறார்கள். வரலாற்றில் மதரீதியான தேசியவாதங்கள் குறித்து வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் கூறுவதையெல்லாம் அவர்கள் மேற்கோள் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும், மக்களைத் தொடர்ந்து மதரீதியாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே யுத்த களம் தொடர்ந்து இருந்திட வேண்டும் என்பதேயாகும்.
ஒரு சமூகத்தினர், மற்றோர் சமூகத்தினரை வன்முறை மூலமாக அடக்கி ஆண்டார்கள் என்று கூறவரும் அதேசமயத்தில், பெரும்பாலான வன்முறைகள் இயற்கையில் அரசியல்ரீதியானவை என்று அவர்கள் எப்போதுமே குறிப்பிடுவதில்லை. வன்முறை மேற்கொண்டவர்களின் அரசியலை ஒதுக்கித்தள்ளிவிட்டு, இவை அனைத்தும் மதரீதியான செயல்கள் என்று கூறுவது சரியல்ல. ஆனால் இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் இந்துத்துவா மதவெறிக் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவதால், வரலாற்றின் உண்மைகள் அனைத்தையும் சொல்வது என்பது அவர்களின் நிகழ்ச்சிநிரலுடன் ஒத்துப்போகாது.
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பல்வேறு ஆழமான மோதல்கள் நடந்துள்ளன.  மாமன்னர் அசோகரையே உதாரணமாக  எடுத்துக்கொள்ளுங்கள்,  பல்வேறு விதமான மோதல் போக்குடன் இருந்த மத மற்றும் தத்துவார்த்தக் குழுக்கள் இணைந்து வாழக்கூடிய ஒரு பொதுவான அடித்தளத்தை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டார். மாமன்னர் அசோகரின் கட்டளைகள், சகிப்புத்தன்மை மீதான படிப்பினைகளைப் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக இதர மதப் பிரிவினர் மீது மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
ரோமிலா தாப்பர் அவர்கள் ‘தேசியவாதம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் மீதான பிரதிபலிப்புகள்’ என்கிற தன்னுடைய அதியற்புதமான கட்டுரையில், எழுதியிருந்ததாவது:
“சையது இப்ராகிம் அவர்கள் இயற்றிய பாடல்களும் பஜனைகளும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு 16ஆம் நூற்றாண்டில் மிக விரிவாக அனைத்துத்தரப்பினராலும் விரிவானமுறையில் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. இப்போதும்கூட அவை பாடப்படுகின்றன.   மொகலாய மாமன்னர்கள் மகாபாரதம், ராமாயணம் உட்பட பலவற்றை சமஸ்கிருதத்திலிருந்து, பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்திடும் புரவலர்களாக மாறி இருந்தார்கள். மதச்சார்பற்ற நாட்டில் மதம் மறுக்கப்படக்கூடாது என்றும், பாரம்பர்யம் என்பது ஆண்டாண்டுகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும், பல்வேறு மதப்பிரிவினரிடமும் உள்ள பன்முகத்தன்மையைக் கொண்டாடிட வேண்டும் என்கிற முறையிலேயே அக்பரின் நம்பிக்கை அமைந்திருந்தது.”
அதியற்புதமான இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை ஆகிய இரண்டுமே இந்து மன்னர்களாலும், மொகலாய மாமன்னர்களாலும் போற்றிப் பாராட்டப்பட்டிருப்பதுடன் அவற்றின் வளர்ச்சிக்காக உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மத நல்லிணக்கத்தைப் அனைத்து மதப்பிரிவுகளில் உள்ள மத போதகர்களும் (குருக்களும், பிர்களும், ஃபக்கீர்களும்) போதனை செய்திருக்கிறார்கள். முனுதீன் சிஸ்டி, பாபா பரீத், கபீர், குரு நானக் மற்றும் மீரா பாய் (Muinuddin Chishti, Baba Farid, Kabir, Guru Nanak and Mira Bai) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பக்தி இயக்கங்களும், சுஃபி இயக்கங்களும் மதம் மற்றும் சாதிய நிலைப்பாடுகளைக் கடந்தவைகளாகவே அமைந்திருந்தன.
இத்தகைய இந்தியாவில் இவ்வாறு  அதியற்புதமாக நுட்பங்களுடன் கூடிய இந்திய நாகரிகத்தை முழுமையாக கிரகித்துக்கொண்டு, போற்றிப் பாராட்டிட சாவர்க்கர் வெளிப்படையாகவே தவறிவிட்டார்.  கோல்வால்கரும் அந்தப் பாரம்பர்யைத்தையே தொடர்ந்தார். இன்றையவரைக்கும், இந்துத்துவா சிந்தனையாளர்கள், 1947இல் இந்தியா ஓர் இஸ்லாமிய பாகிஸ்தான் என்றும் ஓர் இந்து இந்தியா என்றும் பிரிவினையடைந்திடவில்லை என்கிற உண்மையை, ஏற்க மறுக்கிறார்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத்தான் உருவானது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.    
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதுதொடர்பாக, முப்பது ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வால்கரின் எழுத்துக்களுக்கும்,  பாகிஸ்தானை உருவாக்குவதற்கு உதவி புரிந்திட்ட முகமது இக்பால் என்பவரின் சிந்தனைக்கும்  இடையே உள்ள ஒற்றுமை விசித்திரமானதாகும். இக்பால் ‘மசாப்’ (Mazhab) என்று தலைப்பிட்டுள்ள தன்னுடைய கவிதையில், “மேற்கத்திய நாடுகளுடன் உங்களுடைய நாட்டை ஒப்பிடாதீர்கள். இது இஸ்லாமிய தீர்க்கதரிசியின் நாடாகும். அவர்களுடைய ஒருமைப்பாடு அவர்களின் தேசிய எல்லையின் அடிப்படையிலானவைகளாகும். உங்களுடைய ஒருமைப்பாடு உங்கள் மதத்தின் வலுவில் அடங்கியிருக்கிறது.”
கோல்வால்கரும் ‘தேசிய எல்லை’ என்கிற கருத்தாக்கத்தை நிராகரிக்கிறார். கோல்வால்கர், தன்னுடைய சிந்தனைத் துளிகள் (Bunch of Thoughs) என்னும் நூலில், ”எல்லை தேசியவாதம்” என்பது காட்டுமிராண்டித்தனமானது. ஏனெனில், தேசம் என்பது வெறுமனே அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளின் ஒரு மூட்டை அல்ல. மாறாக அது தேசிய கலாச்சாரத்தை உள்ளடக்கியது. இந்தியாவில் அது ‘புராதன மற்றும் கம்பீரமான’ இந்துயிசத்தை சார்ந்திருக்கிறது.” என்கிறார்.
இவ்வாறு வகுப்புவாதிகளின் சிந்தனைகள் ஒரேமாதிரி இணையாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.  ஆனாலும் இத்தகையவர்களின் சிந்தனைகளை நிராகரிக்கக்கூடிய விதத்தில்தான் மத ரீதியாக பாகிஸ்தானுடன் இணைந்த வங்க தேசம் 1971இல் அதனிடமிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டது. ‘
இந்திய தேசமும் இத்தகையவர்களின் தவறான நம்பிக்கைகளுக்கு எக்காலத்திலும் பலியாகிவிடக்கூடாது. நம் நாடு, எந்தவொரு இனத்தாலோ அல்லது மதத்தாலோ ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. மாறாக, மனிதர்களாகப் பிறந்த அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் உருவானது. பெனிடிக்ட் ஆண்டர்சன் என்பவர் எழுதிய ‘கற்பனை செய்யப்பட்ட சமூகத்தினர்’ (Imagined Communities) என்கிற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல நாம் ‘ஒரு கற்பனை செய்யப்பட்ட சமூகத்தினராக’ இருந்திட முடியும்.
இந்துத்துவா, இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்தல் என்பதைத்தான் தன்னுடைய தேசியவாதத்தின் அத்தியாவசிய மூலக்கூறாகக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இது, இந்தியாவை உருவாக்கிய பெருமைமிகு சிந்தனையாளர்களின் கருத்துக்களையெல்லாம் எதிர்க்கிறது.
இந்துயிசத்திற்கும் இந்துத்துவாவிற்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக, சாவர்க்கர் (ஒரு வேளை தெரியாமல்கூட) கூறியிருக்கும் கீழ்க்கண்ட கூற்றை நாம் கவனிக்க வேண்டும்: ”இந்துத்துவாவையும், இந்துயிசத்தையும் வேறுபடுத்திப்பார்த்திட நாம் தவறினோமால், அது மிகவும் புரிந்துணர்வின்மைக்கும், பரஸ்பரம் சந்தேகம் கொள்வதற்கும் வழிவகுத்திடும்.” (“Failure to distinguish between Hindutva and Hinduism, has given rise to much misunderstanding and mutual suspicion”.)  
இந்துத்துவா மற்றும் இதுபோன்ற இதர மதவெறி  அடையாளங்களும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டியவைகளாகும். இதனை ஒரேநாளில் செய்துவிட முடியாது. ஆனாலும் இதற்கான நடவடிக்கைகளை சிறிய அளவிலாவது நாம் தொடங்கிட வேண்டும். அமைதிக்காவும், சகிப்புத்தன்மைக்காகவும் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், இந்தியா என்னும் நம்முடைய சிந்தனையை நோக்கி நம்மை நெருக்கமாக்கிட கொண்டு செல்லும்.
இந்திய மக்களாகிய நாம், தனிப்பட்டமுறையில் நாம் எவராக இருந்தாலும், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள். இதனை மறுக்கக்கூடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள்தான் உண்மையில் ’தேச விரோதிகள்’.  அவர்களை எதிர்த்திடுவதற்கான தருணம் வந்திருக்கிறது.  
  (கட்டுரையாளர், ஒரு சார்ட்ர்ட் அக்கவுண்டண்ட் ஆவார். அகமதாபாத் ஐஐஎம்-இன் முன்னாள் மாணவராவார். )
நன்றி: The Wire
தமிழில்: ச.வீரமணி.